பணிவு கொள்வோம்!
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ
عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
இவர்கள்தாம், ரஹ்மானுடைய அடியார்கள்:
பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால்
"ஸலாமுன்" என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள். திருக்குர்ஆன்:-
25:63
இந்த உலகம் உயர்வைத் தேடி ஓடுகிறது. அந்த உயர்வு பணிவின் மூலம் கிடைக்கிறது.
பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாசம் கிடைக்கிறது.
அவர்கள் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது. அதுவே பள்ளிக்கூடத்திலும் தொடர்கிறது.
ஆசிரியர்கள் அடிப்பதில்லை. சிறப்பாக கவனித்து பாடம் சொல்லிக்கொடுகிறார்கள். பாராட்டுகிறர்கள்.
அதிக மார்க் வாங்குகிறார்கள்.
கணவன் பேச்சு கேட்கும் பணிவுள்ள மனைவிக்குதான் அதிகம் பாசம் கிடைக்கிறது. குடும்பம்
அமைதி அடைகிறது. அங்கே கணவன் மனைவி சண்டைக்கு வேலையே இல்லை. அதே போல் பணிவுள்ள கணவனால்
தான் மனைவியை திருப்திபடுத்த முடியும். அதிகாரத்தினால் மனைவியை திருப்திபடுத்த முடியாது.
பணிவு நல்ல நட்பை தருகிறது. எளிதில் வேலை கிடைக்க
உதவுகிறது. பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள் பொறாமைகள்,
எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது.
இந்த உலகத்தில் இஸ்லாம் பறந்து விரிந்து இருப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்
இருந்த பணிவு என்ற அருங்குணம் தான் காரணம்.
நபியவர்களின் திருமண வாழ்க்கை மன நிம்மதியோடு கடந்ததற்கு காரணம் அல்லாஹுத்தஆலா
அவர்களுக்கு பணிவுள்ள பெண்களை மணமுடித்துத் தந்தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ
اللهُ ) அல்லாஹ்வுக்காக
ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5047
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِنَّ اللَّهَ أَوْحَى إِلَىَّ أَنْ تَوَاضَعُوا
حَتَّى لاَ يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ ) பணிவாக நடந்து கொள்ளுங்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம்
பெருமையடிக்க வேண்டாம் என்று இறைவன் எனக்கு அறிவித்தான். அறிவிப்பாளர்:- இயாள் பின்
ஹிமார் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5499
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ أَحَدٍ إِلَّاّ وَفِي عُنُقِهِ حِكْمَةٌ
مُوَكَّلٍ بِهَا مَلَكٌ ، يَقُولُ اللّهُ بِهِ إِنْ تَوَاضَعَ عَبْدَى فَارْفَعْهُ
، وَإِنْ ارْتَفَعَ فَضْعُهُ ) எந்த
ஒரு மனிதராக இருந்தாலும், அவருடைய கழுத்திலே (ஹிக்மத்
எனும்) ஞானம் இருக்கும். அதற்காகவே ஒரு வானவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளார். அல்லாஹ்
அவ்வானவரிடம், “என் அடியான் பணிவோடு
இருந்தால், அந்த ஞானத்தை அவனிடம்
உயர்த்துவாயாக. அவன் பணிவோடு இல்லையெனில் ஞானத்தை இறக்கிவிடுவாயாக” என்று கூறுகிறான்.
நூல்:- அல்கலிமுத்தய்யிப்
யஸீத் பின் மைசரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள்
(மக்களை நோக்கி!) ( مَا لِي لَا أرَى فِيكُم أفْضَلَ العِبادَةِ؟ ) "எனக்கு என்ன ஆனது? உங்களிடம் சிறந்த வழிபாட்டை நான் காணவில்லையே?"
என்று கூறினார்கள். அதற்கு மக்கள்,
"சிறந்த வழிபாடு எது?" என்று கேட்டார்கள். அன்னார், ( اَلتَّوَاضَعُ لِلَّهِ
) "அல்லாஹ்வுக்காக பணிவை மேற்கொள்வது தான் (சிறந்த
வழிபாடு)" என்று பதிலளித்தார்கள். நூல்:- அஸ்ஸுஹ்து இமாம் அஹ்மத், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அந்நஹ்ல் வசனம்-23
வீட்டில் உதவி ஒத்தாசை புரிவது
அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்?” என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ( مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي بَيْتِهِ قَالَتْ كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ ـ تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ ـ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ ) “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை அதாவது தம் குடும்பத்தாருக்கான பணிகளை செய்துவந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டு விட்டு) தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-676
ஆயிஷா (ரலி) அவர்களிடம், "கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் வீட்டில் என்னென்ன வேலைகள் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது காலணிகளையும் தமது ஆடைகளையும் தாமே தைத்துக் கொள்வார்கள். தமது ஆடையை தாமே சுத்தம் செய்வார்கள். தமது ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். உங்களில் ஒருவர் வீட்டில் வேலை செய்வது போன்றே நபியவர்களும் தங்கள் வீட்டில் வேலை செய்வார்கள். நூல்:- இப்னு ஹிப்பான்
வீட்டில் மனைவிக்கு
சிறு சிறு வேலைகள் செய்து கொடுத்து, அவளுக்கு உதவி ஒத்தாசை புரிவது (சுன்னத் எனும்) நபிவழியாகும். கணவன் தமது மனைவிக்கு
உதவி ஒத்தாசை செய்வதால், "அவன் பொண்டாட்டிதாசன்"
என்றோ "மனைவியின் மீதுள்ள அச்சம்" என்றோ "தலையணை மந்திரம்தான் காரணம்"
என்றோ தவறாக விளங்கக்கூடாது. அது பணிவின் வெளிப்பாடு என்று விளங்க வேண்டும்.
தோழர்களிடம்
(நபியே!) இறைநம்பிக்கையாளர்களில் யார் உம்மைப் பின்பற்றுகிறார்களோ அவர்களிடம் பணிவாக
நடந்து கொள்வீராக! திருக்குர்ஆன்:- 26:215
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ர் போர் காலகட்டத்தில்
(நபித்தோழர்கள்) ஒவ்வொரு மூன்று பேருக்கும் தலா ஓர் ஒட்டகம் என்ற விதத்திலேயே நாங்கள்
(வாகன வசதி பெற்று) இருந்தோம். (அந்த வகையில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பயணத்
தோழர்களாக அபூ லுபாபா (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் இருந்தனர்.
நபியவர்கள் நடந்து வர வேண்டிய முறை வந்தது. அப்போது அவ்விருவரும் "(நாயகமே!)
உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம். (நீங்களே தொடர்ந்து வாகனத்தில் சவாரி செய்யுங்கள்)"
என்றனர்.
அப்போது நபியவர்கள், ( مَا أَنْتُمَا بِأَقْوَى مِنِّي وَلَا أَنَا بِأَغْنَى عَنِ
الْأَجْرِ مِنْكُمَا ) "(வேண்டாம்!) நீங்கள் இருவரும் (நடப்பதற்கு) என்னை
விட மிகவும் வலிமை பெற்றோரும் அல்லர். உங்களைவிட நான் பிரதிபலன் தேவையற்றவனும் அல்லன்"
என்று சொல்லிவிட்டார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-3706
ஹிஜ்ரீ 2 ஆம் ஆண்டு (கி.பி. 624)
நடந்த பத்ருப் போர் சமயத்தில் முஸ்லிம்களிடம் பயணிப்பதற்கு
போதுமான வாகனங்கள் இல்லை. மூன்று பேருக்கு ஓர் ஒட்டகம் என்ற அளவிலேயே வாகன வசதி இருந்தது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்கள் அபூலுபாபா ரிஃபாஆ பின் அப்தில் முன்திர்
அல்அன்சாரீ (ரலி) அவர்கள் ஆகிய மூவருக்கும் ஓர் ஒட்டகம் வாய்த்தது. அதன் மேல் பயணச்சுமைகளையும்
ஏற்ற வேண்டும்; மூவரும் அமர்ந்து செல்லவும்
வேண்டும் என்றால் அது வசதிப்படாது. எனவே, பயணச்சுமைகளை ஏற்றிக்கொண்டு ஒருவர் அல்லது இருவர் பயணிக்கலாம். மற்றொருவர் கீழே
நடந்து வரவேண்டும்.
இவ்வாறாக, மூவரும் பயணித்தபோது நபியவர்கள் கீழே இறங்கி நடக்க வேண்டிய முறை வந்தது.
அப்போது நபியவர்கள் இறங்கத் தயாரானபோது தோழர்கள் இருவரும், "தாங்கள் மேலேயே அமருங்கள். தங்களுக்காக நாங்கள்
நடந்து வருகிறோம்" என்றார்கள். உடனே நபியவர்கள், "எனக்காக நடந்து வர நீங்கள் என்னை விட வலிமை மிக்கோரும் அல்லர்.
நான் நடப்பதால் கிடைக்கும் நன்மை தேவையில்லாதவனும் அல்லன்" என்று கூறிவிட்டு நடக்கலானார்கள்.
இது நபியவர்களின் உச்சபட்ச பணிவையும், தோழர்களுடன் ஒத்துழைப்பையும், அல்லாஹ் அளிக்கும் நற்கூலியின்
மீது கொண்ட வேட்கையையும் நன்கு உணர்த்துகின்ற அபூர்வ நிகழ்வாகும்.
சாதாரணமானவன்
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்
ஒருவர் வந்தார். நபியவர்கள் அவரிடம் உரையாடினார்கள். அப்போது (மதிப்பச்சத்தின் காரணமாக)
அவரது தோள்கள் நடுங்கலாகின. நபியவர்கள் அவரிடம், ( هَوِّنْ عَلَيْكَ فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ إِنَّمَا
أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ ) "இயல்பான அமைதியுடன்
இருங்கள். நான் அரசன் இல்லை. நான் உப்புக்கண்டம் சாப்பிட்டு வந்த ஒரு (சாதாரமாணப்)
பெண்ணின் மகன்தான்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-3303
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களின் மகத்தான தலைவராக இருந்தாலும், பணிவைக் கடைபிடிக்க அவர்கள் தவறியதே இல்லை.
தனக்கு ஆயிரம் பெருமைகள் வாய்த்திருந்தும், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருப்பது பணிவு. ஒன்றுமில்லாத ஏழையிடமும் கனிவுடன் நடந்து கொள்வது பணிவு. ஹோட்டலில் டேபிள் துடைக்கும் தொழிலாளியை சரிசமமாக மதிக்கத் தெரிந்தால், அது பணிவு. மனிதனின் நற்பண்புகள் அனைத்துமே 'பணிவு' என்னும் ஒற்றைப் பண்பிற்குள் அடங்கும்.
ஆணவக்காரன் தான் பேச ஆரம்பிக்கும்போதே நான் யார் தெரியுமா? என்னுடைய செல்வாக்கு, மற்றும் பின்புலம் (Background) பற்றி அறிவாயா? என்று கூறுவான். ஆனால், பணிவுள்ளவர் இவ்வாறான வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்தவே மாட்டார்.
சிறந்த ஆட்சியாளரின் பண்பு
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. மதீனாவாசிகளின்
(சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்திகூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைப் பற்றியவண்ணம்
(தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும்.
(அந்த அளவுக்கு மிக பணிவானவர்களாகவும் சமூக சேவை புரிபவர்களாகவும் அண்ணல் நபி - ஸல்
அவர்கள் திகழ்ந்தார்கள்.) நூல்:- புகாரீ-6072
அன்றைய அரபு நாட்டில் மிருகத்தைவிடக் கேவலமாக
நடத்தப்பட்டவர்கள் அடிமைகள். அவர்களை ஒரு மனிதானாகக்கூட மதிப்பதும் இல்லை.
அவர்களிடம் அன்பு காட்டுவதும் இல்லை. சாதாரணமான மனிதர்களே மதிக்காத அடிமைகள்கூட அண்ணல்
நபி (ஸல்) அவகளிடம் கைகோர்த்துச் செல்ல முடியும் என்ற அளவிற்கு பணிவு
நிறைந்தவர்களாக நபியவர்கள் திகழ்ந்தார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு
பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நாயகமே! எனக்கு தங்களிடம் ஒரு
தேவை உள்ளது. (ஒரு விஷயம் பற்றி கேட்க வேண்டும்)” என்று கூறினாள். அப்போது
அண்ணலார், ( يَا أُمَّ فُلاَنٍ انْظُرِي أَيَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِيَ لَكِ
حَاجَتَكِ ("இன்ன மனிதரின் தாயே! எந்த
தெருவுக்கு நான் வரவேண்டும் என நீ விரும்புகிறாய்; சொல். உனது தேவையை நான் நிறைவேற்றிவைக்கிறேன்"
என்று கூறிவிட்டு, அவள் தமது தேவையை முடித்துக்
கொள்ளும்வரை (மக்கள் நடமாட்டமுள்ள ஒரு தெருவில்) அவளுடன் தனியாக(ப் பேசிக்கொண்டு)
நின்றிருந்தார்கள். நூல் முஸ்லிம்-4648, ஷமாயில் திர்மிதீ-331
பிறர் பேச்சை காது கொடுத்து கேட்பதும் பணிவு தான். தன்னடக்கம் உடையவனது அதிகாரம்
மந்திரக்கோல் போன்றது. அவனுடைய அதிகாரத்திற்கு மக்கள் கட்டுண்டு போவார்கள். பணிவுள்ளவன்
தான் சிறந்த தலைவனாக முடியும். அவன் தான் காலத்தால் நிலைத்து நிற்கிறான்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரிய தலைவராகவும் ஆட்சியாளராகவும்
இருந்தும்கூட மக்களுடன் பணிவுடன் பழகும் பழக்கம் உள்ளவராக இருந்தார்கள். அண்ணலாரை
மக்கள் எளிதில் சந்திக்க முடியும்; நெருங்கிப் பழக முடியும். பாதிக்கப்பட்டவர்கள்
தம் உரிமைகளை பெறவும் இதுவே காரணமாக அமைந்தது. இதுவே சிறந்த ஆட்சியாளருக்கான
தலைவருக்கான முன்மாதிரி ஆகும்.
தாழ்ந்த நிலத்தில் தான் தண்ணீர் ஓடி நிற்கும். பணிவுடையார் உள்ளத்தில்தான் அருள்வெள்ளம்
பாய்ந்து நிற்கும்.
சிறந்த மனைவி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து,
( يَا رَسُولَ
اللَّهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ
أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا
وَمِنِّي، وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ، لاَ صَخَبَ فِيهِ وَلاَ
نَصَبَ ) "அல்லாஹ்வின் தூதரே! இதோ! கதீஜா தம்முடன் குழம்பு, அல்லது உணவு, அல்லது குடிபானம் உள்ள பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்.
அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும்
முகமன் (சலாம்) கூறி, அவருக்குச் சொர்க்கத்தில்
கூச்சல் குழப்பமோ களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி
சொல்லுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3820,
முஸ்லிம்-4817
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் தமது 25 ஆம் வயதில் 40 வயது நிரம்பிய கதீஜா
(ரலி) அவர்களை மணமுடித்தார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் தமது கணவரைவிட செல்வந்தராக
இருந்தார்கள். தாம் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தபோதும் தமது கணவரிடம் கர்வம் கொண்டவராகவோ, நன்றி கெட்டவராகவோ ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. மாறாக, தமது கணவரின் அந்தஸ்தை விளங்கி அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து
பணிவிடைகளையும் மனமுவந்து செய்பவராக மிகுந்த பணிவோடு நடந்து கொண்டார்கள். தமது செல்வம்
முழுவதையும் தமது கணவரிடம் கொடுத்து இஸ்லாத்திற்காக செலவு செய்த சீமாட்டி ஆவார்.
கதீஜா (ரலி) அவர்கள் தமது கணவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களைவிட வயதில் மூத்தவராக
இருந்தபோதும்கூட தமது கணவருக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிவிடைகளையும் குறை வைக்காமல்
செய்து முடித்தார்கள். ஏனெனில், அவர்களிடமிருந்த பணிவு எனும் அருங்குணம் தான் அதற்குக்
காரணமாகும். பணிவுடைய மனைவிதான் தமது கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை முழுமையாகச்
செய்து முடிப்பாள். இதனால்தான் நபியவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் அவரை நினைவு கூர்ந்து
கொண்டே இருந்தார்கள்.
மக்களின் பணியாளர்
அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்கள் ஈராக்கில் இருந்து ஒரு தூதுக்குழுவுடன் மதீனா
வந்திருந்த போது ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அரசு கருவூலத்தில் உள்ள ஒட்டகங்களைப்
பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது ஜனாதிபதி அவர்கள்,
"அஹ்னஃப்! உன்னுடைய ஆடையை
வரிந்து கட்டிக் கொண்டு இந்த வேலையில் என்னோடு உதவி செய்வீராக!" என்று கூற, அவர்களும் அதற்கு உதவி செய்தார்கள்.
அப்போது அந்தக் குழுவில் இருந்த ஒருவர், ( يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ
فَهَلَّا تَأْمُرُ عَبْدًا مِنْ عَبِيدِ الصَّدَقَةِ فَيَكْفِيكَ هَذَا؟ )
"ஜனாதிபதி அவர்களே! அல்லாஹ்
உங்களை மன்னிப்பானாக! நீங்கள் இந்த வேலைகளை செய்வதற்கு அடிமைகளில் ஒருவருக்கு உத்தரவிடக்கூடாதா? அது உங்களுக்கு போதுமானதாக இருக்குமே!" என்று கேட்டார். அதற்கு ஜனாதிபதி உமர்
(ரலி) அவர்கள், ( وَأَيُّ عَبْدٍ هُوَ أَعْبَدُ مِنِّي، وَمِنَ
الأَحْنَفِ؟ إِنَّهُ مَنْ وَلِيَ أَمْرَ المُسْلِمِينَ فَهُوَ عَبْدٌ
للمُسْلِمِينَ ) "இன்னாரின் மகனே! அஹ்னஃப் மற்றும் என்னை விடவும் அடிமை வேறு யார்
இருக்கிறார்? யார் முஸ்லிம்களின் காரியத்திற்கு பொறுப்பேற்றாரோ, அவர் அந்த முஸ்லிம்களுக்கு அடிமையே ஆவார்." என்று கூறினார்கள்.
நூல்:- கன்ஸுல் உம்மால்
பணிவு என்று குறிப்பிடுவது தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதாகும். அடிமையாகவோ
சுயமரியாதையின்றி இருப்பதோ அல்ல. பிறரது சுய மரியாதையை தாக்காமல் இருப்பது. காக்கா
பிடித்தல், முகஸ்துதி எல்லாம் பணிவு ஆகாது; இது ஏமாற்று. மனிதர்கள் காலில் விழுவதும்
பணிவாகாது; அடிமைதனமிது. சுயமரியாதை அற்ற கீழான செயல். தீமைகளுக்கு பணிவதும் கூடாது.
மற்றவர்களை புண்படுத்தாத, பிறரை மதிக்கும், பிறர்
உணர்வை புரிந்து கொண்டு நடக்கும் பணிவு, ஒருவர் லிப்டில் உயரே போவது போல் வாழ்வில்
உயரச்செய்யும்.
வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுக்கிடையே
ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக்
காணலாம்.
உயர்ந்த பண்பின் அறிகுறி
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது. முஆத் (ரலி) அவர்கள் சிரியாவில்
இருந்து (ஷாம்) திரும்பி (மதீனா) வந்தபோது அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு (சஜ்தா எனும்)
சிரவணக்கம் செய்தார். நபியவர்கள், ( مَا هَذَا يَا مُعَاذُ
) "முஆத்! இது என்ன (புதுப்பழக்கம்)?"
என்று வினவினார்கள். முஆத் (ரலி) அவர்கள்,
"நான் சிரியாவுக்கு சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள்
தம் மதகுருமார்களுக்கும் தலைவர்களுக்கும் சிரவணக்கம் செய்வதை நான் கண்டேன். எனவே,
அதை நாங்கள் தங்களுக்குச் செய்ய வேண்டும் என்று
விரும்பினேன்" என்று பதிலளித்தார்.
அப்போது நபியவர்கள், ( فَلاَ تَفْعَلُوا فَإِنِّي لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ
يَسْجُدَ لِغَيْرِ اللَّهِ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا ) "அவ்வாறு செய்யாதீர். நான் அல்லாஹ் அல்லாதவருக்குச்
சிரவணக்கம் செய்ய யாருக்கேனும் கட்டளையிடுவதாக இருந்தால், ஒரு பெண் தன் கணவனுக்குச் சிரவணக்கம் செய்ய வேண்டுமென நான் கட்டளையிட்டிருப்பேன்"
என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-1843,
திர்மிதீ-1079
ஓர் அடியான் சிரவணக்கம் என்பதை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டும். இதை அல்லாஹ்வைத்
தவிர மற்றவருக்கு செய்யலாகாது. காரணம், சிரவணக்கம் என்பது பணிவின் உச்சக்கட்டம். அதாவது, ஓர் பெண் அல்லாஹ்விற்கு அடுத்து மிகுந்த பணிவை பேணவேண்டியது
அவளின் கணவரிடம் தான் என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இருவருடைய தொழுகை அவர்களின் தலைக்கு
மேல் உயராது. 1) தன் உரிமையாளரிடமிருந்து ஓடிவிட்ட அடிமை. அவன் திரும்பிவரும் வரை.
2) தன் கணவனுக்கு மாறு செய்த பெண் (மனைவி). அவள் (பணிவாகத்) திரும்புகின்ற வரை. அறிவிப்பாளர்:-
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், தப்ரானீ
பணிவு என்பது அடிமையின் குணமல்ல, தாழ்மையின் சின்னமுமல்ல, அது உயர்ந்த பண்பின்
அறிகுறி. குடும்ப உறுப்பினர்கள் பெரியவர்களிடமும், பிள்ளைகள் பெற்றோர்களிடமும், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும், மாணவர்கள் ஆசிரியர்களிடமும், முதலாளிகள் தமது
தொழிலாளிகளிடமும், ஊழியர்கள் அதிகாரிகள்
தமக்குக்கீழ் பணியாற்றுபவர்களிடமும், தலைவர்கள் தொண்டர்களிடமும் எப்போதும் பணிவாக இருந்தால் தான் அவர்களிடையேயான உறவுமுறை
சிறக்கும், ஒற்றுமை மேலோங்கும்,
வாழ்வு செம்மையுறும். பணிவு என்பது ஒருவரின் முன்னேற்றத்திற்கான
முதல் படி.
சான்றோர்கள் கூற்று
இமாம் ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்களிடம், "பணிவு என்றால் என்ன?" என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ( يَخْضَعُ لِلْحَقِّ، وَيَنْقَادُ لَهُ، وَيَقْبَلُهُ مِمّنْ قَالَهُ ) "சத்தியத்தி்ற்குப் பணிந்து நடப்பதும், அதற்குக் கட்டுப்படுவதும், யாரிடமிருந்து அது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதுமாகும்"என்று பதிலளித்தார்கள்.
இமாம் ஜுனைத் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( هُوَ خَفْضُ الْجَنَاحِ، وَبَيْنَ الْجَانِبِ ) பணிவு என்பது இரக்க சுபாவத்துடன் மென்மையாக நடப்பதும், வழிப்பட்டு, கட்டுப்பட்டு நடப்பதுமாகும்.
இமாம் இப்னு அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( هُوَ قَبُولُ الْحَقِّ مِمّنْ كَانَ! وَالْعِزُّ
فِى التَّوَاضُعِ. فَمَنْ طَلَبَهُ فِى الْكِبَرِ فَهُوَ كَتَطَلُّبِ الْمَاءِ مِنْ
النَّارِ ) பணிவு என்பது,
சத்தியம் யாரிடமிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாகும்.
பணிவில்தான் கண்ணியமே இருக்கிறது. எவர் அதை பெருமையில் தேடுகிறாரோ அவர், நெருப்பில் தண்ணீரைத் தேடியவரைப் போலாவார். நூல்:- மதாரிஜுஸ் ஸாலிக்கீன் - இமாம் இப்னு கைய்யிம்
அல்ஜவ்ஸிய்யா (ரஹ்)
பணிவு எளிதில் வராது. பணிவு வாழ்க்கையில் சிறந்தோருக்கே தோன்றும் உயர்ந்த குணம்.
முற்றிய கதிர்மணிகளுடைய செந்நெற் பயிர்கள் தாழ்ந்து தரையிற் கிடத்தல் போல, நிறைந்த அறிவும், ஆற்றலும் உடையவர்கள் தான் பணிந்து போவார்கள்.
எனவே, அல்லாஹுத்தஆலா
நம்மை பணிவுள்ளவர்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment