சந்தேகம் தவிர்ப்போம்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا
كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ
இறைநம்பிக்கையாளர்களே! அதிகமாக சந்தேகங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால்,
நிச்சயமாக சந்தேகங்களில் சில பாவமானவைகளாக இருக்கின்றன.
திருக்குர்ஆன்:- 49:12
மனிதகுல அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வல்லது வீண் சந்தேகம். அது மனதை அரித்து
அரித்து நிம்மதியை அழித்துவிடும். சந்தேக வியாதியிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது
மிக அவசியமாகும். வீண் சந்தேகங்களால் சிதைந்த குடும்பங்கள், உடைந்த உள்ளங்கள் உறவுகள் ஏராளம் உண்டு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ
أَكْذَبُ الْحَدِيثِ ) (ஆதாரமின்றி
பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம்கொள்வது பெரும் பொய்யாகும். அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5143, முஸ்லிம்-5006
இறை நம்பிக்கையின் அடிப்படை
மறைவானவற்றை நம்புவது தான் இஸ்லாம் ஆகும். ஒருவர் புனித கலிமாவை மட்டும் மொழிந்துவிட்டால்
அவர் முழுமையான முஸ்லிமாகிவிட முடியாது. ஆறு விஷயங்களில் கடுகளவு சந்தேகமின்றி மிக
உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
1) அல்லாஹ்வை நம்புவது.
2) வானவர்களை நம்புவது.
3) இறைநூல்களை நம்புவது.
4) இறைத்தூதர்களை நம்புவது.
5) மறுமை நாளை நம்புவது.
6) அல்லாஹ் விதித்த விதியை நம்புவது.
"அல்லாஹ் தான் உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவன். அனைத்தின் முடிவும்
அவனிடமே உள்ளது. அனைத்தும் அவனிடமே தேவையாகும். அவன் எவரிடமும் தேவையாக மாட்டான். அவனுக்கு
பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என்ற எந்த உறவு முறையும் கிடையாது. அகிலத்தார்
அனைவரும் அவனை மட்டுமே வணங்க வேண்டும்" இவ்வாறு அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
"வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அல்லாஹ்வுக்கு முற்றிலும்
கீழ்படிந்தவர்கள். அவன் கட்டளைக்கு மாறு செய்ய மாட்டார்கள்" இவ்வாறே வானவர்களை
நம்பிக்கை கொள்ள வேண்டும்.
மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அல்லாஹ் மனிதர்களில் இருந்து தேர்ந்தெடுத்து
பல தூதர்களை அனுப்பிவைத்தான். இந்த தூதர்களுக்கு சில இறைநூல்களை கொடுத்தான். இறை நூல்களில்
தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குர்ஆன் என்ற இறைநூல் நபிகள்
நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. உலகுக்கு வந்த அனைத்து இறைத்தூதர்களையும்
இறைநூல்களையும் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
"இந்த உலகையும் உலகுக்கு வந்த அனைத்து ஜீவராசிகளையும் ஒரு நாள்
மரணமடையச் செய்து, மீண்டும் ஒரு நாள் அனைவருக்கும் உயிர் கொடுத்து ஒன்று சேர்க்கப்படும்.
பிறகு உலகில் வாழும்போது அவர்கள் செய்தவைகளுக்கு தகுந்த கூலி கொடுக்கப்படும்"
இவ்வாறே மறுமை நாளை நம்ப வேண்டும்.
உலகில் நடைபெறும் நன்மை தீமை அனைத்தும் அல்லாஹ் விதித்த விதிபடியே நடக்கிறது என்று
நம்ப வேண்டும்
இந்த ஆறு விஷயங்களில் அணுவளவு சந்தேகித்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக (ஈமான் எனும்)
இறைநம்பிக்கை ஓடோடிவிடும்.
சந்தேகம் கொள்வோரில் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடாதீர். திருக்குர்ஆன்:- 10:94
மேற்கண்ட திருவசனத்தில் அருமை நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் இவ்வாறு கூறினாலும்,
இது சமுதாயத்திற்கு கூறப்பட்டதை தவிர, நபியவர்களுக்கு அல்ல. நபியவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையில்
ஒருபோதும் சந்தேகம் கொண்டதில்லை. சந்தேகம் என்ற மனநோய் ஏற்பட்டால் மன அமைதி காணாமல்
போய்விடும். நிலையற்ற தன்மையை நமக்குள் உருவாக்கிவிடும். எந்த காரியத்திலும் எவரையும்
நம்ப முடியாமல் அனைத்து சுமைகளும் நாமே சுமக்கும் அவலம் உண்டாகிவிடும். இதனால் டென்ஷன்
தலைக்கு ஏறிவிடும்.
அங்கத்தூய்மை வீணாகாது
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا
فَأَشْكَلَ عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَىْءٌ أَمْ لاَ فَلاَ يَخْرُجَنَّ مِنَ
الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ) உங்களில் ஒருவர் தமது வயிற்றில் ஏதோ ஏற்படுவதைப் போன்று உணர்ந்து
அதிலிருந்து ஏதேனும் வெளியேறி விட்டதா? இல்லையா? என்று சந்தேகப்பட்டால்
அவர் (வாயு பிரிவதின்) சப்தத்தை கேட்காதவரை அல்லது நாற்றத்தை உணராத வரை (உளூ முறிந்து
விட்டதென எண்ணி) பள்ளிவாசலில் இருந்து வெளியேறிவிட வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-590
ஒருவர் (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்தார். தாமும் உளூ செய்தோம் என்பது அவருக்கு
உறுதியாக தெரியும். பின்பு உளூவை முறிக்கும் வகையில் வாயு பிரிந்ததோ என்ற சந்தேகம்
அவருக்கு எழுகிறது. ஆனால், அது உறுதியாகவில்லை.
இந்நிலையில் அவர் புதிதாக உளூ செய்ய வேண்டியதில்லை. முன்பு செய்த உளூவைக் கொண்டே தொழலாம்.
ஏனெனில், உளூ செய்தது உறுதி. உளூ முறிந்தது
சந்தேகம்தான். சந்தேகத்தால் உறுதியான ஒன்றை அழித்துவிட முடியாது.
வாயு பிரிந்தது உறுதி என்றால் அதன் அடையாளமாக வாயு வெளியானபோது சப்தத்தைக் கேட்டிருக்க
வேண்டும். அல்லது நாற்றத்தை உணர்ந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் ஏற்படாதபோது மனதில்
தோன்றிய சந்தேகத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை.
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( جَاءَنِي جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ
إِذَا تَوَضَّأْتَ فَانْتَضِحْ ) என்னிடம்
வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "முஹம்மத்! நீங்கள் அங்கத்தூய்மை செய்த பிறகு (இன உறுப்பையொட்டியுள்ள
ஆடை மீது) தண்ணீரை தெளித்துக் கொள்வீராக" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-46
சிறுநீர் கழித்து சுத்தம் செய்த பின்னர் இன உறுப்பிலிருந்து சிறுநீர் கசிந்திருக்குமா?
என்ற மன
உசலாட்டத்தை அகற்ற வேண்டும் என்பதற்காக அங்கத்தூய்மை செய்த பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து,
வீண் சந்தேகத்தை விரட்ட வேண்டும் என்பதை நோக்கமாகும்.
உறுதியானதை பற்றி பிடிக்கட்டும்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي الْوَاحِدَةِ
وَالثِّنْتَيْنِ فَلْيَجْعَلْهُمَا وَاحِدَةً وَإِذَا شَكَّ فِي الثِّنْتَيْنِ
وَالثَّلاَثِ فَلْيَجْعَلْهُمَا ثِنْتَيْنِ وَيَسْجُدْ فِي ذَلِكَ سَجْدَتَيْنِ
قَبْلَ أَنْ يُسَلِّمَ ) உங்களில் ஒருவருக்கு
தான் ஒரு ரக்அத் தொழுதோமா அல்லது இரண்டு ரக்அத் தொழுதோமா என்ற தொழுகையில் சந்தேகம்
ஏற்பட்டால், அது ஒரு ரக்அத் தான்
என்ற முடிவுக்கே அவர் வரட்டும். இரண்டு ரக்அத் தொழுதோமா அல்லது மூன்று ரக்அத் தொழுதோமா?
என்ற சந்தேகம் ஏற்பட்டால் அது இரண்டு ரக்அத் தான்
என்ற முடிவுக்கு அவர் வரட்டும். மறதிக்கு பகரமாக சலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு சஜ்தாக்கள்
செய்து கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-362
தொழுகையில் ஒருவருக்கு தாம் தொழுதது இரண்டு ரக்அத்களா? மூன்று ரக்அத்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் குறைந்த எண்ணிக்கையான இரண்டு தான் என்ற முடிவுக்கு அவர்
வரவேண்டும். ஏனெனில், இரண்டு ரக்அத்கள்
தொழுதுவிட்டோம் என்பது அவருக்கு உறுதியாக தெரியும். அது மூன்றாவது ரக்அத்தா?
என்பதில் தான் சந்தேகம். எனவே, உறுதியானதை எடுத்துக்கொண்டு சந்தேகத்தை கைவிட வேண்டியதே
சிறந்த முடிவாக இருக்கும்.
நபிவழிக்கு மாறு செய்வதா?
அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள், ( مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ
النَّاسُ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم ) “(இது ரமளான் மாதத்தின் முதல் நாளா? அல்லது ஷஅபான் மாதத்தின் இறுதி நாளா) எனச்) சந்தேகம் ஏற்படும்
நாளில் நோன்பு நோற்பவர் அபுல் காசிம் (முஹம்மது - ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்"
என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-622
மாதத்தின் 29 நாள்கள் முடிந்து
அன்றைய இரவு மேகமூட்டத்தின் காரணமாக பிறை தென்படாமல் போனால் மறுநாள் ஷஅபான் மாதத்தின்
30 வது நாளா? அல்லது ரமளான் மாதத்தின் முதல் நாளா? என்ற சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய நாள்களில்
நோன்பு நோற்கலாகாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய
நாளும் நோன்பு நோற்காதீர்கள். நூல்:- முஸ்லிம்-1976
ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு வசதியாகவும் அதற்கு ஒரு முன்னோட்டமாகவும் ரமளான்
பிறை பார்ப்பதற்கு முன் ஒரு நாளோ இரண்டு நாள்களோ நோன்பு நோற்பது கூடாது. ரமழானை சிறப்பிக்க
போகிறோம் என்று கருதிக்கொண்டு இவ்வாறு செய்வது மார்க்கத்தை மீறிய செயலாகவே கருதப்படும்.
பிறை பார்த்தே நோன்பு நோற்க வேண்டும் என்பது இறைத்தூதரின் கட்டளை. இந்த கட்டளைக்கு
மதிப்பளிக்காமல் நம் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வது முறையாகாது. சுருங்கக்கூறின்:
சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கலாகாது.
மூன்று விதிகள்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ
بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ
فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي
الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ
أَنْ يَرْتَعَ فِيهِ ) அனுமதிக்கப்பட்டதும்
(ஹலால்) தெளிவானது. தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவ்விரண்டிற்கும் இடையில்
சந்தேகத்திற்கிடமாவையும் இருக்கின்றன. மக்களில் பெரும்பாலோர் அவற்றை அறிய மாட்டார்கள்.
எனவே, எவர் சந்தேகத்திற்கிடமானவற்றை
தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தனது மார்க்கத்தையும் தனது மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்.
எவர் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கப்படாதவற்றில் தலையிடுகிறார்.
வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரிடும்.
நூல்:- புகாரீ-52, முஸ்லிம்-3259
மார்க்கத்தில் மூன்று விதிகள் உள்ளன.
1) அனுமதிக்கப்பட்டது (ஹலால்). அதிலும் எந்தவித குழப்பமும் இல்லை.
உதாரணமாக: உணவுப் பொருள்களில் ரொட்டி, பழ வகைகள், தேன், நெய் ஆகியவை.
2) தடை செய்யப்பட்டது (ஹராம்). அதிலும் எந்தவித குழப்பமும் இல்லை.
உதாரணமாக: மது, பன்றி, செத்த பிராணி, இரத்தம் போன்றவை. மேலும், விபச்சாரம், பொய், புறம் பேசுதல், கோள் சொல்லல் ஆகியவை.
3) சந்தேகத்திற்கிடமானவை. இது ஹலாலா? அல்லது ஹராமா? என்பதில் தெளிவு இருக்காது.
உதாரணமாக ஒருவருக்கு ஹலாலான வருமானமும் ஹராமான வருமானமும் உண்டு. அவர் தமக்கு ஒரு
அன்பளிப்பு வழங்கினார். அது அவரது ஹலாலான வருமானத்திலிருந்து வந்ததா? அல்லது ஹராமான வருமானத்திலிருந்து வந்ததா?
என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. இந்த குழப்பமான
நிலையில் அந்த அன்பளிப்பை நாம் தவிர்த்து விடுவதே நல்லது.
ஹராம் என்பது வேலி. வேலிக்கு அருகில் கால்நடைகளை மேய்த்து பழகிவிட்டால்,
ஒருநாள் அந்த வேலிக்கு உள்ளேயே செல்கின்ற துணிச்சல்
பிறந்துவிடும். எனவே, சந்தேகமானவற்றை தவிர்த்து
விடுவதே சிறந்தது என்பது இந்த நபிமொழியின் கருத்து.
நிம்மதி குழைந்துவிடும்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,
"நாயகமே! (வெள்ளை நிறமுடைய)
எனக்கு கருப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான். (அவன் எப்படி எனக்கு பிறந்தவனாக
இருக்க முடியும்?)" என்று சாடையாகக் கேட்டார்.
அதற்கு நபியவர்கள், ( هَلْ لَكَ مِنْ إِبِلٍ ) "உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?"
என்று வினவினார்கள். அதற்கு அவர்,
"ஆம்!" என்றார். நபியவர்கள்,
( مَا
أَلْوَانُهَا )
"அதன் நிறம் என்ன?"
என்று வினவினார்கள். அவர், "சிவப்பு" என்று பதிலளித்தார்.
நபியவர்கள், ( هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ ) "உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா? என்று வினாவினார்கள். அவர், "ஆம்" என்றார். நபியவர்கள், ( فَأَنَّى ذَلِكَ ) “(தமது தாயிடம் இல்லாத)
அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?" என்று வினவினார்கள். அவர், "அதன் தந்தையான ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்"
என்று கூறினார். நபியவர்கள், ( فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ
) "உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதியரின்)
நிறத்தினை கொண்டிருக்கக்கூடும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5305
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிரந்தர குடிகாரன், பெற்றோரை துன்புறுத்துபவன், மனைவியின் மீது (வீண்) சந்தேகப்படுபவன் ஆகியோருக்கு
சொர்க்கமில்லை. அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெரும்பாலும் சந்தேக நோயே மணவிலக்கிற்குக் காரணமாகிறது. நூல்:- முஸ்னது பஸ்ஸார் தப்ரானீ
கணவன் தன் மனைவி மீது சந்தேகம் கொள்வதற்கு பல காரணங்கள் அமைந்தாலும், குழந்தை பிறப்பும் ஒரு பெரும் காரணமாக அமைந்து விடுகிறது.
கணவனும் மனைவியும் சிகப்பு நிறத்தில் இருப்பார்கள். கணவன் மனைவி சாயலை விடுத்து இருவரின்
உறவினரில் ஒருவரது சாயலில் குழந்தை இருக்கும். இந்த காரணங்களால் கணவன் தன் மனைவி மீது
கடும் சந்தேகம் கொள்கிறான். கணவன், மனைவி மீது சந்தேகம்
கொண்டாலும் மனைவி, கணவன் மீது சந்தேகம்
கொண்டாலும் குடும்ப அமைதி சீர்குலைந்து விடும். அதில் சந்தேகமில்லை.
சந்தேகம் மனக்குழப்பத்தை அதிகரிக்கிறது. பாவம் செய்யத் தூண்டுகிறது. சந்தேகத்தை
நியாயப்படுத்த பொய்யுரைக்க தூண்டுகிறது. மனிதர்களை வெறுக்கும் பண்பை அதிகரிக்கிறது.
சக நண்பனை, பார்ட்னரை,
தொழிலாளியை, குழு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை இவ்வாறு நம்முடைய சந்தேகம்
நீண்டு கொண்டே சென்றால், குழப்பமும் தோல்வியுமே
மிஞ்சும். ஒருவரை ஒருவர் நம்புவது தான் நிம்மதியான வாழ்க்கையின் அடையாளம்.
சந்தேகம் என்பது புத்திசாலித்தனமல்ல. புத்திசாலித்தனம் குறைய குறையத்தான் மனிதனுக்கு
சந்தேகப்படும் குணம் அதிகரிக்கும்.
அந்தரங்கத்தை அறிய முடியாது
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. எங்களை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்
படைப்பிரிவொன்றி அனுப்பி வைத்தார்கள். "ஹுரக்காத்" என்ற கூட்டத்தாரிடம் நாங்கள் காலையில் சென்றடைந்தோம்.
(அவர்களுடன் நடந்த சண்டையில் அவர்களை நாங்கள் தோற்கடித்தோம்) அப்போது நான் ஒருவரை சந்தித்தேன்.
(அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்டபோது) அவர், அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று திருக்கலிமாவை
கூறினார். நான் எனது ஈட்டியால் அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டேன்.
ஆனால், அதை என் மனதில் உறுத்திக்
கொண்டே இருந்தது. திரும்பி வந்தபோது, நான் இது குறித்து நபியவர்களிடம் கூறினேன். அப்போது நபியவர்கள், ( أَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
وَقَتَلْتَهُ ) “லா இலாஹ இல்லல்லாஹ்
என்று அவர் கூறிய பிறகுமா அவரை நீ
கொன்றாய்?" என்று வினவினார்கள்.
நான், "ஆயுதத்தை அஞ்சித்
தான் அவர் அவ்வாறு கூறினார் நாயகமே!" என்றேன். நபியவர்கள், ( أَفَلاَ شَقَقْتَ عَنْ قَلْبِهِ حَتَّى
تَعْلَمَ أَقَالَهَا أَمْ لاَ ) "அதை அவர் உளப்பூர்வமாகக் கூறினாரா? இல்லையா? என்று அறிய அவருடைய
இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா?" என்று கடிந்து கொண்டு இதையேத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
நூல்:- புகாரீ-4269 முஸ்லிம்-158
ஒருவர் திருக்கலிமாவை என்ன நோக்கத்திற்காக கூறுகிறார் என்றெல்லாம் நாம் ஆராயத்
தேவையில்லை. அவரது அந்தரங்கத்தை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டு, அவரை ஒரு முஸ்லிமாகவே நடத்த வேண்டும். மனிதர்களின்
வெளிப்படையான செயல்களைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். அவர்களைப் பற்றி யூகம்,
சந்தேகம், தீய எண்ணம் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே
நபியவர்களின் கருத்து.
நம் நாட்டில் எங்காவது குண்டு வெடித்தால் போதும் உடனடியாக எந்தவித புலனாய்வும்
இல்லாமல் ஒரு துப்பும் இல்லாமல் முஸ்லிம் தீவிரவாதிகளின் சதிச்செயல் என்று,
ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரைச் சொல்லி அவர்கள்
தான் காரணம் என்று மீடியாக்கள் நாடு முழுக்க அலறும். வீண் சந்தேகத்தின் பேரில் சில
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களும் கைது செய்யப்படுவார்கள்.
1998 பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் நடந்த குண்டு வெடிப்பு குற்றச்சாட்டின் பேரில் 158 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2007 ஆம் ஆண்டு அவர்களின்
ஒன்பது பேர் மீது எவ்வித குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை
செய்தது.
வீண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர்கள் சிறைச்சாலையில் எத்தனை துன்பம்,
துயரங்களை அனுபவத்திருப்பார்கள்? அவர்களின் கடந்து போன ஆண்டுகளின் கண்ணீர் வாழ்க்கைக்கும்,
கவலைக்கும் எந்த மருந்தை பூசமுடியும்?
அவர்களில் இன்னும் பலர் விசாரணை கைதியாகவே சிறையில் வாடுகிறார்கள். பல இஸ்லாமிய
அமைப்புகள் இது குறித்து பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை.
இதுபோன்ற சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம்களை கைது செய்யப்படுவதும் அவர்களை கொடுமைப்படுத்தப்படுவதும்
நம் பாரதத்திலும் உலக அரங்கிலும் சாதாரணம் ஆகிவிட்டது.
அமெரிக்கா சந்தேகத்தின் பெயரில்தான் ஈராக்கின் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் போர்
தொடுத்து, பல இலட்சம் உயிர்களையும்
பல கோடி மதிப்புள்ள பொருள்களையும் அழித்தது.
கொடுக்கல், வாங்கல் நேரத்தில்
அதை அவன் காலவரையுடன் நீதத்தோடு எழுதி வைத்துக் கொள்வது சந்தேகப்படாமல் இருக்கும்.
திருக்குர்ஆன்:- 2:282
பிற்காலத்தில் அதில் சந்தேகம் வரக்கூடாது பிறருக்கு எந்த வகையிலும் நஷ்டமோ வருத்தமோ
ஏற்படக் கூடாது என்பதை இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
தெளிவுபடுத்த வேண்டும்
அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில்
(இஃதிகாப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியர் (சிலர்) இருந்தார்கள் பிறகு
(வீடுகளுக்குத்) திரும்பினர். அப்போது நபியவர்கள் என்னிடம், ( لاَ تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ ) "அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்" என்றார்கள்.
நபியவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் நபியவர்களைச்
சந்தித்து, அவர்களைக் கூர்ந்து
பார்த்துவிட்டு கடந்து சென்றனர்.
நபியவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ( تَعَالَيَا، إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ
) "இங்கே வாருங்கள்! இவர் (என்
மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்" என்று கூறினார்கள். அவ்விருவரும், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!"
என்று (உங்களை சந்தேகிப்போமா? என்று வியப்புடன்)
கூறினர். அப்போது நபியவர்கள், ( إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ
مَجْرَى الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا ) "நிச்சயமாக ஷைத்தான் மனிதர்களின் இரத்த நாளங்களில்
ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவானோ என்று நான் அஞ்சினேன்"
என்று தெளிவுபடுத்தினார்கள். நூல்:-புகாரீ-2038, இப்னுமாஜா-1779
பிறர் மீது இட்டுக்கட்டுவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் மூல காரணம் சந்தேகமேயாகும்.
எந்தக் காரியத்திலும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காதவாறு நடந்து கொள்ள வேண்டும். அதையும்
மீறி பிறருக்கு நம் மீது சந்தேகம் ஏற்பட்டால் அதை தெளிவுபடுத்துவது நமது பொறுப்பாகும்.
அதனால், தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,
"இவர் என் மனைவி தான்"
என்று அறிவித்தார்கள்.
நயவஞ்சகர்கள் சந்தேகத்தின் பேரில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கற்பு ஒழுக்கநெறியின்
மீது அவதூறு பரப்பியபோது இறைவன் அன்னையவர்களின் கற்பு ஒழுக்கத்தை திருவசனங்களின் (24;11-21)
மூலம் தெளிவு படுத்தினான்.
நமக்கு நோய்கள் தொடர்ந்து ஏற்பட்டாலோ அல்லது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டாலோ ஆஹா...
நமக்கு எவரோ சூனியம், செய்வினை செய்துவிட்டார்.
அல்லது இன்னாருடைய கண்ணேறு தான் காரணமோ! என்று சந்தேகம் ஏற்பட்டு இதற்குப் பரிகாரம்
தேடி தவறான மனிதர்களிடம் சென்று மாந்திரீகம் எல்லாம் செய்து இறைநம்பிக்கையை இழப்பது
மாபெரும் பாவமாகும்.
எவர் என்ன செய்தாலும் இறைவன் நாடாமல் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. இறைவன்
நமக்கு இழப்பை ஏற்படுத்த நாடினால், நம்மை எவராலும் எந்த
மாந்திரீகத்தாலும் காப்பாற்ற முடியாது. என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை
நம்மிடம் திடமாக இருந்தால் நமக்கு ஒருபோதும் இது போன்ற சந்தேகம் ஏற்படாது.
அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே,
எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுகின்றாரோ
அவருடைய உள்ளத்தை (சகிப்புத்தன்மை, பொறுமை என்ற) நேரான
வழியில் நடத்துகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். திருக்குர்ஆன்:-
64:11
விசாரிப்பதில் தவறில்லை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத்துகள்
கொண்ட தொழுகையொன்றில்) இரண்டாவது ரக்அத்திலேயே
தொழுகையை முடித்து திரும்பி விட்டார்கள். அப்போது துல்யதைன் (கிர்பாக் பின் அம்ர்
- ரலி) அவர்கள் எழுந்து, "தொழுகை குறைக்கப்பட்டு
விட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?
நாயகமே!" என்று வினவினார்.
அப்போது நபியவர்கள் மக்களிடம், ( أَصَدَقَ ذُو الْيَدَيْنِ
) "துல்யதைன் சொல்வது உண்மைதானா?"
என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் உண்மைதான்" என்று கூறினர். உடனே நபியவர்கள்
எழுந்து விடுபட்ட எஞ்சிய ரக்அத்களையும் தொழுது விட்டு சலாம் கொடுத்தார்கள். நூல்:- புகாரீ-482, முஸ்லிம்-999, திர்மிதீ-365
பிறர் செயலில் நமக்கு சந்தேகம் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்டவரிடம் உடனே கேட்டு
தெளிவு பெற்றுக் கொள்வது சாலச் சிறந்தது. மார்க்க விஷயத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்
கால தாமதமின்றி அது சம்பந்தப்பட்ட அறிஞர்களிடம் கேள்வி கேட்டு, தகுந்த ஞானங்களைப் பெற்று, சந்தேகங்களை நீக்கி கொள்ள வேண்டும். இதற்காகவே சிறந்த
அறிஞர்களின் தொலைபேசி எண்கள் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும்.
"ஞானத்தை பெற கேள்விகளால் பாதி, அனுபவங்களால் மீதி" என்பார்கள்.
நம்மிடம் ஒருவர் ஒரு செய்தியைக் கூறும் போது அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அதைப்பற்றி
பிறரிடம் விசாரிக்கலாம் தவறில்லை. அதனால்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் துல்யதைன் என்ற
தோழர் சொன்னதை பிற மக்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள். நான் சொல்வதை நம்பாமல்
சந்தேகத்தோடு அதைப் பற்றி பிறரிடம் விசாரிப்பதா? என்று தவறாக எண்ணக்கூடாது.
ரமளான் நோன்பை விடும் விஷயத்தில் ஷவ்வால் மாதப் பிறையை நான் கண்டேன் என்று ஒருவர்
மட்டும் கூறினால், அது ஏற்கப்படாது.
அவர் கூறுவதை உறுதிப்படுத்துவதற்காக மற்றொருவர் சாட்சியும் கூற வேண்டும். இதுவே,
மார்க்க அறிஞர்களின் தீர்ப்பாகும்.
இஸ்லாத்தின் பார்வையில் பிறர் மீது சந்தேகம் கொள்வது தான் தவறாகும். ஆனால்,
பிறரை கண்காணிப்பது தவறாகாது. நம்முடைய குடும்பத்தார்,
பணியாளர்கள், மாணவர்கள், நம்முடைய உயிர் உடமைகளை
தாக்குவதற்காக தக்க தருணங்களை எதிர்பார்த்திருக்கும் எதிரிகள், எதிரி நாட்டினர் ஆகியோரை நாம் கண்காணித்துக் கொண்டிருப்பது
நன்மை பயக்கும் அறிவார்ந்த செயலாகும்.
மனதில் எழும் வீண்சந்தேகங்கள் ஷைத்தானின் செயல்களில் ஒன்று என்றெண்ணி, வீண்சந்தேகங்களை விட்டும் இறைவனிடம் பாதுகாப்பு
தேட வேண்டும். நாம், வீண்சந்தேகத்தின்
வாசலை அடைத்துவிட்டு சந்தோசமாக வாழ இறைவன் அருள்புரிவானாக! ஆமீன்!
(இந்த கட்டுரை பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment