Search This Blog

Saturday, 24 February 2024

தொழில் தர்மம்

 

தொழில் தர்மம்

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ

                             

இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களின் பரஸ்பர திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (கலப்படம், பதுக்கல், நிறுவை அளவையில் மோசடி, போன்ற வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். திருக்குர்ஆன்:- 4:29

 

நுகர்வோர்களின் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம்  (World consumer rights day - WCRD) அனுஷ்டிக்கப்படுகிறது.

 

(கொடுக்கல் வாங்கல் எனும்) வணிகத்தின் மூலம் யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலும் பொருளும் பணமும் கைமாறுகின்றன. கொடுக்கல் வாங்கலில் நம்பகத்தன்மை முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கையின் பெயரிலேயே வணிகம் நடக்கிறது. இந்நிலையில் நுகர்வோரைப் பாதிக்கும் வகையில் அளவையில் மோசடி செய்வது மாபெரும் குற்றமாகும்.

 

வணிகர் அளந்தோ நிறுத்தோ கொடுக்கும் பொருள் சரியான அளவில்தான் இருக்கும் என்று நம்பியே மக்கள் சோதித்துப்பார்க்காமலேயே வாங்கிச் செல்கிறார்கள். இதில் நம்பிக்கை துரோகம் செய்தால், என்றாவது ஒருநாள் வாடிக்கையாளர்களுக்கு உண்மை தெரியும்போது அந்த வணிகரை நம்பி யாரும் கொள்முதல் செய்ய வரமாட்டார்கள். அது அவருக்கு இழப்பாகவே முடியும். அது மட்டுமின்றி அளவையில் மோசடி செய்பவருக்கு கேடுதான் என இறைவன் சபிக்கிறான்.

 

விற்போர் அல்லது வாங்குவோருக்கு பாதிப்பை உண்டாக்கும் சில வணிக முறைகளுக்கு இஸ்லாம் தடை விதிக்கிறது. பதுக்கல், மோசடி, கலப்படம் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.

 

இறைநம்பிக்கையாளர்களில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணக்கூடாது என்று அல்லாஹுத்தஆலா தமது அடியார்களுக்கு கட்டளையிடுகின்றான். அதாவது, மார்க்கம் அனுமதிக்காத பிற வகையான வருமானத்திற்கும் அல்லாஹ் தடை விதிக்கின்றான்.

 

வணிகர்கள் கவனத்திற்கு

 

நீங்கள் நிறைவான முறையில் அளந்தும் நிறுத்தும் கொடுங்கள்; (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் யாதொன்றையும் குறைத்து விடாதீர்கள். திருக்குர்ஆன்:- 7:85

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اكْتَالُوا حَتَّى تَسْتَوْفُوا ) (நீங்கள் அளந்து வாங்கும்போது, நீங்கள் கொடுத்த விலைகேற்ப) நிறைவாக அளந்து வாங்குங்கள். நூல்:- புகாரீ பாடம்: அளந்து கொடுப்பது விற்பவர், (தொகையை) கொடுப்பவர்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( إِذَا بِعْتَ فَكِلْ، وَإِذَا ابْتَعْتَ فَاكْتَلْ ) "நீங்கள் விற்கும்போது (சரியாக) அளந்துகொடுங்கள். வாங்கும்போது (சரியாக) அளந்து வாங்குங்கள்" என்று (வணிகரான) உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். நூல்:- புகாரீ பாடம்: அளந்து கொடுப்பது விற்பவர், (தொகையை) கொடுப்பவர்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ ) வாய்மையோடும் நம்பகத்தன்மையோடும் நடந்து கொள்ளும் வணிகர், (மறுமை நாளில்) இறைத்தூதர்களுடனும் வாய்மையாளர்களுடனும் (ஸித்தீகீன்) உயிர்த்தியாகிகளுடனும் (ஷுஹதா) இருப்பார். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல் திர்மிதீ-1130

 

பிஃபாஆ பின் ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (ஒருநாள்) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் தொழும் திடலுக்கு சென்றேன். அங்கு மக்கள் வணிகத்தில் ஈடுபட்டிருப்பதை நபியவர்கள் கண்டார்கள். அப்போது நபியவர்கள், ( يَا مَعْشَرَ التُّجَّارِ ) "வணிகர்கள் (துஜ்ஜார்) சமுதாயமே!" என்று அழைத்தார்கள். உடனே அவர்கள் நபியவர்களின் அழைப்புக்கு பதிலளித்து தம் கழுத்துகளையும் பார்வையும் நபியவர்களை நோக்கி உயர்த்தினர். அப்போது நபியவர்கள், (  إِنَّ التُّجَّارَ يُبْعَثُونَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا إِلاَّ مَنِ اتَّقَى اللَّهَ وَبَرَّ وَصَدَقَ ‏ ) "வணிகர்கள் மறுமை நாளில் பாவிகளாகவே எழுப்பப்படுவர். அல்லாஹ்வை அஞ்சி நேர்மையோடும் வாய்மையோடும் நடந்து கொண்டவர்களைத் தவிர" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-1131

 

பொதுவாக வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது பொருள்களிலுள்ள குறைகளை மறைத்தல், சரக்குகளை விற்க இயன்ற அளவு பொய்ச் சத்தியம் செய்தல் போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது உண்டு. எனவே தான், அருமை நாயகம் (ஸல்) அவர்கள் வியாபாரிகள் பாவிகளாகவே எழுப்பப்படுவர் என்று கூறினார்கள். ஆனால், கொடுக்கல் வாங்கலின்போது பொய்ச் சத்தியம் செய்வது, மோசடியில் ஈடுபடுவது போன்ற பாவங்களைத் தவிர்த்து இறைவனுக்கு அஞ்சி மக்களுக்கு நன்மை புரிந்தால் அவர்கள் பாவிகளாக எழுப்பப்பட மாட்டார்கள்.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْبَيِّعَانِ بِالْخِيَارِ فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا ) விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் வழங்கப்படும்; இருவரும் பொய் பேசி, குறைகளை மறைத்திருந்தால் அவர்களது வியாபாரத்தில் உள்ள அருள்வளம் அகற்றப்படும். அறிவிப்பாளர்:- ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2028, முஸ்லிம்-3076

 

சத்தியம் வேண்டாம்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ ‏ ) வியாபாரத்தில் அதிகமாகச் சத்தியம் செய்ய வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அது (பொருளை) விலை போகச் செய்யும். பின்னர் (பரக்கத் எனும் அருள்வளத்தை) அழித்துவிடும். அறிவிப்பாளர்:- அபூ கத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2087, முஸ்லிம்-3284

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்து பார்க்கவுமாட்டான்; அவர்களை (பாவங்களிலிருந்து) தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களில் ஒருவர் பொய்ச் சத்தியம் செய்து தனது பொருளை விற்பனை செய்பவர் ஆவார். அறிவிப்பாளர்:-  அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1132

 

வியாபாரம் செய்யும் போது தேவையில்லாமல் அடிக்கடி சத்தியம் செய்வது கூடாது என இந்த நபிமொழி தெரிவிக்கிறது. ஏனெனில், அந்தச் சத்தியம் ஒன்று பொய்ச் சத்தியமாக இருக்கலாம்; அது தடை செய்யப்பட்டது (ஹராம்) என்பது தெளிவு. அல்லது சத்தியம் உண்மையாகவே கூட இருக்கலாம்; ஆனால், அதையே அடிக்கடி செய்யும்போது, பொய்ச் சத்தியம் செய்வதற்கு அதுவே வழி வகுத்து விடலாம்.

 

சரக்கை விற்பனை செய்து இலாபம் ஈட்டுவதற்காகப் பொய்ச் சத்தியம் செய்பவன், பணத்திற்காகப் படைத்தவனின் பெயரையே தவறாகப் பயன்படுத்துகிறான். எனவேதான், இவன் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறான்.

 

இமாம் ஹஸன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஒரு தடவை மக்காவில் ஆடை வாங்குவதற்காக ஓர் வியாபாரியிடம் சென்றேன். அவரோ ஆடையை (தலையில் கட்டிவிட) சத்தியமிட்டு கவர்வதற்கான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றார். உடனே இப்படிப்பட்டவர்களிடம் வாங்கவே கூடாது என சொல்லிக் கொண்டு வேறொருவரிடம் வாங்கிச் சென்றேன்.

 

பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்தபோது அவரைக் கண்டேன். அவர் ஆடைகளை (முன்னர் போல்) சத்தியமிட்டு கவர்வதற்கான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி விற்பதை நான் காணவில்லை, உடனே அவனிடம் சென்று “சில வருடங்களுக்கு முன்பு (ஆடை வாங்குவதற்கு)  உன்னிடம் வந்தேனே அந்த மனிதரா நீ?" என்று கேட்க, அதற்கு அவர்,  "ஆம்" என்றார்.

 

பின்னர் "எது உன்னை (முன்னர் இருந்த நிலையிலிருந்து) மாற்றியது? வியாபாரத்தில் சத்தியம் செய்வதையோ அல்லது கவர்வதற்கான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதையோ காணவில்லையே?"  எனக் கேட்டேன்.

 

அதற்கு அவர் "எனக்கு ஓர் மனைவி இருந்தாள், அவளிடம் நான் சம்பாதித்த பணத்தை எடுத்துச் செல்வேன். அது குறைவாக இருந்தால் கேவலமாக கருதுவாள், அதே அதிகமாக இருந்தால் அதை சொற்பமாக ஆக்கிவிடுவாள். அவள் இறந்துவிட்டாள்.

 

மீண்டும் ஓர் பெண்ணை திருமணம் செய்தேன். அவளோ நான் காலையில் சந்தைக்குப் புறப்பட்டால் ஆடை மூட்டையைத் தயார்படுத்தித் தருவாள், அத்தோடு, என் அன்பிற்குரியவரே! அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்,  எமக்கு நீங்கள் ஹலாலான உணவைத் தவிர வேறெந்த ஒன்றையும் தந்துவிடாதீர். உங்களது வருவாய் குறைவாக இருக்கும் பட்சத்தில் நான் அதிகரித்துத் தருவேன்.  வருவாயே இல்லாமல் வந்தால் எமது நெசவு இயந்திரம் மூலம் (புதிய ஆடைகள் நெய்து) உங்களுக்குப் பக்கபலமாக இருப்பேன் எனக் கூறுவாள்" என்று பதிலளித்தார். நூல்:- அல்முஜாலஸா வஜவாஹிருல் இல்ம்


இன்று ஏமாற்றி பிழைப்பது புத்திசாலித்தனமாகிவிட்டதால், நேர்மையாக வாழ்பவன் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்.

 

கலப்படம்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் ( مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ ) "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு அவர், ( أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ ) "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, நாயகமே!" என்றார். அப்போது நபியவர்கள், ( أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَىْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي )  "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். நூல்:-  முஸ்லிம்-164, அபூதாவூத்-2995


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) ஓர் உணவு தானியத்தைக் கடந்து சென்றார்கள். அதன் உரிமையாளர் அதை அலங்காரப்படுத்தி வைத்திருந்தார். (அதைப் பரிசோதிப்பதற்காக) நபியவர்கள் தமது கரத்தை அதனுள் நுழைத்தபோது, உள்ளே மட்டமான உணவு தானியமும் இருந்தது.

 

அப்போது நபியவர்கள், ( بِعْ هَذَا عَلَى حِدَةٍ وَهَذَا عَلَى حِدَةٍ فَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا ) "(இவ்வாறு இரண்டையும் கலந்து விற்க வேண்டாம்.) இதைத் தனியாகவும் இதைத் தனியாகவும் விற்பனை செய்வீராக" என்று சொல்லிவிட்டு, "நமக்கு மோசடி செய்தவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-4867, தாரிமீ, தப்ரானீ 

 

சந்தையில் ஒரு வியாபாரி தானியங்களை குவித்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். தானியக் குவியலில் மட்டமான அல்லது ஈரமான தானியமும் கலந்திருந்தது. ஈரமான தானியங்களை குவியலுக்குள்ளே கீழே வைத்துவிட்டு, காய்ந்த தரமான தானியங்களை மேலாகப் போட்டு வைத்திருந்தார்.

 

அந்த வழியாகச் சென்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்ன நினைத்தார்களோ, அந்த வணிகரிடம் வந்து, அந்தத் தானியக் குவியலுக்குள் தமது கரத்தை உள்ளே நுழைத்து வெளியே எடுத்தார்கள். இவ்வாறு செய்யுமாறு நபியவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து ஆணை வந்தது என ஒரு நபிமொழியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். கையில் ஈரம். இதனால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதை எண்ணிப் பார்த்த நபியவர்களின் மனதிலும் ஈரம்.

 

உடனே அந்த மனிதரிடம் ஈரமான தானியத்தை ஈரம் என்று சொல்லியும், காய்ந்ததை காய்ந்தது என்று சொல்லியும் தான் விற்பனை செய்ய வேண்டும் என்று நபியவர்கள் கூறினார்கள். இந்த அறிவிப்பில் உள்ளபடி, தரமானதை தனியாகவும் மட்டமானதை தனியாகவும் வைத்து விற்பனை செய்வீராக என்று நபியவர்கள் கூறினார்கள். நூல்:- ஹாஷியத்துஸ் ஸின்தீ

  

உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படமே நோய்களுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது. பாலில் தண்ணீரை கலக்கும் கலப்பதும், அரிசி பருப்பில் கல்லைக் கலப்பதும், மிளகில் பப்பாளி விதையை கலப்பதும், மசாலாத்தூளில் மரத்தூள் கலப்பதும், மிளகாய்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் ஆகியவற்றில் வண்ண  இரசாயன தூள் கலப்பதும், சீரகத்தில் குதிரை சாணம் கலப்பதும், கடுகில் பிரம்ம விதைகள் கலப்பதும், தேனில் சர்க்கரை பாகுவை கலப்பதும், நெய்யில் டல்டாவை கலப்பதும், சூரிய காந்தி எண்ணெய் என்ற பெயரில் பெட்ரோலின் மூலப்பொருள் குருடாயிலின் கழிவை விற்பதும் மோசடி தான்.

 

(பொதுவாக எண்ணெய் என்பது வித்தில் இருந்து எடுப்பதாகும். பெட்ரோலின் மூலப்பொருள் குருடாயில் (Crude Oil) பூமியில் இருந்து எடுக்கப்படுகிறது. எண்ணெய் என்ற பெயரில் குருடாயிலின் கழிவை உட்கொள்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது) 

 

சூரிய காந்தி எண்ணெய் (Sun Flower Oil) உடலுக்கு நல்லது தான். அந்த விதையில் கொழுப்பு குறைவு. இதை சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை. இதயத்திற்கு அடைப்பும் வராது. ஆனால் இந்த ஒரு கூற்றைப் பயன்படுத்திக் கொண்டு சூரிய காந்தி எண்ணெய் தயாரிக்கும்போது கலப்படம் செய்து விடுகின்றனர். குருடாயிலின் கழிவு மற்றும் பாமாயிலை கலந்து விடுகின்றனர்.

 

சூரிய காந்தி எண்ணை வாசமற்றது. அது சற்றே கெட்டியாக இருக்கும். தேங்காய் எண்ணைக்கும் நல்லெண்ணெய்க்கும் நடுப்பதத்தில் அதன் பாகுநிலை இருக்கும். விரைவாக கொதிநிலை அடையும். ஒரு முறை பயன்படுத்தினாலே அடுத்த முறை பயன்படுத்த முடியாது.

 

இந்த காரணத்தால் அதில் கலப்படம் செய்து விடுகின்றனர். மேலும், சூரிய காந்தி செடி வளர நல்ல வண்டல் மண் தேவை. அப்படி பயிர் செய்யும் நாடுகள் விரல் விட்டு எண்ணியும் விடலாம். 

 

இந்தியாவில் விளையும் சூரியகாந்தி இந்தியாவின் தேவைக்கே பற்றாது. இப்படி இருக்கையில் உலகத்தில் உள்ள 190 நாடுகளும் எப்படித்தான் சூரிய காந்தியை பயன்படுத்துகின்றார்கள். 

 

தேன் கதைதான். 100 கிராம் தேனைக் கொண்டு கலப்படம் செய்து 500 கிராம் தேனாக மாற்றி விடுகின்றார்கள. அதேப் போலத்தான்.

 

சுருங்கக்கூறின், சூரிய காந்தி எண்ணெய், (எந்த மணமுமற்ற) ரீஃபைண்டு ஆயில் எனும் பெயரில் விற்கப்படும் பெரும்பாலானவை குருடாயின் கலவை என்பதே உண்மை.

 

சாயம் கலந்த உணவு பொருள்களை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் வயிறு கோளாறு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

 

இறைச்சியில் எடையை அதிகமாகக் காட்ட, தண்ணீரில் ஊற வைப்பது, பழப்பழப்பாக இருக்க ஆப்பிள் பழத்தின் மீது மெழுகு பூசுவது, பச்சைப் பட்டாணி மற்றும் கீரைகளை பச்சை வண்ணத்தில் உள்ள வேதிப்பொருளில் மூழ்கியெடுப்பது, மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களை பழுக்க வைக்க, அதன் மீது வேதிப்பொருளை பயன்படுத்துவது ஆகியவை மிகப்பெரிய மோசடியாகும்.

 

உணவுப் பொருள்களில் கலப்படம் இருப்பது தெரிய வந்தால் உணவின் தரம் பற்றிய புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.  unavupukar@gmail.com இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம்.

 

இதற்காகத் தனி எண், உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரால் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. நாம் வாங்கும் பொருள்களில் கலப்படம் இருக்கிறது என நமக்குச் சந்தேகம் ஏற்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என்கிறது உணவுப் பாதுகாப்புத்துறை.

 

பதுக்கல்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَحْتَكِرُ إِلاَّ خَاطِئٌ ) பாவியே பதுக்கல் செய்வான். அறிவிப்பாளர்:- மஅமர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3282, இப்னுமாஜா-2145

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ ) இறக்குமதி செய்(து சரக்குகளைக் கொண்டு வரு)பவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வாழ்வாதாரம் வழங்கப்படுபவர் ஆவார். பதுக்கி வைப்பவர் சாபத்திற்குரியவர் ஆவார். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா 2144, தாரிமீ-2432, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالإِفْلاَسِ ) யார் முஸ்லிம்களுக்கு(த் தாராளமாக கிடைக்க வேண்டிய) உணவுப் பொருளைப் பதிக்க வைக்கிறாரோ அவரை அல்லாஹ் தொழுநோயாலும் திவாலாக்கியும் தண்டிப்பான். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2146

 

நியாய விலைக்கு விற்க வேண்டிய பொருளை விற்காமல் சட்ட விரோதமாக மறைத்து வைப்பதையே மக்கள் பதுக்கல் (Hoarding) என்பர்.

 

உணவுப் பொருள் பதுக்கலுக்கு இஸ்லாம் தடைவிதித்துள்ளது. இஸ்லாத்தில் பதுக்கல் என்பது, வியாபாரத்திற்கென உணவுப் பொருளை வாங்கி, உணவுப் பொருளின் விலை உயரட்டும் என எதிர்பார்த்து, தமக்கு அவசியப்படாமல் இருந்தும் மக்களுக்கு தேவை இருந்தும் விற்காமல் வியாபாரி தடுத்துவைப்பதையே குறிக்கும்.

 

ஒருவர் தமது கிராமத்திலிருந்து உணவுப் பொருளைக் கொண்டு வந்து சேமித்து அல்லது விலை மலிவான நேரத்தில் விலைக்கு வாங்கி சேமித்து பின்னர் விற்றாலோ அல்லது தமது சொந்த தேவைக்காக விலைவாசி உயர்ந்திருக்கும்போது வாங்கி வைத்தாலோ இதுவெல்லாம் தடை செய்யப்பட்ட பதுக்கல் ஆகாது. அவ்வாறு உணவுப்பொருள் அல்லாதவற்றிலும் பதுக்கல் என்பது கிடையாது.

 

நாட்டில் உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்ந்து மக்களெல்லாம் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிலர், தம் கைவசம் உள்ள உணவுப் பொருள்களை விற்காமல் இன்னும் விலையேறட்டும் என்று பதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது, இரக்கமற்ற கல்நெஞ்சம் படைத்தவர்களின் செயலாகவே கருதப்படும். பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருளை வேறு வழியில்லாத போது பறிமுதல் செய்ய அனுமதி உண்டு. நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ, அல்மின்ஹாஜ்

 

உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான ஃபர்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் உணவுப் பொருள்களை கொண்டு வந்து வைத்துவிட்டு, "ஜனாதிபதி அவர்களே! இந்த உணவுப்பொருள் பதுக்கல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது" என்று கூறப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், "இதை பதுக்கி வைத்திருந்தவர் யார்?" என்று வினவினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஃபரூக்கும், உமர் (ரலி) அவர்களின் (அதாவது தங்களின்) இன்ன அடிமையும் தான் (இவ்வாறு செய்தனர்)" என்று மக்கள் கூறினர்.

 

உடனே உமர் (ரலி) அவர்கள் எங்கள் இருவரிடமும் ஆளனுப்பி, எங்களை வரவழைத்தார்கள். பிறகு எங்களிடம், ( مَا حَمَلَكُمَا عَلَى احْتِكَارِ طَعَامِ الْمُسْلِمِينَ ) "நீங்கள் இருவரும் முஸ்லிம்களுக்குரிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்க காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ ) "ஜனாதிபதி அவர்களே! நாங்கள் எங்கள் காசுகளைச் செலவிட்டு வாங்குகிறோம். பிறகு அவற்றை விற்கிறோம். (இதில் பதுக்கல் செய்தால் தவறென்ன?)" என்று கேட்டோம்.

 

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ( سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْإِفْلَاسِ أَوْ بِجُذَامٍ )  "முஸ்லிம்களின் உணவு பொருள்களை அவர்களுக்கு கிடைக்காமல் பதுக்கல் செய்பவரை திவாலாக்குவதின் மூலம் அல்லது தொழுநோயின் மூலம் அல்லாஹ் தண்டிப்பான் என அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.

 

நான் இதைக் கேட்டவுடன், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أُعَاهِدُ اللَّهَ وَأُعَاهِدُكَ أَنْ لَا أَعُودَ فِي طَعَامٍ أَبَدًا ) "ஜனாதிபதி அவர்களே! இனிமேல் நான் உணவுப் பொருள்களை பதுக்க மாட்டேன் என்று அல்லாஹ்விடம் உறுதியளிக்கிறேன் தங்களிடமும் உறுதியளிக்கிறேன்" என்றேன். உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையோ (மீண்டும்) நாங்கள் எங்கள் காசுகளைச் செலவிட்டு வாங்குகிறோம். பிறகு அவற்றை விற்கிறோம். (இதில் பதுக்கல் செய்தால் தவறென்ன?)" என்று கேட்டார். 

 

(இந்த நபிமொழி அறிவிப்பாளர்களுள் ஒருவரான) அபூ யஹ்யா அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( فَلَقَدْ رَأَيْتُ مَوْلَى عُمَرَ مَجْذُومًا )  (மேற்கண்டவாறு வீண்வாதம் பேசிய) உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையை(ப் பிற்காலத்தில்) நான் தொழுநோயாளியாகக் கண்டேன். நூல்:- முஸ்னது அஹமத்-130, தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-276

 

நிறுவை அளவை

 

நீதியுடன் நிறுப்பதை நிலைநிறுத்துங்கள். தராசில் எடைக் குறைவு செய்யாதீர்கள். திருக்குர்ஆன்:- 55:9


அளவில் மோசடி செய்பவர்களுக்கு நாசம் உண்டாவதாக! அவர்கள் எப்படிப்பட்டோர்  எனில், மக்களிடமிருந்து அளந்து வாங்கினால் நிறைவாக அளந்து கொள்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலோ நிறுத்திக் கொடுத்தாலோ எடை குறைவு செய்கிறார்கள். திருக்குர்ஆன்:- 83:1,2,3

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், அளந்தும் நிறுத்தும் கொடுக்கும் வியாபாரிகளிடம், ( إِنَّكُمْ قَدْ وُلِّيتُمْ أَمْرَيْنِ هَلَكَتْ فِيهِ الأُمَمُ السَّالِفَةُ قَبْلَكُمْ ) "நீங்கள் இரு (மகத்தான) காரியங்களுக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளீர்கள். இவ்(விரு) விஷயத்தில்தான் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் (நேர்மை தவறி நடந்து போது) அழிந்து போயினர்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1138

 

வியாபாரத்தில் நேர்மை தவறே நடந்து அழிந்துபோன சமுதாயங்களில் இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்களின் சமுதாயத்தார் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். மதியன்வாசிகளான அவர்கள் மக்களிடம் பொருள்களை வாங்கும்போது நிறைவாக வாங்கினர். கொடுக்கும்போது குறைத்துக் கொடுத்து அநீதி இழைத்தனர். அவர்களது வரலாற்றை திருக்குர்ஆனின் ஹூது அத்தியாயம் (11ஆம்) விரிவாகப் பேசுகிறது.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது அங்கிருந்த மக்கள் அளவையில் மிகவும் மோசமானவர்களாய் இருந்தனர். அளவையில் மோசடி செய்பவர்களுக்கு நாசம் உண்டாவதாக என்று தொடங்கும் (83 ஆம்) அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கியருளினான். அதன் பிறகு அவர்கள் சரியாக அளந்து கொடுத்து வியாபாரம் செய்தனர். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

ஆரம்ப நாள்களில் மதீனத்து வியாபாரிகள் அளவையில் மோசடி செய்து கொண்டிருந்தனர். எடை குறைவு செய்யும் மோசடியை எதிர்த்து அன்றைக்கு எந்த தனி மனிதனும் அல்லது இயக்கமும் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வணிகர்களிடம் சென்று திருக்குர்ஆனின் அல்முதஃப்பிஃபீன் (83வது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினார்கள். இதுபோன்ற மோசடிகளினால் அமைதி வாழ்வு எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது, குணவொழுக்கம் சீரழிகிறது, இறைவனின் கோபத்திற்குச் சமுதாயம் ஆளாகிறது என்று சில வார்த்தைகள் கூறி அறிவுறுத்தினார்கள். அவ்வளவுதான் உடனேயே அந்த வணிகர்கள் அளவில் மோசடி செய்வதை கைவிட்டுவிட்டு நியாயத்திற்கு கட்டுப்பட்டார்கள். இதுதான் மதீனாவில் மலர்ந்த முதல் இஸ்லாமிய பொருளாதார சீர்திருத்தம் ஆகும். அந்த மகத்தான வணிகப் புரட்சியை அன்றைய உலகம் கண்டு மகிழ்ந்தது.


நீங்கள் அளந்துகொடுத்தால் நிறைவாக அளந்து கொடுங்கள்; சரியான தராசில் நிறுத்துக்கொடுங்கள். இதுவே சிறந்ததும் நல்ல முடிவும் ஆகும். திருக்குர்ஆன்:- 17:35


இறைநேசர் மாலிக் பின் தீனார் (ரஹ்) அவர்கள் மரணத்தருவாயில் இருக்கும் தனது பக்கத்து வீட்டுக்காரனைக் காணச் சென்றார்கள். அப்போது அவன், ( جَبَلَيْنِ مِنْ نَارٍ جَبَلَيْنِ مِنْ نَارٍ  ) "இரண்டு நெருப்பு மலைகள்! இரண்டு நெருப்பு மலைகள்!" எனக் கூறிக் கொண்டிருந்தான். மாலிக் (ரஹ்) அவர்கள், "ஏன் இவ்வாறு கூறுகிறாய்? கலிமாவை கூறு!" என்றார்கள். அவன்( يَا أَبَا يَحْيَى كَانَ لِي مِكْيَالَانِ كُنْتُ أَكِيلُ بِأَحَدِهِمَا وَأَكْتَالُ بِالْآخَرِ ) "அபூயஹ்யா! (என்னால் முடியவில்லை;) நான் பிறரிடமிருந்து வாங்கும்போது ஒரு (பெரிய) அளவையினால் வாங்குவேன்; விற்கும்போது மற்றொரு (சிறிய) அளவையினால் விற்பேன்; (இப்போது அவையிரண்டும் இரண்டு நெருப்பு மலையாக எனக்கு காட்சியளிக்கின்றன)" என்று கூறினான்.

 

அப்போது மாலிக் (ரஹ்) அவர்கள் அந்த அளவை இரண்டையும் எடுத்து ஒன்றோடு ஒன்றாக மோதி அடித்து உடைத்தார்கள். அவன், ( يَا أَبَا يَحْيَى كُلَّمَا ضَرَبْتَ أَحَدَهُمَا بِالْآخَرِ ازْدَادَ الْأَمْرُ عَظْمًا وَشِدَّةً ) "அபூயஹ்யா! நீங்கள் அவற்றை எவ்வளவு வேகமாக அடித்து நொறுக்குகின்றீரோ அந்தளவுக்கு (எனக்கு மரண வேதனை எனும்) காரியம் தீவிரமானதாகவும் கடுமையானதாகவும் ஆகிறது" என்றான். பிறகு, அவன் அதே நோயில் மரணமடைந்தான். நூல்:- அல்கபாஇர் இமாம் தஹபீ

 

வியாபாரத்தில் நீதி நேர்மையோடு நடந்து கொள்பவரின் இறுதி நிலை அழகானதாக இருக்கக்கூடும் என்று திருக்குர்ஆன் (17:35 ) கூறுகிறது.


நிறுவை அளவையில் மோசடி செய்து தொழில் நடத்துபவர்கள் தமது இறுதி நேரத்தில் ஈமானை இழந்துவிடுவார்கள் என்றும், நரகத்தில் அவர்களுக்குரிய தங்குமிடத்தை காண்பார்கள் என்றும் இந்நிகழ்வு எடுத்துரைக்கிறது.


இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஆன்றோர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவர்கள் எதை வாங்கினாலும் அரை குன்றுமணியளவு குறைவாக வாங்குவார்கள். எதை விற்றாலும் அரைக் குன்றுமணியளவு அதிகமாகக் கொடுப்பார்கள். இதைப் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "சரியாக இம்மியளவும் பிசகில்லாமல் நிறுத்து வாங்கவும் நிறுத்து விற்கவும் நம்மால் இயலாது என்று அஞ்சுகிறோம். எனவே, இந்த அறை குன்றுமணிளவு எங்களுக்கும் நரகத்திற்கும் மத்தியிலுள்ள தடைக்கல்லாக இருக்கும்" என்று கூறுவார்கள். நூல்:- இஹ்யா

 

அறிஞர் ஃபுளைழ் பின் இயாழ் (ரஹ்) அவர்கள் ஒருநாள் தம்முடைய மகன் ஒரு பவுனை விற்கும்போது அதை நிறுப்பதற்கு முன் அதிலுள்ள அழுக்கை தேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அந்த அழுக்கின் கனம் பவுனின் எடையை அதிகப்படுத்தி, அதனால் வாங்க வந்தவர் அதிகப் பணம் கொடுக்க வேண்டி வருமே என்ற அச்சத்தில் தம் மகன் தங்கத்திலுள்ள அழுக்கை தேய்கின்றார் என்றறிந்த அன்னாரின் உள்ளம் பூரிப்படைந்தது. மகனின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் கண்டு நெஞ்சம் குளிர்ந்து, "மகனே! நீ இப்போது செய்த இந்த வேலை, இரண்டு தடவை ஹஜ் செய்வதைவிட நன்மையுடையதாகும்" என்று கூறினார்கள்.

 

ஆலந்தூர் M.அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன் கேரளத்திலிருந்து ஜெர்மனிக்குக் கயிறு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கயிற்றின் எடையை அதிகப்படுத்துவதற்காக கேரளா வியாபாரிகள், கயிற்றைத் தண்ணீரில் நனைத்து, பின்னர் நனைத்த கயிற்றை கடல் மண்ணில் போட்டு புரட்டினார்கள். ஈரக் கயிற்றில் கடல் மணல் அப்படியே ஒட்டிக்கொண்டு எடையை அதிகப்படுத்தும் அல்லவா?

 

மண் கலந்த கயிற்றை அப்படியே ஏற்றுமதி செய்து வந்தார்கள். சில மாதங்களுக்கு பிறகு ஜெர்மன் இறக்குமதியாளர்களிடமிருந்து கேரள வியாபாரிக்கு, "தயவு செய்து மண்ணை அந்தக் கயிற்றோடு அனுப்ப வேண்டாம்; வெறும் மண்ணாகவே அனுப்பி விடுங்கள்" என்று அதிசயமான வேண்டுகோள் வந்தது.

 

ஜெர்மனி வியாபாரிகளுக்கு கயிற்றைவிட அந்த மண் விலை உயர்ந்ததாகத் தெரிந்தது. காரணம், கேரள கடற்கரையில் உள்ள மண் "மோனோசைட்" மண். அதாவது, உலோகப் பொருள்கள் நிறைந்தது. அந்த மோனோசைட் மண்ணிலிருந்து அணுகுண்டுக்கு வேண்டிய மூலப்பொருள் கூட கிடைக்குமாம். எனவே தான் ஜெர்மானிய வியாபாரிகள் கயிறு வேண்டாம் மண் போதும் என்று வேண்டினார்கள்.

 

தானாகச் செத்தவை மற்றும் இரத்தம்

 

(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டது ஆகியவை உங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. திருக்குர்ஆன்:- 5:3

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில், ‘‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள்.

 

அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்” எனக் கேட்கப்பட்டது.

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கூடாது; அது தடை செய்யப்பட்டதுதான்” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ( قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَهُ ) ‘‘யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டனர்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2236

 

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். தானாக செத்த பிராணியை உண்பதால், அதிலுள்ள உறைந்த இரத்தத்தின் மூலம் மனிதனின் உடலுக்கும் ஒழுக்கத்திற்கும் தீங்கு நேரும். எனவேதான், செத்த பிராணியை உண்பதற்கு அல்லாஹ் தடை விதித்துள்ளான்.

 

ஒரு பிராணி இயற்கையாகச் சாவதற்கு ஒன்று நோய் காரணமாக இருக்கலாம். அல்லது நசிவு காரணமாக இருக்கலாம். அல்லது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் காரணமாக இருக்கலாம். அந்தக் கிருமிகள் உடல் சத்துக்களை செயலிழக்க செய்து, அல்லது விஷத்தை உருவாக்கி மரணத்தை ஏற்படுத்தும். சில வேளைகளில் நோய்க்கிருமிகள் பிணத்தில் நீண்ட காலம் தங்கிவிடும். இந்நிலையில் அதை உண்பது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவு. நூல்:- தஃப்சீர் அல்மனார்

 

இரத்தத்தை உண்டால், அது சீரணமாவதில் பிரச்சனை ஏற்படும். இரத்தத்தில் புதுப்புது உயிரணுக்கள் தோன்றிய வண்ணம் இருக்கும். பழையதும் அழுகியதுமான சத்துக்கள் இரத்தத்தில் இருக்கும். இவை கழிவுகள். கழிவுகளை உட்கொள்வது எப்போதும் இயல்புக்கு எதிரானதாகும். தவிரவும், இரத்தத்தில் தான் சிலவகைக் குடல் நோய் கிருமிகள் அதிகம் இருக்கும். பாலைக் கொதிக்க வைத்து, அதிலுள்ள நோய்க்கிருமிகளைக் கொல்வதைப் போன்று, இரத்தத்தைக் கொதிக்க வைப்பதில்லை. இலேசான சூடு பட்டாலும் உறைந்து போகும் தன்மை கொண்டது இரத்தம். ஆகவே, இரத்தத்தில் நோய்க் கிருமிகள் சாகாமல் அப்படியே தங்கிவிடும் இந்நிலையில் இரத்தத்தை உண்டால் அதிலுள்ள நோய் கிருமிகள் உடலுக்குக் கேடு விளைவிக்கும். நூல்:- தஃப்சீர் அல்மனார்

 

ஆடு, மாடு, ஒட்டகம், கோழி போன்றவற்றில் தானாகச் செத்த பிராணி மற்றும் இரத்தத்தை விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

 

சில பிராய்லர் கோழி கடைகளில் இறந்துவிட்ட கோழிகளை குறைந்த விலைக்கு அல்லது குறிப்பிட்ட ஹோட்டல்களுக்கு அதை விற்றுவிடுகின்றனர். இது மாபாதகச் செயலாகும். இதை கைவிட வேண்டும்.

 

மேலும், இறைச்சி வியாபாரிகளில் சிலர் செத்துப்போன ஆடு அல்லது மாட்டை அறுத்து சகோதர சமயத்தவர்களில் சிலரிடம் குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர். இதுவும் தடைசெய்யப்பட்ட வியாபாரம் தான்.

 

வியாபாரத்தில் பொய் சொல்லுதல், சத்தியம் செய்தல், கலப்படம் செய்தல், பதுக்கல் செய்தல், நிலுவை அளவையில் மோசடி செய்தல்,  தானாகச் செத்தவை மற்றும் கால்நடைகளின் இரத்தம் ஆகியவை விற்பனை செய்தல் என மார்க்கம் தடைசெய்த வழிகளில் சம்பாதித்து, நிச்சயமாக நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும்  வாழ இயலாது என்பதே உண்மையாகும்.


ஆகவே, வியாபாரத்தில் ஹலால் ஹராமை பேணி வாழும் நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...