Search This Blog

Sunday, 16 June 2024

ஏட்டிக்குப் போட்டி

 

ஏட்டிக்குப் போட்டி

 

وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

 

நீங்கள் ஒன்றை வெறுக்கலாம் ஆனால் அது உங்களுக்கு நன்மையாக இருக்கும் ஒன்றை நீங்கள் விரும்பலாம் அது உங்களுக்கு தீங்காக இருக்கும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா? தீமைளிக்குமா? என்பதை) அல்லாஹ்தான் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள். திருக்குர்ஆன்:-  2:216

 

மனிதன் அறிவில் மிகவும் குறைந்தவன். "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" என்பது தமிழ் சொல்வழக்கு. தனக்கு எது நன்மை அளிக்கும் எது தீமையளிக்கும் என்பதை முற்றிலும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. அல்லாஹ் ஒருவனே எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்.

 

நம்முடைய குழந்தைக்கு கடும் குளிர் காய்ச்சல் கண்டுள்ளது. அப்போது தனக்கு ஐஸ்கிரீம் வேண்டுமென குழந்தை கேட்டால் அது உடல் நலத்திற்கு கெடுதலை உண்டாக்கும் என்று பெற்றோர் அறிவார்கள். எனவே, அது வேண்டாம்; சுவையாக இருக்காது என்று பல காரணம் கூறி வாங்கித் தர மறுத்துவிடுவார்கள். இது போலத்தான் மனிதன்  விஷயத்தில் இறைவன் இருக்கிறான். 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مِنْ سَعَادَةِ ابْنِ آدَمَ رِضَاهُ بِمَا قَضَى اللَّهُ لَهُ ) ஆதமின் மகன் (மனிதன்) தனக்காக இறைவன் விதியில் எழுதியதை மனநிறைவோடு ஏற்றுக் கொள்வதானது, அவனது நற்பேற்றில் அடங்கும். அறிவிப்பாளர்:- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2077

 

தனக்கு எது நன்மை பயக்கும்; எது தீங்கு விளைவிக்கும் என்பது கூட மனிதனுக்கு உறுதியாகத் தெரியாது. மேலோட்டமாகவும் தற்காலிகமாகவும் கணக்குப் போடுபவனே மனிதன். ஆகவே, நல்லதைத் தனக்குத் தேர்வு செய்து கொடுக்குமாறு இறைவனிடமே மனிதன் கோர வேண்டும். பிறகு விதியின்படி எது வருகிறதோ அதை வெறுக்காமலும் எரிச்சலின்றியும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்‌ இதுவே மனிதனின் நற்பேற்றுக்கு அடையாளமாகும்.

 

வெளித்தோற்றத்தைப் பார்க்காதே!

 

இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் ஏறிச் சென்றுகொண்டிருந்தான். உடனே அவள், ( اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَهُ ) ‘‘இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்குவாயாக!” என்று துஆ செய்தாள். உடனே அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ( اللَّهُمَّ لاَ تَجْعَلْنِي مِثْلَهُ‏ ) ‘‘இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கிவிடாதே” என்று கூறியது.

 

பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் விரலை (குழந்தை பாலை) உறிஞ்சுவது போல் சைகை செய்தார்கள். பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ( اللَّهُمَّ لاَ تَجْعَلِ ابْنِي مِثْلَ هَذِهِ )  ‘‘இறைவா! என் மகனை இவளைப்போல் ஆக்கிவிடாதே” என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, ( اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا ) ‘‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்குவாயாக!” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ( لِمَ ذَاكَ ) ‘‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டதற்கு அக்குழந்தை, ( الرَّاكِبُ جَبَّارٌ مِنَ الْجَبَابِرَةِ، وَهَذِهِ الأَمَةُ يَقُولُونَ سَرَقْتِ زَنَيْتِ‏.‏ وَلَمْ تَفْعَلْ ) ‘‘வாகனத்தில் ஏறிச் சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்; விபசாரம்செய்து விட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று பதிலளித்தது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3436, முஸ்லிம்-4986

 

மனிதர்களின் வெளித்தோற்றங்களை மட்டும் வைத்து அவர்களை எடை போடக்கூடாது. வெளித்தோற்றத்தில் வனப்போடும் அழகோடும் வாழும் பலரின் அந்தரங்க வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. பகட்டாகவும், கவர்ச்சியாகவும் வாழ்வதைவிட இறைவன் விரும்பும் நேரிய வழியில் எளிமையாக வாழ்வதே உண்மையான வாழ்க்கை ஆகும்.

 

உண்மையே வென்றது

 

ஒருமுறை இறைத்தூதர் மூசா (அலை) அவர்களின் (இறை அற்புதமாக) கையில் இருந்த குச்சி பாம்பாக மாறுவதும், தனது கையை விலாபுறாத்தில் வைத்து எடுத்தவுடன் ஒளி சிந்தும் விளக்காக மாறுவதையும் பார்த்த ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள், "இவர் நன்கு கற்றுத் தேர்ந்த சூனியக்காரர் தான்" என்று சொல்லிக்கொண்டு ஃபிர்அவ்னிடம் சென்று "உங்களுடைய நாட்டை விட்டும் உங்களையே மூசா வெளியேற்ற நாடுகிறார்" என்றனர்.

 

உடனே ஃபிர்அவ்ன் "இதை தடுக்க நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுங்கள்" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "மூசாவுக்கும் அவரின் சகோதரருக்கும் சிறிது காலம் தவணை கொடுத்து, நம்முடைய நாட்டிலுள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி குறிப்பிட்ட நாளில் அரண்மனைக்கு எதிரில் ஒரு போட்டி வைப்போம். அப்போது நிச்சயமாக அப்போட்டி மூசாவையும் அவரின் மார்க்கத்தையும் அழிப்பதற்கு உதவியாக இருக்கும்" என்று யோசனை கூறினர்.

 

அதுபோல் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர். அப்போது ஃபிர்அவ்னிடம், "நாங்கள் வெற்றிவாகை சூடிவிட்டால் அதற்கு பிரதிபலன் ஏதேனும் உண்டா?" என்று சூனியக்கார்கள் கேட்டனர். அதற்கு பிர்அவ்ன், "நான் உங்களுக்கு சிறப்பான அந்தஸ்தைத் தருவேன்; அத்தோடு உங்கள் அனைவரையும் அரண்மனைக்குள்ளேயே எனதருகிலேயே வைத்துக் கொள்வேன்" என்றான்.

 

போட்டி ஆரம்பமாக உள்ளது. அப்போது மூசா (அலை) அவர்கள் சூனியக்காரர்களைப் பார்த்து, "போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால், உங்கள் அரசனிடம் பல அந்தஸ்துகள் கிடைக்கும். நாங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் அனைவரும் எங்கள் மீது விசுவாசம் (இறைநம்பிக்கை) கொள்வீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நிச்சயமாக இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்கின்றோம்" என்றனர்.

 

போட்டியின் ஆரம்பத்தில் சூனியக்காரர்கள் கையில் வைத்திருந்த சில பொருள்களை கீழே போட்டார்கள். சூரிய வெப்பத்தின் காரணமாக அவர்கள் போட்ட அந்த தடிகளும், கயிறுகளும் மனிதர்களுடைய கண்களுக்கு பளபளவென்று பாம்பு போன்ற நெளிந்து ஓடுவதைப் போன்று தெரிந்தது. மனிதர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். அவற்றைக் கண்ட மூசா (அலை) அவர்களும் ஒருவித அச்சம் கொண்டார்கள்.

 

உடனே அல்லாஹ்விடமிருந்து, "மூசா! நீர் அஞ்ச வேண்டாம். நீர் உமது கைத்தடியை போடுவீராக!" ஒரு நற்செய்தி வந்தது. உடனே மூசா (அலை) அவர்கள் தாம் வைத்திருந்த கைத்தடியை கீழே போட்டார்கள். உடனே அது மாபெரும் மலைப்பாம்பாக மாறி சூனியக்காரர்கள் வீசியிருந்த கயிறுகள் தடிகள் மற்றும் அங்கிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் விழுங்க ஆரம்பித்துவிட்டது. இந்த பயங்கரக் காட்சியைக் கண்டதும் வேடிக்கை பார்த்த மக்களெல்லாம் பயத்தால் ஓட ஆரம்பித்தனர்‌.

 

உடனே மூசா (அலை) அவர்கள் அந்த பாம்பின் மீது கை வைத்தார்கள். உடனே அது பழைய கைத்தடியாக மாறியது. இந்த அதிசயத்தை கண்டு அங்கு கூடியிருந்த சூனியக்காரர்கள் அனைவரும் அப்படியே தலைக்குப்புற சஜ்தாவில் விழுந்து, "அகிலங்களின் இறைவனைக் கொண்டு நம்பிக்கை கொண்டோம் என்றனர். மூசா (அலை) அவர்கள் மீது நாங்கள் விசுவாசம் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நாங்கள் முஸ்லிம்களாகி விடுகிறோம்" என்றனர். இச்சம்பவத்தைப் பற்றி  திருக்குர்ஆன் (7:109-122) கூறுகிறான்.

 

இந்தப் போட்டியை வைத்து மூசா (அலை) அவர்களையும், அவர்கள் கொண்டு வந்த புனித மார்க்கத்தையும் அழித்துவிடலாம் என்று ஃபிர்அவ்ன் தப்பெண்ணம் கொண்டான். ஆனால், இந்த போட்டியின் காரணமாக மூசா (அலை) அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், அவர்கள் கொண்டு வந்த புனித மார்க்கமும் வலிமை பெற்று வளர்ந்தோங்கியது. இப்போட்டியின் மூலம் தனக்கு நன்மை ஏற்படும் என்று ஃபிர்அவ்ன் கருதினான். மாறாக, அது அவனின் எண்ணத்திற்கு ஏட்டிக்குப் போட்டியாக அமைந்தது. மனிதன் நினைப்பது ஒன்று; இறைவன் நினைப்பது ஒன்று; ஆனால், இறைவன் நினைப்பது மட்டுமே நடைபெறும் இதுதான் உண்மையாகும்.

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் செயல்பட்டது. அங்கிருந்த 110 அடுக்குமாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் மீது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி  தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3,000 பேர் உயிரிழந்தனர். 25,000 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 184 பேர் உயிரிழந்தனர்.

 

இதை முஸ்லிம்கள் தான் நிகழ்த்தினர். "முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் தான்; அவர்களின் வேதமாகிய குர்ஆன் தீவிரவாதத்தைப் போதிகின்றது" என்றெல்லாம் அவதூறை கட்டவிழ்த்து விட்டனர் இஸ்லாமிய விரோதிகள். 

 

அதன் பிறகு உலக முஸ்லிம்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டது. இந்நிகழ்வுக்கு பிறகு மேலை நாட்டினர் பலரும் இஸ்லாம் என்றால் என்ன? குர்ஆனில் அப்படி என்ன சொல்லப்பட்டுள்ளது? என்று நடுநிலை சிந்தனையுடன் ஆய்வு செய்தனர். அதன் மூலம் உண்மையை விளங்கி முஸ்லிமானோர் தான் அதிகம்.

 

ஆம்! கால ஓட்டத்தில் இஸ்லாமிய விரோதிகள் எதைக் கொண்டு இஸ்லாத்தை அழிக்க சதி செய்தாலும், அதைக் கொண்டே இஸ்லாம் வளர்ந்து வருகிறது. வெட்ட வெட்ட துளிர்விட்டு வளரும் மார்க்கம் இஸ்லாம். இஸ்லாத்தை முழுமையாக யாராலும் அழிக்க முடியாது. இஸ்லாம் அழிந்து போகும் மார்க்கம் அல்ல; அது, வளரும் மார்க்கம். இதை, மதிகெட்டோர் விளங்கவேண்டுமே!


அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فإنَّ اللَّهَ لا يَتَعاظَمُهُ شيءٌ أعْطاهُ ) அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  முஸ்லிம்-5201

 

திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட இம்ரானின் மனைவி ஹன்னாவுக்கு குழந்தை பேறு இல்லாதிருந்தது. ஒருமுறை ஒரு மரத்தடியின் நிழலுக்காக ஹன்னா அவர்கள் அமர்ந்திருந்தார். அப்போது தாய்ப்பறவை ஒன்று தீனியைக் கொண்டு வந்து அம்மரத்தின் தமது கூட்டில் இருந்த தமது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டியது. இதைப் பார்த்த ஹன்னா அவர்களின் மனதில் "தனக்கொரு குழந்தை இருந்தால் இவ்வாறு உணவு ஊட்டலாமே!" என்ற உணர்வு ஏற்பட்டது.

 

தனக்கு குழந்தையை அருளுமாறு அல்லாஹ்விடம் உளமாற வேண்டினார். "இறைவா எனக்கு ஒரு குழந்தையை நீ அருளினால் அதனை உமது திருவிடாகிய 'பைத்துல் முகத்தஸ்' எனும் புனித ஆலயத்தில் தொண்டு செய்யும் பொருட்டு அப்படியே விட்டுவிடுகிறேன் என்றார். வல்லோன் அல்லாஹுத்தஆலா இவரின் பிரார்த்தனை ஏற்றுக்கொண்டான் அவர் (ஹன்னா) கருவுற்று விட்டார்.

 

பொது இடமான இறை ஆலயத்தில் ஆண்கள் தான் ஊழியம் புரிவது பொருத்தமே தவிர, பெண் அல்லர். தனக்குப் பிறக்கின்ற குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று மனதில் எண்ணம் கொண்டு இம்ரானின் மனைவி (கர்ப்பிணியாக இருக்கும்போது) "என் இறைவா! நிச்சயமாக நான் என் வயிற்றில் உள்ளதை உனக்காக (உன் சேவைக்கு) உரிமை விடப்பட்டதாக நேர்ந்து கொண்டேன். எனவே என்னிடமிருந்து அதை நீ ஏற்றுக்கொள்வாயாக!" என்று பிரார்த்தனை புரிந்தார்.

 

ஆனால், பெற்றபோது பெண் குழந்தையாக பிறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். "இறைவா! நான் பெண் குழந்தையல்லவா பெற்றெடுத்து விட்டேன்?" என்று புலம்புகிறார்.

 

இதைச் செவியுற்ற இறைவன், "பெண்ணே! நீ கேட்டதை விட சிறப்பானதொரு குழந்தையை தந்துள்ளேன். நீ புனித ஆலயத்திற்கு பணியாளராக வேண்டுதல் செய்த அந்த ஆண் குழந்தை, நீ பெற்றெடுத்த இந்த பெண் குழந்தைக்கு ஈடாகாது" என்றான். இதைக் குறித்து திருக்குர்ஆன் (3:35,36)  வசனங்கள் விவரிக்கிறது.

 

ஆம்! அந்தப் பெண் கேட்டது சாதாரண பணியாளரை தான். ஆனால், அல்லாஹுத்தஆலா கொடுத்ததோ ஒரு சமுதாயத்திற்கே நேர்வழிகாட்டியாக வந்துதித்த இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களை பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்ற புனித பெண்ணை (அன்னை மரியம் - அலை அவர்களை) அல்லவா? அல்லாஹ்வின் இத்திட்டத்தை ஹன்னா அறிந்திட முடியாததன்றோ! இச்சம்பவம் ஹன்னா அவர்கள் நினைத்ததற்கு மாற்றமாக ஏட்டிக்குப் போட்டியாக தானே நடைபெற்றது. எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.

 

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டால் அடுத்து ஓர் ஆண் குழந்தை வேண்டுமே என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக பிறரிடம் துஆ செய்யுங்கள் என்றும் கூறுகிறார்கள். அடுத்ததும் பெண் குழந்தை பிறந்துவிட்டால் மிகவும் அங்காலாயித்துக் கொண்டு அல்லாஹ்வையே குறைக்கூறுகிறார்கள்.

 

சிலர், தமது முதுமையில் ஆண் பிள்ளை உணவு, உடை, உறைவிடம் கொடுத்து பாதுகாப்பான் என்றும், பெண் பிள்ளை தமது கணவனுடன் சென்றுவிடுவாள். அவளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்று எண்ணுகிறார்கள். ஆனால், சில வீடுகளில் ஆண் பிள்ளை பெற்றோரை தெருவில் விட்டுவிடுகிறான். பெண் பிள்ளை தான் பெற்றோரைப் பராமரிக்கிறாள். சில சமயங்களில் நமது எண்ணங்கள் ஏட்டிக்குப் போட்டியாக அமைந்துவிடுவதுண்டு.


நினைத்தது நடந்துவிட்டால் அல்லாஹ்வைக் கண்டுக்கொள்ளாதவர்கள். நினைத்தது நடக்காவிட்டால் மட்டுமே அல்லாஹ்வை குறைக்கூறுகிறார்கள்.

 

இதுவே ஒப்பற்ற வெற்றி

 

ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு மக்காவின் இறைமறுப்பாளர்களுக்கும் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் இடையில் நடந்த வரலாற்று சிறப்பு மிகுந்த ஹதைபியா உடன்படிக்கையில் சில நிபந்தனைகள்.


1) (உம்ரா செய்வற்காக வந்த) முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக்கூடாது. அடுத்த வருடம் முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து, மக்காவில் மூன்று நாள்கள் தங்கிக் கொள்ளலாம்.

2) சுமார் 10 ஆண்டுகள் வரை இரு தரப்பாரும் ஒருவர் மீது மற்றவர் தாக்குதல் புரியாது அனுமதியாக வாழ வேண்டும்.

3) மக்கா முஸ்லிம்கள் எவரேனும் மக்காவிலிருந்து தப்பி மதீனாவுக்கு தஞ்சம் தேடி வந்தால் நபியவர்கள் அவர்களை ஏற்கக்கூடாது; அவர்களை திரும்ப மக்காவுக்கே அனுப்பிவிட வேண்டும். அதே சமயம் ஒரு மதீனாவாசி, மக்கா வந்தால் அவரை மக்காவாசிகள் மதீனாவுக்கு மீண்டும் திரும்ப அனுப்ப மாட்டார்கள் என்பது அந்த உடன்படிக்கையில் கண்டிருந்த நிபந்தனையாகும்.

 

இந்த உடன்படிக்கைக்கு பிறகு தான்,(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்.” (திருக்குர்ஆன்:- 48:1)" என்ற வசனம் அருளப்பெற்றது. நூல்:- அர்ரஹீக்குல் மக்தூம்

 

ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது கிராமத்தைச் சொல் வழக்கு.

 

இந்த உடன்படிக்கை தங்களுக்கு (குறைஷி காபிர்களுக்கு) முற்றிலும் சாதமாக அமைந்துவிட்டது என்றெண்ணினர். மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு முஹம்மத் கையொப்பமிட்டுவிட்டார். இனி, இந்த உடன்படிக்கையை காரணமாக்கியே முஹம்மதையும், அவரின் மார்க்கத்தையும் வேரறுத்து விடலாம் என்று குறைஷி இறைமறுப்பாளர்கள் தப்பெண்ணம் கொண்டனர்.

 

ஆம்! இந்த உடன்படிக்கையின் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துவிட்டது என்பதாக இறைவன் கூறினான். அதேபோல் இவ்வுடன்படிக்கைக்கு பின்பு குறைஷி இறைமறுப்பாளர்கள் மதீனாவுக்கு உறவு முறையிலும், வாணிபத்திற்காகவும் அதிகமாக வந்துபோக துவங்கினர். அவர்களை விட்டும் இப்போது இறைமறுப்பு எனும் அழுக்குகள் அகன்றதின் காரணமாக இஸ்லாத்தின் சிறப்புகளை அவர்கள் நன்கு தெரிந்து கூட்டங்கூட்டமாக அந்த அரவணைப்பில் வந்து சேர்ந்தனர்.

 

இப்னு ஹிஷாம் (ரஹ்), இப்னு கல்தூண் (ரஹ்) போன்ற வரலாற்றாசிரியர்கள் கணிப்புப்படி, உடன்படிக்கைக்கு பின்பு இரண்டு ஆண்டு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களை எண்ணிக்கை, அதற்கு முன்பு சுமார் 19 ஆண்டு காலத்தில் அதில் சேர்ந்தவர்களின் தொகையைவிட சற்று அதிகம் என்கிறார்கள்.

 

இறைமறுப்பாளர்கள் புனித இல்லமான கஅபாவின் மீது செலுத்தி வந்த தனி உரிமையும், ஆதிக்கமும் தகர்ந்து முஸ்லிம்களுக்கும் அதில் சம உரிமை உண்டு என்ற பட்டயத்தை இவ்வுடன்படிக்கைதான் ஈட்டித் தந்தது. இறைமறுப்பாளர்கள் இவ்வுடன்படிக்கையின் மூலம் இஸ்லாத்தை வேரறுத்து விடலாம் எண்றென்னினர். ஆனால், அல்லாஹுத்தஆலா இவ்வுடன்படிக்கையின் மூலம் இஸ்லாத்தை வேரூன்றி வளரச் செய்தான்.

 

தாம் ரிசர்வ் செய்து வைத்த வண்டி தவறிவிடும்போது (பேருந்து, ரயில், விமானம்) மிகவும் வருத்தப்படுவார். அதே வண்டி விபத்துக்குள்ளாகிவிட்டது என்ற செய்தியை கேள்விப்பட்ட பிறகு தான் அவர்மீது அல்லாஹ் காட்டிய கருணை புரியும்.

 

அந்த மணமகன் அல்லது மணமகள் மற்றும் அந்த வேலைவாய்ப்பு என இது போன்றவை தமது வாழ்க்கையில் தவறியதை எண்ணி வருத்தப்படுவோர், அது பிறருக்கு கிடைத்து, அதனால் அவர்கள் படும் அவஸ்தையை காணும்போது தான் அவர்மீது அல்லாஹ் காட்டிய கருணை புரியும்.


நமது வாழ்க்கையில் தவறியதையெண்ணி வருந்துவதைவிட அது, நமக்குரியதல்ல என்று விளங்க வேண்டும்.

 

(இந்த தேர்தலில் (2024) நாங்கள் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால் இந்தியாவில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் நிலை அதோகதி தான் என்று முஸ்லிம்களின் எதிரிகள் பொதுவெளியில் கொக்கரித்தனர். ஆனால், நிலை தலைக்கீழாக மாறிப்போனது. அவர்கள் டம்மியாகிப் போனார்கள். இதைத்தான் ஏட்டிக்குப் போட்டி என்று சொல்வார்களோ?)


இஸ்லாமிய வரலாற்றில் இறைமறுப்பாளர்கள் நினைத்ததற்கு மாற்றமாக, ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்துள்ளது. மேற்கண்ட சம்பவங்களெல்லாம் ஒரு பேருண்மையை நமக்கு நன்கு உணர்த்துகிறது.

 

நாம் விரும்பியவை அனைத்தும் நமக்கு நன்மை ஏற்படுத்தும் என்று சொல்லிவிடவும் முடியாது. நாம் வெறுத்தவை அனைத்தும் நமக்கு தீமையை ஏற்படுத்தும் என்று சொல்லிவிடவும் முடியாது.

 

முக்காலங்களையும் உணர்ந்தவன் அல்லாஹுத்தஆலா மட்டுமே என்பதை நாம் உளமாற ஏற்றுக்கொள்வதன் மூலம், இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

(இந்த கட்டுரை பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...