Search This Blog

Wednesday, 15 February 2023

சின்னஞ்சிறு செயல்கள்

 

 

 

சின்னஞ்சிறு செயல்கள்

 

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

 

ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார். திருக்குர்ஆன்:- 99:7

 

அல்லாஹ்வின் அன்பும் அருளும் தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ், உம்ரா, திருக்குர்ஆன் ஓதுதல் போன்ற பெரிய பெரிய நற்செயல்களால் மட்டும்தான் கிடைக்கும் என்பதல்ல. மாறாக சின்னஞ்சிறு நற்செயல்களாலும் அது கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று இஸ்லாம் இயம்புகிறது.

 

நம்முடைய சிறிய, பெரிய எந்த செயல் அல்லாஹ்வின் மனதை ஈர்க்கும் என்பதை நாம் அறிய இயலாது. என்னுடைய இந்த செயலால் அல்லாஹ்வின் மனதை ஈர்த்துவிடுவேன் என்று யாராலும் சொல்ல இயலாது.

 

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( لاَ تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ ) "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5122

 

கல், முள்களை அகற்றினார்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ ) ஒரு மனிதர் ஒரு சாலை வழியே நடந்து செல்லும்போது பாதையில் முள் கிளையொன்றைக் கண்டார். உடனே அதை (எடுத்து) தள்ளிப்போட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, அவருக்குப் பாவமன்னிப்பு அருளினான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2472, முஸ்லிம்-5105

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَقَدْ رَأَيْتُ رَجُلاً يَتَقَلَّبُ فِي الْجَنَّةِ فِي شَجَرَةٍ قَطَعَهَا مِنْ ظَهْرِ الطَّرِيقِ كَانَتْ تُؤْذِي النَّاسَ ) ஒரு மனிதர் நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்துவந்த மரமொன்றை வெட்டி (அப்புறப்படுத்தி)யதற்காகச் சொர்க்கத்தில் நடமாடுவதை கண்டேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5107

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை நான் சொர்க்கத்தில் ஒருவர் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதை கண்டு விட்டு, இவருக்கு சொர்க்கத்தில் எவ்வளவு பெரிய இடம் கிடைத்ததற்கு இவர் என்ன நற்செயல் செய்தார்? என்று வினவினேன். அதற்கு, "இவர் உலகத்தில் நடைபாதையில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்த கல், முள்களை அகற்றினார். இந்த நற்செயலுக்கு நற்கூலியாகவே இவருக்கு சொர்க்கத்தில் எவ்வளவு பெரிய இடம் கிடைக்கப் பெற்றிருக்கிறது" என்று பதிலளிக்கப்பட்டது. நூல்:- முஸ்னது அஹ்மத்

 

ஒருவர், மக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பொருட்களை அகற்றும் பொதுப்பணியின் மூலம் இறைவனையே கவர்ந்து, அவனது மன்னிப்பையும் பெற்றுவிட்டார். இது பொதுச்சேவையின் மகத்துவத்தை அடையாளப்படுத்துகிறது.

 

இயற்கைச் சீற்றம், வாகன விபத்து, இவைகளால் உயிருக்குப் போராடுபவர்களுக்கு முதலுதவியாக அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும்.

 

சமூகச் சேவை என்பது களப்பணியில் ஈடுபடுவது மட்டுமல்ல, அப்பணிக்கு நம்மால் முடிந்த பெருளாதார உதவிகள் செய்வதும், அதில் ஈடுபடுபவர்களை ஊக்கப்படுத்துவதும், உற்சாகப்படுத்துவதும், நம் இறைநம்பிக்கையின் உணர்வை வெளிப்படுத்துவதோடு அல்லாமல், நமக்கு நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத்தரும்.

 

பாதசாரிகளுக்கு இடையூறு தரும் பொருட்கள் சாலையில் கிடந்தால் அவற்றை அகற்றிவிட்டுச் செல்வது, பாராட்டுக்குரிய நன்மை தரும் செயலாகும்; இதுவே இறைநம்பிக்கையில் ஒரு பகுதியாகும். மரம், மரக்கிளை, முள், கல், கண்ணாடி, அசுத்தம் ஆகிய எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை அகற்றுவது ஒரு நல்லறமாகும்.

 

துர்நாற்றம் வீசக்கூடிய, அருவருப்பாகக் காட்சி தரக்கூடிய, வழுக்கிவிடக்கூடிய, காயப்படுத்தக்கூடிய, போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கக்கூடிய, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக்கூடிய அனைத்தும் பிறருக்கு தொல்லைகள் ஏற்படுத்தக்கூடிய தவறான செயல்களே.  இதுபோன்ற செயல்களைவிட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் பிறரின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதில் மிகுந்த கவனம் தேவை.

 

அன்பும், கருணையும்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஓர் ஏழைப் பெண் தன்னுடைய இரு பெண் குழந்தைகளை தூக்கிக்கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். உடனே அவர் தம் குழந்தைகளில் ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு ஒரு பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதற்காக வாயருகில் கொண்டு சென்றார். அந்த ஒரு பேரீச்சம் பழத்தையும் அக்குழந்தைகள் கேட்டனர். உடனே அப்பெண் தான் சாப்பிட நாடியிருந்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரண்டாகப் பிட்டு அவ்விரு குழந்தைகளுக்கிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவருடைய நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது.

 

ஆகவே, அவர் செய்ததை நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபியவர்கள், إِنَّ اللَّهَ قَدْ أَوْجَبَ لَهَا بِهَا الْجَنَّةَ أَوْ أَعْتَقَهَا بِهَا مِنَ النَّارِ ) ‏ ) "அவருடைய இச்செயலின் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான். அல்லது அவரது இச்செயலின் காரணத்தால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5126, இப்னுமாஜா-3658

 

குழந்தைகளின் மீது காட்டும் அன்பும், கருணையும் சொர்க்கம் செல்வதற்கான காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது என்பது இதன் மூலம் புலப்படுகிறது. தாயன்பும், தியாகமும் எத்தகையது என்பதையும் இந்த நபிமொழி எடுத்தியம்புகிறது. இலேசான செயல்கள் அதனைச் செய்வோரை இறையருளால் சொர்க்கம் புகச் செய்கிறது என்பதற்கு இதுபோன்ற பல நிகழ்வுகள் நபிமொழிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

 

அந்தப் பெண்மணி தமது குழந்தைகளின் மீது வைத்திருந்த பாசத்தால் அவள் சாப்பிட எண்ணிய பழத்தை பிள்ளைகளுக்குக் கொடுத்து தியாகம் செய்தார். இது சின்ன நற்செயலாக இருந்தாலும்கூட இது அல்லாஹ்வின் பார்வையில் மிகப்பெரிய மதிப்பு பெற்ற அறச்செயலாக திகழ்கிறது. அதனால்தான் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை தந்திருக்கிறான்.

 

குறைந்த அளவு

 

உம்மு புஜைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (அண்ணல் நபி - ஸல் அவர்களிடம் வந்து), ( يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ إِنَّ الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ ‏ ) "நாயகமே! உங்கள் மீது அல்லாஹ்வின் அருள் பொழியட்டும்! ஏழை ஒருவர் (யாசகம் கேட்டு) என் வாசலில் வந்து நிற்கிறார். அவருக்கு கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. (இந்நிலையில் நான் என்ன செய்வது?) என்று கேட்டேன்.

 

அதற்கு நபியவர்கள், ( إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلاَّ ظِلْفًا مُحْرَقًا فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ ) "அவருக்குக் கொடுப்பதற்கு கால்நடையின் தீய்க்கப்பட்ட கால் குளம்பு தவிர வேறொன்றும் இல்லாவிட்டாலும் அதையேனும் அவர் கையில் கொடு!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1419, திர்மிதீ-601, நசாயீ-2518,  முஸ்னது அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம்

 

தீய்க்கப்பட்ட சுடப்பட்ட ஆட்டின் கால் குளம்பு என்பது மட்டமான பொருள் ஆகும். இதன் நோக்கம் என்னவெனில், யாரையும் வெறுங்கையுடன் எதுவும் வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது என்பதாகும்.

 

யாசிப்பவருக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுக்கலாம். அது  அற்பமானதாக இருக்கிறதே இதை எப்படி யாசகருக்கு வழங்குவது என்று எண்ண வேண்டாம். அல்லாஹ்வுக்காக அற்பமானதைக் கொடுத்தாலும் அறச்செயலே ஆகும்.

 

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள்  (தலைப்பில் காணும்) இந்த (99:7) வசனம் அருளப்பட்ட பின்னணியைப் பற்றி விவரிக்கிறார்கள்.

 

தாங்களே உணவை விரும்பக்கூடிய நிலையிலும்கூட அந்த உணவை வறியவருக்கு, அநாதைக்கும், கைதிக்கும் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.  (திருக்குர்ஆன்:- 76:8) எனும் வசனம் அருளப்பட்டபோது முஸ்லிம்கள் இவ்வாறு கருதினார்கள்.

 

அதாவது குறைந்த அளவிலான பொருளை தர்மம் செய்தால் அதன் பேரில் தங்களுக்குக் கூலி வழங்கப்பட மாட்டாது என்று கருதினார்கள். அவர்களின் வாசல் தேடி ஓர் ஏழை வருவார். அவருக்கு ஒரு பேரீச்சம் பழத்தை அல்லது ரொட்டித்துண்டை அல்லது ஒரு பாதாம்பருப்பைத் தர்மமாக வழங்குவதை குறைந்த அளவிலான தர்மமாக அவர்கள் கருதினார்கள். அதனால் (எதுவும் வழங்காமல்) அந்த ஏழையை திருப்பி அனுப்புவார்கள். (அந்த ஏழையை நோக்கி) இது பெருமதிப்புள்ள பொருள் அல்லவே. நாங்கள் (எதைப் பயன்படுத்த விரும்புகிறோமோ அத்தகைய) பெருமதிப்புள்ளதைத் தர்மம் செய்தால் தான் எங்களுக்கு நற்கூலி கிடைக்கும் என்று கூறுவார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்

 

அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, நாங்கள் (சுமை தூக்கி) கூலி வேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) அரை ஸாஉ பேரிச்சம் பழம் (கொண்டு வந்து) தர்மம் செய்தார். மற்றொரு மனிதர் அதைவிடச் சிறிது அதிகமாகக் கொண்டு வந்து தர்மம் செய்தார். இதைக்கண்ட நயவஞ்சகர்கள் அறை ஸாஉ கொண்டு வந்த இவரது தர்மமெல்லாம் அல்லாஹ்விற்குத் தேவையில்லை; (அதைவிட அதிகமாகக் கொண்டு வந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே தர்மம் செய்கிறார்" என்று குறை கூறினர்.

 

அப்போதுதான் அல்லாஹுத்தஆலா, "(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்கள் என்றால் இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின்றனர். (இறைவழியில் ஈவதற்காகச்) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைகின்றனர். அல்லாஹ் அவர்களை நகைக்கிறான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு" எனும் (9:79ஆவது) இறைவசனத்தை அருளினான். நூல்:- புகாரீ-1415, முஸ்லிம்-1851

 

இலட்சக் கணக்கில் அர்ப்பணித்தால் தான் (அதாவது, பெரிய அளவில் செய்தால் தான்) அறச்செயல். மாறாக, ஓரிரு ரூபாய்களை அர்ப்பணித்தால் (அதாவது, சிறிய அளவில் செய்தால்) அது அறச்செயல் அல்ல. அதற்கெல்லாம் அல்லாஹ் நற்கூலி வழங்கமாட்டான் என்று எண்ணுவது அறியாமையே. செய்தால் பெரிய அளவில் செய்யவேண்டும். இல்லையெனில் செய்யவே கூடாது என்று எண்ணுவதும் அறியாமையே.

 

அறச்செயலில் அற்பமானது என்று எதுவும் இல்லை‌ என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

 

பள்ளிவாசல் மற்றும் மதரசாக்கள் நிறுவுதல் அதை பராமரித்தல், போன்ற அறச்செயல்களுக்கு பொருளாதார வளம்மிக்கவர்கள் அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் நன்கொடை வழங்கலாம். ஆனால், ஒரு பரம ஏழை அவனால் முடிந்த அளவு ஓரிரு ரூபாய்களை நன்கொடையாகக் கொடுத்தாலும்கூட அதுவும் அல்லாஹ்வின் பார்வையில் மதிக்கப்படக்கூடியவையே. எனவே அதன் நன்மையை அவன் அனுபவிப்பான். அதில் சந்தேகமில்லை.

 

எதுவுமே கொடுக்காமல் இருப்பதைவிட ஓரிரு ரூபாய்களையாவது  நன்கொடையாக கொடுப்பது சிறந்ததல்லவா? இவ்வாறு சிந்திக்கவே இஸ்லாம் கற்றுத்தருகிறது.

 

(நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் (நிறுக்க) அதனையும் கொண்டு வருவோம். திருககுர்ஆன்:- 21:47

 

(லுக்மான்-அலை அவர்கள் தனது மகனை நோக்கி) "என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். திருக்குர்ஆன்:- 31:16

 

அன்றி, இவர்கள் சிறிதோ பெரிதோ (அல்லாஹ்வுடைய பாதையில்) எதைச் செலவு செய்தபோதிலும் (அவ்வாறே அல்லாஹ்வுடைய பாதையில்) எந்த பூமியைக் கடந்தபோதிலும் அவர்களுக்காக அது பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் செய்த இவைகளைவிட மிக அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கின்றான். திருக்குர்ஆன்:- 9:121

 

சுன்னத்தான காரியங்கள்

 

ஒருமுறை இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் ஒரு படகிலிருந்து கரை இறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்து மற்றொரு படகு புறப்பட்டுக்கொண்டிருந்தது. புறப்பட்டுக்கொண்டிருந்த படகில் எவரோ தும்மி அல்லாஹ்வை புகழ்ந்தார். இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் அதனைச் செவியுற்றார்கள்.

 

உடனே இமாம் அவர்கள் ஒரு தங்கக்காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு அந்தப் படகில் ஏறினார்கள். படகு புறப்பட்டுச் சென்றது. இமாம் அவர்கள் அந்தப் படகில் அமர்ந்திருப்போரிடம், "இப்போது உங்களில் தும்மியவர் யார்?" என வினவ, ஒருவர் "நான்தான்" என்று கூறினார். இமாம் அவர்கள் ( يَرْحَمُكُمُ اللَّهُ ) "யர்ஹமுக்குமுல்லாஹ்" (உமக்கு அல்லாஹ் அருள்புரிவானாக) என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, மற்றொரு படகும் மூலம் தன் இல்லம் வந்து சேர்ந்தார்கள்.

 

இமாம் அவர்கள் அன்றிரவு ஒரு கனவு கண்டார்கள். அதில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்சியளித்து, "அபூதாவூத் அவர்களே! ஒரு தங்கக்காசு செலவழித்து சொர்க்கத்தைப் பெற்றுக் கொண்டீரே!" என்று கூறினார்கள். நூல்:- ஃபளாயிலுஸ் ஸுன்னத்துந்  நபி (ஸல்) 

 

ஒரு சுன்னத்தான காரியத்தை செயலாற்றியதற்கு கூலியாக சொர்க்கம் வழங்கப்பட்டிருக்கிறது.

 

சுன்னத் தானே! என்று அற்பமாக எண்ணுவது மிகவும் மோசமான நிலைப்பாடு. சுன்னத்தான காரியங்களில் சிறியது, பெரியது என்று பாகுபாடு பார்ப்பதும் சரியல்ல. சுன்னத்தான காரியங்களில் மனவிருப்பதுடன் ஈடுபடுவது தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிப்பதாகும். நபிநேசம் நம்மை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும். எனவே, நாம் சுன்னத்தான காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

 

இரவலாக கொடுத்த பொருள் 

 

ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "ஒரு மனிதர் ஒரு ஆடை தைக்கும் ஊசியின் மூலம் சொர்க்கம் சென்றார்" என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், "நாயகமே! அது என்ன ஆடை தைக்கும் ஊசிக்காக சொர்க்கம் சென்றார்?" என்று வினவினர். நபியவர்கள், முற்காலத்தில் ஒருவர் தன்னை சுற்றி வசித்தவர்களிடம், 'உங்களில் எவருக்கு எப்போது ஆடை தைக்கும் ஊசி தேவைப்பட்டாலும் என்னிடமிருந்து அதை இரவலாகப் பெற்று அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று அறிவிப்புச் செய்து, அதை இரவலாக கொடுத்து உதவி வந்தார். தன்னைச் சுற்றி வசிப்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஆடை தைக்கும் ஊசியை இரவலாக கொடுத்து உதவிய காரணத்தினால் அவர் சொர்க்கம் சென்றார்" என்று கூறினார்கள்.

 

இறைநேசராக மாறிப்போனார்

 

பேரறிஞர் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் அவர்களின் ஆன்மீக ஆசான்களில் ஒருவர் தான் ஆன்மீக ஞானி ( أَبُو نصر بشر بْن الْحَارِث الحافي ) பிஷ்ருல் ஹாஃபீ (ரஹ்) அவர்கள். (ஹிஜ்ரி 152-227) இவர், ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய மதுப்பிரியராக இருந்தார். அப்போது ஒருநாள் மது குடித்துவிட்டு போதையில் குளியலறைக்கு அருகில் படுத்து கிடந்தார். அப்போது அவருக்கு அருகில் (அதாவது குளியலறைக்கு அருகில்) ஒரு துண்டில் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று எழுதப்பட்டு கிடந்தது. அதை பார்த்த அவர், ஆகா, இது திருக்குர்ஆனின் வசனம் ஆயிற்றே என்றெண்ணி, அதை எடுத்து சுத்தம் செய்து, ஒரு வெள்ளிக்காசுக்கு கொஞ்சம் நறுமணம் வாங்கி, அதன் மீது தடவிவிட்டு, அந்த ஒற்றை வரியை உச்சரித்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டு கண்ணியப்படுத்தும் விதமாக அதை தமது வீட்டின் பரணி மேல் பத்திரமாக வைத்தார்.

 

அன்றைய இரவில் அவர் கண்ட கனவு ஒன்றில் ( يَا بِشرُ! طَيَّبْتَ أَسْمَى، لَأَطْيبَنَّ اسْمِكَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ) "பிஷ்ர்! நம்முடைய பெயரை இன்று மணங்கமழ செய்தபடியே நாமும் இனி உம் பெயரை (உலகம் முழுக்க மணங்கமழச் செய்வோம். நம்முடைய பெயரை இன்று நீர் உயரந்த இடத்தில் வைத்ததைப் போன்றே நாமும் இனி, உம் பெயரை) இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்தோங்கச் செய்வோம்" என ஓர் சத்தம் அசரீரியாக ஒலித்தது. நூல்:- ரிசாலத்துல் குஷைரிய்யா பக்கம்-48, வஃபயாத்துல் அஃயான் இமாம் இப்னு கல்கான் 1/275  ( لِابْنِ خَلكَانَ )

 

அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( فَأَحْيَا اللَّهُ قَلْبَهُ وَأَلْهَمَهُ رُشْدَهُ ) இந்த நிகழ்வுக்கு பின்னர் தான் அல்லாஹ், பிஷ்ருல் ஹாஃபீ (ரஹ்) அவர்களின் உள்ளத்திற்கு உயிரூட்டி, நேர்வழிக்குரிய எண்ணத்தை உதிக்கச்செய்தான். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

மதுப்பிரியராக இருந்த பிஷ்ருல் ஹாஃபீ (ரஹ்) அவர்களின் தடம் புரண்ட வாழ்க்கையைத் தடைப்படுத்தி, திசை திருப்பி, ஆன்மீகப் பாதையில் அவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது அவரின் இந்த சின்னஞ்சிறு நற்செயல்தான்.

 

இறைவனின் திருப்பெயரைச் சங்கைப்படுத்தியதற்குப் பகரமாக அவர்கள் இறைவனிடம் பெற்ற சன்மானமே (விலாயத் எனும்) இறைநெருக்கம். இவரின் இந்த சின்ன நற்செயலால் இவர் பிற்காலத்தில் இறைநேசராக மாறிப்போனார் என்கிறது இவரது வரலாறு.

 

பாங்குக்கு மரியாதை

 

அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் பக்கத்து வீட்டில் ஒரு கொல்லர் வசித்து வந்தார். அவர் இறந்த பிறகு அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களுடன் அவர் சொர்க்கத்தில் இருப்பதாக பலரும் கனவு கண்டனர். இது குறித்து அவரின் மனைவியிடம் எடுத்துரைத்துவிட்டு, அவர் புரிந்து வந்த இறைவழிபாடு குறித்து வினவினர். அவரின் மனைவி, "என்னுடைய கணவரிடம் பெரிய வணக்க வழிபாடுகள் எதுவும் இல்லை. இருந்தாலும், அவர் பாங்குக்கு மிகவும் மரியாதை செய்வார். தமது கொல்லப்பட்டறையில் வேலைப் பார்த்து கொண்டிருக்கும்போது பாங்கு சப்தம் கேட்டுவிட்டால் ஓங்கிய சம்மட்டியைகூட அடிக்காமல் அப்படியே அமைதியாக இருந்து, பாங்குக்கு பதில் சொல்வார்" என்று கூறினாள்.

 

ஜீவ காருண்யம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ، فَغُفِرَ لَهَا بِهِ ) ‏  (முற்காலத்தில்) நாய் ஒன்று (தாகத்தால்) ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ரவேலர் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்துவந்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ- 3467

 

இறைநேசச் செல்வர் அபூபக்ர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் இறந்த பிறகு அன்னாரை அவர்களின் தோழர்களில் ஒருவர் கனவில் கண்டு “உங்களை இறைவன் என்ன செய்தான்? என்று வினவினர்.

 

அதற்கு அன்னார், இறைவன் “அபூபக்ரே! நான் உங்களை மன்னித்துவிட்டேன். நான் எதற்காக உன்னை மன்னித்தேன் என்பதை நீ அறிவாயா?” என்று வினவினான்.

 

அதற்கு  நான், “தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ், உம்ரா, மார்க்கக் கல்வி கற்று அதை பிறருக்கு போதித்தல் போன்ற நான் செய்த வணக்க வழிபாடுகளால் என்னை மன்னித்தாயா? என்று வினவினேன்.

 

இறைவன், “இல்லை” என்று கூறிவிட்டு, “அபூபக்ரே! நீர் பக்தாத் நகரில் ஒரு பாதையில் நடந்து சென்றுகொண்ருந்தபோது ஒரு சிறிய பூனையை கண்டீர். அது கடும்குளிரால் கஷ்டப்பட்டுக்கொண்டு, ஒரு சுவரிலிருந்து இன்னொரு சுவருக்கு தாவிக்கொண்டிருந்தது. அப்போது நீர் அதன்மீது இரக்கம் கொண்டு அதை எடுத்து உம்மிடமிருந்த ஒரு மிருகத்தின் தோலினுள் வைத்து, அதை குளிரிலிருந்து பாதுகாத்தீர். அந்த நற்செயலால் நான் உம்மை மன்னித்தேன்” என்று இறைவன் கூறினான்.

 

இந்த சம்பவம் நமக்கு மிகப்பெரும் பாடத்தை கற்றுத்தருகிறது ஏனெனில் ஷிப்லி (ரஹ்) அவர்கள் சாதாரண ஒரு மனிதரல்லர். அவர்கள் அதிக பேணுதல் உடையவராகவும், வணக்க வழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவராகவும், மிகப்பெரும் இறைநேசராகவும் திகழ்ந்தவர்கள். அப்படியிருந்தும், இறைவன் ஒரு சிறிய பூனையின் மீது அவர்கள் காட்டிய கருணையை கொண்டு ஏற்றுக்கொண்டான். எனவே, பிற உயிரினங்கள்மீது கருணை காட்டுவது இறைவனிடத்தில் மிகப்பெரும் அந்தஸ்த்தை பெற்றுத்தரக்கூடியது என்பதில் நமக்கு கவனம் தேவை.

 

ஒரு அடியான் என்ன நற்செயல்கள் செய்தாலும் ஒரு சிறிய பாவம் அவனை நரகத்திற்கு கொண்டு போய் சேர்த்துவிடும். அதே போல் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் ஒரு சிறிய நற்செயல் சுவர்க்கத்திற்கு கொண்டுபோய் சேர்த்து விடும்.

 

“சிறிதெனக் கருதினாலும் நன்மை செய்! எந்தச் செயல் உன்னை சொர்க்கத்தில் சேர்க்குமென்பதை நீ அறிய மாட்டாய்” என்றார் ஒரு அறிஞர்.

 

"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது கிராமச் சொல்வழக்கு.

 

நற்காரியங்கள் மிகச் சிறியதாக இருந்தாலும்கூட அதை அற்பமாக எண்ணி அதை தவிர்த்து விடக்கூடாது.

 

அல்லாஹுத்தஆலா நம்முடைய சிறிய, பெரிய என அனைத்து நற்காரியங்களையும் ஏற்றுக்கொண்டு, அதற்குரிய நற்கூலியை பரிபூரணமாக இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 


1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்....! இந்த வாரம் பயான் ஹஜ்ரத்

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...