Search This Blog

Sunday, 4 December 2022

அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்!

 

அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்!

 

وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ

 

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவனே போதுமானவன். திருக்குர்ஆன்:- 65:3

 

மனிதன் தன்னுடைய ஆற்றல்களையும் திறமைகளையும் வசதி வாய்ப்புக்களையும் பயன்படுத்தித், திட்டமிட்டு அயராமல் உழைக்க வேண்டும். ஆனால், தன்னுடைய உழைப்பு திட்டமிடல் பணிகளைச் செய்கின்ற நேர்த்தி போன்றவற்றின் மீது நம்பிக்கை வைக்காமல் இறைவன் மீதே உண்மையான நம்பிக்கை வைக்க வேண்டும். இறைநம்பிக்கை மிக்க அடியானுக்கு இறைவனுடன் இருக்கக்கூடிய தொடர்பின் வெளிப்பாடாகத்தான் "தவக்குல்" இருக்கின்றது.

 

விவசயாம் வளர்ந்தோங்க, தேவைக்கேற்ப வான்மழை பொழிய வேண்டும். வாழ்வில் முன்னேற, படிக்கவும் உழைக்கவும் வேண்டும். பதவிகளைப் பெற, மக்களின் மனங்களை கவர வேண்டும். இந்தக் காரணங்கள் எல்லாம் நியாயம் தான். இந்தக் காரணங்களை மட்டும் நம்புபவர்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக இருக்கமுடியாது. இதற்கும் மேலாக நம்மை படைத்த அல்லாஹ் நினைத்தால் மட்டுமே இவைகள் சாத்தியமாகும் என்று அழுத்தமான நம்பிக்கை வேண்டும்.

 

இறைநம்பிக்கையாளர்கள், மழை பொழிந்தாலும் அல்லாஹ் நினைத்தால் மட்டுமே விளைச்சல் கிடைக்கும் என்றும், படித்தாலும் உழைத்தாலும் அல்லாஹ் நினைத்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும் என்றும், மக்களை கவர்ந்தாலும் அல்லாஹ் நினைத்தால் மட்டுமே பதவிகள் கிடைக்கும் என்றும், காரணங்களை ஒரு பக்கமாக வைத்துக்கொண்டு கர்த்தாவான அல்லாஹ்வையே முன் நிறுத்துவார்கள்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مِنْ أَحَبِّ أَنْ يَكُونَ أَقْوَى النَّاسِ فَلْيَتَوَكَّلْ عَلَى اللَّهِ ) யார், மனிதர்களிலேயே மிகவும் பலசாலியாக இருக்க வேண்டுமென விரும்புகிறாரோ அவர் உயர்ந்தோன் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் அஸ்ஸுமர் வசனம்-38

 

தற்காத்துக் கொள்ளுங்கள்

 

(பின்னர் நபி யஃகூப்) அவர், "என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ரு நாட்டுக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத் தடுத்துவிட முடியாது. (ஏனென்றால்) அதிகாரம் எல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீது முழு நம்பிக்கை வைப்பார்களாக" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 12:67

 

இறைத்தூதர் யஃகூப் (அலை) அவர்கள், உணவுப்பொருட்கள் வாங்கி வர மிஸ்ரு நாட்டிற்கு தமது பிள்ளைகளை அனுப்பினார்கள். அப்போது அவர்கள் தமது பிள்ளைகளிடம், "நீங்கள் அனைவரும் ஒரே வழியில் ஒட்டுமொத்தமாக நுழைந்தால் உங்களுக்கு கண்ணேறு ஏற்பட்டுவிடக்கூடும். எனவே, அந்நாட்டிற்குள் பல வழிகளில் பிரிந்து பிரிந்து நுழைந்தால் உங்களை கண்ணேறு ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம். அதையும் மீறி உங்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அது அல்லாஹ்வின் நாட்டம். முதலில் நீங்கள் உங்களை தற்காத்து கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டுங்கள்" என்று கூறுகிறார்கள். இதையே மேற்காணும் திருவசனம் எடுத்துரைக்கிறது.

 

காரண காரியங்கள் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டுவதன் ஒரு பகுதியாகும். ஒரு செயல் வெற்றியடைய அல்லது ஒன்றில் இருந்து பாதுகாப்புப்பெற நம்மால் முடிந்த முயற்சிகளை செய்துவிட்டு, பிறகு அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டவேண்டும். இதைத்தான் அல்லாஹ்வும் விரும்புவான் என்பதை இறைத்தூதர் யஃகூப் (அலை) அவர்கள் உணர்த்துகிறார்கள்.

 

எனவே, (நபியே!) நீர் அவனையே வழிபடுவீராக. அவனையே சார்ந்திருப்பீராக. திருக்குர்ஆன்:- 11:123

 

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹுதுப் போர் நாளில் இரண்டு கவச ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவ்விரண்டையும் ஒன்றின் மீது ஒன்றாக அணிந்து (பாதுகாப்பாக்கிக்) கொண்டார்கள். நூல்:- அபூதாவூத்-2590, திர்மிதீ-1615, இப்னுமாஜா-2796,  முஸ்னத் அஹ்மத்-15164, பைஹகீ 

 

போர் பாதுகாப்புக்காக இவ்விதம் அணிந்திருந்தார்கள். (தவக்குல் எனும்) இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கும் பண்பு சுயபாதுகாப்பு ஏற்பாட்டுடன் அமைந்திருக்க வேண்டும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் இறைவனை முற்றிலும் சார்ந்து இருக்கிறேன் என்று கூறுவது பொருத்தமானதல்ல. தவக்குல் பண்பைப் பெற்றிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயுதம் தரித்தவர்களாகவே போர்க்களத்திற்குச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் போரும் நடந்தது; போரில் வெற்றி பெற பிரார்த்தனையும் நடந்தது என்பதை விளங்கவேண்டும்.

 

சிகிச்சை செய்யலாம்

 

உசாமா பின் ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது. கிராமவாசிகள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நாயகமே! நாங்கள் நோய்க்கு சிகிச்சை செய்து கொள்ளலாமா? என்று கேட்டனர். அதற்கு அண்ணலார், ( نَعَمْ يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ شِفَاءً أَوْ قَالَ دَوَاءً إِلاَّ دَاءً وَاحِدًا ) ”ஆம்! சிகிச்சை செய்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! ஏனெனில், 'உரிய மருந்தைப் படைக்காமல் அல்லாஹ் எந்த நோயையும் படைக்கவில்லை' ஒரே ஒரு நோயே தவிர என்றார்கள்.

 

கிராமவாசிகள், ( يَا رَسُولَ اللَّهِ وَمَا هُوَ ) "நாயகமே! அது என்ன நோய்?" என்றனர். அண்ணலார், ( اَلْهَرَمُ ) "(அது) முதுமையாகும் என்று பதிலளித்தார்கள். நூல்:- திர்மிதீ-1961

 

உடல் என்று ஒன்றிருந்தால் அதற்கு நோய் வருவதென்பது இயற்கை. நோய் வந்துவிட்டால் அதற்கு சிகிச்சை செய்வதும் இயல்பான ஒன்றுதான். அது விரும்பத்தகாத செயலன்று. சிகிச்சை மேற்கொள்வதும் மருந்து உட்கொள்வதும் இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கோ விதியை நம்பியதற்கோ முரணாகிவிடாது. அண்ணல் நபி (ஸல்) அவர்களே சிகிச்சை செய்துகொள்ளுமாறுதூண்டி உள்ளார்கள். எனவே, சோதனைகள் அனைத்தையும் பொருந்திக்கொண்டு அப்படியே இருக்க வேண்டுமே தவிர, மருத்துவம் பார்க்கக் கூடாது என்று எண்ணுவது நபிமொழிக்கு எதிரானது.

 

நோய் விலக அதற்குரிய மருந்தை பயன்படுத்திவிட்டு தான், இறைவன் என்னை பீடித்துள்ள நோயை நீக்குவான் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். இதுவே இஸ்லாம் கூறும் தவக்குல்.

 

வாய்பந்தல் வேலைக்கு ஆகாது

 

"என் சமுதாயத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிய (உண்மை) முஸ்லிம்களாக இருந்தால், அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்" என்று மூசா கூறினார். திருக்குர்ஆன்:- 10:84

 

அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரண்டு பேர் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள். யாருக்கு எதிராக தீர்ப்பு அமைந்ததோ அவர் "ஹஸ்பியல்லாஹு வநிஅமல் வகீல்" (எனக்கு  அல்லாஹ்வே போதுமானவன்; மேலும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் அவனே சிறந்தவன்) என்று சொல்லிக்கொண்டே போனார். அவரைத் திரும்ப அழைத்து அண்ணலார் இவ்வாறு அறிவுரை பகர்ந்தார்கள். ( إِنَّ اللَّهَ يَلُومُ عَلَى الْعَجْزِ، وَلَكِنْ عَلَيْكَ بِالْكَيْسِ، فَإِذَا غَلَبَكَ أَمْرٌ فَقُلْ: حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ) "நிச்சயமாக அல்லாஹ் இயலாமையை பழிக்கின்றான். நீங்கள் எடுக்க வேண்டிய எல்லா முயற்சிகளையும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். காரியம் கைமீறிச் சென்று விட்டால், அப்போது ஹஸ்பியல்லாஹு வநிஅமல் வகீல்"  என்று கூறுங்கள். நூல்:-  முஸ்னது அஹ்மது, அபூதாவூது, நஸாயீ, தஃப்சீர் இப்னுகஸீர் அத்தியாயம் ஆலு இம்ரான், வசனம்-173

 

செய்ய வேண்டிய எந்த முயற்சியையும் செய்யாமல் அல்லாஹ் எனக்குப் போதுமானவன் என்று சொல்லிக்கொண்டு சோம்பி உட்காருவதற்கு பெயர் "தவக்குல் - நம்பிக்கை" அல்ல; மாறாக நம்மாலான எல்லா முயற்சிகளையும் அனுமதிக்கப்பட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும்; முயற்சி வெற்றி கண்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்; முயற்சி தோல்வி கண்டால் அல்லாஹ்வின் முடிவை ஏற்று, அவனே எனக்குப் போதுமானவன் என பாரம்சாட்ட வேண்டும் என்று தெரிகிறது.

 

ஒட்டகத்தைக் கட்டி வை!

 

எவரேனும் அல்லாஹ்வை முழுவதும் சார்ந்து வாழ்ந்தாரானால் (அல்லாஹ் அவருக்கு போதுமானவன் ஆவான்.) நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 8:49

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் (நபிகள் நாயகம்-ஸல் அவர்களிடம் வந்து), ( يَا رَسُولَ اللَّهِ أَعْقِلُهَا وَأَتَوَكَّلُ أَوْ أُطْلِقُهَا وَأَتَوَكَّلُ )  "நாயகமே! நான் ஒட்டகத்தைக் கட்டி வைத்துவிட்டு (அதை அல்லாஹ் காப்பான் என) நம்பியிருக்கவா? அல்லது அதை கட்டாமல் அவிழ்த்து விட்டுவிட்டு (அதை அல்லாஹ் காப்பான் என) நம்பியிருக்கவா? என்று வினவினார். அதற்கு அண்ணலார், ( اعْقِلْهَا وَتَوَكَّلْ ) "நீ அதைக் கட்டிபோட்டுவிட்டு, பிறகு (அல்லாஹ்வை) நம்பியிருப்பாயாக!”  என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2441

 

கால்நடைகளைக் கட்டி வைப்பது, மனிதன் தன் தரப்பில் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இது இறைவனின் மீதான நம்பிக்கைக்கு (தவக்குல்) எதிரானதன்று. கட்டி வைத்த பின்பும் காணாமல் போகாமலிருக்க இறைவனை நம்புவது இறையைச் சார்ந்திருப்பதன் அடையாளமாகும். ஆக, அவிழ்த்துவிடுவது இறைநம்பிக்கை என்றோ கட்டிப்போடுவது தன்மீதான நம்பிக்கை என்றோ கூற இயலாது. இரண்டு நிலைகளிலும் இறைவனின் பாதுகாப்பே இறுதியானது. ஆயினும் மனிதன் செய்ய வேண்டியதைச் செய்யத்தான் வேண்டும். இந்த உதாரணம் கால்நடைகளுக்கு மட்டுமல்ல. வீடு, கடை, வியாபாரத்தளங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.

 

ஒருமுறை அறிஞர் பெர்னாட்சாவிடம் ஒருவர் கேட்டார். இஸ்லாத்திற்கும் கம்யூனிசத்திற்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டார். பெர்னாட்சா, “ஒட்டகத்தையும் கட்டிவை. இறைவனிடமும் பாதுகாப்புத்தேடு என்று முஹம்மது நபி சொன்னதாக நான் படித்திருக்கிறேன். இன்னும் புரியும்படி சொல்வதென்றால், ஒட்டகத்தை மட்டும் கட்டிப்போடு என்று சொல்லியிருந்தால் அது கம்யூனிசம். இறைவனிடம் மட்டும் பாதுகாப்புத்தேடு என்று மட்டும் என்று சொல்லியிருந்தால் அது பக்தி மார்க்கம். ஆனால் இந்த இரண்டும் சேர்ந்து இருந்தால் இஸ்லாம்” என்று அழகாக பதிலளித்தார்

 

முயற்சி செய்தல்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர், "சாட்சிகளை என்னிடம் கொண்டு வா!" அல்லது பிணையேற்கும் ஒருவரை என்னிடம் கொண்டு வா! என்று கூறினார். கடன் கேட்டவர், "சாட்சிக்கும் பிணையேற்கவும் அல்லாஹ்வே போதுமானவன்" என்றார்.

 

பிறகு கடன் கேட்கப்பட்டவர், "நீர் கூறுவதும் உண்மைதான்" என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தரவேண்டும் என்று ஆயிரம் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்தார்.

 

கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு தம் வேலைகளை முடித்துக்கொண்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும் அவருக்கு கிடைக்கவில்லை. உடனே ஒரு மரக்கட்டையை எடுத்து அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்கள்.

 

பிறகு கடலுக்கு வந்து, "இறைவா! நடந்தவற்றையெல்லாம் நீ அறிவாய். எனவே, இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்" என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றது. பிறகு அவர் ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.

 

அவருக்குக் கடன் கொடுத்த மனிதர் தமது செல்வத்துடன் ஏதேனும்  வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்டவாறு புறப்பட்டார். அப்போது பணம் உள்ள மரக்கட்டையை கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார்.

 

பிறகு, ஒருநாள் கடன் வாங்கியவர் ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். "அல்லாஹ்வின் மீதாணையாக! உமது பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்; சற்று முன்புதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்" என்று கூறினார்.

 

அதற்கு கடன் கொடுத்தவர், "நீர் எனக்கு எதையேனும் அனுப்பி வைத்தீரா? என்று கேட்டுவிட்டு, ( فَإِنَّ اللَّهَ قَدْ أَدَّى عَنْكَ الَّذِي بَعَثْتَ فِي الْخَشَبَةِ فَانْصَرِفْ بِالأَلْفِ الدِّينَارِ رَاشِدًا ) நீர் மரக்கட்டையில் வைத்து அனுப்பியதை உமது சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்த்துவிட்டான். எனவே, இந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்வீராக!" என்று கூறினார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2291

 

ஒன்றை அடைந்திட என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அவை அனைத்தையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்டு, "இறைவா! நான் என்னால் முடிந்த முயற்சிகளை எல்லாம் செய்து முடித்துவிட்டேன்" என்று பிரார்த்திக்க வேண்டும். இதுதான் அல்லாஹ்வையே நம்பி அவனையே முழுக்க முழுக்கச் சார்ந்து நின்று அவனிடமே நம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் 'தவக்குல்' எனும் பண்பாகும்.

 

ஓடி உழைக்க வேண்டும்

 

அல்லாஹ் தன் அடியாருக்குப் போதுமானவன் இல்லையா?              திருக்குர்ஆன்:- 39:36

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا تُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا ) நீங்கள் அல்லாஹ்வைச் சார்ந்திருக்க வேண்டிய விதத்தில் சார்ந்திருந்தால், பறவைகளுக்கு உணவளிக்கப்படுவதைப் போன்று உங்களுக்கும் உறுதியாக உணவளிக்கப்படும். பறவை ஒட்டிய வயிறுடன் காலையில் புறப்பட்டுச் செல்கிறது. நிரம்பிய வயிற்றுடன் மாலையில் (கூடு) திரும்புகிறது. அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2266

 

ஆறறிவு இல்லாத பறவை என்ன நம்பிக்கையோடு காலையில் கூட்டைவிட்டுப் புறப்படுகிறது. காலையில் ஒட்டிய வயிறுடன் புறப்படும் பறவை, மாலையில் நிரம்பிய வயிறுடன் திரும்புகிறது. அதற்கு உணவளித்தவன் யார்? இதே நம்பிக்கை ஆறறிவு படைத்த மனிதனுக்கும் வேண்டும். இந்த நம்பிக்கையோடு உழைத்தால் உணவு நிச்சயம்; உயர்வு நிச்சயம்.

 

'தவக்குல்' என்பது, நான் இறைவனை நம்பி இருக்கிறேன்; அவன் எனக்குச் சோறு போடுவான் என்று உழைக்காமல் சோம்பிக் கிடப்பதற்குப் பெயரன்று. மாறாக, அந்த நம்பிக்கையுடன் முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் இறைவன் வெற்றியளிப்பான் என்று நம்ப வேண்டும். இதுதான் 'தவக்குல்' ஆகும். வெற்றி கிடைத்தால் இறைவனுக்கு நன்றி! வெற்றி கிடைக்காவிட்டால் பொறுமை!

 

பறவையேகூட படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்று கூட்டில் அடைந்து கிடக்கவில்லை. காலையில் இரையைத் தேடி கூட்டைவிட்டு, குஞ்சுகளைவிட்டுப் பறந்து செல்கிறது. இரையைத் தேடுகிறது. அதனால் நிரம்பிய வயிற்றோடு கூடு திரும்புகிறது; குஞ்சுக்கும் ஊட்டுகிறது. ஆக, இறைவனை நம்ப வேண்டும்; இரையைத் தேடவும் வேண்டும். இரை கிடைத்தால் அது இறைவன் செய்த புண்ணியம்; இரை கிடைக்காவிட்டால், அது இறைவன் எழுதிய விதி. இந்த முடிவுக்கு மனிதன் வரும்போது உயர்ந்தால் மமதை கொள்வதோ தாழ்ந்தால் விரக்தி அடைவதோ தேவையிராது. மன அழுத்தமும் வராது.

 

ஒருமுறை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை முடிந்து மக்களெல்லாம் சென்ற பிறகு சிலர் மட்டும் பள்ளிவாசலிலேயே அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் யார்” என வினவினார்கள். அதற்கவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் (முதவக்கிலூன்)" என்று  கூறினார்கள்.

 

உடனே உமர் (ரலி) அவர்கள் ( بَلْ أَنْتُمْ مُتَأَكِّلُونَ لَا مُتَوَكِّلُونَ، قَاعِدِينَ تَتَأَكَّلُوا، "لَا يَقْعُدُ أَحَدُكُمْ عَنْ طَلَبِ الرِّزْقِ وَيَقُولُ اللَّهُمَّ ارْزُقْنِي فَقَدْ عَلِمْتُمْ أَنَّ السَّمَاءَ لَا تُمْطِرُ ذَهَبًا وَلَا فِضَّةً، إِنَّمَا يَرْزُقُ اللَّهُ النَّاسَ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ، أَمَا سَمِعْتُمْ قَوْلَ اللَّهِ تَعَالَى  فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ ) (கோபத்துடன்), "இல்லை... (முதஅக்கிலூன்) நீங்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அல்லர். இறைவா! எனக்கு உணவு கொடு! என்று பிரார்த்தித்துவிட்டு முயற்சி செய்யாமல் உட்கார்ந்துவிட்டால் எதுவும் நடக்காது. அறிந்துக்கொள்ளுங்கள்: நிச்சயமாக! வானம் தங்கம் வெள்ளி ஒன்றும் பொழியாது. நிச்சயமாக அல்லாஹ் மக்களில் சிலருக்கு சிலரைக்கொண்டுதான் வாழ்வாதாரத்தை வழங்குகிறான். "(ஜும்ஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டுப்) பூமியில் பரவிச்சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்" (62:10) என்ற அல்லாஹ்வின் திருவசனத்தை நீங்கள் கேட்டதில்லையா? என்று கூறினார்கள். நூல்:- இஹ்யா பாடம்-ஆதாபில் கஸ்பி வல்மஆஷி

 

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மண்ணில் விதை போட்டுவிட்டு, விண்ணில் (உள்ள) அல்லாஹ்விடம் பிரார்த்திப்பவர் தான் உண்மையாகவே அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்திருப்பவர் ஆவார்.

 

தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காவும் ஓடி உழைக்காமல் இருந்துவிட்டு எல்லாம் அவன் செயல் என்று வியாக்கியானம் பேசி, சோம்பி இருப்பது தவக்குல் அல்ல. உண்மையான தவக்குல் என்பது முறையாக உழைத்து விட்டு பிறகு அதற்குரிய வெற்றியை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பதேயாகும்.

 

எதிர்மறையான சிந்தனை

 

எனவே, இறைநம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும் என்று (நபியே) கூறுவீராக.    திருக்குர்ஆன்:- 9:51

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதனின் உள்ளம் ஒவ்வொரு கணவாயிலும் அலைந்து திரிந்தவாறு இருக்கின்றது. எவன் தன் உள்ளத்தை கணவாய்களில் தடுமாறி திரிந்திட அனுமதிக்கின்றானோ அவனை அந்தக் கணவாய் அழித்து நாசமாக்கி விடுகிறது என்பது பற்றி அல்லாஹ்வுக்கு கவலையில்லை. எந்த மனிதர் அல்லாஹ்வையே நம்பி அவனையே சார்ந்து விடுகின்றாரோ அல்லாஹ் அவரை அந்தக் கணவாயிலிருந்தும், பாதைகளிலிருந்தும், தடுமாறி அலைவதிலிருந்தும் அழிந்து போவதிலிருந்தும் காப்பாற்றுவான். அறிவிப்பாளர்:- அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா

 

மனிதன் அல்லாஹ்வைத் தன் பொறுப்பாளனாகவும் பாதுகாவலனாகவும் எடுத்துக் கொள்ளவில்லையென்றால் அவனது உள்ளம் எப்போதும் திகைப்பில் ஆழ்ந்து கவலையுடன் இருக்கும். பல்வேறு வகைப்பட்ட உணர்வுகளின் உறைவிடமாகவே இருக்கும். ஆனால் உள்ளத்தை அல்லாஹ்வின் பக்கம் திருப்பிவிடும் மனிதனுக்கு மன ஓர்மையும் நிம்மதியும் கிடைக்கும்.

 

பேரறிஞர் இமாம் ஹசன் அல்பசரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( قَرَأتُ فِي تِسعِينَ مَوضِعًا مِن القرآنِ أَنَّ اللهَ قَدَّرَ الأَرزَاقَ  وَضَمنَهَا لِخَلقِهِ ، وَ قَرَأتُ فِي مَوضِع وَاحِدٍ : اَلشَّيطَانُ يَعِدُكُمُ الفَقرَ  فَشَكَکنَاا فِي قَولِ الصَّادِق في تسعين مَوضعاً وَصَدَّقنَا قَولَ الكَاذِب في مَوضِعٍ وَاحِدٍ )  செல்வ வளங்களை அல்லாஹ் நிர்ணயம் செய்து, தன் படைப்பினங்களுக்கு அவற்றை வழங்கும் பொறுப்பை தானே ஏற்று இருப்பது குறித்து திருக்குர்ஆனில் 90 இடங்களில் ஓதினேன். வறுமையைக் கொண்டு ஷைத்தான் பயமுறுத்துவது குறித்த வசனத்தை ஒரேயொரு இடத்தில் ஓதினேன். ஆனால், 90 இடங்களில் கூறப்பட்ட உண்மையாளனின் கூற்றை சந்தேகிக்கிறோம். ஒரேயொரு இடத்தில் கூறப்பட்ட பொய்யனின் கூற்றை உண்மையாக்குகிறோம்.

 

இந்த எண்ணம் தவக்குல் எனும் இறைப்பற்றுக்கு எதிரானதல்லவா என்று என்றாவது சிந்தித்தோமா?

 

சாமனியர்கள் எவருக்கும் இறைவன் புறத்தில் இருந்து 'மேஜிக்' போன்று அற்புதங்கள் எதுவும் நிகழாது. எனவே, நம்மால் இயன்றவரை முயற்சி செய்து விட்டு, பிறகு இறைவன்மீது பொறுப்பு சாட்டுவதே புத்திசாலிகளின் செயலாகும் என விளங்கி செயல்படுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்-9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...