குடியரசு தினம்
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ
وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ
تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(நபியே!) நீர் கூறுவீராக. ஆட்சியாளர்களுக்கெல்லாம்
அதிபதியே! (அல்லாஹ்வே) நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியை கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து
ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்தப்படுத்துகிறாய். நீ
விரும்பியவர்களை இழிவுப்படுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன.
நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். திருக்குர்ஆன்:- 3:26
இந்திய அரசியலமைப்பு சட்டம், அன்றைய 284 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியின் கையெழுத்தை பெற்ற பின், ஜனவரி-26, 1950-ல் நடைமுறைக்கு வந்த நாளை தான், இந்திய குடியரசு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த அரசியல் அமைப்பு சார்ந்த தொகுப்பு முழுவதையும், தன் அழகான கையெழுத்தால் எழுதியவர் பிரேம் பீகாரி நரைன் ரெய்சதா.
ஒரே சமயத்தில் ஹிந்தி ஆங்கிலம் என இரண்டிலும் அரசியலமைப்புச் சட்டம் உருவானது. கையால் உருவாக்கப்பட்ட காகிதத்தில், இது எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் 221 பக்கங்களுடன், 13 கிலோ எடை கொண்டது. இந்தியில் 250 பக்கங்கள்.
முதன்முதலில் பிரேம் பிகாரீயால் கையால் எழுதப்பட்ட, அரசியலமைப்பு சட்டத்தின் எழுத்து அழிய 1000 ஆண்டுகள்
ஆகுமாம். 16 × 22 அங்குலம் கொண்டது.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ஒரு பெட்டியில், ஹிந்தி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை, நாடாளுமன்ற நூலகத்தியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இன்றைய இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகள்: பாரளுமன்றம், சட்டமன்றங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பிற இடங்களில் தேசிய கொடியை ஏற்றி மிட்டாய் கொடுப்பது. மாணவ-மாணவியர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி. மற்றும் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களின் சுயபுராணம் கலந்த பேட்டி. மேலும் டிவி சேனல்களில் சினிமா நடிக நடிகைகளின் பேட்டி (அதுவும் அரைகுறை ஆடை அணிந்த நிலையில் அரைகுறை தமிழுடன் பேட்டி. இவர்களுக்கு குடியரசு தினம் பற்றி என்ன தெரியும்? என்பது பற்றி நமக்கு அக்கறை இல்லை.) நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் போன்றோர் குண்டு துளைக்காத மேடையில் இருந்து கொண்டு உரை. குடியரசு தினம் என்றால் இது தானா? இத்துடன் முடிந்துவிட்டதா? என்று நாம் என்றாவது அதுபற்றி சிந்தித்துள்ளோமா?
குடியரசு என்றால் குடிமக்களுக்கான அரசு. இந்திய இறையாண்மைக்கு அதன் அரசியலமைப்பு
சாசனம் தான் சான்றாகும். அதன் பிரிவுகள் 395 கொண்டது. தற்போது இந்தியாவில் அவை அனைத்தையும்
செயல்படுத்த முடியுமா? செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்று என்றாவது சிந்தித்திருக்கிறோமா? இதுதான் ஆண்டுதோறும் வரும் குடியரசு தினம் சொல்லும்
செய்தி.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ ) உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களை சபிப்பீர்கள். அவர்கள் உங்களை சபிப்பார்கள். அறிவிப்பாளர்:- அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3778
சேவை உள்ளம்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நாயகமே! "எனக்கு தங்களிடம் ஒரு தேவை உள்ளது. (ஒரு விஷயம் பற்றி கேட்க வேண்டும்") என்று கூறினாள். அப்போது அண்ணலார், ( يَا أُمَّ فُلاَنٍ انْظُرِي أَيَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِيَ لَكِ حَاجَتَكِ ) "இன்ன மனிதரின் தாயே! எந்த தெருவுக்கு நான் வரவேண்டும் என நீ விரும்புகிறாய்; சொல். உனது தேவையை நான் நிறைவேற்றிவைக்கிறேன்" என்று கூறிவிட்டு, அவள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை (மக்கள் நடமாட்டமுள்ள ஒரு தெருவில்) அவளுடன் தனியாக(ப் பேசிக்கொண்டு) நின்றிருந்தார்கள். நூல் முஸ்லிம்-4648, ஷமாயில் திர்மிதீ-331
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரிய தலைவராகவும் ஆட்சியாளராகவும் இருந்தும்கூட மக்களுடன் எளிமையாகப் பழகும் பழக்கம் உள்ளவராக இருந்தார்கள். அண்ணலாரை மக்கள் எளிதில் சந்திக்க முடியும்; நெருங்கிப் பழக முடியும். பாதிக்கப்பட்டவர்கள் தம் உரிமைகளை பெறவும் இதுவே காரணமாக அமைந்தது. இதுவே சிறந்த ஆட்சியாளருக்கான தலைவருக்கான முன்மாதிரி ஆகும்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை மதீனாவை தாக்க எதிரிகள் படையெடுத்து வருகிறார்கள் என்ற வதந்தி பரவியது. அப்போது அண்ணலார் 'மன்தூப்' என்ற அபூதல்ஹாவின் குதிரையை இரவல் வாங்கிக் கொண்டு அதில் ஏறிச் சென்றார்கள். (மதீனாவைச் சுற்றிப் பார்த்த) பிறகு அண்ணலார் திரும்பி வந்து, ( مَا رَأَيْنَا مِنْ شَيْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا ) பீதியூட்டும்படியான எதையும் நான் காணவில்லை; குதிரையை (அலை வீசும்) கடலாக (வேகமாக ஓடக்கூடியதாக) நாம் கண்டோம்" என்று உவமானமாகக் கூறினார்கள். நூல்:- புகாரீ-2820, முஸ்லிம்-4620, அபூதாவூத்-4336, திர்மிதீ-1608, இப்னுமாஜா-2762, முஸ்னது அஹ்மத்-12455
சயீது பின் யர்ஃபூ (ரலி) அவர்களுக்கு பார்வை குறைபாடு இருந்ததால் அவர் ஜும்ஆ தொழுகைக்கு வருவதில்லை. இதையறிந்த ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்து விசாரித்தார்கள். அவர், "என்னை தொழுகைக்கு அழைத்து கொண்டு வர உதவியாளர் யாரும் இல்லை" என்றார். ஜனாதிபதி அவர்கள், அவர் தேவையான இடங்களுக்கு சென்று வர வழிகாட்டியாக ஒருவரை நியமித்தார்கள். அந்த பணியாளர் எப்போதும் அவர் கூடவே இருந்து வந்தார். நூல்:- உஸ்துல் ஙாபா,
ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் இடக்கரத்தால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதைக்கண்ட ஜனாதிபதி அவர்கள், ( يَا عَبْدَ اللَّهِ كُلْ بِيَمِينِكَ ) “அல்லாஹ்வின் அடிமையே! நீர் உமது வலக்கரத்தால் சாப்பிடுவீராக” என்றார்கள்.
அதற்கு அவர், ( أُصِيبْتُ يَوْمَ مُؤْتَةَ فَعَجَزَتْ عَنْ الْحَرَكَةِ ) “மூத்தா போரில் என் வலது கையில் காயப்பட்டுவிட்டது. அதனால் இயங்க இயலாத நிலைக்குப் போய்விட்டது” என்றார். இதைக் கேட்டவுடன் ஜனாதிபதி அவர்கள் அவர் நிலை கண்டு அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
பிறகு, ( مَنْ يُوَضِّئُكَ ؟ ) “நீர் உளூ செய்வதற்கு யார் உதவி செய்கிறார்?” ( وَمَنْ يُغْسَلُ لَكَ ثِيَابُكَ ؟ ) “உமது துணிகளை யார் துவைத்து தருகிறார்?” ( وَمَنْ يُغْسَلُ لَكَ رَأْسُكَ ؟ ) “நீங்கள் குளிப்பதற்கு யார் உதவுகின்றார்?” ( وَمَنْ . . . وَمَنْ . . . ؟ ) இதற்கு யார்? அதற்கு யார்?” என்று (அன்றாட அலுவல்களை) விசாரித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு, அவருக்கு ஒரு பணியாளர், (முறையான) வாகனம், உணவு ஆகியவற்றை கொடுக்க உத்தரவிட்டார்கள். நூல்:- அல்ஃபாரூக் - அல்லாமா ஷிப்லி நுஅமானீ, இன்த மா இல்தகைத்து உமர் இப்னு கத்தாப் (ரலி) ( عند ما التقيت عمر بن الخطاب ) டாக்டர் அத்ஹம் ஷர்காவீ
ஒருவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் எவை? அவை எல்லோருக்கும் கிடைத்திருக்கிறதா? அவ்வாறு கிடைக்காதவர்களுக்கு அவை கிடைக்கப்பெற எவ்வாறு ஏற்பாடுகள் செய்வது? என்றெல்லாம் யோசிக்க வேண்டும். அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். குடிமக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதே ஆட்சியாளருக்கான இலக்கணமாகும்.
இவைதான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான அடிப்படை. இதில் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்களால் தான் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.
மக்களுக்கான அரசு என்ற நிலை மாறி, அரசுக்கான மக்கள்
என்ற நிலையை உருவாக்கத் துடிக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.
நிலவரங்களை அறிவது
ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தனது சிரியா பயணத்தை முடித்துக்கொண்டு தலைநகர் மதீனாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் ஒரு கூடாரம் இருப்பதைக் கண்டார்கள். வாகனத்தை விட்டு கீழே இறங்கி அந்த கூடாரத்தை நோக்கி சென்றார்கள். கூடாரத்திற்கு அருகில் வயது மூதாட்டி ஒருவர் அமர்ந்திருந்தாள். ஜனாதிபதி அவர்கள் அந்த மூதாட்டியிடம், ( مَا فَعَلَ عُمَرُ؟ ) "உமரைப் பற்றி ஏதேனும் தெரியுமா?" என்று விசாரித்தார்கள்.
அந்த மூதாட்டி, ( لَاجَزَاهُ اللَّهُ عَنِّي خَيْرًا ) “அல்லாஹ் என் மூலமாக அவருக்கு நற்கூலி வழங்காமல்
இருப்பானாக!” என்றாள். அதைக்கேட்ட உமர் (ரலி) அவர்கள் ஏன்? என வினவினார்கள். அவள், ( لِأَنَّهُ وَاللَّهِ مَانَالَنِي مِنْ عَطَائِهِ مُنْذُ وَلِيَ أَمْرِ
الْمُؤْمِنِينَ دِينَارًا وَلَا دِرِهُمًا ) “அவர் முஸ்லிம்களின் விவகாரங்களுக்கு
பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்தது அவரது பரிசுகளிலிருந்து ஒரு வெள்ளிக்காசு அல்லது ஒரு
தங்கக்காசைக்கூட நான் பெற்றுக் கொண்டதில்லை. (அதாவது, அவர் ஆட்சிப்பொறுப்பேற்றதில்
இருந்து எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.)” என்றாள்.
ஜனாதிபதி அவர்கள், ( وَمَا يَدْرِي عُمَرُ بِحَالِكَ وَأَنْتَ فِي هَذَا الْمَوْضِعِ ؟ ) "உமரை விட்டு எவ்வளவு தொலைவில் இருக்கிறீர்கள். உங்களைப் பற்றி அவருக்கு எப்படி தெரியும்?" என்றார்கள். அப்பெண்மணி, ( سُبْحَانَ اللَّهِ، وَاللَّهِ مَا ظَنَنْتُ أَحَدًا يُوَلَّى عَلَى النَّاسِ وَلَا يَدْرِي مَا بَيْنَ مَشْرِقِهَا وَمَغْرِبِهَا ) "சுப்ஹானல்லாஹ்! மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற ஒருவரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வார் என நான் எண்ணவில்லை?" என்றாள்.
அதைக்கேட்ட ஜனாதிபதி அவர்கள் அழுதுவிட்டு, ( وَاعُمَرَاهُ، كُلُّ وَاحِدٍ أَفْقَهَ مِنْكَ يَاعُمَرُ
) “உமருக்கு வந்த நாசமே! உமர்! உம்மைவிட மற்றவர்கள் அறிவு ஞானம் மிக்கவர்கள் தான்”
என்று தமது மனதுக்குள் கூறிக்கொண்டு, பிறகு அவளுக்கு 25 தங்கக்காசுகள் அன்பளிப்பாகக்
கொடுத்துவிட்டுச் சென்றார்கள். நூல்:- ஹயாத்துல் ஹயவான் அல்குப்ரா
குடிமக்களின் வாழ்வாதார நிலை என்ன? அவர்களின் தேவைகள்
என்ன? என்பதை அறிய அதற்கான சரியான அதிகாரிகளை நியமித்து
அவர்கள் மூலம் குடிமக்கள் பற்றிய நிலைகளை அறிந்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றிட முயற்சி
செய்யவேண்டும். இதுவே குடியரசு நாட்டை ஆளுபவர்களுக்கான அழகாகும்.
எல்லோரும் சமம்
இந்திய அரசியல் சாசனத்தின் 14 வது விதி, இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன்
சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.
அப்துர் ரஹ்மான் பின் பைலமானீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஒப்பந்தம் செய்துகொண்டு வாழும் ஓர் இறைமறுப்பாளருக்காக ஒரு முஸ்லிமை கொன்று நியாய தீர்ப்பளித்தார்கள். பிறகு அண்ணலார், ( أَنَا أَوْلَى مَنْ وَفَى بِذِمَّتِهِ ) "தங்கள் பாதுகாப்புப் பொறுப்பை நிறைவேற்றியவர்களில் நானே மேலானவன்" என்றும் கூறினார்கள். நூல்:- தாரகுத்னீ, புலூகுல் மராம்-1203
பாரபட்சமின்றி
இந்திய அரசியல்சாசனத்தின் 15 வது விதி, இந்திய மக்களுக்கு இடையே மதம், இனம்,
ஜாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையில் வேறுபாடு காட்டப் படக்கூடாது என்று கூறுகிறது.
அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுடைய
காலத்தில் தம்முடைய எல்லா கவர்னர்களையும் வரவழைத்து பொதுமக்கள் மத்தியில் நிறுத்தினார்கள்.
அவர்களுக்கு எதிராக எவருக்காவது மனக்குறை இருந்தால் வெளியிடலாம் என்று கூறினார்கள்.
யாரும் எதுவும் கூறவில்லை. அமைதியாக இருந்தனர்.
அப்போது ஒரே ஒரு மனிதர் எழுந்து நின்று, ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ عَامَلَكَ فُلَانًا ضَرَبَنِي مِائَةَ
سَوْطٍ ) “ஜனாதிபதி
அவர்களே! உங்கள் கவர்னர் இன்னார் (அம்ர் – ரலி அவர்கள் எந்தவித காரணமும் இல்லாமல்)
என்னை நூறு கசையடிகள் அடித்துவிட்டார்கள்" என்று குற்றம் சாட்டினார். உடனே ஜனாதிபதி
அவர்கள், (அம்ர் - ரலி அவர்களை நோக்கி) ( فِيمَ ضَرَبْتُهُ؟ قُمْ فَاقْتَصَّ مِنْهُ ) “நீர் அவரை ஏன் அடித்தீர்?
நீர் எழுவீராக! அதற்காக உம்மிடம்
பழிதீர்க்கப்படும்" என்று கூறினார்கள். உடனே அம்ர் (ரலி) அவர்கள் எழுந்து,
( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ
إِنَّكَ إِنْ فَعَلْتَ هَذَا يَكْثُرُ عَلَيْكَ وَيَكُونُ سُنَّةً يَأْخُذُ بِهَا مِنْ
بَعْدِكَ ) "ஜனாதிபதி அவர்களே! நீங்கள் இவ்வாறு செய்தால் இது போன்ற வழக்குகள் உங்களிடம் அதிகமாக
வரும். மேலும் உங்களுக்கு பிறகு வரும் ஆட்சியாளர்களிடம் இதுவே நடைமுறையாகிவிடும். (கவர்னர்கள்
மீது இம்மாதிரியான நடவடிக்கையில் இறங்காதீர்கள் என்று கெஞ்சிக்) கேட்டுக்கொண்டார்.
ஆனால், ஜனாதிபதி அவர்கள், ( أَنَا لَا أُقِيدُ وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ يُقَيِّدُ مِنْ نَفْسِهِ ) "நானாக (இவ்வாறு) பழிவாங்கவில்லை. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களே தாமாக பழி வாங்கப்பட
முன்வந்ததைப் பார்த்துள்ளேன்” என்றார்கள். (எனவே, நீ வந்து உன்னுடைய பழியினை தீர்த்துக் கொள்!"
என்று அம்மனிதரை அழைத்தார்கள்.) இறுதியில் அம்ர் (ரலி) அவர்கள் இருநூறு தங்க நாணயங்களை
கொடுத்து அதாவது, தாம் அடித்த ஒவ்வொரு அடிக்கும் இரண்டு தங்க நாணயங்களை நஷ்ட ஈடாகக்
கொடுத்து அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டார்கள். நூல்:- கிதாபுல் கராஜ் பக்கம்-116
மத வழிபாடு
இந்திய அரசியல் சாசனத்தின் 25 ஆம்
பிரிவு பூரண மத வணக்கம் புரிய உரிமை வழங்கியுள்ளது.
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் எகிப்தை வெற்றி கொண்ட பிறகு
அந்த மக்களிடம், ( الْمِصْرِيِّينَ بَانْ لَا يَتَعَرَّضُ الْمُسْلِمُونَ لِكَنَاءِسِهِمْ
بِسُوءٍ ) "எகிப்து மக்களின் கிறிஸ்துவ ஆலயங்களுக்கு
முஸ்லிம்களால் எவ்வித இடையூறும் உண்டாகாது" என்று உடன்படிக்கை செய்து கொண்டார்கள். நூல்:- ஸஹுஹ் வஸாயர் ரசூல்
ஆட்சியாளர் வலீத் பின் அப்துல் மலிக் அவர்கள் டமாஸ்கஸ் நகரில்
அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றை விசாலப்படுத்துவதற்காக பக்கத்தில் இருந்த கிறிஸ்துவ ஆலயத்தையும்
சேர்த்துக் கொள்வதற்கு கிறிஸ்தவர்களை எல்லாம் அழைத்து ஆலோசனை செய்தார். கிறிஸ்தவர்கள் விரும்பும் மற்றொரு இடத்தில் ஒரு
ஆலயத்தை அமைத்துக் கொள்வதற்கு தாமே ஏற்பாடு செய்வதாகவும் அதற்காக இரு மடங்கு பணத்தொகை
தருவதாகவும் கூறினார். அப்போது அந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுத்துவிட்டார்கள். எனினும் ஆட்சியாளர் வலீத் அந்தப்
பள்ளிவாசலை விரிவுபடுத்தும்போது அதிகாரத்தைப் பயன்படுத்தி அருகில் இருந்த கிறிஸ்தவ
ஆலயத்தையும் அதன் இடத்தையும் இணைத்துக் கொண்டார்.
அதன் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உமர் பின் அப்துல் அஜீஸ்
(ரஹ்) அவர்களுடைய காலத்தில் இவரின் நேர்மையை கேள்விப்பட்ட டமாஸ்கஸின் கிறிஸ்தவ துறவிகள்
இந்த விஷயத்தை உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)
அவர்களிடம் முறையிட்டனர். ( فَامَرَ الْخَلِيفَةُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِهَدْمِ ذَلِكَ
الْجُزْءِ مِنَ الْمَسْجِدِ وَاِعَادَةِ الْاَرْضِ لِاَصْحَابِهَا وَالتَّعْوِيضُ لَهُمْ ) ஆட்சியாளர்
உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் பள்ளிவாசலின் அந்த குறிப்பிட்ட பாகத்தை உடைத்து
அந்த இடத்தை உரியவர்களுக்கு மீட்டி கொடுக்குமாறும்,
அதற்குப் பதிலாக
நஷ்டஈடு வழங்குமாறும் கட்டளையிட்டார்கள். நூல்:- ஸஹுஹ் வஸாயர் ரசூல்
இந்திய அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்திருந்தும், முஸ்லிம்
மன்னர்கள் கோவிலை இடித்து மசூதி கட்டினார்கள் என்று நாடெங்கிலும் மதவெறி ஊட்டி
திரட்டப்பட்ட 1,50,000 பேருக்கும்
அதிகமானோர் கலந்துகொண்ட ஒரு வன்முறைக் கூட்டம் முஸ்லிம்களின் கண்ணுக்கெதிரிலேயே 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம்
தேதி பாபர் மசூதியை இடித்துத் துண்டுதுண்டாக சிதைத்து தரைமட்டமாக்கியது. அதே பாணியில் மேலும், பல
பள்ளிவாசல்கள் சூறையாடப்பட திட்டம் தீட்டப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
இந்திய அரசியல் சாசனத்தின் 32 வது விதி, அரசியல் சாசனத்தில் குறிப்பிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.
மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலையொட்டி அப்பாஸ் (ரலி) அவர்கள் வீடு இருந்தது. மழைக்காலத்தில்
அப்பாஸ் (ரலி) அவர்களின் வீட்டின் முகட்டிலிருந்த நீர்த்தாரையில் இருந்து சிதறி விழும்
மழைநீரால் பள்ளிவாசலில் தொழுகைக்கு இடைஞ்சல் ஏற்பட்டதால் அந்த நீர்த்தாரை ஜனாதிபதி
உமர் (ரலி) அவர்களின் உத்தரவின்படி அகற்றப்பட்டது.
வெளியில் சென்றிருந்த அப்பாஸ் (ரலி) அவர்கள் வீடு திரும்பியதும் நீர்த்தாரை அகற்றப்பட்டு
இருப்பதை கண்டு வேதனையுற்றவராக, மதீனா நகரின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
நீதிபதி உபை பின் கஅப் (ரலி) அவர்களின் முன்னாள் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்பாஸ் (ரலி) அவர்கள், ( وَالَّذِي بَعَثَ مُحَمَّدًا بِالْحَقِّ إِنَّهُ هُوَ الَّذِي وَضَعَ
الْمِيزَابَ فِي هَذَا الْمَكَانِ وَنَزَعْتَهُ أَنْتَ يَا عُمَرُ
) “அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டின் மீதிருந்த
நீர்த்தாரை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தான் பொருத்தினார்கள். அப்படிப்பட்ட நீர்த்தாரையை
உமரே! நீங்கள் (என் சம்மதம் பெறாமலேயே) அகற்றி விட்டீர்கள். (நீதிபதி அவர்களே! இதற்கு
தாங்கள் தகுந்த நீதி வழங்க வேண்டும்") என்று முறையிட்டார்கள்.
நீதிபதி அவர்கள், "வீட்டுக்காரரின் அனுமதி பெறாமல் ஜனாதிபதியாகிய நீங்கள்
இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது தவறு" என்று தீர்ப்பளித்தார்கள்.
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், ( ضَعْ رِجْلَيْكَ عَلَى عُنُقِي لِتَرُدَّهُ إِلَى مَا كَانَ هَذَا ) "(இது என்னுடைய தவறு தான். அதற்கு பரிகாரமாக, அப்பாஸ் (ரலி) அவர்களே!)
நீங்கள் என் தோள்களின் மீது ஏறி நின்று மீண்டும் அந்த நீர்த்தாரையை அது இருந்த இடத்திலேயே
பொருத்துங்கள்" என்றார்கள்.
நீதிபதி அவர்கள், "ஆம் அப்படியே செய்யுங்கள். நீதியும் அதை தான் எதிர்பார்க்கிறது"
என்றார்கள். பிறகு அவ்வாறே அந்த நீர்த்தாரை பொருத்தப்பட்டது. இதன் பிறகு அப்பாஸ் (ரலி)
அவர்கள் தமது வீட்டை மஸ்ஜிதுந் நபவீ
பள்ளிவாசலுக்கே கொடுத்துவிட்டார்கள். நூல்:- ஹாகிம்
அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம், "தனி மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தவே இவ்வாறு நடந்து
கொண்டார்கள்.
அரசு, தனி மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும்போது, அந்த அரசுக்கெதிராக
வழக்கு தொடரப்பட்டால் அதில் முறையான நீதி கிடைக்க வேண்டும். இதுவே அரசியல் சாசனத்தை
மதிக்கும் குடியரசு நாடு என்பதற்கான அடையாளமாகும்.
நமது இந்திய திருநாட்டில் அனைத்து மக்களின் உரிமைகள் பேணப்பட்டு, அனைவரும் நிம்மதியாக வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment