Search This Blog

Sunday, 26 November 2023

சொன்னதை செய்தால்...

சொன்னதை செய்தால்...

 

أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ

 

அழைப்பவர், என்னை அழைக்கும்போது அவரது அழைப்பை நான் ஏற்கிறேன். திருக்குர்ஆன்:- 2:186

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது சமுதாயத்தினரான நாம் பயன்பெறும் வகையில் பல்வேறு பிரார்த்தனைகளையும், வணக்க வழிபாட்டு முறைகளையும் கற்றுத் தந்திருக்கிறார்கள். அதன் பிரகாரம் நாம் செயல்படும்போது இறைவனின் பாதுகாப்பும், அருள்வளமும் போதுமான அளவு கிடைக்கப்பெறும்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களால் இந்த சமுதாயம் அனுபவித்த பலாபலன்கள் ஏராளம். எனவே, நபியவர்கள் சொன்னதை நாம் முறையாகச் செய்தால் நம் வாழ்வில் வசந்தம் காணலாம்.


அவர் தன் இஷ்டப்படி எதனையும் பேசுவதில்லை. இது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை. திருக்குர்ஆன்:- 53:34

 

குழந்தைப் பெற

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஒரு அன்சாரித் தோழர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ( مَا رَزَقْتُ وَلَدًا قَطُّ وَلَا وَلَدَ لِي وَلَدٌ  ) “(நாயகமே!) எனக்கு குழந்தை செல்வமே இல்லை (எனவே, அதற்காக ஏதேனும் ஒரு வழிபாட்டைக் கற்றுத்தாருங்கள்)” என்று கேட்டார். நபியவர்கள், ( فَأَيْنَ أَنْتَ عَنِ الِاسْتِغْفَارِ وَكَثْرَةِ الصَّدَقَةِ يَرْزُقُ اللَّهُ بِهِمَا الْوَلَدَ ) "பாவமன்னிப்பு தேடுதல் மற்றும் அதிகமாக தர்மம் செய்தலை விட்டும் நீர் எங்கே சென்றீர்? இவை இரண்டையும் செய்து வந்தால் அல்லாஹ் குழந்தையைத் தருவான். (அதாவது, இவை இரண்டையும் அதிகமாக செய்து வருவீராக!)" என்று கூறினார்கள். அதேபோல் அவர் செய்து வந்தார். இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார். (அதன் பரக்கத்தால்) அந்த மனிதர் (பிற்காலத்தில்) ஏழு ஆண் குழந்தைகள் கிடைக்கப்பெற்றார். நூல்:- முஸ்னது இமாம் அபூஹனீஃபா, இப்னு இராக்கி அல்கினானிய்யீ, தன்ஸீஹுஷ் ஷரீஆ 2/143 ( ابْنُ عِرَاقٍ الْكِنَانِيُّ , تَنْزِيهُ الشَّرِيعَةِ ٢/١٤٣ )

 

இறைவனிடம், குழந்தை பாக்கியத்தை கோருவோர் உடலாலும் பொருளாலும் வணக்க வழிபாடுகள் புரியவேண்டும் என்கிறது இந்த நபிமொழி.

 

தொலைந்தது கிடைக்கப் பெற

 

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜயீ (ரலி) அவர்கள் கூறியதாவது‌. நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ( إِنَّ الْعَدُوَّ أَسَرَ ابْنِي وَجَزِعَتِ الْأُمُّ، فَمَا تَأْمُرُنِي؟ ) “நாயகமே! என்னுடைய மகன் சாலிமை (சிலைவணங்கிகளான) எதிரிகள் (ஒரு போரில்) கைதியாக பிடித்துக்கொண்டு சென்றுவிட்டனர். அதனால் எனது மனைவி மன உளைச்சலில் இருக்கிறாள். இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று வினவினேன். அப்போது அண்ணலார் என்னிடம், ( اتَّقِ اللَّهَ وَاصْبِرْ وَآمُرُكَ وَإِيَّاهَا أَنْ تَسْتَكْثِرَا مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ) "அல்லாஹ்வை பயந்துகொள். பொறுமையாக இரு. நீயும் உமது மனைவியும் 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி' என்பதை அதிகமாக ஓதி வாருங்கள்!" என்றார்கள். நாங்களும் அவ்வாறே ஓதி வந்தோம்.

 

சில நாட்களுக்குப்பின் ஓர் நள்ளிரவு நேரத்தில் எவரோ ஒருவர் வீட்டுக்கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தேன். காணாமல்போன என்னுடைய மகன் சாலிமும் மற்றும் நான்காயிரம் ஆடுகளும் நிற்கிறது. விடிந்ததும் இதைப்பற்றி அண்ணலாரிடம் கூறினேன். அப்போது அண்ணலார் எனது மகனை அழைத்து, என்ன நடந்தது? என்று விவரம் கேட்டார்கள்.

 

அப்போது என்னுடைய மகன் சாலிம், "நாயகமே! எதிரிகள் என்னை கொலை செய்வதற்கு கடத்திச் சென்றனர். ஆனால், அவர்கள் கடத்திச் சென்ற மாதம் போர் செய்ய தடுக்கப்பட்ட மாதமாகும். (அன்றைய அரபியர் முஹர்ரம், ரஜப், துல்கஃதா, துல்ஹஜ் ஆகிய நான்கு மாதங்களில் போர் செய்ய மாட்டார்கள்.) அதனால் என்னை கொலை செய்வதை தள்ளிவைத்துவிட்டு, என்னை கைதியாக்கி, ஆடுகள் மேய்க்க அனுப்பிவிட்டார்கள். மேலும், என்னை கண்காணிக்க ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஒருநாள் அவர் மது அருந்திவிட்டு மயங்கிவிட்டார். நான் இதுவே சந்தர்ப்பம் என கருதி அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து வந்து மதீனா நகரின் எல்லையை அடைந்த பின்னர் திரும்பிப் பார்த்தேன். நான் அவர்களிடம் கைதியாக இருந்தபோது மேய்த்துவந்த அந்த நான்காயிரம் ஆடுகளும் என்னுடன் ஓடி வந்துவிட்டது" என்று கூறினார்.

 

பிறகு அண்ணலார் என்னிடம், "நீர் ஓதி வந்த திருக்கலிமாவின் பலனால் உன்னுடைய மகனும் திரும்பக் கிடைத்துவிட்டார். இந்த நான்காயிரம் ஆடுகளும் உனக்குரியவையே!" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- சீரத் இப்னு இஸ்ஹாக், தஃப்சீர் குர்துபீ அத்தலாக் வசனம்-3

 

வறுமை நீங்க

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒரு நபித்தோழர் வந்து, "நாயகமே! உலகம் என்னை விட்டும் விரண்டோடுகிறது. என் கஷ்டம் நீங்கி, வளம்பெற ஏதேனும் வழி சொல்லுங்கள்" என்று கேட்டார். நபியவர்கள் அவரிடம்,  ( فَأَيْنَ أَنْتَ مِنْ صَلَاةِ الْمَلَائِكَةِ وَتَسْبِيحِ الْخَلَائِقِ وَبِهَا يُرْزَقُونَ ؟ ) வானவர்களின் தொழுகையை விட்டும், மேலும் எதைக்கொண்டு படைப்புகளுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படுகிறதோ அந்த இறைதியானத்தை விட்டும் நீர் எங்கே சென்றீர்?" என்று கேட்டார்கள். அவர், ( وَمَاذَا يَا رَسُولَ اللَّهِ ) "நாயகமே! அந்த வழிபாடு எது?" என்று வினவினார்.

 

நபியவர்கள், ( قُلْ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ أَسْتَغْفِرُ اللَّهَ مِائَةَ مَرَّةٍ مَا بَيْنَ طُلُوعِ الْفَجْرِ إِلَى أَنْ تُصَلِّيَ الصُّبْحَ تَأْتِيكَ الدُّنْيَا رَاغِمَةً صَاغِرَةً وَيَخْلُقُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ كُلِّ كَلِمَةٍ مَلَكًا يُسَبِّحُ اللَّهُ تَعَالَى إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَكَ ثَوَابُهُ ) "நீர் (தினமும்) ஃபஜ்ர் நேரம் உதயமாகி, பஜ்ர் தொழுகை தொழுது முடிப்பதற்குள் 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம் அஸ்தஃக்ஃபிருல்லாஹ்' என்ற இறைதியானத்தை நூறுமுறை ஓதி வருவீராக! மேலும், (அவ்வாறு வழமையாக ஓதி வந்தால்) உலகம் விருப்பத்துடன் சிறுமையடைந்தவாறு உம்மிடம் சரணடைந்துவிடும். வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் அந்த ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும் ஒரு வானவரை படைக்கின்றான். அந்த வானவர் மறுமைநாள் வரை அல்லாஹ்வை துதித்துக்கொண்டேயிருப்பார். அதன் நன்மைகளும் உமக்கு கிடைக்கும்” என்று கூறினார்கள்.

 

அவர் அதைக்கேட்டு, பிறகு அதை ஓதிவந்தார். சில நாள்கள் கடந்த பின் அவர் நபியவர்களிடம் வந்து, "நாயகமே! நான் இந்த தஸ்பீஹை ஓதிவந்த பிறகு உலகத்தின் செல்வங்கள் என்னை முன்னோக்கி வந்துவிட்டது. அது மிக நிரப்பமாகவும் இருந்தது. எந்தளவுகென்றால் அந்த செல்வங்களை எங்கே வைப்பது என்றே எனக்கு தெரியவில்லை அந்த அளவுக்கு அல்லாஹுத்தஆலா தந்துவிட்டான்" என்றார். நூல்:- கஸாயிசுல் குப்ரா, இஹ்யா

 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தனது குடும்பத்திலுள்ள ஏழ்மை நிலையை முறையிட்டு அது நீங்குவதற்கு பிரார்த்திக்கும்படி கோரினார். அதற்கு அண்ணலார் அவரிடம் (إذا دَخَلْتَ الْبَيْتَ فَسَلِّمْ إِنْ كَانَ فِيهِ أَحَدٌ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ أَحَدٌ فَسَلِّمْ عَلَيَّ، وَاقْرَأْ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ مَرَّةً وَاحِدَةً ) "நீங்கள் வீட்டுக்குள் நுழையும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு" என்று மொழிந்தவராகவும், வீட்டில் யாரும் இல்லாவிட்டால் என்னை மனதில் நினைத்து "அஸ்ஸலாமு அலைக்கும் அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு" என்று மொழிந்தவராகவும் மேலும், (112 வது) அல்இக்லாஸ் அத்தியாயத்தை ஒருமுறை ஓதியவராகவும் நுழையுங்கள்" என்று கூறினார்கள். அவரும் அவ்வாறே கடைபிடித்து  வந்தார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் ஏழ்மையை நீக்கி, வளத்தை கொடுத்தான். அவர் தனக்கு கிடைக்கப்பெற்ற வளத்திலிருந்து பக்கத்து வீட்டாருக்கும் வாரி வழங்கினார். நூல்:- தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் கபீர்


வலி நிவாரணம் பெற

 

உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று, "இறப்பு நெருங்கும் அளவுக்கு (கடுமையான உடல்) வலி எனக்கு உள்ளது" என்று முறையிட்டேன். அதற்கு நபியவர்கள், ( امْسَحْهُ بِيَمِينِكَ سَبْعَ مَرَّاتٍ ) "உமது வலக்கரத்தை வலியுள்ள இடத்தில் வைத்து ஏழு முறை தடவி, ( أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ ) ‏ 'நான் அல்லாஹ்விடம் அவனது கண்ணியத்தையும் ஆற்றலையும் முன்வைத்து (தற்போது) நான் உணர்கின்ற தீமையிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறுவீராக!" என்றார்கள்.

 

நான் அவ்வாறே செய்தேன். எனக்கு ஏற்பட்ட வலியை மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் போக்கிவிட்டான். எனவே, நான் என் குடும்பத்தாரிடமும் மற்றவர்களிடமும் உடலில் வலி ஏற்படும்போது இவ்வாறு செய்யுமாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நூல்:- அபூதாவூத்-3393, திர்மிதீ-2006 இப்னுமாஜா-3513, முஸ்னது அஹ்மத்

 

பாதுகாப்புப் பெற

 

அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் தான் (அனைத்தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவான். திருக்குர்ஆன்:- 41:36

 

தல்க் பின் ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அபூதர்தா (ரலி) அவர்களிடம், ( قَدِ احْتَرَقَ بَيْتُكَ ) “உங்கள் வீடு எரிந்துவிட்டது” என்று சொல்லப்பட்டது. அதற்கு அன்னார் ( مَا كَانَ اللَّهُ لِيَفْعَلَ ذَلِكَ ) "அல்லாஹ் அவ்வாறு செய்திருக்கமாட்டான்" என்று கூறினார்கள். அன்னாரிடம் இவ்வாறே மூன்று முறை கூறப்பட்டபோது, அன்னாரும் அதற்கு இவ்வாறு தான் பதிலளித்தார்கள். பிறகு ஒரு மனிதர் வந்து, ( يَا أَبَا الدَّرْدَاءِ إِنَّ النَّارَ حِينَ دَنَتْ مِنْ دَارِكَ طُفِئْتْ ) "அபூதர்தா (ரலி) அவர்களே! நெருப்பு உங்கள் வீட்டை நெருங்கும்போது அணைந்துவிட்டது" என்று கூறினார். அதற்கு அன்னார், ( قَدْ عَلِمْتُ ذَلِكَ ) "அது எனக்குத் தெரியும்" என்று கூறினார்கள்.

 

பிறகு அன்னாரிடம் ( مَا نَدْرِي أَيَّ قَوْلَيْكِ أَعْجَبَ ) "உங்களின் இரண்டு வார்த்தைகளில் எதைக் கொண்டு ஆச்சரியப்படுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. (அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொன்னீர்கள்?) என்று கேட்கப்பட்டது. பிறகு அன்னார், அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்ல நான் கேட்டுள்ளேன்.

 

( مَنْ قَالَهُنَّ أَوَّلَ نَهَارِهِ؛ لَمْ تُصِبْهُ مُصِيبَةٌ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَهَا آخِرَ النَّهَارِ لَمْ تُصِبْهُ مُصِيبَةٌ حَتَّى يُصْبِحَ: "اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، عَلَيْكَ تَوَكَّلْتُ، وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، مَا شَاءَ اللهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ" )

“இறைவா! நீயே என் இறைவன். வணங்கப்படுவதற்கு உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. உன் மீதே நான் பொறுப்பு சாட்டுகிறேன். நீயே கண்ணியத்திற்குரிய அரியணையின் இறைவன் ஆவாய். அல்லாஹ் நாடியது மட்டுமே நடைபெறும்; அவன் நாடாதது நடைபெறாது. மகத்துவமிக்கோனும் உயர்ந்தோனும் ஆகிய அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ, நன்மை செய்யும் ஆற்றல் பெறவோ (எவராலும்) முடியாது. நிச்சயமாக அல்லாஹ் அனைத்து வஸ்துகள் மீதும் ஆற்றல் பெற்றவன். மேலும் நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவு அனைத்து வஸ்துக்கள் மீதும் சூழ்ந்திருக்கிறது என்பதை நான் அறிவேன். இறைவா! என் மனதின் தீங்கிலிருந்தும், மற்ற படைப்புக்களின் தீங்கிலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக! நீ தான் அவற்றின் பிடிமானத்தை வைத்திருக்கிறாய். என் இறைவன் நேரான வழிகாட்டக்கூடியவன் ஆவான்.”

 

என்பதை யார் பகலின் ஆரம்பத்தில் ஓதுகின்றாரோ மாலையாகும் வரை அவருக்கு எந்த சோதனையும் ஏற்படாது. யார் பகலின் இறுதியில் இதை ஓதுகின்றாரோ மறுநாள் காலை வரை அவருக்கு எந்த சோதனையும் ஏற்படாது. (இதை நான் தினந்தோறும் காலை மாலை நேரங்களில் ஓதி வருகிறேன். எனவேதான், நான் அவ்வாறு கூறினேன்) நூல்:- அல்இலலுல் முத்தனாஹியா இப்னு ஜவ்ஸீ ( الْعِلَلُ الْمُتَنَاهِيَةُ ), தக்ரீஜுல் இஹ்யா இமாம் அல்இராக்கீ ( تَخْرِيجُ الْإِحْيَاءِ  )

أَخْرَجَهُ ابْنُ السُّنِّيِّ فِي عَمَلِ الْيَوْمِ وَاللَّيْلَةِ (58)،

 وَالْبَيْهَقِيُّ فِي دَلَائِلِ النُّبُوَّةِ (7/ 121، 122)، وَفِي الْأَسْمَاءِ وَالصِّفَاتِ (344)، وَالْحَافِظُ ابْنُ حَجَرٍ فِي نَتَائِجِ الْأَفْكَارِ (2/ 402)، وَالطَّبَرَانِيُّ فِي الدُّعَاءِ (343)، وَالْمُسْتَغْفِرِيُّ فِي الدَّعَوَاتِ كَمَا فِي دَاعِي الْفَلَاحِ لِلسُّيُوطِيِّ (ص39)، وَالْخَرَائِطِيِّ فِي مَكَارِمِ الْأَخْلَاقِ (461)، وَالرَّافِعِيُّ فِي التَّدْوِينِ فِي أَخْبَارِ قَزْوِينَ (4/ 53، 54)، وَالْأَصْبَهَانِيِّ فِي التَّرْغِيبِ وَالتَّرْهِيبِ (340

 

ஒருவர் தனக்கு தன் சொத்துக்களுக்கு தன்னை சார்ந்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று ஆசைப்படுவது நியாயமானதே. அதற்காக பல்வேறுபட்ட துஆக்களை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்  தந்திருக்கிறார்கள். அவர்களும் ஓதி வந்திருக்கிறார்கள். அதே போன்று இறையன்பில் இலயித்த இறைநேசர்களும் பல ஓதல்களை (அவ்ராத்களை) இயற்றி தந்திருக்கிறார்கள். அவைகளை நாம் ஓதுவது கொண்டு நம் பாவங்களின் மூலம் நாம் சம்பாதித்த இறைகோபத்தை நம்மால் தனிக்க முடியும் அவனுடைய (ரஹ்மத் என்ற) அருட்கடலில் நம்மால் மூழ்கவும் முடியும். இன்னும் இரு உலகத்திலும் எண்ணற்ற பலன்களை நம்மால் அடைந்து கொள்ள முடியும்.

 

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மூலமாக அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلاَءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلاَءٍ حَتَّى يُمْسِيَ )

“யாருடைய பெயரைக் கூறினால் விண்ணிலும் மண்ணிலும் உள்ள எந்தப் பொருளும் இடையூறு அளிக்க முடியாதோ, அத்தகு அல்லாஹ்வின் பெயரால் (உதவியும் பாதுகாப்பும் கோருகிறேன்) அவன் யாவற்றையும் செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்”

 

என்பதை  யார் (மாலையில்) மூன்று முறை ஓதினாரோ அவர் காலை நேரத்தை அடையும் வரை திடீர் ஆபத்து எதுவும் அவருக்கு நிகழாது. அவர் காலையில் அதனை ஓதினால் மாலை நேரத்தை அடையும் வரை திடீர் ஆபத்து எதுவும் அவருக்கு நிகழாது.

 

(இந்த நபிமொழியின் இரண்டாம் அறிவிப்பாளர்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுக்கு (உடலில் ஒரு பக்க உறுப்புகளை செயலிழக்கச் செய்யும்) பக்கவாத நோய் ஏற்பட்டது. அப்போது அவரிடமிருந்து இந்த நபிமொழியை செவியற்ற ஒருவர், அவரை (வியப்புடன்) பார்க்கலானார். அப்போது அபான் (ரஹ்) அவர்கள் அந்த மனிதரிடம், ( مَا لَكَ تَنْظُرُ إِلَىَّ فَوَاللَّهِ مَا كَذَبْتُ وَلَكِنَّ الْيَوْمَ الَّذِي أَصَابَنِي فِيهِ مَا أَصَابَنِي غَضِبْتُ فَنَسِيتُ أَنْ أَقُولَهَا ‏ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَيَّ قَدَرَهُ )  “உனக்கு என்ன ஆயிற்று!, என்னையே உற்று நோக்குகின்றீரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (இந்த நபிமொழி குறித்து) பொய்யுரைக்கவில்லை. (இந்த நபிமொழியின் பிரகாரம் நான் தினந்தோறும் இந்த இறைத்துதியை ஓதிக்கொண்டு தான் வந்தேன்) எனினும் எனக்கு இந்த நோய் ஏற்பட்ட நாளில் (வேறொரு பிரச்சினையினால்) நான் கோபமாக இருந்தேன். எனவே, அந்த (இறைத்துதிச்) சொற்களை கூற மறந்துவிட்டேன். எனவே, அன்றைய நாளில் அல்லாஹ் என் மீது விதித்திருந்ததை நிறைவேற்றிவிட்டான்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4425, திர்மிதீ-3300, இப்னுமாஜா-3859 முஸ்னது அஹ்மத்

 

துன்பம் நேரும்போது

 

அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப  (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்றும், ( اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا )  “இறைவா! எனக்கு ஏற்பட்ட இத்துன்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக! இதற்கு மாற்றாக இதைவிடச் சிறந்ததை எனக்கு வழங்குவாயாக!” என்றும் கூறினால்,  அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை" என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

என் முதல் கணவர் அபூ சலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் "அபூ சலமா விட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்கமுடியும்? அண்ணலாரிடம் முதன்முதலில் நாடு துறந்து வந்த குடும்பம் (அவருடைய குடும்பம் தான்)" என்று எனக்கு நானே கூறி கொண்டேன். ஆயினும் (அண்ணலாரின் கூற்றுக்கேற்ப) இன்னாலில்லாஹி... என்று நான் சொன்னேன். பிறகு எனக்கு அண்ணலாரையே மணந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அல்லாஹ் அபூசலமாவுக்கு மாற்றாக, அவரைவிடச் சிறந்தவராகிய அண்ணலாரையே எனக்கு (இரண்டாவது கணவராக) வழங்கிவிட்டான்.   நூல்:- முஸ்லிம்-1674, அபூதாவூத்-2712, இப்னுமாஜா-1437, முஸ்னது அஹ்மத், ஹாகிம்


இக்கட்டான சூழ்நிலையில்  

 

(கஷ்டத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய கஷ்டங்களை நீக்குபவன் யார்? இப்பூமியில் உங்களை வாழையடி வாழையாக வசிக்கச் செய்கின்றவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) உங்களில் படிப்பினை பெறுபவர்கள் வெகு சொற்பமே. திருக்குர்ஆன்:- 27:62

 

அஸ்மா பின் உமைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ( أَلَا أُعَلِّمُكِ كَلِمَاتٍ تَقُولِينَهُنَّ عِنْدَ الْكَرْبِ ) "நான் உனக்குச் சில துதிச் சொற்களை கற்றுத் தரட்டுமா? அவற்றை துன்பம் ஏற்படும் போது ஓதுவீராக. (அதன் மூலம் நிவாரணம் பெறலாம்.)" என்று கூறினார்கள். அவை: ( أَللَّهُ أَللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا ) பொருள்: அல்லாஹ் அல்லாஹ் என் இறைவா! உனக்கு எதையும் நான் இணை கற்பிக்கமாட்டேன். நூல்:- அபூதாவூத்-1304, இப்னுமாஜா-3872, இப்னு ஹிப்பான்

 

ரோமர்கள் முஸ்லிம்களை கைதுசெய்து தூக்கிலிட்டனர். அவர்களில் ஒருவராக இருந்த அப்துர் ரஹ்மான் பின் ஸியாத் (ரஹ்) அவர்களை தூக்குமேடையில் ஏற்றியபோது ( أَللَّهُ أَللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا ) என்று முணுமுணுத்தார். இதை கவனித்த அதிகாரிகளில் ஒருவர் “நிறுத்து நிறுத்து” என்று கூறியவாறு என்னிடம் வந்து "இப்போது என்ன முணுமுணுத்தாய்" என்று கேட்டார். நான் எங்கள் தலைவர் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஷ்டமோ கவலையோ ஏற்பட்டால் இவ்வாறு ஓதி வருமாறு கூறினார்கள். எனவே அதைத் தான் இப்போது ஓதினேன்" என்று கூறினார். இதை செவியுற்ற அந்த அதிகாரி, "இந்த தகவல் எங்கள் வேதம் இன்ஜீலிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளதே!" என்று கூறியவாறு, நமது வேதமான இன்ஜீலில் உள்ளதை இவர் ஓதியதால் இவரை விடுதலை செய்யுங்கள்” என்று உத்தரவிட்டார்.


 கடன்கள் நீங்க

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அங்கு அன்சாரிகளைச் சேர்ந்த அபூஉமாமா (ரலி) அவர்கள் அமர்ந்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். அப்போது நபியவர்கள், ( يَا أَبَا أُمَامَةَ مَا لِي أَرَاكَ جَالِسًا فِي الْمَسْجِدِ فِي غَيْرِ وَقْتِ الصَّلاَةِ ) "அபூஉமாமா! தொழுகை அல்லாத நேரத்தில் பள்ளிவாசலில் நீர் அமர்ந்திருப்பதை நான் பார்க்கிறேனே ஏன்?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு அவர், "நாயகமே! கடன்களும் அதனால் ஏற்பட்ட கவலைகளும் என்னைப் பற்றி கொண்டுள்ளன. (அதனால் தான் பள்ளிவாசலுக்கு வந்தேன்)" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( أَفَلاَ أُعَلِّمُكَ كَلاَمًا إِذَا أَنْتَ قُلْتَهُ أَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّكَ وَقَضَى عَنْكَ دَيْنَكَ ) "உமக்கு நான் ஒரு பிரார்த்தனையை கற்றுத்தரட்டுமா? அதைக் கொண்டு நீ பிராத்தித்தால் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் உன்னுடைய கவலைகளை போக்கிவிடுவான்; உன்னுடைய கடன்களையும் நீக்கிட அல்லாஹ் வழி ஏற்படுத்துவான்" என்று கூறினார்கள்.

 

அதற்கு அபூஉமாமா (ரலி) அவர்கள், "நாயகமே! (அதைக்) கற்றுத் தாருங்கள்" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( قُلْ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ ) "(அபூஉமாமா!) காலையிலும் மாலையிலும், இறைவா! (வருங்காலத்தைப் பற்றிய) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்து விட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக்கு கோருகிறேன். இறைவா! இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக்கு கோருகிறேன். இறைவா! கோழைத்தனத்திலிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன். இறைவா! கடன் சுமையிலிருந்தும் பிற மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக்கு கோருகிறேன்.

 

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார். ( فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمِّي وَقَضَى عَنِّي دَيْنِي ) இந்தப் பிரார்த்தனையை நான் செய்து வந்தேன். மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் என்னுடைய கவலைகளை நீக்கி, என்னுடைய கடன்களை இல்லாமல் ஆக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டான். நூல்:- அபூதாவூத்-1330

 

நிரம்ப கிடைக்கப் பெற  

 

ஒருவர் ஒரு நற்காரியம் செய்தால் அதுபோன்ற பத்து அவருக்கு உண்டு. திருக்குர்ஆன்:-6:160

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ ) தர்மம் செல்வத்தை குறைப்பதில்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5447, திர்மிதீ-2247

 

கைஸ் பின் ஸல்உ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. என் உடன் பிறந்தவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று நான் அதிகம் செலவு செய்வதாக முறையிட்டனர். அப்போது நான் இடைமறித்து, "நாயகமே! நான் என் தோப்பில் இருந்து எனக்குரிய பங்கை எடுத்து அதிலிருந்து அல்லாஹ்வின் பாதையிலும், என்னைச் சந்திக்க வருபவர்களுக்காக உணவிலும் செலவழிக்கிறேன். (அவ்வளவுதான்)" என்று கூறினேன். அப்போது நபியவர்கள் என் நெஞ்சின் மீது தமது திருக்கரத்தை வைத்து, "அறம் செய்வீராக! அல்லாஹ் உமக்கு அறம் செய்வான்!" என்று கூறினார்கள்.

 

(நபியவர்கள் சொல்படி நடந்தேன்) சிறிது காலம் சென்றது. நான் அறப்போருக்கு புறப்பட்டேன். அப்போது என்னிடம் சொந்த வாகனம் இருந்தது. என் குடும்பத்தினர் அனைவரையும்விட  நானே அதிக செல்வம் உடையவனாக இருந்தேன்.

 

தர்மம் செய்வதால் செல்வம் குறைந்துவிடும் என்றுதான் பொதுவாக மக்கள் நினைக்கின்றனர். அது தவறான எண்ணமாகும். ஒரு மனிதன் இறைவனுக்காக தர்மம் செய்யும்போது. அவன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியார்களின் பட்டியலில் சேர்ந்துவிடுகிறான். எனவே, இறைவன் தனக்கு நன்றி செய்கின்ற அடியார்களுக்கு மென்மேலும் அள்ளித் தருவதையே தமது  நடைமுறையாக வைத்துள்ளான்.

 

எனவே, நாம் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளையும், (தஸ்பீஹ் எனும்) இறை தியானங்களையும் கற்றறிந்து, மனத்தூய்மையுடன் ஓதி, அருள்வளங்களைப் பெற அல்லாஹுத்தஆலா நமக்கு நல்லுதவி புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 


1 comment:

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...