மகத்துவமிக்க இரவு
إِنَّا
أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ
وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ
الْفَجْرِ
நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் அருளினோம்.
கண்ணியமிக்க இரவு எதுவென உமக்குத் தெரியுமா? கண்ணிய மிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
அதில் வானவர்களும் ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியின்பேரில் (அவனுடைய)
கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி
(பொழிந்தவண்ணமிருக்கும்);
அது வைகறை தோன்றும்வரை
நீடிக்கும். திருக்குர்ஆன்:- 97:1,2,3,4,5
லைலத்துல் கதர் இரவுக்கு இஸ்லாத்தில் தனி மரியாதையும், மாண்பும் இருக்கிறது.
மேலும், அதற்கு பல விதமான சிறப்புகளும்
உண்டு.
"லைலத்துல் கதர்" என்பதற்கு "மகத்தான இரவு"
என்று பொருள். அது, (ரஹ்மத் எனும்) இறையருள் இறங்கும் புனித இரவு, (பரக்கத் எனும்) அபிவிருத்தி
இறங்கும் அற்புத இரவு, பாவங்கள் மன்னிக்கப்படும்
புண்ணிய இரவு, உலக பொதுமறை எனும் திருக்குர்ஆன் இறங்கிய இரவு.
இந்த ஓர் இரவில் நின்று வழிபடுவதானது ஆயிரம் மாதங்கள்
(83 ஆண்டுகள்) வழிபடுவதற்குச்
சமம் ஆகும். வானவர்கள் அந்த இரவில் பூமிக்கு வருகை தருகின்றனர். அந்த இரவு முழுக்க
சாந்தியோ சாந்தி என குர்ஆன் கூறுகிறது. இந்த அடிப்படையில் இந்த இரவிற்கு மகத்துவமிக்க
இரவு என்று பெயர் மிகவும் ஏற்றமானது.
ஏக்கம்
போக்கினான்
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் ( كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يَقُومُ اللَّيْلَ حَتَّى يُصْبِحَ، ولَبِسَ
السَّلَاحَ فِي سَبِيلِ اللَّهِ أَلْفَ شَهْرٍ ) “பனூ இஸ்ராயீல்
சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நல்லடியார் இரவில் விழித்தெழுந்து அதிகாலை வரையில் நின்று
தொழுவார். அவர் ஆயுதம் ஏந்தியவராக அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வார். இவ்வாறு
ஆயிரம் மாதங்கள் வரையில் தொடர்ந்து செயல்பட்டார்" என்று எடுத்துரைத்தார்கள். அதைக்
கேட்ட முஸ்லிம்கள் வியப்படைந்தனர். தொடர்ந்து நபியவர்கள் சொன்னார்கள். (அந்த வியப்புக்கு
பதில் தரும் வகையில்) வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கியருளினான்.
நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
அலீ பின் உர்வா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( أَرْبَعَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ، عَبَدُوا اللَّهَ ثَمَانِينَ عَامًا، لَمْ
يَعْصوه طَرْفَةَ عَيْنٍ: فَذَكَرَ أَيُّوبَ، وَزَكَرِيَّا، وحزْقيل بْنَ الْعَجُوزِ،
وَيُوشَعَ بْنَ نُونٍ
) "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு நல்லடியார்கள் எண்பது
ஆண்டுகள் ஒரு நொடிபொழுது கூட அல்லாஹ்விற்கு மாற்றம் செய்யாமல், வணக்க வழிபாடுகளில்
கழித்தார்கள். அந்த நான்கு பேர் அய்யூப் (அலை), ஸக்கரியா (அலை), ஹிஸ்கீல் பின் அல்அஜூஸ் (அலை), யூஷஃ பின் நூன் (அலை)"
என்று கூறினார்கள்.
இத்தகவலை செவியுற்ற நபித்தோழர்கள் ஆச்சரியப்பட்டனர்.
அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ( يَا مُحَمَّدُ، عَجِبَتْ أُمَّتُكَ مِنْ عِبَادَةِ هَؤُلَاءِ النَّفَرِ ثَمَانِينَ
سَنَةً، لَمْ يَعْصُوه طَرْفَةَ عَيْنٍ؛ فَقَدَ أَنْزَلَ اللَّهُ خَيْرًا مِنْ ذَلِكَ.
فَقَرَأَ عَلَيْهِ: ﴿إِنَّا أَنزلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا
لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ﴾ هَذَا أَفْضَلُ
مِمَّا عَجِبْتَ أَنْتَ وَأُمَّتُكَ ) "முஹம்மத் (ஸல்) அவர்களே! உங்கள் சமுதாயத்தினரை அந்த நான்கு நல்லடியார்கள்
எண்பது ஆண்டுகள் ஒரு நொடிபொழுது கூட அல்லாஹ்விற்கு மாற்றம் செய்யாமல், வணக்க வழிபாடுகளில்
கழித்தார்கள் என்ற தகவல் ஆச்சரியப்படுத்திவிட்டது. அல்லாஹுத்தஆலா அதைவிடச் சிறந்ததை
இப்போது இறக்கி இருக்கின்றான் என்று கூறினார்கள். பிறகு நபியவர்களுக்கு கத்ர் அத்தியாயத்தை
ஓதி காட்டிவிட்டு, நீங்களும் உங்கள் சமுதாயத்தினரும்
ஆச்சரியப்பட்டதை விட இது சிறந்ததாகும்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபியவர்களும்
நபித்தோழர்களும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
பாக்கியமுள்ள ஒரு மனிதருக்கு அவருடைய ஆயுளில் பத்து
லைலத்துல் கத்ர் இரவுகள் கிடைத்து அவற்றை அவர் வணக்க வழிபாடுகளில் கழித்திருப்பாரானால்
அவர் 833 ஆண்டுகள் நான்கு மாதங்களைவிட அதிகமான காலத்தை வணக்க வழிபாடுகளில் கழித்துவிட்டவரை போன்றவராவார். எனவே, முன் சென்றவர்களின்
ஆயுளை விட இவருக்கு அதிகமாக ஆயுள் கொடுக்கப்பட்டவரை போன்றவராவார்.
ஒருவர் சுமார் 83 வயது வரை உயிர் வாழ்ந்தாலேயே அவரை ஆயிரம் பிறை கண்டவர் என்று சிறப்பித்துக் கூறுவார்கள் . அப்படியானால், ஒவ்வொரு வருடமும் அந்த சிறப்பைப் பெறுபவர் எவ்வளவு பாக்கியசாலியானவர் ஆவார்.
ஆகவே, நமக்கும் முன் சென்ற சமுதாயத்திரைப் போன்று நீளமான ஆயுள் வழங்கப்படவில்லையே
என்று ஏக்கமடைய வேண்டாம். நமக்கு மகத்துவ மிக்க லைலத்துல்
கத்ர் இரவை வழங்கி, நமது ஏக்கம் போக்கிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும் உரித்தாகுக! அல்ஹம்துலில்லாஹ்.
மறக்கவைக்கப்பட்டேன்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أَيْقَظَنِي بَعْضُ
أَهْلِي فَنُسِّيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْغَوَابِرِ ) நான் (உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில்) "லைலத்துல் கத்ர்" இரவு எனக்குக்
காட்டப்பெற்றது. பின்னர் என் வீட்டாரில் ஒருவர் என்னை உறக்கத்திலிருந்து விழிக்கச்
செய்தபோது, அதை நான் மறக்கவைக்கப்பட்டேன்.
நூல்:- முஸ்லிம்-2167
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது.
‘லைலத்துல் கத்ர்' பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள்.
அப்போது இரண்டு முஸ்லிம்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். (அவர்களைத் தடுக்கச் சென்ற)
நபியவர்கள், ( خَرَجْتُ لأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى
فُلاَنٌ وَفُلاَنٌ، فَرُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، فَالْتَمِسُوهَا
فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ ) ‘‘லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன்; அப்போது இன்னாரும் இன்னாரும்
சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்; எனவே, அது (பற்றிய விளக்கம்) அகற்றப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு
நன்மையாக இருக்கலாம். எனவே,
அதை இருபத்தொன்பதாம்
இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும்
தேடிக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள். நூல்:- புகாரீ-2023
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْعَبْدَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ
يُصِيبُهُ ) ஓர் அடியாரை அடையவிருக்கும் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரம் (அவர்
செய்த) பாவத்தினால் அவரிடமிருந்து நிச்சயமாகத் தடுக்கப்பட்டுவிடுகிறது. அறிவிப்பாளர்:-
ஸவ்பான் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாகிம், தஃப்சீர் இப்னு
கஸீர்
சண்டை சச்சரவு என்பது ஆதாயத்தையும், பயனளிக்கும் கல்வியையும்
இழக்கச்செய்து விடுகிறது. மக்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்ததால் லைலத்துல் கத்ர் பற்றிய
குறிப்பு அகற்றப்பட்டுவிட்டது. நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொள்ளும்போது நமக்கு கிடைக்கவேண்டிய
பல பாக்கியங்கள் தவறிவிடக்கூடும்.
தேடிக்கொள்ளுங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ
الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ) ரமளானின் இறுதிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில்
லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2017, முஸ்லிம்-2174, திர்மிதீ-722
லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின்
ஒற்றைப்படை நாள்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும்
வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக
நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது, அந்த ஓர் இரவில் செய்யும்
வணக்கத்திற்கு 83 வருடங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக
நன்மைகள் கிடைக்கின்றது.
இதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இரவை
அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். 83 வருடம்
நாம் வாழ்வோமா? என்பதும் கேள்விக்குறியானது. அப்படியே வாழ்ந்தாலும் நமது ஆயுள்
முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? என்பதும் கேள்விக்குறியானது.
லைலத்துல் கத்ர் இரவை அடைய ஒட்டுமொத்த உடல் சக்தியையும்
முழுவீச்சில் உட்படுத்திட வேண்டும். ஆயிரம் மாதங்களைவிட சிறந்த அந்த இரவின் சிறப்பை
அடைய நாம் ரமளானின் கடைசிப்பத்து நாள்களிலும் உணவையும் உறக்கத்தையும் குறைத்துக் கொள்ள
வேண்டும். அதன் இரவு நேர வணக்க வழிபாடுகளில் தங்களை முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன்
ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
முன்பின் பாவம் மன்னிக்கப்பட்ட கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களே, இந்த இரவை அடைய அனைத்தையும் துறந்திருக்கிறார்கள்.
தமது குடும்பத்தினரையும் தூண்டியிருக்கிறார்கள் என்பதற்கு பல நபிமொழிகள் சான்றாகும்.
மறைக்கப்பட்டுள்ள லைலத்துல் கத்ர் இரவு குறித்து
அது இந்த இரவு தான் என்று குறிப்பிட்டு நம்மிடம் கூறாதிருப்பது நன்மையாக இருக்கலாம்.
அது இந்த இரவு தான் என்று தெளிவில்லாமல் இருந்தால் அதைத் தேடும் ஆர்வலர்கள் அதைத் தேடிடும்
விஷயத்தில் அதற்குரிய எதிர்பார்ப்பு உள்ள அனைத்து இரவுகளிலும் தேடுதல் முயற்சியில்
அதிகம் ஈடுபடுவார்கள். இதுதான் வழிபாட்டை அதிகப்படுத்தக் கூடியதாக இருக்கும்
ஆனால், லைலத்துல் கத்ர் இரவு என்பது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று
நமக்கு தெரிந்துவிட்டதெனில் இறைவழிபாட்டில் அதிகம் ஈடுபடுதல் இருக்காது. ஏனெனில், ஊக்கம் பெறுதல் என்பது
குறிப்பிட்ட இரவில் மட்டும் கண்விழித்துத் தொழுவதுடன் குறுகிப் போய்விடலாம். ஆக, இத்தகைய தத்துவர்த்தமான
நோக்கும், அறிவார்ந்த பார்வையும்
அந்த இரவைத் தெளிவுபடுத்தாமல் விடுவதை வலியுறுத்துவதன் காரணம் இதுதான். மக்கள் அந்த
இரவைத் தேடும் ஆர்வத்தில் மாதம் முழுவதும் வழிபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான்.
சுருங்கக்கூறின், எல்லாம் நன்மைக்கே என்று சொல்வது
போல். லைலத்துல் கத்ர் இரவும் மறைக்கப்பட்டிருப்பதும்
நன்மைக்குத்தான் என்று விளங்க வேண்டும்.
அல்லாஹ் நமக்கு கணக்கிலடங்கா நன்மைகளை அள்ளி வழங்குகின்ற
இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிடக்கூடாது.
வழங்கப்படும்
நற்கூலி
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا
غُفِرَ لَهُ مَا تَقَدَّم مِنْ ذَنْبِهِ ) யார் ‘லைலத்துல் கத்ர்' (கண்ணியமிக்க) இரவில்
நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2014, முஸ்லிம்-1393
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (
إِنَّهَا
لَيْلَةٌ سَابِعَةٌ أَوْ تَاسِعَةٌ وَعِشْرِينَ، وَإِنَّ الْمَلَائِكَةَ تِلْكَ اللَّيْلَةَ
فِي الْأَرْضِ أَكْثَرُ مِنْ عَدَدِ الْحَصَى ) நிச்சயமாக (லைலத்துல் கத்ர் எனும்) அந்த இரவு என்பது
27 ஆவது அல்லது 29 ஆவது இரவாகும். அந்த
இரவில் பூமியில் இறங்கி வரும் வானவர்கள் பொடிப்பொடிக் கற்களின் எண்ணிக்கையை விடவும்
அதிகமாக இருப்பார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது தயாலிஸீ,
தஃப்சீர் இப்னு கஸீர்
அருமை நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( إذا كانَ لَيْلَةُ القَدْرِ نَزَلَ جِبْرِيلُ في
كَبْكَبَةٍ مِنَ المَلائِكَةِ يُصَلُّونَ عَلى كُلِّ عَبْدٍ قائِمٍ أوْ قاعِدٍ يَذْكُرُ
اللَّهَ ) லைலத்துல் கத்ர் இரவு வந்துவிட்டால் வானவர் ஜிப்ரீல் (அலை)
மற்றும் வானவர்களின் ஒரு பெரும் கூட்டத்தினர் இறங்குகின்றனர். (அன்றிரவு) நின்றவாறு
அல்லது அமர்ந்தவாறு அல்லாஹ்வை நினைவுகூறுகின்ற அடியார் மீது (அன்றிரவு இறங்குகின்ற
வானவர்கள் அனைவரும்) சலவாத் கூறுகிறார்கள். (வானவர்களின் சலவாத் என்பது பிரார்த்தனை
ஆகும்.) அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஆபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
(அனைத்தையும்விட) அல்லாஹ்வின் திருப்பொருத்தம்
மிகப் பெரியது. திருக்குர்ஆன்:- 9:72
ஒருமுறை இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் அல்லாஹுத்தஆலாவிடம், "என் இறைவா! நான் உன்னுடைய
நெருக்கமும் திருப்பொருத்தையும் பெற மிகவும் விரும்புகிறேன். அதற்குரிய வழிமுறை
என்ன?" என்று கேட்டார்கள். அல்லாஹுத்தஆலா, "லைலத்துல் கதர் இரவில்
விழித்து நின்று வணங்கியவருக்கு என்னுடைய நெருக்கமும் திருப்பொருத்தமும் கிடைக்கும்" என்று கூறினான். நூல்:- துர்ரத்துந்
நாஸிஹீன்
பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர் முஜாஹித்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( لَا يَسْتَطِيعُ الشَّيْطَانُ أَنْ يَعْمَلَ فِيهَا
سُوءًا أَوْ يَعْمَلَ فِيهَا أَذًى ) லைலத்துல் கத்ர் இரவு அன்று ஷைத்தானால் எந்த கெட்ட காரியத்தையும்
செய்ய இயலாது. அல்லது அவனால் எந்த நோவினையும் செய்ய இயலாது. நூல்:- தஃப்சீர் இப்னு
கஸீர்
இருபத்தேழாவது இரவில்
இருக்கலாம்
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் (தமது கனவில் ரமளானின்) இருபத்தேழாவது இரவில் லைலத்துல் கத்ர் இரவு
இருப்பதாகக் கண்டார். அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( أَرَى رُؤْيَاكُمْ فِي الْعَشْرِ الأَوَاخِرِ فَاطْلُبُوهَا
فِي الْوِتْرِ مِنْهَا
) "ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் (ஒன்று என்பதில்) உங்கள் கனவுகள்
ஒன்றுபட்டிருப்பதைக் காண்கிறேன். எனவே, ரமளானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் (ஒன்றில்)
அதைத் தேடிக்கொள்ளுங்கள்!" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-2162
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا لَيْلَةَ
سَبْعٍ وَعِشْرِينَ ) யார் மகத்துவமிக்க இரவை (லைலத்துல் கத்ரை) தேடுகிறாரோ அவர் ரமளான்
இருபத்தேழாவது இரவில் தேடிக்கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்-4577
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது.
ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,
"லைலத்துல் கதர் (எனும் மகத்தான இரவு) எப்போது? என்று வினவினார். அப்போது
நபியவர்கள், ( مَنْ يَذْكُرُ مِنْكُمْ لَيْلَةَ الصَّهْبَاوَاتِ ) "ஸஹ்பாவாத் (எனும்
இடத்தில் நாம் தங்கியிருந்த) இரவு உங்களில் யாருக்கு நினைவில் இருக்கிறது?" என்று வினவினார்கள்.
நான், "(நாயகமே!) என் தாயும்
தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமகட்டும்! எனக்கு நினைவில் உள்ளது. நிச்சயமாக (அந்த இரவில்)
எனது கையில் சில பேரீச்சம்பழங்கள் இருந்தன. ஃபஜ்ரு (உதயம்) எனக்கு தென்பட்டுவிடக் கூடாது
என்பதற்காக எனது ஒட்டகத்தின் சேணத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டு அவற்றை உட்கொண்டு
நான் 'சஹ்ர்' செய்தேன். அதுதான் நிலவுத்
தோன்றும் நேரமாகும் (அந்த இரவு இருபத்து ஏழாம் இரவாகும்) என்று கூறினேன். நூல்:- முஸ்னது
அஹ்மத்-3384
'அஸ்ஸஹ்பாவாத்' என்பது கைபரிலிருந்து நடைதூரத்திலுள்ள ஓர் இடத்தின் பெயராகும். அருமை நாயகம் (ஸல்)
அவர்களுடன் அங்கு இருந்தவர்களும் ரமளான் மாத நோன்பு நோற்பதற்காக சஹ்ர் உணவு உண்டனர்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மட்டும் தமது ஒட்டகத்தின் சேணத்திற்குப் பின்னால் அமர்ந்த
சஹ்ர் செய்தார்கள். அப்போது ஃபஜ்ர் நேரத்தின் தொடக்கமாக இருந்தது. மக்கள் அனைவருக்கும்
தெரிகின்ற அளவிற்கு வெளிச்சம் தோன்றவில்லை.
ஃபஜ்ர் நேர வெளிச்சம் தோன்றிவிடுமோ என்ற அச்சத்தில்
வேகவேகமாக சஹ்ர் உணவை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் உட்கொண்டார்கள். எவ்வாறு ஃபஜ்ரின்
தொடக்க நேரத்தில் சந்திரன் தோன்றுவது மாதத்தில் இருபத்தேழாவது நாள் இரவில் தான் நடக்கும்.
எனவே, லைலத்துல் கதர் அந்த இரவாகத்தான் இருக்கும் என அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியதைப் போன்று அமைகிறது. நூல்:- அல்ஃபத்ஹுர் ரப்பானீ
அபூ அக்ரப் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ரமளான்
மாதத்தில் காலை நேரத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் நான் சென்றபோது
அன்னார் தமது இல்லத்தின் மேற்குப்பகுதியில் அமர்ந்திருந்ததைக் கண்டேன். அப்போது அன்னாரின்
குரலை நாங்கள் செவியற்றோம். அன்னார், ( صَدَقَ اللَّهُ وَبَلَّغَ رَسُولَهُ ) "அல்லாஹ் உண்மையே உரைத்தான். அவனுடைய தூதர் (உண்மையையே) எடுத்துரைத்தார்கள்"
என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் (அன்னாரிடம்) அல்லாஹ் உண்மையே உரைத்தான்.
அவனுடைய தூதர் (உண்மையையே) எடுத்துரைத்தார்கள்" என்று தாங்கள் சொல்லிக் கொண்டிருந்ததைச்
செவியுற்றோமே (என்ன காரணம்)?" என்று வினவினோம்.
அதற்கு அன்னார், ( إِنَّ لَيْلَةَ الْقَدْرِ فِي النِّصْفِ مِنَ السَّبْعِ
الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، تَطْلُعُ الشَّمْسُ غَدَاتَئِذٍ صَافِيَةً، لَيْسَ لَهَا
شُعَاعٌ ) "லைலத்துல் கத்ர் (எனும் மகத்தான) இரவானது ரமளான் மாதத்தின் இறுதி
ஏழு இரவுகளில் சரி பாதியான (இருபத்தேழாவது) இரவில் தான் உள்ளது. அன்றைய காலை கதிரவன்
ஒளிக்கதிர்கள் எதுவும் இன்றி தெளிவாகத் தோன்றும் என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள். ( فَنَظَرْتُ إِلَيْهَا فَوَجَدْتُهَا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ ) (இன்று) கதிரவனைப் பார்த்தேன்.
நபியவர்கள் கூறியதைப் போன்றே அதைக் கண்டேன். (எனவேதான், அவ்வாறு கூறினேன்)" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-3664
ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "தங்கள் சகோதரர் இப்னு
மஸ்ஊத் (ரலி) அவர்கள், வருடம் முழுவதும்
(இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார் என்று கூறுகிறாரே?" என்று கேட்டேன். அதற்கு
உபை (ரலி) அவர்கள், ( رَحِمَهُ اللَّهُ أَرَادَ أَنْ لاَ يَتَّكِلَ النَّاسُ
أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ
وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ) "இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! மக்கள்
(மற்ற நாள்களில் வழிபாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக்கூடாது
என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப்
பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்" என்று
பதிலளித்தார்கள். பிறகு "அல்லாஹ் நாடினால்" என்று கூறாமல் "அது (ரமளானின்)
இருபத்தேழாவது இரவே ஆகும்" என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள்.
நான், "அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு
உபை (ரலி) அவர்கள், ( بِالْعَلاَمَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لاَ شُعَاعَ لَهَا ) "அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் எங்களிடம் "அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்"
என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)" என்றார்கள். நூல்:-
முஸ்லிம்-2175, திர்மிதீ-3264
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஆரம்பக்
காலத்தில் (முஸ்னது அஹ்மதில் உள்ள) இந்த நபிமொழிகளை கூறியிருக்கலாம். பிறகு மக்கள்
மற்ற நாள்களில் இறைவழிபாடு செய்யாமல் பொடுபோக்காக இருந்து விடுவார்கள் என்றெண்ணி, (முஸ்லிம்
நூலில் வரும் நபிமொழியைப் போன்று) முன் சொன்ன நபிமொழியின் அந்த கருத்திலிருந்து பின்வாங்கி இருக்கக்கூடும்.
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் சபையில் அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "லைலத்துல் கத்ர் இரவு என்பது எந்த இரவென்று எனக்குத்
தெரியும்" என்று கூறினார். உமர் (ரலி) அவர்கள், "அது எந்த இரவு?" என்று வினவினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இருபத்தேழாவது இரவு" என்றார். உமர் (ரலி) அவர்கள், "இதை எங்கிருந்து அறிந்துக்கொண்டாய்?" என்று கேட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ( خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَوَاتٍ، وَسَبْعَ أَرْضِينَ،
وَسَبْعَةَ أَيَّامٍ، وَخَلَقَ الْإِنْسَانَ مِنْ سَبْعٍ، وَيَسْجُدُ عَلَى سَبْعٍ،
وَالطَّوَافُ بِالْبَيْتِ سَبْعٌ، وَرَمْيُ الْجِمَارِ سَبْعٌ )
"அல்லாஹ் வானத்தையும் பூமியையும் ஏழு ஏழாக படைத்துள்ளான். (வாரத்தின்) நாள்கள் ஏழு.
(அல்லாஹ்) மனிதனை ஏழு பரிணாமமாக படைத்துள்ளான். (குர்ஆன்:-23:12,13,14) மனிதன் ஏழு
உறுப்புகளால் (சஜ்தா எனும்) சிரவணக்கம் புரிகிறான். (இரு கைகள், இரு கால்கள், இரு மூட்டுகள், நெற்றி) கஅபாவை ஏழு
முறை சுற்றுவதே ஒரு தவாப் ஆகும். (ஹஜ்ஜில் ஷைத்தானை விரட்டும் நோக்கத்தில்) கல்லெறிதல்
ஏழு ஆகும். (அதாவது, அல்லாஹ் எண்களில் ஏழு என்ற எண்ணை விரும்புகிறான்)" என்று
விவரித்தார். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு ரமளான் 27 வது இரவு தான் என்பது
உபை பின் கஅப் (ரலி) அவர்களின் உறுதியான கருத்தாகும். (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகியோரின் கருத்தும் அதுவேயாகும்.) இருப்பினும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை
அடிப்படையாகக் கொண்டு ரமளானில் பிந்திய பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஓர் இரவாகும்
என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். நூல்:- அல்மின்ஹாஜ்
அதன் அடையாளம்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி
பெருமானார் ஸல் அவர்கள் ( وَقَدْ رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةَ فَأُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا
فِي الْعَشْرِ الأَوَاخِرِ فِي كُلِّ وِتْرٍ وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ
وَطِينٍ ) "இந்த (லைலத்துல்
கத்ர்) இரவை நான் (கனவில்) கண்டேன். பின்னர் அது எனக்கு மறக்கவைக்கப்பட்டது. எனவே, (ரமளானின்) இறுதிப்பத்தில்
ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள். நான் ஈரமான களிமண்ணில் (லைலத்துல்
கத்ர் இரவில்) சஜ்தாச் செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்" என்று கூறினார்கள்.
இருபத்தொன்றாவது நாள் இரவில் எங்களுக்கு மழை பெய்தது.
பள்ளிவாசல் கூரையிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் மழை நீர்
சொட்டியது. அன்று காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுது விட்டுத் திரும்பும்போது
அவர்களை நான் கண்டேன். அவர்களது முகத்தில் ஈரமான களிமண் படிந்திருந்தது. நூல்:- முஸ்லிம்-2168
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (
لَيْلَةٌ
سَمْحَةٌ طَلْقَةٌ، لَا حَارَّةٌ وَلَا بَارِدَةٌ، وَتُصْبِحُ شَمْسُ صَبِيحَتِهَا
ضَعِيفَةً حَمْرَاءَ لَا يَخْرُجُ شَيْطَانُهَا حَتَّى يُضِيءَ فَجْرُهَا ) லைலத்துல் கதர் இரவு
என்பது இலகுவான, மனமகிழ்வான இரவு. (அது) வெப்பமான இரவாகவும் இருக்காது; குளிரான இரவாகவும் இருக்காது.
அந்த இரவின் அதிகாலை சூரியன் (உதயமாகும் பொழுது) மங்கியதாக, சிவப்பாகத் தென்படும்.
அன்றைய இரவின் ஷைத்தான் அன்றைய அதிகாலை வெளிச்சம் பரவும் வரையில் வெளியே வர மாட்டான்.
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது தயாலிசீ, இப்னு ஹிப்பான், தஃப்சீர் இப்னு கஸீர், ஸஹீஹுல் ஜாமிஉ
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( وَاللَّهِ إِنِّي لأَعْلَمُ أَىُّ لَيْلَةٍ هِيَ
. هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
بِقِيَامِهَا هِيَ لَيْلَةُ صَبِيحَةِ سَبْعٍ وَعِشْرِينَ وَأَمَارَتُهَا أَنْ تَطْلُعَ
الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لاَ شُعَاعَ لَهَا ) அல்லாஹ்வின் மீதாணையாக!
அது எந்த இரவு என்பதை நான் அறிவேன். அந்த இரவில் நின்று வணங்குமாறு பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அது ரமளானில் இருபத்தேழாவது இரவாகும். அ(து லைலத்துல் கத்ர் என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்து வரும்
காலை பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளி இழந்து (மங்கலாக) உதிக்கும் என்று கூறினார்கள்.
நூல்:- முஸ்லிம்-1397
கேட்க வேண்டிய
பிரார்த்தனை
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நாயகமே! எந்த இரவு
(லைலத்துல் கத்ர்) மகத்துவமிக்க இரவு என நான் அறிந்து கொண்டால் அதில் கூற வேண்டிய
(பிரார்த்தனை) என்ன என்பதை என்னிடம் தெரிவியுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு
அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي ) "இறைவா! நீ மாபெரும்
மன்னிப்பாளன். பெருந்தன்மையுள்ளவன். மன்னிப்பதை விரும்புகின்றாய். எனவே, என்னை மன்னிப்பாயாக!
எனக் கூறுவீராக" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-3425, இப்னுமாஜா-3840
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
லைலத்துல் கத்ர் இரவில் வேறு எந்த நற்செயலையும் செய்வதைவிட பேராசான் பெருமானார் (ஸல்)
அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனையை ஓதுவதையே நான் அதிகம்
விரும்புகின்றேன்.
இந்த இரவில் ( اَلْعَفُوُّ ) “அல்அஃபுவ்” (பாவத்தின்
சுவடே இல்லாதளவுக்கு மிகவும் மன்னிப்பவன்) என்ற
தெய்வீகப் பெயரைப் பயன்படுத்தி அல்லாஹ்வை அழைக்குமாறு அருமை நாயகம் (ஸல்) அவர்கள்
நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
எனவே, இந்த இரவில் அல்லாஹ்விடம்
நாம் செய்யும் பிரார்த்தனைகள், நம்முடைய தவறான செயல்களின்
விளைவுகளை அழிக்கும்படி அல்லாஹ்டம் ஒரு வேண்டுகோளுடன் வெளிப்படையாக இணைக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் மன்னிக்கும் குணம் நமது பாவங்களின் விளைவாக நமக்கு ஏற்படும் பேரழிவைத்
தடுக்கிறது என்று குர்ஆன் கூறுகிறது.
உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தது எனில் அது
உங்கள் கைகள் தேடிக் கொண்டதின் விளைவாகும். (ஆயினும் அவற்றில்) பெரும்பாலானவற்றை (
يَعفُوْا ) அவன் மன்னித்து விடுகின்றான்.
திருக்குர்ஆன்:- 42:30
"அல்அஃபுவ்" (பாவத்தின் சுவடே
இல்லாதளவுக்கு மிகவும் மன்னிப்பவன்) என்பது அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒரு
திருநாமம் ஆகும். அல்அஃபுவ் எனும் சொல்லுக்கு உண்மையான பொருள் துடைத்து நீக்குதல் என்பதாகும்.
அரபுகளின் பாலைவனத்தில் மழை நீருக்காக குழிகள் தோண்டுவார்கள். தேவை முடிந்த பின் அவற்றை
அப்படியே விட்டு விட்டு சென்று விடுவர். ஓர் ஆண்டு சென்றால் அந்த குழிகள் இருந்ததற்கான
அடையாளமே அங்கே இருக்காது. அப்போது அதனை "அஃபப்பத்திர் ரீஹ்" (காற்று அதன்
அடையாளங்களை அழித்து இல்லாமல் ஆக்கிவிட்டது) என்று அவர்கள் கூறுவர்.
நாம் அல்லாஹ்வை “அல்அஃப்வ்” என்ற திருப்பெயரைக்
கூறி அழைத்தால், அவன் நமது பாவங்களை
இருந்த இடம் தெரியாமல் செயலேட்டிலிருந்தே அழித்துவிடுகின்றான். அவ்வாறு செயலேட்டிலிருந்து
அழிப்பது மட்டுமல்ல அழித்தபின் நம்மை குறித்து அவன் திருப்தியுறுக்கின்றான். பின்னர்
தனது அருட்கொடைகளை நாம் கேட்காமலேயே வாரிவழங்குகின்றான்.
சுருங்கக்கூறின், நமது செயலேட்டிலிருந்து நமது பாவத்தின் சுவடே இல்லாமல்
முழுமையாக அழித்துவிடுகின்றான். பாவங்களே செய்யாத புது மனிதனைப் போல் நாம் ஆகிவிடலாம்.
மேலும், நாம் செய்த பாவங்களை
நாமும் மறந்திருப்போம். வானவர்களும் சுட்டிக் காட்ட மாட்டார்கள். செயலேட்டிலும் இருக்காது.
அது குறித்து விசாரணையும் இருக்காது. அது மட்டுமல்ல, அல்லாஹ்வின் திருப்தியும் கிடைக்கும் இது எவ்வளவு
பெரிய பாக்கியம்? ரமளான் மாதத்தில் லைலத்துல்
கத்ர் எனும் மகத்துவமிக்க இரவில் இதுதான் நடக்கும்.
மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜித் அல்-ஹராமின் தலைமை இமாம், ஷேக் அப்துர் ரஹ்மான் அல்சுதைசி அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களுக்கு ஓர் சிறந்த சூத்திரத்தை கற்றுத்தருகிறார்.
1.தினமும் ஒரு திர்ஹம் (ஒரு ரூபாய்) தானம்செய்யுங்கள். அவற்றுக்கிடையில் லைலத்துல் கத்ரு இரவு வந்தால்விட்டால், 84 ஆண்டுகள் அல்லது 1000 மாதங்கள் தினமும் ஒரு ரூபாய் தானம் செய்த பலன் கிடைக்கும்.
2.தினமும் இரண்டு ரக்அத் நபில் தொழுங்கள், அவற்றுக்கிடையில் லைலத்துல் கத்ரு இரவு வந்தால்விட்டால், 84 ஆண்டுகள் அல்லது 1000 மாதங்கள் தினமும் இரண்டு ரக்அத் நபில் தொழுத பலன் கிடைக்கும்.
3.தினமும் மூன்று முறை அல்இக்லாஸ் (112 வது) அத்தியாயத்தை ஓதுங்கள். அவற்றுக்கிடையில் லைலத்துல் கத்ரு இரவு வந்தால்விட்டால், 84 ஆண்டுகள் அல்லது 1000 மாதங்கள் தினமும் ஒரு குர்ஆனை முழுமையாக ஓதிய பலன் கிடைக்கும்.
நாம் ஒவ்வொரு ரமளானிலும் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து, அதில் வணக்க வழிபாடுகள்
புரிந்து, இறையருளைப் பெறும் பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்குவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment