Search This Blog

Friday, 20 January 2023

தீர்வைத் தேடி

தீர்வைத் தேடி

 رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

 

எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். திருக்குர்ஆன்:- 18:10

 

கல்வி, பணியில் சேர்தல், திருமணம், பயணம், வியாபாரம் போன்ற ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நினைக்கும்போதுசெய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பமான மனநிலையில் ஒரு தெளிவான முடிவு எடுக்காத முடியாதபோது, ஒரு மனிதன் தீர்வைத் தேடி (பக்தி பகல் வேஷம் போடக்கூடியவர்களிடம்) குறி கேட்கவோ, சோதிடம் பார்க்கவோ செல்கிறான்.

 

இதனால் அவனுக்கு மனக்குழப்பம் அதிகமாகுமேயன்றி, தெளிவான ஓர் முடிவு கிடைப்பதில்லை. எனவே தான், இது போன்ற நிலையில் மனிதன் சிக்கிக்கொள்ளும்போது, இதற்கான அழகிய தீர்வாக, இஸ்லாம் "இஸ்திகாரா" (நல்லதை தேர்ந்தெடுப்பதற்கான) தொழுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்திகாரா தொழுகை (முஸ்தஹப்) விரும்பத்தக்கதாகும்.

 

அறியாமைக் கால பழக்கங்கள்

 

இறைநம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். திருக்குர்ஆன்:- 5:90

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ ) (இஸ்லாத்தில்) தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது. அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4470

 

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான், (அருமை நாயகம்-ஸல் அவர்களிடம்) "நாயகமே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்து வந்தோம்; சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்) கொண்டிருந்தோம்" என்று கூறினேன். அதற்கு அண்ணலார், ( فَلاَ تَأْتُوا الْكُهَّانَ ) "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்" என்றார்கள்.

 

மேலும், "நாங்கள் பறவையை வைத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தோம்" என்று நான் கூறினேன். அதற்கு அண்ணலார், ( ذَاكَ شيء يَجِدُهُ أَحَدُكُمْ فِي نَفْسِهِ فَلاَ يَصُدَّنَّكُمْ ) "இது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விஷயமாகும். இது உங்களை (செயலாற்றுவதிருந்து) தடுத்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4484

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (தலைப்பில் காணும் திருவசனத்தில் இடம் பெற்றுள்ள) "அல்அஸ்லாம்" என்பது (அறியாமைக் கால மக்கள்) தம் விவகாரங்களில் (ஒன்றை செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காக பயன்படுத்தி வந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும். நூல்:- புகாரீ

 

அந்த அம்புகளில் 'செய்' என்று எழுதப்பட்ட ஓர் அம்பு,  'செய்ய வேண்டாம்' என்று எழுதப்பட்ட இன்னொரு அம்பும், 'பொறுஎன்று எழுதப்பட்ட மூன்றாம் அம்பும் இருக்கும். அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுப்பார்கள். அதில் எழுதப்பட்டப்படி செய்வார்கள். இதைப் போன்றே கஅபாவின் நடுவில் "ஹுபல்" எனும் பெரிய சிலை ஒன்று இருந்தது. அதன் அருகில் மேற்கண்டபடி எழுதப்பட்ட அம்புகள் வைக்கப்பட்டிருக்கும். குறி பார்க்க வருபவர் அவற்றில் ஒன்றை எடுத்துப் பார்ப்பார். அதில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதன்படி செயல்படுவார். இவ்வாறே அறியாமைக் கால மக்கள் குறிபார்த்து வந்தனர். நூல்:- ஃபத்ஹுல் பாரீ

 

அறியாமைக் காலத்தில் ஒருவர் ஒரு வேலைக்காக வெளியே புறப்படும் போது அவரது வலப்பக்கமாக பறவை பறந்தால் அதை நல்ல சகுனமாக கருதி வேலையை தொடங்குவார். இடப்பக்கமாக பறவை பறந்தால் அதைக் கெட்ட சகுனமாக எண்ணி திரும்பிவிடுவார். இதற்காக ஒரு பறவையை பறக்கவிட்டு பார்த்ததுண்டு. இதற்கும் மனித வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுடன், அவர் அவரது முயற்சிக்கு அல்லாஹ்வே நன்மை தீமைகளை தீர்மானிக்கிறான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள்.

 

மனிதனின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அவனுடைய செயல்பாடு அமைகிறது. அது தீமையாகவும் இருக்கலாம். இதனால் மனிதனுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அப்போது அவன் தன்னைப் படைத்த இறைவனிடம் அதை முறையிட்டு, தனக்கு நன்மையானதை மட்டுமே தேடித்தருமாறு பிரார்த்திக்கும் தொழுகைதான் "இஸ்திகாரா" எனும் தொழுகையாகும்.

 

கற்றுக்கொடுத்தார்கள்

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆனின் அத்தியாயத்தை கற்றுத் தருவதைப்போன்று எல்லா காரியங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையையும் (இஸ்திகாராவை)  கற்றுக்கொடுப்பவர்களாய் இருந்தார்கள்.

 

(அந்த முறையாவது:) நீங்கள் ஒன்றை செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம்,

 

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي- أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ- فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي- أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ- فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِه

 

(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் நான் கூறுகிறேன். உனது ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன்.

 

இறைவா! இந்தக் காரியம் எனக்கு 'என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்' அல்லது 'என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்' நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால், அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு 'என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்' அல்லது 'என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்' தீமையானதென நீ அறிந்திருந்தால், இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பி விடுவாயாக! என்னையும் இக்காரியத்தை விட்டுத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக!)

 

என்று பிரார்த்தித்துவிட்டு, ( وَيُسَمِّي حَاجَتَهُ ) தனது தேவை இன்னதெனக் குறிப்பிடட்டும் என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6382, திர்மிதீ-442, நசாயீ-3201

 

தனக்குரியவரைத் தேர்ந்தெடுத்தல்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஸைத் பின் ஹாரிஸா - ரலி அவர்கள் மணவிலக்கு செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்பு காலம் (இத்தா) முடிந்ததும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், ( فَاذْكُرْهَا عَلَيَّ ) "நீ (ஸைனபிடம் சென்று) என்னை (மணந்து கொள்வது) பற்றி அவரிடம் பேசு" என்றார்கள்.

 

ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எனவே, "நான் சென்று, ஸைனபே! உமக்கு ஒரு நற்செய்தி; அண்ணலார் உன்னை (மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பி வைத்துள்ளார்கள்" என்று கூறினேன். அதற்கு அவர், ( مَا أَنَا بِصَانِعَةٍ شَيْئًا حَتَّى أُوَامِرَ رَبِّي ) "நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டி இஸ்திகாரா தொழுது பிரார்த்தனை செய்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை" என்று கூறிவிட்டு தமது தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்று விட்டார்.

 

அப்போதுதான், "(நபியே! உன்னுடைய வளர்ப்பு மகனான) ஸைத் (மணவாழ்க்கை என்ற) தேவையை அந்தப் பெண்ணிடம் முடித்துக் கொண்டபோது, அப்பெண்ணை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம்" என்ற திருவசனம் (33:37) அருளப்பெற்றது.  நூல்:- முஸ்லிம்-2798, நஸாயீ-3199

 

கருத்து வேறுபாடு ஏற்பட்டால்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இறந்தபோது, மதீனாவில் (சவக்குழிக்குள்) பக்கவாட்டுக் குழி தோண்டுபவர் ஒருவரும் நடுக்குழி தோண்டுபவர் ஒருவரும் இருந்தனர். (இரண்டு முறையில் எப்படிக் குழி தோண்டுவது என்பதில் நபித்தோழர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.)

 

அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் இரண்டுபேரை அழைத்து அவர்களில் ஒருவரிடம் மக்காவாசிகள் போன்று பக்கவாட்டுக் குழி தோண்டுபவரான அபூ உபைதா அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களிடம் சென்று (அவரை அழைத்து) வருவீராக! என்றும் மற்றொருவரிடம் நீர் மதீனாவாசிகள் போன்று நடுக்குழி தோண்டுபவரான அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் சென்று (அவரை அழைத்து) வருவீராக! என்றும் கூறினார்கள்.

 

பின்னர் அப்பாஸ் (ரலி) அவர்கள் அவ்விருவரையும் காரியத்திற்கு அனுப்பி வைக்கும்போது, அவர்களுக்கருகில், ( اللَّهُمَّ خِرْ لِرَسُولِكَ ) "இறைவா! உன் தூதருக்கு (அவர் நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய அடக்கத்தலத்தை) நீயே தேர்வு செய்வாயாக" என பிரார்த்தித்தார்கள்.

 

அவ்விருவரும் (அவ்வாறே அழைத்துவர) சென்றனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் (குழி வெட்ட) அழைத்து வரப்பட்டார்கள். அப்போது அபூ உபைதா (ரலி) அவர்கள் (வீட்டில்) காணக்கிடைக்கவில்லை. எனவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபியவர்களு(டைய நல்லடக்கத்து)க்காக நடுக்குழி தோண்டினார்கள். நூல்:- இப்னுமாஜா-1546, 1617, முஸ்னது அஹ்மத்-2239


அடுத்த கலீஃபா


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தமக்குப் பிறகு வரவேண்டிய( கலீஃபா எனும்) ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க ஆறு பேர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்தார்கள். 


உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி), தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி), ஜுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோர் தான் அக்குழுவினர்.


அடுத்த ஆட்சித்தலைவரை தேர்வு செய்யும் குழுவினர்களில் ஒருவராகிய தல்ஹா (ரலி) அவர்கள் கலீஃபாவை தேர்ந்தெடுக்கும் தமது உரிமையை உஸ்மான் (ரலி) அவர்களிடமும், ஜுபைர் (ரலி) அவர்கள் கலீஃபாவை தேர்ந்தெடுக்கும் தமது உரிமையை அலீ (ரலி) அவர்களிடமும், சஅத் (ரலி) அவர்கள் கலீஃபாவை தேர்ந்தெடுக்கும் தமது உரிமையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடமும் கொடுத்தனர். ஆக, ஆறு பேர் கொண்ட குழு சுருங்கி உஸ்மான் (ரலி), அலீ (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோர் கொண்ட மூவர் குழுவாக மாறிவிட்டது. அந்த மூவர் குழுவில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மற்ற இருவரிடமும், "உங்களில் ஒருவர் மற்றொருவருக்கு தேர்வு செய்யும் உரிமையை விட்டுக் கொடுங்கள்" என்று கூறினார். அப்போது அவ்விருவரும் மௌனமாக இருந்தார்கள். 


இதை அறிந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மீண்டும் அவ்விருவரிடமும், "நான் கலீஃபாவிற்கான போட்டியிடும் உரிமையை விட்டு விலகிவிடுகிறேன். ஆனால், உங்கள் இருவரில் சிறந்தவரை நான் ஆய்வு செய்து கலீஃபாவாக நியமிப்பேன். இதற்கு சம்மதமா?" என்று வினவினார். அதற்கு அவ்விருவரும் சம்மதித்தார்கள்.


மேலும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "நான் யாரை நியமித்தாலும் எனது முடிவுக்கு நீதமான முறையில் செவியேற்று கட்டுப்பட வேண்டும் என்று கூற, அதை அவ்விருவரும் ஒப்புக்கொண்டார்கள்.


பிறகு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டார். மூன்று நாள்களாக தொடர்ந்து இறைவனிடம் பாவமன்னிப்பு தேடியதுடன் "இஸ்திகாரா" எனும் நாட்டம் நிறைவேற பிரார்த்தித்தார். பிறகு மக்கா - மதீனாவாசிகளில் முக்கிய பிரமுகர்களை பள்ளிவாசல் வருமாறு அழைப்பு விடுத்தார்கள். உடனே பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அப்போதுதான் உஸ்மான் (ரலி) அவர்கள் அடுத்த கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

 

செய்வதற்கு முன்...

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் (முன்னாள் ஜனாதிபதி அபூபக்ர் - ரலி அவர்களது ஆட்சியில் திருக்குர்ஆன் நூல் வடிவில் ஒன்று திரட்டியதைப் போன்று) அனைத்து நபிமொழிகளையும் நூல் வடிவில் ஒன்று திரட்டுவதற்கு இஸ்திகாரா தொழுகையை ஒரு மாத காலம் வரை திரும்பத் திரும்ப தொழுது வந்தார்கள். பிறகு அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார்கள். நூல்:- ஜாமிஉ பயானில் இல்ம்

 

மக்காவின் ஆட்சியாளராக இருந்த அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் (இவர் ஆயிஷா - ரலி அவர்களின் சகோதரி அஸ்மா- ரலி அவர்களின் மகன் ஆவார்.) கஅபா பழுதடைந்துவிட்டபோது, அதை புனர்நிர்மாணம் செய்வதற்கு (அதை இடித்துவிட்டு நல்ல நிலையில் கட்டுவதற்கு முன்) இஸ்திகாரா தொழுகை தொழுதார்கள்.

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள், தமது நபிமொழி நூலாகிய புகாரீயில் ஒவ்வொரு நபிமொழியையும் பதிவு செய்யும் முன்னர் இரண்டு ரக்அத் இஸ்திகாரா தொழுகை தொழுத பிறகு தான் பதிவு செய்வார்கள். அதில் அன்னார், "இறைவா! இந்த நபிமொழி சரியானதாக இருந்தால் நான் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் பதிவு செய்யக்கூடாது" என்று பிரார்த்தித்துள்ளார்கள்.

 

இஸ்திகாரா தொழுகை தொழுவதற்கென்று குறிப்பிட்ட நேரங்கள் எதுவும் கிடையாது. சூரிய உதயம், சூரிய உச்சம், சூரிய அஸ்தமனம் ஆகிய தடுக்கப்பட்ட மூன்று நேரங்களை தவிர்த்துவிட்டு மற்றபடி எந்த நேரத்திலும் தொழுது கொள்ளலாம். குறிப்பிட்ட அத்தியாயம் தான் ஓதி தொழ வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. தமக்கு மனனமாக இருக்கும் எந்த அத்தியாயத்தையும் ஓதி தொழலாம்.


கட்டாயக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ்போன்ற நற்காரியங்களை நிறைவேற்றவோ பெற்றோருக்கு பணிவிடை செய்யவோ, மனைவி பிளைளைகளுக்காக சம்பாதிக்க செல்வதற்கோ இஸ்திகாரா செய்வது கூடாது. அது பெரும் தவறாகும்.

 

எனவே, நாம் இஸ்லாம் கூறும் வாழ்வியல் முறைகளைப் பேணி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

  

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...