தடுமாறும் இளமை
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ
أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ
خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ
وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள்
தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக்
கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை
நன்கறிந்து கொள்கிறான். (நபியே!) மேலும் நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள். அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே
வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். திருக்குர்ஆன்:- 24:30,
31
பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இஸ்லாம் கற்புக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறது. எல்லா வகையிலும் கற்பொழுக்கக்
கேடு நிகழா வண்ணம் அனைத்து வழிகளையும் அடைத்து பாதுகாத்திட முயலுகிறது. ஆண் பெண் இதயத்தை
காத்திட சிறப்பான சட்டங்கள் மூலம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. கற்பு என்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் சம மதிப்புள்ள ஒரு சொத்தாகும். கற்பு ரீதியிலான ஒழுக்க வரம்புகளை
தகர்ப்பதில் காதல் பெரும் பங்கு வகிக்கிறது.
பொது வீதிகளிலும் ஆணும் பெண்ணும் கூடி கூத்தடிப்பது தான் இன்றைய காதல். தவறான உடல்
சேர்க்கை, மோசமான பண்பாடு,
உருக்குலைந்த வாழ்க்கை, சீரழிந்த சமுதாயம் இவற்றின் முன்னுரை தான் காதல் என்ற மெல்லிய
வார்த்தையில் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு ஆணின் தோல் அந்நியப் பெண்ணின் தோல்
மீது உரசுவதைவிட சேற்றில் புரளும் பன்றியின் மீது அவன் தோல் உரசுவது சிறந்ததாகும்.
நூல்:- தப்ரானீ
காதலிப்பவனை தொடாமல், பார்க்காமல்,
பேசாமல், காதலிப்பது சாத்தியமாகாது. அடிக்கடி சந்தித்துக் கொள்ளாத இருவருக்குள்
காதல் நிலையாக இருக்காது. எப்போதும் சந்தித்துக் கொள்ளும்போதுதான் காதல் பிறந்து வலுப்பெறும்
என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.
காதல் எனும் பெயரில் ஆண்களோடு பெண்கள் கூச்சமின்றி வெட்கமில்லாமல் சேர்ந்து பழகுவதையும்
அதை ஆதரிப்பதையும் இஸ்லாம் மிக வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பீச்,
பார்க் மற்றும் சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள்
செய்யும் சில்மிஷக் காட்சிகளை காணச் சகிக்காது. தம்பதிகளாக ஆன பின்னர் நான்கு சுவற்றுக்குள்
மத்தியில் தனிமையில் செய்ய வேண்டியதை பொது இடங்களில் செய்கின்றனர். ஆபாசத்திற்கு பிரசித்தி
பெற்ற வெள்ளையனும் இதைப் பார்த்து வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டு வருகிறது.
தபால் மூலம் காதலித்த காலம் போய், இன்டர்நெட்டிலும் செல்போனிலும் சமூக வலைதளத்திலும் காதலிக்கும் காலம்
இது.
ஹார்மோன் சேட்டைகள்
காதல் போதை, கண்கள் சந்திப்பு,
புன்னகை, விரல்களின் சந்திப்பு, உடல் வாசனை இவை ஒரு இளம் ஆணையோ பெண்ணையோ தனிமையில் சவலப்படுத்தும்
போது மூளையின் கட்டளைப்படி உடலில் ஹார்மோன் வெள்ளைப் பெருக்கை கிளப்பி விடும் என்பது
உண்மை.
அப்போது உடலில் ஏற்படும் இரசாயன பொருள்கள் ஆம்பிடமின் (Amphetamine) டோபமின் (Dopamine) நான் எபிநெப்ரின் (Nor Epinephrine) போன்ற வேதியல் பொருள்கள் ஏற்பட்டு இதயத்துடிப்பை அதிகமாக்கி,
உள்ளங்கையை வியர்க்கச் செய்து, மூச்சைத் திணறச் செய்து, முகம் சிவக்கச் செய்கிறது, தொண்டை கம்முகிறது, நாக்கு வறண்ட மாதிரி ஆகிறது.
கண்டதும் காதல் என்பது இளம் வயதில் அறியாப் பருவத்தில் நடக்கும் ஒரு விபத்து. உணர்ச்சிக்கு
முதலிடம் கொடுக்கும் வயது இது.
வாழ்க்கையில் பலப்பல அம்சங்களில் இதுவும் ஒன்று என்று தெரிந்து திட்டமிட்டு தன்
வாழ்க்கையை வகுத்து வாழ வேண்டும் என்பதை திருக்குர்ஆன் வாழ்வியலாக நமக்கு கற்றுத் தருகிறது.
காதலிப்பது ஒன்றுதான் இன்றைய இளவல்களின் பிரதான வேலை ஆகிவிட்டது. இன்றைய அவசர மாடர்ன்
உலகில் கண்டதும் காதல் என்ற ரீதியில் எல்லாம் ஜஸ்ட் ஜாலி டைம்பாஸுக்காக என்றாகிவிட்டது.
காதல் என்பது பார்க்க, பேச, ஊர் சுற்ற என்று பொழுதுபோக்காக மாறி வருகிறது. பெரு
நகரங்களில் மட்டுமே பரவி வந்த இந்த பொழுதுபோக்கு காதல், தற்போது சிறுநகரம் மற்றும் கிராமங்களிலும் மெல்ல எட்டிப் பார்க்கிறது
என்பதை நிதர்சன உண்மையாகும்.
வாலண்டைன்ஸ் டே
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ரோமபுரியை கிளாடியஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.
அந்த மன்னனுக்கு ஒரு பெரிய படையை உருவாக்கி உலகை வெல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தது. அதற்காக
நாட்டில் இருந்த அனைத்து ஆண்களையும் இராணுவத்தில் சேரச் சொன்னான். இராணுவத்தில் சேர்ந்தால்
தங்கள் குடும்பத்தை பிரிய வேண்டுமே என்று எண்ணி ஒருவரும் முன்வரவில்லை.
மணமுடித்தால் தானே இவர்கள் மனைவியைப் பிரிந்து படைக்கு வர மறுப்பார்கள். மணமுடிப்பதையே
தடை செய்துவிட்டால் இந்த பிரச்சனையே வராது என்று சிந்தித்து அதை உடனே செயல்படுத்தினான்.
இந்த அரச கட்டளை மக்களுக்கு அதிர்ச்சியை தந்தது. அப்போது துறவியாக வாழ்ந்த வாலண்டைன்
என்பவர் அரசகட்டளையை மீறி இளைஞர்களுக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்தார். இதை செவியேற்று
கோபம் கொண்ட மன்னன் அந்த துறவியை சிறையில் அடைத்து, மரண தண்டனை விதித்தான். அந்த துறவியின் நினைவாகவே ஆண்டுதோறும்
பிப்ரவரி 14-ம் அன்று வாலண்டைன்
தினம் என்று அழைக்கப்படும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. நன்றி: தினதந்தி இளைஞர் மலர் 4-2-2009
இந்திய திருநாட்டில் இலைமறை காயாக மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த காதலர் தினம் சில
வருடங்களாக நெஞ்சை கூசச் செய்யும் வகையில் வளர்ச்சி அடைந்து சமூக அங்கீகாரத்தைப் பெற
துடிக்கிறது.
காதலர் தினம் கொண்டாடக்கூடாது. மீறி கொண்டாடினால், அந்த ஜோடிகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படும் என்று
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் இந்த (2009) வருடம் அறிவித்தனர்.
இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும் என்றும் குறிப்பாக பெண்களின் சுய
உரிமையை மற்றும் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும் என்றும் கூறி சில பெண்கள் தங்கள்
எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அந்த அமைப்பின் தலைவரை அவமரியாதை செய்வதற்காகவும்
தாங்கள் பயன்படுத்திய இளம் சிவப்பு உள்ளாடைகளை (காதல் சின்னம் இளம் சிவப்பு) ஒன்று
சேர்த்து பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று அவருக்கு
அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து, பெங்களூர் இன்பெண்டரீ சாலையிலும், சென்னை ராயப்பேட்டை மெட்ராஸ் மெட்ராஸ் ஹவுஸ் என்ற இடத்திலும் காதலர் தினத்தை ஆதரிக்கும்
பெண்கள் அவர்களின் உள்ளாடைகளை போட ஒரு பெட்டி வைத்து, ஒரு வாரத்திற்குள் பல நூறு உள்ளாடைகளை ஒன்று திரட்டினர்.
வெட்கத்தின் பிறப்பிடமாகத் திகழ வேண்டிய பெண்கள்தான் இம்மாபாதகச் செயலை செய்து
தங்களின் வெட்கமின்மையை விளம்பரப்படுத்தி உள்ளனர்.
அந்நியப் பெண்கள் பயன்படுத்திய மேலாடையைக் கூட பார்ப்பது தவறாகும் என்றே இஸ்லாம்
இயங்குகிறது.
தீய பார்வை
காதல் எனும் நோய் தொற்றிக் கொள்வதற்கு அடிப்படை தீய பார்வையே ஆகும் விபச்சாரத்தின்
முதல் நெருக்கம் தீய பார்வையே ஆகும் அந்நிய பெண்களை ஆசையோடு பார்ப்பதால் அப்பெண்ணிடம்
பேசலாமே என்று துடிப்பு உருவாகிறது அதன் பிறகு பல தடவை சந்தித்து நண்பர்கள் போல் பழகுவது
பிறகு காதலர்கள் ஆவது பிறகு கட்டி அணைக்க வேண்டுமே என ஆர்வம் ஏற்படுகிறது இறுதியாக
விபச்சாரத்தில் முடிந்து விடுகிறது எனவே தான் கருப்பை பாதுகாக்க வேண்டுமானால் ஆண் பெண்
தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதையே தலைப்பில் காணும் திருவசனம்
தெளிவுபடுத்துகிறது
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ مُسْلِمٍ يَنْظُرُ إِلَى مَحَاسِنِ
امْرَأَةٍ [أَوَّلَ مَرّة] ثُمَّ يَغُضّ بَصَرَهُ، إِلَّا أَخْلَفَ اللَّهُ لَهُ
عِبَادَةً يَجِدُ حَلَاوَتَهَا ) ஒரு
பெண்ணின் அழகை முதல் முறையாகப் பார்த்து (அதில் மயங்கி விடாமல்) உடனே தம் பார்வையைத்
தாழ்த்திக் கொண்ட முஸ்லிமுக்கு வழிபாட்டில் இன்பம் தேடும் வாய்ப்பை அல்லாஹ் வழங்காமல்
இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அபூஉமாமா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத் தஃப்சீர்
இப்னு கஸீர் அந்நூர் வசனம்-30
பேராசான் பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான்: ( إِنَّ النَّظَرَ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ
مَسْمُومٌ، مَنْ تَرَكَهُ مَخَافَتِي، أَبْدَلْتُهُ إِيمَانًا يَجِدُ حَلَاوَتَهُ
فِي قَلْبِهِ ) (தகாத) பார்வை இப்லீசின்
விஷம் தோய்க்கப்பட்ட அம்புகளில் ஓர் அம்பாகும். யார் என்னை அஞ்சி, அதைக் கைவிடுகிறாரோ அவருக்கு, அதற்குப் பதிலாக இறைநம்பிக்கையை நான் தருவேன். அவர்
தமது உள்ளத்தில் அதன் சுவையைக் காண்பார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
(ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர்
அந்நூர் வசனம்-30
அசிங்கம் அரங்கேறியது
ஒரு வார இதழில் படித்த செய்தி. D.N.A. (மரபணு இனக்கீற்று அமிலம்) பரிசோதனை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர்
அமெரிக்கா நாட்டில் ஒரு இளம் பெண்ணும் நடுத்தர வயதுள்ள ஒரு ஆணும் காதலித்து திருமணம்
செய்வதற்கு தயாராகி விட்டனர். அப்பெண் தன் தாயிடம் விஷயத்தை கூறினாள். சரி உன் காதலனை
வீட்டுக்கு அழைத்து வா என்று அந்த தாய் கூற, அப்பெண்ணும் தன் காதலனை அழைத்து வந்தாள். தன் மகளின் காதலனைப்
பார்த்த அந்தத் தாய் அதிர்ச்சி அடைந்தாள். காரணம் அந்தக் காதலன் தான் தன் மகளின் தந்தை.
உடனே அந்தத் தாய் தன் மகளிடம் தன் இளமைக் காலத்தை முழுமையாக எடுத்துக் கூறிய போது,
அதை செவியுற்ற மகள் "பரவாயில்லை பழைய விஷயங்களைப்
பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் இருவரும் மணமுடித்து வாழ்க்கையைத் துவங்க உள்ளோம்"
என உறுதியாக கூறினாள். இதை எதிர்த்து அந்தத் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாள்.
நீதிமன்றத்தில் அந்தத் தாயிடம் முறைப்படி இவரை திருமணம் முடித்துக் கொண்டதற்கான
ஆதாரத்தை கேட்டனர். அதற்கு அந்தத் தாய், "நான் இவரை மணமுடித்துக் கொள்வதற்கு முன்னால் கர்ப்பமாகி,
ஒரு சண்டையில் பிரிந்துவிட்டோம்" என்று கூறினாள்.
கணவன் மனைவி என்பதற்கு சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் உறவு முறையில் இவர்கள் தந்தையும்
மகளுமாக இருந்தாலும் அதை நாங்கள் தடை செய்ய முடியாது. இவர்கள் தாராளமாக மணமுடித்துக்
கொள்ளலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. தந்தையும், மகளுமான அவர்கள் மணமுடித்து வாழ்க்கையை தொடங்கினர்.
காதலின் விளைவு அசிங்கம் அரங்கேறியது. மேலைநாட்டு வாழ்க்கை முறைக்கு இது ஒரு உதாரணம்
தான். ஆனால், இதுபோன்று அங்கு பல
நூறு உதாரணங்கள் உண்டு.
அருள்மொழி என்ற எழுத்தாளர், "காமம் என்ற ஆபாசமான சொல் எனக் கருதி பிற்கால இலக்கியவாதிகள் கண்டுபிடித்த சொல்
தான் காதல்" என்கிறார்.
காதல் என்ற பெயரில் பல குடும்பங்கள் சிதைந்து, சீரழிந்து, மானம் மரியாதை எல்லாம்
கப்பலேறி போய்விட்டது.
இப்போதெல்லாம் உலகம் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை தான் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் 50 சதவீதம் குழந்தைகள்
திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்டு காதல் எனும் தகாத உறவுகளில் பிறக்கின்றன என்கிறது
ஒரு புள்ளி விவரம்.
திருமணத்திற்கு முன்னர் காதல், காதலிக்கும் போது
திருமணத்திற்கான ஒரு முன்னோட்டம் பார்த்து விடுவது தான். இதுவே, அநாகரிகமான இன்றைய சில அதிமேதாவிகளின் எண்ணமாகும்.
ஆபாசத்தால் வரும் ஆபத்து
காதல் என்பது தெய்வீகமானது, இயற்கையானது,
காதல் உணர்ச்சி இல்லாத மனிதர்களே உலகில் இல்லை என்றெல்லாம்
கூறி மக்களை வழி கெடுப்பதில் பெரும் பங்கு இன்றைய சினிமாவையேச் சாரும்.
சினிமாவில் காதல், நாளை திருமணம்,
முடிவு சுபம். உண்மை வாழ்க்கை அப்படியல்ல. வாழ்க்கை
உண்மையானது. அதில் இன்பம், துன்பம், ஏக்கம், ஏமாற்றம், சுகம், துக்கம் நிறைந்தது. ஒருவருக்கு இவற்றை ஏற்கும் பக்குவ
வயது வரும் வரை திருமணத்தைத் தள்ளி போட வேண்டும்.
தற்காலச் சினிமாக்கள் அனைத்தும் காதலை மையமாக வைத்தே தயாரிக்கப்படுகிறது. காதலில்
இருப்பவர்கள் சந்தோசமாக நம்பிக்கையுடன் வாழ்வார்கள் என்றும், காதல் எதையும் கேட்காது ஆனால் எல்லாவற்றையும் கொடுக்கும்
என்றும், காதல் என்பது இதயத்தை அப்படியே
மற்றவர்களிடம் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுத்து விடுவதாகும் என்றும், காதலில் பொறாமை சுயநலம் இருக்க…
சீரழியும் மாணவ மாணவிகள்
மன இச்சையைப் பின்பற்றாதீர். (அவ்வாறு) பின்பற்றினால் அது உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து
தவறி விடும்படி செய்யும். திருக்குர்ஆன்:- 38:26
காதல் எனும் ஒழுக்கமின்மையை ஊக்குவிப்பதில் கூட்டுக் கல்வி முறைக்கும் பங்குண்டு.
கல்வி இரு பாலருக்கும் அவசியமானது. ஆனால், கல்வியை இருப்பாலருக்கும் முறையாகக் கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். கோ - எஜுகேஷன்
எனும் கூட்டு கல்வி முறையின் மூலம், இன்று ஆண் பெண் கற்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. பெரும்பாலான
கல்லூரிகள் காதல் கலையைக் கற்றுத்தரும் பாடசாலையாக ஆகிவிட்டது.
வாலிப வயது மாணவ மாணவிகள் இருபாலருக்கும் இயற்கையாக உள்ள சம்பந்தம், நெருப்புக்கும் வெடிமருந்துக்கும் உள்ள சம்பந்தத்தைப்
போன்று உள்ளதால் அவ்விருவரையும் எந்த ஒரு தடையும் இன்றி கலந்துரையாடும்படி வைத்துவிட்டு,
அவ்விருவரும் தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்வார்கள்
என்று எண்ணுவது இயற்கையை அறியாத முட்டாள்களின் செயலாகும்.
கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம்
இருக்கும். அதில் சிலர் மட்டும் வருங்காலத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்றெண்ணி,
மனக்கட்டுப்பாடோடு இருந்து படிப்பை வெற்றிகரமாக
முடித்து வெளிவருவார்கள். சிலர் தன் மனோ இச்சையின் பிரகாரம் காதலில் விழுந்து மதிக்கத்தக்க
கல்லூரி நாள்களை வீணடித்துவிட்டு, பிற்காலத்தில் அதை
எண்ணி மனம் வருந்துவார்கள்.
மனித வாழ்வில், வாலிப வயது தான் ஒரு வலுவான பருவம். அதுபோலவே ஆபத்துக்கள் நிறைந்த
பருவமும் அதுவே. எதிர்காலத்தில் அவனை மனிதனா? மிருகமா? என்று வரையறுக்கும்
வயது அதுதான். அந்த பருவத்தில் அவன் தனது வாழ்வை கழிக்க வேண்டியது கல்லூரிகளில் தான்.
ஆனால், கூட்டுக் கல்வி முறையின் மூலம்
பல தீமைகளை இந்த சமுதாயம் சந்திக்கிறது. வாலிப உள்ளங்களில் 95 சதவீதம் இனக் கவர்ச்சிதான் மேலோங்கி நிற்கும்.
இரு பாலரும் கலந்து கொள்கின்ற நல்ல காரியங்களில்கூட நல்ல நோக்கங்களையும் மீறி இனக்
கவர்ச்சியானது தனது மோசமான பாதிப்பை உண்டாக்கி விட வல்லது.
சக மாணவ மாணவிகளிடம் சகஜமாகப் பேசி பழகும் போது, கூச்சம் நாணம் இல்லாமல் போய்விடுகிறது. ஈவ்டீசிங் எனும் கேலி
கிண்டல் மூலம் பல உயிர்கள் பலியாகின்றன. புது மாணவர்கள் சைட் அடிக்கும் பழக்கம் மற்றும்
காதலிக்கும் பழக்கத்தையும் கற்றுக் கொள்கின்றனர். சிலருக்கு பட்டப்படிப்பை விட,
காதல் பாடமே பிரதானமானது என்றெண்ணி, பட்டப்படிப்பை பாதியில் தொலைத்துவிட்டு வீட்டை விட்டு
ஓடி விடுகின்றனர். (மேற்கூறிய தீமைகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் மாணவ மாணவிகள்
மிகவும் குறைவேயாகும்.) சுருங்கக்கூறின் ஒழுக்கமின்மையின் உறைவிடமாக கூட்டுக் கல்வி
முறை அமைந்து விடுகிறது.
சமீபத்தில் ஜெர்மனியில் இருபாலரும் கலந்து படிக்கும் கல்விக்கூடங்களில் 140 மாணவர்களிடமும் அடுத்து மாணவர்கள் மட்டும் தனியாக
படிக்கும் கல்விக்கூடங்களில் 140 மாணவர்களிடமும் நடத்தப்பட்ட
ஆய்வின்படி கூட்டுக்கல்வி முறை இல்லாமல் படிக்கும் மாணவர்களே படிப்பில் சிறந்து விளங்குவதாக
தெரிய வந்துள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் "பான் அம்ரிஞ்ச்" என்ற அறிஞர்,
"மாணவ மாணவிகளை ஒரே வகுப்பில்
வைத்து கல்வி புகட்டக்கூடாது" என்று தனது ஆய்வின் முடிவில் கூறியுள்ளார்.
கூட்டுக் கல்வி முறையின் தீமைகளை விளங்கிக் கொண்டோர் ஆண்களுக்கென்றே உள்ள கல்லூரியில்
தமது ஆண் பிள்ளைகளையும் பெண்களுக்கென்றே உள்ள கல்லூரியில் தமது பெண் பிள்ளைகளையும்
படிக்க அனுமதிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் நடத்தும் கல்லூரிகளில் கூட்டுக் கல்வி முறையை
அனுமதிக்கவே கூடாது.
வேலை செய்யும் இடங்களில்
ஆண் - பெண் ஒரே இடத்தில் வேலை செய்யும்போது அவர்களுக்குள் பேசிக்கொள்வது சகஜமாகிவிடுகிறது. அதன் மூலம் அவர்களுக்குள் பழக்கம்
ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. அந்தக் காதலில் கவனம் செலுத்துவது மூலம் வேலையில்
கவனமின்மை ஏற்படுகிறது. வேலை நேரத்தில் வெட்டி அரட்டை ஏற்படுகிறது. அதன் பிறகு முதலாளி
அல்லது மேலதிகாரியிடம் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
நாம் எந்த வேலை செய்தாலும் அதனை ரசனையோடும் கவனத்தோடும் செய்து பழக வேண்டும். அப்போது
தான் அந்த வேலையின் மூலம் உயர முடியும். நம்முடன் யார் வேலை பார்த்தாலும் சரி, நாம் எதற்காக இங்கு வந்தோம். நமது இலக்கு என்ன? என்று அவ்வப்போது சிந்தித்து பார்க்க வேண்டும்.
நம்முடன் வேலை பார்ப்பவள் நல்லொழுக்கமுள்ளவளாக இருந்து, நாம் அவளை மணமுடிப்பதற்கு தகுதியும், சூழ்நிலையும் சரியாக இருந்தால், நம் வீட்டினர் மூலம் அவள் வீட்டினரிடம் நம்முடைய எண்ணத்தை தெரிவிக்கலாம்.
அதைவிட்டு விட்டு, அவளைக் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, அவளுடன் பீக்,
பார்க் என்று ஊர் சுற்றி, தகாத காரியங்களில் ஈடுபடுவது மாபாதக செயலாகும். பெரும்பாலும்,
ஆண்கள் வேலை செய்யும் இடங்களில் பெண்கள் வேலைக்குச்
சேர்வது, கற்புக்கு ஆபத்தாகவே முடிகிறது.
ஒழுக்கமுள்ள பெண்களில் சிலர் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.
மணக்கத் தகுதியற்றோர்
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (மதீனாவில்) மர்ஸத்
பின் அபீமர்ஸத் அல்ஙனவீ (ரலி) அவர்கள் மக்கா(விலிருந்து மதீனா)விற்குக் கைதிகளை (இரவோடு
இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராக இருந்தார். (அவர் கூறுகிறார்:) மக்காவில் அனாக் எனும்
விபச்சாரி ஒருத்தி இருந்தாள். அவள் (நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) என்னுடைய காதலியாக
இருந்தாள்.
நான் மக்காவில் உள்ள கைதி ஒருவரை தூக்கிச் செல்ல வாக்குறுதி அளித்திருந்தேன். எனவே,
நான் பௌர்ணமி இரவில் மக்காவின் ஒரு சுவரின் நிழலின்
பக்கம் ஒதுங்கி வந்தேன். எனது பழைய காதலி சுவர் ஓரத்தில் என் நிழல் கண்டு வந்துவிட்டாள்.
என் நிழலைப் பார்த்தே நான்தான் என்று அறிந்து கொண்டு, என்னிடம் நெருங்கி வந்து, "(யார்) மர்ஸதா?" என்று கேட்டாள். அப்போது நான், "மர்ஸத் தான்" என்று கூறினேன்.
அதற்கு அவள், ( مَرْحَبًا وَأَهْلاً هَلُمَّ فَبِتْ عِنْدَنَا اللَّيْلَةَ
) “வருக! வருக! வாரும் இவ்விரவில்
என்னிடம் தங்கிவிட்டு செல்வீராக" என்று கூறினாள். அப்போது நான் அவளிடம்,
( يَا
عَنَاقُ حَرَّمَ اللَّهُ الزِّنَا ) "அனாக் அல்லாஹ் விபச்சாரத்தைத் தடை செய்துள்ளான்"
என்று கூறினேன்.
பின்னர் நான் மதீனா வந்த பிறகு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து,
( يَا
رَسُولَ اللَّهِ أَنْكِحُ عَنَاقَ ) "நாயகமே நான் அனாக்கைத் திருமணம் செய்து கொள்ளலாமா?"
என்று கேட்டேன். நபியவர்கள் பதில் சொல்லாமல் அமைதியாக
இருந்தார்கள்.
அப்போதுதான் "விபச்சாரியை விபச்சாரம் செய்பவனோ இணைவைப்பாளனோ அன்றி (வேறு யாரும்)
மணம்முடிக்க மாட்டார். (24:3) எனும் இறை வசனம் இறங்கியது.
உடனே, நபியவர்கள் மர்ஸதே! என்று என்னை
அழைத்து, என்னிடம் இந்த வசனத்தை ஓதி காட்டிவிட்டு, ( لاَ تَنْكِحْهَا ) "அவளை நீர் மணமுடிக்காதீர்" என்று கூறிவிட்டார்கள்.
நூல்:- அபூதாவூத்-1755, திர்மிதீ-3091,
நசாயீ-3176, ஹாகிம்
உண்மையான காதலுக்கு ஜாதி மத பேதம் இல்லை என்று கூறி, சகோதர சமயத்தவர்களை காதலித்து மணமுடித்துக் கொண்டு காமம் நிரம்பிய
காதலுக்காக இறைநம்பிக்கையை துறந்து, சிலர் மதம் மாறிவிடுகின்றனர். மேலும் சிலர், தான் காதலிப்பவர்களுக்கு நாவுளவில் மட்டும் திருக்கலிமாவை சொல்லிக்
கொடுத்துவிட்டு, நான் அவளை இஸ்லாமாக்கிய
பின்னர் தான் திருமணம் முடித்துக்கொண்டேன் என்று பெருமையாக பேசுவார்கள். திருக்கலிமாவை
உள்ளத்தில் உறுதி கொண்டு, நாவால் மொழிந்து,
அதற்கேற்ப உடல் உறுப்புகளை செயல்படுத்தினால் மட்டுமே
ஒரு மனிதன் உண்மையான முஸ்லிமாக முடியுமே தவிர, வெறுமனே நாவால் மட்டும் திருக்கலிமாவை மொழிந்தால் அந்த மனிதன்
முஸ்லிம் பெயர் தாங்கி மட்டுமே ஆகும் என்பது நினைவு இருக்கட்டும்.
இறைநம்பிக்கையாளர்களே! இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்
வரையில் நீங்கள் மணமுடித்துக் கொள்ளாதீர்கள். (ஏனெனில்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களை கவரக்கூடியவராக இருப்பினும்,
இறைநம்பிக்கை கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளைவிட நிச்சயமாக
மேலானவள். (அவ்வாறே) இணைவைத்து வணங்கும் ஆண்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரையில் அவர்களுக்கு
இறைநம்பிக்கையாளர்களான பெண்களை நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திருக்குர்ஆன்:-
2:221
மேற்கண்ட வசனம் எந்த சாக்குபோக்கு கூறினாலும் இணைவைப்போரை நிச்சயமாக மணக்கக் கூடாது
என்றும், இணைவைப்பாளர் முழுமையான முஸ்லிமாக
ஆகாத வரை மணக்கக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
பொறுப்புதாரி வேண்டும்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهَا
فَنِكَاحُهَا بَاطِلٌ ) "எந்தப் பெண் தன் காப்பாளரின் அனுமதி இன்றி (தானே) மணம்முடித்துக் கொள்கிறாளோ அவளது
திருமணம் செல்லாது" என்று மூன்று முறை கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1784,
திர்மிதீ-1021, இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்,
தாரிமீ
சிலர் கேர்ள் ஃபிரண்ட், பாய் ஃப்ரெண்ட் என்ற
பெயரில் அந்நியர்களோடு பழகி ஊர் சுற்றும் போது மார்க்கச் சட்டங்களை கண்டு கொள்வதில்லை.
பெற்றோர் மற்றும் உறவினர் வார்த்தைகளுக்கு கட்டுப்படாமல் தான் காதலித்தவளை மணமுடிக்கும்
போது மட்டும் ரிஜிஸ்டர் திருமணம் கூடுமா? கூடாதா? என்று கேள்வி கேட்பார்கள்.
இந்த நபிமொழியின் அடிப்படையில் பேரறிஞர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், "பொறுப்புதாரி இல்லாமல் பெண் தானாக செய்து கொள்ளும் திருமணம் நிச்சயமாக செல்லாது" என்று சட்டம் கூறியுள்ளார்கள்.
ஆண் பெண் இருவரும் மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வதின் மூலமோ, அரசு திருமணப்பதிவு புத்தகத்தில் இருவரும் கையொப்பம் இடுவதின் மூலமோ இஸ்லாமிய திருமணம் செல்லுபடியாகாது. திருமணம் செல்லுபடி ஆவதற்கு இரண்டு சாட்சிகள், (மஹ்ர் எனும்) மணக்கொடை மற்றும் மணப்பெண்ணின் புறத்திலிருந்து மணமுடித்துக் கொடுக்கும் ஒரு பொறுப்புதாரி இருப்பது அவசியம்.
நபியவர்களின் காதல்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கதீஜா (ரலி) அவர்கள் மீது நான் எரிச்சல் பட்டதைப்
போன்று அருமை நாயகம் (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியர் மீதும் எரிச்சல் கொண்டதில்லை.
ஆனால், அவர்களை நான் சந்தித்ததில்லை.
நபியவர்கள் ஆட்டை அறுத்தாலும் மனைவி கதீஜா (ரலி) அவர்களின் தோழியருக்கு இதை கொடுத்தனுப்ப
சொல்லுவார்கள். ஒரு நாள் நான் எரிச்சல்பட்டு "(பெரிய) கதீஜா" என்று நபியவர்களிடம்
கூறினேன். அப்போது நபியவர்கள், ( إنِّي قَدْ رُزِقْتُ حُبَّهَا
) "(நான் என்ன செய்ய) அவர் மீது எனக்கு அன்பு ஏற்பட்டு விட்டதே!"
என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4821
உண்மையான காதல், திருமணத்திற்கு பிறகு
தான் ஏற்பட வேண்டும். நபியவர்கள் தமது மனைவி கதீஜா (ரலி) அவர்களுடன் வாழும் போதும்
சரி, அவர்கள் மறைந்த போதும் சரி, அவரை உயிருக்கு உயிராக காதலித்தார்கள். அவர்களுடன் வாழும் காலத்தில் வேறெந்த பெண்ணையும்
மணமுடிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - கதீஜா (ரலி) ஆகியோரை போன்ற காதல் கொண்ட
சிறந்த தம்பதியரை உலகம் இதுவரை கண்டதுமில்லை. இனிமேல் காணப்போவதுமில்லை.
திருமணத்திற்கு பின்னர் காதல் இல்லாது போனால் தான் கைசேதமாகும். காதலித்து மணமுடித்துக்
கொண்ட பலரிடம் பிற்காலத்தில் காதல் பரிமாற்றம் இல்லாததால் தான் வரதட்சணை கொடுமை,
குடும்பத்தில் பிரச்சினை, (தலாக், குலா எனும்) மணவிலக்கு, கள்ளத்தொடர்பு அதனால் கணவன் அல்லது மனைவி கொலை, மனைவியின் தொல்லையால் கணவன் தற்கொலை என்ற செய்தி
பரவலாகிவிட்டது.
காதல் திருமணத்தால் இணைந்த பலரிடம் நடத்தையில் கணவனை மனைவி, அல்லது மனைவியை கணவன் சந்தேகப்படுவது இயல்பாகிவிட்டது.
காதலித்து, பிறகு தம்பதிகளான
80 சதவீதத்தினர் பிற்காலத்தில்
தன் பிள்ளைகள் காதலிப்பதை விரும்புவதில்லை. ஏனெனில், பெற்றோர்களான பிறகு தான் காதல் என்பது அவர்களுக்கு தவறாக தெரிகிறது.
கணவனை - மனைவியை மட்டும் காதலித்தால், காதல் சுகமானது; அழகானது; இயற்கையானது. இஸ்லாம் விரும்பும் காதல் இதுவேயாகும்.
இஸ்லாம் கூறும் நல்லொழுக்க மாண்புகளை பின்பற்றி வாழும் நற்பண்பாளர்களாக,
இறைவனை நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!
(இந்தக் கட்டுரை சுமார்
15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment