பெண்ணுக்கு மரியாதை
وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا
وَهُوَ كَظِيمٌ
அவர்களில்
ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நற்செய்தி கூறப்பட்டால், அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான்.
திருக்குர்ஆன்:- 16:58
ஒரு பெண் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக பல்வேறு பரிணாமம் அடைகிறாள். அவள் எந்த பருவத்தில் இருந்தாலும் அவளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆணுக்குரியது. அதன்மூலம் அவன் இறையன்பைப் பெறுவான் என்கிறது இஸ்லாம்.
அம்மா, உன்னை சொர்க்கத்தில் கொண்டு சேர்ப்பார்.
சகோதரி, உனக்கு சொர்க்கம் கிடைக்க காரணமாவாள்.
மனைவி, உன் மார்க்கத்தின் பாதியைப் பரிபூரணப்படுத்துவாள்.
மகள், நரகத்திற்கு தடையாவாள்.
எந்த வயதிலும்
பெண் மகத்தானவளே என்கிறது இஸ்லாம்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِسْتَوْصُوا
بِالنِّسَاءِ خَيْرًا ) பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்லவிதமாக
நடந்து கொள்ளும்படி கூறும்) எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நூல்:- புகாரீ3331, முஸ்லிம்-2914
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( حُبِّبَ
إِلَىَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ ) உலகப் பொருள்களில் எனக்கு
பெண்களும் நறுமணமும் பிடித்தமானவையாக ஆக்கப்பட்டுள்ளன. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள்
நூல்:- நசாயீ, முஸ்னது அஹ்மத் தஃப்சீர் இப்னு கஸீர் ஆலு இம்ரான் வசனம்-39
தாய்
கண்மணி
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلجَنَّةُ
تحْتَ أَقدَامِ الأمَّهَاتِ
) தாய்மார்களின் காலடியில்
சொர்க்கம் இருக்கிறது. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அல்காமில் இமாம் இப்னு
அதிய்யி, ளஈஃபுல் ஜாமிஉ-2666, ஹாகிம்
அபுத்
துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் 'ஜியிர்ரானா' எனும் இடத்தில் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுப்பதை
நான் கண்டேன். அந்நாளில் நான் சிறுவனாக இருந்தேன். ஒட்டகத்தின் எலும்புகளைச் சுமந்து
செல்வேன். அப்போது ஒரு பெண்மணி நபியவர்களை நோக்கி நெருங்கி வந்தார். அந்த பெண்மணி அமர்வதற்காக
நபியவர்கள் தமது சால்வையை விரித்தார்கள். அந்த பெண்மணி அதன் மீது அமர்ந்தார். அப்போது
நான், "(அங்கிருந்தோரிடம்)
இவர் யார்?" என்று
வினவினேன். அதற்கு மக்கள், "இந்தப் பெண்மணி நபியவர்களுக்கு பாலூட்டிய (செவிலித்)தாய்
ஆவார்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4478
நபித்தோழி
ஜாஹுமா (ரலி) அவர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் அறப்போரில் கலந்து கொள்ள
ஆலோசனை கேட்டார். அவரிடம் நபியவர்கள், "உமக்கு தாயார் உண்டா?" என்று கேட்க, அவர் "ஆம்" என்றார். உடனே நபியவர்கள், "தாயாருக்கு சேவை செய்வதை உமது கடமையாக ஆக்கிக் கொள்!
தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது" என்றார்கள்.
அப்துல்லாஹ்
பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் பெரும் பாவம் ஒன்றைச் செய்துவிட்டேன்.
எனக்கு பாவமீட்சி உண்டா?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( هَلْ لَكَ مِنْ أُمٍّ
) "உமக்குத்
தாய் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார்.
நபியவர்கள், ( هَلْ لَكَ مِنْ خَالَةٍ ) "உமக்குச்
சிற்றன்னை (தாயின் சகோதரி) இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" (இருக்கிறார்)
என்றார். நபியவர்கள், ( فَبِرَّهَا ) "அவ்வாறாயின் அவருக்கு நீர் நன்மை செய்வீராக!"
என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-1827, முஸ்னது அஹ்மத்
அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, "நான் ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பினேன். அவள் மறுத்துவிட்டாள்.
மற்றொருவர் விரும்பியபோது அவள் சம்மதித்துவிட்டாள். இதனால் ரோசம் கொண்ட நான் அவளை கொலைசெய்து விட்டேன். எனக்கு ஏதேனும் பரிகாரம்
உண்டா? என்று கேட்டார்.
அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( أُمُّكَ
حَيَّةٌ؟ ) "உமக்கு தாய் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை" என்றார். அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
(ரலி) அவர்கள் அவரிடம், ( تُبْ
إِلَى اللهِ عَزَّ وَجَلَّ، وَتَقَرَّبْ إِلَيْهِ مَا اسْتَطَعْتَ ) “அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு செய்து, முடிந்தளவு அல்லாஹ்வின் நெருக்கத்தை தேடிக்கொள்!"
என்றார்கள். இந்த நிகழ்வை அறிவிகின்ற அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "உமது தாய் உயிருடன் இருக்கிறாரா? என்று ஏன் வினவினீர்கள்? என்று கேட்டேன். அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அவர்கள், ( إِنِّي لاَ أَعْلَمُ عَمَلاً أَقْرَبَ إِلَى
اللهِ عَزَّ وَجَلَّ مِنْ بِرِّ الْوَالِدَةِ
) "அல்லாஹ்வுக்கு
மிக நெருக்கமாக ஆவதற்கு தாய்க்கு உபகாரம் செய்வதைவிட சிறந்த எந்த நற்செயலையும் நான் அறியமாட்டேன்" என்று
கூறினார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-4
தாயைக்
கௌரவிப்பதும் சொர்க்கத்தில் நுழைவதற்கான காரணங்களில் ஒன்றாகும். “தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது” என்பது தாய்க்கு சேவை செய்வதே தூய்மையான சேவையாகும்.
இந்த சேவையை செய்வதில் சுயநலமோ, அகங்காரமோ இருக்கக்கூடாது. தாய் இறைமறுப்பாளராக இருந்தாலும்
சரியே! இதுவே, எல்லாம் வல்ல இறைவனின் கூற்று.
மனிதன்
செய்துவிட்ட சில பாவங்களுக்கு பரிகாரம் தாய்க்கு அல்லது தாய் இறந்துவிட்டால் தாயின்
சகோதரிகளுக்கு பணிவிடை செய்வதில் இருக்கிறது என்று இந்த இரு நபிமொழிகளும் இயம்புகிறது. தாயின் சகோதரி தாயின் அந்தஸ்தில்
உள்ளவள் என்கிறது இஸ்லாம்.
சகோதரி
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَتْ لَهُ أُخْتَانِ
، فَأَحْسَنَ صُحْبَتَهُمَا مَا صَحِبَتَاهُ ، دَخَلَ بِهِمَا الْجَنَّةَ ) ஒருவருக்கு சகோதரிகள் இருவர் இருந்து, அவ்விருவரும் அவருடன் இருக்கும் காலமெல்லாம் அவர்களுடன் அவர்
நல்ல முறையில் உறவாடினால், அவ்விருவர் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவார். அறிவிப்பாளர்:-
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்-2000
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ
كَانَ لَهُ ثَلاثُ أَخَوَاتٍ أَوْ أُخْتَانِ فَأَحْسَنَ صُحْبَتَهُنَّ وَاتَّقَى اللَّهَ
فِيهِنَّ فَلَهُ الْجَنَّةُ ) ஒருவருக்கு மூன்று சகோதரிகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ
இருந்து அவர் உரிய முறையில் அவர்களின் உறவை(யும் கடமையையும் பேணி)க் காத்து, அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொண்டால்
அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும். அறிவிப்பாளர்:-
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:-
திர்மிதீ-1839, அல்அதபுல் முஃப்ரத்-79
ஜாபிர்
பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (கன்னிப் பெண்ணை தவிர்த்து) ஒரு
விதவைப் பெண்ணை தான் மணமுடித்தேன். அதற்கு காரணம் என்னவென்றால் என் தந்தை (உஹது
போரில்) இறந்து விட்டார். (அவர் இறக்கும் போது) ஏழு பெண் பிள்ளைகளை விட்டுச்
சென்றுள்ளார். வயதில் அந்த பெண் பிள்ளைகளைப் போன்ற ஒரு (இளம் வயது) பெண்ணை
(மணமுடித்து) அவர்களிடம் அழைத்து செல்வதை நான் விரும்பவில்லை. ஆகவே நான் அவர்களைப்
பாராட்டி சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்து கொண்டேன் என்றார்.
இதைச்
செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( بَارَكَ
اللَّهُ لَكَ أَوْ خَيْرًا ) "அல்லாஹ் உனக்கு
அருள்வளம் புரிவானாக! அல்லது நன்மையைப் பொழிவானாக!" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5367, முஸ்லிம்-2908
இளம் வயதினர்
கன்னிப்பெண்களை மணமுடிப்பதைத்தான் விரும்புவார்கள். ஆனால், இங்கே வாலிப முறுக்கோடு இருந்த ஜாபிர் (ரலி) அவர்கள்
தமது சகோதரிகளை நல்ல முறையில் பக்குவமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக குடும்ப
வாழ்க்கையில் பக்குவப்பட்ட ஒரு விதவைப் பெண்ணை திருமணம் முடித்திருக்கிறார். ஜாபிர்
(ரலி) அவர்கள் தமது சகோதரிகளுக்காக இல்லறத்தில் கிடைக்கும் சில இன்பங்களை தியாகம் செய்துள்ளார்.
இவரின் தியாகத்தை எண்ணி இவரின் நல்வாழ்வுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
நமது பகுதியில்
தம்முடைய சகோதரிகளுக்கு மணமுடித்து வைப்பதற்காக அரும்பாடுபட்டு பொருளீட்டி அவர்களுக்கு
மணமுடித்துக் கொடுத்த பிறகு தான் தமக்கு திருமணம் என்றெண்ணும் சகோதரர்கள் ஏராளம்.
இன்னும்
சில சகோதரர்கள், தமது சகோதரிகளுக்கு மணமுடித்து வைத்த பிறகும்கூட தமது மச்சான்மார்கள்
பொருளாதாரத்தில் சிறந்தோங்க, அவருக்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்கிறார்கள். மேலும் தமது
சகோதரிகளின் பிள்ளைகளை தமது பிள்ளைகள் என்றெண்ணி அவர்களை வளர்ப்பதிலும் அரும்பாடு படுகிறார்கள்.
மனைவி
கண்மணி
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِذَا تَزَوَّجَ العَبدُ
فَقَد اِستَکمَلَ نِصفُ الدِّینِ فَلیَتَّقِ اللّٰهَ فِی النِّصفِ البَاقِی ) ஒரு மனிதன் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய
மார்க்கம் பாதி பரிபூரணமாகிவிட்டது. மீதியுள்ள பாதியில் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, அல்தன்வீர் ஷரஹ் ஜாமிஉஸ் ஸஙீர், தக்ரீஜுல் கஷ்ஷாஃப், மிஷ்காத் பக்கம்-268
அருமை
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا) உங்களில் தம் துணைவியரிடம் நற்பண்புகளுடன் நடந்துகொள்பவரே உங்களில்
சிறந்தவர் ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1082, இப்னுமாஜா-1968, முஸ்னது அஹ்மத்
அருமை
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الدُّنْيَا
مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ ) இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது
நல்ல மனைவியே. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்
முஸ்லிம்-2911, நசாயீ-3180, இப்னுமாஜா-1845, முஸ்னது அஹ்மத்
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( حُبِّبَ
إلَيَّ مِن دُنْيَاكُمُ النِّسَاءُ وَالطِّيبُ ) உங்கள் உலகப் பொருள்களில்
எனக்கு பெண்களும் நறுமணமும் பிடித்தமானவையாக ஆக்கப்பட்டுள்ளன. அறிவிப்பாளர்:- அனஸ்
(ரலி) அவர்கள் நூல்:- நசாயீ, முஸ்னது அஹ்மத் தஃப்சீர் இப்னு கஸீர் ஆலு இம்ரான்
வசனம்-39
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بِخَيْرِ
مَا يَكْنِزُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ ) ஒரு மனிதர் சேகரிக்கும்
செல்வங்களிலேயே மிகச்சிறந்தது, நல்ல மனைவி ஆவாள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
(ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1417
ஸவ்பான்
(ரலி) அவர்கள் கூறியதாவது. தங்கம் வெள்ளி (ஆகியவற்றைச் சேமித்து வைத்துக்கொண்டு ஸக்காத்
செலுத்தாமல் இருப்பதைப்) பற்றி (9:34ஆம்) இறைவசனம் இறங்கியபோது நபித்தோழர்கள், "பிறகு எந்த பொருளைத்தான் நாம் தேடி வைத்துக் கொள்வது?" என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "நான் இதை(ப் பற்றி தெரிந்து) உங்களுக்கு அறிவிக்கிறேன்"
(என்று கூறிவிட்டு) நபியவர்களிடம் சென்றார்கள். நான் அவர்களுக்கு பின்னாலே சென்றேன்.
உமர் (ரலி) அவர்கள், ( أَىَّ
الْمَالِ نَتَّخِذُ ) "நாயகமே! நாங்கள் எந்தப் பொருளைத் தேடி வைத்துக்
கொள்ள (முயல) வேண்டும்?" என்று வினவினார்கள்.
அதற்கு
அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( لِيَتَّخِذْ
أَحَدُكُمْ قَلْبًا شَاكِرًا وَلِسَانًا ذَاكِرًا وَزَوْجَةً مُؤْمِنَةً تُعِينُ أَحَدَكُمْ
عَلَى أَمْرِ الآخِرَةِ ) "உங்களுள் ஒருவர் நன்றி செலுத்தும் உள்ளத்தையும், (அல்லாஹ்வைப் போற்றித்) துதிக்கும் நாவையும், உங்களுக்கு மறுமை தொடர்பான விஷயங்களில் ஒத்துழைக்கும்
இறைநம்பிக்கையுள்ள (நல்ல) மனைவியையும் தேடிக்கொள்ள (முயல) வேண்டும்" என்று பதிலளித்தார்கள்.
நூல்:- இப்னுமாஜா 1846, முஸ்னது அஹ்மத்
ஜனாதிபதி
உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை
அடைந்தவுடன் உமர் (ரலி) அவர்கள் வெளியே வருவதை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்தார்.
அப்போது வீட்டுக்குள் உமர் (ரலி) அவர்களின் மனைவி உமர் (ரலி) அவர்களைத் திட்டுவதையும்
அதைக் கேட்டும் உமர் (ரலி) அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததையும் கண்டு
உமர் (ரலி) அவர்களின் நிலையே இவ்வாறென்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று
எண்ணிக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினார்.
அப்போது
உமர் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டு, அவரை அழைத்து ( مَا
حَاجَتُك يَا أَخِي ؟ ) “சகோதரரே! (எதற்காக வந்தீர்கள்) உமது தேவை
என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்,
( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ جِئتُ أَشْكُو إلَيْك خُلُقَ
زَوْجَتِي وَاسْتِطَالَتَهَا عَلَيَّ فَسَمِعْتُ زَوْجَتَكَ كَذَلِكَ فَرَجَعْت ) "ஜனாதிபதி
அவர்களே! உங்களிடம் என் மனைவியின் கெட்டகுணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால், (இங்கு வந்து உங்கள் நிலையைக் காணும்போது) உங்கள்
மனைவியும் இவ்வாறுதான் இருக்கிறார் என்று செவியுற்ற பிறகு (இதற்கு என் மனைவி
எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டு) வீட்டுக்குத் திரும்புகிறேன்" என்று
கூறினார். அப்போது உமர் (ரலி) அவர்கள் அவரிடம், ( إنَّمَا
تَحَمَّلْتُهَا لِحُقُوقٍ لَهَا عَلَيَّ : إنَّهَا طَبَّاخَةٌ لِطَعَامِي خَبَّازَةٌ
لِخُبْزِي غَسَّالَةٌ لِثِيَابِي رَضَّاعَةٌ لِوَلَدِي ، وَلَيْسَ ذَلِكَ بِوَاجِبٍ
عَلَيْهَا ، وَيَسْكُنُ قَلْبِي بِهَا عَنْ الْحَرَامِ ، فَأَنَا أَتَحَمَّلُهَا لِذَلِكَ ) “(சகோதரரே! நான் சொல்வதை நன்றாக கேளுங்கள்.) மனைவியின் மீது
எனக்குள்ள கடமைகள் என்ற அடிப்படையில் நான், அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன்.
என் மனைவி எனக்காக உணவு சமைக்கும் சமையல்காரி ஆவாள். எனது ஆடையைத் துவைக்கும்
சலவைக்காரி ஆவாள். என் குழந்தைக்கு பாலூட்டுபவள் ஆவாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை
இல்லை; எனினும் அவள் செய்கிறாள். (இத்தனைக்கும் மேலாக) அவளால் தான் என்னுடைய உள்ளம்
மற்ற பெண்களின் மீது (தவறான முறையில்) அலைபாயாமல் அமைதி பெறுகிறது. (அதாவது, எனது உடல் தேவையை அவள் மூலமாக தான் பூர்த்தி செய்துகொள்கிறேன்.)
இத்தனை விஷயங்களுக்காக நான் அவள் பேசுவதை சிலநேரம் சகித்துக் கொள்கிறேன்" என்று
கூறினார்கள்.
அதற்கு
அந்த மனிதர், ( يَا
أَمِيرَ الْمُؤْمِنِينَ وَكَذَلِكَ زَوْجَتِي ؟
) "ஜனாதிபதி
அவர்களே! என் மனைவியும் அவ்வாறு தான் (எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள்.
எனினும் அதிகம் வாயாடுகிறாள்) என்ன செய்வது? கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ( فَتَحَمَّلْهَا يَا أَخِي فَإِنَّمَا هِيَ مُدَّةٌ يَسِيرَةٌ ) "சகோதரரே! நீர் சற்று பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இதுவெல்லாம் உலகத்துடைய கொஞ்ச கால வாழ்க்கை தான்" என்று அறிவுரை கூறினார்கள்.
நூல்:- ஹாஷியா ஷரஹுல் மின்ஹாஜ் 3/441 இமாம் சுலைமான் பின் முஹம்மத், தன்பீஹுல் ஙாஃபிலீன் பக்கம்-517 இமாம் அபூலைஸ் ஸமர்கந்தீ, அஸ்ஸவாஜிர் 2/80 இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமீ
கணவனை
எதிர்த்துப் பேசுகிறாள் என்பதற்காக அவள் “தரமற்றவள்” என்று சொல்லிவிட முடியாது.
எந்தக் குறையும் இல்லாத மனைவி யாருக்கும் கிடைப்பதில்லை. இது தான் குடும்ப வாழ்க்கையின்
யதார்த்தம்.
ஒரு
பெண், தனது கணவனுக்காக தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்.
ஊர், முகவரி, வீடு முதற்கொண்டு அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன்
வருகிறாள். தான் கண்ட கனவுகள் அனைத்தையும் கொண்டவனுக்காக மறக்கிறாள்.
"மனைவியின் அருமை மறைவில்" என்றான் ஒரு கவிஞன்.
கணவனை
இழந்த மனைவியை விடவும், மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான். காரணம், கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்.
ஆனால், மனைவியை இழந்த கணவன் தனக்கு ஆடையாய்
இருந்த மனைவியை, தோளுக்குத் தோளாய் இருந்த
தோழியை, நோய்படும்போது தானும் நோகும் தாயை இழக்கிறான். ஒரு
மனைவி எத்தனை பரிணாமம் அடைகிறாள்?
வீட்டின்
வேலைக்காரியாக, சலவைக்காரியாக, சமையல்காரியாக, கணக்குப்பிள்ளையாக பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள். அவள் இருக்கும் வரை இத்தனை வேலைகள் யார் செய்தார்
என்று குடும்பத்தில் யாருக்கும் உணர்ச்சி வருவதேயில்லை.
“பொன்னின்
அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும். பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும்” என்பது
கிராமத்து சொல்வழக்கு
கணவனை
இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணமும் மனவலிமையும் கிடைத்துவிடுகிறது. ஆனால், மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும்
அனாதை ஆனதைப்போன்ற ஒருவித தவிப்பு ஏற்படுகிறது. இதுவே பலரின் அனுபவம்.
தனது சுக-துக்கம், இன்ப-துன்பம், தோல்வி-வெற்றி என அனைத்திலும் கூடவே இருந்து தன்னை சகித்து
வாழ்ந்த தனது மனைவி இறக்கும்போது ஒவ்வொரு ஆடவனும் இறந்தே தான் விடுகிறான்.
மகள்
அருமை
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ
وُلِدَتْ لَهُ ابْنَةٌ، فَلَمْ يَئِدْهَا، وَلَمْ يُهِنْهَا، وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ
عَلَيْهَا ـ يَعْنِي الذَّكَرَ ـ أَدْخَلَهُ اللهُ بِهَا الْجَنَّةَ ) ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்து, அதை அவர் உயிருடன் புதைக்காமல், இழிவாகக் கருதாமல், அதைவிட தன் (ஆண்) குழந்தைக்கு முன்னுரிமை அளிக்காமல்
நடந்து கொண்டால், அந்தக் குழந்தையின் காரணமாக அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச்செய்வான்.
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4480, முஸ்னது அஹமத்-1856
ஆயிஷா
(ரலி) அவர்கள் கூறியதாவது. என்னிடம் ஒரு பெண்மணி வந்தார் தம்முடைய இரு பெண் குழந்தைகளுடன்
வந்து ஏதேனும் தரும்படி யாசித்தாள். அப்போது என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம்பழத்தைத் தவிர
வேறு எதுவுமில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதனை அவர் இரண்டாகப் பிட்டு
குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்றுவிட்டார்.
பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இதைப் பற்றி நான் சொன்னேன்.
அதற்கு
நபியவர்கள், ( مَنْ يَلِي مِنْ هَذِهِ الْبَنَاتِ شَيْئًا
فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ ) "யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று
நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்"
என்றார்கள். நூல்:- புகாரீ-5995
அபூபக்ர் வர்ராக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நோயுற்ற பெண் பிள்ளையொன்று எனக்கிருந்தது. அவளுக்குப் பத்து வயது. நோயினால் அவள் வேதனைப்படுவதைக்
கண்டு, அவள் இறந்து விடவேண்டுமென்று
ஆசைப்பட்டேன். அவ்வாறே அவளும் இறந்து விட்டாள்.
பின்னர்
அவளைக் கனவில் கண்டேன். மறுமைநாள் வந்துவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு பிள்ளைகள் அவர்களின்
பெற்றோரை அழைத்துக்கொண்டு சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்.
நான் என்
மகளிடம், ( خُذِي بِيَدِي ادْخُلِينِي الْجَنَّةَ ) "(மகளே!) என் கையைப் பிடித்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்!"
என்கிறேன். அவள், ( لَا
انْتَ كُنْتَ تَتَمَنِّي مَوْتِي
) "மாட்டேன். ஏனெனில், நான் இறந்து விடவேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டீர்கள்!"
என்று பதில் சொன்னாள். நூல்:- தாரீக் பக்தாத் 6/212
அறிஞர்
அஹ்மத் ஹள்ரமி (ரஹ்) அவர்களுக்கு ஆறு பெண்பிள்ளைகள் இருந்தனர்கள். அன்னாரின் மனைவி
மீண்டும் கர்ப்பமுற்றார். அதன் பிறகு அன்னார், "இறைவா! எனக்கு ஒரு ஆண் பிள்ளையை தருவாயாக"
என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அன்னார் ஒரு நாள் கனவு காண்கிறார்கள்.
அந்தக் கனவில், அன்னாரை நரகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. (நரகங்கள் ஏழு)
ஒவ்வொரு நரகத்தின் வாசலிலும் அன்னாருடைய ஒவ்வொரு பெண் பிள்ளைகள் நின்று கொண்டு, "எங்கள் தந்தையை நரகத்திற்கு அழைத்துச் செல்ல விடமாட்டோம்"
என்று தடுக்கிறார்கள்.
இறுதியாக, அன்னாரை ஏழாவது நரகத்திற்கு அழைத்துச் சென்றபோது
அங்கே தடுப்பதற்கு ஆள் இல்லை. அன்னார் பயந்தவராக திடீரென விழித்து விட்டார்கள். அதன்
பிறகு, அன்னார், "இறைவா இறைவா! நான் உன்னிடம் தவறாக பிரார்த்தனை செய்து
விட்டேன். எனக்கு ஏழாவதும் பெண் பிள்ளையை தந்து விடுவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
பெண் குழந்தை
என்பது பெற்றோருக்குரிய நற்செய்தி என்கிறது தலைப்பில் காணும் திருவசனம்.
இமாம்
முஹம்மத் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( الْبَنُونَ نِعَمٌ وَالْبَنَاتُ حَسَنَاتٌ وَاللَّهُ عَزَّ وَجَلَّ يُحَاسِبُ
عَلَى النِّعَمِ وَيُجَازِي عَلَى الْحَسَنَاتِ ) ஆண் குழந்தைகள் அருட்கொடைகள். பெண் குழந்தைகள்
நற்காரியங்கள். அல்லாஹ் அருட்கொடைகளுக்காக விசாரணை செய்வான். நற்காரியங்களுக்காக நற்கூலி
வழங்குவான். நூல்:- பஹ்ஜத்துல் மஜாலில் பக்கம்-162, இமாம் இப்னு அப்துல் பர்ரு, அல்ஆதாபுல்
ஷரிய்யா இமாம் இப்னு முஃப்லிஹ் 1/154
குழந்தை
என்பது மனிதனுக்கு இறைவன் வழங்கும் மிகப்பெரும் கொடை. குழந்தைகள்மீது பாசம் காட்டி, சீரோடும் சிறப்போடும் வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து வைத்து, அவர்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்கும்போது, பெற்றோருக்கு இறைவன் சிறந்த நற்பலனை வழங்குவான்.
அதிலும்
பெண் குழந்தையாக இருந்த இருந்துவிட்டால், அவளைப் பராமரித்து வளர்த்து ஆளாக்குவதில் உள்ள சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, பாசம் குறையாமல் திருமணம் வரை பொறுப்போடு நடந்து
கொள்ளும் பெற்றோருக்கு மேலான பரிசை இறைவன் வழங்குவான். இதையே இந்த நபிமொழி தெரிவிக்கின்றது.
இரு மகள்கள், அல்லது இரு சகோதரிகள் ஒருவருக்கு இருந்து, அவர்கள் பருவம் அடைந்த பிறகும் அவர்கள்மீது பாசம்
காட்டி நேசத்தோடு நடந்து கொண்டால், அந்தப் பெற்றோருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குவான்.
ஆண் மகனிடமிருந்து
எதிர்காலத்தில் கிடைக்கும் உதவிகளை மனதில் கொண்டுகூடப் பெற்றோர் அவர்கள் மீது அதிக
நெருக்கத்தைக் காட்டலாம். ஆனால், பெண்களான மகள்களிடமிருந்தோ சகோதரிகளிடமிருந்தோ இருந்து இத்தகைய
அரவணைப்புகளைப் பெற்றோர் எதிர்பார்ப்பது அரிது. அப்படியிருந்தும், பிரதிபலன் எதிர்பார்க்காமல் அவர்கள் மீது உண்மையான
அன்பும் அக்கறையும் காட்டுவது நிச்சயமாக தியாகமன்றி வேறில்லை. இதனால்தான் பெற்றோருக்கு
சொர்க்கம் கிடைக்கும் என்கிறது இந்த நபிமொழி.
ஒரு ஆண்மகன், உன்னை பெற்றவள், உன்னோடு
பிறந்தவள், உனக்காக பிறந்தவள், உன்னால் பிறந்தவள் என இந்த நான்கு பெண்களை கண்ணியப்படுத்துவது
அவசியம்.
எனவே, நாம் இஸ்லாம் கூறும் விதத்தில் பெண்களை மதித்து, அல்லாஹுத்தஆலா அன்பைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment