Search This Blog

Sunday, 4 December 2022

மனநிலை அறிவோம்!

 

மனநிலை அறிவோம்!

 

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ

 

(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் விரண்டோடி இருப்பார்கள்.       திருக்குர்ஆன்:- 3:159

 

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னை பிறர் நேசிப்பதை விரும்புகிறான். அதற்கான வழி முறைகளை இஸ்லாம் சிறப்பாக எடுத்துரைக்கிறது. அதாவது, நாம் பிற மக்களிடம் சிறந்த நற்பண்புகளோடு பழக வேண்டும். கடுகடுப்பானவராகவோ, கடின உள்ளம் உடையவராகவோ இருக்கக்கூடாது. பிற மக்களின் மீது இரக்கப் பண்புள்ள மனிதனாக இருக்க வேண்டும்.

 

தன்னை பிற மக்கள் எப்படி மதிக்க வேண்டும் என்று, விரும்புகிறோமோ அது போல், நாமும் பிறரை மதித்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழ வேண்டும். இஸ்லாமிய வரம்புக்குள் உட்பட்டு, அவர்களின் நிலையிலிருந்து யோசித்து அவர்களிடம் பேசி பழக வேண்டும். நம்முடைய நடைமுறை இவ்விதமாக இருக்குமாயின் நம்மை நேசிப்பவர்கள் எண்ணிக்கை ஏராளமாகிவிடும்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்த நடைமுறை இருந்ததால்தான் சுமார் 23 வருடங்களுக்குள் லட்சக்கணக்கான மக்களிடம் இந்த புனித இஸ்லாத்தை கொண்டு போய் சேர்க்க முடிந்தது. இன்று வரை உலகம் முழுக்க அண்ணலாரை நேசிப்பவர்கள், புனித இஸ்லாமை ஏற்றுக்கொள்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிர குறையவில்லை என்பதே பேருண்மையாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ ) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்.   அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள்   நூல்:- புகாரீ-13

 

ஒரு கைதி கண்ட காட்சி  

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது.  யமாமா வாசிகளின் தலைவரும் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்தவருமான ஸுமாமா பின் உஸால் எனப்படும் மனிதரை கைது செய்து கொண்டு வரப்பட்டு (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போடப்பட்டது.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து ( مَاذَا عِنْدَكَ يَا ثُمَامَةُ ) "(உன்னுடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர், ஸுமாமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் நல்லதே கருதுகிறேன், முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் (என்னை மன்னித்து) உபகாரம் செய்தால், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார். அன்றைய தினம் அவரை அந்நிலையிலேயே விட்டுவிட்டு அண்ணலார் சென்றார்கள்.

 

மறுநாள் அண்ணலார் அவரிடம் அதைப்பற்றி கேட்டார்கள். அவரும் மீண்டும் அதையே பதிலாக கூறினார். இதுபோன்று மூன்று நாட்கள் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பிறகு மூன்றாவது நாள் பேச்சு வார்த்தைக்கு பிறகு அண்ணலார் ( أَطْلِقُوا ثُمَامَةَ ) "ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே ஸுமாமா  பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த பேரிச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு பள்ளிவாசலுக்கு வந்து திருக்கலிமா கூறி முஸ்லிமானார்.

 

பிறகு, நாயகமே! அல்லாஹ்வின் மீது ஆணையாக (இன்றுவரை) உங்கள் முகத்தை விட எனக்கு மிகவும் வெறுப்புக்குரிய முகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் மற்ற எல்லா முகங்களையும் விட எனக்கு மிகவும் பிரியமான ஆகிவிட்டது. உங்களுடைய இந்த இஸ்லாமிய மார்க்கம் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. நீங்கள் வசிக்கும் இந்த ஊர் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது என்று கூறினார்.  நூல்:- முஸ்லிம்-3622

 

அண்ணல் நபி அவர்கள்,  தான் ஒரு கைதியின் மனநிலையிலிருந்து இவரைப் பற்றி சிந்திக்கிறார்கள். அவர் விருப்பப்படி செயல்படட்டும் எனும் விதமாக "இவரை அவிழ்த்து விடுங்கள்"  என்று சொல்கிறார்கள். இவர் மூன்று நாட்கள் பள்ளிவாசல் தூணில் கைதியாகக் கட்டப்பட்டிருந்த சமயம், முஸ்லிம்களின் உண்மை முகத்தைப் பார்த்துவிட்டு, இவர்கள் நல்லவர்கள் இவர்களின் மார்க்கமும் சிறந்தது என்று முடிவெடுக்கிறார். பிறகு இவர், அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும், அவர்கள் வசிக்கும் ஊரையும் உண்மையாகவே விரும்ப ஆரம்பித்து விட்டார். இவர் மனதில் அண்ணலார் நீங்காது இடம் பிடித்து விட்டார்கள்.

 

குழந்தையின் அழுகுரல்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                   ( وَاللَّهِ إِنِّي لأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ وَأَنَا فِي الصَّلاَةِ فَأُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَتَنَ أُمُّهُ )  “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தொழுவித்துக் கொண்டிருக்கும்போது (பின்னால் தொழும் பெண்களிடையே) குழந்தையின் அழுகுரலை செவியுறுவேன். அக்குழந்தையின் அன்னை குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டு விடுவாளோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாக முடித்துக் கொள்வேன்”. அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-343, இப்னுமாஜா-979

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசலில் கூட்டாக (ஜமாஅத்தாகத்) தொழும்போது முதலில் ஆண்கள் நிற்பார்கள். பிறகு இரண்டாவதாக சிறுவர்கள் நிற்பார்கள். பிறகு  மூன்றாவதாக பெண்கள் நிற்பார்கள். இதுதான் அன்று தொழும் முறையாக இருந்தது. பள்ளிக்கு அண்ணலார் இமாமாக இருக்க, பால்குடி குழந்தைகளை தூக்கிக்கொண்டு பெண்கள் தொழுகைக்காக வருவார்கள். பெண்கள் பள்ளிக்கு வந்து மிகுந்த உள்ளச்சத்துடன் தொழுகையை நீட்டித் தொழுகும்போது, குழந்தைகள் அழுது விட்டால் அவர்கள் உள்ளச்ச நிலை கலைந்து, குழந்தை அழுகிறதே எப்போது தொழுகை முடியும் என்ற பதட்ட நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். எனவேதான், அண்ணலார் அந்த தாய்மார்களின் நிலையிலிருந்து யோசித்து இவ்விதமாக சொல்கிறார்கள். இமாமாக இருக்கும் நம்மால் இந்தப் பெண்களுக்கு தொந்தரவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள்.

 

முதன்முதலாக நுழைபவர்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு 35 வயது இருக்கும் பொழுது, குறைஷியர்கள் இறையில்லமான கஅபாவை புதுப்பித்து கட்டினார்கள். அதன் இறுதியில் ஹஜருல் அஸ்வத் இடம் வந்தபோது, அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய பிரச்சனை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது.

 

அப்போது அபூ உமைய்யா பின் முகீரா மக்ஸூமி என்பவர் அம்மக்களிடம் "இப்புனிதமிகு கஅபாவுக்குள் (நாளைக்கு) முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்" என்று ஒரு யோசனை கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமாற ஏற்றனர். மறுநாள் அதிகாலையில் அந்த புனிதமிகு கஅபாவுக்குள் அருமை நாயகம் (ஸல்) அவர்களே முதலாமவராக புனிதமிகு கஅபாவுக்குள் நுழைந்தார்கள். அண்ணலாரைக் கண்ட அம்மக்கள் இதோ முஹம்மது வந்துவிட்டார் இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாம் ஒப்புக் கொள்கிறோம் என்றனர். அண்ணலார் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர்

 

அண்ணலார் ஒரு விரிப்பை விரித்து அதன் நடுவே ஹஜருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து, விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.                               நூல்:- அர்ரஹீக்குல் மக்தூம்

 

அந்த புனிதமிகு ஹஜருல் அஸ்வத் கல்லை கஅபாவின் சுவற்றில் நான் தான் பொருத்துவேன் என்று ஒவ்வொருவரும் எண்ணுவது தவறொன்றும் இல்லை. அது நல்ல எண்ணமும் கூட. இருந்தாலும் அதற்காக போட்டிபோட்டு ஒரு போர் மூண்டுவிடக் கூடாது.

 

எனவே, அதற்காக போட்டியிட்டவர்களில் மனநிலைக்கு ஏற்ப அவர்கள் அனைவரையும் சாந்தப்படுத்தும் விதமாக அண்ணலார் அம்மக்களின் மனநிலையில் இருந்து யோசித்து அழகிய முறையில் அதற்கு தீர்வு கண்டார்கள்.

 

இந்நிகழ்வைப் பற்றி இன்றுவரை சகோதர சமயத்தவர்களின் நடுநிலை சிந்தனையுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை சமயோசித அறிவுமிக்கவர் என புகழ்ந்துரைக்கின்றனர்.

 

ஒரு பொது பிரச்சனைக்கு தீர்வு சொல்லுபவர் அந்த மக்களின் மனநிலையை அறிந்து, அதற்கு ஏற்றார்போல் இஸ்லாமிய வரம்புக்குட்பட்டு மிக அழகிய முறையில் தீர்வு சொல்லும் அளவுக்கு போதிய ஞானமுள்ளவராக இருக்க வேண்டும்.

 

வெறுப்பூட்ட வேண்டாம்

 

அபூ மஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து "இன்னார் தொழுகையை நீண்ட நேரம் எங்களுக்கு தொழுவிப்பதால் சுப்ஹு எனும் அதிகாலைத் தொழுகை(யின்  ஜமாத்து)க்குச்  செல்லாமல் நான் தாமதித்துவிடுகிறேன்" என்று கூறினார்.

 

இதைக் கேட்ட அண்ணாலார்  கடுமையாக கோபம் அடைந்தார்கள். பிறகு அவர்கள்  ( يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ أَمَّ النَّاسَ فَلْيُوجِزْ فَإِنَّ مِنْ وَرَائِهِ الْكَبِيرَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ ) "மக்களே! உங்களில் வெறுப்பூட்டும் சிலர் உள்ளனர். ஆகவே, உங்களில் எவர் மக்களுக்கு தொழுவிக்கின்றாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில் அவருக்குப் பின்னால் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் உள்ளனர்" என்று கூறினார்கள்.    நூல்:- புகாரீ-704, முஸ்லிம்-799

 

மக்களுக்கு தொழ வைக்கக் கூடியவர் சூழ்நிலைக்கேற்ப தொழுகையை நீளமாகவோ சுருக்கமாகவோ தொழ வைக்கலாம். தொழுகையாளிகளின்  நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வசதியைப் பொறுத்து சில வேளைகளில் நீண்ட நேரம் தொழ  வைக்கலாம். சிலவேளைகளில் சுருக்கமாகவே தொழ வைக்க வேண்டும். மேலும் தொழுகையை மிகவும் நீட்டி மக்களை சோர்வடையச் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது கண்டிக்கத்தக்கதாகும். இதுவே இந்த நபிமொழியின் கருத்து.

 

வழமைக்கு மாறாக

 

ஒரு முறை ஒரு பெண் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு திராட்சை பழத்தைக் கொண்டு வந்து அன்பளிப்பாக கொடுத்தார். எப்போதும் தம் தோழர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும் பழக்கமுடைய அண்ணலார் அன்று எல்லாவற்றையும் தாமே சாப்பிட்டுவிட்டார்கள். அதை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் மிக்க மகிழ்ச்சியோடு திரும்பினாள்.

 

வழமைக்கு மாறான அண்ணலாரின் செயலைக் கண்ட தோழர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்பெண் சென்றபின் அதற்கான காரணத்தையும் கேட்டார்கள். அதற்கு அண்ணலார் அந்தப் பெண் கொடுத்த முதல் பழத்தை சாப்பிட்ட உடனேயே அதன் புளிப்புச் சுவையை உணர்ந்து கொண்டேன். அதை உங்களிடம் கொடுத்தால் இது புளிக்கிறது என்று கூறிய பெண்ணின் மனதை சங்கடப்படுத்தி இருப்பீர்கள் எனவேதான் நான் உங்களுக்குத் தராமல் நானே அனைத்தையும் சாப்பிட்டுவிட்டேன்" என்று பதிலளித்தார்கள்.

 

நமக்கு ஒருவர் அன்பான முறையில் ஏதேனும் ஒன்றை அன்பளிப்புச் செய்யும் பொழுது, அந்த அன்பளிப்பில் ஏதேனும் குறை இருந்தால்கூட அதை சகித்துக் கொண்டு வெளியே காட்டிக்கொள்ளாமல் மனமார ஏற்றுக் கொள்வதுதான் நற்பண்பாகும்.

 

அன்பளிப்பு செய்தவர் நம்மிடம் எப்படி இருந்தது? என்று கேட்கும்போது "ஆ... சிறப்பாக இருந்தது" என்று ஒரு வார்த்தை சொல்வதன் மூலம் அவர் மனதில் நாம் இடம் பிடித்து விடலாம். காரணம், நம்மிடத்திலிருந்து இந்த வார்த்தையைத்தான் அன்பளிப்பு செய்தவர்களில் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

 

நாம் பிறர் வீட்டு விருந்துக்கு அழைக்கப்பட்டு அங்கே போய் நாம் சாப்பிட்ட பிறகு, உணவில் கொஞ்சம் உப்பு கூடுதலாக இருக்கிறது. அல்லது கொஞ்சம் குறைவாக இருக்கிறது. காரம் கொஞ்சம் அதிகம் அல்லது எண்ணெய் கொஞ்சம் அதிகம் என்று நாம் குறையை மிக சிறிய அளவில் சொன்னால்கூட விருந்து கொடுத்தவருக்கு அது மனதை புண்படுத்தி விடலாம். என்று சற்று யோசிக்க வேண்டும்.

 

என் அந்தஸ்திற்கு இந்த அன்பளிப்பு எல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல என்று உதாசீனப்படுத்துவது மிகப் பெரும் தவறு. அன்பளிப்பு பொருள் தடுக்கப்பட்ட (ஹராமான)தாக இருந்தால், அதை வேண்டாம் என்று மறுக்கலாம் தவறில்லை.

 

தூக்கத்தைக் கெடுக்கக்கூடாது

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.  அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய  இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை கீழே வைத்தார்கள்; தம் செருப்பைக் கழற்றிக்   தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கி விட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவுக்கு பொறுத்திருந்தார்கள்.

 

(நான் உறங்கி விட்டதாக எண்ணியதும்) மெதுவாக தனது மேலாடையை எடுத்து அணிந்து கொண்டார்கள்; மெதுவாக காலனி அணிந்தார்கள்; ஓசையின்றி கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள். (அப்போது நான் உறங்காமல் இருந்ததை அண்ணலார் அறியவில்லை.)        அறிவிப்பாளர்:- முஹம்மது பின் கைஸ் பின் மக்ரமா அல்முத்தலிப் (ரஹ்) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1774, திர்மிதீ-670, நஸாயீ-2010

 

மிக்தாத் பின் அல்அஸ்வது (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் (எங்களிடம்) வந்தால் உறங்கிக் கொண்டிருப்பவரை விழிக்கச் செய்யாமல், விழித்திருப்பவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக மெதுவாக சலாம் சொல்வார்கள்.           நூல்:- முஸ்லிம்-4177, திர்மிதீ-2640

 

பலர் தூங்கும் போது சிலர் தூங்காமல் இருந்து அவர்களுக்கு நாம் ஸலாம் கூற நேர்ந்தால் மற்றவர்களின் தூக்கத்திற்கு இடையூறு இல்லாமல் மெதுவாக சலாம் கூறுவது சிறந்த ஒழுக்கமாகும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ) எவரது நாவு, கை ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் நிம்மதிப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்.   அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-10

 

நமக்கு இரவில் திடீரென வெளியே புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அல்லது பயணத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தால், தடால் புடால் என்று இருக்கும் மின்விளக்குகளை ஏற்றி அல்லது எதையாவது உருட்டி சப்தமிட்டு உறங்குபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது நற்பண்பல்ல. உறங்குபவர்கள் மனைவி, மக்கள், பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்களின் உறக்கம் கெடும் அளவிற்கு அவர்களுக்குத் தொந்தரவு செய்யக் கூடாது. வீட்டினர் உறங்கும் போது நாம் எந்த வேலையையும் ஓசையின்றி செய்து பழகவேண்டும். தனது உறக்கத்தின்போது தொந்தரவு செய்யப்படுவதை பலரும் விரும்புவதில்லை. பலரும் அந்நேரத்தில் எரிச்சல்படுவார்கள்.

 

பயணத்தை முடித்துவிட்டு இரவில் தான் வீடு போய் சேரமுடியும் என்று எண்ணினால், முடிந்தவரை அதனை முன்னதாகவே வீட்டினருக்கு  தெரியப்படுத்தி விடுவது நல்லது. இதனால் தேவையற்ற வருத்தங்களை தவிர்க்கலாம். நாம் இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் வீட்டினர் மனநிலையில் இருந்து யோசிக்க வேண்டும்.

 

தூக்கம் தான் மனிதனின் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தருகிறது. அளவான தூக்கம் ஆரோக்கியமான வாழ்வுக்கு மிக அவசியமேயாகும். எனவேதான், எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் பிறர் தூக்கத்தைக் கெடுக்கக்கூடாது.

 

பிறர் மனநிலை அறிந்து செயலாற்றும் பக்குவத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு தந்தருள்வாயாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, நீலாங்கரை, சென்னை. செல்-9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...