விளம்பர விரும்பிகள்
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا
كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا
அவர்கள் (நயவஞ்சகர்கள்) தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள்.
அவர்கள் மக்களுக்குக் காட்டு(வதற்காகவே தொழு)கிறார்கள். அவர்கள் குறைவாகவே தவிர அல்லாஹ்வை
நினைவு கூர்வதில்லை. திருக்குர்ஆன்:- 4:142
இவ்வுலகில் புகழுக்கும் முகஸ்துதிக்கும் அடிமையாகாதவர்கள் மிகக் குறைவு. பிறர்
தன்னைப் புகழ்வதை சிறு பிள்ளையும் விரும்புகிறது. தான் செய்த சேவையைப் போற்றி புகழ்ந்துரைப்பதை
பெரியவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தாம் தர்மசீலர் என்று ஏழைகளின் வாய் சொல்லாதா? என செல்வந்தர்கள் ஆசைப்படுகின்றனர். மக்களின் தலைவர், பொதுநல வீரர் என்று மக்கள் தன்னை மக்கள் புகழ மாட்டார்களா?
என்று அரசியல்வாதிகள் அலைகிறார்கள். உபதேசம் செய்யும்
அறிஞர்கள் பிறர் தம்மை புகழ வேண்டும் என்றும், விஞ்ஞானி தான் கண்டுபிடித்த நூதன கருவியின் மூலமும்,
எழுத்தாளர் தன் எழுத்து வன்மையை மூலமும் பிறர் புகுந்துரைப்பதை
விரும்புகின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு துறைகளும் உயர்ந்திருப்பவர்கள் தங்கள் செயல் திறனுக்காக இந்த உலகம்
புகழ வேண்டும் என்பதை தினமும் எதிர்பார்க்கின்றனர். பிறரின் புகழுக்காகவும்,
முகஸ்துதிக்காகவும் செய்த நற்செயல்கள் இறைவனிடம்
ஒப்புக்கொள்ளப்படாது. பழைய கந்தல் துணியை போன்று மதிப்பற்றதாக ஆகிவிடும்.
இறைத்தூதரின் எச்சரிக்கை
எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகின்றானோ நாம் அவனுக்கும் அதிலிருந்து
ஓரளவு கொடுக்கின்றோம். அவனுக்கு மறுமையில் எவ்வித பாக்கியமுமில்லை. திருக்குர்ஆன்:-
42:20
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَنَا
أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلاً أَشْرَكَ فِيهِ مَعِي
غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ ) வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: நான் இணைவைப்பவர்களை விட்டும் இணைவைப்பதை
விட்டும் அறவே தேவையற்றவன். எவரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும்,
பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால் அவனையும் அவனது
இணைவைப்பையும் (தனியே) விட்டு விடுவேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-
முஸ்லிம்-5708
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ، وَمَنْ
يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ ) எவர் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர்
(உடைய) நோக்கம் பற்றி அல்லாஹ் மறுமை நாளில் விளம்பரப்படுத்துவான். எவர் முகஸ்துதிக்காக
நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமைநாளில் அம்பலப்படுத்துவான். அறிவிப்பாளர்:-
ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல் புகாரி-6499, திர்மிதீ-2303, இப்னுமாஜா-4196
எந்த மனிதர் பெயருக்காகவும், புகழுக்காகவும் நற்செயல்
புரிகிறாரோ அவருக்கு அல்லாஹ் இவ்வுலகில் அந்த பெயரையும், புகழையும் வழங்கிவிடுவான். மறுமையில் எந்த பலனும் அவருக்கு கிடைக்காது
என்பது திருமறையின் கூற்று.
தாம் செய்கின்ற எந்த செயலையும் அல்லாஹ்வின் உவப்பை பெற வேண்டும் என்ற தூய்மையான
எண்ணத்தோடுதான் செய்ய வேண்டும். அதை விடுத்து அல்லாஹ் அல்லாதவரின் நெருக்கத்தைப் பெற
வேண்டும் என நாடி, நற்செயல் ஒன்றை ஒருவர்
செய்தால் அது மறைமுகமான இணைவைப்பாகிவிடும். அல்லாஹ்வை வைக்க வேண்டிய இடத்தில் மற்றவரை
வைப்பதானது இணைவைப்பாகும். அந்தச் செயலுக்கு அல்லாஹ்விடம் எந்த பயனும் கிடைக்காது என்பதுடன்
குற்றவாளியும் ஆவார்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( يَا أَيُّهَا النَّاسُ ! إِيَّاكُمْ وَشِرْكَ
السَّرَائِرِ ) "மனிதர்களே! இரகசியமான இணைவைத்தல் பற்றி உங்களை எச்சரிக்கிறேன்"
என்று கூறினார்கள். அப்போது நபி தோழர்கள், "நாயகமே! இரகசியமான இணைவைத்தல்
என்றால் என்ன?" என்று வினவினர். நபியவர்கள்,
( يَقُومُ
الرَّجُلُ فَيُصَلِّي فَيُزَيِّنُ صَلاتَهُ لِمَا يَرَى مِنْ نَظَرِ النَّاسِ
إِلَيْهِ، فَذَلِكَ شِرْكُ السَّرَائِرِ ) "ஒருவர் தொழுகிறார். பிற மக்கள் தன்னை பார்த்து புகழ்ந்திட
வேண்டும் என்பதற்காக முயற்சித்து தன் தொழுகையை அழகாக்குகிறார். இதுவே, சிறிய இணைவைத்தல் ஆகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்:- மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு குஸைமா-896,
ஸஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-28
வழிபாடுகளில் மிகச் சிறந்ததும் மகத்துவ மிக்கதுமான தொழுகை விஷயத்தில் நயவஞ்சகர்களின்
நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.
நயவஞ்சகர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் அதை நிறைவேற்றுவதற்கு சடைவோடு தான் எழுந்து
நிற்பார்கள். அவர்கள் இறைவனின் உவப்பைப் பெற வேண்டும் என்ற எண்ணமோ அதைப்பற்றிய அக்கறையோ
இறையச்சமோ அறவே இருக்காது. தொழுகையின் தத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
அன்றைய நயவஞ்சகர்கள் இறைஉவப்பை நாடாமல் பிற மக்களிடம் பெயரும் புகழும் சம்பாதிப்பதற்காகவே
தொழுகை போன்ற நற்செயல்களை செய்து வந்தனர். அவர்களைப் போல் எந்த ஒரு மனிதன் செயல்பட்டாலும்
அவனிடமும் நயவஞ்சகத்தன்மை முளைத்துவிட்டது என்று விளங்குகிறது.
அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம்
வந்து, "நாயகமே! ஒரு மனிதர்
போரில் கிடைக்கும் செல்வங்களுக்காக போரிடுகிறார். மற்றொருவர் தமது திறமையைப் பிறர்
பார்க்கட்டும் என்பதற்காக போரிடுகிறார். இவர்களின் எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்?"
என்று வினவினார். நபியவர்கள், ( مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا فَهُوَ فِي سَبِيلِ
اللَّهِ ) "அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காக போரிட்டவரே
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவராவார்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-2810,
முஸ்லிம்-3862
பிறர் பார்வைக்காக
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்
எங்களிடம் வருகை தந்தார்கள். அப்போது நாங்கள் மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றி விவாதித்துக்
கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ( أَلاَ أُخْبِرُكُمْ بِمَا هُوَ أَخْوَفُ
عَلَيْكُمْ عِنْدِي مِنَ الْمَسِيحِ الدَّجَّالِ ) "மஸீஹுத் தஜ்ஜாலைவிட நான் உங்களின் மீது அதிகமாகப் பயப்படும்
விஷயம் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று வினவினார்கள்.
அதற்கு நாங்கள், "ஆம் (அறிவியுங்கள்)"
எனக் கூறினோம். அப்போது நபியவர்கள், ( الشِّرْكُ الْخَفِيُّ أَنْ يَقُومَ الرَّجُلُ
يُصَلِّي فَيُزَيِّنُ صَلاَتَهُ لِمَا يَرَى مِنْ نَظَرِ رَجُلٍ
) "அது மறைமுகமான இணைவைத்தல்
ஆகும். அதாவது, ஒரு மனிதர் தொழுவதற்காக
நிற்கிறார். அப்போது தம்மைப் பிறர் பார்க்கிறார் என்பதற்காக தம் தொழுகையை அழகுபட நிறைவேற்றுகிறார்"
என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-4194, ஹாகிம், ஷுஅபுல் ஈமான் இமாம்
பைஹகீ
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் தன்னை பார்க்கும்போது அழகிய
முறையிலும், தான் மட்டும் தொழும்போது
குறையோடும் ஒருவர் தொழுதால் அது ஓர் அலட்சியமாகும். அதன் மூலம் வல்லமையும் மாண்புமிக்க
இறைவனை அவர் அலட்சியப்படுத்துகிறார். நூல்:-
பைஹகீ
ஒரு நற்செயலில் ஈடுபடும்போது அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவது, மற்றும் மக்களிடம் பாராட்டுப் பெறுவது நோக்கமாக
இருக்குமாயின் அந்த செயலும் வீணாகிவிடும். கூட்டாக செய்தாலும் சரி, தனியாகத் தொழுதாலும் சரி எப்போதும் முகமலர்ச்சியுடன்
பேரானந்தத்துடன் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், தொழுபவர் அல்லாஹ்விடம் உரையாடுகிறார். அவருக்கு முன்னால் அல்லாஹ்
இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.
ஒருவர் மனத்தூய்மையுடன் ஒரு நற்செயலை நிறைவேற்றி முடித்தார். பின்னர் அந்த மனிதர்
அதைப்பற்றி பிறரிடம் சிலாகித்து பேசிவிட்டால் இந்த நிலை வருந்தத்தக்கது. மற்றொருவர்
மனத்தூய்மையுடன் ஒரு நற்செயலை ஆரம்பித்தார். இடையில் பிறருடைய பாராட்டுதலைப் பெற வேண்டும்
எனும் நோக்கமாக அது மாறிவிட்டதெனில் அந்தச் செயலும் ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றுவது
போல் வீணாக போய்விடும். எனவே, விழிப்புடன் செயல்பட
வேண்டும்.
நீ பொய் சொல்கிறாய்!
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமைநாளில் மக்களில் இறைவழியில் உயிர்த்தியாகம்
செய்தவரை கொண்டு வரப்பட்டு விசாரணை செய்யப்படும்போது, அவர், "இறைவா! உனக்காக நான்
அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன்,
( كَذَبْتَ
وَلَكِنَّكَ قَاتَلْتَ لأَنْ يُقَالَ جَرِيءٌ فَقَدْ قِيلَ ) "நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த்தியாகம்
செய்யவில்லை) மாவீரன் என்று (மக்களிடையே) பேசுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு
விட்டது. (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)" என்று கூறுவான். பிறகு இறைக்கட்டளைப்படி
அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு ஒரு மார்க்க அறிஞரை கொண்டுவரப்பட்டு விசாரணை செய்யப்படும்போது அவர் (இறைவா!)
நானும் கல்வியை கற்று, பிறருக்கும் அதைக்
கற்றுக் கொடுத்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன்,
( كَذَبْتَ
وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ فَقَدْ قِيلَ ) "நீ பொய் சொல்கிறாய். எனக்காக கல்வியை கற்கவும் இல்லை;
கற்பிக்கவும் இல்லை. அறிஞர் என்று (மக்களிடையே)
சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, நீ கல்வி கற்றாய்.
அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது.)" என்று கூறுவான்.
பிறகு இறைக்கட்டளைப்படி அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு பெரும் செல்வந்தர் ஒருவரை கொண்டுவரப்பட்டு விசாரணைச் செய்யப்படும் போதும்
அவர், "(இறைவா!) நீ விரும்பிய
எல்லா வழிகளிலும் நான் உனக்காக எனது பொருளை செலவிட்டேன்" என்று கூறுவார். அதற்கு
இறைவன், ( كَذَبْتَ وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ . فَقَدْ قِيلَ
) "நீ பொய் சொல்கிறாய். இவர்
ஒரு கொடையாளி என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். அவ்வாறு
சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது.)" என்று கூறுவான். பிறகு
இறைக்கட்டளைப்படி அவர் நரகத்தில் எறியப்படுவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்:- முஸ்லிம்-3865, திர்மிதீ-2382
நற்செயல் புரியும் பேற்றினைப் பெற்றிருப்பவர்கள் இந்த நபி மொழியில் கூறப்பட்டிருக்கும்
கருத்தை நன்கு சிந்திக்க வேண்டும். வீரம், ஞானம், தர்மம் போன்ற நற்செயல்களில்
தீய எண்ணங்கள் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை இது தெளிவுபடுத்துகிறது.
எந்த ஒரு நற்செயலாயிருந்தாலும் அது இறைவணக்கமாகட்டும், கொடுக்கல் வாங்கலாகட்டும், சமூக சேவையாகட்டும் எதுவாயிருந்தாலும் சரி, பெயர் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணமோ, ஒரு குழுவினரிடமிருந்து அல்லது தனி மனிதரிடமிருந்து
பாராட்டைப் பெற வேண்டுமென நோக்கமோ தூண்டுதலோ இருக்குமாயின் இறைவனிடம் அச்செயலுக்கு
சிறிதும் மதிப்பிருக்காது.
தனது புகழ் மேலோங்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு மனிதனின் செயல்களில் வெளிப்படுமாயின்
அந்த மனிதனின் உடலில் ஒரு நோய்க்கிருமி புகுந்து விட்டதாகவே எண்ண வேண்டும். கரையான்கள்
தங்களோடு தொடர்பு கொள்ளும் பொருள்களை மெதுவாக அழித்துவிடுவதைப் போல் முகஸ்துதி எனும்
நோய்க்கிருமி அம்மனிதன் செய்த எல்லா நற்செயல்களையும் பயனற்றவையாக ஆக்கி விடுகின்றது.
பள்ளிவாசல் மற்றும் தர்கா போன்ற இடங்களில் ஃபேன், லைட்டு, பீரோ இது போன்ற அங்கு
பயன்படுத்தப்படும் பொருள்கள் குர்ஆன் மற்றும் மார்க்க சம்பந்தமான நூல்களில் தனது பெயரை
இன்னார் "வக்ஃப்" செய்தது என்று சிலர் குறித்து வைத்திருப்பார்கள். அல்லது
இறந்துவிட்டவரின் பெயரை அதில் எழுதிவிட்டு, "இன்னாருக்கு பிரார்த்தியுங்கள்" என்று குறித்து வைத்திருப்பார்கள்.
இதுபோன்ற வக்ஃப் செய்யும் பொருள்களின் பெயரைக் குறிப்பிடுவதின் மூலம் இறைவனை உவப்பைப்
பெறமுடியாது. ஏனெனில், இதுவெல்லாம் முகஸ்துதி
என்றே கருதப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جُبِّ الْحُزْنِ ) “ஜுப்புல் ஹுஸ்னை விட்டு(க்
காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள்" என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள்,
"நாயகமே! ஜுப்புல் ஹஸன் என்றால்
என்ன?" என்று வினவினர். நபியவர்கள், ( وَادٍ فِي جَهَنَّمَ تَتَعَوَّذُ مِنْهُ
جَهَنَّمُ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ ) "(அது) நரகத்திலுள்ள ஒரு ஓடையாகும். அதைவிட்டுக் காக்குமாறு
நரகத்தின் பிறப் பகுதிகள் தினமும் நூறு முறை பாதுகாவல் தேடுகிறது" என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், "நாயகமே! அதில் எவர்
புகுவார்?" என்று வினவினர். நபியவர்கள்,
( الْقُرَّاءُ
الْمُرَاءُونَ بِأَعْمَالِهِمْ ) "தம் (நற்)செயல்களை புகழ்ச்சிக்காகச் செய்கின்ற குர்ஆன் அறிஞர்கள்" பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2305
புகழுக்காக ஒரு செயல் ஒரு நற்செயல் புரிவது இறைவனின் தண்டனையை வழிந்து அழைப்பது
போன்றதாகும். இதனால் இறைக்கோபம் பொங்கியெழுகிறது. நற்செயல்களில் சிறிதளவு முகஸ்துதி
கலந்துவிட்டாலும் இறைவனிடம் அதற்கு மதிப்பு இருக்காது. அச்செயல் பார்ப்பதற்கு எவ்வளவு
நல்லதாக தோன்றினாலும் சரியே! மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் அந்த நற்செயல் எல்லாம்
செல்லாக் காசாகத்தான் கருதப்படும். அந்த நற்செயலை செய்ததற்காக இறைவன் அம்மனிதரை இழிவுபடுத்தி, பெரும் குற்றவாளியைப் போல் மிகக் கொடிய நரகத்தில் தள்ளிவிடுவான்.
இறைநம்பிக்கையில் பலவீனம்
இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல் மனிதர்களுக்கு காண்பிப்பதற்காகத் தனது செல்வங்களை செலவு
செய்பவனைப் போன்று (தர்மம் செய்ததைச்) சொல்லிக் காட்டியும் (மனதை) புண்படுத்தியும்
உங்களுடைய தர்மத்தை பாழாக்கி விடாதீர்கள். திருக்குர்ஆன்:- 2:264
மனிதர்களுக்கு காண்பிப்பதற்காக தர்மம் செய்பவர் வெளிப்படையில் அல்லாஹ்வுக்காக தர்மம்
செய்வதைப் போன்ற தோற்றத்தை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவார். உண்மையில் மனிதர்கள்
அவரைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தர்மம் செய்வார். உயர் பண்புகளால் மக்களிடம்
பிரபலமாகி எல்லோரும் தனக்கு நன்றி செய்ய வேண்டும் என்பதற்காக அல்லது கொடை வள்ளல் என்று
மக்கள் அவரைப் போற்ற வேண்டும் என்பதற்காக தர்மம் செய்வார். இத்தகைய நோக்கத்தோடு தர்மம்
செய்யும் அவர் அல்லாஹ்வின் உவப்பையும் மற்றும் உயர்ந்த பண்பையும் கவனிப்பதில்லை. இதனால்
தான் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல்" என்று இத்தகையோரைக் குறித்து
அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ( إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ
الشِّرْكُ الأَصْغَرُ ) "உங்கள் விஷயத்தில் நான் அதிகமாக பயப்படுவது சிறிய
இணைவைப்பைத்தான்" என்று கூறினார்கள். நபித்தோழர்கள், "நாயகமே! சிறிய இணைவைப்பு என்றால் என்ன?" வினவினர். நபியவர்கள், ( الرِّيَاءُ يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ إِذَا
جُزِيَ النَّاسُ بِأَعْمَالِهِمْ اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ
في الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً ) "அது முகஸ்துதி ஆகும். மறுமைநாளில் மனிதர்கள் தங்களுடைய
செயல்களுடன் கடந்து செல்லும்போது அவர்களிடம் அல்லாஹுத்தஆலா, "உலகில் நீங்கள் யாருக்கு காட்டுவதற்காக இந்த செயல்களை செய்தீர்களோ
அவர்களிடம் சென்று அவர்களிடமிருந்து ஏதேனும் பிரதிபலன் பெற முடியுமா? என்று பாருங்கள் என்பான்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- மஹ்மூது பின்
லபீத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, தஃப்சீர் இப்னு கஸீர்
யூசுஃப் வசனம்-106
முகஸ்துதி ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம், இறைநம்பிக்கையில் ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது
ஒருவனுக்கு உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதைவிட
மக்களின் அபிமானத்தை பெறுவதே அவனுக்கு பெரிதாகத் தோன்றும். இறை நம்பிக்கையில் ஏற்படும்
இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளை அவன் புறக்கணிக்கின்றான்.
இதே நேரத்தில் இந்த உலகில் கிடைக்கும் புகழுக்காக அவனது எண்ணம் அலை பாய்கிறது. இத்தகைய
எண்ணமே முகஸ்துதியில் அவனை வீழ்த்துகிறது.
கல்வியின் நோக்கம்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ
وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لاَ يَتَعَلَّمُهُ إِلاَّ لِيُصِيبَ بِهِ عَرَضًا
مِنَ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ ) யார் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் முகத்தை நாடி கற்க வேண்டிய மார்க்க
கல்வியை உலகத்தின் செல்வங்களை அடையும் நோக்கில் கற்கிறாரோ, அவர் மறுமைநாளில் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்.
அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3179
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ
الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ
النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ ) யார் கற்றோரிடம் விதண்டாவாதம்
புரிவதற்காகவும் அல்லது கல்லாதோரிடம் விளம்பரம் தேடுவதற்காகவும் அல்லது மக்களின் முகங்களைத்
தம் பக்கம் திருப்புவதற்காகவும் கல்வியைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் நரகத்தில் நுழையச்
செய்வான். அறிவிப்பாளர்:- கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2575
மார்க்கக் கல்வி ஞானத்தை அல்லாஹ்வுக்காக மட்டுமே கற்க வேண்டும். அல்லாஹ் அல்லாத
காரணங்களுக்காக கற்பது நரகத்திற்கு அழைத்துச் செல்லும் செயலாகும். மேலும், கற்பதும் மனத்தூய்மையோடு கற்க வேண்டும் என்றும்
இந்த நபிமொழி கூறுகிறது.
இறைவன் விரும்பும் கல்வியை தானும் கற்றுக் கொண்டு பிறகு கற்றபடி நற்செயல் புரிந்து,
பிற மக்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களும் கற்றபடி
நற்செயல் புரிந்து, அனைவரும் இறைநெருக்கத்தைப்
பெறுவதே நோக்கமாக இருக்க வேண்டும். மாறாக, இதன் மூலம் உலகச் செல்வத்தையும், பிற மக்களிடம் பெயரும் புகழும் சம்பாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டவருக்கு நரகமே
பொருத்தமான கூலியாகும். இறைவன் தன் பொருத்தத்திற்காக கல்வி கற்றுக்கொண்டவரை இம்மையிலும்
மறுமையிலும் கண்ணியப்படுத்துவான்; அதில் சந்தேகமில்லை.
மனத்தூய்மையும், அக்கறையும் அறிஞர்களிடம்
இல்லாமல் போய்விடுவதால் அவர்களுடைய திறமை ஒரு சாபக்கேடாகவே ஆகிவிடுகின்றது. அதனால்
சமுதாயம் முன்னேற்றத்தை காண்பதற்கு பதிலாக எந்த வளர்ச்சியுமின்றி ஸ்தம்பித்து நின்று
விடுகின்றது. அறிஞர்கள் தங்களுடைய நாவன்மை மற்றும் எழுத்து வன்மையின் மூலம் நல்ல கருத்துக்களை
மக்களிடம் எடுத்துரைத்த போதும் அதன் மூலம் மக்களிடம் பெரியதொரு சீர்திருத்தத்தை ஏற்படுத்த
முடியவில்லை. காரணம், அறிஞர்கள் மக்களின்
உவப்பை எதிர்பார்க்கின்றனர். இறைவனின் உவப்பையும் மறந்துவிட்டனர்.
தமது பொருள்களை செலவழித்துவிட்டு மக்களிடம் பெயரும் புகழையும் எதிர்பார்ப்பவர்களும்
உண்டு. தமது பொருள்களை எதற்காகவும் செலவழிக்காமல் வெட்டி பந்தா செய்து கொண்டு மக்களிடம்
பெயரும் புகழும் எதிர்பார்ப்பவர்களும் உண்டு.
இன்றைய அரசியல்வாதிகள் பாலம் கட்டுதல், கண்மாய் குளம் குட்டை தூர்வாருதல், புதிய சாலைகள் ஏற்படுத்துதல், இலவசம் மின்சாரம், இலவச வேட்டி சேலை வழங்குதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு
புக் பேனா சைக்கிள் வழங்குதல் இதுபோன்ற சில காரியங்களை மக்களின் வரிப்பணத்தின் மூலம்
செய்துவிட்டு, ஏதோ இவர்கள் தமது
சொந்தப் பணத்திலிருந்து இவற்றையெல்லாம் செய்தது போல் வெட்டி பந்தா செய்து கொண்டு,
என்னுடைய ஆட்சியில் தான் இந்த நற்பணிகள் செய்யும்
முடிந்தது என்று பிதற்றிக் கொண்டு பெருமையையும் புகழ்ச்சியையும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், சில பள்ளிவாசலின்
நிர்வாகிகள் பொதுமக்களின் சந்தா மற்றும் நன்கொடைப் பணம் அல்லது பள்ளிவாசலின் வாடகை,
கட்டிடம், தோட்டம் இவைகளின் மூலம் வரும் வருமானத்தை வைத்து பள்ளிவாசலை
பராமரித்துக்கொண்டு, ஏதோ தனது சொந்த வருமானத்தின்
மூலம் பள்ளிவாசலை பராமரிப்பது போலும், அதில் பணிபுரியும் இமாம், மோதினார் போன்றவர்களுக்கு
சம்பளம் கொடுப்பது போலும் எண்ணிக்கொண்டு இவர்களை ஏளனமாக பார்ப்பதும், அதட்டுவதும், மிரட்டுவதுமாக இருக்கின்றனர்.
இறைவனின் உவப்பைப் பெறுவதற்காக இறை இல்லத்தை பராமரிப்பவர்கள் இறை இல்லப் பணியாளர்களுக்கு
தக்க மரியாதை கொடுப்பார்கள். தற்புகழ்ச்சி தேட மாட்டார்கள்.
காப்பாற்றிக் கொள்ளும் வழிமுறை
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், ( يَا أَيُّهَا النَّاسُ، اتَّقَوْا هَذَا
الشِّرْكَ فَإِنَّهُ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ ) “மனிதர்களே எறும்பு ஊர்வதைவிட இரகசியமான இணைவைத்தலை அஞ்சுங்கள்” என்று கூறினார்கள். உடனே ஒருவர், "நாயகமே! எறும்பு ஊர்வதைவிட இரகசியமான ஒன்றை எப்படி அஞ்ச முடியும்? (வழி என்ன?) என்று கேட்டார். நபியவர்கள், ( اللَّهُمَّ إِنَّا نُعُوذُ بِكَ مِنْ أَنْ
نُشْرِكَ بِكَ شَيْئًا نَعْلَمُهُ، وَنَسْتَغْفِرُكَ لِمَا لَا نَعْلَمُهُ ) "இறைவா! நாங்கள் அறிந்து உனக்கு இணைவைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல்
தேடுகின்றோம். அறியாமல் செய்வதை விட்டும் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறோம் என்று பிரார்த்தியுங்கள்" என்றார்கள். அறிவிப்பாளர்:-
அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர்
யூசுஃப் வசனம்-106, ஸஹீஹ் அத்தர்ஙீபு
வத்தர்ஹீபு-33
ஒவ்வொருவரும் தம்மை முகஸ்துதியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அல்லும் பகலும் மேற்காணும்
பிரார்த்தனையை ஓதி வரலாம்.
நற்செயல்களின் பலன்களை அழிப்பதற்கு ஷைத்தான் முகஸ்துதியை ஆயுதமாக பயன்படுத்துகிறான்.
கண்ணுக்குப் புலப்படாத ஷைத்தானின் ஆயுத தாக்குதலில் இருந்து தம்மை காத்துக் கொள்வதற்கு
ஒரே வழி இறைவனிடம் சரணடைந்து அவனிடம் நம் இயலாமையை எடுத்துரைப்பதே ஆகும்.
அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். ( لَا تَعْمَلْ شَيْءً مِنَ الْخَيْرَ رِيَاءً
وَلَا تَتْرُكْهُ حَيَاءً ) எந்த
நற்செயலையும் பிறருக்கு காண்பிப்பதற்காக செய்யவும் வேண்டாம் வெட்கத்தினால் அதை விட்டு
விடவும் வேண்டாம்.
ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( تَرَكَ الْعَمَلِ لِأَجْلِ النَّاسِ رِيَاءً,
وَالْعَمَلُ لِأَجْلِ النَّاسِ شِرْكٌ ) பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக (செய்ய வேண்டிய)
ஒரு செயலைச் செய்யாமல் விடுவது முகஸ்துதி ஆகும். மேலும், பிறருக்கு காண்பிப்பதற்காக ஒரு செயலைச் செய்வது இணைவைப்பதாகும்.
நூல்:- அத்திப்யான் التِّبْيَانُ فِي آدَابِ حَمَلَةِ الْقُرْآنِ -
ص ٣٢
மார்க்கச் சட்டங்களை அறிந்து, தனது அனைத்து செயல்களிலும்
முகஸ்துதிலிருந்து விலகி, அல்லாஹுத்தஆலாவின்
உவப்பை மட்டுமே இலட்சியமாக எண்ணி செயல்படும் பேணுதலுள்ள இறைநம்பிக்கையாளர்களாக இறைவன்
நம்மை வாழ செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி,
இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment