நோய் நொடிகள்
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ
وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ
الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ
آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
உங்கள் முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கும் வராமலேயே நீங்கள் சொர்க்கம்
புகுந்துவிடலாம் என எண்ணிக் கொண்டீர்களா? வறுமையும் பிணியும் அவர்களை பீடித்தன. அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று இறைத்தூதரும்
மற்றுமுள்ள இறைநம்பிக்கையாளர்களும் கேட்கும் அளவுக்கு (பல துன்பங்களால்) அலைக்கழிக்கப்பட்டனர். அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் உதவி மிக அருகில் உள்ளது. திருக்குர்ஆன்:- 2:214
நோயும் நலமும் மனித வாழ்வில் இயற்கையாகும். உடல் இருந்தால் நோயும் இருக்கும் நோய்க்கு
வயது வரம்போ, ஆண் பெண் பால் வகையோ,
இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடோ எதுவும் தெரியாது.
அது யாரையும் கேட்டு வருவதோ போவதோ இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நோயாளியாக வாழ்ந்தவரும்
இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நோயே இல்லாமல் வாழ்பவரும் இல்லை.
நோய் என்றவுடன் கவலையும் பதற்றமும் நம்மை சூழ்ந்து விடுகின்றன. ஆனால், வாழ்க்கை என்பது ஆரோக்கியம், நோய், இன்பம், துன்பம்,,
புன்னகை, கண்ணீர் என் எல்லாம் கலந்தே இருக்கும் என்பதை விளங்கி இன்முகத்துடன்
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லாம் நன்மைக்கே
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ وَصَبٍ وَلاَ
نَصَبٍ وَلاَ سَقَمٍ وَلاَ حَزَنٍ حَتَّى الْهَمِّ يُهَمُّهُ إِلاَّ كُفِّرَ بِهِ
مِنْ سَيِّئَاتِهِ ) ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி,
துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு
பகரமாக அவருடைய சில பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அபூசயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5030
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ் கூறுகிறான்: என் கண்ணியத்தின்
மீதும் என் மேன்மையின் மீதும் ஆணையாக! நான் எவரை மன்னித்துவிட நாடுகிறேனோ அவரை அவருடைய
பிடரியில் இருக்கும் எல்லா பாவங்களையும் முழுமையாக அகற்றிவிடும் வரை அவருடைய உடலில்
நோய் நொடிகள் மற்றும் வாழ்க்கையில் சிரமத்தை கொடுக்காமல் நான் அதிலிருந்து அப்புறப்படுத்துவதில்லை
அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ரஸீன்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்
கடுமையான காய்ச்சலால் சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள், (
مَا
مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مِنْ مَرَضٍ فَمَا سِوَاهُ إِلاَّ حَطَّ اللَّهُ
بِهِ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا ) "ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு எந்த துன்பமாயினும் (அதற்கு ஈடாக)
மரம் தன் இலையை உதிர்த்து விடுவதைப் போல் அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை"
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5648, முஸ்லிம்-5023
ஒரு இறைநம்பிக்கையாளர் தமது வாழ்க்கையில் ஏற்படும் நோய் நொடிகள், துயரங்கள், இயற்கை சீற்றங்கள், இடர்பாடுகள், கவலைகள் ஆகிய அனைத்து
சோதனைகளும் அவருடைய தவறுகளுக்குப் பரிகாரமாக அமையும். அவை பெரிய சோதனைகளானாயிலும் பெரிய
சோதனைகள் ஆனாலும் சரி, காலில் தைக்கும் முள்
போன்ற சிறிய சோதனைகளானாலும் சரி. தவறுகள் மன்னிக்கப்படுவது மட்டுமின்றி நன்மைகளும்
எழுதப்படும். மறுமையில் பதவி உயர்வு கிடைக்கும்.
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு பெரும் பெரும் நோய் நொடிகள், விபத்து துன்பம், துயரங்கள் ஏற்பட்டாலும் அவர் பொறுமையை கைவிடுவதில்லை. பொறுமை மற்றும் நிலைகுலையாமையின்
உருக்கமாக உருவமாகத் திகழ்ந்து பாறை போல் உறுதியாக சத்தியப்பாதையில் நிலைத்து நிற்கின்றார்.
இறைநாட்டத்தின்படியே அனைத்தும் நடைபெறுகிறது. இறைவனின் எந்த ஒரு கட்டளையிலும் விவேகம்
மற்றும் நன்மைகள் இருக்கும். இறைவன் எது செய்தாலும் மக்களின் நன்மைக்காகவே செய்கின்றான்.
நிச்சயமாக இதிலும் நன்மையின் அம்சம் இருக்கக்கூடும் எனும் சிந்தனை இறைநம்பிக்கையாளருக்கு
ஆன்மீக அமைதியையும், மனத்திருப்தியையும்
ஈட்டி தருகிறது.
இது ஒரு வகையான நன்மை
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
(ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசிகளில்
ஒரு பெண்மணியை உமக்கு காட்டட்டுமா?" என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அவர்கள், "இதோ இந்த கருப்பு நிற பெண்மணிதான். இவர் (ஒருமுறை) அருமை நாயகம்
(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால்
பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது.
ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'
என்றார். நபியவர்கள், ( إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ
أَنْ يُعَاف ) 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு ஈடாக) உமக்கு சொர்க்கம்
கிடைக்கும். நீ விரும்பினால் உமக்கு குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'
என்று கூறினார்கள்.
அப்பெண்மணி, 'நான் பொறுமையாகவே
இருந்து விடுகிறேன் என்று கூறினார். (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து
கொள்கிறது. அப்படி திறக்காமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபியவர்கள் அப்பெண்ணுக்காக
பிரார்த்தித்தார்கள்" என்றார்கள். நூல்:- புகாரீ-5652, முஸ்லிம்-5032
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ عِظَمَ الْجَزَاءِ مَعَ عِظَمِ
الْبَلاَءِ وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ قَوْمًا ابْتَلاَهُمْ فَمَنْ رَضِيَ
فَلَهُ الرِّضَا وَمَنْ سَخِطَ فَلَهُ السَّخَطُ ) சோதனை பெரிதாக இருக்கும் போது, (அதை பொறுத்துக் கொள்வதற்கான) நன்மையும் பெரிதாக
இருக்கும். ஒரு சமூகத்தை அல்லாஹ் நேசித்தால், அவர்களை அவன் சோதிப்பான். (அதனை) யார் பொருந்திக்கொண்டாரோ அவருக்கு
(இறைவனின்) அன்பு கிடைக்கும்; யார் வெறுத்தாரோ அவருக்கு
(இறைவனின்) வெறுப்பே கிடைக்கும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2320,
இப்னுமாஜா-4021
நிச்சயமாக மேலான பலன்கள் அதிகமான சோதனையுடன் கிடைக்கும்.
இறைநம்பிக்கையாளரின் பொறுமையை நோய் போன்ற சோதனைகளின் மீது பரிசோதித்து அதில் யார்
வெற்றி அடைந்தார்களோ அவர்களின் வியாதியை நீக்கி அவர்களின் அந்தஸ்தை மென்மேலும் உயர்த்துவது
அல்லாஹ்வின் நோக்கமாக இருக்கலாம் தகுந்த நேரத்தில் பொறுமையை மேற்கொண்டதாலேயே அந்த
கருப்பு நிற பெண்மணி சொர்க்கப் பெண்ணாகத் திகழ்ந்தார்.
நோய் நொடிகள் ஏற்பட்ட நேரத்தில் பொறுமையை இழந்து இறைவனை திட்டித் தீர்ப்பதால் இறைவனின்
கோபத்திற்கு ஆளாகி மரணத்திற்கு அந்த நோயை காரணமாக அமைந்து விடலாம். இந்நிலையை விட்டும்
அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக.
உலக வாழ்க்கை என்ற உலை களத்திற்குள் நுழைந்து கஷ்டங்களையும் சோதனைகளையும் ஏற்று
தலைநிமிர்ந்து நடந்து செல்பவர்களை கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம். இதற்காக அது,
சோர்ந்து போகின்றவர்களை அவமானப்படுத்துவதில்லை.
அவர்களையும் தட்டி எழுப்பி தலை நிமிர்ந்து வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள பணிக்கிறது.
இந்த உலகில் படும் துன்ப துயரங்களின் அடிப்படையில் தான் மறுமைநாளில் நற்கூலியோ,
தண்டனையோ வழங்கப்படும் என்பதால் இறைவன் மனிதர்களை
கஷ்டப்படுத்துகிறான் என்பதாக எண்ணி விடக்கூடாது.
சகித்துக்கொள்வது
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. 'உம்முஸ் ஸாயிப்' என்ற பெண் காய்ச்சலால்
நடுங்கிக் கொண்டிருந்தபோது அப்பெண், "காய்ச்சலில் அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும்" என்று கூறினார். உடல்
நலம் விசாரிக்கச் சென்றிருந்த கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் இதைச் செவியற்றபோது, ( لاَ تَسُبِّي الْحُمَّى فَإِنَّهَا تُذْهِبُ
خَطَايَا بَنِي آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ ) "(பெண்ணே!) காய்ச்சலை ஏசாதே! ஏனெனில், இது கொல்லனின் உலை, இரும்பின் துருவை அகற்றி விடுவதைப் போல், மனிதர்களின் தவறுகளை அகற்றி விடுகிறது" என்று
கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5031
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர்களில் ஒருவர் உடல் நலிவுற்று கோழிக்குஞ்சை
போல் நலிந்து பலவீனத்துடன் இருந்தார். அப்போது அவரிடம், கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் "நீ ஏதேனும் பிரார்த்தித்துவந்தாயா?” என்று வினவினார்கள்.
அதற்கு அவர் ஆம்!; நான் "இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை
முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்கு தந்துவிடு!" என்று பிரார்த்தித்து வந்தேன்”
என்று கூறினார்.
அதைச் செவியேற்ற நபியவர்கள் (வியப்புடன்), ( سُبْحَانَ اللَّهِ لاَ تُطِيقُهُ أَفَلاَ قُلْتَ اللَّهُمَّ آتِنَا فِي
الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ) "அல்லாஹ் தூயவன். (சுப்ஹானல்லாஹ்) உன்னால் அதை தாங்க முடியாது"
என்று கூறிவிட்டு, "நீ இறைவா! எனக்கு
இம்மையிலும் நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து
என்னைக் காப்பாயாக! என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். பிறகு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான். நூல்:- முஸ்லிம்-5216
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கடும் நோயால் பீடிக்கப்பட்டிருந்த போது, ( لَوْلاَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ ) "அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டி பிரார்த்திக்க வேண்டாமென எங்களுக்கு தடை விதித்திருக்காவிட்டால், அதை வேண்டி நான் பிரார்த்தித்திருப்பேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-7234
எப்போது நோய் நொடிகள் ஏற்பட்டாலும் அதை சபிக்கக்கூடாது. ஏனெனில், நோய் போன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒருவர்
அவற்றைத் தாங்கிக் கொண்டு சாதனை படைக்கும் போது அவரது இறைநம்பிக்கை புடம் போட்ட தங்கமாய்
தூய்மையடைகிறது.
ஒரு நோய் அல்லது விபத்து ஏற்படும்போது துக்கத்தை வெளிப்படுத்துவது இயற்கையான செயல்
தான். ஆனால், ஒரு விஷயத்தைக் குறித்து
நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய் எனும் சோதனை கடுமையானதாக இருக்கும் நிலையில்
நம் நாவில் இருந்து சத்தியத்திற்கு மாறான எந்தச் சொல்லும் வெளிப்பட்டு விடக்கூடாது.
பொறுமை மேற்கொள்வதற்கான நன்றி செலுத்துவதற்கான நன்னடத்தையை கைவிட்டு விடக்கூடாது.
"ஒரு நோயாளியின் பிரார்த்தனை உடனே ஏற்றுக் கொள்ளப்படும்"
என்கிறது ஒரு நபிமொழி.
அப்படியிருக்க, இம்மையிலேயே தண்டனையை
விரைவாக வழங்கி விடுமாறு பிரார்த்திப்பது வெறுக்கத்தக்கதாகும். நோய் ஏற்பட்டால் விரைவில்
உடல்நலம் பெற மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். இறைவனின் கருணை மிகவும் விசாலமானது.
அதனால் இரு உலகிலும் சிறந்த வாழ்வையே கேட்க வேண்டும். நோயாளியாக இருப்பவர் எதனை பிரார்த்திக்க
வேண்டும்; எதனை பிரார்த்திக்கக்
கூடாது என்பதை நபியவர்கள் தெளிவு படுத்திவிட்டார்கள்.
நோய் போன்ற சோதனைகளில் அகப்பட்டு துடித்துக் கொண்டிருப்பவர்களை அவற்றை தைரியமாக
எதிர்த்து நின்று வெற்றி கொள்ளுமாறு ஊக்கம் தருகிறது இஸ்லாம். இதனால் அவர்களுக்கு இறைவன்
மீது நம்பிக்கை பெருகும் உள்ளம் உறுதிபெறும்.
பெருமையாக எண்ண வேண்டாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ
الْخَيْرَ عَجَّلَ لَهُ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا وَإِذَا أَرَادَ اللَّهُ
بِعَبْدِهِ الشَّرَّ أَمْسَكَ عَنْهُ بِذَنْبِهِ حَتَّى يُوَفَّى بِهِ يَوْمَ
الْقِيَامَةِ ) அல்லாஹ் தன் அடியானுக்கு
நன்மை செய்ய நாடினால், அவனுடைய (குற்றங்களுக்கான)
தண்டனையை இவ்வுலகிலேயே அவனுக்கு விரைவாக வழங்கிவிடுவான். அல்லாஹ் தன் அடியானுக்குத்
தீங்கை நாடிவிட்டால், அவனுடைய பாவங்களுக்கான
தண்டனையை (இவ்வுலகிலேயே வழங்காமல்) நிறுத்தி வைத்து, மறுமைநாளில் முழுமையாக அதை வழங்குவான். அறிவிப்பாளர்:- அனஸ்
(ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2319
ஆமிர் அர்ராமி (ரலி) அவர்களின் சகோதரர் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள்
நோய் குறித்து, ( إِنَّ الْمُؤْمِنَ إِذَا أَصَابَهُ السَّقَمُ ثُمَّ أَعْفَاهُ اللَّهُ مِنْهُ
كَانَ كَفَّارَةً لِمَا مَضَى مِنْ ذُنُوبِهِ وَمَوْعِظَةً لَهُ فِيمَا
يَسْتَقْبِلُ )
"இறைநம்பிக்கையாளனை ஒரு நோய்
தீண்டினால் அதன் பின் அல்லாஹ் அவனது சிறிய பாவத்தை அவனிடமிருந்து நீக்கி, கடந்த காலங்களில் செய்த சிறிய பாவங்களுக்குப் பரிகாரமாகவும்
அவனுக்கு எதிர்காலத்தில் படிப்பினையாகவும் ஆக்குவான்.
( وَإِنَّ الْمُنَافِقَ إِذَا مَرِضَ ثُمَّ
أُعْفِيَ كَانَ كَالْبَعِيرِ عَقَلَهُ أَهْلُهُ ثُمَّ أَرْسَلُوهُ فَلَمْ يَدْرِ
لِمَ عَقَلُوهُ وَلَمْ يَدْرِ لِمَ أَرْسَلُوهُ ) மேலும், நயவஞ்சகன் நோய் வாய்பட்டால் அது அவனுக்கு நீக்கப்பட்ட பின் ஒரு
ஒட்டகம் போன்று அவன் இருக்கிறான். ஒட்டகம் ஒன்று உரிமையாளர் (முதலில்) கட்டப்பட்டு
பிறகு அதனை அவிழ்த்து விடுவதைப் போன்று தான் ஏன் கட்டப்பட்டேன்; ஏன் அவிழ்த்து விடப்பட்டேன் என்று அதற்குத் தெரியாது"
(அவ்வாறே நயவஞ்சகனுக்கு ஏன் ஏற்பட்டது ஏன் நீங்கியது என்று எதுவும் தெரியாது) என்று
கூறினார்கள்.
அப்போது அவர்களைச் சுற்றியுள்ளவர்களில் ஒருவர், ( يَا رَسُولَ اللَّهِ وَمَا الأَسْقَامُ
وَاللَّهِ مَا مَرِضْتُ قَطُّ )
"நாயகமே! 'அல்அஸ்காம்' என்றால் என்ன? அல்லாஹ்வின் எண்மீதாணையாக! ஒருபோதும் நான் நோயுற்றதில்லை" என்று கூறினார்.
அதற்கு நபியவர்கள், ( قُمْ عَنَّا فَلَسْتَ مِنَّا ) "எங்களிடமிருந்து நீ எழுந்து செல். நீ எங்களில் உள்ளவரல்லர்"
என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2685
சிலர் "எனக்கு நோயே வராது. அந்த அளவுக்கு என் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளேன்" என்று பெருமையாக பேசுவதுண்டு. ஒரு மனிதனுக்கு நோய் போன்ற துன்பங்களே ஏற்படாவிட்டால், அவன் விஷயத்தில் இறைவன் நலவை நாடவில்லை என்று கருத்தாகும். இதையே மேற்காணும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
அதனால் தான், இறைநேசர் அப்துல்
காதர் ஜைய்லானி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் தனக்கு நோய் வரவில்லையெனில்
மிகவும் அச்சம் கொள்வார்கள் என்கிறது அவர்களின் வரலாறு.
உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களே நோயால் பீடிக்கப்பட்டார்கள்.
நமக்கு நோயே வராமல் இருந்தால் இதற்கெல்லாம் மொத்தமாக மறுமையில் இறைவன் நம்மை பிடித்துக்கொள்வானோ
என்ற பயம் எப்போதும் இருக்க வேண்டும். நோய் பாவங்களை அழிக்கிறது என்பதற்காக அடிக்கடி
நோய் வர வேண்டும் என்றும் எண்ணக்கூடாது. தானாகவே நோய் ஏற்பட்டுவிட்டால் அதை சபிக்காமல்
சகித்துக் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்காக நாம் நோய்
கிருமிகளை அழைப்பு விடுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும்; நமக்கு நோய் வந்துவிட்டால் மகிழ்ச்சி அடைந்து உறவினர்களுக்கெல்லாம்
இனிப்பு வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. நோயின் வேதனை தாங்க முடியவில்லை என்பதற்காக
மரணத்தை விரும்பக்கூடாது அதனால் தான் தற்கொலைக்கும், கருணைக் கொலைக்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை.
அழகிய வாழ்த்து
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவர் திடீரென நோயுற்றார். எனவே, அவரை நலம் விசாரிக்க நபியவர்கள் அவரிடம் சென்றபோது, அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு, ( أَسْلِمْ ) “இஸ்லாத்தை ஏற்றுக் கொள்” என்றார்கள். உடனே, அவர் தம்மருகிலிருந்த தந்தையைப் பார்த்தார். அப்போது அவர், “அபுல்காசிம் (நபியவர்களின்) சொல்லுக்குக் கட்டுப்படு!” என்றதும், அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அப்போது நபியவர்கள், ( الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ ) “இவரை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”
எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள். நூல்:- புகாரீ-1356, பைஹகீ
திடீரென்று ஏற்படும் அகால மரணத்தை விட்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம்
பிரார்த்தித்தார்கள். அகால மரணம் ஏற்படும் போது நமது பாவங்களை எண்ணி மனம் வருந்தும்
நிலையோ, அதற்காக பாவமன்னிப்பு கோரும்
வாய்ப்போ இல்லாமல் போய் விடுகிறது. மரணத்திற்கு சில நாள்களுக்கு முன்பாக ஏதேனும் நோய்
ஏற்பட்டால் மரண சிந்தனை மனதில் தோன்றி இறையச்சத்தோடு பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளலாம்.
பிற மனிதர்களை இணக்கமாக்கிக் கொள்ளலாம்.
மேலும், மரணத்திற்கும் மறுமைக்கும்
தேவையான கட்டுச் சாதனங்களைத் தேடிக் கொள்ளலாம். இம்மலையின் கடமைகளிலிருந்து நிம்மதியாக
விடைப்பெற்றுக் கொள்ளலாம். அந்த யூதச் சிறுவனுக்கு மரண நோய் ஏற்படாமல் தீடீர் மரணம்
ஏற்பட்டிருந்தால் அச்சிறுவனுக்கு ஹிதாயத் எனும் நேர்வழியும், நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்டார் என்ற சிறந்த
வாழ்த்தும் கிடைத்திருக்காது. எத்தனையோ காரியங்களுக்கு நோய் உதவுகிறது என்பது இப்போது
புரிகின்றதா? நோய் என்பது இறைவனின்
அருட்கொடைகளில் ஒன்றாகும் என்று கூறினால் மிகையாகாது.
எல்லாம் அவன் செயல்
இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் ஒருமுறை வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட போது அல்லாஹ்விடம்
தன் நிலை குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ் ஒருவகை பச்சிலையை சாப்பிடும்படி உத்தரவிட
அவ்விதமே சாப்பிட்டு நலமடைந்தார்கள். சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர்களுக்கு
வயிற்று வலி ஏற்பட்டது. உடனே, முன்னால் இறைவன் கூறிய
அதே பச்சிலையை தேடிப்பிடித்து சாப்பிட்டார்கள். ஆனால், அவர்கள் உடல் நலமடையவில்லை.
அப்போது, "இறைவா! எனக்கு மீண்டும்
வயிற்று வலி ஏற்பட்டது. நீ முன்பொருமுறை சாப்பிடச் சொன்ன அதே பச்சிலையை நான் சாப்பிட்டேன்.
ஆனால், நோய் குணமடையவில்லை என்று
முறையிட்டார்கள். இப்போது இறைவன், மூசா! முன்பு வயிற்று
வலியால் பாதிக்கப்பட்ட போது என்னை அணுகினீர். இப்போது நீர் என்னை அணுகாமல் நேராக அந்த
பச்சிலையைத் தேடீச் சென்று விட்டீர். மூசா! அறிந்து கொள்வீராக! இந்த உலகம் மற்றும்
அதிலுள்ளவை அனைத்தும் நஞ்சு கலந்ததே. என் பெயரே அதன் நச்சுத் தன்மையை நீக்கும்"
என்று கூறினான்.
மருந்துக்கு குணமளிக்கு சக்தி அல்லாஹ் வசமே இருக்கிறது. ஒரே வகையான நோயாளிகளுக்கு
ஒரே வகையான மருந்துகளைக் கொடுத்தாலும் குணம் அடைவோர் சிலர். பிணம் ஆவோர் சிலர். இதை
எண்ணும்போது எல்லாம் அவனுடைய செயல் என்பது தெளிவாகிறது. எங்களால் இயன்ற அளவு சிகிச்சை
அளித்து விட்டோம். இதற்கு மேல் இறைவன் நாட்டம் என்று பல மருத்துவர்கள் கூறுவதைக் கேட்கிறோம்.
இறைவனின் திருப்பெயர்களில் ஒன்றான அல்ஙஃபூர் என்ற பெயரை மருந்துகளில் நூறு தடவை
ஓதி, ஊதி சாப்பிடவோ, குடிக்கவோ, தடவவோ செய்தால் அம்மருந்துகள் நற்பலன் கிடைக்கும் என்பது நம்
முன்னோர்களின் வழிமுறையாகும். எனவே, உடல் நலம் பெற மருந்துகள் மீது முழுநம்பிக்கை வைக்காமல் இறைவன் மீது மட்டுமே முழுநம்பிக்கை
இருக்க வேண்டும்.
மருந்தும் குணமும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ
لَهُ شِفَاءً ) நோய்க்கான நிவாரணத்தை
உருவாக்காமல் அல்லாஹ் எந்த நோயையும் ஏற்படுத்துவதில்லை. நூல்:- புகாரீ-5678, இப்னுமாஜா-3430
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ
الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ ) நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால் வல்லமையும் மாண்புமிக்க
அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும். நூல்:- முஸ்லிம்-4432
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلاَ تَدَاوَوْا بِحَرَامٍ ) (மார்க்கத்தில்) தடை செய்யப்பட்டவைகளைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர்கள். நூல்:-
அபூதாவூத்-3372, திர்மிதீ-1968
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நிவாரணையை அறிந்தவர் அறிந்து கொண்டார்.
அறியாதவர் அறியாமல் இருக்கிறார். நூல்:- நஸாயீ, இப்னுமாஜா
நோயையும் அதற்குரிய நிவாரணத்தையும் ஏற்படுத்தியிருப்பதும் அல்லாஹ் தான். அதில்
சந்தேகமில்லை. எனவே, நோய் வந்தால் அதற்கேற்ற
சிகிச்சை மேற்கொள்ளுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். அது இறைநம்பிக்கைக்கு
எதிரானதன்று.
மேற்காணும் நபிமொழிகள் மூலம் மருத்துவச் சிகிச்சை செய்வதும், மருத்துவக் கல்வி கற்பதும் அவசியமாகும் என்பது தெளிவாகிறது.
பொதுவாகவே, இறைவன் படைப்பில்
ஒவ்வொன்றுக்கும் ஓர் எதிர்மறை உண்டு. பசிக்கு உணவும், தாகத்திற்கு நீரும் இருப்பதைப் போன்று தான், நோய்க்கு மருந்தும் இருக்கிறது. இது இயற்கையானது.
எனவே, நாம் நோய் வந்தால்
அதை சபிக்காமல், சகித்துக்கொண்டு அதற்குண்டான
நிவாரணத்தை மேற்கொள்வோமாக! அதன்மூலம் அல்லாஹுத்தஆலா நமது அனைத்து பாவங்களையும் மன்னிப்பானாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment