Search This Blog

Wednesday, 19 June 2024

பிஸ்மில்லாஹ் என்றே ஆரம்பம் செய்வோம்

 

பிஸ்மில்லாஹ் என்றே ஆரம்பம் செய்வோம்

 

إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

 

நிச்சயமாக இது சுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்என்று (துவங்கி) இருக்கிறது. திருக்குர்ஆன்:- 27:30

 

முஸ்லிம்கள் எந்தவொரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்போதும் பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் என்ற வசனத்தைக் கூறிக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

 

உதாரணமாக: உண்ணும்போதும், உறங்கும்போதும், எழுதுவற்கு, படிப்பதற்கு முன், ஓதுவதற்கு முன், தாம்பத்ய உறவுக்கு முன், பிராணியை அறுக்கும் முன், வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் முன், வீட்டினுள் நுழையும் முன் என முஸ்லிம்களின் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளில் பல செயல்களில் இவ்வசனம் பயன்படுத்தப்படுகிறது.

 

இறைவன் மனிதர்களுக்கு தன்னுடைய அருட்கொடைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதால் அவனை எக்கணத்திலும் மறத்தல் ஆகாது; நம் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வின் தொடக்கத்திலும் இறைவனை நினைப்பது அவசியமாக இருக்கிறது என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَرَأَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ حَرْفٍ أَرْبَعَةَ آلَافِ حَسَنَةٍ وَمَحًى عَنْهُ أَرْبَعَةُ آلَافٍ سَيّئَةٍ وَرَفَعَ اللَّهُ لَهُ أَرْبَعَةَ آلَافِ دَرَجَةٍ ) "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று எவர் ஓதுகிறாரோ அவருக்கு ஒவ்வொரு எழுத்திற்கும் நான்காயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அவரை விட்டு நான்காயிரம் தீமைகள் அழிக்கப்படுகின்றன. அவருக்கு நான்காயிரம் அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- நுஸ்ஹத்துல் மஜாலிஸ்

 

இஸ்லாமை ஏற்கும் முன்பு அரபு மக்களிடையே ஒரு வழமை இருந்து வந்தது. ஏதேனும் ஓர் அலுவலை அவர்கள் துவங்க ஆரம்பித்தால், அவரவர் வழிபடும் விக்ரகங்களின் பெயர்களைக் கூறியே ஆரம்பம் செய்வர். இப்படித் தொடங்கும் பணி வெற்றி பெறும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. இந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றக் குர்ஆனின் முதல் வசனமே, "(அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!" (96:1) எனத் தொடங்கியது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كلُّ أمرٍ ذي بالٍ لا يُبدأُ فيه ببسمِ اللهِ الرحمنِ الرحيمِ فهو أقْطَعُ ) பிஸ்மில்லாஹ் சொல்லி தொடங்கப்படாத ஒவ்வொரு (முக்கிய) விஷயமும் அறவே (பரக்கத் எனும்) அருள்வளம் அற்றதாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- ஜாமிஉஸ் ஸஙீர் இமாம் சுயூத்தீ

 

நபியவர்களின் வழிகாட்டல்களின்படி ஒவ்வொரு செயற்பாட்டையும் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். இதனை நபிமொழிகள் தெளிவுபடுத்துகிறது.  

 

ஆகவே வணக்கம், வணக்கமற்ற அனைத்து காரியங்களிலும் பிஸ்மில்லாஹ் கொண்டு ஆரம்பம் செய்வது மார்க்கம் வழிகாட்டக்கூடிய நன்மைக்குரிய காரியமாகும் என்பதில் ஒட்டுமொத்த அறிஞர் பெருமக்களும் ஏகமனதாக ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.

 

இதற்காகத்தான்

 

குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் (சூரா தவ்பா) தவிர மற்ற அனைத்து அத்தியாயங்களின் தொடக்கத்திலும் بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ' பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்" என்னும் வசனம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். இதன் பொருள் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்" என்பதாகும்.

 

முஃப்தி அஹ்மத் யார்கான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். திருக்குர்ஆனில் அனைத்து அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், தவ்பா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எழுதப்படவில்லை. அதேபோல் மிருகங்களை கால்நடைகளை அறுக்கும்போதும் பிஸ்மில்லாஹ்வை முழுவதுமாக ஓதுவதில்லை. மாறாக, "பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்" என்று ஒதப்படுகிறது. இதிலுள்ள நுட்பம் என்னவென்றால், தவ்பா அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அறப்போர் பற்றியும், உயிர் பலியைப் பற்றியும் தான் கூறப்பட்டுள்ளது. அது இறைமறுப்பாளர்கள் மீதுள்ள சீற்றம். அதனால் (ரஹ்மத் எனும்) அருள்  வார்த்தையால் துவங்கப்படவில்லை. அதுபோல் அறுக்கும்போது கால்நடையின் ஓர் உயிரை பறிக்கப்படுகிறது. இந்த நேரங்களில் ரஹ்மத்தின் வார்த்தை வருவது சரியல்ல. நூல்:- தஃப்சீர் நயீமி

 

உறுதியாக நம்பிக்கை

 

அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நான் உமர் (ரலி) அவர்களது அவையில் (அமர்ந்து) இருந்தேன் அவர்களிடம் நபித்தோழர்களின் ஒரு குழுமத்தினர் இருந்தனர். அவர்களில் சிலர் திருக்குர்ஆனின் சில சூராக்களின் சிறப்பை பற்றி எடுத்துக்கூறி கொண்டிருந்தனர். அங்கிருந்த அம்ர் பின் மஅதீ கரீப் என்பவர், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' உடைய மேன்மை தெரியாமல் இருக்கிறீர்களே? என்று கேட்டார். உடனே உமர் (ரலி) அவர்கள், (அம்ரை நோக்கி) ( حَدِّثْنَا يَا أَبَا ثَوْرٍ ) "அபூஸவ்ரே! அதைக் குறித்து எங்களுக்கு தெரிவிப்பீராக!" என்றார்கள்.

 

அவர், நான் அறியாமைக் காலத்தில் இருந்த போது பசி என்னை வாட்டி வதைத்தது. நான் உணவு தேடி பூமியில் எனது குதிரையை செலுத்தினேன். வான் கோழி முட்டையை தவிர வேறு எதையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு உணவு தேடி நான் பயணம் மேற்கொண்டபோது கூடாரம் ஒன்றில் அரபு முதியவர் ஒருவர் இருந்தார். அவர் அருகில் சூரியப் பிரகாசத்தைப் போன்று பிரகாசிக்கும் இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவருடன் அவருக்குரிய ஆடுகளும் இருந்தன.

 

நான் அவரிடம், ( اسْتَأْسِرْ ) "நீ எனக்கு (அடிமைக்) கைதியாகி விடு" என்றேன். அவர் தனது தலையை அண்ணாந்து என்னை நோக்கி, "இளைஞரே! நீ விருந்தினராக இருக்க விரும்பினால் விருந்தினராகத் தங்கலாம். நீ உதவியை விரும்பினால் உனக்கு நான் நாங்கள் உதவுகிறோம்" என்று கூறினார். நான் (மீண்டும்) "அவரிடம் நீ எனக்கு அடிமைக் கைதியாகி விடு" என்று கூறினேன்.

 

அவர், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று கூறியவாறு என்னை நோக்கி பாய்ந்து தாக்குதல் நடத்தினார். அவர் என்னை கீழே சாய்த்துவிட்டார். பிறகு அவர் (என்னை நோக்கி), ( أَقْتُلُكَ أَمْ أُخَلِّي عَنْكَ؟ ) “உன்னை கொன்று விடட்டுமா? அல்லது உன்னை விட்டு விடட்டுமா? என்று வினவினார். நான், ( بَلْ خَلِّ عَنِّي ) "என்னை விட்டு விடு" என்றேன். அவர் என்னை விட்டு விட்டார். பிறகு எனதுள்ளம் திரும்பக் கூற வேண்டும் என்று தூண்டியது. ஆகவே நான், "நீ எனக்கு (அடிமைக்) கைதியாகி விடு" என்று மீண்டும் கூறினேன். அவரை என்னை நோக்கி பாய்ந்து (மீண்டும்) தாக்குதல் நடத்தினார். அவர் என்னை கீழே சாய்த்துவிட்டார். பிறகு அவர் (என்னை நோக்கி), “உன்னை கொன்று விடட்டுமா? அல்லது உன்னை விட்டு விடட்டுமா? என்று வினவினார். நான், "என்னை விட்டு விடு" என்றேன். அவர் என்னை விட்டு விட்டார்.

 

பிறகு நான் சிறிது தூரம் நடந்தேன். பிறகு நான் எனது மனதிற்குள்ளேயே "அம்ரே! இந்த அரபு முதியவர் போன்றவர் உன்னை அடக்கி ஆளலாமா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறப்பது உனக்கு வாழ்வதைவிடச் சிறந்தது" என்று கூறி, நான் அவரிடம் திரும்பிச் சென்றேன். "நீ எனக்கு (அடிமைக்) கைதியாகி விடு" என்று கூறினேன். அவர், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று கூறியவாறு என்னை நோக்கி பாய்ந்து தாக்குதல் நடத்தினார். அவர் என்னை கீழே சாய்த்துவிட்டார். பிறகு அவர் (என்னை நோக்கி) உன்னை கொன்று விடட்டுமா? அல்லது உன்னை விட்டு விடட்டுமா? என்று வினவினார். நான், "என்னை விட்டு விடு" என்றேன்.

 

அவர், ( هَيْهَاتَ يَا جَارِيَةُ، ائْتِينِي بِالْمُدْيَةِ ) "(அது இயலாது) அது முடிந்து போய்விட்டது. இளம் பெண்ணே! கத்தியை எடுத்துக் கொண்டு என்னிடம் வா" என்றார். அப்பெண் கத்தியை எடுத்துக் கொண்டு வந்தாள். அவர் என் நெற்றியை கீறினார். அரபுகள் ஒருவரை வெற்றிக்கண்டு விட்டால், அவரது நெற்றியை கீறி, அவரை அடிமையாக்கிக்கொள்ள விழைவர். (அவ்வாறே என்னையும் அடிமையாக்கிக் கொண்டார்.) நான் அவரிடம் சில காலம் (அடிமையாக) பணிபுரிந்து வந்தேன்.

 

(அக்காலத்தில்) அம்முதியவர் என்னிடம், ( يَا عَمْرُو أُرِيدُ أَنْ تَرْكَبَ مَعِيَ الْبَرِّيَّةَ، وَلَيْسَ بِي مِنْكَ وَجَلٌ; وَإِنِّي بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَوَاثِقٌ ) "அம்ரே! நீ என்னுடன் பாலைவனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். (நீ ஓடி விடுவாய் என்ற) எந்த அச்சமும் எனக்கு உன்னிடமிருந்து இல்லை. ஏனெனில் நான், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எனும் வசனத்தைக் கொண்டு உறுதியாக நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

பணியை ஆரம்பிக்கும் போதும்

 

பராஉ பின் ஆஸிப் (ரலி)  அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அகழ் தோண்டுமாறு எங்களுக்கு ஆணையிட்ட நேரத்தில் (நாங்கள் அகழ் தோன்றினோம். அவ்வாறு) தோன்றிய ஓரிடத்தில் கோடாரியால் ஒன்றும் செய்ய முடியாத கடினமான பெரும் பாறாங்கல் ஒன்று எங்களுக்கு தென்பட்டது. அப்போது நாங்கள் அண்ணலாரிடம் இது குறித்து முறையிட்டோம்.

 

அண்ணலார், அந்தப் பாறங்கல்லைப் பார்த்தபோது கோடாரியை எடுத்து "பிஸ்மில்லாஹ்" என்று கூறி ஓங்கி ஒரு அடி அடித்தார்கள். அது மூன்றில் ஒரு பகுதியாக உடைந்தது. மீண்டும் "பிஸ்மில்லாஹ்" என்று சொல்லி இரண்டாவது அடி ஒன்று அடித்தார்கள். மற்றொரு மூன்றில் ஒரு பகுதி உடைந்தது. மீண்டும் "பிஸ்மில்லாஹ்"என்று சொல்லி மூன்றாவது அடி ஒன்று அடித்தார்கள். அப்போது கல்லின் எஞ்சிய பகுதி துண்டானது. நூல்:- தலாயிலுந் நுபுவ்வா இமாம் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா

 

சிரமமான ஓர் பணியை ஆரம்பிக்கும் போதும், அதன் இடையிடையேயும் "பிஸ்மில்லாஹ்" என்று சொல்லி கொள்வதனால் அந்த பணி இலேசாகக் கூடும் என்று இந்த நபிமொழியின் மூலம் அறியலாம்.


(இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மூதாதைகளைக் கப்பலில்) நாம் நூஹ்வுடன் சுமந்து (வெள்ளப்பிரளயத்திலிருந்து பாதுகாத்துக்) கொண்டோம். அவர்களின் சந்ததிகளே! அவர் நிச்சயமாக  (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (அவ்வாறே இஸ்ராயீலின் சந்ததிகளாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.) திருக்குர்ஆன்:- 17:3

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كانَ نُوحٌ لا يَحْمِلُ شَيْئًا صَغِيرًا ولا كَبِيرًا إلّا قالَ: بِاسْمِ اللَّهِ والحَمْدُ لِلَّهِ. فَسَمّاهُ اللَّهُ عَبْدًا شَكُورًا ) இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் தமது வாழ்நாளில் சிறியது, பெரியது என்று எதை செய்யும்போதும் "பிஸ்மில்லாஹ்" என்றும் "அல்ஹம்துலில்லாஹ்" என்றும் சொல்லாமல் இருக்க மாட்டார்கள். எனவேதான், அல்லாஹ் அவருக்கு "நன்றியுள்ள அடியார்" என்று பெயரிட்டான். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

 உண்ணத் துவங்கும்போது  

 

(அண்ணல் நபி - ஸல் அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒருமுறை) என் கை உணவு தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்துகொண்டிருந்தது. அப்போது நபியவர்கள் என்னிடம், ( يَا غُلاَمُ سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِي ‏ ) "சிறுவரே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!" என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. நூல்:- புகாரீ-5376, முஸ்லிம்-4107, இப்னுமாஜா-3258, முஸ்னது அஹ்மத்  

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் ஆறு பேருடன் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி வந்து (பிஸ்மில்லாஹ் சொல்லாமல் அந்த உணவு முழுவதையும்) இரண்டே கவளங்களில் உண்டு முடித்தார்.

 

அப்போது நபியவர்கள், ( أَمَا أَنَّهُ لَوْ كَانَ قَالَ بِسْمِ اللَّهِ لَكَفَاكُمْ ) "அவர் மட்டும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி (உண்டு) இருந்தால் உங்கள் அனைவருக்கும் அதுவே போதுமானதாக இருந்திருக்கும். நூல்:- இப்னுமாஜா-3255, முஸ்னது அஹ்மத், தாரிமீ

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள்  ஆறு பேருடன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் வந்து (அந்த அனைத்து உணவையும்) இரண்டு கவளத்தில் சாப்பிட்டுவிட்டார். அப்போது நபியவர்கள், ( أَمَا أَنَّهُ لَوْ كَانَ قَالَ بِسْمِ اللَّهِ لَكَفَاكُمْ فَإِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فَإِنْ نَسِيَ أَنْ يَقُولَ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ )  "இவர் பிஸ்மில்லாஹ் என்று கூறி இருந்தால் அந்த உணவு உங்களுக்கு போதுமானதாக இருந்திருக்கும். எனவே, உங்களுள் ஒருவர் உணவுண்டால் அவர் 'பிஸ்மில்லாஹ்' என்று கூறட்டும். அவர் ஆரம்பத்தில் 'பிஸ்மில்லாஹ்' கூற மறந்துவிட்டால், (அவருக்கு நினைவு வந்தோம் வந்ததும்,) 'பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி' (நான் உணவு உண்ட ஆரம்பத்திலும் அதன் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி உண்ணுகிறேன்)" என்று சொல்லட்டும் என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3275, திர்மிதீ-1781, இப்னுமாஜா-3255, தாரிமீ-189, முஸ்னது அஹ்மத்

 

நமது உணவில் அருள்வளம் வேண்டுமேயானால் அதை உண்ணத் துவங்கும்போது "பிஸ்மில்லாஹ்" சொல்ல வேண்டும் இதுவே, (சுன்னத் எனும்) நபிவழியாகும் என்கிறது இந்த நபிமொழி.

 

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் கப்பல் கட்டிக் கொண்டிருந்தபோது, இறுதியாக நான்கு பலகைகள் தேவைப்பட்டது. அந்த நான்கு பலகைகளுக்காக நைல் நதியின் அக்கரையில் உள்ள ஒரு பெரிய தேக்கு மரத்தை கொண்டு வருமாறு இறைமறுப்பாளனாக இருந்த ஊஜ் பின் உனுக் என்ற பயில்வானிடம் கூறினார்கள். ஊஜ், "அதைக் கொண்டு வந்து கொடுத்தால் எனக்கு என்ன கூலி தருவீர்கள்?" என்று கேட்டான். நூஹ் (அலை) அவர்கள், "உனக்கு வயிறு நிறைய உணவு தருகிறேன்" என்று கூறினார்கள்.

 

ஊஜ், சிறிது நேரத்தில் மாபெரும் தேக்கு மரத்தை வேரோடு பிடிங்கிக் கொண்டு வந்து நூஹ் (அலை) அவர்கள் முன்னால் போட்டான். நூஹ் (அலை) அவர்கள் அதற்கு கூலியாக மூன்று ரொட்டிகளை கொடுத்தார்கள். அதை கண்டதும் அவன் கலகலவென்று சிரித்துவிட்டு, “நான் ஒரு நாளைக்கு 12,000 ரொட்டிகள் தின்கின்றேன். எனினும் அவை கூட எனக்குப் பற்றாமலிருக்கின்றன. இது என்னுடைய ஒரு பல்லுக்குக் கூட காணாதே!" என்றான். நூஹ் (அலை) அவர்கள், "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொல்லி சாப்பிடு! அல்லாஹ் உன்னுடைய வயிற்றை நிரப்பி விடுவான்" என்றார்கள். அவ்வாறு அவன் கூறி ஒன்றரை ரொட்டியைச் சாப்பிடுவதற்குள் அவனுடைய வயிறு நிரம்பி, பசி தீர்ந்து திருப்தியுற்றுவிட்டான்.

 

யார் தினந்தோறும் ஆயிரம் தடவை "பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்" என்பதை ஓதி வருகிறாரோ அவரின் அனைத்து பிரச்சனைகளையும், நோய்களையும் அல்லாஹ் நீக்குவான்.  நூல்:- ஹஸீனத்துல் அஸ்ரார் அல்குப்ரா

 

வீட்டிற்குள் நுழையும்போது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ ) ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும்போதும், உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை" என்று கூறுகிறான்.

 

( وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ أَدْرَكْتُمُ الْمَبِيتَ ‏.‏ وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ ) ஒருவர் இல்லத்திற்குள் நுழையும்போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது" என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்" என்று சொல்கிறான். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4106

 

வீட்டிற்குள் நுழையும்போது பிஸ்மில்லாஹ் சொல்லி முதலில் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைய வேண்டும். அதன் பின் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டும். வீட்டிற்குள் யாரும் இல்லையென்றால் அருமை நாயகம் (ஸல்) அவர்களை நினைத்து "அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு" என்று சொல்ல வேண்டும். பிறகு  சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்) ஓதிக்கொள்ள வேண்டும். இவ்வாறு கடைபிடித்து வந்தால் இவற்றின் பரக்கத்தால் வீட்டில் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமை நிலைத்திருக்கும். உணவில் அருள்வளம் பெருகும். நூல்:- மிர்ஆதுல் மனாஜீஹ் 6/9

 

வெளியே புறப்படும்போது  

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَابِ بَيْتِهِ كَانَ مَعَهُ مَلَكَانِ مُوَكَّلاَنِ بِهِ فَإِذَا قَالَ بِسْمِ اللَّهِ ‏.‏ قَالاَ هُدِيتَ ) ஒரு மனிதர் தம் வீட்டு வாசலிலிருந்து வெளியே புறப்பட்டால் அவருக்காக நியமிக்கப்பட்ட இரண்டு வானவர்கள் அவரோடு இருப்பார்கள். அவர் "பிஸ்மில்லாஹ்" என்று கூறினால், "உமக்கு நேரான வழிகாட்டல் வழங்கப்பட்டுவிட்டது" என்று அவ்விரு வானவர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3876

 

பயணத்தின்போது

 

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நன்மக்கள் தப்பிச்செல்வதற்காக செய்யப்பட்ட கப்பலை செலுத்தும் முன் இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார். திருக்குர்ஆன்:- 11:41

 

அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அலீ (ரலி) அவர்கள் சவாரி செய்வதற்காக ஒரு வாகனம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் அவ்வாகனத்தில் ஏறுவதற்காக அதன் வளையத்தில் கால் வைத்ததும் "பிஸ்மில்லாஹ்" என்று கூறினார்கள். பிறகு அந்த வாகனத்தின் முதுகில் அமர்ந்ததும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள். பிறகு திருக்குர்ஆன் (43:13) வசனத்தை ஓதினார்கள்.

 

பிறகு, "அல்லாஹு அக்பர்" என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு ( سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ   (என்று கூறிவிட்டு சிரித்தார்கள். அப்போது அவர்களிடம் ஏன் சிரித்தீர்கள் என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் (  رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَلَ كَمَا فَعَلْتُ ) “(வாகனத்தில் ஏறும்போது) இப்போது நான் செய்ததைப் போன்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்துள்ளேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-2602

 

வாகனத்தில் ஏறி அமரும்போது  "பிஸ்மில்லாஹ்" சொல்ல வேண்டும்.  இதுவே, (சுன்னத் எனும்) நபிவழியாகும் என்கிறது இந்த நபிமொழி.  

 

எழுதும்போது

 

இறைத்தூதராகவும், பேரரசராகவும் திகழ்ந்த சுலைமான் (அலை) அவர்கள் ஸபா நாட்டு அரசிக்கு எழுதிய கடிதத்தின் தொடக்கம் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்றே அமைந்திருந்தது என்று தலைப்பில் காணும் திருவசனம் எடுத்துரைக்கிறது.

 

இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், உலகின் பல்வேறு நாட்டு மன்னர்களுக்குத் தன் தூதுச் செய்தியைக் எடுத்துக் கூறி கடிதம் எழுதும் போதும், அந்த கடிதங்கள் "பிஸ்மில்லாஹ்" என்ற வாக்கியம் கொண்டே தொடங்கப்பட்டன. நபியவர்கள் எழுதப்படிக்க தெரியாதவர் என்பதால் தன்னுடைய தோழர்களை வைத்துக் கடிதங்களை எழுதுவார்கள். அந்தக் கடிதங்களில் சில இன்றும் இஸ்லாமிய நாடுகளின் அருங்காட்சியங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.

 

அதே போல் நபியவர்களுக்குப் பின் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வழிநடத்திய ஆட்சியாளர்களான நபித்தோழர்களும் மற்றும் அவர்களின் நல்வழியை பின்பற்றியவர்களும்  தமது கடிதப் போக்குவரத்துகளின் போது "பிஸ்மில்லாஹ்" என்ற வசனத்தைக் கொண்டே தொடங்கியுள்ளதாக அறிகின்றோம். நூல்:- புகாரீ-1454

 

ஏதேனும் ஒன்றை எழுத ஆரம்பிக்கும் போதும் பிஸ்மில்லாஹ் கொண்டு எழுத ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு எழுதுகின்றபோது பிஸ்மில்லாஹ்வை முழுமையாக எழுதுவதின் மூலமாகவே பிஸ்மில்லாஹ்வினுடைய முழுமையான நன்மை கிடைக்கப்பெறும். இதற்கு மாறாக, பிஸ்மில்லாஹ்வின் அடையாள பிம்பத்தை வெளிப்படுத்துகின்ற தஸ்மியா, பஸ்மலா, பிஸ்மிஹிதஆலா, 786 போன்றவைகளை எழுதி துவங்குவதன் மூலம் பிஸ்மில்லாஹ்வினுடைய நன்மை கிடைக்கப்பெறாது,

 

அதிலும் குறிப்பாக பிஸ்மிஹி தஆலா என்ற நடைமுறை ஷீஆக்களின் பிரிவான அலீ (ரலி) அவர்களை இறைவனின் ஸ்தானத்திற்கு உயர்த்துகின்ற வழிகெட்ட ராஃபிழாக்களால்  கொண்டுவரப்பட்டதாகவும், அவர்கள் தான் அலீ (ரலி) அவர்களை கருத்தில் கொண்டு பிஸ்மிஹிதஆலா  என எழுத துவங்கினார்கள் என்ற கருத்தும் கூறப்படுவதுண்டு.

 

ஆகவே, பிஸ்மில்லாஹ் எழுதுகின்றபோது அதனை முழு வடிவத்தோடு எழுதிக் கொள்வதே நலமாகும். ஏனெனில்,  முதன் முதலில் ஸபா தேசத்து ராணி பல்கீஸ் அம்மையாருக்கு நபி சுலைமான் (அலை) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துக்கூறும் முகமாக கடிதம் எழுதும்போது “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்றே எழுதினார்கள். இதையே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது. 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு தரப்பினர்களுக்கும் கடிதம் எழுதும்போதும்  “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று எழுதியே ஆரம்பித்தார்கள்

 

அதே நேரம் சில சமயங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடைய கண்ணியத்தைப் பேணி, மரியாதையை கவனித்து பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதுவதற்குப் பதிலாக பிஸ்மிஹி தஆலா, 786 என்பன போன்ற அடையாளக் குறியீடை எழுதுவதும் கூடும் என அறியமுடிகிறது.

 

மக்கள் பிஸ்மில்லாஹ்வினுடைய  கண்ணியக் குறைவு, மரியாதைக்குறைவு என்ற பாவத்திலிருந்து மீளவே இந்த பிஸ்மிஹிதஆலா, 786 , போன்றவை எழுதும் முறை நடைமுறையில் கொண்டு வரப்பட்டதாக அறிஞர்கள்   அனுமானிக்கின்றனர். பிஸ்மிஹிதஆலா, 786 போன்றவைகளை கொண்டு எழுதப்பட்டதை  படிக்க துவங்குகின்றபோது இதனை எழுதியவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று துவங்கி எழுதி இருக்கிறார் என்பதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

 

ஆகவே, படிப்பவர்களும்  பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறி படிக்கத் துவங்குவதே பிஸ்மில்லாஹ்வினுடைய முழுமையான நன்மை கிடைக்கப் பெற பொருத்தமானதாகும்

 

ஆடைகளை அணியும்போதும், களையும்போதும்   

 

சஃப்வான் பின் சுலைம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மனிதர்களுடைய பொருள்களையும் துணிமணிகளையும் ஜின்னுகள் பயன்படுத்துகின்றனர். ஆகவே, உங்களில் யாராவது ஆடை அணிய துணிமணிகளை எடுக்கும்போது அல்லது களையும்போது பிஸ்மில்லாஹ்... என்று ஓதுங்கள். அவர்களுக்கு அல்லாஹுத்தஆலாவின் பெயர் ஒரு முத்திரை போன்றது. (அதாவது பிஸ்மில்லாஹ்... ஓதுவதால் ஜின்னுகள் அந்த துணிமணிகளையும்,  பொருள்களையும் பயன்படுத்துவதில்லை.) நூல்:-  லுக்துல் மர்ஜான் ஃபீ அஹ்காமில் ஜான் பக்கம் -98 இமாம் சுயூத்தி, தஃப்சீர் அல்இத்கான்

 

நாம் எந்த ஒரு பொருளையும் எடுக்கும்போதும் வைக்கும்போதும் பிஸ்மில்லாஹ்... என்று ஓதுவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். அதன்மூலம் இன்ஷா அல்லாஹ் விஷமம் நிறைந்த ஜின்னுகளின் நாசப்பிடியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

 

படுகைக்குச் செல்லும்போது  

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَأْخُذْ دَاخِلَةَ إِزَارِهِ فَلْيَنْفُضْ بِهَا فِرَاشَهُ وَلْيُسَمِّ اللَّهَ فَإِنَّهُ لاَ يَعْلَمُ مَا خَلَفَهُ بَعْدَهُ عَلَى فِرَاشِهِ ) நீங்கள் படுகைக்கு சென்றால் உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பை தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனென்றால், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷ ஜந்து) புகுந்து கொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5257

 

நாம் படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் “பிஸ்மில்லாஹ்” சொல்லிக்கொள்ள வேண்டும். மேலும், படுக்கையை உதற வேண்டும். காரணம், நாம் படுக்கை விரிப்பை உதறினால், உடனே அலர்ஜியால் தும்மல் வரும் அல்லவா? இந்தத் தும்மலுக்கு காரணம் “ஹவுஸ் டெஸ்ட் மைட்" எனும் கிருமிகள் தான். கண்ணுக்குத் தென்படாத இக்கிருமிகள், நம் உடலிலிருந்து உதிரும் பழைய தோலை சாப்பிடுகின்றன. இந்த கிருமிகளை மைக்ரோஸ்கோப் மூலமாகத்தான் பார்க்க முடியும். பார்ப்பதற்கு காண்டாமிருகத்தை போன்ற உருவ அமைப்புடன் இருக்கும். இவை தினமும் இரண்டாயிரம் முறை, கழிவுகளை வெளியேற்றுவதே அலர்ஜிக்கு காரணம். நன்றி:- தினமலர் வார மலர் 19-11-2017

 

அங்கத்தூய்மை செய்யும்போது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ ) (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்யும்போது அல்லாஹ் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறாதவருக்கு உளூவே கிடையாது. (உளூ பரிபூரணமாகாது) அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-92, திர்மிதீ-25

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, "அபூஹுரைரா! (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்யும்போது பிஸ்மில்லாஹ் கூறுங்கள். எதுவரை உங்கள் உளூ நிலைத்திருக்குமோ அதுவரை வானவர்கள் உங்களுக்காக நன்மைகளை எழுதிக் கொண்டே இருப்பார்கள். நூல்:- மஜ்மஉஸ் ஸஙீர் இமாம் தப்ரானீ

 

கண்ணியப்படுத்தினார்

 

பேரறிஞர் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் அவர்களின் ஆன்மீக ஆசான்களில் ஒருவர் தான் ஆன்மீக ஞானி ( أَبُو نصر بشر بْن الْحَارِث الحافي ) பிஷ்ருல் ஹாஃபீ (ரஹ்) அவர்கள். (ஹிஜ்ரி 152-227) இவர், ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய மதுப்பிரியராக இருந்தார். அப்போது ஒருநாள் மது குடித்துவிட்டு போதையில் குளியலறைக்கு அருகில் படுத்துகிடந்தார். அப்போது அவருக்கு அருகில் (அதாவது குளியலறைக்கு அருகில்) ஒரு துண்டில் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று எழுதப்பட்டு கிடந்தது. அதை பார்த்த அவர், ஆகா, இது திருக்குர்ஆனின் வசனம் ஆயிற்றே என்றெண்ணி, அதை எடுத்து சுத்தம் செய்து, ஒரு வெள்ளிக்காசுக்கு கொஞ்சம் நறுமணம் வாங்கி, அதன் மீது தடவிவிட்டு, அந்த ஒற்றை வரியை உச்சரித்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டு கண்ணியப்படுத்தும் விதமாக அதை தமது வீட்டின் பரணி மேல் பத்திரமாக வைத்தார்.

 

அன்றைய இரவில் அவர் கண்ட கனவு ஒன்றில் ( يَا بِشرُ! طَيَّبْتَ أَسْمَى، لَأَطْيبَنَّ اسْمِكَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ) "பிஷ்ர்! நம்முடைய பெயரை இன்று மணங்கமழ செய்தபடியே நாமும் இனி உம் பெயரை (உலகம் முழுக்க மணங்கமழச் செய்வோம். நம்முடைய பெயரை இன்று நீர் உயரந்த இடத்தில் வைத்ததைப் போன்றே நாமும் இனி, உம் பெயரை) இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்தோங்கச் செய்வோம்" என ஓர் அசரீரியாக ஒலித்தது. நூல்:- ரிசாலத்துல் குஷைரிய்யா பக்கம்-48, வஃபயாத்துல் அஃயான் இமாம் இப்னு கல்கான் 1/275  ( لِابْنِ خَلكَانَ )

 

அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( فَأَحْيَا اللَّهُ قَلْبَهُ وَأَلْهَمَهُ رُشْدَهُ ) இந்த நிகழ்வுக்கு பின்னர் தான் அல்லாஹ், பிஷ்ருல் ஹாஃபீ (ரஹ்) அவர்களின் உள்ளத்திற்கு உயிரூட்டி, நேர்வழிக்குரிய எண்ணத்தை உதிக்கச்செய்தான். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

மதுப்பிரியராக இருந்த பிஷ்ருல் ஹாஃபீ (ரஹ்) அவர்களின் தடம் புரண்ட வாழ்க்கையைத் தடைப்படுத்தி, திசைதிருப்பி, ஆன்மீகப் பாதையில் அவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதப்பட்டு கிடந்த துண்டுக்கு கொடுத்த கண்ணியம் என்ற  நற்செயல்தான்.

 

அருள்வளம் பொழியும்

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கியபோது மேகங்கள் கிழக்கு திசையை நோக்கி ஓடின. காற்று அமைதியாகிவிட்டது. கடல் பொங்கி எழுந்தது. கால்நடைகள் கூர்ந்து கவனிக்க தம் காதுகளை தீட்டிக்கொண்டன. ஷைத்தான்கள் மீது வானத்திலிருந்து கற்கள் வீசப்பட்டன. அப்போது அல்லாஹுத்தஆலா "நான் எனது கண்ணியத்தின் மீதாணையாக! கூறுகிறேன். எந்த பொருளின் மீது பிஸ்மில்லாஹ்... ஓதப்பட்டதோ அதன் மீது நான் அருள்வளத்தை வழங்கிவிட்டேன்" என்று அறிவித்தான். நூல்:- துர்ருல் மன்ஸூர்

 

அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். துன்பத்தில் நீ சிக்கிக் கொண்டதால் ( بِسْمِ اللّهِ الرَّحْمنِ الرَّحيمِ ولا حَوْلَ وَلا قُوَّةَ إِلاّ بِالله العَليّ العَظيمِ ) என்று கூறுவீராக. (அவ்வாறு நீ கூறினால்) அதனை அல்லாஹ் நீக்குவான். நூல்:- அஸ்மாஉல் ஃபாயிஸீன் ஃபில் மஸாபிகத்திஷ் ஷிஹ்விய்யா

 

பாவமன்னிப்பு வழங்கினேன்

 

ஒருமுறை இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் பாலைவனத்தில் பக்கம் நடந்து செல்லும்பொழுது, ஓர் மண்ணறையில் ஒருவன் வேதனை செய்யப்படுவதை பார்த்து சென்றார்கள். பின்னர் சிலகாலம் சென்றபின் ஈசா (அலை) அவர்கள் அவ்வழியே வந்த பொழுது அந்த மண்ணறைவாசி  சொர்க்கத்தில் சுகமாக இருப்பதைக் கண்டு வியப்புற்று, "இறைவா! இந்த மனிதனின் நிலை என்ன? என்று வினவினார்கள்.

 

அதற்கு இறைவன் "இம்மனிதன் இறக்கும்பொழுது இவனுடைய மனைவி கருவுற்றிருந்தாள். பிறகு அவள் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து வளர்த்தாள். அக்குழந்தை சிறுவனாக வளர்ந்ததும் அவனை மதரஸாவுக்கு அனுப்பி வைத்தாள். ஆசிரியர் அச்சிறுவனுக்கு 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்' என்று கூறி பாடம் தொடங்கினார். அச்சிறுவனும் அவ்வாறு கூறினான். அதன் காரணமாக அந்த ஆசிரியருக்கும், அச்சிறுவனுடைய பெற்றோர்களுக்கும் பாவமன்னிப்பு வழங்கினேன்" என்று விடையளித்தான்.   நூல்:- தஃப்சீர் கபீர், அல்பிஹார் 14/287

 

ஷைத்தான் வலுவிழந்துவிடுவான்

 

அபுல் மலீஹ் (ரஹ்) அவர்கள் நபித்தோழர் ஒருவரிடமிருந்து கூறியதாவது. நான் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பின்னால் ஒரு வாகனத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தேன். (திடீரென) அந்த வாகனம் நிலை தடுமாறியது. அப்போது நான், ( تَعِسَ الشَّيْطَانُ )  "ஷைத்தான் அழிந்தான்" என்று கூறினேன். அதற்கு நபியவர்கள், ( لاَ تَقُلْ تَعِسَ الشَّيْطَانُ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ تَعَاظَمَ حَتَّى يَكُونَ مِثْلَ الْبَيْتِ وَيَقُولَ بِقُوَّتِي وَلَكِنْ قُلْ بِسْمِ اللَّهِ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ تَصَاغَرَ حَتَّى يَكُونَ مِثْلَ الذُّبَابِ ) "ஷைத்தான் அழிந்தான் என்று கூற வேண்டாம். நீர் அவ்வாறு கூறினால், ஷைத்தான் ஒரு வீட்டைப் போன்று தற்பெருமையால் பெரிதாகிவிடுவான். மேலும் இது என்னுடைய ஆற்றலால் நிகழ்ந்தது என்றும் கூறுவான். எனவே, 'பிஸ்மில்லாஹ்' (அல்லாஹ்வின் திருப்பெயரால்...) என்று கூறிவிடு. அவ்விதம் நீர் கூறினால் அவன் ஒரு ஈயைப் போன்று (வலுவிழந்து) சிறியதாகி விடுவான்" என்று கூறினார்கள். நூல்:-  அபூதாவூத்-4330, முஸ்னது அஹ்மத்

 

சொல்லக்கூடாது

 

தடுக்கப்பட்ட (ஹராமான) செயல்களைத் துவங்கும்போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி துவங்கினாலும் அச்செயல்கள் வெற்றி பெறாது என்பதில் கவனம் தேவை. அதுவும் பாவக் காரியமே!

 

விபச்சாரம் செய்தல், மது அருந்துதல், சூதாடுதல் போன்ற  (ஹராமான) விலக்கப்பட்ட காரியங்களை ஆரம்பிக்கும்போது, பிஸ்மில்லாஹ் ஓதினால் அது இறைமறுப்புக்குரிய பாவச் செயலாகும். நூல்:- பதாவா ஆலம்கீரி 2/273 

 

எனவே, நாம் நற்செயல்கள் அனைத்திலும் பிஸ்மில்லாஹ்... என்று கூறியவாறு துவங்குவோமாக! அதன்மூலம் இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...