கைதிகளிடம் கனிவு
فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ
الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا
بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا
(இறைநம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்து போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள்
சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை
வெட்டுங்கள். அவர்களை முறியடித்துவிட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை)
பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் பதிலாக
யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாகவேனும் விட்டு விடுங்கள்.
இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில்
(போர் செய்யுங்கள்.) திருக்குர்ஆன்:- 47:4
இஸ்லாம், போர்க் கைதிகளை நடத்தும்
விதம் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் குறித்து மிகவும் தெளிவாக பேசியுள்ளது.
போர்க் கைதிகள் மனிதாபிமானத்துடன், எந்தவித நிற, மத, மொழி பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும். அதிகாரிகள்
கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அவர்களை காயப்படுத்தவோ, ரகசிய தகவல்களுக்காக சித்ரவதை செய்யவோ கூடாது. கண்ணியக்
குறைவு ஏற்படுமாறு திட்டுவதோ, கீழ்த்தரமாக நடத்துவதோ
கூடாது. கைதிகளுக்கு உண்ண உணவு, உடுத்த உடை,
சுகாதாரம், மருத்துவ சேவை உள்ளிட்டவை முறையாக வழங்கப்பட வேண்டும். சுருங்கக்கூறின்,
கைதிகளிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்கிறது
இஸ்லாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اسْتَوْصُوا بِالْأُسَارَى خَيْرًا ) நீங்கள் கைதிகளிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள்.
நூல்:- முஅஜமுஸ் ஸஙீர் இமாம் தப்ரானீ, தஃப்சீர் குர்துபீ அத்தவ்பா வசனம்-14
நுபைஹு பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப்
போர்க் கைதிகளுடன் (மதீனா நோக்கிப்) புறப்பட்ட நேரத்தில் போர்க் கைதிகளைத் தம் தோழர்களுக்கிடையே
(பங்கிட்டுப்) பிரித்துக் கொடுத்தார்கள். மேலும் நபியவர்கள், ( اسْتَوْصُوا بِهِمْ خَيْرًا
) "போர்க் கைதிகளிடம் நல்ல விதமாக
நடந்துகொள்ளுங்கள்" என்றும் உபதேசம் செய்தார்கள். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்,
அல்பிதாயா வந்நிஹாயா
உணவு வழங்குதல்
தாங்களே உணவை விரும்பக்கூடிய நிலையிலும்கூட ஏழைக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். திருக்குர்ஆன்:- 76:8
பத்ருப் போரில் கைதியாகப் பிடிபட்ட (முஸ்அப் பின் உமைர் - ரலி அவர்களின் சகோதரர்) அபூ அஸீஸ் அவர்கள் கூறியதாவது.
( فَكُنْتُ فِي رَهْطٍ مِنَ الْأَنْصَارِ حِينَ أَقْبَلُوا بِي مِنْ بَدْرٍ، فَكَانُوا إِذَا قَدَّمُوا غَدَاءَهُمْ وَعَشَاءَهُمْ خَصُّونِي بِالْخُبْزِ وَأَكَلُوا التَّمْرَ، لِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهُمْ بِنَا، مَا تَقَعُ فِي يَدِ رَجُلٍ مِنْهُمْ كِسْرَةُ خُبْزٍ إِلَّا نَفَحَنِي بِهَا، فَأَسْتَحِي فَأَرُدُّهَا فَيَرُدُّهَا عَلَيَّ مَا يَمَسُّهَا )
அன்சாரிகள் பத்ரிலிருந்தும்
(மதீனாவிற்கு) திரும்பிய நேரத்தில் நான் அன்சாரிகளின் ஒரு குழுவினரிடம் இருந்தேன்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு எங்களிடம் நன்முறையில் நடந்து கொள்ள வேண்டும்
என்று அறிவுரை வழங்கியிருந்ததால், அவர்கள் மதிய உணவையும்
இரவு உணவையும் சமர்ப்பிக்கும்போது (சாதாரண) பேரிச்சம் பழத்தை அவர்கள் உட்கொண்டுவிட்டு,
எனக்கு (உயர்தரமான) ரொட்டிகளை வழங்குபவர்களாக இருந்தனர்.
அவர்களில் ஒருவருடைய கையில் ஒரு ரொட்டித் துண்டு கிடைத்தாலும் அதை (உடனடியாக) எனக்குத்
தந்துவிடுவார். நான் வெட்கப்பட்டு அதனை திருப்பிக் கொடுப்பேன். (எனினும் மீண்டும் வற்புறுத்தி)
என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார். அதைத் தொட மாட்டார். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்,
அல்பிதாயா வந்நிஹாயா
பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பத்ருப் போரின் நாளில் சிறைக்கைதிகளை
கண்ணியமாக நடத்துமாறு தங்களின் தோழர்களுக்கு பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கட்டளையிடுபவர்களாக
இருந்தார்கள். அதன் பிறகு நபித்தோழர்கள் உணவு உண்ணும்போது அந்த சிறைக் கைதிகளுக்கே
முன்னுரிமை கொடுத்துத் தங்களை விடவும் அவர்களுக்கே முதன் முதலில் உணவு வழங்கக் கூடியவர்களாக
இருந்தார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அத்தஹ்ர் வசனம்-8
அபீ ரஸீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( كُنْتُ مَعَ شَقِيقِ بْنِ سَلَمَةَ فَمَرَّ
عَلَيْهِ أُسارى مِنَ المُشْرِكِينَ فَأمَرَنِي أنَّ أتَصَدَّقَ عَلَيْهِمْ ) நான் ஷாகிக் பின் சலமா (ரலி) அவர்களுடன் இருந்தேன்.
இணைவைப்பாளர்களில் உள்ள சிறைக்கைதிகள் அவரைக்
கடந்து சென்றபோது, அவர்களுக்கு தர்மம் செய்யும்படி அவர் என்னிடம் கட்டளையிட்டார்கள்.
பிறகு மேற்காணும் (76:8) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நூல்:- இப்னு அபீஷைபா, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
போர் கைதிகளை பராமரிக்கும் பொறுப்பு முக்கிய நபித்தோழர்களிடம் நபர் ஒன்றுக்கு இரண்டாகவும்
நன்னான்காகவும் ஒப்படைக்கப்பட்டது. கைதிகளை நல்ல விதமாக கவனித்துக் கொள்ள வேண்டும்
என்றும் கட்டளையிடப்பட்டது. இக்கட்டளையை அவர்கள் எவ்வளவு நேர்த்தியுடன் பக்தியுடன்
நிறைவேற்றினார்கள் என்பதற்கு போர்க் கைதிகளில் ஒருவராக இருந்த அபூ அஸீஸ் அவர்கள் கூறும்
வாக்குமூலமே போதுமானது.
அருமை நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் போர்க் கைதிகளை நடத்திய விதமும், காட்டிய அன்பும் பரிவும் கைதிகளின் உள்ளங்களை மிகவும் கவர்ந்தன. அதன் காரணமாக கைதிகளில்
பலர் மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். கைதிகளை விடுவித்து செல்ல மீட்புத் தொகைகளுடன்
மக்காவிலிருந்து வந்த அவர்களின் உறவினர், தங்களைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தைச்
சேர்ந்துள்ளதைக் கண்டு வியப்புற்றனர். அவர்கள் மீட்புத் தொகை ஏதும் செலுத்தாமலே விடுதலை
செய்யப்பட்டனர்.
கைதிகளிடம் கருணை காட்டுங்கள் என்ற நபிமொழியைக் கேட்டவுடனேயே நபித்தோழர்கள் கைதிகளுக்கு
நன்மை செய்ய வேண்டியதை எல்லாம் கொடுத்தார்கள். கற்பனை செய்து பாருங்கள்! சில நாட்களுக்கு முன்பு, இந்தக் கைதிகள் முஸ்லிம்களைக் கொல்ல முற்பட்டனர். ஆனால், முஸ்லிம்கள் அதை முற்றிலும் மறந்துவிட்டு, அவர்களே வெட்கப்படும் அளவுக்கு
உபகாரம் புரிந்துள்ளார்கள். இது தான் இறைநம்பிக்கையாளர்களின் நிலைப்பாடு.
இதை தான் இன்றைய உண்மையான இஸ்லாமியப் போராளிகள் செய்கிறார்கள் என்பதை உலகம் கண்டுவருகிறது.
கருணை கொள்தல்
பத்ருப் போர்க் கைதிகளை நபித்தோழர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் அவர்கள்
மஸ்ஜிதுந் நபவியில் ஓர் இரவு கட்டி வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் இரவின் முந்நேரம் (உறங்காமல்) விழித்தவர்களாகக் கழித்தார்கள். அதைக்கண்ட
நபித்தோழர்கள், ( مَا لَكَ لَا تَنَامُ يَا رَسُولَ اللَّهِ؟ ) "நாயகமே! உங்களுக்கு என்ன ஆனது? (ஏன்) நீங்கள் உறங்காமல் இருக்கிறீர்கள்?"
என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், ( سَمِعْتُ أَنِينَ عَمِّي الْعَبَّاسِ فِي
وَثَاقِهِ )
"கட்டி வைக்கப்பட்டிருந்த என்
சிறிய தந்தை அப்பாஸ் அவர்களின் முனகல் சப்தத்தைச் செவியுற்றேன். (அதனால் எனக்கு உறக்கம்
மேலிடவில்லை)" என்று கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் அப்பாஸை அவிழ்த்துவிட்டனர்.
பிறகு அப்பாஸ் அமைதியாகிவிட்டார்.
கொஞ்ச நேரத்திற்கு பின்னர் நபியவர்கள் காவல் புரிந்த நபித்தோழர்களை அழைத்து,
"அப்பாஸின் முனகல் சப்தம் கேட்கவில்லையே!
என்றார்கள். நபித்தோழர்கள், "அவருடைய கட்டைத் தளர்த்திவிட்டதாகக் கூறினர். நபியவர்கள்,
"அவ்வாறாயின், எல்லா கைதிகளின் கட்டையும் தளர்த்திவிடுங்கள்"
என்று கட்டளையிட்டார்கள்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள், சொந்தம் என்ற முறையில்
அனுதாபம் காட்டிய போதிலும், நீதி சமத்துவம் என்ற
முறையில் எவருக்கும் பாரபட்சம் காட்டவில்லை.
துன்புறுத்தல் கூடாது
முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்
உமர் (ரலி) அவர்கள், ( دَعْنِي أَنْزِعْ ثَنِيَّتَيْ سُهَيْلِ بْنِ عَمْرٍو يَدْلَعْ لِسَانُهُ،
فَلَا يَقُومُ عَلَيْكَ خَطِيبًا فِي مَوْطِنٍ أَبَدًا ) “(பத்ருப் போரில் கைதியாக
பிடிப்பட்டிருந்த சுஹைல் சிறந்த சொற்பொழிவாற்றுபவனாக இருக்கிறான். எனவே,) சுஹைல் பின் அம்ர் இனி ஒருபோதும் எந்த இடத்திலும்
உங்களுக்கெதிராக சொற்பொழிவாற்றுபவனாக நிற்கக்கூடாது. அதற்காக அவனது நாவை வெளியே இழுத்து,
அவனின் முன் பல்லை எடுப்பதற்கு (எனக்கு அனுமதியளித்து)
என்னை விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு நபியவர்கள், ( لَا أُمَثِّلُ بِهِ فَيُمَثِّلَ اللَّهُ بِي وَإِنْ كُنْتُ
نَبِيًّا ) “(உறுப்பைச் சிதைத்து) சித்திரவதைச் செய்ய (நான் அனுமதிக்க)
மாட்டேன். ஏனெனில், நான் இறைத்தூதராக
இருந்தாலும் (அவ்வாறு செய்தால்) என்னை அல்லாஹ் சித்திரவதைச் செய்வான்" என்று கூறினார்கள்.
நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், அல்பிதாயா வந்நிஹாயா
உதவி உபகாரம்
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை நஜ்து தேசத்தின் பெரும் கொடை வள்ளலாக திறந்த
ஹாத்திம் அத்தாயீ என்பவரின் மகளார் சஃபானா என்பவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் முஸ்லிம்கள்
கைதிகளாகப் பிடித்துக்கொண்டு வந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சேர்த்தார்கள். அந்த
கைதிகளின் தலைவியாக இருந்த சஃபானா என்பவர் அண்ணலாரின் கருணை உள்ளத்தை அறிந்து,
"நாயகமே! சிறைப்பட்டவரை விடுவிப்பவராகவும்,
பசித்தவரின் வயிற்றை நிரப்புபவராகவும், ஆடை இல்லாதவருக்கு ஆடை அணிவிப்பவராகவும்,
விருந்தினரை உபசரிப்பவராகவும் தேவையை வேண்டிவருபவரை
திருப்பி அனுப்பாதவராகவும் இருந்துவந்த ஒருவரான ஹாத்திம் அத்தாயீவின்
மகள் தான் நான். எனவே, நீங்கள் எனக்கு கருணை
காட்ட வேண்டும்" என்று வேண்டி நின்றார்.
சஃபானாவின் பேச்சை கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்த அண்ணலார், ( يَا جَارِيَةُ هَذِهِ صِفَةُ الْمُؤْمِنِينَ حَقًّا لَوْ كَانَ
أَبُوكِ مُؤْمِنًا لَتَرَحَّمْنَا عَلَيْهِ خَلُّوا عَنْهَا فَإِنَّ أَبَاهَا
كَانَ يُحِبُّ مَكَارِمَ الْأَخْلَاقِ وَاللَّهُ تَعَالَى يُحِبُّ مَكَارِمَ
الْأَخْلَاقِ ) "பெண்ணே! இது உண்மையாகவே இறைநம்பிக்கையாளர்களின்
பண்பாகும். உன் தந்தை இறைநம்பிக்கையாளராக இருந்திருந்தால் அவருக்கு கிருபை செய்யும்படி
அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருப்போம்! என்று கூறினார்கள். தொடர்ந்து, இவளை விடுவித்து விடுங்கள்! நிச்சயமாக இவள் தந்தை
சங்கையான குணங்களை விரும்புவர் ஆக இருந்தார் அல்லாஹ்வும் சங்கையான குணங்களை நேசிக்கிறான்"
என்றார்கள்
மேலும் அண்ணலார், அவளையும் அவளை சேர்ந்தவர்களையும்
விடுதலை செய்துவிட்டு அவர்களுக்கு அணியும் ஆடைகளும், பயணிக்க வாகனங்களும், வழிச் செலவுக்கு தேவையான தொகையையும் கொடுத்து அவர்களை கண்ணியத்தோடு வழியனுப்பி வைத்தார்கள். நூல்:-
சீரத் இப்னு ஹிஷாம், அல்பிதாயா வந்நிஹாயா
நேசரானார்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "நஜ்த்" பகுதிக்குக் குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் யமாமாவாசிகளின் தலைவரும் "பனூ ஹனீஃபா" குலத்தைச் சேர்ந்தவருமான ஸுமாமா பின் உஸால் எனப்படும் மனிதரை (கைது செய்து) கொண்டுவந்தார்கள்; (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப்போட்டார்கள்.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, ( مَاذَا عِنْدَكَ يَا ثُمَامَةُ ) "(உம்முடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர், ஸுமாமா?" என்று கேட்டார்கள். அவர், "நல்லதே கருதுகிறேன், முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் (என்னை மன்னித்து) உபகாரம் செய்தால், நன்றி பாராட்டக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள். நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்றார்.
அன்றைய தினம் அவரை (அந்நிலையிலேயே) விட்டுவிட்டு நபியவர்கள் சென்றார்கள். மறுநாள் வந்தபோது நபியவர்கள் அவரிடம், அவ்வாறே கேட்டார்கள். அவரும் அவ்வாறே பதிலளித்தார். பிறகு மூன்றாவது நாள் வந்தபோது நபியவர்கள் அவரிடம், அவ்வாறே கேட்டார்கள். அவரும் அவ்வாறே பதிலளித்தார். பிறகு நபியவர்கள், ( أَطْلِقُوا ثُمَامَةَ ) "ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே, ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு வந்தார். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்" என்று கூறி (முஸ்லிம் ஆ)னார்.
பிறகு, ( يَا مُحَمَّدُ وَاللَّهِ مَا كَانَ عَلَى الأَرْضِ وَجْهٌ أَبْغَضَ إِلَىَّ مِنْ وَجْهِكَ فَقَدْ أَصْبَحَ وَجْهُكَ أَحَبَّ الْوُجُوهِ كُلِّهَا إِلَىَّ ) "முஹம்மத் (ஸல்) அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட எனக்கு மிகவும் வெறுப்புக்குரிய முகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் மற்றெல்லா முகங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. ( وَاللَّهِ مَا كَانَ مِنْ دِينٍ أَبْغَضَ إِلَىَّ مِنْ دِينِكَ فَأَصْبَحَ دِينُكَ أَحَبَّ الدِّينِ كُلِّهِ إِلَىَّ ) அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய மார்க்கம் மற்றெல்லா மார்க்கங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. (وَاللَّهِ مَا كَانَ مِنْ بَلَدٍ أَبْغَضَ إِلَىَّ مِنْ بَلَدِكَ فَأَصْبَحَ بَلَدُكَ أَحَبَّ الْبِلاَدِ كُلِّهَا إِلَىَّ ) அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்கள் ஊரே மற்றெல்லா ஊர்களையும் விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது" என்று கூறினார். நூல்:- முஸ்லிம்-3622
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தான் ஒரு கைதியின் மனநிலையிலிருந்து இவரைப் பற்றி சிந்திக்கிறார்கள். அவர் விருப்பப்படி செயல்படட்டும் எனும் விதமாக "இவரை அவிழ்த்துவிடுங்கள்" என்று சொல்கிறார்கள். இவர் மூன்று நாட்கள் பள்ளிவாசல் தூணில் கைதியாகக் கட்டப்பட்டிருந்த சமயம், முஸ்லிம்களின் உண்மை முகத்தைப் பார்த்துவிட்டு, இவர்கள் நல்லவர்கள் இவர்களின் மார்க்கமும் சிறந்தது என்று முடிவெடுக்கிறார். பிறகு இவர், அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும், அவர்கள் வசிக்கும் ஊரையும் உண்மையாகவே விரும்ப ஆரம்பித்துவிட்டார். இவர் மனதில் அண்ணலார் நீங்காது இடம் பிடித்து விட்டார்கள்.
கி.பி. 1187 ஆண்டு மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் சிலுவை படையினரிடமிருந்து ஃபலஸ்த்தீன் மற்றும் ஜெருசல நகரத்தை மீட்டெடுத்தபோது, "இந்த நகரத்திலிருந்து வெளியேற விரும்புவோர்கள் நாற்பது நாள்களுக்குள்ளாக வெளியேறிவிடுங்கள்" என்று பொது அறிவிப்பு செய்தார்கள். ஜெருசலத்தில் வாழ்ந்து வந்த மத குருமார்களும் பொதுமக்களும் தங்கள் செல்வங்களை அனைத்தையும் சுமந்து கொண்டு வெளியேறினர். பல கிறிஸ்தவர்கள் தங்கள் தோள்கள் மீது பலவீனமாக இருந்த தங்கள் பெற்றோர்களை அல்லது நண்பர்களை சுமந்து கொண்டு வெளியேறினர். இக்காட்சிகளைப் பார்த்து உருகிப் போன ஸலாஹுத்தீன் (ரஹ்) அவர்கள் அம்மக்களுக்கு தாராளமாக நன்கொடைகளையும், அவர்களது சுமைகளை கொண்டு செல்ல கோவேறுக் கழுதைகளையும் வழங்கினார்கள். தங்கள் குழந்தைகளைச் சுமந்தவாறு அழுது கொண்டே பெண்களும் வெளியேறினர்.
இவர்களில் பலர் ஸலாஹுத்தீன் (ரஹ்) அவர்களை
அணுகி, "உங்களிடம் கைதிகளாக
இருப்பவர்களின் மனைவியர், தாய்மார்கள் மற்றும்
மகள்கள் இவ்ஊரை விட்டு கால்நடையாக நடந்து செல்வதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்நாட்டை
விட்டு நாங்கள் நிரந்தரமாக வெளியேறுகிறோம். அவர்கள் எங்கள் வாழ்வின் ஆதாரமாக இருந்தார்கள்.
அவர்களை இழந்ததின் மூலம் எங்கள் கடைசி ஜீவனையும் நாங்கள் இழந்துவிட்டோம். நீங்கள் அவர்களை
எங்களிடம் ஒப்படைத்தால், எங்கள் இன்னல்களை
அவர்கள் நிவர்த்தி செய்வார்கள். நாங்கள் ஆதரவற்றவர்களாக உலகத்தில் வாழும் நிலை ஏற்படாது"
என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இப்பெண்களின் கோரிக்கைகள் ஸலாஹுத்தீன் (ரஹ்) அவர்களின் மனதை தொட்டன. அந்த தாய்மார்களிடம்
அவர்களின் மகன்களையும், மனைவியர்களிடம் அவர்களது
கணவர்களையும் ஒப்படைக்க உத்தரவிட்டார்கள்.
மத பாகுபாடில்லை
அன்றைக்கு சூரத் நகரம் இந்தியாவிலேயே அதிகமான செல்வம் படைத்த வணிக நிலையமாக விளங்கியது.
அங்கிருந்து ஆண்டுதோறும் பெரிய பயணக் கப்பல்கள் புனித ஹஜ் பயணத்திற்காக மக்காவுக்கு
புறப்பட்டுச் சென்றன. அரேபிய கப்பல்களும் சீன மரக்கலங்களும், பிரான்ஸ், இங்கிலாந்து, ஹாலாந்து, போர்ச்சுக்கல் முதலிய
நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளும் அந்நகரத்தின் முக்கிய கடைகளில் வாணிபம் செய்யும் பொருட்டு, ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களில்
இருந்து பண்டங்களையும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த
வணிகர்களையும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தன. அந்நகரத்தின் சுங்க வருமானம் மட்டும் ஆண்டொன்றுக்கு
ஏழாயிரத்துக்கும் அதிகமான பவுன்களாக இருந்தது என்று சரித்திர ஆசிரியர் "டென்ஸ்கின்
கெண்டு" குறிப்பிடுகிறார். முகலாய சாம்ராஜ்யத்தின் வாசல் போன்று விளங்கியது சூரத்.
கொலை, கொள்ளை, மோசடி, நம்பிக்கை துரோகம், நயவஞ்சகத்தனம் ஆகியவற்றில்
கைதேர்ந்த மன்னன் சிவாஜி, மொகலாயப் பேரரசுக்கு உட்பட்ட சூரத்
நகரிலும் அதற்கு அருகிருந்த ஜூயூல் மற்றும் பாயல் துறைமுகங்களையும், மக்காவிற்கு ஹஜ் புனித யாத்திரை செல்லும் முஸ்லிம்களின் கப்பலையும்
சிவாஜி 10-1-1664 அன்று கொள்ளையடித்தார். மராத்திய வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் கிராண்ட்டும், பேராசிரியர் ஜாதுநாத் சர்க்காரும் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.
இதன் காரணமாகவே முகலாய மன்னர் அவுரங்கஜேப் (ரஹ்) அவர்களால் சிவாஜி கைதுசெய்யப்பட்டு வீட்டுச் சிறையில்
வைக்கப்பட்டார். அதன் பிறகு மிகச் சிறந்த உயர்வகையான உணவுகள் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.
பிறகு அவருக்கு 1666 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்தியில் கல்லீரல் கோளாறு ஏற்பட்டு அவதியுற்றார்.
எனவே, அவருக்கு அதற்குரிய உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதோடு
எல்லா விதமான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இவற்றை சரித்திர ஆசிரியர்
"டெனிஸ் கின்கெய்டு" தனது நூலில் தெளிவாக குறிப்பிடுகிறார்.
சிவாஜி, முழுக்க முழுக்க மனிதனின்
முயற்சி மட்டுமே நம்புவதால் பயனில்லை என்றும் ஆக்ராவுக்கும் டில்லிக்கும் மத்தியில
இருந்த இந்துக்களின் மாபெரும் புண்ணிய ஸ்தலமான மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு
சில குதிரைகளை காணிக்கையாக அனுப்பி வைக்க விரும்பினார். அவருக்காக அதை நிறைவேற்றப்பட்டது.
நூல்:- வரலாற்றின் வெளிச்சத்தில் அவுரங்கஜேப் -
வரலாற்றாசிரியர் செ.திவான்
அவுரங்கஜேப் (ரஹ்) அவர்கள், இந்து மத நம்பிக்கை
மதித்து, கைதியாக இருந்த சிவாஜியின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார். மராட்டிய மன்னன்
(சத்ரபதி) சிவாஜியை வேண்டுமென்றே அவுரங்கஜேப் சிறையில் அடைத்ததாகவும், அவரை மத அடிப்படையில் கொடுமைப்படுத்தியதாகவும் வரலாற்றை திரிபு
செய்து, கல்விக் கூடங்களில் கற்றுத் தரப்படுகிறது. பிஞ்சு
உள்ளங்களில் நஞ்சைத் தூவுகிறார்கள். இளம் நெஞ்சங்களில் இன வேஷத்தை வளர்க்கிறார்கள்.
அவுரங்கஜேப் (ரஹ்) அவர்கள் பிற மதத்தவர்கள் மீது தீராத வெறுப்பு கொண்டவர் என்று
காலங்காலமாகக் கதை அளந்து கொண்டிருக்கிற கயமைக்கூட்டம் இந்த உண்மைகளை எல்லாம் மறைக்கப்
பார்க்கிறது. இது நியாயம் தானா? என்று நடுநிலையாளர்கள்
சிந்திக்க வேண்டும்.
சகித்துக்கொள்ளுதல்
23-5-1958 பிறந்த யுவான் ரிட்லி (Yvonne Ridley), பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். இவர், பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று
பல பரிமாணங்களை கொண்டவர்.
செப்டம்பர் 2001 ஆண்டின் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி
அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம்.
அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் ஆப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.
இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி
செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால்
அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்துவிட்டார்.
எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து ஆப்கானிஸ்தானிற்குள்
நுழைந்துவிட்டார்.
உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபான் வீரர் ஒருவரின்
முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார்.
உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு
நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001 ஆண்டில், தாலிபான்களால் நல்லெண்ண
அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக
திட்டிருக்கிறேன்; அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன்; அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன்.
இதையெல்லாம்விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத் துறை அமைச்சர் (Deputy Foreign
Misniter) என்னிடம், “நீங்கள் இப்படி செய்வது சரியில்லை. உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள். உங்கள் செயல் எங்கள்
வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும்” என்றார்.
இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள்
கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம்
கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்".
சிறையிலிருந்து வெளியே வந்த இவர், தாலிபான்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான
மதிப்பை அளித்ததாக தெரிவித்தார்.
சிறையிலிருக்கும்போது தன்னை ஒரு தாலிபான் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்துவிட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து
வெளியே சென்ற பின் குர்ஆனைப் படிப்பதாக தான்
அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.
கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின்
நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குர்ஆனைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, மர்யம்
என்று பெயரிட்டுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் யுவான் ரிட்லி, தான் சார்ந்த சண்டே
எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்.
"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை
அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை
நடத்தினார்.
அப்போது அவர், "அவர்களுக்கு என்ன
வேண்டும்? என்று கேட்டு கொடுத்துவிடுங்கள். எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள்"
என்று கட்டளையிட்டார்.
அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின்
முடிவில் குழுவின் தலைவர், சண்டே எக்ஸ்பிரஸ்
உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?
இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை
திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்.
என்ன பணம் வேண்டாமா? வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?
இல்லை சார்! அவர்களுக்கு எதுவும்
வேண்டாமாம். நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் போதுமாம்.
இதனை அந்தக் குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில்
இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது.
இதேபோன்று தான் ஃபலஸ்தீனத்திற்காக போராடும் போராளிகளும், அந்நாட்டு பொதுமக்களும் தமக்குரிய மரியாதையைத் தானே எதிர்பார்க்கிறார்கள்.
பிணையக்கைதியின் கடிதம்
(2023 இந்த ஆண்டு) இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நான்கு நாள்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் நான்கு நாள்களில் காஸாவில் இருந்து 50 பணையக்கைதிகளை விடுவிக்கும் என்பதுடன் இஸ்ரேல் 150 ஃபலஸ்த்தீன கைதிகளை விடுவிக்கும் எனத் தகவல் வெளியானது.
அதனடிப்படையில், தன்யால் என்ற பெண்ணும் அவளது மகள் இம்லீயா ஆகிய இருவரும் ஃபலஸ்த்தீன் நாட்டின்
ஹமாஸின் ராணுவமான அல்கஸ்ஸாம் படையினரால் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள். 49 நாள்களுக்குப் பிறகு இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
தன்யால் என்ற இந்த பெண், 23.11.2023 அன்று ஹிப்ரு
மொழியில் எழுதிய கடிதத்தை விடுதலையாவதற்கு சற்றுமுன் ஹமாஸ் படை தளபதிகளிடம் நேரில்
கொடுத்தார். இன்று (28.11.2023) அல்ஜஸீரா செய்தி
நிறுவனம் அந்தக் கடிதத்தையும், அதை அரபி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மொழிபெயர்த்து,
அதனையும், அவ்விருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
இதோ அந்தக் கடிதம்: கடந்த சில வாரங்களாக
எங்களிடம் நட்போடு பழகிய தளபதிகளுக்கு…
நாளை நாம் பிரிந்துவிடுவோம் என்று தெரிகிறது. உங்களின் மனிதாபிமானத்திற்காக
என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் நன்றியை சமர்ப்பிக்கிறேன். என் மகள் இம்லீயா மீது
நீங்கள் காட்டிய அன்பு அலாதியானது.
அவள் விரும்பும் போதெல்லாம் உங்களின் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்று
அவளின் பெற்றோர் போல் நடந்து கொண்டீர்கள். உங்களையெல்லாம் தன் நண்பர்களைப்போல அவள்
உணர்கிறாள். நீங்கள் நண்பர்கள் மட்டுமல்ல. உண்மையான நல்ல நேசர்கள். ஒரு வளர்ப்புத்
தாய் போல அதிகமான நேரங்கள் அவளோடு நீங்கள் இருந்தீர்கள். நன்றி!
அவளின் சேட்டைகளை பொறுமையாக தாங்கிக்கொண்டீர்கள். அதற்கொரு நன்றி. உங்களிடம் இருந்ததையெல்லாம்
கொடுத்து, அவளை மகிழ்ச்சியால் மூழ்கடித்தீர்கள்.
சிறுவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்களல்லர். எனினும் உங்களின்
பெருந்தன்மையாலும் (இங்கே கொண்டு வரப்படும்) வழியில் நாங்கள் பார்த்த சில தூய
மனிதர்களின் பெருந்தன்மையாலும் என் மகள் தன்னை ‘காஸாவின் ராணி’ என்று
எண்ணிக்கொள்கிறாள். உலகின் (எல்லாப் பொருள்களும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்கும்)
மையப்பகுதியில் இப்போது தான் இருப்பதாக உணர்கிறாள்.
நான் என்றென்றும் உங்களின் அன்புக்கு கைதியாக இருப்பேன். ஏனென்றால், அவள்
உங்களிடம் இருக்கும்போது எந்தவித உளவியல் பயத்திற்கும் அதிர்ச்சிக்கும்
ஆளாகவில்லை. மகிழ்ச்சியாகவே இருந்தாள்.
நீங்கள், உங்களை சமாளித்துக் கொண்டிருந்த கடினமான சூழ்நிலையிலும், நீங்கள்
காஸாவில் பெரும் துயரங்களையும் சிரமங்களையும் அனுவித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையிலும்,
நீங்கள் எங்களிடம் அழகாக நடந்துகொண்டதை எண்ணிப்பார்க்கிறேன். உங்களின் தூய
நடத்தையை நினைத்துப் பார்க்கிறேன்.
எனக்கொரு ஆசை! நாம் இந்த உலகில் உண்மையான நல்ல நண்பர்களாக வாழ்ந்திட வாய்ப்பு
அமைந்திட வேண்டும். நீங்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் வாழ்ந்திட வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுக்கும்
உங்கள் குடும்பத்து பிள்ளைகளுக்கும் அன்பும் நிம்மதியும் கிடைக்கட்டும். நன்றி!”
இப்படிக்கு:
தன்யால், இம்லீயா.
ஹமாஸிடம் சிறைப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்பிள்ளையின் தாய் எழுதிய
கடிதம், இஸ்லாமியப் போராளிகளின் நற்பண்புகளை உலகத்துக்கு சொல்லிவிட்டது.
நற்பண்பாளர்கள்
ஹமாஸ் வீரர்களால் பிணையக் கைதியாக பிடிக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்ட ஒரு இஸ்ரேலிய பெண் பிணையக் கைதி, ஹமாஸ் வீராங்கனையின் தலையை முத்தமிட்டு விடைபெறும் உருக்கமான காட்சி
வெளியானது
ஆம்! அந்த ஒரு காட்சி ஆயிரம் வார்த்தைகளுக்கு நிகரானது.
இஸ்ரேல் கைதிகள் விடுதலையாகி செல்லும்போது ஹமாஸ் வீரர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆரத்தழுவிச் சென்றனர் என்பதைக் கண்டோம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَدَ امْرَأَةٍ
إِلاَّ امْرَأَةً يَمْلِكُهَا ) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் கை,
தமக்கு சொந்தமான பெண்ணை (மனைவியரை) தவிர வேறு எந்த
பெண்ணின் கையையும் தொட்டதில்லை. நூல்:- திர்மிதீ -3218
ஹமாஸ் போராளிகள் பிணையக் கைதிகளாக பிடித்த சென்றவர்களில் பெண்
பிணையக் கைதிகளை ஒப்படைக்கும்போது, அவர்கள் வாகனங்களில்
இருந்து இறங்குவதற்கு உதவி செய்தது பெண் போராளிகள் மட்டுமே என்பதையும் கண்டோம்.
ஆம்! ஹமாஸ் போராளிகள் இஸ்லாம் கூறும் ஹலால் ஹராம் குறித்த விஷயத்தில்
மிகவும் பேணுதல் உடையவர்கள் என்று தெளிவாகிறது. அதாவது, அந்நிய பெண்ணை அந்நிய ஆண் தொடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்படுகிறார்கள்.
ஹமாஸ் போராளிகள் பிணையக் கைதிகளாக பிடித்தவர்களை எவ்வளவு மரியாதையாக
நடத்தினார்கள் என்பதற்கு அவர்களின் முக குறிப்புகளே சாட்சியம் சொன்னது. ஏதோ விருந்தாளிகள்
போன்று சந்தோசமாக விடைப்பெற்று சென்ற காட்சியை ஊடகங்கள் மூலம் கண்டோம்.
ஹமாஸ் போராளிகளை ஊடகங்கள் சித்தரித்ததைப் போன்று கொடூரமானவர்கள்
அல்லர் என்பதற்கு பிணையக் கைதிகளே சாட்சியாளர்களாகிவிட்டனர்.
போர் என்றாலே கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வணக்கஸ்தலங்களை எரிப்பது, செல்வங்களை தீக்கிறையாக்குவது மற்றும் கைதிகள் என்றால்
அடித்து உதைத்து சொல்லொணா துன்பத்திற்கு ஆளாக்குவது உடல் உறுப்புகளை சிதைப்பது பெண்
கைதியாக இருந்தால் கற்பழிப்பது போன்ற மிருகத்தனமான இன்றைய போக்கு மாறுவதற்கு இஸ்லாமிய
உபதேசங்களை எல்லா இராணுவங்களிலும் செயல்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பது இப்போது
புரிகின்றதல்லவா?
ஹமாஸ் போராளிகள் பிணையக் கைதிகளை விடுவித்துபோது இஸ்லாம் கூறும் நல்லொழுக்கத்தையும்
போதித்துள்ளார்கள்.
எங்கள் இறைவா! ஃபலஸ்த்தீன மீட்பு போராட்டத்தில் உயிர் நீத்த உயிர்த்தியாகிகளையும்,
அதன் போராளிகளையும் நீ பொருந்திக்கொள்வாயாக! அந்நாட்டு
மக்கள் என்றென்றும் நிம்மதியுடன், சகல வசதிகளுடனும்
வாழ அருள்புரிவாயாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment