Search This Blog

Saturday, 25 February 2023

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

 

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏

 

எல்லாப் புகழும் அனைத்துலகங்களையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரியது. திருக்குர்ஆன்:- 1:1

 

மனிதன் அனுபவிக்கும் அனைத்து இன்பங்களும் அல்லாஹுத்தஆலா வழங்கிய அருள்வளங்கள் தான். மனிதன் அதற்காக அல்லாஹ்விற்கு தமது வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்தினாலும் போதாது.

 

நாம் அடிக்கடி கூறும் வார்த்தைகளில் ஒன்றே “அல்ஹம்துலில்லாஹ்” என்பது. தொழுகையில், தொழுகையின் பின்னர், சாப்பிட்ட பின்னர், என பல சந்தர்ப்பங்களில் இவ்வார்த்தையை நாம் கூறுகின்றோம்.

 

ஆனாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இச்சிறிய வார்த்தையின் ஆழமான அர்த்தத்தைப் பற்றி நாம் சிந்திப்பது மிகக்குறைவு. அதன் அர்த்தத்தைப் புரிந்து, உளப்பூர்வமாக அதனை மொழிபவர்களும் மிகக்குறைவு.

 

சிறு விளக்கம்

 

“அல்ஹம்து” என்பதை நாம் தமிழில் “புகழ்” என மொழிபெயர்க்கின்றோம். இது சரியான நேரடி மொழிபெயப்பல்ல. மாறாக, ஓர் மேலோட்டமான  மொழிபெயர்ப்பு மட்டுமே. அரபு மொழியில் “ஹம்த்” என்ற வார்த்தை, ஒருவர் சுயவிருப்புடன் செய்யும் நற்செயலுக்காக அவரை கண்ணியப்படுத்தி, நாவினால் புகழ்வதைக் குறிக்கும்.

 

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் “ஹம்த்” என்பதற்கு, ‘புகழுக்குரிய ஒருவரை நேசிப்பதுடனும், மகத்துவப்படுத்துவதுடனும் அவரது நல்லறங்கள் பற்றிக் கூறுவதாகும்என்கின்றார்கள்.

 

எனவே, “அல்ஹம்த்” என்பது நாவால் அல்லாஹ்வைப் புகழ்வதை மாத்திரம் குறிக்காது. மாறாக, அவனை நேசித்தல், மகத்துவப்படுத்தல், அவனது அருள்கள், ஆற்றல்களைப் பற்றிப் பேசுதல் என்பனவும் கட்டாயமாக உள்ளடங்கும். எனவேதான், “அல்ஹம்த்” என்ற சொல் பயன்படுத்தப்படத் தகுதியானவன் “அல்லாஹ்” மாத்திரமே என அறிஞர்கள் கூறுவர்.

 

ஒருவர் இன்னொருவரைப் புகழ, பிராதனமாக இரண்டு காரணிகள் இருக்கலாம். 1) அவரது தன்னிகரற்ற ஆற்றல். 2) புகழ்பவருக்கு அவர் செய்த அருள்கள்.

 

உண்மையில் இவ்விரண்டு அம்சங்களும் முழுமையாக அல்லாஹ்விற்கு மாத்திரமே உள்ளன.

 

படைப்புக்களிடம் உள்ள ஆற்றல்கள், அல்லது அவர்கள் மக்களுக்கு செய்யும் நலவுகள் அனைத்தும் அல்லாஹ்வின உத்தரவின் பிரகாரமே நிகழ்கின்றன.

 

ஒரு மனிதன் அல்லாஹ்வின் வல்லமைகள், அல்லாஹ் தனக்கு செய்துள்ள பேருபகாரங்கள் பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அவனை அறியாமலேயே அல்ஹம்துலில்லாஹ்என்ற வார்த்தை வந்துவிடும்.

 

இதேவேளை, இச்சொல்லை மொழிபவரிடம் பல நல்ல பண்புகள் இருப்பதைக் காட்டுகின்றது, அவற்றில் சில:

 

1. العدل (நீதம்) ஒரு மனிதன் தனக்கு ஒரு சந்தோசமான நிகழ்வு ஏற்படும் போது, அல்லது அவனது முயற்சி வெற்றியளிக்கும்போது அல்லாஹ்வைப் புகழ்கின்றான் என்றால், அந்த சந்தோசத்திற்கான உண்மையாக காரணம், தன் உழைப்பல்ல. அல்லாஹ்வின் அருளே என்கிறான். புகழுக்குத் தகுதியாவனுக்கு மட்டும் அதைக் கூறுவதன் மூலம் அதில் நீதமாக நடந்துகொள்கின்றான்.

 

2. التواضع (பணிவு) எவ்வளவுப் பெரிய வெற்றியின்போதும் அதன் பெருமையை தன்னுடன் இணைத்துப் பெருமையடிக்காமல், அல்லாஹ்வே காரணமானவன் என அவனைப் புகழ்வது பணிவுத்தன்மையின் ஓர் அடையாளமாகும்.

 

3. الشكر (நன்றி செலுத்தல்) ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் அனைத்து சந்தோசமான நிகழ்வுகளின்போதும் அல்லாஹ்வைப் புகழ்வது அவற்றிற்குக் காரணமாக இருந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதாகும்.

 

இவை, இச்சொல் பொதிந்துள்ள ஆழமான அர்த்தம் பற்றிய ஒரு சிறு விளக்கமே. இச்சொல் உள்ளடக்கத்தை ஒருபோதும் மனிதனால் பூரணமாக விளக்கிட முடியாது.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الطَّاعِمُ الشَّاكِرُ لَهُ مِثْلُ أَجْرِ الصَّائِمِ الصَّابِرِ ) உண்டுவிட்டு (இறைவனுக்கு) நன்றி செலுத்துபவருக்குப் பொறுமையுடன் நோன்பு நோற்றவருக்குக் கிடைக்கும் நற்கூலியைப் போன்றது உண்டு. அறிவிப்பாளர்:- சினான் பின் சன்னா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1755, திர்மிதீ-2410,முஸ்னத் அஹமத்-18242, தாரிமீ-1938

 

இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதம்

 

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு அவரது உடலில் உயிர் ஊதப்பட்டவுடன் ஆதம் (அலை) அவர்களுக்கு தும்மல் ஏற்பட்டது. உடனே வானவர்கள், ( قُلِ الْحَمْدُ لِلَّهِ ) "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்லுங்கள்" என்றனர். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹுத்தஆலா ( رَحِمَكَ رَبُّكَ ) "(ஆதமே!) உமது இறைவன் உமக்கு அருள்புரிவானாக! என்று கூறினான். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா


இதன் அடிப்படையில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "ஒருவர் தமக்கு தும்மல் ஏற்படும்போது "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினால் அதை செவியுறுபவர் "யர்ஹமகல்லாஹ்" (அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக!) என்று கூறட்டும்" என்று கூறினார்கள்.


திருக்குர்ஆன் என்பது மனிதர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அருள் அல்லது பாக்கியம் எனலாம். அல்லாஹ் தமது அருள் வேதத்தைத் துவங்கும்போதே "அல்ஹம்துலில்லாஹ்" என்ற சொல்லில் இருந்து தான் துவங்குகிறான். எனவே, நாம் அந்தச் சொல்லின் கனத்தை  உணரவேண்டும்.


ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களின் ஒட்டகம் திருடப்பட்டுவிட்டது. அப்போது அண்ணலார், ( لَئِنْ رَدَّها اللَّهُ عَلَيَّ لَأشْكُرَنَّ رَبِّي ) "அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தை திரும்ப தந்தால் நான் அவனுக்கு நன்றி செலுத்துவேன்" என்றார்கள். ஒரு அரபு கோத்திரத்தார் தான் அந்த ஒட்டகத்தை  திருடி சென்றிருந்தனர். அவர்களில் ஒரு முஸ்லிமான பெண் இருந்தாள். இந்த விஷயத்தை அறிந்த அப்பெண், இரவில் அக்கூட்டத்தார் தூங்கிய நேரத்தில் அந்த ஒட்டகத்தில் ஏறி இரவோடு இரவாக பயணித்து காலையில் அதை அண்ணலாரிடம் கொண்டுவந்து சேர்த்தாள்.

 

அதைக்கண்ட அண்ணலார் சந்தோஷத்தால், "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே) என்று மட்டும் கூறினார்கள். வேறு எதுவும் சொல்லவில்லை. இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அண்ணலார் ஒரு தொழுகையையோ அல்லது நோன்பையோ நிறைவேற்றுவார்கள் என்று நபித்தோழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அண்ணலார் அவ்வாறு செய்யவில்லை. அண்ணலார் தாங்கள் சொன்னதை மறந்து இருப்பார்களோ என்று எண்ணிய நபித்தோழர்கள் அண்ணலாரிடம், "நாயகமே! ஒட்டகத்தை இறைவன் திரும்ப தந்தால் நன்றி செலுத்துவேன் என்று நீங்கள் ஏற்கனவே கூறினீர்களே!" என்றனர். அப்போது அண்ணலார், ( ألَمْ أقُلِ الحَمْدُ لِلَّهِ ) "நான் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறவில்லையா?" என்று கேட்டார்கள். (அதுவும் நன்றி செலுத்தும் விதம்தானே! என்றார்கள்.) நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ قَالَ: اَلْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ مِنْ قِبَلِ نَفْسِهِ كُتِبَتْ لَهُ ثَلاَثُونَ حَسَنَةً وُحُطَّتْ عَنْهُ ثَلاَثُونَ سَيِّئَةً ) ஒருவர் மனப்பூர்வமாக "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று கூறினால அவருக்கு முப்பது நன்மைகள் எழுதப்படுகின்றன. முப்பது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பாளர்:-  அபூஹுராரா (ரலி)  அவர்கள் நூல்:- அமலுல் யவ்ம் வல்லைலா-84 இமாம் நசாயீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إذا قُلْتَ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العالَمِينَ. فَقَدْ شَكَرْتَ اللَّهَ فَزادَكَ )  நீர் 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்று கூறினால், நிச்சயமாக நீ அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துவிட்டாய். மேலும் (அதன் மூலம்) உனக்கு அல்லாஹ் அவனது அருட்கொடைகளை அதிகமாக தருவான். அறிவிப்பாளர்:- ஹகம் பின் உமைர் (ரலி) அவர்கள் நூல்:- தைலமீ,  தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

நமது தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்குரிய வழிமுறைகளை மிகச் சுருக்கமாகக் கற்றுத் தந்துள்ளார்கள்.

 

அல்லாஹ் புரிந்த பேருபகாரங்களுக்கு  நன்றி கூறவேண்டும். அதற்கு இஸ்லாம் இலகுவான முறையைக் கற்றுத்தருகிறது. அதாவது "அல்ஹம்துலில்லாஹ்" என்று மனதார கூறினாலும் போதுமானது.

 

அதற்காக, இரவும் பகலுமாக தொழுதுதான் ஆக வேண்டும், நோன்பு நோற்றுத்தான் ஆக வேண்டும்,  பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை தர்மம் செய்து தான் ஆக வேண்டும் என்பதல்ல. வெறுமனே “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறி அல்லாஹ்வை புகழ்ந்தாலும் போதுமானதே. இஸ்லாம் எந்த விதத்திலும் மனிதர்களை சிரமப்படுத்துவதில்லை.

 

சிறந்த திக்ர்

 

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என (நபியே) நீர் கூறுவீராக. திருக்குர்ஆன்:- 17:111

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَوَّلُ مَنْ يُدْعَى إِلَى الْجَنَّةِ الْحَمَّادُونَ الَّذِينَ يَحْمَدُونَ اللَّهَ عَلَى السَّرَّاءِ وَالضَّرَّاءِ ) இன்பத்திலும் துன்பத்திலும் (என அனைத்து நிலைகளிலும்) அல்லாஹ்வை புகந்தவர்கள் தான் சொர்க்கத்திற்கு முதலில் அழைக்கப்படுவார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு மர்தவைஹீ, ஹாகிம், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அத்தவ்பா வசனம்-112


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ ) “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்(று இறைவனை துதிப்)பது (நன்மை மற்றும் தீமைகள் நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.  அறிவிப்பாளர்:- அபூ மாலிக் அல் அஷ்அரி (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-381

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( أَمَا يَسْتَطِيعُ أَحَدُكُمْ أَنْ يَعْمَلَ كُلَّ يَوْمٍ مِثْلَ أُحُدٍ عَمَلاً؟ ) "உங்களில் எவரேனும் தினமும் உஹுது மலையளவு நற்செயல் செய்ய இயலுமா?'' என்று கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், "நாயகமே! உஹுது மலையளவுக்கு எவரால் நற்செயல் செய்ய முடியும்?'' என கேட்டார்கள். அண்ணலார், ( كُلُّكُمْ يَسْتَطِيعُهُ ) "உங்களில் எல்லோராலும் செய்ய முடியும்'' என்று  கூறினார்கள். நபித்தோழர்கள்,  "நாயகமே! அது என்ன நற்செயல்?' என வினவினார்கள். 

 

அண்ணலார், ( وَالْحَمْدُ لِلّهِ أَعْظَمُ مِنْ أُحُدٍ ) "அல்ஹம்துலில்லாஹ் (சொல்வதின் நன்மை) உஹுது மலையைவிடப் பெரியது" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்

 

உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னை கடந்துசென்றபோது நான், “நாயகமே! நான் வயது முதிர்ந்து பலவீனமானவளாகிவிட்டேன். நான் உட்கார்ந்த நிலையிலேயே செய்யும்படியான ஏதேனும் ஒரு நற்செயலை எனக்குச் கற்றுத்தாருங்கள்'' என்று கேட்டேன்.

 

அப்போது நபியவர்கள் ( وَاحْمَدِي اللهَ مِائَةَ تَحْمِيدَةٍ فَإِنَّهَا تَعْدِلُ مِائَةَ فَرَسٍ مُسْرَجَةٍ مُلْجَمَةٍ تَحْمِلِينَ عَلَيْهَا فِي سَبِيلِ اللهَ ) “அல்ஹம்துலில்லாஹ்' என நூறு முறை கூறுங்கள், கடிவாளமிட்ட சேனையுடன் நூறு குதிரைகளை அல்லாஹுத்தஆலாவின் பாதையில் சவாரி செய்யக் கொடுத்ததற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும்” என்றார்கள். நூல்:- இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், தப்ரானீ, ஹாகிம், மஜ்மஉஸ்ஸவாயித், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-504

 

காரியங்களைத் துவங்கும்போது...

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ كَلاَمٍ لاَ يُبْدَأُ فِيهِ بِـالْحَمْدُ لِلَّهِ فَهُوَ أَجْذَمُ ) "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறப்படாமல் துவங்கப்பட்ட ஒவ்வொரு காரியமும் வீணானவையாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4200, முஸ்னது அஹ்மத்  

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لاَ يُبْدَأُ فِيهِ بِالْحَمْدِ أَقْطَعُ ) இறைவாழ்த்து (அல்ஹம்துலில்லாஹ்) சொல்லி தொடங்கப்படாத ஒவ்வொரு (முக்கிய) விஷயமும் அறவே (பரக்கத் எனும்) அருள்வளம்  அற்றதாகும். அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1884

 

முக்கியமான ஒப்பந்தம் அல்லது சொற்பொழிவுகளாக இருந்தாலும் "அல்ஹம்துலில்லாஹ்" என இறை வாழ்த்து சொல்லி துவங்கவேண்டும் அவ்வாறு இறைவாழ்த்து சொல்லப்படாமல் துவங்கப்படும் காரியத்தில் அருள்வளம் நீங்கிவிடுகிறது என்று இந்நபிமொழி உணர்த்துகிறது.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَسَمُّوا إِذَا أَنْتُمْ شَرِبْتُمْ وَاحْمَدُوا إِذَا أَنْتُمْ رَفَعْتُمْ ) நீங்கள் (பானங்கள்) பருகும்போது "பிஸ்மில்லாஹ்" என்று கூறுங்கள். பருகி முடித்ததும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1807

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை உணவு உண்ட பின்னர் அதற்காக (அல்ஹம்துலில்லாஹ் என்று) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அல்லது ஒருமுறை பானம் அருந்திய பிறகு அதற்காக (அல்ஹம்துலில்லாஹ் என்று) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அடியான் குறித்து அல்லாஹ் சந்தோஷம் கொள்கிறான். நூல்:- முஸ்லிம்-5282

 

தும்மலின்போது

 

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மண்ணால் படைக்கப்பட்டு, உயிர் ஊதப்பட்டவுடன் ஆதம் (அலை) அவர்களுக்கு தும்மில் ஏற்பட்டது. உடனே அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று தான் கூறினார்கள் என்கிறது அவர்களது வரலாறு. அதாவது, மனிதன் கூறிய முதல் சொல் "அல்ஹம்துலில்லாஹ்" தான் என்பது குறிப்பிடத்தக்கது.


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ ) அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். ஆகவே, ஒருவர் தூம்மியவுடன் "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (யர்ஹமுக்கல்லாஹ் -  அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும் என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.  அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6223

 

தும்மலினால் கழிவுகள் வெளியேறி, மயிர்க்கண் திறந்து, உடல் இலேசாகிறது. புத்துணர்ச்சியும் உற்சாகமும் தோன்றுகிறது. மனிதனின் புத்தியக்கத்திற்கு வழிகோலுவதாலும் தும்மல் விரும்பத்தக்கதாகும். இதனாலேயே தும்மியவர்  இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு "அல்ஹம்துலில்லாஹ்" என அல்லாஹ்வைப் புகழ்கிறார். அல்லாஹ்வைப் புகழ்ந்ததற்குப் பிரதிபலனாக அதைக் கேட்டவர் "யர்ஹமுகல்லாஹ்" (அல்லாஹ் உங்களுக்குக் கருணை செய்வானாக) என பிரார்த்திக்கிறார்.

 

மூளை நரம்புகளில் சில சமயம் காற்று தங்கிவிடுகிறது. அதை வெளியேற்றுவதற்காக ஒரு அழுத்தம் தும்மலின் மூலம் கொடுக்கப்படுகிறது. மூளை நரம்புகளில் அடைபட்டிருக்கும் காற்று மூக்கின் மூலம் வெளியேற்றப்படுகிறது. மூளை நரம்புகளில் இந்த காற்று தங்கிவிட்டால் பக்கவாத நோய் ஏற்படும் ஆபத்து உண்டாகிறது. எனவே தான் தும்முபவன் "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்லி அல்லாஹ்வின் உபகாரத்திற்கு நன்றி செலுத்துகிறான்.

 

சிலர் குப்பை கூளங்களுக்கு மத்தியிலும், தூசி புழுதி நிறைந்த இடங்களிலும் நாள் முழுவதும் வேலை செய்வதால் புழுதிகள், கிருமிகள் மூக்குக்கு உள்ளே நுழைந்து கொள்கின்றன. அவைகளை வெளியேற்றுவதற்காகத்தான் அல்லாஹ் தும்மலை மனிதனுக்கு கொடுத்துள்ளான். அதன் மூலம் பல்வேறு ஆபத்தான நோய்களை விட்டும் மனிதன் பாதுகாக்கப்படுகிறான்.

 

எனவேதான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தும்மலை விரும்பி வரவேற்றுள்ளார்கள்.

 

ஒருவர் தும்மியவுடன் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்ல வேண்டுமென இஸ்லாம் இயம்புவதன் நோக்கம் என்னவெனில், நாம் தும்மும்போது தும்மலின் வேகம் 100 கி.மீ. ஆக இருக்கும். இதன் நேரம் மிகக் குறுகியதாக இருந்தாலும், நாம் தும்மும்போது இதயம் உட்பட நமது அனைத்து அவையங்களும் இயங்காமல் நின்று விடுகின்றன. இதனால் சிலவேளை நாம் இறக்கவும் நேரிடலாம். தும்மி முடிந்ததும் நமது உயிரை அப்படியே வைத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே நாம் அல்ஹம்துலில்லாஹ்என்று கூறுகிறோம்.

 

மறுமொழி கூறினார்

 

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபையில் ஒரு யூதர் அமர்ந்திருந்தார். அப்போது அண்ணலார் தும்மிவிட்டு, (அல்ஹம்துலில்லாஹ்) “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்றார்கள். அதைச் செவியுற்ற அந்த யூதர், (யர்கமுகுமுல்லாஹ்) "உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக" என்று மறுமொழி கூறினார். இதனால் சந்தோசமுற்ற அண்ணலார், (யஹ்தீகுமுல்லாஹ்) "உமக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக" என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு அந்த யூதர்  இஸ்லாத்தில் இணைந்துவிட்டார். நூல்:- பைஹகீ

 

பிரார்த்தனையின்போது...

 

ஒரு மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தாமலும் (புகழாமலும்) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத்து  ஓதாமலும் பிரார்த்திப்பதை அண்ணலார் செவியுற்றார்கள். அப்போது அண்ணலார் (அஜில ஹாதா) "இவர் அவசரப்பட்டுவிட்டார்" என்று கூறினார்கள். பின்னர் அண்ணலார் அவரை அழைத்து "உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் அவர் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் விதத்தில் (‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறி) புகழட்டும். பின்னர் அருமை நாயகம் (ஸல்) மீது சலவாத்து ஓதட்டும். பின்னர் தான் நாடியதை பிரார்த்திக்கட்டும்" என்று கூறினார்கள்.  அறிவிப்பாளர்:- ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள்  நூல் :-அபூதாவூத்-1481, திர்மிதீ-3389, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا أَنْعَمَ اللَّهُ عَلَى عَبْدٍ نِعْمَةً فَقَالَ الْحَمْدُ لِلَّهِ ‏.‏ إِلاَّ كَانَ الَّذِي أَعْطَاهُ أَفْضَلَ مِمَّا أَخَذَ ‏ ) அல்லாஹ் (தன்) அடியாருக்கு அருள்வளம் ஏதேனும் அருளும் போது அவர் "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினால், அந்த அடியார் மொழிந்த (இறைபுகழ் சொல்லான)து அவர் பெற்றுக்கொண்ட (அருள்வளத்)தைவிட சிறந்ததாகிவிடும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3795

 

தேவை வரும்போது தான் நம்மையெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று சொல்லக்கூடாது. மக்களின் தேவையை நிறைவேற்ற நமக்கு வசதிவாய்ப்பை வழங்கிய “அல்ஹம்துலில்லாஹ்” (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொல்லவேண்டும்.

 

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்ற முத்திரை பதித்த மோதிரத்தை அணிந்திருந்தார்கள்.

 

நெடும் புகழ் நீதியரசர் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

( إِنِّي لَأُصَابُ بِالْمُصِيبَةِ، فَأَحْمَدُ اللَّهَ عَلَيْهَا أَرْبَعَ مَرَّاتٍ؛ أَحْمَدُ إِذْ لَمْ يَكُنْ أَعْظَمَ مِنْهَا، وَأَحْمَدُ إِذْ رَزَقَنِي الصَّبْرُ عَلَيْهَا، وَأَحْمَدُ إِذْ وَفَّقَنِي لِلِاسْتِرْجَاعِ لِمَا أَرْجُو مِنْ الثَّوَابِ، وَأَحْمَدَ إِذْ لَمْ يَجْعَلْهَا فِي دِينِي )

எனக்கு பொருள் இழப்பு, உயிர் இழப்பு, உடல் நலக்குறைவு போன்ற ஏதேனும் சோதனை ஏற்பட்டால், நான் அதற்காக நான்கு முறை "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறி அல்லாஹ்வை புகழ்வேன்.

 

இதைவிட பெரிய சோதனை எனக்கு தரப்படவில்லை என்றெண்ணி முதலில் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்வேன். (நமக்கு ஒரு சோதனை ஏற்படும்போது அதைவிட பெரிய சோதனை ஏற்படவில்லையே என்று ஆறுதல் அடைந்துகொள்ள வேண்டும்.) ஏற்படும் சோதனையை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு பொறுமை வழங்கப்பட்டதற்காக. இரண்டாவது முறை “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்வேன். சோதனைகள் ஏற்படும்போது “இன்னாலில்லாஹி” என்று சொல்கிறேன் அவ்வாறு சொல்வதால் எனக்கு நன்மைகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பு எனக்கு தரப்பட்டிருப்பதற்காக. மூன்றாவது முறை "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்வேன். எனக்கு ஏற்பட்ட  பொருள் இழப்பு, உயிர் இழப்பு, உடல் நலக்குறைவு போன்ற சோதனைகள் உலகம் சார்ந்தவை தான். இறைநம்பிக்கையை இழப்பது போன்ற மறுமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் எனக்கு சோதனைகள் வரவில்லையே என்றெண்ணி நான்காவது முறை "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்வேன். அறிவிப்பாளர்:- ஷஅபீ (ரஹ்) அவர்கள் நூல்:- சியரு அஃலாமுந் நுபலா 4/105

 

"அல்ஹம்துலில்லாஹ்" என்ற திக்ரை நாம் சொல்வதின் மூலம் நம்முடைய இன்னல்கள் நீங்கும். அருள்வளம் பெருகும். நன்மையின் தட்டு கனமாகும். எனவே, நாம் அனுதினமும் "அல்ஹம்துலில்லாஹ்" என்ற திக்ரை அதிகமதிகமாக ஓதி, இறைவனின் நெருக்கத்தையும் நேசத்தையும் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...