Search This Blog

Wednesday, 27 September 2023

சாபமிடாதீர்கள்

 

சாபமிடாதீர்கள்

 

وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ

 

உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள். திருக்குர்ஆன்:- 49:11

 

அடுத்தவர்களைப் பழிப்பது, பீடை, முஸீபத்து, நாசம் போன்ற வார்த்தைகளால் திட்டுவது அல்லது ஒரு முஸ்லிமை ஒரு இறைமறுப்பாளர், நயவஞ்கர் என்று திட்டுவது இவை சாபமிடுவதாகும். இஸ்லாமியப் பார்வையில் சாபமிடுவது பெரும் பாவமாகும். ஒரு இறைநம்பிக்கையாளர் பிற மக்களுக்கு எக்காலமும் நன்மையை நாடுபவனாக மட்டுமே இருக்க வேண்டும்.

 

பெரும்பாலான மனிதர்கள் தங்களது நாவை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், சாப வார்த்தைகளை பயன்படுத்திவிடுகின்றனர். அவர்களது விஷ நாக்குகளால் மனிதர்கள், கால்நடைகள், உயிரற்றவை, நாள்கள், நேரம் என அனைத்தும் சபிக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் சபிக்கின்றனர். கணவன் மனைவியை சபிப்பதும், மனைவி கணவனை சபிப்பதும் சாதாரணமாகிவிட்டது. இது, முற்றிலும் ஆபத்தானது. மார்க்கத்தில் வெறுக்கப்பட்டதாகும்.

 

முஸ்லிமுக்கு ஏற்ற பண்பல்ல

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( لاَ يَنْبَغِي لِصِدِّيقٍ أَنْ يَكُونَ لَعَّانًا ( ‏ ஒரு வாய்மையாளர் அதிகமாக சாபமிடுபவராக இருக்கத்தகாது. நூல்:- முஸ்லிம்-5062

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                            ( إِنَّ اللَّعَّانِينَ لاَ يَكُونُونَ شُهَدَاءَ وَلاَ شُفَعَاءَ يَوْمَ الْقِيَامَةِ ) அதிகமாக சபிப்பவர்கள் மறுமைநாளில் சாட்சியமளிப்பவர்களாகவோ பரிந்துரைப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள். நூல்:- முஸ்லிம்-5064

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                      ( إِنَّ الْعَبْدَ إِذَا لَعَنَ شَيْئًا صَعِدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا ثُمَّ تَهِبْطُ إِلَى الأَرْضِ فَتُغْلَقُ أَبْوَابُهَا دُونَهَا ثُمَّ تَأْخُذُ يَمِينًا وَشِمَالاً فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغًا رَجَعَتْ إِلَى الَّذِي لُعِنَ فَإِنْ كَانَ لِذَلِكَ أَهْلاً وَإِلاَّ رَجَعَتْ إِلَى قَائِلِهَا

ஓர் அடியார் எதையேனும் சாபமிட்டால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது அதை நுழையவிடாமல் வானத்தின் கதவுகள் மூடப்படும். பின்பு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போதும் அதை நுழையவிடாமல் பூமியின் கதவுகள் மூடப்படும். பிறகு, வலப்புறமாகவும் இடப்புறமாகவும் சுற்றும். அது செல்வதற்கு வழி ஏதும் கிடைக்காவிட்டால் சாபமிடப்பட்டவரை நோக்கி திரும்பி வரும். அதற்கு அவர் உரியவராக இருந்தால் சரி! இல்லையேல் அதை சொன்னவர் பக்கமே திரும்பிச் செல்லும். அறிவிப்பாளர்:- அபூதர்தா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4259

 

சாபமிடல் என்றால் இறையருளிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என எண்ணுவதாகும். ஒருவருக்கு இறையருள் கிடைக்கக்கூடாது என ஓர் இறை நம்பிக்கையாளர் எண்ணக்கூடாது. அதற்கு அவருக்கு தகுதியுமில்லை. மனிதர்களை குத்திக் கிழிக்கும், உணர்வுகளைக் காயப்படுத்தும் வார்த்தைகள் நம்மிடமிருந்து வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தான் இடும் சாபத்தால் சிலவேளை தனக்கே கேடு உண்டாகும் என்பதை புரிந்து கொண்டாலே சாபமிடுதல் என்ற தவறான பழக்கம் எந்த மனிதனிடமும் ஏற்படாது.

 

ஷைத்தானின் விருப்பம்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. மது அருந்திய ஒரு மனிதர் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, நபியவர்கள், ( اضْرِبُوهُ ) "அவரை அடியுங்கள்" என்று கூறினார்கள். எங்களில் சிலர் கையால் மற்றும் காலணிகளால் அடித்தனர். மேலும், சிலர் (முறுக்கப்பட்ட) தமது துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களின் சிலர், "அல்லாஹ் உம்மை கேவலப்படுத்துவானாக" என்று கூறி சாபமிட்டனர். அப்போது நபியவர்கள், ( لاَ تَقُولُوا هَكَذَا لاَ تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَانَ )  "இவ்வாறு கூறாதீர்கள். இவருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்" என்று கூறினார்கள். நூல்:-  புகாரீ-6777

 

ஒருவர் பாவமழைத்துவிட்டார் என்பதற்காக அந்த மனிதரை சபிக்கும்போது அவர் வீம்புக்காக அந்த குற்றத்தை தொடர்ந்து செய்ய, அதுவே தூண்டுகோலாகிவிடலாம்.

 

மனிதர்களில் ஒருவருக்கொருவர் சண்டையிடுல், ஏசுதல், சாபமிடுதல் இவைகளை தான் ஷைத்தான் மிக விரும்புகின்றான். மது அருந்தியதற்காக அம்மனிதர் தண்டனை பெற்றுவிட்டாலும் மேற்கொண்டு அவரை சாப வார்த்தைகளால் குத்தி காயப்படுத்தும்போது ஷைத்தான் மகிழ்ச்சியடைகிறான். இதனால் "இவருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்" அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்று கூறினார்கள்.

 

கோபமான நேரத்தில்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (உஹுத் போரில் காயம் ஏற்பட்ட பிறகு) அதிகாலை தொழுகையின் கடைசி ரக்அத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا ) "இறைவா இன்னான் இன்னான் இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக" என்று (சாபமிட்டு) கூறினார்கள்.

 

அப்போது தான் அல்லாஹ், "(நபியே!) இவ்விஷயத்தில் உமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்களை அவன் (இஸ்லாத்தை தழும்படி செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்களை அவன் வேதனையும் செய்யலாம். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள் ஆவர்" எனும் (திருக்குர்ஆன்:- 3:128) வசனத்தை இறக்கியருளினான் நூல்:- புகாரீ-4069

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் தமது சொந்த நலனுக்காக யாரையும் பழிவாங்கியதுமில்லை. சபித்ததோ, ஏசியதோகூட இல்லை. அல்லாஹ்வுக்காக அவனது மார்க்கம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக மட்டும் சில வேளைகளில் இஸ்லாமிய எதிரிகளின் கடும் போக்கு உள்ளவர்களுக்கெதிராக நபியவர்கள் பிரார்த்தித்ததுண்டு. இதன்றி சிலரை அவர்களது செயல் வெளிப்படையில் சட்டவிரோதமாக இருந்த காரணத்தால் நபியவர்கள் ஏசியிருக்கலாம். ஆனால், அல்லாஹ்விடம் அந்த ஏச்சு ஏற்புடையதாக இல்லாமல் இருந்திருக்கலாம்.

 

ஒரு இறைத்தூதர் கோவப்படுவது அல்லாஹுக்காகத்தான் என்றானபோதும் அந்த கோபத்தின் நேரத்தில் சாப வார்த்தைகளை கொட்ட வேண்டாம். மேலும் சென்ற இறைத்தூதர்களில் சிலர் தமது சமுதாயத்தினர் தவறிழைத்தபோது அவர்களுக்கெதிராக சாபமிட்டு பிரார்த்தித்தார்கள். அதனால் அச்சமுதாயத்தினர் அழி க்கப்பட்டனர். அதுபோல் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்திற்கெதிராக சாபமிட்டு பிரார்த்தித்து விடக்கூடாது என்பதற்காக நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுத்தஆலா இறைவசனத்தின் மூலம் சாபமிட வேண்டாமென எடுத்துரைக்கிறான்.

 

இறைவனின் அதிகாரத்துக்குட்பட்டது

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முன் சென்ற சமுதாயம்) பனூ இஸ்ரவேலர்களிலும் இருவர் இருந்தனர். அவ்விருவரில் ஒருவர் பாவம் செய்பவராகவும் மற்றொருவர் வணக்க வழிபாட்டில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவராகவும் இருந்தார். அவ்விருவருமே நண்பர்கள். வணக்கசாலி (தமது நண்பரான) அவர் பாவம் செய்வதை பார்க்கும் போதெல்லாம், ( أَقْصِرْ ) "(நீ பாவம் செய்வதை) குறைத்துக்கொள்" என்று கூறிவந்தார்.

 

இந்நிலையில் ஒருநாள் வணக்கசாலி, (தாம் பெரும்பாவமாகக் கருதிய) ஒரு பாவத்தில் அவர் ஈடுபடுவதை கண்டபோது, அவரிடம் "(நீ பாவம் செய்வதை) குறைத்துக் கொள்" என்று (கடுமையாக) கூறினார். அதற்கு அவர், ( خَلِّنِي وَرَبِّي أَبُعِثْتَ عَلَىَّ رَقِيبًا ) "என்னை என்னுடைய இறைவனிடம் விட்டுவிடு. (நீ தலையிடாதே!) நீ என்னை கண்காணிப்பவராக அனுப்பப்பட்டுள்ளீரா?" என்று வினவினார்.

 

அப்போது அந்த வணக்கசாலி,  ) وَاللَّهِ لاَ يَغْفِرُ اللَّهُ لَكَ أَوْ لاَ يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ  ‏ ) “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மன்னிக்கமாட்டான். அல்லது அல்லாஹ் உன்னை சொர்க்கத்தில் நுழைவிக்கமாட்டான்" என்று கூறினார்.

 

பின்பு அல்லாஹ் அவ்விருவரையும் மரணமடையச் செய்தான். அவ்விருவரும் அல்லாஹ்விடம் ஒன்று சேர்ந்தனர். அப்போது இறைவன் வணக்கசாலியிடம், ( أَكُنْتَ بِي عَالِمًا أَوْ كُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا )  “(பாவம் புரிந்த அவரை நான் மன்னிக்கமாட்டேன்; சொர்க்கத்தில் நுழைவிக்கமாட்டேன் என்று)” நீ என்னை குறித்து அறிந்தவனாக இருந்தாயா? அல்லது என் அதிகாரத்தில் தலையிடும் ஆற்றல் உனக்கு உண்டா?" என்று கேட்டான். பிறகு அல்லாஹ் பாவம் செய்தவனிடம், ( اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ بِرَحْمَتِ ) "நீ எனது அருளின் மூலம் சொர்க்கம் செல்" என்று கூறினான். (வானவர்களிடம்) வணக்கசாலியைக் குறித்து, ( اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ ) "இவரை நரகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறினான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4255

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَلاَعَنُوا بِلَعْنَةِ اللَّهِ وَلاَ بِغَضَبِ اللَّهِ وَلاَ بِالنَّارِ ) உன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! என்றும், உன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகுக! என்றும், (உமக்கு) நரகம் கிடைக்கட்டும்! என்றும் உங்களில் ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்ளாதீர்கள். அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜந்துப் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4260, திர்மிதீ-1899

 

மனிதர்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதென்பது அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட உரிமையாகும். அப்படியிருக்க, அவனது அதிகாரத்தில் தலையிட்டு உனக்கு மன்னிப்பு கிடையாது என்று மனிதன் கூறுவது எல்லை மீறிய செயலாகும். தமிழில், "தலை இருக்க வால் ஆடக்கூடாது" என்பார்கள். மேலும் இது, அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை இழக்க செய்கின்ற குற்றமாகும். அல்லாஹ் நாடினால் மன்னிக்கலாம்; அல்லது தண்டிக்கலாம்.

 

ஒரு மனிதன் பாவமிழைத்தால் பொறுமையோடு அவனைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர, அவனை சபிக்கக் கூடாது. எல்லை மீறி சபிப்பதின் மூலம் அடையும் தீமையை மேற்கண்ட வரலாற்று நிகழ்வு தெளிவுபடுத்துகிறது.

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் "பத்னு புவாத்" போருக்குச் சென்றோம். பயணத்தின் இடையில் ஒரு தோழர் தமது ஒட்டகம் நடந்து செல்லாமல் சிறிது சண்டித்தனம் செய்து நின்று விட்டதற்காக அதை சபித்தார். இதைச் செவியுற்ற நபியவர்கள், ( مَنْ هَذَا اللاَّعِنُ بَعِيرَهُ )   “தமது ஒட்டகத்தைச் சபித்தது யார்?” என்று கேட்டார்கள். நான்தான் நாயகமே!” அவர் கூறினார்.

 

நபியவர்கள், அவரை நோக்கி,  ( انْزِلْ عَنْهُ فَلاَ تَصْحَبْنَا بِمَلْعُونٍ لاَ تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ وَلاَ تَدْعُوا عَلَى أَوْلاَدِكُمْ وَلاَ تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ لاَ تُوَافِقُوا مِنَ اللَّهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ فَيَسْتَجِيبُ لَكُمْ ) "நீ அதிலிருந்து இறங்கி விடு! சபிக்கப்பட்ட பொருளோடு எங்களுடன் நீ வரவேண்டாம்" என்று கூறினார்கள். மேலும், "நீங்கள் உங்களுக்கெதிராகவோ, உங்கள் குழந்தைகளுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால் உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான். (அது உங்களுக்கு பாதகமாக அமைந்து விடும்)” என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5736

 

சபிக்க வேண்டும் என்ற எண்ணமின்றி அந்த வார்த்தைகளை சாதாரணமாகச் சொன்னாலும் அது நமக்கே தீங்காக அமைந்துவிடலாம். சபிக்கக்கூடாது என்பது மனித இனத்திற்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். கோபமாக உள்ள நேரத்தில் நமது நாவை சாப வார்த்தைகளை விட்டும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஐயறிவு கொண்ட உயிரினங்களையே சபிக்கக் கூடாதெனில், பகுத்தறிவு எனும் ஆறறிவு கொண்ட சிறந்த படைப்பான மனித இனத்தை சபிப்பது எவ்வளவு பெரிய கொடிய பாவமாகும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

 

அநியாயக்காரர்களையும், பாவங்கள் செய்யக்கூடியவர்களையும் பெயர் குறிப்பிடாமல், "யா அல்லாஹ் இவர்களை சபிப்பாயாக!" என்று கூறலாம் என திருக்குர்ஆன் (11:18, 7:44)  இயம்புகிறது.

 

வட்டி உண்போரையும், உருவங்கள் வரைவோரையும், மார்க்கத்தில் தீய நவீனங்களை புகுத்துவோரையும், இது போன்ற தீய செயல்களை செய்வோரையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் என்று புகாரீ, முஸ்லிம் போன்ற நபிமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எந்த மனிதர்கள் இறைமறுப்பாளர்களாக மரணித்து விட்டார்களோ அல்லது யார் இறைமறுப்பாளராகவே மரணிப்பார் என்று திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதோ அவர்களின் பெயர் குறிப்பிட்டு சபிக்கலாம். உதாரணமாக: ஃபிர்அவ்ன், காரூன், ஹாமான், அபூலஹப், அபூ ஜஹல் ஷைத்தான்.

 

பழி சுமத்தியதின் பிரதிபலன்

 

அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (மற்றவெரும் பிறரைப் பற்றி) தீய வார்த்தைகளை பகிரங்கமாக பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன்:- 4:148

 

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது நிலத்தில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார் என்று அர்வா பின்த் உவைஸ் என்ற பெண் குற்றம் சாட்டி வழக்கு தொடுத்தார். (விசாரணையின் போது) சயீத் (ரலி) அவர்கள் "நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்து (ஒரு நபிமொழியை) செவியற்ற பிறகும் அவளது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிப்பேனா?" என்று கூறிவிட்டு, ( مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا طُوِّقَهُ إِلَى سَبْعِ أَرَضِينَ )  "யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாக கைப்பற்றிக் கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேல் பகுதியி)லிருந்து ஏழு பூமிகள் வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்" என்பது நபிமொழியாகும்.

 

சயீத் (ரலி) அவர்கள்,    ( اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَعَمِّ بَصَرَهَا وَاقْتُلْهَا فِي أَرْضِهَا ) "இறைவா! இவள் பொய் சொல்லியிருந்தால் இவளது பார்வையைப் பறித்துவிடு! அந்த நிலத்திலேயே இவளைக் கொன்றுவிடு!" என்று பிரார்த்தித்துவிட்டார்கள். பிறகு பார்வை பரிபோனவளாகவே அவள் இறந்தாள். அவள் தனது நிலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு குழியில் (தவறி) விழுந்து இறந்து போனாள். நூல்:- முஸ்லிம்-3291

 

முஸ்லிம் தொகுப்பில் உள்ள மற்றொரு அறிவிப்பில்,  அப்பெண் ( أَصَابَتْنِي دَعْوَةُ سَعِيدِ بْنِ زَيْدٍ ) “சயீத்தின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது” என்று கூறுவாள்" என்று வருகிறது.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ ) அநியாயமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள்ளுங்கள். அவர் செய்யும் பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தவித திரையும் கிடையாது. (அப்பிரார்த்தனை உடனே ஏற்றுக் கொள்ளப்படும்) நூல்:- திர்மிதீ-1937

 

அநியாயமிழைக்கப்பட்டவர் தனது எதிராளியை மன்னித்து விடுவது சிறந்ததாகும். ஆனால், சில சமயங்களில் மனம் பொறுத்துக்கொள்ள இயலாமல், அநியாயமிழைத்தவனை சபித்துவிட்டால் அதற்காக அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார் என்று மேற்காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.

 

மேலும், பிறர் மீது அபாண்டமாக பழி சுமத்துவது, பொய்யரைப்பது, அவதூறு கற்பிப்பது இவை கொடிய பாவமாகும். இவைகளால் பாதிக்கப்பட்டவர் சபித்துவிட்டால் அது பழித்து விடும் அபாயம் உண்டுஎன்று உணர்ந்து எச்சரிக்கையோடு வாழ வேண்டும். சுருங்கக்கூறின்: பிறர் மனம் நோகும்படி நடந்து கொண்டால், அதன் பிரதிபலனை அனுபவிக்க நேரிடும். எனவே, நாம் பிறரை சபிப்பதை விட்டும், பிறர் நம்மை சபிப்பதை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்!

 

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...