Search This Blog

Tuesday, 19 December 2023

பணியாளர்களிடம் பண்பாடுவோம்!

 

பணியாளர்களிடம் பண்பாடுவோம்!

 

قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ

 

அவர் (மூசாவிடம்), "நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் மீது என்னுடைய இவ்விரு புதல்வியரில் ஒருவரை நான் உமக்கு மணமுடித்துத்தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகளாகப் பூர்த்தி செய்தால், அது உமது விருப்பம். நான் உன்னை சிரமப்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீர் என்னை நல்லவர்களில் ஒருவனாகவே காண்பீர்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 28:27

 

மே 1 ஆம் தேதி உலகத் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

உலகத்தில் மனிதனுக்கு பொருளாதார மிகவும் முக்கியமாகும். அந்த பொருளாதாரத்தைச் சேர்க்க நமக்கு உதவியாளர்கள் தேவைப்படுகிறார்கள். நமது வேலைகளை பிறரிடம் பகிர்ந்தளிக்கும்போது தான் பணிகள் தொடர்ந்து நடைபெறும். பல வேலைகளை நான் ஒருவனே செய்து கொள்வேன் என்பது சாத்தியமாகாது. நமது வேலைகளை பகிர்ந்துகொள்ளும் வேலைக்காரர்கள் நமக்குரிய உதவியாளர்களே. எனவே, முதலாளிமார்கள் தமது உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களின் உரிமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகிறது.

 

ஒரு முஸ்லிம், தமது பணியாளர்களை அற்பமாக கருதாமல் இருப்பதும், தகாத சொற்களால் அவர்களை ஏசாமல் இருப்பதும், அவர்களுடைய உணர்வுகளை காயப்படுத்தாமல் இருப்பதும், அவர்களுடைய சக்திக்கும் அதிகமாக வேலைகளை வாங்காமல் இருப்பதும் அவசியமாகும். மேலும், அவர்களுடைய ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்குவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

 

திருக்குர்ஆன், முதலாளிகளுக்கு தமது பணியாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பியலை இவ்வாறு கற்றுத்தருகிறது.

 

கூலியில் கவனம்  

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸல்) கூறினார்கள். எவர் ஒருவர் ஒரு கூலியாளை பணியமர்த்துவாரோ அவர் அவரின் கூலியை தெரிவித்து விடட்டும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், கூலி குறிப்பிடப்படாமல் கூலியாளை பணியமர்த்துவதைத் தடுத்துள்ளார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்

 

இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள் தம்மிடம் மூசா (அலை) அவர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு முன்பே என்ன வேலை? அதற்கு என்ன சம்பளம்? என்பதை கூறிவிட்டார்கள் என்பதைத்தான் தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.

 

ஒரு முதலாளி ஒரு தொழிலாளியை பணிக்கு சேர்ப்பதற்கு முன்பே, இதுதான் வேலை; இவ்வளவு தான் சம்பளம் என்று தெளிவாக பேசிக்கொள்ள வேண்டும். அதுதான் நல்லது. மாறாக, நீ முதலில் வேலை செய். நீ எப்படி வேலை செய்கிறாய் என்று பார்த்துவிட்டு, பிறகு உனக்கு சம்பளம் எவ்வளவு என்று சொல்கிறேன் என்றுரைப்பது முறையல்ல.

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "மறுமைநாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்" என்று அல்லாஹ் கூறுகிறான். அதில் ஒருவன் ( ( وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ، وَلَمْ يُعْطِ أَجْرَهُ  ) ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு அவனது கூலியை கொடுக்காமல் இருந்தவன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-2227, இப்னுமாஜா-2433, முஸ்னது அஹ்மத்

 

அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள். ( أَعْطُوا الأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ ) உழைப்பாளியின் வியர்வை உலரும் முன்பாகவே அவருக்குரிய ஊதியத்தை வழங்கிவிடுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2434, அல்முஅஜமுஸ் ஸஙீர் இமாம் தப்ரானீ, அல்ஃபிர்தௌஸ் இமாம் தைலமீ  

 

உழைப்பாளிகளுக்கு ஆதரவாக இறைவனே முன்வந்து வாதாடுவது, உழைப்பின் உன்னதத்தையும், உழைப்பாளிக்கு கொடுக்கவேண்டிய கூலியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

 

உழைப்பாளிகளிடமிருந்து கடின உழைப்பை மட்டுமே எதிர்பார்க்கும் சாராரிடம் அவர்களின் ஊதியத்திற்காக உரத்த குரல் கொடுத்த உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆவார்.

 

உழைப்பாளியின் ஊதியத்தை தர மறுப்பது குற்றமாகும். உழைப்பாளியின் ஊதியத்தை அறவே கொடுக்க மறுப்பதும், அல்லது குறைத்துக் கொடுப்பதும் மோசடியாகும்.

 

தினக்கூலி, வாரக்கூலி, மாதக்கூலி என வழங்கப்படுகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் ஊதியத்தை வழங்கிட வேண்டும். இவற்றை இழுத்தடிக்கக்கூடாது. இதுவும் உழைப்பாளிக்கு இழைக்கப்படும் அநீதமே. இவ்வாறு செய்ய நேர்ந்தால் அவரின் ஊதியத்தை முதலாளி முதலீடு செய்து இலாபத்தையும் சேர்த்து வழங்கிட வேண்டும்.

 

ஒருவர் வேலைக்கு ஆள் சேர்க்கும்போது, "தம்பி உனக்கு தின சம்பளம் வேண்டுமா? அல்லது வார சம்பளம் வேண்டுமா? அல்லது மாதச் சம்பளம் வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு அந்த வேலை ஆள், "சார், தின சம்பளமும் கொடுங்க. வார சம்பளமும் கொடுங்க. மாதச் சம்பளமும் கொடுங்க" என்றானாம். 


இதுபோல் அதிக சம்பளத்திற்கு (அதாவது, தகுதிக்கு மீறிய சம்பளத்திற்கு) ஆசைப்படக்கூடாது.


சுருங்கக்கூறின், ஒரு முதலாளி தமது பணியாளர்களிடம் பேசிய சம்பளத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும். அதைப்போல் பணியாளரும் வாங்குகின்ற சம்பளத்திற்கு முறையாக வேலை செய்ய வேண்டும் என்கிறது இஸ்லாம்.

 

நலம் விசாரித்தல்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவர் திடீரென நோயற்றார். எனவே, அவரை நலம் விசாரிக்க நபியவர்கள் அவரிடம் சென்றபோது அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு, "இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!" என்றார்கள். உடனே, அவர் தம் அருகில் இருந்த தந்தையை பார்த்தார். அப்போது அவர், "அபுல்காசிம் (நபியவர்களின்) சொல்லுக்கு கட்டுப்படு!" என்றதும், அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அப்போது நபியவர்கள், ( الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ ) "இவரை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள். நூல் புகாரீ-1356

 

நமது பணியாளர்கள் நோயுற்றிருந்தால் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நலம் விசாரித்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது நபிவழியாக இருக்கிறது.

 

தேவைகளைப் பூர்த்திசெய்தல்

 

திண்ணைத் தோழர்களில் ஒருவராகவும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பணியாளர்களில் ஒருவராகவும் இருந்த ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு நாள்) நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். நபியவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது நபியவர்கள், "என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!" என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், ( أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ ) "சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும்" என்று கோருகிறேன்" என்றேன். அதற்கு நபியவர்கள், ( أَوَغَيْرَ ذَلِكَ ) "வேறு ஏதேனும் (கோருவீராக!)" என்றார்கள். நான், "(இல்லை) அதுதான்" என்றேன். அதற்கு நபியவர்கள், ( فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ ) "அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் (சஜ்தா எனும்) சிரவணக்கம் செய்து எனக்கு உதவிவீராக!" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-843

 

நமது பணியாளர்கள் தமது தேவைகளை தம்மிடம் நேரடியாகவே கேட்குமாறு வழிவகை செய்த தர வேண்டும். அவ்வாறே அவர்கள் சில நேரங்களில் தமது தேவையை கேட்கும்போது அதை நிறைவேற்றித் தருவதற்கு நாம் முடிந்தவரை முயற்சி செய்யவேண்டும்.

 

சக்திக்கு மீறிய பணி

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ )  (பணியாளர்களான) அவர்களது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு அவர்களை சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்கள் ஒத்துழையுங்கள். நூல்:- புகாரீ-30, முஸ்லிம்-3417, அபூதாவூத்-4491, திர்மிதீ -2625

 

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். உமர் (ரலி) அவர்கள் வாரத்தில் ஒருநாள் மதீனா நகருக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று வருவார்கள். அங்கு யாராவது அடிமைகளை கடுமையாக வேலை வாங்கக் கண்டால் அவர்களை கண்டிப்பார்கள். நூல்:-  முவத்தா மாலிக்

 

ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்கள் நள்ளிரவில் எழுந்து தமக்கான ஒழு செய்யும் தண்ணீரைத் தாமே அள்ளிக்கொண்டு வருவார்கள். மக்கள், "பணியாளரை அழைத்துக் கொள்ளலாமே!" என்றனர். உஸ்மான் (ரலி) அவர்கள் இரவு பொழுது அவர்களுக்கான ஓய்வுபொழுது அல்லவா? (எனவே, வேண்டாம்) என்று கூறிவிடுவார்கள். நூல்:- தபக்காத் இப்னு சஅத்

 

அபூகிலாலா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஆளுநராக இருந்த சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களை காணுவதற்கு ஒரு தோழர் வந்தார். அப்போது சல்மான் (ரலி) அவர்கள் தரையில் உட்கார்ந்து மாவு பிசைந்து கொண்டிருந்தார்கள். வந்தவர், அதை கண்டு வியந்தவராக, "தங்களது பணியாளர் எங்கே போனார்?" என வினவினார். சல்மான் (ரலி) அவர்கள், "அவரை ஒரு வேலைக்காக வெளியே அனுப்பியுள்ளேன். அவரிடம் ஒரே சமயத்தில் இரண்டிரண்டு வேலைகள் வாங்குவது நல்லதல்ல என்பதால் அவர் செய்து கொண்டிருந்த வேலையை நானே செய்கிறேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- தபக்காத் இப்னு சஅத்

 

மதிப்பளித்தல்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (  حُسْنُ الْمَلَكَةِ نَمَاءٌ وَسُوءُ الْخُلُقِ شُؤْمٌ ) பணியாளர்களிடம் நன்னடத்தை மேற்கொள்வது வாழ்வுக்கு வளம் தரும். தீய குணத்துடன் நடந்து கொள்வது துர்பாக்கியத்தை உண்டாக்கும். அறிவிப்பாளர்:- ராஃபிஉ பின் மகீஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4494, முஸ்னது அஹ்மத்

 

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (மதீனாவுக்கு அருகிலுள்ள) 'ரபதா' என்னுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்கள் இருந்தபோது அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும் அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், "அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்துகொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடை கிடைத்திருக்கும். வேறொரு ஆடை அவருக்கு அணிவித்திருக்கலாமே" என்று கூறினோம்.

 

அதற்கு அவர்கள், ( هُمْ إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ ) ‏ "(பணியாளர்களான) அவர்கள் உங்களுடைய சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு அவர்களை சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்கள் ஒத்துழையுங்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-30, முஸ்லிம்-3417, அபூதாவூத்-4491, திர்மிதீ-2625,

 

மன்னித்துப் பழகுதல்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ، إِلَّا عِزًّا )  (பிறரை) மன்னிப்பதன் மூலம் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்துவதில்லை. அறிவிப்பாளர்:- அபூகப்ஷா சயீத் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ, முஸ்னத் அஹ்மத், தப்ரானீ

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ كَمْ نَعْفُو عَنِ الْخَادِمِ ) "நாயகமே! (என்) பணியாளரை எத்தனை முறை நான் மன்னிக்க வேண்டும்?" என்று வினவினார். நபியவர்கள் எதுவும் பேசாமல் அமைதிகாத்தார்கள். மீண்டும் அவர் அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் நபியவர்கள் பதிலளிக்காமல் அமைதிகாத்தார்கள். அவர் மூன்றாம் முறையாக வினவியபோது நபியவர்கள்,  (  اعْفُوا عَنْهُ فِي كُلِّ يَوْمٍ سَبْعِينَ مَرَّةً ‏ ) "தினமும் எழுபது முறை பணியாளரை மன்னியுங்கள்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-4496, திர்மிதீ-1872

 

ஒவ்வொரு மனிதனும் தவறு செய்பவன்தான். தவறு செய்யாத மனிதரில்லை. இதில் உதவியாளர்களும் பணியாளர்களும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் மன்னிக்கும் மனப்பான்மை அதிகம் வேண்டும் என்கிறது இஸ்லாம்.

 

ஒரு மனிதன் தனது பணியாளர்களை எழுபது முறை மன்னித்தால் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் தருணமே வராது. முடிந்தவரை பணியாளர்களிடம் இரக்கம் காட்டவேண்டும். தண்டிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்த நபிமொழியின் நோக்கமாகும்.

 

ஒருமுறை ஹுசைன் (ரலி) அவர்களின் அடிமைப்பெண் தண்ணீர் ஊற்ற, அன்னார் தொழுகைக்கு உளூ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அவளின் கையிலிருந்த குடம் தவறி அன்னாரின் முகத்தில் மீது விழுந்துவிட்டது. அது அன்னாரின் முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே, அன்னார் தலையை உயர்த்தி அவளைப் பார்த்தார்கள். அப்போது அவள், "அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள்; மக்களின் தவறுகளை மன்னிப்பார்கள். (இவ்விதம்) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்" (3:134) என்ற திருவசனத்தை ஓதினாள். அதற்கு அன்னார், ( كَظَمْتُ غَيْظِي قَدْ عَفا اللَّهُ عَنْكِ اذْهَبِي فَأنْتِ حُرَّةٌ ) "என் கோபத்தை மென்று விழுங்கிவிட்டேன். உன்னை அல்லாஹ் மன்னிப்பானாக. எனவே, உன்னை நான் விடுதலை செய்துவிட்டேன். நீ இங்கிருந்து செல்லலாம்" என்று கூறினார்கள். நூல்:- பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் ஆலுஇம்ரான் வசனம்-134

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا صَنَعَ لأَحَدِكُمْ خَادِمُهُ طَعَامَهُ ثُمَّ جَاءَهُ بِهِ وَقَدْ وَلِيَ حَرَّهُ وَدُخَانَهُ فَلْيُقْعِدْهُ مَعَهُ فَلْيَأْكُلْ فَإِنْ كَانَ الطَّعَامُ مَشْفُوهًا قَلِيلاً فَلْيَضَعْ فِي يَدِهِ مِنْهُ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ ) உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு உணவு சமைத்துக் கொண்டு வந்தால், அவரையும் தம்முடன் அமரச்செய்து அவர் உண்ணட்டும். உணவு குறைவாக இருந்தால் அதில் ஒரு ஓரிரு கவளங்களையாவது அவரது கையில் வைக்கட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2557, முஸ்லிம்-3421, திர்மிதீ-1776, இப்னுமாஜா-3280, தாரிமீ-1984, முஸ்னது அஹ்மத்

 

அவதூறு வேண்டாம்

 

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَذَفَ مَمْلُوكَهُ بِالزِّنَا يُقَامُ عَلَيْهِ الْحَدُّ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ أَنْ يَكُونَ كَمَا قَالَ ) யார் (நிரபராதியான) தம் அடிமைமீது விபச்சாரம் புரிந்துவிட்டதாக அவதூறு கூறுகிறாரோ, அவருக்கு மறுமை நாளில் (சாட்டையடி) தண்டனை வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6858, முஸ்லிம்-3416

 

தம்முடைய பணியாளரை தமக்கு பிடிக்காதபோது, அவரை பணி நீக்கம் செய்வதற்குரிய உண்மையான காரணத்தையே சொல்லவேண்டும். அவர் சரியாக பணி செய்வதில்லை அல்லது திருடிவிட்டார் போன்ற ஏதேனும் குற்றங்களைக் கூறி, அவரைக் களங்கப்படுத்தி வெளியேற்றும் முதலாளிமார்கள் கவனிக்க வேண்டிய நபிமொழி இது.

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைபடும்படி) "ச்சீ" என்றோ ( لِمَ فَعَلْتَ كَذَا وَهَلاَّ فَعَلْتَ كَذَا ) "இதை ஏன் செய்தாய்?" என்றோ "நீ இப்படி செய்திருக்கக்கூடாதா" என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை. நூல்:- புகாரீ-6038, முஸ்லிம்-4623

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது நபியவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ( يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ ) "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்; செல்கிறேன் நாயகமே!" என்று கூறினேன். நூல்:-  முஸ்லிம்-4626

 

அனஸ் (ரலி) அவர்கள் ஒரு சிறுவர். எனவே, அவர் கொடுத்த வேலையை மறந்துவிட்டு சிறுவர்களுடன் விளையாடச் சென்றுவிட்டார். அது அவ்வயதிற்குரிய செயல் என்பதை உணர்ந்து கொண்ட நபியவர்கள், அவரை கண்டிக்காது அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை நினைவுபடுத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

 

பணியாளர், தாம் செய்ய வேண்டிய வேலையை மறந்துவிட்டு அரட்டையில் ஈடுபடுவதும், அல்லது சம்பந்தமில்லாத பிற வேலைகளில் ஈடுபடுவதும் முதலாளியை ஏமாற்றுவதேயாகும். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை.

 

முன்னெச்சரிக்கை

 

அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் எங்கள் பணியாளரிடம் பொருள்களை விற்கவோ  அடுத்தவர்களிடம் ஒப்படைக்கவோ கொடுத்தனுப்பும்போது முத்திரையிடுபவர்களாகவும் பொருள்களை அளப்பவர்களாகவும் எண்ணிக் கொடுப்பவர்களாகவும் இருந்தோம். ஏனெனில், தீய குணத்திற்கு அவர்கள் பழக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் எங்களில் யாரேனும் அவர்கள் மீது தப்பெண்ணம் கொண்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்து வந்தோம். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-167

 

நமது வீட்டுப் பெண்கள், அவர்கள் புழங்குகின்ற நகைகள், விலையுர்ந்த முக்கியமான பொருள்கள், காசு பணங்கள் ஆகிவற்றை தமது வீட்டு வேலைக்காரிகள், வாகன ஓட்டுனர்கள், தோட்டக்காரர்கள் போன்ற வீட்டுப்பணியாளர்கள் கண்களில் படும் அளவிற்கு வீட்டில் சர்வ சாதாரணமாக வைக்கக்கூடாது. அவ்வாறு நாம் வைத்து அந்த பொருள்கள் அவர்கள் பார்வையில்பட்டு அதன் மீது அவர்களுக்கு ஆசை ஏற்படலாம். அதனால் அவர்கள் தவறிழைக்கக்கூடும். எனவே, இவ்வாறு அவர்கள் தவறிழைப்பதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது.

 

இது போன்ற பொருள்களை சாதாரணமாக வீட்டின் அலமாரி அல்லது டேபிள்கள் மேலோ வைக்கும்போது சில நேரங்களில் அது தவறி கீழே விழுந்து கிடக்கலாம். அதை அறியாமல் இங்கே தானே இந்த பொருளை வைத்தேன். எங்கே காணவில்லை என்று நாம் பதட்டம் அடைந்து, யாராவது திருடியிருப்பார்களோ? அவன் இவன் திருடி இருப்பானோ? என்று அவர்கள் மீது தப்பெண்ணம் கொள்ளக்கூடும்.

 

தண்டித்தல் கூடாது

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த மனிதனிடம் மூன்று நற்பண்புகள் இருக்கின்றதோ அந்த மனிதனின் மரணத்தை அல்லாஹ் இலகுவாக்குவான். அவனை சொர்க்கத்தில் நுழையச்செய்வான். அந்த மூன்று பண்புகள் 1) பலவீனமானவர்களுடன் மிருதுவாக நடந்துகொள்வது. 2) பெற்றோர்களிடம் அன்போடு நடந்துகொள்வது. 3)  நமது அடிமைகளிடம் (பணியாளர்களிடம்) நல்ல முறையில் நடந்துகொள்வது. அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- மிஷ்காத்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَدْخُلُ الْجَنَّةَ سَيِّئُ الْمَلَكَةِ ) தனது அடிமைகளை(யும் பணியாளர்களையும்) மோசமாக நடத்துபவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். அறிவிப்பாளர்:- அபூபக்ர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1869, இப்னுமாஜா-3681

 

ஹசன் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் தமது ஒட்டகத்திற்கு தண்ணீர் புகட்டுமாறு தன் அடிமைக்கு உத்தரவிட்டார். ஆனால், அந்த அடிமை தூங்கிவிட்டார். அவரின் உரிமையாளர் ஒரு நெருப்புப் பந்தத்தைத் தூக்கி வந்து அந்த அடிமையின் முகத்தில் போட்டுவிட்டார். அந்த அடிமை (வெப்பத்தைப் போக்க) கிணற்றில் குதித்துவிட்டார். பொழுதுவிடிந்தவுடன் அந்த அடிமை உமர் (ரலி) அவர்களிடம் (தமக்கு ஏற்பட்ட கொடுமையை எடுத்துரைப்பதற்காக) வந்தார். உமர் (ரலி) அவர்கள் அந்த அடிமையின் முகத்தில் உள்ள வடுவை கண்டு (அடிமையின் உரியாளரிடம்) அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-161

 

ஒரு உரிமையாளன் தமது அடிமையை கடுமையாக தாக்கிவிட்டால் அவனை உரிமை விடுவது தான் அந்த குற்றத்திற்கு பரிகாரம். அது தான் அடிமைக்கு செய்யும் சிறந்த உபகாரமாகும். உரிமை விடுதல் தான் அவன் அனுபவித்த வேதனைக்கு சிறந்த ஒத்தடமாக அமையும்.

 

பணியாளர்களை அடிப்பது பாவச் செயலாகும். ஓர் அவசரப்புத்திக்காரன் ஏதோ ஒரு சூழ்நிலையில் தமது பணியாளர்களை அடித்துவிட்டால் அவர்கள் மனம் குளிரும்படியாக ஏதேனும் உபகாரம் செய்வது தான் அதற்கான பரிகாரமாக அமையும்.

 

எனவே நாம், பணியாளர்கள் குறித்து இஸ்லாம் கூறுகின்ற நற்போதனைகளை செயல்படுத்தி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...