Search This Blog

Monday, 2 October 2023

அநாதைகளை ஆதரிப்போம்

 

அநாதைகளை ஆதரிப்போம்

 

وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ وَإِنْ تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ

 

(நபியே!) அநாதைகள் (வளர்ப்பதை) பற்றியும் அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அவர்களுக்கு நன்மையை நாடுவதையே நன்று. அவர்களுடன் நீங்கள் கலந்(து வாழ்ந்)தால் அவர்கள் உங்கள் சகோதரர்களே என்று கூறுவீராக. திருக்குர்ஆன்:- 2:220

 

அநாதைகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகரமான நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஜனவரி 6 அன்று அநாதைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.


உலக அளவில் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் குழந்தைகள் அநாதையாவதாகவும், தற்போது 14 கோடிக்கும் மேற்பட்ட அநாதை குழந்தைகள் இருப்பதாகவும் 'யுனிசெப்' அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரம், இதைவிட அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.


குழந்தைகள் அநாதையாவதற்கு போர், இயற்கை சீற்றங்கள் மற்றும் நோய் பரவலே முக்கிய காரணம். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 7.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இயற்கை சீற்றங்கள், நோய்களால் இறந்துள்ளனர். அதனால், பல ஆயிரம் குழந்தைகள் அநாதைகளாகி உள்ளனர். 


மேலும், கொரோனா தொற்று பரவலால் நாடு முழுதும் ஏராளமான குழந்தைகள், பெற்றோரை இழந்து தவிப்பதும் நிர்கதியாக நிற்பதும் ஆங்காங்கே நடக்கிறது.


குறிப்பாக, பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இத்தகைய குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் அவர்கள் ஆள்கடத்தல், உடல் உறுப்புகளுக்காக குழந்தைகளை கடத்தும் சதிகாரர்கள் வலையில் சிக்கிவிடலாம். இல்லையெனில், குழந்தை தொழிலாளர்களாகும் அபாயம் உள்ளது.


தாய் தந்தை இழந்துவிட்ட குழந்தைகளுக்கு அநாதை என்று குறிப்பிடுவது உலக வழக்கு. ஆனால், இஸ்லாத்தைப் பொருத்தவரை தந்தையை இழந்துவிட்ட நிலையில் ஒரு குழந்தை அநாதை என கருதப்படுகிறது. ஆனால், அநாதையான ஒருவர் பருவ வயதை அடைந்து தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் அளவுக்கு எட்டி விட்டால் அவருக்கு அநாதை என்ற பெயர் பொருந்தாது.

 

குழந்தைகளின் வாழ்வு பெற்றோர்களைத் தழுவியே உள்ளது. இரக்கத்தின் பிறப்பிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த பாக்கியம் குழந்தை பருவத்திலேயே இல்லாமல் போய்விட்டது. பிறக்கும் முன்பே தந்தையையும், பிறந்த பின் பிஞ்சு வயதிலேயே பெற்றெடுத்த அன்னையையும் இழந்து, அநாதையாகப் பிறந்து, அநாதையாக வளர்ந்து, அநாதைகளுக்கு ஆதரவு அளித்த நபியவர்கள் நபிப்பட்டம் பெறுவதற்கு முன்பே தங்களின் குழந்தை பருவம் முதல் எப்போதும் அநாதை மற்றும் ஏழைகளுக்கு உதவி ஒத்தாசைகள் எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள்.

 

அநாதை வாழ்வின் துன்பங்களை புரிந்து அவர்களுக்கு நல்லுதவி செய்து கடமையாற்றுவதற்காக, குரல் கொடுக்க அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களை அநாதையாக பிறக்கச் செய்து வளர்த்தெடுத்தான் என்று இமாம் ராஸீ (ரஹ்) அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்.

 

வாழ்க்கை இலட்சியம்

 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ‏ ‏.‏ وَأَشَارَ بِأُصْبُعَيْهِ يَعْنِي السَّبَّابَةَ وَالْوُسْطَى ) நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி தன் சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்கும் இடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்”. நூல்:- புகாரீ-5304, திர்மிதீ-1918

 

நிழல் போல் பாதுகாத்து வந்த பெற்றோர்களை இழந்து அநாதையாகிவிடும் பச்சிளங்குழந்தை நாதியற்று நிற்கிறது. வளர்ப்பு, பராமரிப்பு, கல்வி, ஒழுக்க போதனை ஆகியவற்றுக்கு மட்டுமல்ல, அநேக நேரங்களில் சமூக ரீதியான முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும்கூட முக்கியமாக தேவைப்படுகின்ற பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் குழந்தைக்கு கிடைக்காமல் போய்விடுகின்றன. ஆகையால், அக்குழந்தையின் தேவையை பூர்த்தியாக்குவது சமுதாயத்தின் மீது கடமையாகிறது.

 

பெற்றோரை இழந்து விட்டோமே என்கிற ஏக்கம் அக்குழந்தைக்கு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். ஒரு சமூகமோ ஒரு குடும்பமோ உலக மக்களால் மதிக்கப்பட வேண்டுமானால் அச்சமூகத்தில் உள்ள அநாதைகள் சரியாக பாதுகாக்கப்பட வேண்டும். அநாதைகள் பாதுகாக்கப்படாத சமூகமுமோ, குடும்பமோ உலக மக்களால் பாதிக்க மதிக்கப்பட மாட்டாது.

 

ஒருவர் மறுமையின் சுவனப்பேற்றை பெறுவதே வாழ்க்கையின் உயர்ந்த லட்சியமாகும். அதுவும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அருகில் அமரும் வாய்ப்பு கிடைக்கின்றதென்றால் அதைவிடப் பெரிய பாக்கியம் வேறு இருக்க முடியாது. அத்தகைய உயர்ந்த அந்தஸ்தை அநாதைகளை ஆதரிப்போர் பெறுவார் என்கிறது மேற்காணும் நபிமொழி. அநாதைகளை முறையாக பராமரிப்பவர் குறித்து ஏராளமான சிறப்புக்கள் இருப்பதாக திருமறையும் நபிமொழியும் கூறுகின்றது.

 

அபிவிருத்தி காணலாம்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَيْرُ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُحْسَنُ إِلَيْهِ وَشَرُّ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُسَاءُ إِلَيْهِ ) எந்த வீட்டில் ஒரு அநாதை இருந்து அந்த அநாதையுடன் நல்லவிதமாக நடந்து கொள்ளப்படுகிறதோ, அந்த வீடு முஸ்லிம் வீடுகளில் மிகச் சிறந்த வீடாகும். மாறாக, எந்த வீட்டில் ஒரு அநாதை இருந்து அந்த அநாதையுடன் மோசமாக நடந்து கொள்ளப்படுகிறதோ, அந்த வீடே முஸ்லிம் வீடுகளில் மிகக் கெட்டதாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3679

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَبَضَ يَتِيمًا بَيْنَ الْمُسْلِمِينَ إِلَى طَعَامِهِ وَشَرَابِهِ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ الْبَتَّةَ إِلاَّ أَنْ يَعْمَلَ ذَنْبًا لاَ يُغْفَرُ لَهُ ) ‏ ஓர் அநாதையை தன்னுடன் சேர்த்துக் கொண்டு உணவும் பானமும் வழங்குபவருக்கு உறுதியாக அல்லாஹுத்தஆலா சொர்க்கத்தை வழங்குவான். ஆனால், அவன் மன்னிக்க முடியாத பெரும் பாவம் எதையும் செய்திருக்கக் கூடாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல் திர்மிதீ-1917

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்தக் கூட்டத்தினருடன் ஓர் அநாதையும் அவர்களுடைய பாத்திரத்தில் சேர்ந்து சாப்பிடுவாரோ, அப்பாத்திரத்தின் அருகில் ஷைத்தான் சேர மாட்டான். அறிவிப்பாளர்:- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:-  தப்ரானீ

 

அநாதைகளை ஆதரிப்பதின் மூலம் நாம் குடியிருக்கும் வீட்டிலும் உண்ணும் உணவிலும் அபிவிருத்தி காணலாம். வாழ்க்கையில் ஆதரிப்பாரின்றி பலவீனர்களாக உள்ள அநாதைகளுக்கு மாண்பளித்து அவர்களை அன்போடு அரவணைத்து அவர்களது உரிமைகளைப் பேணி உள்ளத்து உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆதரிப்பதன் மூலம் குடும்ப அமைப்பில் ஒரு புதிய உறவை வளர்க்கலாம். அந்த உறவு இறைவனுக்கு உவப்பானது.

 

அனேகமாக அநாதைகளுக்கு அநாதை விடுதி என்பது மகிழ்ச்சிகரமான இடமாக இருப்பதில்லை. அதற்காக அநாதை விடுதிகளை குறை கூறவில்லை. இன்று எல்லா சமூகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட விஷயம் என்னவென்றால் அநாதைகள் நன்கு கவனிக்கப்படக்கூடிய ஒழுங்கும் சந்தோஷமும் நிறைந்த குடும்பங்களால் அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அத்தகைய ஒரு குடும்பம் வாய்க்கும்போது ஒரு சாதாரண குழந்தை தன் வாழ்வில் அனுபவிக்க கூடிய அனைத்து அனுபவங்களையும் பெற்று ஓர் ஒழுங்கான வாழ்க்கை வாழக்கூடிய சந்தர்ப்பம் ஓர் அநாதைக்கு வாய்க்கிறது.

 

அநாதைகளின் தேவைகளை நிறைவு செய்வதிலும் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திடுவதிலும் தனி கவனம் செலுத்திட வேண்டும். இவைகளையெல்லாம் மிகவும் தூய்மையான முறையில் நிறைவேற்றப்பட்டால் இறைவணக்கங்களாக கருதப்படும். வழிகெட்டுப் போகும் அளவிலுள்ள நடத்தை கொண்ட மனிதர்கள் கூட இந்த பண்புகளை பின்பற்றுவார்களேயானால் அவர்கள் நேர்வழி பெற்று விடுகின்ற அளவுக்கு வந்து விடுவார்கள்.

 

அநாதைகள் சரியாக பராமரிக்கப்படாததால் பிற்காலத்தில் வாழ்க்கையில் வழி தவறியவர்களாக, திருட்டு, கள்ளக் கடத்தல், விபச்சாரம் கூலிக்கு கொலை செய்தல் போன்ற ஈனத் தொழிலில் ஈடுபட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாதவர்களாக இருக்கின்றார்கள். அநாதைகளில் சிலர் மூலம் இதர பிள்ளைகளும் தீய பழக்கங்களை மேற்கொள்கின்றனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இவர்களை தவறான வழியில் பயன்படுத்திய தீயோரில் சிலர் பணம் சேர்த்து விடுகின்றனர்.

 

அநாதைகளால் ஏற்படக்கூடிய இப்பெரும் தீங்கை உணர்ந்தே இன்றைய உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டினரும் அந்தந்த நாட்டின் அரசு உதவி பெற்றும், சொந்த முயற்சியிலும் அநாதை விடுதிகளை ஏற்படுத்தி பராமரித்து வருகின்றனர். இந்நிறுவனங்களுக்கு அரசு தாராளமாக உதவி புரிகிறது. நாமும் இம்முக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தி ஒவ்வொரு ஊரிலும் இதற்கான ஏற்பாடுகளை செய்வது மிகவும் அவசியமாகும்.

 

கல்நெஞ்சம் கரையும்

 

அநாதையை நீங்கள் கடிந்துகொள்ள வேண்டாம். திருக்குர்ஆன்:- 23:11

 

(நபியே!) மறுமைநாளை பொய்யாக்குபவனை நீர் பார்த்தீரா? அவன் தான் இரக்கமின்றி அநாதைகளை விரட்டுகின்றான். திருக்குர்ஆன்:- 107:1,2

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தன்னுடைய உள்ளம் மென்மையாக இல்லையென முறையிட்டார். அண்ணலார், ( أَطْعِمِ الْمِسْكِينَ وَامْسَحْ رَأسَ الْيَتِيمِ ) "(உங்கள் உள்ளத்தை மென்மையாக்கிக்கொள்ள விரும்பினால்) எளியோருக்கு உணவளியுங்கள். அனாதை குழந்தைகளின் தலையை வருடிக் கொடுங்கள்" என்று ஆலோசனை கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, மஜ்மஉஸ் ஸவாயித், ஃபத்ஹுல் பாரீ

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், "என் பராமரிப்பில் இருக்கும் அநாதையை எந்தெந்த காரணங்களுக்காக அடிக்கலாம்" என்று வினவினேன். அதற்கு நபியவர்கள், "எந்த காரணங்களுக்காக உமது குழந்தையை அடிப்பீரோ, அந்த காரணங்களுக்காக நீர் அவரை அடிக்கலாம்" என்று கூறினார்கள். நூல்:- தப்ரானீ

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அநாதைகள் அழும்போது இறைவனுடைய சிம்மாசனம் நடுங்குகிறது. அப்போது இறைவன், "வானவர்களே! அந்த அநாதையை அழ வைத்தது யார்?" என்று வினவுவான். வானவர்கள், "இறைவா! நீயே அறிவாய்" என்று கூறுவர். அல்லாஹ், "வானவர்களே! அந்த அநாதையின் அழுகையை நிறுத்தி சந்தோஷப்படுத்துவோரை மறுமைநாளில் நான் சந்தோஷப்படுத்துவேன். இதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறுவான். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் ரூஹுல் மஆனீ

 

எவரேனும் தம் கல்நெஞ்சத்திற்கு சிகிச்சை அளிக்க விரும்பினால் அவர் செயலளவில் இரக்கம் மிளிரும் பணிகளை செய்யத் தொடங்கிட வேண்டும். அநாதைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் முறையாக உதவி செய்தால், அவருடைய கல்மனம் இரக்கம் சுரக்கும் ஊற்றாக மாறிவிடும். அநாதைகளை சந்தோஷப்படுத்துவது அல்லாஹ்வை சந்தோஷப்படுத்துவது போல் ஆகும்.

 

மனிதப் பண்பாடு கல்விப் புகட்டுவதற்கும் பண்பாட்டையும், நல்லொழுக்கத்தையும் கற்பிப்பதற்கு தன் குழந்தைகளையும் அநாதைகளையும் அடிக்கலாம். காரணமின்றி எடுத்ததற்கெல்லாம் குழந்தைகளை அடிப்பது தவறாகும். அது போல் அநாதைகளை அடிப்பது மிகப்பெரிய பாவமாகும். மேலும், அவர்களை அதட்டி, உருட்டி, ஆதிக்கம் செலுத்துவோரையும் அவர்களைக் கேவலமாகக் கருதி இழிவுபடுத்துவோரையும், அவர்கள் உள்ளம் உடைந்து போகும்படி நடந்து கொள்பவரையும் கண்டிக்க வேண்டும்.

 

அநாதைகளை வளர்ப்பதற்கான ஏற்பாட்டைச் செய்வது மட்டுமல்ல. இறையச்சம் உள்ளவர்களாக மேன்மக்களாக அவர்களை வளர்த்து உருவாக்கிக் கொண்டு வருவதற்கும் சமுதாயம் ஒத்துழைக்க வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது.

 

தீய பழக்கம்

 

நீங்கள் அநாதைகளின் பொருள்களை அவர்கள் பருவமடைந்த பின்னர் குறைவின்றி அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். அதிலுள்ள நல்லதுக்கு பகரமாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்களுடைய பொருள்களுடன் சேர்த்து விழுங்கிவிடாதீர்கள். நிச்சயமாக, இது பெரும் பாவமாகும். திருக்குர்ஆன்:- 4:2

 

கித்ஃபான் என்ற குலத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் இறந்துவிட்டார். இறந்தவருடைய ஒரு மகனை வளர்த்தெடுக்கும் பொறுப்பை அவருடைய சகோதரர் ஏற்றுக்கொண்டார். ஆனால், அவருடைய சொத்தை சரியாக முறையில் பாதுகாக்காமல் அதைச் சுருட்டிக் கொண்டிருந்தார். அந்த அநாதை சிறுவர் வளர்ந்து வாலிபமடைந்து பின்னர் தமக்குச் சேர வேண்டிய சொத்தை சிறிய தந்தையிடம் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது தான் மேற்காணும் திருவசனம் அருளப்பட்டது. நூல்:- தஃப்சீர் குர்துபீ

 

எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ அவர்கள் தங்களின் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கட்டிக் கொள்கின்றனர். பின்பு மறுமையில் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவார்கள். திருக்குர்ஆன்:- 4:10

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், "நாயகமே! நீங்கள் (மிஃராஜ் எனும்) இரவு பயணத்தின்போது எதைக் கண்டீர்கள்?" என்று வினவினோம். அதற்கு நபியவர்கள், (நான் விண்ணுலப் பயணத்தின்போது) ஒரு கூட்டத்தைக் கண்டேன். அவர்களுடைய உதடுகள் ஒட்டத்தின் உதடுகளைப் போல் (பெரியதாகவும் தாடைகள் பிளந்தும்) இருந்தன. அவர்களின் அத்தகைய உதடுகளை பிடித்திழுத்து, அவர்களது வாயினுள் நெருப்புக் கங்குகளை திணிக்கப்படுகிறது. அது அவர்களது (வாயினுள் நுழைந்து) கீழ் வழியாக வெளியேறுகிறது. இவ்வேதனையைச் செய்வதற்கென்றே சில காவலாளிகள் அவர்கள் மீது சாட்டப்பட்டிருக்கின்றனர். அவர்கள் (அந்த வேதனையை தாங்க இயலாமல்) குனிந்த நிலையில் கதறுகின்றார்கள்.

 

நான், "ஜிப்ரீல்! இவர்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர், ( هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وسَيَصْلَوْن سَعِيرًا ) "இவர்கள் அநாதைகளின் செல்வங்களை முறைகேடாக உண்போர் தங்கள் வயிற்றுக்கு நெருப்பையே உண்கிறார்கள். விரைவில் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பில் நுழைவார்கள் (4:10) என்ற வசனத்தை ஓதினார். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னுகஸீர் அந்நிசா வசனம்-10, அல்கபாயிர் இமாம் அத்தஹபீ 

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (அவற்றில் ஒன்று) அநாதைகளின் செல்வத்தை (முறைகேடாக) உட்கொள்ளுதல். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2766, முஸ்லிம்-145 அபூதாவூத், நசாயீ

 

அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ الْقَوْمُ مِنْ قُبُورِهِمْ تَأَجَّجُ أَفْوَاهُهُمْ نَارًا ) "மறுமை நாளில் சிலர் தங்களது சவக்குழியிலிருந்து எழுப்பப்படும்போது அவர்களின் வாய் நெருப்பைக் கக்கி கொண்டிருக்கும்" என்று கூறினார்கள். அப்போது, "நாயகமே! அவர்கள் யார்?" என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், ( أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ قَالَ: إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا ) "அநாதைகளின் செல்வங்களையும் முறைகேடாக உண்போர், தங்கள் வயிற்றுக்கு நெருப்பையே உண்கிறார்கள் என அல்லாஹ் கூறுவதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்டார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு மர்தவைஹி, தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம்-10

 

அநாதைகள் பலவீனம், விவேகமின்மையின் காரணத்தால் தங்களின் ஆகுமான உரிமைகளைகூட பாதுகாக்க இயலாதவர்களாக உள்ளனர். அவர்களின் உரிமைகளையும் சொத்துக்களையும் அபகரிப்பது என்பது எவருக்கும் எளிது என்பதால் அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் தீய செயலை அறியாமைக்கால மக்களும் செய்தனர். இன்றைய மக்களும் செய்கின்றனர்.

 

அநாதைகளையும், அவர்களுடைய பொருள்களை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டவர் இறைவனுக்கு அஞ்சி நீதத்தை கடைபிடிக்க வேண்டும். அநாதைகளின் செல்வத்தை சூழ்ச்சி செய்து தம் செல்வமாக ஆக்கிக் கொள்வதும், அல்லது அந்த அநாதை வளர்ந்து வாலிபமடைவதற்கு முன்பே அவரது செல்வத்தை ஆண்டு அனுபவித்து அழித்துவிட வேண்டும் என்று எண்ணுவதும், அந்த செல்வத்தில் வேண்டுமென்றே குறை ஏற்படுத்துவதும், அந்த அநாதையின் செல்வத்தில் மோசடி செய்தால் நம்மை ஏன் என்று கேட்பதற்கு ஆள் இல்லை என்று எண்ணுவதும் பெரும் பாவமாகும்.

 

அநாதைகளைப் பராமரிக்கும் காலகட்டத்திலும் செல்வங்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போதும் காப்பாளர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அல்லாஹ் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான் என நினைவு கூர்ந்து, அநாதைகளை பராமரிப்பவர்களே எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

 

சமூக சேவை என்ற பெயரில இன்றைய காலகட்டத்தில் பல அநாதை விடுதிகள் தோற்றுவிக்கப்பட்டாலும் அதில் சில விடுதிகளே இறையச்சத்துடன் சீராக நடைபெறுகின்றன. சில விடுதிகள் பணம் சேர்ப்பதிலே குறியாக உள்ளன. அநாதை விடுதி என்ற பெயரில் செல்வந்தர்களிடம் நன்கொடை வசூலித்து, தன் சொந்தச் செலவுக்காக வைத்துக் கொள்பவர்களும் உண்டு. இச்செயலும் அநாதைகளின் பொருள்களை அபகரிப்பதேயாகும். திருமறையும், நபிமொழியும் இத்தீயோர்களை குறித்து கடுமையாக எச்சரிக்கிறது.

 

காப்பாளரின் கவனத்திற்கு

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடையே உரை நிகழ்த்தும் போது, (  أَلاَ مَنْ وَلِيَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ فِيهِ وَلاَ يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ ) ‏ "அறிந்து கொள்ளுங்கள்! சொத்துள்ள அநாதைகளுக்கு காப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர், அதை (முதலீடு செய்து) வியாபாரம் செய்யட்டும். ஸகாத் அதை விழுங்கிவிடும் அளவுக்கு அதை வெறுமனே விட்டுவிட வேண்டாம்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-641

 

அநாதைகளின் பொருளுக்கு காப்பாளராக பொறுப்பேற்றவர் அவர்கள் பருவ வயதை அடைந்து, தாங்களாக அப்பொருளை நிர்வகிக்கும் ஆற்றல் பெரும் வரையில் அப்பொருளுக்கு எவ்விதமான சேதாரம் இல்லாமல் பாதுகாத்து வரவேண்டும். அப்பொருள் பெருகுவதற்கு தொழில் நிறுவனங்களில் அவற்றை முதலீடு செய்யலாம். அப்பொருள் அழியாமல் பெருகக்கூடிய எல்லா நியாயமான வழிகளிலும் அதைப் பயன்படுத்தலாம்.

 

அப்பொருளை வியாபாரத்தில் முதலீடு செய்து பெருக்காமல் ஆண்டுதோறும் ஸகாத் கொடுத்து அதன் அசல் அளவில் குறைவு ஏற்பட்டு அவர்களின் பருவ வயதில் அதை ஒப்படைக்கும்போது நமது பொருள் குறைந்துவிட்டது என்று அவர்களுக்கு வருத்தம் ஏற்படும் சூழ்நிலை வரக்கூடாது என்பதே மேற்காணும் நபிமொழியின் கருத்தாகும்.

 

அதனால் தான் அநாதைப் பொருளின் காப்பாளர் ஏழையாக இருந்தால் அதன் பராமரிப்பு பணிக்கேற்ற ஊதியத்தை அப்பொருளில் இருந்து நியாயமாக எடுத்துக் கொள்ளலாம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. சுருங்கக் கூறின்: அநாதைகளுக்கு உபகாரம் செய்ய வேண்டுமே தவிர உபத்திரியம் செய்யக்கூடாது.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

 

எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள்.  திருக்குர்ஆன்:- 4:10

 

அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி தொடாதீர்கள். அளவை (சரியான அளவுகொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுத்துங்கள். யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம்   செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள்  நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்.   திருக்குர்ஆன்:- 6:152

 

(இறைநம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரையில் (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.  திருக்குர்ஆன்:- 17:34

 

மேற்காணும் வசனங்கள் அருளப்பெற்ற போது அநாதைகளை வைத்து பராமரித்து கொண்டிருந்தவர்கள் தம் இல்லங்களுக்குச் சென்று தமது உணவையும் பானத்தையும் அநாதைகளின் உணவு மற்றும் பானத்திலிருந்து பிரித்து தனித்தனியே வைத்துவிட்டனர். இதை அடுத்து சில நேரங்களில் அநாதையின் உணவு சிறிதளவு மிஞ்சினாலும் பராமரிப்பவர் அந்த உணவை அப்படியே எடுத்து வைத்துவிடுவார். (அதைத் தொடவே மாட்டார்.)

 

அதை அந்த அநாதையே சாப்பிட வேண்டும். அல்லது கெட்டுப்போய் வீணாகும். உணவுப் பொருள் எவருக்கும் பயன்படாமல் வீணாகின்ற இந்த நிலை நபித்தோழர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. உடனே அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதை கூறினார்கள். அப்போதுதான் தலைப்பில் காணும் திருவசனம் அருளப்பெற்றது. அதற்குப் பிறகு தங்களது உணவு மற்றும் பானத்தை (தனியாகந் பிரிக்காமல்) அநாதைகளின் உணவு மற்றும் பானத்துடன் கலந்து அவர்கள் பயன்படுத்தலாயினர். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

அநாதைகளின் பொருள்கள் குறித்து நபித்தோழர்களுக்கு இருந்த இறையச்சத்தை போன்று இன்றைய அநாதை காப்பாளர்களும் இறையச்சத்தோடு வாழ்ந்தால் மட்டுமே வெற்றி பெறுவார். 


ஒருவர், சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்திருக்கும் ஓர் விதவைப் பெண்ணை மணமுடித்து, அந்த குழந்தைகளையும் (தன் குழந்தைகள் போல் எண்ணி) நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினால், இவர் அநாதைகளை ஆதரித்தவர் என்ற சிறப்புக்குரியவாராகி விடுவார்.


அநாதைகளை நமது குழந்தைகளைப் போல் ஆதரிப்பதில் நாம் ஆர்வம் கொள்ள வேண்டும். அநாதைகளை முறையாக ஆதரித்து சொர்க்கம் செல்லும் பாதையில் வெற்றிநடை போடுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...