ஒருவன்
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அவன்தான் அல்லாஹ் (அவன்) தனித்தவன். (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) அவனுக்கு நிகர் யாருமில்லை. திருக்குர்ஆன்:- 112:1,2,3,4
திருக்குர்ஆனின் 112வது அத்தியாயமான அல்இக்லாஸ் அத்தியாயம் சிறியதாக இருந்தாலும் ஏகத்துவ இறைக்கொள்கையை உள்ளடக்கியதாக அது இருப்பதால் அதற்கு ஏராளமான சிறப்புக்கள் உண்டு.
மார்க்க அறிஞர்கள்
கூறுகின்றனர். "இக்லாஸ்" என்றால் தூய்மையாக்குதல் என்று பொருள். இந்த அத்தியாயம்
ஓரிறைக் கொள்கையை அதற்கே உரிய தூய வடிவில் எடுத்துரைப்பதால் இக்லாஸ் (தூய்மையாக்குதல்)
என்று பெயர் வந்தது.
அருளப்பெற்ற
காரணம்
உபை பின் கஅப் (ரலி)
அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இணைவைப்பாளர்கள் வந்து, "உம்முடைய இறைவனின் பரம்பரையை (அவனுடைய தந்தை யார்? மகன் யார்? என்பதைப் பற்றி) எங்களிடம்
எடுத்துக் கூறுங்கள்" என்று கோரினர். அப்போது தான் அல்லாஹ் 112வது அல்இக்லாஸ்
அத்தியாயத்தை இறக்கியருளினான். நூல்:- திர்மிதீ-3277
அன்றைய மக்கள் பல்வேறு
சிலைகளையும், ஜின்னுகளையும் இறைவனாக எண்ணி, வழிபட்டு வந்தனர். மனிதர்களுக்கும்,
ஜின்னுகளுக்கும் மனைவி மக்கள்
இருப்பதைப் போன்று இறைவனுக்கும் அவ்வாறு இருக்கும் என்று எண்ணினர்.
அதனால் அருமை நாயகம்
(ஸல்) அவர்களிடம் வந்து, "நீர் கூறுகின்ற இறைவனின் பரம்பரையை எடுத்துரைப்பீராக" என்றனர்.
அப்போது தான் படைத்தவன்,
படைப்புக்களைப் போன்றவன் அல்லர்
என்றுரைக்கும் விதமாக அமையப்பெற்ற அல்இக்லாஸ்
அத்தியாயம் அருளப்பெற்றது.
நேசித்தல்
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. அன்சாரிகளில் (குல்ஸூம் பின் ஹித்ம் எனும்) ஒருவர் ‘குபா’ பள்ளிவாசலில்
மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவராக (இமாமாக) இருந்தார். (அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப்பின்)
ஓதப்படும் அத்தியாயத்தை ஓதி மக்களுக்கு அவர் தொழுவிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம், அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்குமுன் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’
(என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதியே ஆரம்பிப்பார்; (அதாவது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ அத்தியாயத்தை ஓதிய) பிறகுதான்
மற்றோர் அத்தியாயத்தை ஓதுவார். ஒவ்வொரு ரக்அத்திலும் அவர் இவ்வாறு செய்வது வழக்கம்.
இது குறித்து அவரிடம்
அவருடைய நண்பர்கள், “நீங்கள் இந்த (குல் ஹுவல்லாஹு அஹத்) அத்தியாயத்தை
ஓத ஆரம்பிக்கிறீர்கள். பிறகு அது போதாதென்று மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுகிறீர்களே!
இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள்! அல்லது இதை விட்டுவிட்டு மற்றோர் அத்தியாயத்தை
மட்டும் ஓதுங்கள் (இரண்டையும் ஓதாதீர்கள்)” என்று கூறினார்கள். அதற்கு அவர், “நான் இ(ந்த அத்தியாயத்)தை ஓதுவதைக் கைவிடமாட்டேன். நீங்கள் விரும்பினால்
இவ்வாறு (ஓதித் தலைமை தாங்கித் தொழுவிக்கும் பணியைச்) செய்கிறேன். (இதை) நீங்கள் வெறுத்தால்
நான் உங்களுக்கு(த் தொழுவிப்பதை) விட்டுவிடுவேன் (உங்களுக்குத் தொழுவிக்கமாட்டேன்)”
என்றார்.
அம்மக்கள் அவரைத்
தங்களில் சிறந்தவராகத் கருதிக்கொண்டிருந்தனர். அவரல்லாத மற்றொருவர் தங்களுக்குத் தொழுவிப்பதை
அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களிடம் வந்த நேரத்தில் இந்தச்
செய்தியை அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபியவர்கள் (அந்த மனிதரிடம்), ( يَا فُلاَنُ مَا يَمْنَعُكَ أَنْ تَفْعَلَ
مَا يَأْمُرُكَ بِهِ أَصْحَابُكَ وَمَا يَحْمِلُكَ عَلَى لُزُومِ هَذِهِ
السُّورَةِ فِي كُلِّ رَكْعَةٍ
) “இன்னாரே! உங்கள் தோழர்கள் உங்களைப் பணிப்பது போன்று
நீங்கள் ஏன் செய்யக் கூடாது? என்ன காரணத்தால் ஒவ்வொரு ரக்அத்திலும்
இந்த அத்தியாயத்தைக் கட்டாயப்படுத்திக் கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ( إِنِّي
أُحِبُّهَا ) “நான் இந்த அத்தியாயத்தை
நேசிக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு நபியவர்கள், ( حُبُّكَ إِيَّاهَا أَدْخَلَكَ الْجَنَّةَ ) “அ(ந்த அத்தியாயத்)தை நீர் நேசிப்பது உம்மைச் சொர்க்கத்தில் சேர்க்கும்” என்று கூறினார்கள்.
நூல்:- புகாரீ-774, திர்மிதீ-2819
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஒருமுறை நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் வந்தபோது, ஒருவர் குல்ஹுவல்லாஹு
அஹத் அத்தியாயம் ஓதுவதைக் கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,
( وَجَبَتْ ) கடமையாகிவிட்டது'' என்றார்கள். அப்போது, நான், ( مَاذَا يَا رَسُوْلَ اللهِ؟ ) "நாயகமே! என்ன கடமையாகிவிட்டது?" என்று கேட்டேன். நபியவர்கள்,
( اَلْجَنَّةُ )
"சொர்க்கம் கடமையாகிவிட்டது'' என்று சொன்னார்கள்.
அப்போது அந்த மனிதரிடம் சென்று இந்த நற்செய்தியைச் சொல்ல விரும்பினேன். ஆயினும் நபியவர்களுடன்
மதிய உணவு உண்பது தவறிப் போய்விடுமே என்ற எண்ணத்தால் உணவிற்கு முதலிடம் கொடுத்தேன்.
(நபியவர்களுடன் உணவு அருந்துவது பெரும் பாக்கியம் ஆகும்.) அதன் பிறகு அம்மனிதர் இருந்த
இடத்திற்கு வந்த போது அவர் அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டிருந்தார். நூல்:- முவத்தா
மாலிக்-193, திர்மிதீ-2815
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், ( إنَّ لِي أخًا قَدْ حُبِّبَ إلَيْهِ قِراءَةُ قُلْ هو اللَّهُ أحَدٌ ) "நாயகமே! எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (அத்தியாயத்தை) ஓதுவதை மிகவும் விரும்புகிறார்" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( بَشِّرْ أخاكَ بِالجَنَّةِ ) "உன்னுடைய சகோதரனுக்கு சொர்க்கம் கிடைப்பதை நற்செய்தியாக கூறு!" என்றார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
அல்லாஹ்வின்
பண்புகள்
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி
அனுப்பினார்கள். அவர், தமது தொழுகையில் தம் தோழர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுவித்து)வந்தார்; (ஒவ்வொரு முறையும்)
ஓதி முடிக்கும்போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்துடன் முடிப்பார்.
அப்படையினர் திரும்பிவந்தபோது நபியவர்களிடம் இதைப்பற்றி தெரிவித்தனர். அப்போது நபிகள்
பெருமானார் (ஸல்) அவர்கள், ( سَلُوهُ لأَىِّ شَىْءٍ يَصْنَعُ ذَلِكَ ) “எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்”
என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர்.
அவர், ( لأَنَّهَا
صِفَةُ الرَّحْمَنِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا ) “ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின்
(ஓரிறைப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகின்றேன்”
என்று சொன்னார். (இதைக் கேள்விப்பட்ட) நபியவர்கள், ( أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ ) “அவரை அல்லாஹ் நேசிக்கிறான்
என்று அவருக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-7375, முஸ்லிம்-1481
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَن قَرَأ ﴿قُلْ هو اللَّهُ أحَدٌ﴾ دُبُرَ كُلِّ صَلاةٍ مَكْتُوبَةٍ عَشْرَ
مَرّاتٍ أوْجَبَ اللَّهُ لَهُ رِضْوانَهُ ومَغْفِرَتَهُ ) யார், இக்லாஸ் அத்தியாயத்தை, கடமையாக்கப்பட்ட ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் பத்து முறை ஓதி
வருவாரோ, அவருக்கு அல்லாஹ் தம்முடைய பொருத்தத்தையும் மன்னிப்பையும்
அவசியமாக்கிவிட்டான். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
கடன் பிரச்சனைத்
தீரும்
ஒருமுறை அண்ணல் நபி
(ஸல்) அவர்களிடம் ஒரு பிரேதம் ஜனாஸா தொழ வைப்பதற்காக
கொண்டு வரப்பட்டது. அப்போது அண்ணலார், "இவர் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டியது இருக்கிறதா?" என்று வினவினார்கள்.
நபித்தோழர்கள், "ஆம்! இவர்மீது நான்கு வெள்ளிக்காசுகள் கடன் இருக்கிறது" என்று பதிலளிக்கப்பட்டது.
அண்ணலார், "அப்படியானால், அவருக்காக நீங்கள் தொழுது கொள்ளுங்கள்; நான் தொழ வைக்க மாட்டேன்.
காரணம் இவர் கடனாளியாக மரணித்து இருக்கிறார்" என்று கூறினார்கள்.
அப்போது வானவர் வானவர்
ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "நாயகமே! அல்லாஹ் உங்களுக்கு சலாம் கூறினான். மனித
உருவில் சென்று அந்தக் கடனைக் கொடுத்து விடும்படி எனக்கு உத்தரவிட்டான். நான் போய்
அவர் கடனைக் கொடுத்து விட்டேன். எனவே, நீங்கள் அவருக்காக ஜனாஸா தொழ வைக்க வேண்டும் என்பது
இறைவனின் கட்டளை. எனவே, நீங்கள் சென்று அவருக்கு ஜனாஸா தொழுகையை நிறைவேற்றி வையுங்கள்.
அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விட்டான்" என்றார்கள்.
அப்போது அண்ணலார், ஜிப்ரீல் (அலை) அவர்களை
நோக்கி! இறந்துபோன அவருக்கு இப்படிப்பட்ட மரியாதை கிடைக்க காரணமென்ன? என்று வினவினார்கள்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இறந்துபோன அம்மனிதர் தினந்தோறும் (திருக்குர்ஆனின் 112வது) இக்லாஸ் அத்தியாயத்தை
நூறு தடவை ஓதி வந்தார். (இதுதான் காரணமாகும்.)
மேலும், ஒருவர் அந்த அத்தியாயத்தை
தொழுகைகளில் (அடிக்கடி) ஓதி வந்தால், அது அவருக்கும் நரகம் உறுதி செய்யப்பட்ட அவருடைய
சுற்றத்தாருக்கும் நரக வேதனையிலிருந்து விடுதலை செய்து விடும்படி அல்லாஹ்விடம் மன்றாடுவார்
(இவ்வாறான அந்தஸ்து அவருக்கு வழங்கப்படும்)" என்று கூறினார்கள்.
ஏழ்மை நிலை
நீங்கும்
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தனது குடும்பத்திலுள்ள ஏழ்மை நிலையை முறையிட்டு அது நீங்குவதற்கு பிரார்த்திக்கும்படி கோரினார். அதற்கு அண்ணலார் அவரிடம் ( إذا دَخَلْتَ الْبَيْتَ فَسَلِّمْ إِنْ كَانَ فِيهِ أَحَدٌ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ أَحَدٌ فَسَلِّمْ عَلَيَّ، وَاقْرَأْ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ مَرَّةً وَاحِدَةً ) "நீங்கள் வீட்டுக்குள் நுழையும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு" என்று மொழிந்தவராகவும், வீட்டில் யாரும் இல்லாவிட்டால் என்னை மனதில் நினைத்து "அஸ்ஸலாமு அலைக்கும் அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு" என்று மொழிந்தவராகவும் மேலும் (112 வது) அத்தியாயம் இக்லாஸ் ஒருமுறை ஓதியவராகவும் நுழையுங்கள்" என்று கூறினார்கள். அவரும் அவ்வாறே கடைபிடித்து வந்தார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் ஏழ்மையை நீக்கி வளத்தை கொடுத்தான். அவர் தனக்கு கிடைக்கப்பெற்ற வளத்திலிருந்து பக்கத்து வீட்டாருக்கும் வாரி வழங்கினார். நூல்:- தஃப்சீர் குர்துபி, தஃப்சீர் ராஸீ
இறுதித்தொழுகையில்
வானவர்கள்
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களோடு தபூக்கில்
இருந்தபோது என்றைக்கும் இல்லாத அளவு சூரியனின் ஒளி வெண்மையாகவும், பிரகாசமாகவும் இருந்தது. அவ்வாறு நாங்கள் அதை ஒருபோதும் பார்த்ததில்லை, எனவே நாங்கள் அனைவரும் வியப்படைந்தோம். அப்போது நபியவர்களிடம் வானவ தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து, ( إنَّ اللَّهَ أمَرَ أنْ يَنْزِلَ مِنَ
المَلائِكَةِ سَبْعُونَ ألْفَ مَلِكٍ فَيُصَلُّوا عَلى مُعاوِيَةَ بْنِ
مُعاوِيَةَ، فَهَلْ لَكَ أنْ تُصَلِّيَ عَلَيْهِ ؟ ) “(நாயகமே! மதீனாவில்
இறந்துவிட்ட) முஆவியா பின் முஆவியா (ரலி) அவர்களின் இறுதித்தொழுகையில் கலந்துக்கொள்வதற்கு
எழுபதாயிரம் வானவர்களுடன் நான் இறங்கவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நீங்கள்
அவருக்கு இறுதித்தொழுகை நடத்துகிறீர்களா?” என்று கேட்டார்கள்.
(நபியவர்கள், 'ஆம்' என்றார்கள்.) உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது இறக்கையை பூமியின் மீது அடித்தபோது மலைகள் விலகியது. நபியவர்கள் (மதீனாவில் இருக்கும்) அன்னாரின் ஜனாஸாவை நேரடியாகப் பார்ப்பது போன்றாகிவிட்டது. பிறகு நபியவர்களும், நபித்தோழர்களும் அன்னாருக்காக இறுதித்தொழுகை தொழுதார்கள். நபியவர்கள், ( بِمَ بَلَغَ ما بَلَغَ ؟ ) “(அவர்) இந்த அந்தஸ்தை எவ்வாறு பெற்றார்" என்று கேட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ( كانَ يُحِبُّ سُورَةَ الإخْلاصِ ) “அவர் அல்இக்லாஸ் அத்தியாயத்தை மிகவும் நேசித்தார். (அதாவது, அமர்ந்த நிலையில், நின்ற நிலையில், பசித்திருந்த நிலையில், படுத்த நிலையில், நடந்த நிலையில் என அதை அதிகமாக ஓதிவருபவராக இருந்தார்)" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஅஜமுல் கபீர் இமாம் தப்ரானீ, முஸ்னது அபூயஅலா, அல்இஸ்தீஆப் இமாம் இப்னு அப்தில் பர், உஸ்துல் ஃகாபா, தஃப்சீர் ராஸீ
வானவர்களால்
பேசப்பட்டவர்
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களோடு இருந்தபோது அபூதர் அல்கிபாரீ (ரலி) அவர்கள் நபியவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள், ( هَذا أبُو ذَرٍّ قَدْ أقْبَلَ ) “அங்கே வருவது அபூதர் (ரலி) அவர்கள் தானே!” என்று நபியவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபியவர்கள், ( أوَتَعْرِفُونَهُ؟ ) “அவரை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ( هو أشْهَرُ عِنْدَنا مِنهُ عِنْدَكم ) “உங்களிடத்தில் எப்படி அவர் பிரபல்யமோ அது போன்று எங்களிடமும் அவர் பிரபல்யமானவர் தான். (அதாவது, அவரை பற்றி அதிகமாக எங்களிடம் பேசிகொள்வோம்)” என்றார்கள். நபியவர்கள், ( بِماذا نالَ هَذِهِ الفَضِيلَةَ؟ ) “அபூதர் (ரலி) அவர்களுக்கு இந்த பாக்கியம் எவ்வாறு கிடைத்தது?” என்று கேட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ( لِصِغَرِهِ في نَفْسِهِ وكَثْرَةِ قِراءَتِهِ ”﴿قُلْ هو اللَّهُ أحَدٌ ) “அவர் அதிகமாக ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ அத்தியாயத்தை அதிகமாக ஓதக்கூடியவராக இருக்கிறார்” என்று பதிலளித்தார்கள். நூல்:- தப்ஸீர் ராஸீ
பிரார்த்திக்கும்போது
புரைதா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஒருவர், ( اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنِّي
أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ
الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ) "இறைவா! நான் உன்னிடமே கேட்கிறேன். நீதான் இறைவன்; உன்னை அன்றி வேறு
இறைவன் யாரும் இல்லை; நீ தனித்தவன்; (எவருடைய) தேவையுமற்றவன்;(அனைத்தும் உன்னுடைய அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) நீ (எவரையும்)
பெறவுமில்லை; நீ (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, உனக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) உனக்கு
நிகர் யாருமில்லை என்று நான் சாட்சி சொல்கிறேன்" என்று கூறி பிரார்த்தித்தார்.
அதை செவியுற்ற பேராசான்
பெருமானார் (ஸல்) அவர்கள், ( لَقَدْ سَأَلْتَ اللَّهَ بِالاِسْمِ الَّذِي
إِذَا سُئِلَ بِهِ أَعْطَى وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ
) "அவன் எந்தப் பெயரால் தன்னை அழைத்தால் (அந்த அழைப்புக்கு
உடனடியாக) பதில் வழங்குவானோ, எந்தப் பெயரால் கேட்டால் (மறுக்காமல்) கொடுப்பானோ, அந்தப் பெயரைக் கொண்டு
நீர் அல்லாஹ்விடம் கேட்டு விட்டீர்" என்று கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில், ( لَقَدْ
سَأَلْتَ اللَّهَ عَزَّ وَجَلَّ بِاسْمِهِ الأَعْظَمِ ) "இஸ்முல் அஃளம் எனும் (மகத்தான பெயரைக்) கொண்டு மாண்பும்
வல்லமையும் மிக்க அல்லாஹ்விடம் நீ கேட்டுவிட்டாய்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பாளர்:- புரைதா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்1276, திர்மிதீ-3387, இப்னுமாஜா-3847, இப்னுஹிப்பான், ஹாகிம்
தொழுகைகளுக்குப் பிறகு
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَرَأَ بَعْدَ صَلَاةِ الْجُمُعَةِ قُلْ هُوَ اللَّهُ
أَحَدٌ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ سَبْعَ
مَرَّاتٍ، أَعَاذَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَ السُّوءِ إِلَى الْجُمُعَةِ الْأُخْرَى ) யார் ஜும்ஆ தொழுகைக்குப்
பிறகு சூரத்துல் இக்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துல் நாஸ் ஆகியவற்றை ஏழுமுறை ஓதி வருகிறாரோ
அவரை அல்லாஹ் அந்த வெள்ளிக்கிழமையில் இருந்து
அடுத்த வெள்ளிக்கிழமை வரை (எல்லா விதமான) தீமையிலிருந்து பாதுகாக்கின்றான். அறிவிப்பாளர்:-
ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், இப்னு சின்னீ அமலுல் யவ்மி வல்லைல், இப்னு ஷாஹீன் அத்தர்ஙீபு
ஃபீ ஃபளாயிலுல் அஃமால்
நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن صَلّى بَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ قَبْلَ أنْ يَنْطِقَ
مَعَ أحَدٍ يَقْرَأُ في الأوْلى بِ الحَمْدُ لِلَّهِ وقُلْ يا أيُّها الكافِرُونَ وفي الرَّكْعَةِ الثّانِيَةِ بِ الحَمْدُ لِلَّهِ وقُلْ هو اللَّهُ أحَدٌ خَرَجَ مِن ذُنُوبِهِ كَما
تَخْرُجُ الحَيَّةُ مِن سَلْخِها ) யார் மங்ரிப் தொகைக்குப் பிறகு யாரிடத்திலும் பேசாமல்
இருந்து இரண்டு ரக்அத் தொழுகிறாரோ அதன் முதல் ரக்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹா சூரத்துல் காஃபிரூன் இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹா சூரத்துல் இக்லாஸ் ஆகியவற்றை ஓதி தொழுது முடிப்பவர்,
பாம்பு அதன் தோலிலிருந்து வெளிப்படுவதைப் போல் அவர் தனது பாவங்களை விட்டும் விலகியவராக
ஆகிறார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلَاثٌ مَنْ جَاءَ بِهِنّ مَعَ الْإِيمَانِ دَخَل مِنْ
أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ، وزُوّج مِنَ الْحَوَرِ الْعِينِ حَيْثُ شَاءَ:
مَنْ عَفَا عَنْ قَاتِلِهِ، وَأَدَّى دَيْنًا خَفِيًّا، وَقَرَأَ فِي دُبُرِ كُلِّ
صَلَاةٍ مَكْتُوبَةٍ عَشْرَ مَرَّاتٍ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) இறைநம்பிக்கையுடன்
மூன்று காரியங்களை யார் கடைபிடித்து வருவாரோ, அவர் சொர்க்கத்தின் எந்த வாசல் வழியாகவும் நுழையலாம். தான் நாடிய அளவிற்கு ஹூருல்
ஈன்' (எனும் சொர்க்கத்து) பெண்களை மணமுடித்துக் கொடுக்கப்படுவார்.
1) (மறுமைநாளில்) தன்னை கொலை செய்தவனை (பழி வாங்காமல்) மன்னித்துவிடுபவர். 2) மறைந்துபோன (மறந்துவிட்ட)
கடனை நிறைவேற்றியவர். 3) ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைக்குப் பிறகு பத்து முறை 'குல் ஹுவல்லாஹு அஹத்' அத்தியாயத்தை ஓதி வருபவர்.
அப்போது அபூபக்ர்
(ரலி) அவர்கள், ( أَوْ إِحْدَاهُنَّ يَا رَسُولَ اللَّهِ؟ ) "நாயகமே! அவற்றில் ஒன்றை செய்தாலுமா (அவ்வாறு கிடைக்கும்)?”
என்று கேட்டார்கள். நபியவர்கள், ( أَوْ إِحْدَاهُنَّ ) "(ஆம்!) அவற்றில் ஒன்றை செய்தாலும் (கிடைக்கும்). அறிவிப்பாளர்:-
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அபீயஅலா, மஜ்மஉஸ் ஸவாயித் இமாம் ஹைஸமீ, தஃப்சீர் இப்னு கஸீர்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَن قَرَأ آيَةَ الكُرْسِيِّ و﴿قُلْ هو اللَّهُ أحَدٌ﴾ دُبُرَ كُلَّ صَلاةٍ
مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِن دُخُولِ الجَنَّةِ إلّا المَوْتُ ) யார் ஐந்து வேளை பர்ளு
தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்சீ மற்றும் சூரத்துல் இக்லாஸை ஓதி வருவாரோ அவர் சொர்க்கம்
செல்வதற்கு மரணத்தைத் தவிர எந்த குறுக்கீடும் இல்லை. அறிவிப்பாளர்:- அபூ உமாமா (ரலி)
அவர்கள் நூல் தப்ரானீ, தஃப்சீர் மன்ஸூர்
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَرَأَ كُلَّ يَوْمٍ مِائَتَىْ مَرَّةٍ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ مُحِيَ عَنْهُ ذُنُوبُ خَمْسِينَ سَنَةً إِلاَّ أَنْ يَكُونَ عَلَيْهِ دَيْنٌ ) யார் ஒவ்வொரு நாளும் இருநூறு முறை 'குல் ஹுவல்லாஹு அஹத்' அத்தியாயத்தை ஓதுகிறாரோ அவருக்கு அவருடைய ஐம்பது ஆண்டுகளின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அவர்மீது கடன் ஏதும் இருந்தாலே தவிர. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2816
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَن قَرَأ ﴿قُلْ هو اللَّهُ أحَدٌ﴾ مِائَتَيْ مَرَّةٍ كانَ لَهُ مِنَ الأجْرِ
عِبادَةُ خَمْسِمائَةُ سَنَةٍ ) யார் 'குல் ஹுவல்லாஹு அஹத்' அத்தியாயத்தை இருநூறு முறை
ஓதுவாரோ அவருக்கு ஐநூறு வருட வணக்க வழிபாடு செய்த கூலி உண்டு. அறிவிப்பாளர்:- ஹசன்
(ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
முஆத் பின் அனஸ் அல்ஜுஹனி
(ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَنْ قَرَأَ " قُلْ هُوَ اللَّهُ
أَحَدٌ " حَتَّى يَخْتِمَهَا، عَشْرَ مَرَّاتٍ، بَنَى اللَّهُ لَهُ قَصْرًا
فِي الْجَنَّةِ ) "யார் 'குல் ஹுவல்லாஹு அஹத்' அத்தியாயத்தை முழுமையாக பத்து முறை ஓதிகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகையை கட்டிக் கொடுக்க அல்லாஹ்
ஏற்பாடு செய்வான்" என்று கூறினார்கள்.
அப்போது உமர் (ரலி)
அவர்கள், ( إِذَنْ نَسْتَكْثِرُ يَا رَسُولَ اللَّهِ ) “அவ்வாறாயின் நாங்கள் (அதைவிட) அதிகமாக ஓதுவோம் நாயகமே!"
என்று கூறினார்கள். நபியவர்கள், ( اللَّهُ
أَكْثَرُ وَأَطْيَبُ ) "அல்லாஹ் அதிகமாக வழங்குபவன். (இயலாமையில்) இருந்து அதிகம் தூய்மையானவன்"
என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், தாரமீ, தஃப்சீர் இப்னு கஸீர்
ஷைத்தானைவிட்டும்
பாதுகாக்கும்
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا
خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا
فَلْيَقُلْ { اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُنْ لَهُ
كُفُوًا أَحَدٌ } ثُمَّ لْيَتْفُلْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَسْتَعِذْ مِنَ
الشَّيْطَانِ ) மக்கள் (இதைப் படைத்தவன் யார்? இதைப் படைத்தவன் யார்? என்று ஒவ்வொன்றாக) தங்களுக்கிடையில் கேள்வி கேட்டுக் கொண்டே
வந்து இறுதியில், இந்தப் படைப்புகளையெல்லாம் அல்லாஹ் படைத்தான்; அல்லாஹ்வைப் படைத்தது யார்?" என்று கேட்கும் நிலைக்கு
உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் எவருக்கேனும் ஏற்பட்டால் அவர் உடனே "அல்லாஹ் ஒருவனே.
அல்லாஹ் எந்தத் தேவையும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை; எவராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை.
அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன்:- 112:1-4)
இவ்வாறு கூறி இடது புறத்தில்
மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4098,4099, ஸஹீஹ் ஜாமிஉ-8182
மார்க்க அறிஞர்கள்
கூறுகின்றனர். ஒவ்வொரு மனிதனின் இறுதிநேரத்திலும் ஷைத்தான் வந்து பல்வேறு மனகுழப்பங்களை
ஏற்படுத்துவான். அதாவது, அதை, இதைப் படைத்தது அல்லாஹ் தான் என்றால், அல்லாஹ்வைப் படைத்தது
யார்? என்ற கேள்வியை முன்வைப்பான்.
அந்நிலையில் அல்இக்லாஸ் அத்தியாயத்தை ஓதினால் அங்கிருந்து ஷைத்தான் ஓடிவிடுவான்.
நாம் வாழும்போது இஸ்லாத்தை
முறைப்படி பேணி வாழ்ந்தால் மட்டுமே நமது இறுதிநேரத்தில் ஏற்படக்கூடிய ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்து
அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.
குர்ஆனின் மூன்றில்
ஒரு பகுதி
அபூசயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ( أَيَعْجِزُ
أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ ثُلُثَ الْقُرْآنِ فِي لَيْلَةٍ ) ‘‘ஓர் இரவில் குர்ஆனின்
மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். அதைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், ( أَيُّنَا يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ
اللَّهِ ) ‘‘எங்களில் யாருக்கு
இந்தச் சக்தி உண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள்.
அதற்கு நபியவர்கள், ( اللَّهُ
الْوَاحِدُ الصَّمَدُ ثُلُثُ الْقُرْآنِ ) “அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்’ (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்)
குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்” என்று சொன்னார்கள். நூல்:-
புகாரீ-5015
படுக்கைக்குச் சென்றால்
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள்
தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘குல் அஊது பிரப்பிந்
நாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள்.
பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவுக்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக்கொள்வார்கள்.
முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக்கொள்வார்கள்.
இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். நூல்:- புகாரீ-5017, அபூதாவூத்-5056,
திர்மிதீ-3314, இப்னுமாஜா-3875
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَرَادَ أَنْ يَنَامَ عَلَى فِرَاشِهِ، فَنَامَ
عَلَى يَمِينِهِ، ثُمَّ قَرَأَ: " قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ " مِائَةَ
مَرَّةٍ، فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ يَقُولُ لَهُ الرَّبُّ، عَزَّ
وَجَلَّ: يَا عَبْدِي، ادخُل عَلَى يَمِينِكَ الْجَنَّةَ ) ஒருவர் தமது படுக்கையில்
படுக்கச் சென்று தமது வலப்பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு நூறு முறை 'குல் ஹுவல்லாஹு அஹத்' அத்தியாயத்தை ஓதினால் மறுமைநாளில் அவரிடம் அருள்வளமும் உயர்வும் மிக்க இறைவன், "என் அடியானே! உனது வலப்பக்கமாகச் சென்று சொர்க்கத்தில் நுழைந்து
கொள்!" என்று கூறுகிறான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2816
காலை மாலை ஓத
வேண்டியவை
அப்துல்லாஹ் இப்னு
குபைப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம், "சொல்வீராக!'' என்றார்கள். அதற்கு
நான் எதுவும் சொல்லவில்லை. மறுபடியும் சொல்! என்று சொல்ல, அதற்கும் நான் எதுவும் சொல்லவில்லை. மூன்றாவது முறை மீண்டும் "சொல்!"
என்றார்கள். நான், "நாயகமே! என்ன சொல்வது?'' என்று கேட்டேன். நபியவர்கள், ( قُلْ هُوَ اللهُ اَحَدٌ
وَالْمُعَوِّذَتَيْنِ، حِيْنَ تُمْسِيْ وَحِيْنَ تُصْبِحُ، ثَلاَثَ مَرَّاتٍ،
تَكْفِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ
) "குல்ஹுவல்லாஹு அஹத்', குல் அவூது பிரப்பில் ஃபலக்', குல் அவூது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை காலை மாலை மூன்று முறை ஓதுவீராக.
அவை அனைத்து பொருள்களி(ன் தீங்குகளி)லிருந்தும் பாதுகாப்புப் பெற உனக்குப் போதுமானதாக
இருக்கும்" என்று கூறினார்கள். நூல்:-
அபூதாவூத்-4419
அதிகமாக ஓத இயலாதவர்கள்
குறைந்தது இந்த மூன்று அத்தியாயங்களை காலையும், மாலையும் ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் இதுவே போதுமாகிவிடும்' என்பதாக அறிஞர்கள் சிலர் இந்த நபிமொழிக்கு விளக்கம் கூறுகிறார்கள்.
நூல்:- ஷரஹுத்தீபி
கனவில் கண்டால்
பேரறிஞர் சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்களிடம் ஒரு நல்ல மனிதர் வந்து, "கனவில் தமது இரவு கண்களுக்கு மத்தியில் குர்ஆனின் இக்லாஸ் (112 வது) அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகக் கண்டேன்" என்றார். அன்னார், "சரிதான். உமது மறுமை பயணத்துக்கு நீ தயாராகி விடு!" என்றார்கள். அதன்படியே அவரது மறுமை பயணம் சீக்கிரமாக அமைந்துவிட்டது. நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம் - முஹம்மத் அலீ குத்ப்
முஹம்மத் அலீ குத்ப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இக்லாஸ் (112 வது) அத்தியாயத்தை ஓதக் காண்பவருக்கு குடும்ப வாழ்க்கையில் திருப்தியும் மார்க்கத்தில் பிடிப்பும் ஏற்படும். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பக்குவம் பெறுவார். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம்
எனவே, நாம் அனுதினமும் இக்லாஸ் அத்தியாயத்தை ஆசையுடனும், ஆர்வத்துடனும் ஓதி,
இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் மிகச்சிறந்த ஆய்வு பதிவு.
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் ஹஜ்ரத்
ReplyDeleteஇன்னும் சிறந்த தலைப்புகளில் சிறந்த தகவல்களை அனுப்புங்கள்
பயனுள்ள மனிதன் என்ற தலைப்பில் பயான் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் ஹஜ்ரத்
ReplyDelete