Search This Blog

Friday, 7 June 2024

இரவல் கேட்கலாமா?

இரவல் கேட்கலாமா?  

 

وَيَمْنَعُونَ الْمَاعُونَ

 

(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள். திருக்குர்ஆன்:- 107:7

 

ஒரு மனிதன் தமது இக்கட்டான சூழ்நிலையில் பிறரிடம் சில பொருள்களை இரவாலாக கேட்பது இயல்பு. அவருக்கு அந்நிலையில் கொடுத்து உதவுவது நற்செயலாகும்.

 

சிலர், நான் பிறரிடம் எதையும் இரவலாக கேட்டுப் பெறுவதுமில்லைஅவ்வாறே கொடுப்பதுமில்லை. இதுவே, தமது கொள்கை என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மையாகவே, இது நல்ல பழக்கமல்ல.

 

ஒரு கரண்டிக் காப்பிப் பொடி, அரை டம்ளர் சீனி, நான்கு பச்சை மிளகாய் என்று எடுத்ததையெல்லாம் அடுத்த வீட்டிலும் எதிர் வீட்டிலும் இரவல் வாங்கும் பழக்கம் தவறானதே ஆகும். ஏதோ அவசரத்திற்கு எப்போதாவது வாங்கிக் கொள்ளலாம் தவறில்லை.

 

பக்கத்து வீட்டார்கள், நண்பர்கள் நம்மிடம் மிகப்பிரியமாக இருக்கிறார்கள் என்றால் அதுதான் பெரிது என்று எண்ண வேண்டுமே தவிர, அதை வைத்து நாம் என்ன இரவல் கேட்கலாம்? என்றோ, எதைக் கேட்டாலும் தருவார்கள் என்பதால் இக்கட்டான சூழ்நிலைகளை அவர்களுக்கு உருவாக்குவதோ கூடாது.

 

ஒருவரிடம் ஒன்றை நாம் இரவல் கேட்கும் கேட்பதற்கு முன்பு அதே உதவியை நம்மிடம் மற்றொருவர் கேட்டால், அதை நாம் செய்வோமா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

கொடுத்து உதவ வேண்டும்

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَرْبَعُونَ خَصْلَةً أَعْلاَهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ، مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ ) நற்செயல்கள் நாற்பது உள்ளன. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை எதிர்பார்த்தும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் செய்துவந்தால், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிக்காமல் இருப்பதில்லை. அவற்றில் மிக உயர்ந்தது, பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2631

 

அய்மன் அல்ஹபஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து வெள்ளிக்காசுகள் விலையுடைய கெட்டியான பருத்தி அங்கி ஒன்றை அணிந்திருந்தார்கள்.

 

அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ( انْظُرْ إِلَيْهَا فَإِنَّهَا تُزْهَى أَنْ تَلْبَسَهُ فِي الْبَيْتِ، وَقَدْ كَانَ لِي مِنْهُنَّ دِرْعٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَمَا كَانَتِ امْرَأَةٌ تُقَيَّنُ بِالْمَدِينَةِ إِلاَّ أَرْسَلَتْ إِلَىَّ تَسْتَعِيرُهُ ) ‘‘உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள்கூட வீட்டில் இ(ந்த அங்கி போன்ற)தை அணிய (பிடிக்காமல் இன்று) தயங்குகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இந்த அங்கிகளில் ஒன்று என்னிடம் (மட்டும்தான்) இருந்தது. அப்போது மதீனாவில் (மணமகனுக்காக) அலங்காரம் செய்யப்படும் எந்த மணப்பெண்ணும் அந்த அங்கியை இரவல் கேட்டு என்னிடம் ஆள் அனுப்பாமல் இருந்ததில்லை. நூல்:- புகாரீ-2628

 

நம்மிடம் உள்ளதை பிறர் இரவல் கேட்டு வந்தால் அதை கொடுத்து உதவ வேண்டும்.

 

அன்றைய அரபியர்களிடம், பால் தேவைப்படுபவர்கள் பால் கறந்து கொள்வதற்காகக் குறிப்பிட்ட காலத்திற்கு ஆடு அல்லது ஒட்டகத்தை இரவலாக வழங்கும் பழக்கம் இருந்தது.

 

வீட்டு உபயோகப் பொருள்கள்  

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ما يَعاوِنُ النّاسَ بَيْنَهُمُ الفَأْسُ والقِدْرُ والدَّلْوُ وأشْباهُهُ ) மக்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவி செய்து கொள்ளும் பொருள்களையே (தலைப்பில் காணும் 107:7 வது வசனத்தில் வரும்) "மாஊன்" என்பதின் கருத்தாகும். நூல்:- அபூநயீம், தைலமீ, இப்னு அசாகிர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (நபிகள் நாயகம் - ஸல் அவர்களிடம்), ( يَا رَسُولَ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ ) "நாயகமே! (பிறருக்கு வழங்க) மறுப்பதற்கு அனுமதிக்கப்படாத பொருள்கள் எவை?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّارُ ) "தண்ணீர், உப்பு, நெருப்பு (ஆகியவையே அவை)" என்று பதிலளித்தார்கள். அப்போது நான், "நாயகமே! இந்த தண்ணீரைப் பற்றி  நாங்கள் அறிவோம். உப்பு, நெருப்பு ஆகியவற்றின் நிலை என்ன (அவற்றை ஏன் மறுக்கக்கூடாது)?" என்று நான் கேட்டேன்.

 

அதற்கு நபியவர்கள், ( يَا حُمَيْرَاءُ مَنْ أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا ‏.‏ فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَ ذَلِكَ الْمِلْحُ ) "ஹுமைரா! யார் நெருப்பைக் கொடுத்தாரோ, அவர் அந்நெருப்பின் மூலம் சமைத்த யாவற்றையும் தர்மமாகக் கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். யார் உப்பைக் கொடுத்தாரோ, அவர் அந்த உப்பு சுவையாக்கிய யாவற்றையும் தர்மமாகக் கொடுத்தவரை போன்றவர் ஆவார். நூல்:- இப்னுமாஜா-2465

 

அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( الْمَاعُونُ: مَنْعُ النَّاسِ الْفَأْسَ، وَالْقِدْرَ، وَالدَّلْوَ )  "அல்மாஊன்" என்றால் கோடரி, சமையல் பாத்திரம், வாளி போன்ற பொருள்களைக் கொடுத்து உதவாமல் தடுக்கிறார்கள் என்று பொருள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். சாதாரணப் பொருள்களைகூட (இரவல் கொடுத்து உதவாமல்) தடுக்கக்கூடியவர்கள் என்றால் ( مَتَاعَ الْبَيْتِ ) வீட்டு உபயோகப் பொருட்களை தடுக்கக்கூடியவர்கள் என்று பொருள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( كُنّا نُعِدُّ الماعُونَ عَلى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ عارِيَةَ الدَّلْوِ والقَدْرِ والفَأْسِ والمِيزانِ وما تَتَعاطَوْنَ بَيْنَكم ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாளி கேட்டால் அதைக் கொடுத்து விடுவது; சட்டி பானை (போன்ற சமையல் பாத்திரங்கள்), கோடரி, தராசு இது போன்ற இதர பொருள்களை ஒருவர் மற்றவர்களிடம் இரவல் கேட்டால் கொடுத்து, தேவை முடிந்த பிறகு திரும்ப பெற்றுக்கொள்வது வழக்கம். இப்படிப்பட்ட வஸ்துக்களையே திருக்குர்ஆன் கூறுகின்ற "மாஊன்" என்ற சொல் குறிப்பிடுவதாக கருதிவந்தோம். நூல்:- இப்னு அபீஷைபா, அல்அஸ்வத் இமாம் தப்ரானீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

வீட்டு உபயோகப் பொருள்களை பக்கத்து வீட்டுக்காரர்கள் இரவலாகக் கேட்டு வரும்போது அவர்களுக்கு கொடுத்து உதவுவதால் பழக்க வழக்கங்கள் பலப்படும். இது போன்ற பொருள்களை இரவலாக கொடுத்த உதவாமல் தடுத்துக் கொள்வது நல்ல பண்பல்ல என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.

 

தைக்கும் ஊசிக்காக சொர்க்கம்

 

ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "ஒரு மனிதர் ஒரு ஆடை தைக்கும் ஊசியின் மூலம் சொர்க்கம் சென்றார்" என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், "நாயகமே! அது என்ன ஆடை தைக்கும் ஊசிக்காக சொர்க்கம் சென்றார்?" என்று வினவினர். நபியவர்கள், முற்காலத்தில் ஒருவர் தன்னை சுற்றி வசித்தவர்களிடம், 'உங்களில் எவருக்கு எப்போது ஆடை தைக்கும் ஊசி தேவைப்பட்டாலும் என்னிடமிருந்து அதை இரவலாகப் பெற்று அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று அறிவிப்புச் செய்து, அதை இரவலாக கொடுத்து உதவி வந்தார். தன்னைச் சுற்றி வசிப்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஆடை தைக்கும் ஊசியை இரவலாக கொடுத்து உதவிய காரணத்தினால் அவர் சொர்க்கம் சென்றார்" என்று கூறினார்கள்.

 

மனம் நோகாதவாறு 

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மதீனாவில் (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்து ‘மன்தூப்’ எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். அதில் ஏறிச் சென்றார்கள்.

 

திரும்பி வந்தபோது, ( مَا رَأَيْنَا مِنْ شَىْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا ) ‘‘(எதிரிகளின் படை எதனையும் அல்லது பீதியூட்டும்) எதனையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகவே நாம் இந்தக் குதிரையைக் கண்டோம்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2627

 

நாம் பிறரிடம் சைக்கிள், பைக், கார் போன்ற ஏதேனும் வாகனத்தை இரவலாக வாங்கி பயன்படுத்திவிட்டு, வாகனத்தை உரிமையாளரிடம் திரும்பக் கொடுக்கும்போது வாகனத்தை நல்ல முறையில் பராமரித்து வருகிறீர்கள். ஆம்! வாகனம் ஓட்டுவதற்கு நன்றாகவே இருந்தது. மிக்க நன்றி! என்று நாம் கூறும்போது அவருக்கு ஒருவித சந்தோஷம் ஏற்படும்.

 

மாறாக, "என்ன வாகனம் வைத்துள்ளீர்? ஓட்டுவதற்கே சிரமமாக இருக்கிறதே! வாகனத்தில் அது, இது பிரச்சினையாக இருக்கும் போல் தெரிகிறதே! ஏன் இதை வாங்கிக்கொண்டு போனோம் என்றாகிவிட்டது! போதும் போதும் என்றாகி விட்டது! உடனே பழுது பாருங்கள்!”  என்றெல்லாம் சொல்லும்போது அது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

 

"வாகனம் ஓட்டுவதற்கு எப்படி இருந்தது?" என்று அதன் உரிமையாளர் கேட்டால், அப்போது உள்ளது உள்ளபடி அவரது மனம் நோகாதவாறு  மென்மையாக எடுத்துரைக்கலாம்; தவறில்லை.

 

திருப்பிச்செலுத்த வேண்டும்

 

உபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், ( الْعَارِيَةُ مُؤَدَّاةٌ وَالزَّعِيمُ غَارِمٌ ) "இரவலாக ஒப்படைக்கப்பட்ட பொருள்கள் (உரியவரிடம்) திருப்பி செலுத்தப்பட வேண்டியவை ஆகும். பொறுப்பேற்றுக்கொண்டவர் (தாம் ஏற்றுக் கொண்ட விஷயத்திற்கு) பொறுப்பாளி ஆவார்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-1186

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عَلَى الْيَدِ مَا أَخَذَتْ حَتَّى تُؤَدِّيَ )  (இரவலாகப்) பெற்றதை திருப்பிச் செலுத்த வேண்டிய கடமை (வாங்கிய) கரத்திற்கு உள்ளது. அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3091, திர்மிதீ-1187 இப்னுமாஜா-2391 முஸ்னது அஹ்மத், தாரிமீ

 

தாம் உபயோகிப்பதற்காகப் பிறர் பொருளை தற்காலிகமாகப் பெற்றுத் திருப்பித் தருவதற்கு பெயர் இரவல் (Borrowing). இரவல் வாங்கிய பொருள்களுக்கு இரவல் வாங்கியவரே பொறுப்பு. எனவே, அதை அவர் திருப்பிக் கொடுத்தாக வேண்டும். பொருள் அப்படியே இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும். பொருள் அழிந்து போயிருந்தால் அதன் கிரயத்தைக் கொடுக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டமாகும்.

 

சரிவர கையாளத் தெரியாத பொருள்களையும், விலைமிக்க பொருள்களையும் இரவல் வாங்குவதும் அதை பயன்படுத்த ஆசைப்படுவதும் நல்லதல்ல. வாங்கினால், வாங்கியபடி திருப்பித் தருவதற்கு வசதி இருக்க வேண்டும்.

 

விலை உயர்ந்தக் காப்பிப் பொடியை வாங்கிவிட்டு விலை குறைவானக் காப்பிப் பொடியைப் பதிலுக்கு கொடுத்தால் அது முறையாகுமா? முக்கால் டம்ளர் சீனி வாங்கிவிட்டு, அதை அரை டம்ளராக திருப்பிக் கொடுத்தால் அப்போது வம்பு தான் வளரும்.

 

இத்தகைய பொருள்களை வாங்குவது, கொடுப்பதில் ஏற்படும் சிறு சிறு குறைகள்கூடச் சுமூகமான சூழ்நிலையை கெடுத்துவிடுவது உண்டு.

 

பாவக்காரியம்

 

இறைவணக்கம் புரிவதில் பெயர் பெற்ற இறைநேசர் ஹஸ்ஸான் பின் அபீ சுஃப்யான் (ரஹ்) அவர்கள் மரணமடைந்த பின்னர் அன்னாரின் நெருங்கிய தோழர்களில் ஒருவர் அன்னாரைக் கனவில் கண்டு, "அல்லாஹுத்தஆலா உங்களை எப்படி நடத்தினான்?" என்று கேட்டார். அதற்கு அன்னார், "நான் உலகில் வாழ்ந்தபோது நண்பர் ஒருவரிடம் இரவலாக ஒரு ஊசி வாங்கி இருந்தேன். ஆனால், மறதியின் காரணமாக அந்த ஊசியை அவரிடம் திருப்பிக் கொடுக்காமலேயே மரணமடைந்துவிட்டேன். அதன் காரணமாக எனக்கு சொர்க்கத்தின் சுகங்கள் பெரும்பாலானவை தடுத்து வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். நூல்:- ஜவாஹிர், இர்ஷாதுல் இபாத்


(அஸ்ஸாமிரி செய்த காளைக்கன்றைக் கண்ட) சிலர், "இதுதான் உங்களுடைய இறைவன்; இன்னும் இதுவே மூசாவின் இறைவனும் ஆகும்; ஆனால், அவர் இதை மறந்துவிட்டார்" என்று கூறினர். திருக்குர்ஆன்:- 20:88


அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க இஸ்ரவேலர்கள் எகிப்து நாட்டை விட்டு சிரியாவை நோக்கி பயணிக்கும் நேரத்தில், இஸ்வேலர்கள் ஃபிர்அவ்னின் சமூகத்தினரான கிப்திகளிடம் சென்று, "தமக்கு ஒரு பண்டிகை இருப்பதால் உங்களுடமுள்ள நகைகளை இரவலாகத் தாருங்கள்" என்று கேட்டனர். அதற்கு அவர்களும் தம்முடைய அதிகமான நகைகளை இஸ்வேலர்களுக்கு இரவலாகக் கொடுத்தனர். ஆனால், இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு இரவோடு இரவாக சிரியாவை நோக்கி பயணித்து விட்டதால், கிப்திகளிடம் இரவலாகப் பெறப்பட்ட நகைகளை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கவில்லை.


இஸ்ரவேலர்களுள் ஒருவனான அஸ்ஸாமிரி என்பவனுக்கு ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது. இஸ்ரவேலர்கள் கிப்திகளிடமிருந்து இரவலாகப் பெற்றுவந்திருந்த நகைகளை வாங்கிக் கொண்டு அதிலிருந்து (காளைக்கன்று போன்று) ஓர் உருவத்தைச் செய்தான். அதனுள் ஒரு பிடி மண்ணை போட்டான். அல்லாஹ் ஃபிர்அவ்னை கடலில் மூழ்கடித்த நாளில் அவன் ஜிப்ரீல் (அலை) அவர்களை கண்டபோது அவருடைய குதிரையின் கால் தடத்திலிருந்து அம்மண்ணை அவன் எடுத்திருந்தான். அவன் அம்மண்ணை அதனுள் போட்ட போது மாடு இயல்பாக கத்துவதை போன்றே அதுவும் கத்தியது. அவன் அதை ஒரு காளைக்கன்று குட்டியின் தோற்றத்தில் மாற்றினான். அதாவது இறைச்சியும் உயிரோட்டமும் உள்ள இரத்தமும் கொண்ட ஒரு கன்றாகவே அவன் அதையும் மாற்றிவிட்டான் என கத்தாதா (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட சிலர் கூறியுள்ளனர். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா 


இரவலாக வாங்கிய பொருள்களை குறிப்பிட்ட நாள்களுக்குள் திரும்ப ஒப்படைக்காமல், தாமே பயன்படுத்திக்கொண்டிருப்பது (ஹராமான) அனுமதிக்கப்படாத செயலாகும்.


திரும்ப ஒப்படைக்காத இரவலாக வாங்கிய அந்த நகைகள் அவர்களின் இணைவைப்பிற்கு காரணமானது. அஸ்ஸாமிரி அந்த நகைகளையெல்லாம் உருக்கியே காளைக்கன்று ஒன்றைச் செய்தான். அவனும் இஸ்ரவேலர்களில் சிலரும் அதையே தெய்வமாகவும் எண்ணி வழிபட்டனர். சுருங்கக் கூறின், ஹராமான வழியில் பெறப்பட்ட பொருள்கள் ஹராமான காரியங்களுக்கு தான் பயன்படும்.


சிலர், இரவல் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுப்பதே இல்லை. சிறிது நாள்களுக்குப் பிறகு அது குறித்து மறந்துவிடுங்கள் என்று சொல்வதும், உரிமையாளரே வேண்டாம் என்று சொல்லுமளவிற்கு வைத்துக்கொள்வதும்  நல்லதல்ல.

 

ஒரு கணவன் தமது மனைவியிடம், "இப்போது உனது நகையைக் கொடு. பிறகு அதே மாதிரி நகையை வாங்கித் தந்து விடுகிறேன்" என்று கூறி, இரவல் வாங்கி பயன்படுத்திவிட்டு, அது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதால் தாம்பத்தியத்தில் விரிசல் ஏற்படலாம். தமது மனைவியின் நகை தானே என்று பாராமுகமாக இருப்பதும் தவறு தான்.

 

பணிவுடன் தான் கேட்க வேண்டும்

 

ஒருமுறை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் ஸஃப்வான் (ரலி) அவர்களிடம், ( يَا صَفْوَانُ هَلْ عِنْدَكَ مِنْ سِلاَحٍ ) "ஸஃப்வானே! உம்மிடத்தில் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளனவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இரவலாகவா? அல்லது வலுக்கட்டாயமாகவா?" என்று கேட்டார். நபியவர்கள், ( لاَ بَلْ عَارِيَةً ) "(வலுக்கட்டாயமாக) இல்லை. மாறாக, இரவலாகவே கேட்கிறேன்" என்றார்கள். அப்போது அவர், முப்பது முதல் நாற்பது போர் கவசங்களை நபியவர்களுக்கு இரவலாக கொடுத்தார்.

 

நபியவர்கள் ஹுனைன் போரில் கலந்து கொண்டார்கள். அதில் இணைவைப்பாளர்கள் தோல்வி அடைந்ததற்கு பிறகு, ஸஃப்வான் (ரலி) அவர்களிடம் வாங்கிய கவசங்கள் தனியாக ஒன்று சேர்க்கப்பட்டன. அப்போது அவற்றில் சில கவசங்கள் தொலைந்து விட்டதை அறிந்தார்கள்.

 

எனவே, நபியவர்கள் ஸஃப்வானிடம் வந்து, ( إِنَّا قَدْ فَقَدْنَا مِنْ أَدْرَاعِكَ أَدْرَاعًا فَهَلْ نَغْرَمُ لَكَ ) "நாங்கள் உமது கவசங்களில் சிலவற்றை தொலைத்துவிட்டோம். (அதற்குப் பகரமாக) உமக்கு (அதன் கிரயத்தை) இழப்பீடாக வழங்கட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்( لاَ يَا رَسُولَ اللَّهِ لأَنَّ فِي قَلْبِي الْيَوْمَ مَا لَمْ يَكُنْ  يَوْمَئِذٍ ) "நாயகமே! வேண்டாம். ஏனெனில், இன்று எனது இதயத்தில் (உங்களைப் பற்றி) இதற்கு முன் எப்போதும் ஏற்படாத நல்லெண்ணம் ஏற்பட்டுவிட்டது" என்று கூறினார்.

 

அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன். ஸஃப்வா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் முன்னரே நபியவர்களுக்கு இரவலாக கவசங்களை வழங்கியிருந்தார். பின்னர் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நூல்:- அபூதாவூத்-3093

 

பிறரிடம் இரவல் கேட்கும்போது மிரட்டியோ அல்லது தமது அதிகாரத்தை பயன்படுத்தியோ கேட்கக்கூடாது. பணிவுடன் தான் கேட்டுப் பெற வேண்டும்.

 

இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு அதை அப்படியே மறந்து போய் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தும் நிலைக்கு அவர்களை ஆளாக்கும் போது உறவு பலவீனப்படுகிறது. ஆக, இரவல் வாங்குபவர்கள் தரம் (Quality) அளவு (Quantity) நேரம் (Punctuality) ஆகியவற்றில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். இது சாதாரண விஷயம் என்றோ, சின்ன விஷயம் என்றோ புறக்கணிப்பதற்கில்லை.

 

இவற்றுள் எது தவறினாலும் அதற்காக உண்மையாக வருத்தம் தெரிவித்து, உரியவர்களிடம் பகரம் செலுத்தி, அவர்களை சரிகட்டக்கூடிய மனப்பக்குவத்தையாவது வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இரவல் வாங்கி பயன்படுத்துகிற பொருள், நாம் வாங்குகிற நேரம் பார்த்துப் பெரிதாக ஒரு வேட்டு வைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செலவைச் செய்யக்கூடிய திராணி நமக்கு உண்டா? என்று சிந்திக்க வேண்டும். நாம் ஒரு பொருளை இரவல் கேட்கும்போது அவர்கள் மனம் கசந்து கொடுத்தார்களா? அல்லது மனப்பூர்வமாக கொடுத்தார்களா? என்பதை தெரிந்து கொள்வதில் நாம் அக்கறை காட்ட வேண்டும்.

 

ஒரு வாகனத்தை இரவலாக வாங்கி பயன்படுத்தும்போது அது ஏதேனும் பழுதடைந்துவிட்டால், அதை அப்படியே கொண்டு வந்து அது குறித்து எதையும் உரியவர்களிடம் சொல்லாமல் ஒப்படைத்துவிட்டு, எதுவும் நிகழாதது போல் செல்வது மிகப்பெரிய தவறாகும். நிகழ்ந்துவிட்டதை எடுத்துரைத்து அதற்குரிய பகரத்தை செய்வதே சாலச் சிறந்தது.

 

அப்போது தான் அவரிடம் மற்றொரு முறை எதையேனும் இரவலாக கேட்டால், அவர் கொடுக்கக்கூடும். இல்லையெனில், அவர் மறுத்துவிடக்கூடும் என்பதில் கவனம் தேவை.

 

சிரிக்க! சிந்திக்க!

 

முல்லா நஸ்ருத்தீன் அவர்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு டம்ளர் இரவலாக வாங்கிச் சென்றார். பிறகு மறுநாள் அந்த டம்ளருடன் சேர்த்து அதைவிட சிறிய டம்ளர் ஒன்றை கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர், "நான் கொடுத்தது ஒரு டம்ளர் ஆனால் நீங்கள் இரண்டு டம்ளரை திருப்பித் தருகிறீர்களே என்ன விஷயம்?" என்று கேட்டார்.

 

அதற்கு முல்லா, "உங்கள் வீட்டு டம்ளர் என் வீட்டிற்கு வந்த பிறகு, அது ஒரு குட்டி போட்டது. உங்கள் வீட்டு டம்ளர் ஈன்ற அந்த குட்டி டம்ளர் எனக்கு எதற்கு என்று நினைத்து, அதை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டேன்" என்றார்.

 

பக்கத்து வீட்டுக்காரர், "என்னடா இது? நம் வீட்டில் இருக்கும்போது இந்த டம்ளர் எந்த குட்டியும் போட்டவில்லை. சரி வந்த வரைக்கும் இலாபம் என்றெண்ணியவாறு, அந்த சின்ன டம்ளரையும் சேர்த்து வாங்கி வைத்துக் கொண்டார்.

 

பிறகு மற்றொரு முறை முல்லா, அந்தப் பக்கத்து வீட்டுக்காரரிடம் வந்து குடம் ஒன்றை இரவலாக கேட்டார். பக்கத்து வீட்டுக்காரர், "முல்லாவிடம் கொடுத்த ஒரு டம்ளரே குட்டி போடுகின்றபோது, குடம் குட்டி போடாதா?" என்றெண்ணியவாறு குடத்தை இரவலாக கொடுத்தனுப்பினார்.

 

பிறகு முல்லா, அந்தக் குடத்தை திருப்பிக் கொடுக்கும்போது ஒரு சின்ன குடத்தையும் சேர்த்து கொடுத்தார். "உங்கள் வீட்டுக் குடம் என் வீட்டிற்கு வந்த பிறகு போட்ட குட்டி இது" என்று கூறினார். அந்தப் பக்கத்து வீட்டுக்காரர், கிடைத்தது இலாபம் என்றெண்ணி அதையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

 

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் முல்லா தமது பக்கத்து வீட்டுக்காரரிடம் வந்து, "என் மனைவி வெளியூர் செல்ல இருக்கிறாள். எனவே, அதனால் உங்கள் மனைவி அணிந்திருக்கும் வைர நெக்லஸ் ஒன்றை இரவலாக தந்தால் பயணத்தை முடித்து விட்டு வந்தவுடனேயே அதை திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறி வைர நெக்லஸை இரவல் கேட்டார்.

 

அந்தப் பக்கத்து வீட்டுக்காரர், முல்லா வீட்டிற்கு சென்ற டம்ளர் குட்டி போட்டது; குடம் குட்டி போட்டது; நெக்லஸ் மட்டும் குட்டி போடாமலா இருக்கும்?" என்று எண்ணியவாறு நெக்லஸை இரவலாக கொடுத்தனுப்பினார்.

 

பக்கத்து வீட்டுக்காரர், "என்னடா இது? ஒருவாரம் ஆகிவிட்டது. இரவலாக கொடுத்த நெக்லஸ் இன்னும் மீண்டும் வராமல் இருக்கிறது. ஒருவேளை நெக்லஸ் குட்டி போட நாள்கள் அதிகம் தேவைப்படும் போல் தெரிகிறது என்றெண்ணி காத்திருந்தார்.

 

இதற்கு மத்தியில் இரண்டு மாதம் கடந்துவிட்டது. நெக்லஸை இரவலாக கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் பொறுமையாக இருக்க முடியாமல், முல்லாவிடம் சென்று நெக்லஸை பற்றி கேட்டார்.

 

உடனே முல்லா பதட்டமடைந்தவராக, "அடடே உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன். உங்கள் வீட்டு நெக்லஸ் பிரசவத்தின்போது இறந்துவிட்டது. இப்போதுதான் அதை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்" என்று கூறினார்.

 

அப்போது பக்கத்து வீட்டுக்காரர், டம்ளர் மற்றும் மற்றும் குடம் குட்டி போட்டது என்று முல்லா சொல்லும்போது அதை நம்பி, அவர் கொடுத்த சின்ன டம்ளர் மற்றும் சின்ன குடத்தை வாங்கியதால் இப்போது நெக்லஸ் இறந்துவிட்டது என்று சொல்லும்போது (அது எப்படி நெக்லஸ் இறந்து போகும் என்று) எதுவும் மறுத்து பேச முடியாமல் விழி பிதுங்கி நின்றார்.

 

இலவசமாக தரக்கூடிய அனைத்தையும் வாங்குவது சரியல்ல. அது நம்மிடம் இருக்கக்கூடிய ஏதேனும் ஒன்றை இழுத்துச் செல்ல தான் வருகிறது என்று விளங்க வேண்டும்.

 

இரவல் கொடுக்கும்போதும் வாங்கும்போதும், இஸ்லாம் கூறும் கண்ணியம் பேணி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

  

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...