நிவாரண நிதி
وَآتُوهُمْ مِنْ مَالِ اللَّهِ الَّذِي
آتَاكُمْ
அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருக்கும் பொருளிலிருந்து நீங்கள் அவர்களுக்கு கொடு(த்து
உதவி செய்யு)ங்கள். திருக்குர்ஆன்:- 24:33
புயல், வெள்ளம், பேரலை போன்ற இயற்கை சீற்றங்களால்
மக்கள் பாதிக்கப்படும்போது, பல்வேறு இழப்பீடுகளையும் நிவாரண உதவிகளையும் அரசு
வழங்குகிறது. தன்னார்வத் தொண்டர்களும் சிரமப்படுவோருக்கு
சிலதை மனமுவந்து வழங்கி உதவுகின்றனர்.
தமிழக அரசு தற்போது மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூ நிவாரண நிதியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கும் அரசு போதிய நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற பேரிடர் காலங்களில் இஸ்லாமியர்கள் ஜாதி, மத பேதமின்றி சேவைகள் செய்து கொண்டிருப்பதை உலகம் கண்டு வருகிறது. இது குறித்து, பிற சகோதர சமயத்தவர்கள் கூறிய சான்றுகள் ஏராளம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( وَمَنْ
كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ
مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ
الْقِيَامَةِ ) யார் தம் சகோதரனின்
தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும்
ஈடுபட்டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக
அவரைவிட்டு அல்லாஹ் மறுமைநாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். அறிவிப்பாளர்:-
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2442, முஸ்லிம்-5036
நிதி திரட்டுதல்
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு நாள்) நாங்கள் முற்பகல்
நேரத்தில் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத,
(அரை) நிர்வாணிகளான,
வட்டமாய் கிழிந்த "கம்பளி ஆடை" அல்லது
"நீளங்கி" அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக
நபியவர்களிடம் வந்தார்கள். அவர்கள் "முளர்" குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட நபியவர்களது முகம் நிறமாறிவிட்டது.
உடனே நபியவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு (கொடுப்பதற்கு
அங்கு ஒன்றும் இல்லாததை அறிந்த பிறகு) வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும்
கூறினார்கள். நபியவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது (4:1 - 59:18 ஆகிய) சில இறைவசனங்களை
ஓதிக்காட்டி, (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது ( تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ مِنْ
دِرْهَمِهِ مِنْ ثَوْبِهِ مِنْ صَاعِ بُرِّهِ مِنْ صَاعِ تَمْرِهِ ) "(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு,
வெள்ளிக்காசு, துணி, ஒரு "ஸாஉ"
கோதுமை, ஒரு "ஸாஉ" பேரீச்சம்
பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்" என்று கூறி, ( وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ
) "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்" என்று வலியுறுத்தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும்
ஆடைகளிலிருந்தும் ஒரு "ஸாஉ" கோதுமையிலிருந்தும் ஒரு "ஸாஉ" பேரீச்சம்
பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்)
கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. பின்னர் தொடர்ந்து மக்கள்
(தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும்
ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது நபியவர்களது முகம்
பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.
நபியவர்கள், ( مَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ
عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ ) "யார் இஸ்லாத்தில்
ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின்
அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது" என்று
கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-1848
அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த வறியவர்களுக்கு கொடுத்து உதவுவதற்கு ஒன்றும் இல்லை. எனவே தான் நபியவர்கள், மக்களிடம் நிதி திரட்டி அந்த வறியோர்களின் தேவையைப் பூர்த்தி செய்தார்கள்.
மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசிடம் போதிய நிதி இல்லாத போது, அரசு தமது குடிமக்களிடம் அது பற்றி எடுத்துரைத்து
குடிமக்களிடம் வசூலித்து தேவையானவர்களுக்கு உதவ வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
பாரபட்சமின்றி
இமாம் அபூஹனீஃபா அவர்களின் மாணவரும் ஹனபீ மத்ஹப் இமாம்களில் முக்கியமானவருமான இமாம்
முஹம்மது பின் ஹசன் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது. மக்காவில் கடும் பஞ்சம்
ஏற்பட்ட நேரத்தில் அங்கு வாழ்ந்த ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்களை (மதீனாவிலிருந்து)
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். நூல்:- ஸைருல் கபீர்
அப்போது மக்காவில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்லர். மாறாக,
அருமை நாயகம் (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும்
துன்பத்திற்கு ஆட்படுத்தியதோடு, பிறந்த ஊரிலிருந்து
வெளியேற்றிய இணைவைப்பாளர்களே அவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் உதவிப் பொருள்களை அனுப்பி வைத்தார்கள். நூல்:- அல்அகல்லியாதுத் தீனிய்யா வல்ஹல்லுல்
இஸ்லாமி - யூசுஃப் அல்கர்ளாவீ
( أَمِيرُ
الْمُؤْمِنِينَ عُمَرُ بْنُ الْخَطَّابِ
وَهُوَ فِي الشَّامِ يَمُرُّ عَلَى قَوْمٍ مِنَ النَّصَارَى مَجْذُومِينَ
قَدْ لَفَظَهُمْ الْمُجْتَمَعُ، وَقَلَاهُمْ الْقَاصِي وَالدَّانِي، فَأَمَرَ أَنْ
يُعْطُوا مِنْ الصَّدَقَاتِ، وَأَنْ يُجْرَى عَلَيْهِمْ الْقُوتُ )
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சிரியா நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின் வழியில், கிறிஸ்தவர்களில்
ஒரு குழுவினருக்கு தொழுநோய் ஏற்பட்டு அவர்கள்,
மக்களால் வெறுக்கப்பட்டு ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாக முகாம்களில் தங்கியிருந்தபோது, அவர்களை கடந்து செல்லும் சந்தர்ப்பம்
ஏற்பட்டது. அம்மக்களின் அவலத்தைக் கண்ட ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களின்
(பைத்துல் மால்) பொது நிதியிலிருந்து அவசரக்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்கள்.
உடனே அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. நூல்:- அல்அகல்லியாதுத் தீனிய்யா வல்ஹல்லுல்
இஸ்லாமி - யூசுஃப் அல்கர்ளாவீ
பேரிடரில் சிக்கிக்கொண்டவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு நிவாரண நிதியாக நாம்மால் முடிந்தவரை
எதையாவது வழங்கி அவர்களை வாழ வைக்க வேண்டும்.
தனி நபர் அக்கறை
ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவர் இடக்கரத்தால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதைக்கண்ட ஜனாதிபதி அவர்கள், ( يَا عَبْدَ اللَّهِ كُلْ بِيَمِينِكَ ) “அல்லாஹ்வின் அடிமையே! நீர் உமது வலக்கரத்தால் சாப்பிடுவீராக” என்றார்கள்.
அதற்கு அவர், ( أُصِيبْتُ يَوْمَ مُؤْتَةَ فَعَجَزَتْ عَنْ الْحَرَكَةِ ) “மூத்தா போரில் என்
வலது கையில் காயப்பட்டுவிட்டது. அதனால் இயங்க இயலாத நிலைக்குப் போய்விட்டது” என்றார்.
இதைக் கேட்டவுடன் ஜனாதிபதி அவர்கள் அவர் நிலை கண்டு அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
பிறகு, ( مَنْ يُوَضِّئُكَ ؟ ) “நீர் உளூ செய்வதற்கு யார் உதவி செய்கிறார்?” ( وَمَنْ يُغْسَلُ لَكَ ثِيَابُكَ ؟ ) “உமது துணிகளை யார் துவைத்து தருகிறார்?” ( وَمَنْ يُغْسَلُ لَكَ رَأْسُكَ ؟ ) “நீங்கள் குளிப்பதற்கு யார் உதவுகின்றார்?” ( وَمَنْ . . . وَمَنْ . . . ؟ ) இதற்கு யார்? அதற்கு யார்?” என்று (அன்றாட அலுவல்களை) விசாரித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு, அவருக்கு ஒரு பணியாளர், (முறையான) வாகனம், உணவு ஆகியவற்றை கொடுக்க உத்தரவிட்டார்கள். நூல்:- அல்ஃபாரூக் - அல்லாமா ஷிப்லி நுஅமானீ, இன்த மா இல்தகைத்து உமர் இப்னு கத்தாப் (ரலி) ( عند ما التقيت عمر بن الخطاب ) டாக்டர் அத்ஹம் ஷர்காவீ
அரசின் அவசரகால உதவி என்பது மனிதர்களில் பலருக்கு அல்லது ஓரிரு நபர்களுக்கு தேவைப்பட்டாலும் அதை உடனடியாக நிறைவேற்றிய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
முதியோர் நிதி
ஜனாதிபதி அபூபக்ர்
(ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஹைராவை வெற்றி கொண்டபோது அந்த மக்களுடன்
செய்து கொண்ட ஒப்பந்தமாவது:
யாரேனும் உங்களில் ஒருவர் முதுமை அடைந்துவிட்டால், பணியாற்ற முடியாத நிலைகள் இருந்தால், அல்லது பெருத்த அபாயத்தில் மாட்டிக் கொண்டால், அல்லது முன்பு செல்வந்தராக இருந்து இப்போது வறியவராக
ஆகிவிட்டால் அவர் மீதான ஜிஸ்யா வரி தள்ளுபடி செய்யப்படும். மேலும், அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் முஸ்லிம்களின்
பொது நிதியிலிருந்து அன்றாடச் செலவினங்கள் வழங்கப்படும். முஸ்லிம்களுடைய நாட்டில் அவர்
இருக்கும் வரைக்கும், இந்த உதவி தொகை அவருக்கு
வழங்கப்படும். முஸ்லிம்களை நாட்டை விட்டு அவர் வேறு நாட்டுக்கு சென்று விட்டால் முஸ்லிம்கள்
அவருக்கு உதவித்தொகை தரத் தேவையில்லை. நூல்:- உஸ்வயே ஸஹாபா
இஸ்மாயீல் பின் அபீ காலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள்.
அப்போது வயதான, ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள். உமர் (ரலி) அவர்கள்
அவரிடம் சென்று, ( مَالك يَا شَيْخُ؟ ) “பெரியவரே!
உங்களுக்கு என்ன ஆனது? (ஏன் யாசகம் கேட்கிறீர்கள்?)” என்று வினவினார்கள்?
அதற்கு அவர், ( أَنَا يَهُودِيٌّ وَأَتَسَوَّلُ لِأَدْفَعَ الْجِزْيَةَ
) “நான் ஒரு யூதன். (உங்களின் அரசுக்கு) ஜிஸ்யா வரி கட்டுவதற்குத்
தான் (மக்களிடம்) யாசகம் கேட்கிறேன்” என்றார்.
உமர் (ரலி) அவர்கள் (அவர்மீது இரக்கப்பட்டவர்களாக), ( مَا انْصَفْنَاكَ انْ كُنَّا اخْذْنَا مِنْكَ
الْجِزْيَةَ فِي شَبِيبَتِكَ ثُمَّ ضَيَّعْنَاكَ فِي كِبْرِكَ ) “உங்கள் இளமைக் காலத்தில்
நாங்கள் உங்களிடமிருந்து ஜிஸ்யா வரியைப் பெற்றுக்கொண்டு, உங்கள் முதுமையில் உங்களைப் புறக்கணித்தால் நாங்கள் உங்களுக்கு நியாயமாக இருக்க
மாட்டோம்” என்று கூறினார்கள்.
பின்னர் அவர் செலுத்தவேண்டிய ஜிஸ்யா வரியை தள்ளுபடி செய்து, அவருக்கு உதவியாக, அரசுக் கருவூலத்தில் இருந்து பணம் கொடுத்து உதவினார்கள்.
பின்னர் உமர் (ரலி) அவர்கள் ( لَوْ مَاتَ جَمَلٌ ضَيَاعًا عَلَى شَطِّ
الْفُرَاتِ، لَخَشِيتُ أَنْ يَسْأَلَنِي اللَّهُ عَنْهُ ) “யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு ஒட்டகம் இறந்து போயிருந்தாலும், (அது ஏன் இறந்து போனது? என்று) அல்லாஹ் அது குறித்து என்னிடம் கேட்பான் என்று நான் அஞ்சுகிறேன்” என்று
கூறினார்கள். நூல்:- அல்அம்வால் - இமாம் அபூ
உபைத் அல்காசிம் பின் சலாம், ஜாமிஉல் அஹாதீஸ் - இமாம் சுயூத்தீ, அஹ்காம் அஹ்லுத்திம்மி -இமாம் இப்னு கய்யிம், அன்சாபுல் அஷ்ராஃப் இமாம்
பிலாதுரீ, கன்ஸுல் உம்மால்
இழப்பீட்டுத் தொகை
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் படையினர் பைத்துல் முகத்தஸ் நெருங்கிய நேரத்தில்
அப்படையிலிருந்த சிலர் பசியின் காரணமாக அருகிலிருந்த ஒரு கிறிஸ்துவரின் தோட்டத்திற்குள்
புகுந்து அங்குள்ள திராட்சைப் பழங்களை சாப்பிட்டு விட்டனர். அந்த கிறிஸ்தவர் இது பற்றி
உமர் (ரலி) அவர்களிடம் புகார் தெரிவித்தார். உடனே உமர் (ரலி) அவர்கள் அங்கு வேகமாக
வந்தபோது அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு திராட்சைப்பழங்களை தலையில் சுமந்து கொண்டு வந்தார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், ( وأَنتَ أيضًا يا أبا هريرة؟ ) "அபூஹுரைரா! நீங்கள்
மீண்டுமா இவ்வாறு செய்வது?" என்று கேட்டபோது,
அபூஹுரைரா (ரலி) அவர்கள், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَصَابَتْنَا
مَخْمَصَةٌ شَدِيدَةٌ )
"ஜனாதிபதி அவர்களே! கடும் பசியினால்
நாங்கள் இப்படி செய்துவிட்டோம்" என்று காரணம் கூறினார். பிறகு உமர் (ரலி) திராட்சைத்
தோட்டத்தின் உரிமையாளரை வரவழைத்து, அவருடைய பயிரின் விலையை
மதிப்பிடுமாறு கூறி, அதன் விலையைக் கொடுத்தார்கள். நூல்:- தாரீக் திமிஷ்க் இப்னு
அசாகிர்
சாலைகள் அமைப்பதற்கு, இரயில் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கு, பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் அமைப்பதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கு
மக்களின் இடங்களை அரசு கையகப்படுத்துகின்றபோது அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை அரசு
மக்களுக்கு முறையாக வழங்கவேண்டும். சுருங்கக்கூறின்: அரசு, மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றபோது, அரசு அதற்குரிய இழப்பீட்டை
வழங்க முன்வர வேண்டும்.
தகுதி வேண்டும்
ஸுபைர் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களின் மகள்கள் இருவரில் உம்முல் ஹகம்
(ரலி), அல்லது ளுபாஆ (ரலி) அவர்கள்
கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சில கைதிகள் கொண்டு வரப்பட்டனர். அப்போது,
நான் எனது சகோதரி மற்றும் அண்ணல் நபி (ஸல்)
அவர்களின் அன்பு மகள் ஃபாத்திமா (ரலி) ஆகிய மூவரும் அண்ணலாரிடம் சென்று எங்களின் சிரமங்களைச்
சொல்லி கைதிகளில் சிலரை பணிவிடைக்காக கேட்டோம். அதற்கு அண்ணலார், ( سَبَقَكُنَّ يَتَامَى بَدْرٍ ) "(அடிமைகளைப் பெறுவதற்கு) உங்களைவிட பத்ருடைய (போரில் வீர மரணமடைந்தவர்களின்
குழந்தைகளான) அநாதைகள் தகுதி பெற்றவர்கள்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2987
தம்மிடம் எது கேட்டு வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கும் வள்ளல் பெருமானார்
(ஸல்) அவர்கள், தனக்கோ தமது குடும்பத்தினருக்கோ
பொது நிதியிலிருந்து எடுத்து கொள்ளமாட்டார்கள். அவ்வாறு எடுத்துக் கொடுத்தாலும் யாரும்
கேட்க போவதில்லை. இருந்தாலும் கூட அரசு நிதியைப் பெற தகுதி வேண்டும் என்பது நபியவர்களின்
நிலைப்பாடு.
பேரிடர் காலங்களில் அரசாலும், பொதுமக்களாலும் வழங்கப்படும் நிவாரண நிதிகளை பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் வாங்குவது (ஹலால்) அனுமதிக்கப்பட்டதாகும். பாதிக்கப்படாதவர்கள், வழங்கப்படும் நிவாரண நிதிகளை வாங்காமல் இருப்பதே சிறந்ததாகும். மேலும், வாங்கியவர்களே மீண்டும் மீண்டும் வாங்குவதும் முறையல்ல. அது, வழங்குபவர்களை ஏமாற்றுவதாகும். கவர்மெண்ட் காசு தானே அல்லது இலவசமாகக் கொடுக்கப்படுவது தானே என்று வியாக்கியானம் பேசுவது சரியல்ல. பாதிக்கப்படாதவர்கள் முந்திக்கொண்டு வாங்கிவிடும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் போய்விடலாம். இது ஒரு வகையில் அநீதியாகும்.
எந்த காலத்திலும் எந்தவொரு நிவாரண நிதிகளையும் பெற, தகுதி வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.
அரசு வழங்கும் நிதியை வாங்கலாமா?
ஒருமுறை அலீ (ரலி) அவர்களிடம், "அரசு தருகின்ற மானியங்களை வாங்கிக் கொள்ளலாமா?" என்று கேள்வி கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள்,
"பரவாயில்லை அது தவறல்ல. தடுக்கப்பட்ட
(ஹராமான) வருமானத்திலிருந்து தருவதைவிட அதிகமானது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வரவிலிருந்தே அரசு உங்களுக்கு அதை வழங்குகிறது. எனவே,
பெற்றுக்கொள்ளலாம்" என்றார்கள். நூல்:- ஃபிக்ஹுல்
அவ்லவிய்யாத் யூசுஃப் அல்கர்ளாவீ
அரசு ஒன்றை அனைவருக்குமான அன்பளிப்பாக (தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய தினங்களில்
வழங்கின்ற அன்பளிப்பு) அறிவித்து, சட்டபூர்வமாக பகிரங்கமாக
தரும்போது அதை வாங்காமல் இருப்பதால் அது தவறானவர்களின் கைகளுக்குச் சென்றுவிட வாய்ப்பு
உண்டு. மேலும், இது நம்முடைய பணம்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, ஒருவர் அரசின் எந்த
சலுகையும் பெறவில்லையென்றால், அடுத்தடுத்து அவர்
அவசியமான ஏதேனும் ஒரு விஷயத்திற்கு அரசிடம் கோரிக்கை வைத்தாலும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்படும்
அபாயம் உள்ளது என அரசுத்துறையில் அனுபவமானவர்கள் எச்சரிக்கிறார்கள்.
வசூல் மோசடி
பேரிடர் போன்ற அவசர காலங்களில், மக்களுக்காக என்று வசூலிப்பவர்கள் வசூலிக்கப்பட்ட முழு தொகையையும் மக்களுக்காகவே
செலவளித்தாக வேண்டும். பிற்காலத்திற்கென்று கொஞ்சத்தை எடுத்து வைத்துக்கொள்வது சரியல்ல. அல்லது நாங்கள் தானே சிரமப்பட்டு வசூலித்தோம் என்று கூறி வசூலித்தவர்கள்
அதிலிருந்து ஒரு தொகையை கையாடல் செய்வது பாவமான காரியம் ஆகும்.
வசூலித்தவர், பேரிடரில் பாதிக்கப்பட்டவரில்
ஒருவராக இருந்தால், அந்த மக்களில் ஒவ்வொருவருக்கும் என்ன தொகை வழங்கப்பட்டதோ அதே தொகை
இவர் எடுத்துக்கொள்வது தவறல்ல. மாறாக, அதைவிட கொஞ்சம் கூடுதலாக எடுத்தாலும் அது, (ஹராம்) தடுக்கப்பட்டதாகும்.
புயல், வெள்ளம், பேரலை போன்ற பேரிடர் காலங்களில்
சிலர், மக்களின் பெயரைச் சொல்லி வசூலித்துவிட்டு, அந்த தொகையிலிருந்து சிறிதளவு பாதிக்கப்பட்ட
மக்களுக்கு கொடுத்துவிட்டு, பெருமளவை தமக்கென்று
சுருட்டிக்கொள்கிறார்கள். ஆனாலும்,
தம்மை தன்னார்வ தொண்டர்களாகக்
காட்டிக் கொள்கிறார்கள். பேரிடர் காலங்கள் என்பது வசூல் கொள்ளையர்களான இவர்களுக்கு
வசந்த காலமாகிவிடுகிறது.
எனவே, நாம் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
புயல், வெள்ளம், பேரலை போன்ற பேரிடர் காலங்களில் சிலர், மக்களின் பெயரைச் சொல்லி வசூலித்துவிட்டு, அந்த தொகையிலிருந்து சிறிதளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துவிட்டு, பெருமளவை தமக்கென்று சுருட்டிக்கொள்கிறார்கள். ஆனாலும், தம்மை தன்னார்வ தொண்டர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். பேரிடர் காலங்கள் என்பது வசூல் கொள்ளையர்களான இவர்களுக்கு வசந்த காலமாகிவிடுகிறது.
ReplyDeleteஇந்த எழுத்துக்கள் சாட்டையடி!.