Search This Blog

Friday, 6 October 2023

பரிந்துரை செய்வோம்

 

பரிந்துரை செய்வோம்

 

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا

 

எவரேனும் யாதொரு நன்மையானவற்றுக்கு பரிந்துரை செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்கு உண்டு. (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு எவரேனும் பரிந்துரை செய்தால் அத்தீமையிலிருந்தும் அவருக்கு ஒரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 4:85

 

மனித குலத்திற்கு சேவை செய்யும் வழிகள் ஏராளமுண்டு. அதில் ஒன்று பரிந்துரை செய்தல். நம்மால் முடியுமானால் தாராளமாக பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், நற்காரியத்திற்கு மட்டும் பரிந்துரை செய்ய முன் வர வேண்டும். அதற்கு நன்மையும் கிடைக்கும். அதை விடுத்து தீய காரியத்திற்கு நாம் பரிந்துரை செய்வோமேயானால் அந்த தீமையின் பாதிப்பு எப்படியாவது நம்மை வந்து சேரும்.

 

தேவையுடையவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தால், தம்முடன் அமர்ந்திருப்பவர்களை நோக்கி, ( اشْفَعُوا تُؤْجَرُوا ) "(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்" என்று கூறுவார்கள். அறிவிப்பாளர்:- அபூமூசா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1432, முஸ்லிம்-5123

 

நம்மால் பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும், உதவி செய்பவரை கண்டறிந்து அவரிடம் நமக்குள்ள அறிமுகத்தை பயன்படுத்தி பிறருக்கு உதவுமாறு பரிந்துரை செய்தால் அதற்காக நமக்கும் நன்மை கிடைக்கும். ஆட்சியாளர், உறவினர், நண்பர்கள் என யார் மூலம் உதவி கிடைக்குமோ அவர்களை அணுகி பிரச்சனைகளை தீர்க்கவோ, உதவிகள் புரியவோ பரிந்துரைக்கலாம்.

 

பரிந்துரை செய்வதில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது. தேவையுடையோர் என்றால் காலதாமதமின்றி உடனடியாக பரிந்துரைக்க வேண்டும். மேலும், நம்முடைய பரிந்துரையின் தேவை நற்காரியத்திற்காகவா? அல்லது தீய காரியத்திற்காகவா? அல்லது பிறரை ஏமாற்றிவிட்டு தான் முந்திக் கொள்வதற்காக வா? என்றெல்லாம் சிந்தித்த பிறகே பிறருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

 

குறைவின்றி கிடைக்கும்

 

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் மதிய வேளையில் செருப்பு அணியாதவர்களாகவும் ஆடை குறைந்த நிர்வாணிகளாகவும் முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களது ஏழ்மை நிலையை கண்ட நபியவர்கள் முகம் நிறம் மாறியது. (ஒருவித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லும்படி கூறினார்கள். பிறகு ளுஹர் தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது திருமறையின் (4:1, 59:18) சில வசனங்களை ஓதினார்கள்.

 

உடனே நபித்தோழர்கள் தம்மிடமிருந்த பொற்காசுகள், வெள்ளிக்காசுகள், ஆடைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை கொண்டு வந்து பெரும் குவியலாகச் சேர்த்துவிட்டனர். அப்போது நபியவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதை கண்டேன்.

 

நபியவர்கள், ( مَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ وَمَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَىْءٌ ‏"எவர் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்கு பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு. அதற்காக அவர்களது (அமல் செய்தவர்) நன்மையில் எதுவும் குறைந்து விடாது. அவ்வாறே, எவர் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும், அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் உண்டு. அதற்காக அவர்களது பாவத்தில் எதுவும் குறைந்து விடாது" என்று கூறினார்கள். பின்பு தர்மமாகக் கிடைத்த பொருள்களை முளர் குலத்தினருக்கு பங்கிட்டு கொடுத்தார்கள். நூல்:-முஸ்லிம்-1848, நசாயீ

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு (தாங்க முடியாத பசி) துன்பம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். நபியவர்கள், தம் துணைவியாரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதும் இருக்கிறதா என்று கேட்டு வரச் சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை.

 

அப்போது நபியவர்கள், தம் தோழர்களை நோக்கி! ( أَلاَ رَجُلٌ يُضَيِّفُ هَذِهِ اللَّيْلَةَ يَرْحَمُهُ اللَّهُ ) "இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரி தோழர்களில் ஒருவர் (அபூதல்ஹா - ரலி அவர்கள்) "நான் இவருக்கு விருந்தளிக்கிறேன்" என்று கூறி, அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நூல்:- புகாரீ-4889

 

கருணைக் கடலான அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் உதவி கேட்டு வந்தால் மறுப்பு கூறாமல் இயன்றவரை உதவி செய்வார்கள். இயலாது போனால் பிறரிடம் அதற்காக பரிந்துரை செய்வார்கள். இதுவே நபியவர்களின் குணமாகும். நற்செயலை செய்வதும், மற்றவருக்கு வழிகாட்டுவதும், அதில் ஈடுபடும்படி மற்றவர்களை தூண்டிவிடுவதும் ஓர் நற்செயலாகும்.

 

பிறர் நம்மிடம் உதவி கேட்டு வந்தால் முடிந்தவரை அதற்காக நாமே முயற்சி செய்ய வேண்டும். கஞ்சத்தனத்தால் நம் கைகளை முடக்கிக்கொண்டு பிறரிடம் இதற்காக பரிந்துரை செய்தல் தவறாகும். இதனால் மக்களிடம் நமக்குள்ள மதிப்பு குறைந்து போகலாம். நாம் எவரிடம் பரிந்துரை செய்கிறோமோ அவர் நம்மிடம் "நீயே இதை செய்யலாமே இதற்கு உன்னிடம் போதிய வசதி உள்ளது தானே" என்று திருப்பி கேட்டுவிட்டால் அது நமக்கு அசிங்கமாகிவிடும்.

 

எவர் நம்மிடம் பரிந்துரை செய்தாலும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும். பரிந்துரை செய்பவர் ஏழை, சமுதாயத்தில் அந்தஸ்து இல்லாதவர், பெரும் பாவி என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. பரிந்துரை போன்ற நற்செயலில் ஈடுபடும் போது முஸ்லிம் பிற சகோதர சமயத்தவர்கள் என்ற பாகுபாடு தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற சகோதர சமயத்தவர்களுக்கு உதவியும் செய்வார்கள். தேவைக்கேற்ப பரிந்துரையும் செய்வார்கள். தெருவில் போகிற யாராவது நம்மிடம் யாசித்தால் முடிந்தளவு உதவிட வேண்டும். இல்லையெனில் உதவி செய்பவரை அவருக்கு அடையாளப்படுத்த வேண்டும். முடிந்தால் அவருக்கு பரிந்துரை செய்யலாம்.

 

அவரவர் விருப்பம்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அடிமையாக இருந்த மஃகீஸ் என்பவர் தனது மனைவி பரீரா மீது அதிக பெரியமாக இருந்தார். அவர் (பரீரா மணமுறிவால் தம்மை பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவுக்கு அழுத வண்ணம் பரீரா பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ( يَا عَبَّاسُ أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا ‏  ) அப்பாஸ்! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸ் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள்.

 

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபியவர்கள், ( لَوْ رَاجَعْتِهِ )  முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா? என்று  பரீராவிடம் வினவினார்கள். அதற்கு பரீரா, நாயகமே! எனக்கு தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று வினவினார். நபியவர்கள், ( إِنَّمَا أَنَا أَشْفَعُ ) "(இல்லை,) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்" என்றார்கள். அப்போது பரீரா, ( لاَ حَاجَةَ لِي فِيهِ ) "அப்படியானால் அவர் எனக்கு தேவையில்லை" என்று கூறிவிட்டார். நூல்:- புகாரீ5283, பத்ஹுல் முல்ஹிம்

 

இஸ்லாத்தில் ஒரு பெண் தான் சுயமாக தீர்மானம் செய்வதற்கு முழு உரிமை உடையவள். இந்த உரிமையை எவரும் பறிக்கக் கூடாது. பரிந்துரை செய்வது நற்செயலாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பமாகும். பரிந்துரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பரிந்துரை செய்தவர் கோபப்படக்கூடாது. ஆனாலும், பரிந்துரை செய்தவருக்கு அதற்கான நற்கூலி உண்டு என்பதை இந்நபிமொழி தெளிவு படுத்துகிறது.

 

சிலர் தனக்கு ஏதேனும் கஷ்ட நஷ்டங்கள், நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் வெட்கத்தால் அதை பிறரிடம் சொல்லி உதவி தேட மாட்டார்கள். உதவியோ, பரிந்துரையோ என்னிடம் நேரடியாக கேட்டு வந்தால் மட்டுமே செய்வேன் என்று இறுமாப்புக் கொள்ளாமல், சிரமப்படுவோரின் செய்தி நமக்கு வந்துவிட்டாலே ஓடோடிச் சென்று இயன்றளவு உதவியோ பரிந்துரையோ செய்ய வேண்டும். இதுவே, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நற்பண்பாகும். ஓடோடிச் சென்று உதவிகள் புரிய பூகம்பம், சுனாமி, பெரும்வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வரவேண்டும் என்ற அவசியமில்லை.

 

நமக்கு நல்லதாக, சிறந்ததாக தெரிவதில் பிறருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். நான் பரிந்துரை செய்துவிட்டால் அது உடனே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு எதிராக எவரும் மறுத்தோ, எதிர்த்தோ பேசக்கூடாது என்று எண்ணுவது ஆணவத்தின் அடையாளமாகும்.

 

யாராக இருந்தாலென்ன?

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது மக்ஸுமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாலள். அந்தப் பெண் தொடர்பாக கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் (பேசி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க) சொல்வது யார்? என்று குறைஷியர் ஆலோசித்து, நபியவர்களின் செல்லப்பிள்ளை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தேர்வு செய்தனர்.

 

அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் பரிந்து பேசினார். அப்போது நபியவர்கள், ( أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ) "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்ற விடாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரை செய்கின்றாய்?" என்று கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரையாற்றினார்கள்.

 

( أَيُّهَا النَّاسُ إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا ) மக்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் அழிந்து போனதற்கு காரணமே (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால், அவர்கள் அவரை தண்டிக்காமல் விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால், அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். இறைவன் மீதாணையாக! இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி இருந்தாலும் நான் அவரது கையை துண்டித்தே இருப்பேன். நூல்:- புகாரீ-3475, முஸ்லிம்-3485

 

குற்றவியல் தண்டனைகளில் தலையிட்டு வேண்டியவருக்கு பரிந்து பேசுவது தடை செய்யப்பட்டதாகும். பணம் வாங்கிக் கொண்டு பொய் வழக்குகளுக்கு வழக்காடும் வக்கீலை போல் ஒரு தவறை நிலைநாட்டுவதற்காக அல்லது மெய்யை பொய்யாக்குவதற்காக பரிந்து பேசுவதும் இஸ்லாம் வெறுத்த ஒன்றாகும்.

 

பாவத்திற்கு துணை போவது பெரும் பாவமாகும். தனது ஆட்சி, அதிகாரம், பாசம், நட்பு இவைகளை கருவியாகப் பயன்படுத்தி தீய காரியங்களுக்கு பரிந்துரை செய்யக்கூடாது. தகுதி இல்லாதவர்களெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு மக்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு காரணம் தீய பரிந்துரையேயாகும்.

 

பதவிக்கு உள்ள பொறுப்பு

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ شَفَعَ لأَخِيهِ بِشَفَاعَةٍ فَأَهْدَى لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ أَبْوَابِ الرِّبَا ) எவரேனும் ஒருவர் தன்னுடைய சகோதரனுக்கு பரிந்துரை செய்து அதற்காக அவருக்கு அன்பளிப்பு அனுப்பப்பட்டு, அதை அவர் பெற்றுக் கொண்டால் நிச்சயமாக அவர் வட்டியின் பெரும் வாசலுக்குச் சென்று (நுழைந்து)விட்டார். அறிவிப்பாளர்:- அபூ உமாமா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3541, புலூகுல் மராம்-862

 

பிரபல தாபிஉ ஹசன் பின் சஹ்ல் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதனை ஹசன் (ரஹ்)  அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்தார்கள். பயன் பெற்ற மனிதர் நன்றி கூற வந்தார். அவரிடம் ஹசன் (ரஹ்) அவர்கள், "எதற்காக எனக்கு நன்றி சொல்கிறீர்? நாங்கள் பொருள்களுக்கு ஸகாத் எனும் கடமை இருப்பது போல், பதவிக்கும் ஸகாத் இருப்பதாகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.

 

பட்டம், பதவி, செல்வாக்கு ஆகியவை அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அருட்கொடைக்காக அல்லாஹ்வை புகழ்ந்து சமுதாய முன்னேற்றத்திற்காக அவற்றை பயன்படுத்த வேண்டும். சிலர் தங்களது செல்வாக்கின் மூலம் ஒருவருக்கு பதவி கிடைப்பதற்கும், பதவி உயர்வுக்கும், சிறந்த மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். அதற்குப் பகரமாக ஏதேனும் அன்பளிப்பை பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு அன்பளிப்புகள் தடை செய்யப்பட்டதாகும். அன்பளிப்பு தர வேண்டும் என நிபந்தனை இல்லாமல் கொடுக்கப்பட்டாலும் அதைப் பெறுவதும் குற்றமாகும்.

 

மனிதனுக்கு உலகத்தில் வாழும்போது பிறரின் பரிந்துரை தேவைப்படுகிறது. மறுமைநாளிலும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிந்துரை தேவைப்படுகிறது.

 

நம்முடைய சமுதாயத்தில் சிலர், கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவும், சிலருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சிலருக்கு நரகம் விதியாக்கப்பட்ட பின்பு அவர்கள் நரகம் செல்லாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவும், சிலர்கள் நரகத்திற்குச் சென்ற பின் அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழைய வேண்டும் என்பதற்காகவும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்ற நபிமொழிகள் புகாரீ, முஸ்லிம் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

உணவு, உடை, உறைவிடம், போதிய கல்வியறிவு, போதிய வேலைவாய்ப்பு, போதிய மருத்துவ வசதி ஆகியவைகளில் எது பிறருக்கு தேவையாக இருந்தாலும் அது அவர்களுக்கு கிடைத்திட இயன்றவரை நாம் உதவி செய்ய வேண்டும். நம்மால் இயலாது போனால் இவைகளை நிறைவு செய்து தரும் வசதியுள்ள கொடை உள்ளம் கொண்டவர்களிடம், இது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் பரிந்துரை செய்ய வேண்டும். இதுவே, இஸ்லாம் போதிக்கும் நல்லறமாகும்.

 

மனித சமுதாயத்தின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் இஸ்லாத்தின் பார்வையில் இறை வழிபாடே ஆகும். ஆகவே, நாம் பிறரின் நற்காரியங்களுக்கு இயன்றவரை பரிந்துரை செய்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...