Search This Blog

Thursday, 8 December 2022

மறுமையில் பரிந்துரை

 

மறுமையில் பரிந்துரை

 

يَوْمَئِذٍ لَا تَنْفَعُ الشَّفَاعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ وَرَضِيَ لَهُ قَوْلًا

 

அந்நாளில் அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதியளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத்தவிர மற்றெவருடைய பரிந்துரையும் பயனளிக்காது. திருக்குர்ஆன்:- 20:109

 

பல்வேறு சிரமங்கள் நிறைந்த மறுமை நாளில் நல்லடியார்கள் இறைநம்பிக்கையுள்ள பாவிகளுக்கு பரிந்துரைச் செய்வார்கள் என்று மறுக்க முடியாத ஆதாரங்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. “யார் பரிந்துரைக்க அல்லாஹ் அனுமதியளிக்கின்றானோ அவர்கள் மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும், யாருக்காகப் பரிந்துரை செய்ய அல்லாஹ் சம்மதிக்கின்றானோ அவர்களுக்காக மட்டுமே பரிந்துரை செய்ய முடியும்” என்ற திருக்குர்ஆனின் கூற்றுப்படி மறுமையில் பரிந்துரை பயனளிக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.

 

மறுமையில் செய்யப்படும் பரிந்துரை ஐந்து வகைப்படும் என்று பல்வேறு ஆதாரங்களிலிருந்து அறிய முடிகிறது.

 

1) மறுமைநாளில் விசாரணைக்காக மக்கள் நின்று கொண்டிருக்கும்போது அந்தச் சூழலின் பயங்கரத்திலிருந்து காப்பாற்றப்படவும், விசாரணை எளிதாக்கப்படவும் செய்யப்படும் பரிந்துரை. இந்தப் பரிந்துரையைச் செய்யும் சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியதாகும்.                    

 

2) விசாரணையின்றி சிலர் சொர்க்கம் செல்வதற்காகச் செய்யப்படும் பரிந்துரை. இதுவும் அருமை நாயகம் (ஸல்) அவர்களால் மட்டுமே செய்யப்படும் பரிந்துரை ஆகும்.                                                         

 

3) நரகத்திற்குச் செல்ல வேண்டிய சிலர், நரகத்திற்குச் செல்லாமல் தடுக்கப்படுவதற்காக நம்முடைய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செய்கின்ற பரிந்துரை. அல்லாஹ் நாடிய மற்ற சிலருக்கும் இந்தப் பரிந்துரை செய்கின்ற வாய்ப்பு கிடைக்கும்.                                                                

 

4) பாவிகளாக உள்ள இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திற்குள் சென்றபின், நரகத்திலிருந்து அவர்கள் மீட்கச் செய்யப்படும் பரிந்துரை. இந்தப் பரிந்துரையைச் செய்யக்கூடிய பாக்கியம் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கும், வானவர்களுக்கும், நல்லடியாளர்களும் கிடைக்கும். இறைமறுப்பாளர்களைத் தவிர, மற்ற அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் இவ்வாறு நரகத்தில் இருந்து மீட்கப்பட்டு விடுவார்கள்.                                     

 

5) சொர்க்கவாசிகளில் சிலருக்குச் சொர்க்கத்தில் தகுதி உயர்வு கிடைப்பதற்காகச் செய்யப்படும் பரிந்துரை. நூல்:- அல்மின்ஹாஜ்

 

அவனது அனுமதியின்றி அவனிடம் பரிந்து பேசுபவர் யாரும் உண்டோ? திருக்குர்ஆன்:- 2:255

 

(அல்லாஹ்) யாருக்கு அனுமதியளித்தானோ அவருக்குத் தவிர வேறு யாருக்காகவும் அவனிடம் பரிந்துரைப்பது எந்த பயனும் தராது. திருக்குர்ஆன்:- 34:23

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَنَا أَوَّلُ النَّاسِ يَشْفَعُ فِي الْجَنَّةِ ) நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன். அறிவிப்பாளர்:- அனஸ் ரலி அவர்கள் நூல்:- முஸ்லிம்-330

 

தம் சமுதாய மக்களில் பாவிகள் சொர்க்கம் செல்வதற்காக, அல்லது சொர்க்கவாசிகளின் தகுதி சொர்க்கத்தில் உயர்வதற்கானப் பரிந்துரை செய்வோரிலேயே முதல் ஆளாக அண்ணல் நபி (ஸல்) அவர்களே இருப்பார்கள். நூல்:- ஃபத்ஹுல் முல்ஹிம்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا ) ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு. நான் என் பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-338

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நாளில்) நான் என் இறைவனை நான் காணும்போது அவனுக்கு (சஜ்தா எனும்) சிரவணக்கம் செய்து விழுவேன். தான் நாடியவரை அல்லாஹ் அப்படியே என்னை (சிரவணக்கத்தில்) விட்டுவிடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து) ( اِرْفَعْ رَأْسَكَ، وَسَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ، وَاشْفَعْ تُشَفَّعْ ) "(முஹம்மதே!) தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று என்னிடம் சொல்லப்படும்.

 

அப்போது நான் என் இறைவனை அவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ்மொழிகளைக் கூறி போற்றுவேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்கு பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விரிப்பான். பிறகு நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பின்னர் மீண்டும் நான் (இதற்காகவே இறைவனிடம்) செல்வேன். அண்ணலார் இவ்வாறு நான்கு முறை கூறினார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-4476

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( شَفَاعَتِي لِأَهْلِ اَلْكَبَائِرِ مِنْ أُمَّتِي ) எனது பரிந்துரை, என் சமுதாயத்தாரில் பெரும்பாவங்கள் புரிந்தோருக்காக (பத்திரப்படுத்தப்பட்டு) உள்ளது.

 

(இந்த நபிமொழியின் இரண்டாம் அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

 

(இந்த நபிமொழியை எனக்கு அறிவித்த) ஜாபிர் (ரலி) அவர்கள், "முஹம்மத் (பின் அலீயே!) பெரும் பாவங்கள் செய்யாமல் இருந்தவர்களுக்காக (யாரும்) பரிந்துரைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என்று கேட்டார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2360

 

இந்த சோதனையான காலத்தில் ஓர் மனிதன் பெரும் பாவங்களைவிட்டு தப்பித்து வாழ்வது என்பது அரிதிலும் அரிதாகி விட்டது என்பதே உண்மை.

 

அதாவது இறைத்தூதர்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் சிறப்புப் பரிசாக ஒரு வாய்ப்பு வழங்கியிருந்தான். "அவர்கள் ஒரு பிரார்த்தனை செய்யலாம். அது உடனே ஏற்கப்படும்" என்பதே அந்தப் பரிசு. மற்றெல்லா இறைத்தூதர்களும் உலகத்திலேயே அந்த வாய்ப்பைப் பயன்படுத்திவிட்டனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே அந்த வாய்ப்பை மறுமையில் பயன்படுத்த உள்ளார்கள். தம் சமுதாயத்தில் பெரும் பாவங்கள் செய்த காரணத்தால் நரக தண்டனை பெற்றவர்களை மன்னித்து நரகத்திலிருந்து விடுவிக்குமாறு அல்லாஹ்விடம் அண்ணலார் மன்றாடுவார்கள். அதை அல்லாஹ்வை ஏற்பான். இது அண்ணலாருக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்பம்சமாகும்.

 

மேலும், பெரும் பாவமே செய்யாதவர்களுக்கு, பெரும் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகப் பரிந்துரை செய்ய வேண்டிய அவசியமோ தேவையோ ஏற்படாது. அத்துடன் இவர்கள் செய்த சிறு பாவங்களுக்குப் பரிகாரமாக இவர்கள் செய்த நல்லறங்கள் அமைந்துவிடும். இருப்பினும் சொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தில் தகுதிகள் உயர பரிந்துரை தேவை.  நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் இறைவனிடமிருந்து (வானவர்) ஒருவர் என்னிடம் வந்து, என் சமுதாயத்தாரில் பாதிப்பேரை சொர்க்கத்திற்கு அனுப்புவது, அல்லது (பாவிகளுக்கு) பரிந்துரைப்பது ஆகிய இரண்டில் ஏதேனுமொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு எனக்கு விருப்ப உரிமையளித்தார். நான் பரிந்துரை செய்வதையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்காமல் இறந்தவர்களுக்கே அப்பரிந்துரை கிடைக்கும். அறிவிப்பாளர்:- அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2365

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ( إِنِّي حَرَّمْتُ مَا بَيْنَ لاَبَتَيِ الْمَدِينَةِ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ  ) "மதீனாவின் இடர்பாடுகளை சகித்துக் கொண்டு (அங்கேயே வாழ்ந்து) இறந்து போகும் மனிதருக்கு மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவராக அல்லது சான்றுரைப்பவராக இருப்பேன் அவர் முஸ்லிமாக இருந்தால்!" என்று கூறினார்கள்.   அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்    நூல்:- முஸ்லிம்-2664

 

வானவர்கள்

 

வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். அல்லாஹ் யாரை நாடி திருப்தி கொண்டு அவருக்கு (வானவர்கள் பரிந்துரைக்கலாம் என) அனுமதியளிக்கிறானோ அவருக்கே தவிர, (மற்றெவருக்கும்) அவர்களின் பரிந்துரையை எந்தப் பயனும் தராது. திருக்குர்ஆன்:- 53:26

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நாளில்) என் சமுதாயத்தார் மூன்று பிரிவினராக இருப்பார்கள். ஒரு பிரிவினர் விசாரணையோ வேதனையோ எதுவுமின்றி சொர்க்கம் செல்வார்கள். மற்றொரு பிரிவினர் எளிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பின்னர் சொர்க்கம் செல்வார்கள். இன்னொரு பிரிவினர் துருவித்துருவி விசாரணை செய்யப்பட்டு, வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படுவார்கள்.

 

பின்னர் அங்கு வானவர்கள் வந்து, ( وَجَدْنَاهُمْ يَقُولُونَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ )  "(உலகில்) இவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன் என்று கூறியதை நாங்கள் கண்டோம்" என்று (பரிந்துரை செய்யும் விதமாக) கூறுவார்கள்.

 

அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ( صَدَقُوا، لَا إِلَهَ إِلَّا أَنَا، أَدْخِلُوهُمُ الْجَنَّةَ بِقَوْلِهِمْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ وَاحْمِلُوا خَطَايَاهُمْ عَلَى أَهْلِ النَّارِ )  "இவர்கள் சொன்னது உண்மையே. என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று சொல்லிவிட்டு, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன் என்று கூறியதால் இவர்களையும் சொர்க்கத்திற்குள் அனுப்புங்கள்; இவர்களின் குற்றங்களை நரகவாசிகள்மீது சுமத்துங்கள்" என்று கூறுவான். நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர் ஃபாத்திர் வசனம்-32

 

மார்க்க அறிஞர்கள்

 

அவனை விட்டுவிட்டு எவைகளை இவர்கள் (இறைவனென) அழைக்கிறார்களோ அவைகள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்துரை செய்யும் சக்தி பெறாது. ஆனால் சத்தியத்தைக் கொண்டு யார் சாட்சியம் அளித்தார்களோ சரியான அறிவுஞானம் உடையவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர! (அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் பரிந்து பேசுவார்கள்.) திருக்குர்ஆன்:- 43:86

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ فَأَحَلَّ حَلاَلَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الْجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ وَجَبَتْ لَهُ النَّارُ )  குர்ஆனை ஓதி, அதை மனனமிட்டு அதில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் தடை செய்யப்பட்டிருப்பதைத் தடை செய்யப்பட்டதாகவும் ஏற்றுக்கொண்டால், அதற்காக அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிக்கிறான். மேலும் அவருடைய குடும்பத்தாரில் நரகம் உறுதியாகிவிட்ட பத்துப் பேருக்காக அவர் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்கின்றான். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2823, இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், தாரமீ

 

ஒருநாள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகுந்த மதிப்புக்குரியவர்கள் (அதிகம்) திருக்குர்ஆன் ஓதியவர்களே ஆவார்கள். அச்சமயம் அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் "விசாரணைக்காக (அதிகம்) திருக்குர்ஆன் ஓதியவர்களைத் தவிர மற்ற அனைவரையும் அழைத்து வா! என்று உத்தரவிடுவான். அவர் அழைப்பார். அவரது அழைப்பை ஏற்று அனைவரும் அணி அணியாய் வந்து நின்று விடுவார்கள்.

 

சிறிது நேரத்திற்கு பின்னர் (அதிகம்) திருக்குர்ஆன் ஓதியவர்களை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வரச்செய்து அவர்களிடம் 'உங்களின் குரலை உயர்த்தி ஓதுங்கள்' என்று அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிடுவான். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ் எந்த அத்தியாயத்தை அவரவருக்கு நினைவுப்படுத்துகின்றானோ அதை அவர்கள் ஓதுவார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவரவரின் குரல் இனிமை, அச்ச உணர்வு, சிந்தித்து ஓதும் திறன் ஆகியவற்றைக் கவனித்து அவரவரின் அந்தஸ்தை அல்லாஹ் அதிகப்படுத்துவான்.

 

அதன் பின்னர் அவர்களை நோக்கி "எனது குடும்பத்தினரே! நீங்கள் தான் உலகில் வாழ்ந்த அனைவரையும்விட தலை சிறந்தவர்கள் என்பதை அறிவீர்களா? என்று வினவுவான். அதற்கு அவர்கள் ஆம்!" என்பார்கள். அதன் பின்னர்; அந்த விசாரணை மன்றத்தில் நிற்கும் மனிதர்களில் உங்களுக்கு அறிமுகமானவர்கள் அனைவரையும் (பரிந்துரை செய்து) உங்களுடன் அழைத்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் செல்லுங்கள்" என்று உத்தரவிடுவான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள்   நூல்:- துர்ரத்துந் நாசிஹீன்

 

உயிர்த்தியாகிகள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلشهيدُ يَشفَعُ فِي سَبعِينَ مِن أَهلِ بَيتِهِ )  (மறுமை நாளில் ஷஹீது எனும்) ஓர் உயிர்த்தியாகி தமது குடும்பத்தாரில் எழுபது பேருக்கு பரிந்துரை செய்வார். (அது ஏற்றுக்கொள்ளப்படும்.) அறிவிப்பாளர்:-  அபூ தர்தா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத், திர்மிதீ-1586, இப்னுமாஜா-2789, முஸ்னது அஹ்மத்-16553, ஸஸீஹ் ஜாமிஉ-3747

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் இறைத்தூதர்கள், மார்க்க அறிஞர்கள், உயிர்த் தியாகிகள் ஆகிய மூன்று சாராரும் பரிந்துரை செய்வார்கள். நூல்:- இப்னுமாஜா, பைஹகீ

 

ஹாஜியார்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلْحَاجُّ يَشْفَعُ فِي أَرْبَعِ مِائَةِ أَهْلِ بَيْتٍ، أَوْ قَالَ مِنْ أَهْلِ بَيْتِهِ )  (மறுமை நாளில், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றிய) ஒரு ஹாஜியார் நானூறு குடும்பத்தினர்களுக்கு பரிந்துரை செய்வார். (அது கொள்ளப்படும்.) அல்லது, அவருடைய குடும்பத்தாரில் நானூறு பேருக்கு பரிந்துரை செய்வார். (அது கொள்ளப்படும்.) அறிவிப்பாளர்:- அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- பஸ்ஸார், அத்தர்ஙீபு வத்தர்ஹீபு

 

இதுபோன்ற நபிமொழிகளில் வரும் பத்து, எழுபது, நானூறு என, இது போன்ற எண்ணிக்கையின பொருள்: அந்த எண்ணிக்கை அளவுள்ள மனிதர்களின் பாவ மன்னிப்பு பற்றி அல்லாஹ் வாக்களித்து விட்டான் என்பதுதான். அதைவிட அதிகம் முடியாது என்பது இதன் பொருளல்ல. அல்லாஹ்வின் தயாளத்தன்மைக்கு முன்பு எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல.

 

இறைநம்பிக்கையுள்ள நண்பன்

 

அவன் விரும்பியவர்களுக்கன்றி மற்றெவருக்கும் இவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள். திருக்குர்ஆன்:- 21:28

 

ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை. அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை. நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் இறைநம்பிக்கையாளர்களாகி விடுவோமே! (என்றும் கூறுவார்கள்.) திருக்குர்ஆன்:- 26:100,101,102

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்காணும் திருவசனங்களுக்கு இவ்வாறு விளக்கம்) கூறினார்கள்.

 

ஒரு மனிதர் சொர்க்கத்தில் நுழைந்த பிறகு, ( مَا فَعَلَ صَدِيقِي فَلَانٌ )என்னுடைய இந்த நண்பன் நிலை என்ன ஆனது?” என்று கவலை கொள்கிறார். ஆனால் அவரது நண்பனோ நரகத்தில் இருக்கிறான். இதை அறிந்த சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் ( أَخْرِجُوا لَهُ صَدِيقَهُ إِلَى الْجَنَّةِ ) "அவரது நண்பனை சொர்க்கத்திற்கு அழைத்து வாருங்கள்" என்று வானவர்களிடம் கூறுகிறான். அதனால் நரகத்தில் எஞ்சியவர்: ( فَمَا لَنَا مِنْ شَافِعِينَ وَلَا صَدِيقٍ حَمِيمٍ ) "எங்களுக்கு (இதுபோன்ற) எந்த பரிந்துரையாளர்களும் இல்லை, நெருக்கமான நண்பரும் இல்லையே என்று புலம்புவார்கள்".

 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் ஹசன் அல்பசரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ( اِسْتَكْثِرُوا مِنَ الْأَصْدِقَاءِ الْمُؤْمِنِينَ فَإِنَّ لَهُمْ شَفَاعَةً يَوْمَ الْقِيَامَةِ )  உலகில் இறைநம்பிக்கையுள்ள (முஸ்லிமான நல்ல) நண்பர்களையே அதிகமாக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்களால் (உங்களுக்கு) மறுமை நாளில் பரிந்துரை உள்ளது. நூல்:- தஃப்சீர் அல்பஙவீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில், சில நல்லடியார்கள், ( أَيْ رَبَّنَا ، عِبَادٌ مِنْ عِبَادِكَ كَانُوا مَعَنَا فِي الدُّنْيَا ، يُصَلُّونَ صَلاتَنَا وَيُزَكُّونَ زَكَاتَنَا ، وَيَصُومُونَ صِيَامَنَا ، وَيَحُجُّونَ حَجَّنَا ، وَيَغْزُونَ غَزَوْنَا لا نَرَاهُمْ ؟ ) "எங்கள் இறைவா! உன்னுடைய அடியார்களில் சிலர் எங்களோடு தான் உலகத்தில் வாழ்ந்தார்கள். அவர்களும் எங்களைப் போன்று தொழுதார்கள்; ஸகாத் கொடுத்தார்கள்; நோன்பு நோற்றார்கள்; ஹஜ் செய்துள்ளார்கள்; அறப்போரில் கலந்து கொண்டார்கள். என்றாலும் அவர்கள், இங்கு (சொர்க்கத்தில்) நாங்கள் பார்க்கவில்லையே?" கூறுவார்கள்.

 

அப்போது இறைவன், ( اِذْهَبُوا إِلَى النَّارِ ، فَمَنْ وَجَدْتُمْ فِيهَا مِنْهُمْ ، فَأَخْرِجُوهُ ) "நீங்கள் நரகத்திற்கு சென்று, நீங்கள் குறிப்பிடுபவர்கள் அங்கு இருந்தால் அவர்களை வெளியேற்றி கொண்டு வாருங்கள்" என்று கூறுவான். அறிவிப்பாளர்:- அபூசஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்

 

சிறு குழந்தைகள்

 

அளவற்ற அருளாளனிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர (மற்ற) எவரும் (எவருக்கும்) பரிந்து பேச சக்தி பெறமாட்டார். திருக்குர்ஆன்:- 19:87

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ يَتَلَقَّى أَحَدُهُمْ أَبَوَيْهِ فَيَأْخُذُ بِثَوْبِهِ أَوْ بِيَدِهِ فَلاَ يَنْتَهِي حَتَّى يُدْخِلَهُ اللَّهُ وَأَبَاهُ الْجَنَّةَ ) குழந்தைகள் சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவர். (மறுமை நாளில் முஸ்லிமான) குழந்தைகளில் ஒன்று தனது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை, அல்லது அவரது கையைப் பிடித்துக் கொள்ளும். பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது. (பரிந்துரை செய்து கொண்டே இருக்கும்). அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5132

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( إِنَّ السِّقْطَ لَيُرَاغِمُ رَبَّهُ إِذَا أَدْخَلَ أَبَوَيْهِ النَّارَ ‏.‏ فَيُقَالُ أَيُّهَا السِّقْطُ الْمُرَاغِمُ رَبَّهُ أَدْخِلْ أَبَوَيْكَ الْجَنَّةَ ‏.‏ فَيَجُرُّهُمَا بِسَرَرِهِ حَتَّى يُدْخِلَهُمَا الْجَنَّةَ )

குறை மாத(த்தில் பிறந்த) சிசு தன் பெற்றோரை இறைவன் நரகத்தில் நுழையச் செய்யும் போது (தன் பெற்றோருக்காக) தன் இறைவனிடம் (அடம்பிடித்து பரிந்துரை செய்து) வாதாடும். அப்போது, "தன் இறைவனிடம் அடம்பிடிக்கும் குழந்தாய்! நீ உன் பெற்றோரை சொர்க்கத்தில் நுழையச் செய்துகொள்!" என்று கூறப்படும். உடனே அந்த சிசு தன் தொப்புள் கொடியால் அவ்விருவரையும் இழுத்துச் சென்று சொர்க்கத்தில் நுழைவிக்கும்.  அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1597, முஸன்னஃப் இப்னு அபீஷைபா, முஸ்னதுல் பஸ்ஸார், முஸ்னது அபீ யஅலா

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கத்தின் வாசலில் தனது பெற்றோரை எதிர்பார்த்து கிடக்கும் (முஸ்லிமான) "கருவின் விழுக்கட்டி"யைக் கொண்டும்கூட நான் பெருமைக் கொள்வேன். அந்த விழுக்கட்டியை நோக்கி, "நீ சொர்க்கம் செல்" எனக் கூறப்படும். அப்போது அந்த விழுக்கட்டி, "என் இறைவா! எனது பெற்றோர்கள் எங்கே செல்வார்கள்? என்று (அவர்களையும் சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வாயாக! என்று பரிந்துரை செய்யும் விதமாக)  கேட்கும். அப்போது அதனிடம், "சரி நீயும் உன் பெற்றோரும் சொர்க்கம் செல்லுங்கள்" என்று சொல்லப்படும். அறிவிப்பாளர்:- முஆவியா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صَلُّوا عَلَى أَطْفَالِكُمْ فَإِنَّهُمْ مِنْ أَفْرَاطِكُمْ ) இறந்துவிட்ட உங்கள் குழந்தைகளுக்காக (ஜனாஸா) தொழுகை நடத்துங்கள். அவர்கள் முன்கூட்டியே சென்று (உங்களுக்காக) முன்னேற்பாடு செய்வோரில் அடங்குவர். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1498

 

முன்கூட்டியே சென்று முன்னேற்பாடு செய்வோர் என்பதைக் குறிக்க இந்த நபிமொழியில் "அஃப்ராத்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதன் ஒருமை "ஃபரத்" என்பதாகும். பயணத்தில் ஒரு கூட்டத்தாருக்காக முன்கூட்டியே சென்று தண்ணீர் முதலிய ஏற்பாடுகளைச் செய்து வைத்திருப்பவரையே இது குறிக்கும். (தய்சீர் பி ஷர்ஹி ஜாமிஉஸ் ஸஙீர்) இங்கு மறுமை நலனுக்காக உங்களுக்கு முன்பே செல்வோர் என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது.

 

திருக்குர்ஆன் மற்றும் நோன்பு

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ ) குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதியவருக்கு அது மறுமை நாளில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். ( اِقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا ) இரு ஒளிச்சுடர்களான 'அல்பகரா' மற்றும் 'ஆலு இம்ரான்' ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோர் வந்து தம்மோடு தொடர்புடையவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும்.       நூல்:- முஸ்லிம்-1470

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن شَفَّعَ لَهُ القُرانُ یَومَ القِیَامَةِ فَقَد نَجَا ) "யாருக்கு மறுமை நாளில் திருக்குர்ஆன் பரிந்துரை செய்கிறதோ அவர் (மறுமையின் வேதனைகளிலிருந்து) வெற்றி பெற்றவராவார்.                                    நூல்:- ஷரஹுல் ஷாதிபிய்யா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குர்ஆனில் முப்பது வசனங்களையுடைய ஓர் அத்தியாயம் உண்டு. அதை ஓதுபவருக்கு மன்னிப்பு கிடைக்கும் வரையில் அவருக்காகப் பரிந்துரை செய்து கொண்டிருக்கும். அதுதான் தபாரக்கல்லதீ பியதி ஹில் முல்க் எனும் (67வது) அத்தியாயம்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நசாயீ, இப்னுமாஜா

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குர்ஆனில் ஓர் அத்தியாயம் உள்ளது. தன்னை ஓதக் கூடியவருக்காக (அல்லாஹ்விடத்தில்) அது வாதாடும். (அப்படி வாதாடி) அது அவரைச் சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும். அதுதான்  தபாரக்கல்லதீ பியதி ஹில் முல்க் எனும் (67வது) அத்தியாயம். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, ஸஹீஹுல் ஜாமிஅ இமாம் அல்பானீ, தஃப்சீர் இப்னு கஸீர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهْوَةَ فَشَفِّعْنِي فِيهِ ) நிச்சயமாக நோன்பும், குர்ஆனும் மறுமை நாளில் அடியானுக்கு பரிந்துரை செய்யும். "என் இறைவா! நான் அவரின் உணவையும், இச்சையையும் தடுத்து விட்டேன். ஆகவே, அவரின் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!" என்று நோன்பு கூறும்.

 

( وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ: فَيُشَفَّعَانِ لَهُ ) "என் இறைவா! நான் அவருடைய இரவுத் தூக்கத்தைத் தடுத்து விட்டேன். (குர்ஆனை ஓதி, தொழுவதால் அவருடைய தூக்கம் தடைப்பட்டது.) ஆகவே, அவரின் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!" என்று குர்ஆன் கூறும். அறிவிப்பாளர்:- உபைதுல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, ஹாகிம், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-298

 

உதவி ஒத்தாசைக்கு ஆளில்லாத மறுமை நாளின் விசாரணை மன்றத்தில் குர்ஆனும், நோன்பும் மனிதனுக்கு பரிந்துரை செய்ய முன் வருவது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும். எனவே, இதுபோன்ற வணக்கங்களில் அதிக ஆர்வத்தோடு ஈடுபடவேண்டும்.  

 

இறைமறுப்பாளருக்காக

 

அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான், "அல்லாஹ்வின் தூதரே! (உங்களின் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!" என்று கேட்டேன்.

 

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள், ( هُوَ فِي ضَحْضَاحٍ مِنْ نَارٍ، وَلَوْلاَ أَنَا لَكَانَ فِي الدَّرَكِ الأَسْفَلِ مِنَ النَّارِ )  "ஆம்; அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் (அதாவது எனது பரிந்துரை) இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-3883, முஸ்லிம்-357

 

திருக்குர்ஆனின் 35:18 வது வசனத்திற்கு இக்ரிமா (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கமாவது: ஓர் இறைமறுப்பாளர் இறைநம்பிக்கையாளரைப் பிடித்துக்கொண்டு, "இறைநம்பிக்கையாளரே! (உலகில்) நான் உனக்கு ஓர் உதவி செய்திருக்கிறேன். உலகில் உன்னோடு எப்படியெல்லாம் நடந்து கொண்டேன் என்பது உனக்குத் தெரியும். இன்று உன்னிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது" என்று கெஞ்சுவார்.

 

அப்போது இறைநம்பிக்கையாளர், அந்த இறைமறுப்பாளருக்காகத் தம் இறைவனிடம் பரிந்துரைத்துக்கொண்டே இருப்பார். இறுதியாக, அல்லாஹ் அந்த இறைமறுப்பாளரை, (நரகத்தில்) அவர் இருக்கும் நிலையிலிருந்து குறைவான (வேதனை) நிலைக்கு மாற்றுவான். ஆனாலும், அவர் நரகத்தில் தான் இருப்பார். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

எனவே, நாம் மறுமை நாளில்  அருமை நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்கு தகுதியான நன்மக்களாகவும், நாம் பிறருக்கு பரிந்துரைப்பவர்களாகவும் நம்மை அல்லாஹுத்தஆலா ஆக்குவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...