காசு, பணம், துட்டு, மணி
الَّذِي
جَمَعَ مَالًا وَعَدَّدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ
அவன் பணத்தை சேகரிக்கிறான், எண்ணி எண்ணிப் பார்த்துக்
கொள்கின்றான், தனது பணம் நிலையான வாழ்வை
தனக்கு பெற்றுத்தரும் என்று எண்ணுகிறான். திருக்குர்ஆன்:- 104:2,3
பணம், அது ஓர் இனிமையானது. ஆனால், அது ஆளைப் பொருத்து மாறுபடலாம்.
சிலர் பணத்தை நேசிக்கின்றனர். அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றனர். சிலர் அதை நன்கு பயன்படுத்துகின்றனர். சிலர் வீணடிக்கின்றனர். சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர். சிலர் வெறுமனே ஆசைப்படுகின்றனர்.
பணம் நமக்கு நன்மைகளையும் தரலாம். தீமைகளையும் தரலாம். எவ்வளவு
பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும்
கிடையாது. நாம் பல ஆண்டுகளாக இரவும், பகலும் சிரமப்பட்டு உழைத்து
சம்பாதித்த பணத்தை நாம் போகும்போது, அதை எடுத்துப் போக முடியாது.
பணம் பேச ஆரம்பித்தால் உலகின் அனைத்து மொழிகளும் அமைதி
ஆகிவிடும். பணம் பேசவும் வைக்கும். பேசும் வாயை மூடவும் வைக்கும்.
இறைவழிபாடுகளில் கவனம் தேவை
அவர்களுடைய வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் அவர்கள்
அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவுகூர்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பி விடாது.
திருக்குர்ஆன்:- 24:37
சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை என் தந்தை
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கடைத்தெருவில் இருந்தார்கள். அப்போது
தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. உடனே மக்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு
பள்ளிவாசலுக்குள் சென்றுவிட்டனர்.
இதை பார்த்த (என் தந்தை) இப்னு உமர் (ரலி) அவர்கள், "(24:37) இந்த வசனம் இவர்கள் விஷயத்தில்
தான் அருளப்பெற்றது" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் அந்நூர் வசனம் -37
அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது. இதோ நான் இந்த பாதையில்
நின்று கொண்டு வியாபாரம் செய்கின்றேன். ஒவ்வொரு நாளும் முன்னூறு பொற்காசுகள்
எனக்கு இலாபமாகக் கிடைக்கின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் (பாங்கொலி கேட்டவுடன்) தொழுகைக்காகப்
பள்ளிவாசலுக்குச் சென்றுவிடுவேன். இதோ பாருங்கள்! வியாபாரம் அனுமதிக்கப்படவில்லை
என்று நான் சொல்லமாட்டேன். மாறாக, உயர்ந்தோன் அல்லாஹ் (24:37) இந்த வசனத்தில் யாரைப் பற்றி குறிப்பிடுகின்றானோ அவர்களில்
நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். நூல்:- தஃப்சீர் இப்னு
அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் அந்நூர்
வசனம் -37
தொழுகை, நோன்பு போன்ற கடமையான
இறைவழிபாடுகளை செய்யாமல் பணம் காசு சம்பாதிப்பதில் குறியாக இருப்பது சரியல்ல.
அப்படி சம்பாதிக்கப்பட்ட பணத்தில் நிச்சயமாக அருள்வளம் இருக்கப் போவதில்லை.
செல்வம் ஒரு சோதனையே ஆகும். அது இருந்தாலும் தொல்லை
இல்லாவிட்டாலும் தொல்லை. செல்வத்தை தேடும் துடிப்பில் மனிதன் இருக்கும்போது
இறைவழிபாட்டை மறக்கிறான். அதுமட்டுமின்றி எப்படியாவது பொருளீட்டிவிட வேண்டும் என்ற
உந்துதலில் தடுக்கப்பட்ட வழிகளில் செல்லவும் அவன் தயங்குவதில்லை.
பணத்தை கையில் பிடித்து, கொஞ்சம் தள்ளிவைத்து யோசித்துப்
பார்த்தால், அடேங்கப்பா... இந்த பணத்துக்கு
இவ்வளவு பெயர்களா? என்று எண்ணத் தோன்றுகிறது.
யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை, கல்விக்கூடங்களில் கட்டணம், திருமணத்தில் (மஹர் எனும்)
மணக்கொடை அல்லது வரதட்சணை, திருமண விலக்கில் (குலாவில்)
ஜீவனாம்சம், விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு, ஏழைகளுக்குக் கொடுத்தால் தர்மம், திருப்பித் தர வேண்டும் என
யாருக்காவது கொடுத்தால் அது கடன், திருப்பித்
தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது அன்பளிப்பு, பொதுக்காரியங்களுக்கு
விரும்பிக் கொடுத்தால் நன்கொடை, நீதிமன்றத்தில்
செலுத்தினால் அபராதம், அரசுக்குச் செலுத்தினால் வரி, அரசுப் பொது தர்ம
ஸ்பானங்களுக்கு கொடுத்தால் நிதி, செய்த
வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம், தினமும் கிடைப்பது கூலி, பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம், சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு
வாங்குவதும் கொடுப்பதும் லஞ்சம், கடன்
வாங்கினால் அத்தொகைக்கு அசல், வாங்கியக்
கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி, தொழில் தொடங்கும்போது போடுவது அதற்கு முதலீடு, தொழிலில் கிடைக்கும்
வருமானத்துக்கு இலாபம், ஹோட்டலில் நல்குவது டிப்ஸ், இவ்வாறு பல பெயர்களில் கைமாறும்
இந்தப் பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இல்லை.
பேணுதல் வேண்டும்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் ஓர் உணவுதானியக் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைந்தார்கள்.
அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது.
உடனே நபியவர்கள், ( ما
هذا يا صاحِبَ الطَّعامِ؟ ) “உணவு
(தானியத்தின்) உரிமையாரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது. நாயகமே!" என்றார்.
அப்போது நபியவர்கள், ( أفَلَا
جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ؟ مَن غَشَّ فَلَيسَ مِنِّي ) “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக்
கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று
கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-164
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِنَّ هَذَا الْمَالَ حُلْوَةٌ، مَنْ أَخَذَهُ بِحَقِّهِ
وَوَضَعَهُ فِي حَقِّهِ، فَنِعْمَ الْمَعُونَةُ هُوَ، وَمَنْ أَخَذَهُ بِغَيْرِ
حَقِّهِ، كَانَ الَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ ) இந்த செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில்
சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும்.
யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப்
போன்றவராவார். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அவர்கள் நூல்:- புகாரீ-6427, திர்மிதீ-2296
எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். அது ஒன்றும்
தவறில்லை. ஆனால், ஹலால் ஹராம் எனும் மார்க்கம்
கூறும் எல்லைகளை கண்டு கொள்ளாமல் பணம் காசு சம்பாதிப்பது நிச்சயமாக பாவச்
செயலாகும்.
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு முறை என்னிடம்)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( إِنَّ الأَكْثَرِينَ هُمُ الأَقَلُّونَ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ
مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ـ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ وَمِنْ
خَلْفِهِ ـ وَقَلِيلٌ مَا هُمْ ) (இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே
மறுமைநாளில் நற்பலன் குறைந்தவர்கள் ஆவர்; இப்படி இப்படியெல்லாம்
(இறைவழியில் தமது செல்வத்தைச்) செலவிட்டவர்களைத் தவிர என்று கூறி, தமது வலப் பக்கமும் இடப் பக்கமும் பின் பக்கமும் சைகை
செய்தார்கள். "(ஆனால்) இத்தகையவர்கள் சொற்பமானவர்களே" என்றும்
கூறினார்கள். நூல்:- புகாரீ-6444
அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான். திருக்குர்ஆன்:- 16:71
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِكُلِّ أُمَّةٍ فِتْنَةً وَفِتْنَةُ أُمَّتِي الْمَالُ ) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும்
ஒருவகை சோதனை உண்டு. என் சமுதாயத்தாரின் சோதனையே செல்வம் தான். நூல்:- திர்மிதீ-2258, ஹாகிம், இப்னு ஹிப்பான்
அச்சப்படுதல்
அவர்களுக்குச் சொல்லப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள்
மறந்துவிடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும்
நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக
கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள்
ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத்
திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கையை
இழந்துவிட்டனர். திருக்குர்ஆன்:- 6:44
இறைநேசர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரி: 247-334) உலகச்
செல்வங்கள் நிரப்பமாக வழங்கப்பட்டவரைக் கண்டால், ( اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ، الْحَمْدُ
لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ ) "இறைவா! நான் உன்னிடம் மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும்
கேட்கின்றேன். அவருக்கு வழங்கப்பட்ட சோதனையிலிருந்து எனக்கு ஆரோக்கியத்தை வழங்கிய
அல்லாஹ்விற்கே எல்லா புகழும்!” என்று சொல்வார்கள். நூல்:- மிர்காத்துல் மஃபாதீஹ்
திரண்ட செல்வத்தின் மூலம் சிலர் வழிகெட்டுப்போகக்கூடிய
அபாயம் இருக்கிறது.
நான் தொட்டதெல்லாம் துவங்குகிறது என்று பெருமை
கொள்ளக்கூடாது. பல வழிகளில் இருந்து நமக்கு செல்வம் வந்து சேருமேயானால், அது குறித்து மகிழ்ச்சிகொள்வதைவிட அச்சம் கொள்ளவேண்டும்.
காரணம், இந்த செல்வத்தால் நாம்
சோதிக்கப்படலாம். அல்லது செல்வத்தால் நம்மிடம் கெட்ட குணங்கள் அதிகரித்து, அதனால் இறைவன் நம்மை
அழிக்கக்கூடும் என்று எண்ண வேண்டும். எனவேதான் இஸ்லாமிய வரலாற்றில் நல்லோர்கள்
பலரும் தமக்கு செல்வம் அதிகரிப்பதை எண்ணி அச்சம் கொண்டனர்.
திருத்தலாம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (முற்காலத்தில்) ஒருவர் நான்
இன்றிரவு (இரகசியமாக) தர்மம் செய்யப்போகிறேன் எனக் கூறி (இரவில்) தர்மப் பொருளுடன்
வெளியே வந்து (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார்.
காலையில் மக்கள் மூலம் இதனை அறிந்த அவர், இறைநாட்டத்தை ஏற்றுக்கொண்டவராக இறைவனை புகழ்ந்து விட்டு
(முன் செய்தது வீணாகிவிட்டது என்றெண்ணி) இரண்டாவது நாள் இரவில் தர்மப் பொருளுடன்
வெளியே வந்து (தெரியாமல்) அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார்.
காலையில் மக்கள் மூலம் இதனை அறிந்த அவர், இறைநாட்டத்தை ஏற்றுக்கொண்டவராக இறைவனை புகழ்ந்து விட்டு
(இதுவும் வீணாகிவிட்டது என்றெண்ணி) மூன்றாவது நாள் இரவில் தர்மப் பொருளுடன் வெளியே
வந்து (தெரியாமல்) அதை ஒரு திருடனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள்
மூலம் இதனை அறிந்த அவர், இறைநாட்டத்தை ஏற்றுக்கொண்டவராக
இறைவனை புகழ்ந்தார்.
பிறகு (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு
(பின்வருமாறு) கூறப்பட்டது. உமது தர்மம் ஏற்கப்பட்டு விட்டது. விபச்சாரிக்கு நீர்
கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம்.
பணக்காரனுக்கு கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று அல்லாஹ் தனக்கு
வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்கு கொடுக்கப்பட்ட தர்மத்தால்
அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1421, முஸ்லிம்-1856, நசாயீ-2476
(ஹலால் எனும்) அனுமதிக்கப்பட்ட
பொருளாதாரம் திருந்தாதவர்களையும் திருந்தச் செய்தது. மன மாற்றத்தை உருவாக்கியது.
பொருளாதாரம் இருந்தால் மட்டும் தான் ஸக்காத் மற்றும் ஹஜ்
போன்ற உயரிய வழிபாடுகளை நிறைவேற்றமுடியும். பொருளாதாரம் இருந்தால் மட்டுமே மணமுடிக்கவும், மற்றும் குழந்தைகளைப் பெற்று, முறையாக வளர்க்கவும் இயலும்.
விட்டுவிட வேண்டாம்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்
அய்யூப் (அலை) அவர்கள் தமது ஆடை முழுவதையும் களைந்துவிட்டு
குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளிகள் கூட்டம்
வந்து விழுந்தது. உடனே அவர்கள் அதைத் தமது துணியில் எடுக்கலானார்கள்.
அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ( يَا
أَيُّوبُ، أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى ) "அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற
இந்தச் செல்வத்தைவிட்டு உம்மை நான் தன்னிறைவு பெற்றவராக ஆக்கவில்லையா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், ( بَلَى
يَا رَبِّ، وَلَكِنْ لاَ غِنَى لِي عَنْ بَرَكَتِكَ ) "ஆம்; (உண்மைதான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளத்திலிருந்து நான் தேவையற்றவன் அல்லவே!"
என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-3391
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَصَابَ مِنْ شَىْءٍ فَلْيَلْزَمْهُ ) ஒருவருக்கு ஏதேனும் (வேலை
வாய்ப்புக்கள்) வகையில் வாழ்வாதாரம் கிடைத்தால் அதை அவர் பெற்றுக் கொள்ளட்டும்!
(விட்டுவிட வேண்டாம்!). அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2138, பைஹகீ
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் சிரியாவுக்கும், மிஸ்ருக்கும் வியபாரப் பொருள்களை அனுப்பிவைத்தேன். ஒருநாள்
நான் இராக்கிற்கு (பொருள்களை) அனுப்பினேன். எனவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம்
வந்து, "இறைநம்பிக்கையாளர்களின்
அன்னையே! நான் சிரியாவுக்கு வியாபாரப் பொருள்களை அனுப்பிக் கொண்டிருந்தேன்.
தற்போது நான் இராக்கிற்குப் பொருள்களை அனுப்ப உள்ளேன்" என்று கூறினேன்.
அதற்கு அன்னையவர்கள் ( لاَ تَفْعَلْ مَالَكَ وَلِمَتْجَرِكَ ) "(இவ்வாறு) செய்ய
வேண்டாம். உமக்கும் (ஏற்கனவே நீர் செய்து வந்த) உம்முடைய வியாபாரத் தளத்திற்கும்
என்னவாயிற்று? அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( إِذَا
سَبَّبَ اللَّهُ لأَحَدِكُمْ رِزْقًا مِنْ وَجْهٍ فَلاَ يَدَعْهُ حَتَّى
يَتَغَيَّرَ لَهُ أَوْ يَتَنَكَّرَ لَهُ ) 'உங்களில் ஒருவருக்கு ஏதேனும் வகையில் அல்லாஹ் வாழ்வாதாரத்தைப் பெறக்
காரணத்தை ஆக்கிவிட்டால், அது அவருக்கு மாறும் வரை அல்லது
மறுக்கும் வரை அதை அவர் விட்டுவிட வேண்டாம்' என்று கூறியதை நான்
கேட்டுள்ளேன்" என்றார்கள். நூல்:- இப்னுமாஜா-2139, முஸ்னது அஹ்மத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( عَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالاً وَعِلْمًا فَهُوَ يَتَّقِي فِيهِ
رَبَّهُ وَيَصِلُ فِيهِ رَحِمَهُ وَيَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا وَعَبْدٍ
رَزَقَهُ اللَّهُ عِلْمًا وَلَمْ يَرْزُقْهُ مَالاً فَهُوَ صَادِقُ النِّيَّةِ
يَقُولُ لَوْ أَنَّ لِي مَالاً لَعَمِلْتُ بِعَمَلِ فُلاَنٍ فَهُوَ بِنِيَّتِهِ
فَأَجْرُهُمَا سَوَاءٌ ) அல்லாஹ் ஒரு மனிதருக்கு
செல்வத்தையும், அறிவு ஞானத்தையும் வழங்கினான்.
அவர் அவ்விரண்டையும் முறைப்படி செலவழிக்கிறார். அதன் மூலம் அவர் தம் இரத்த உறவுகளை
அனுசரித்தார். அதில் அல்லாஹ்வுக்கு உரிமை இருப்பதை உணர்ந்(து செயல்பட்டு வந்)தார். மற்றொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கினான் செல்வத்தை
வழங்கவில்லை. இவர் "அவரைப் போன்று எனக்கும் செல்வம் இருந்தால் நானும் அவரைப்
போன்று முறைப்படி (நல்ல வழியில்) செலவழிப்பேன்" என்று எண்ணுகிறார். (அதனால்)
அவ்விருவரும் நன்மையைப் பெறுவதில் சமமானவர்கள் ஆவர். அறிவிப்பாளர்:- அபூகபஷா
அல்அன்மாரிய்யீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2247, இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்,
உலக பற்றற்றவர் போல் தன்னை எண்ணிக்கொண்டு தனக்கு வருகின்ற
(ஹலாலான) அனுமதிக்கப்பட்ட வருமானங்களை தவிர்க்கக்கூடாது. நமது தேவைகள் நிறைவடைந்த
பிறகு நமக்கு வரும் அதிகப்படியான வருமானத்தின் மூலம் பிறர் தேவையை
நிறைவேற்றிக்கொள்ள உதவலாம்.
நல்லோர்கள் அல்லாஹு வழங்குகின்ற பொருளாரத்தின்மீது ஆசை
கொள்வார்கள். காரணம் அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொண்ட அந்த பொருளாதாரத்தை அவன்
வழியிலேயே செலவுசெய்து அவனை மகிழ்ச்சியூட்டும் வேண்டும் என்று எண்ணுவார்கள். இந்த
நிலைப்பாட்டில் பொருளாதாரத்தின் மீது ஆசை கொள்வது தவறல்ல.
பேரறிஞராகவும் துறவியாகவும் வாழ்ந்த மாலிக் பின் தீனார்
(ரஹ்) அவர்களுக்கு அன்றைய பஸராவின் ஆட்சியாளர் பணமுடிப்பை ஒன்றை கொடுத்துவிட்டார்.
அன்னார் அதை அப்படியே வாங்கிக் கொண்டார்கள். இதைப்பற்றி பிறர் குறை பேசினர்.
ஒருவர், மாலிக் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் வந்து மற்ற மார்க்க
அறிஞர்களெல்லாம் வந்த பணமுடிப்பை வேண்டாம் என்று திருப்பி விட்டு விட்டனர்.
நீங்களோ அதை வாங்கிக்கொண்டீர்களே! நீங்கள் பற்றற்ற வாழ்க்கையை வாழ்பவர் தானே! இந்த
பணமுடிப்பு உங்களுக்கு எதற்கு? என்று
நேரடியாக கேட்டார்
மாலிக் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “அந்த
பணமுடிப்பைப் பற்றி என்னுடன் இருப்பவர்களிடம் சென்று கேள்!” என்று கூறிவிட்டார்கள்.
பிறகு வந்தவர், அன்னாரின் தோழர்கள், மாணவர்களிடம் சென்று அந்த பணமுடிப்பைப்பற்றி விசாரித்தார்.
அதற்கு அவர்கள் "மாலிக் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அந்த அன்பளிப்புகள் அனைத்திற்கும் அடிமைகளை வாங்கி
உரிமை விட்டு விட்டார்கள்" என்று கூறினர்.
முஹம்மத் பின் முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இறைவனை அஞ்சுவதற்கு தூண்டுகின்ற நல்லுதவிகளில் ஒன்று பொருளாதாரம். அதாவது, பொருளாதாரத்தின் மூலமாகவும் இறைவனை அடையமுடியும்.
பொருளாதாரத்தை ஒதுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இஸ்மாயீல் பின் அபீ உவைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் இறந்தபோது, தரை விரிப்புகள், சொகுசு இருக்கைகள் (cushions), பறவைகளின் இறகுகள் கொண்டு
அமைக்கப்பட்ட தலையணைகள் முதலான அவர்களின் உடமைகள்,
500 தங்கக்காசுகளுக்கு விலை போயின.
அன்னார் இறந்தபோது எடுக்கப்பட்ட சொத்து பட்டியலில் பலவிதமான காலணிகளும், 100 தலைப்பாகைகளும்,
2629 தங்கக்காசுகளும், 1000 வெள்ளிக்காசுகளும் இடம் பெற்றிருந்தன. நூல்:- மஅல் அஇம்மா
அஷ்ஷைக் சல்மான் அல்அவ்தா
இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இமாம் அல்தஹபீ (ரஹ்) அவர்கள்
பதிவு செய்துள்ளார்கள். மிகப்பெரிய செல்வந்தராகவும் மக்களிடையே மதிப்பு
மிக்கவராகவும் பேரறிஞர் ஆகவும் வாழ்ந்தோருள் ஒருவராக இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்
திகழ்ந்தார்கள். மிகவும் கண்ணியமானவராகவும் அழகிய ஆடைகளை அணிந்தவராகவும்
இருந்தார்கள். பணியாளர்கள் பலர் இருந்த ஆடம்பரமான வீட்டில் வசித்தார்கள். அன்னார்
வாழ்ந்த வளமான வாழ்க்கை, மக்கள் அனைவருக்கும் தெரிந்ததாக
இருந்தது. அவர்களின் உலக வாழ்வு வளமாக இருந்தது போல், அவர்களின் மறுமை வாழ்வுக்கான செயல்பாடுகளும் சிறப்பாக
இருந்தன. இமாமவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டார்கள்; சிறந்த உணவை உண்டார்கள்; அதே வேளை மறுவுலகிற்கான
அவர்களின் வணக்க வழிபாடுகளும் நற்செயல்களும் மிகையாகவே இருந்தன."
இதற்குச் சான்றாக இமாம் தஹபீ (ரஹ்) அவர்கள், "(நம் தூதர்களிடம்) தூதர்களே! நல்ல உணவுகளிலிருந்து உண்டும்
சிறந்த செயல்களைச் செய்தும் வாருங்கள்! (என்று கூறினோம்)" என்ற திருக்குர்ஆனின்
(23:51 வது) வசனத்தை எடுத்துக்காட்டாக
மொழிந்து, இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்
குர்ஆன் ஹதீஸின்படி வாழ்ந்தார்கள் என்று அறிவிக்கிறார்கள். நூல்:- மஅல் அஇம்மா அஷ்ஷைக்
சல்மான் அல்அவ்தா
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வாழ்ந்த வளவாழ்வு, இஸ்லாத்தின் ஏற்புடைமையைப் பெற்ற ஒன்றாகும் என்பது தெளிவு.
இந்த அடிப்படையில், இஸ்லாமிய அறிஞர் ஒருவர் செல்வச்
செழிப்புடன் வாழ்வது, விமர்சனத்துக்கு உரியதன்று.
அவர் ஏழையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுவதோ, பிறரைச் சார்ந்தே இருக்க
வேண்டும் என்று எண்ணுவதோ, ஏழ்மை என்பது பக்தியின்
அடையாளமென்றெண்ணி, அவர் அழுகடைந்த தோற்றத்தில்
இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, மிகப்பெரிய தவறாகும். அழகான
தோற்றத்தில் இருக்கும் ஒரே காரணத்தால், அவர்கள் தவறாக விமர்சிக்கப்படக்
கூடாது. தோற்றம் அழகாக இருப்பதற்காக நாம் எவரையும் வியந்து பாராட்டுவது இல்லையே!
செழிப்பான தோற்றம் ஒன்றும் வரம்பைக் கடந்ததாக
கருதப்படமாட்டாது. அறிஞர்களும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தனது தோற்றத்தை மாற்றிக்
கொள்வதில் தவறொன்றும் இல்லை.
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம்
(ஸல்) அவர்கள் என்னை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார்கள். நான் நபியவர்களிடம்
சென்றேன். அப்போது நபியவர்கள், ( يَا عَمْرُو، إِنِّي أُرِيدُ أَنْ أَبْعَثَكَ عَلَى جَيْشٍ
فَيُغْنِمُكَ اللَّهُ، وَأَرْغَبُ لَكَ رَغْبَةً مِنَ الْمَالِ صَالِحَةً ) "அம்ரே! ஒரு படைக்கு உம்மை
பொறுப்பாளராக அனுப்பி, அல்லாஹ் உமக்கு போர் செல்வங்களை
வழங்கி, அதில் நல்லதை உமக்கு நான் வழங்க
வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு நான்,
( إِنِّي لَمْ أُسْلِمْ رَغْبَةً فِي
الْمَالِ، إِنَّمَا أَسْلَمْتُ رَغْبَةً فِي الإِسْلاَمِ فَأَكُونُ مَعَ رَسُولِ
اللهِ صلى الله عليه وسلم ) "(நாயகமே!) பொருள்களுக்கு
ஆசைப்பட்டு நான் முஸ்லிமாகவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அதாவது
உங்களுடன்) இருக்க வேண்டும் என்பதற்காக தான் இஸ்லாத்தில் ஆசைப்பட்டு
இணைந்தேன்" என்று கூறினேன். நபியவர்கள்,
( يَا عَمْرُو، نِعْمَ الْمَالُ الصَّالِحِ
لِلْمَرْءِ الصَّالِحِ أي: نِعْمَ المالُ الحَلَالُ لِلرَّجُلِ
الَّذِي يُنفِقُهُ فِي حَاجَتِهِ ثُمَّ فِي ذَوي رَحِمِهِ وَأقَارِبِهِ
الفُقَرَاءِ ثُمَّ فِي أعْمَالِ البِرِّ ) "அம்ரே! நல்ல பொருள் நல்ல மனிதருக்கு சிறந்தது அதாவது, ஒரு மனிதர் (ஹலால் எனும்)
ஆகுமாக்கப்பட்ட வழிகளில் சம்பாதித்து அதைக் கொண்டு தமது சுயத் தேவைகளுக்கும், மேலும் தமது உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், நற்காரியங்களுக்கும்
செலவிடுகிறார். (அப்படிப்பட்ட செல்வம் சிறந்ததாகும்.)” என்று கூறினார்கள். நூல்:-
அல்அதபுல் முஃப்ரத்-299, முஸ்னது அஹ்மத், தப்ரானீ, அபூயஅலா, மஜ்மஉஸ் ஸவாயித்
சமநிலையில் வாழப் பழகவேண்டும்
அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. (பரம ஏழையாக வாழ்ந்த)
ஸஅலபா பின் ஹாத்திப் அல்அன்சாரீ என்பவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நாயகமே! அல்லாஹ் எனக்கு செல்வத்தை வழங்க வேண்டுமென அவனிடம்
பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
உடனே அண்ணலார், "நீர் இப்படியே இருப்பது தான்
உனக்கு நல்லது" என்று கூறியும் கேளாமல்
பிரார்த்திக்க வற்புறுத்தினார். பிறகு அவர், ( وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَئِنْ دَعَوْتَ اللَّهَ فَرَزَقَنِي
مَالًا لَأُعْطِيَنَّ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ ) “உங்களை உண்மையுடன் அனுப்பிய இறைவன் மீது சத்தியமாக! நீங்கள் அல்லாஹ்விடம்
பிரார்த்தனை புரிந்து, அதையடுத்து அல்லாஹ் எனக்குச்
செல்வம் வழங்கினால் நான் ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமைகளை நிச்சயம் வழங்கி
விடுவேன்” என்றார். பின்பு அண்ணலார்
அவருக்காக பிரார்த்தித்தார்கள்.
அண்ணலாரின் பிரார்த்தனையின் அருள்வளத்தால் அவர் முதன்முதலாக
ஒரு ஆட்டை விலைக்கு வாங்கினார். அதன் மூலம் ஆடுகள் பெருகி மந்தைகளாக மாறி
மிகப்பெரும் செல்வந்தராக மாறிவிட்டார். ஆடுகள் பல்கிப் பெருகியதால், அவருக்கு மதீனா நகர் நெருக்கடியாக தோன்றியது ஆகவே
அங்கிருந்து நகர்ந்து மதீனாவின் புறநகரில் உள்ள பள்ளத்தாக்குகளில் ஒன்றில்
வசித்தார். ஆரம்பத்தில் சில தொழுகைகள் தவறியது. பிறகு ஜும்ஆ தொழுகையும் தவறியது. அண்ணலார், ( مَا فَعَلَ ثَعْلَبَةُ ) “ஸஅலபாவுக்கு என்ன ஆயிற்று” என்று கேட்டார்கள். அதற்கு
நபித்தோழர்கள் அவரின் நிலையை விவரித்தனர். அப்போது அண்ணலார், ( يَا وَيْحَ ثَعْلَبَةَ ) “ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே!” என்று மூன்று முறை அதையே
கூறினார்கள்.
அதன்பிறகு, (நபியே!) அவர்களின் செல்வங்களில்
இருந்து தர்மத்தைப் பெற்று அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக (9:103) எனும் வசனம் அருளப்பெற்றது.
கட்டாய தர்மம் தொடர்பான சட்ட திட்டங்களும் நபியவர்களுக்கு அருளப்பெற்றது.
எனவே, முஸ்லிம்கள் வழங்கியாக வேண்டிய
கட்டாய ஜகாத்தை திரட்டுவதற்கான இரண்டு பேரை அனுப்பி வைத்தார்கள். அவ்விருவரும்
புறப்பட்டு ஸஅலபாவிடம் வந்து, ஜகாத் வழங்குமாறு அவரிடம்
கோரினர். அதற்கு அவர், “இது வரியைப்போல் இருக்கிறது” என்று கூறி, நீங்கள் இப்போது போய்விட்டு
வேலையெல்லாம் முடித்துவிட்டு பிறகு வாருங்கள் பார்க்கலாம்” என்றார்.
எனவே, அவ்விருவரும் சென்றுவிட்டனர்.
பின்னர் மற்ற மக்களிடம் சென்று அவர்கள் வழங்கிய ஜகாத்களை எல்லாம் வசூல்
செய்துவிட்டு, பின்னர் மறுபடியும் ஸஅலபாவிடம்
சென்றனர். இப்போது அவர், தற்சமயம் நீங்கள் சென்று வாருங்கள் நான்
யோசித்து விட்டு பின்னர் சொல்லுகிறேன் என்றார். அவ்விருவரும் புறப்பட்டு வந்து
இதைப்பற்றி அண்ணலாரிடம் கூறுவதற்கு முன் ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே! என்று அண்ணலார்
கூறினார்கள்.
அப்போதுதான் அல்லாஹ், ஸஅலபாவின் செயலைக் கண்டித்து சில வசனங்களை (9:75,76,77) அருளினான். இதை அறிந்த பின்னர் (மனமின்றி) ஸஅலபா
கொடுக்க முன்வந்த ஜகாத்தை அண்ணலார் ஏற்க மறுத்து, ( إِنَّ اللَّهَ مَنَعَنِي أَنْ أَقْبَلَ مِنْكَ صَدَقَتَكَ ) "உம்மிடமிருந்து ஏற்க வேண்டாமென அல்லாஹ் என்னைத்
தடுத்துவிட்டான்" என்று கூறிவிட்டார்கள். பிறகு அண்ணலாரின் மறைவுக்கு
பின்பு, ஜனாதிபதி அபூபக்ர் (ரலி)
அவர்களின் ஆட்சி காலத்தில் ஸஅலபா ஜகாத் பொருட்களைக் கொண்டு
வந்து கொடுத்த போது, அண்ணலாரே வாங்கவில்லை. எனவே
நானும் வாங்க மாட்டேன் என்று கூறினார்கள். இப்படியே ஒவ்வொரு ஜனாதிபதிகளும்
தங்களின் ஆட்சி காலத்தில் ஸஅலபா கொண்டு வந்த பொருட்களை வாங்க மறுத்து விட்டார்கள். நூல்:- தஃப்சீர் தபரீ, இப்னுகஸீர், தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
சிலவேளை பணம் இருப்பவர்களை ஆட வைக்கும். இல்லாதவர்களை வாட
வைக்கும். பணம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் சமநிலையில் வாழப் பழகிக்கொள்ளாவிட்டால் மனம் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தேட வைக்கும்.
நாம் பணத்தை என்ன செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. பணம்
நம்மை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம். நமக்குள் இருக்கும் மனித இயல்புகளை, அது மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். நமது
குடும்பத்தை, நண்பர்களை, இளமைக்காலம் முதல் நம்முடன் இணைந்து இருப்பவர்களை, நாம் நடத்தும் விதத்தை, நம்முடன் சேரும் பணம் மாற்றி
விடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
பணமே குறிக்கோள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لُعِنَ عَبْدُ الدِّينَارِ لُعِنَ عَبْدُ الدِّرْهَمِ ) பொற்காசுக்கு அடிமையாகிவிட்டவன்
சபிக்கப்பட்டவன் ஆவான். வெள்ளிக்காசுக்கு அடிமையாகிவிட்டவன் சபிக்கப்பட்டவன்
ஆவான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2886, திர்மிதீ-2297
பணத்திற்கு அடிமையானவன் அதை ஈட்டுவதிலும் காப்பதிலும் முழு
ஈடுபாடு காட்டுவான். அனுபவிப்பதிலும் ஈட்டுவதிலோ அனுபவிப்பதிலோ ஹலால், ஹராம் ஆகிய வழிமுறைகளை கடைபிடிக்கமாட்டான். அவனுக்குப் பணம்
ஒன்று மட்டுமே குறிக்கோளாக இருக்கும். இத்தகையவனிடத்தில் நேர்மை, அடுத்தவர் உரிமை, சரியான முறைமை ஆகியவற்றை
எதிர்பார்க்கமுடியாது. பணத்திற்கு அடிமையாகிவிட்ட இவன், "இறைவா உன்னையே வழிபடுகிறோம்" என்று கூறுவது
போலித்தனமாகவே இருக்கும் எனவேதான், சாபத்திற்கு இலக்காகின்றான்.
கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக
போயிருந்தான். திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டான். அதாவது, இந்த
முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடந்தவருக்கு ரூபாய் பத்து இலட்சம்
தருவதாக கூறினான்.
அப்படி நீந்தும்போது முதலைகள் தாக்கி இறந்துபோனால் அவரது
மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து இலட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.
எல்லோரும் திகைத்துபோய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த
தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு
வேகமாக நீந்தி அக்கரையை அடைந்துவிட்டான்.
அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து இலட்சம் ரூபாயை உடனே
தந்துவிட்டான். அந்த தைரியசாலி வாயெல்லாம் பல்லாக தானிருந்த இடத்துக்கு
திரும்பிவந்து தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான். "இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு
இருக்கும்போது திடீர்னு தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா? என்னாவது”
என்றான்.
மனைவி, "அப்போதும் எனக்கு ஐந்து இலட்சம்
ரூபாய் கிடைத்திருக்கும்" என்று அமைதியாக சொன்னாள்.
எவன் செத்தால் எனக்கென்னா? எவன் நஷ்டப்பட்டாலும், கஷ்டப்பட்டாலும் அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.
மார்க்கம் கூறும் ஹலால் ஹராம் பற்றிய சிந்தனையெல்லாம் தேவையில்லை. எனக்கு பணமே குறிக்கோள்.
அது கிடைத்தால் போதும். அது எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று வாழும் ஜீவன்களும்
உண்டு.
இந்தப் பணத்தைப் பெற, சிலர் அன்பை இழக்கின்றனர், சிலர் பண்பை இழக்கின்றனர், சிலர் நட்புகளை இழக்கின்றனர், சிலர் உறவுகளை இழக்கின்றனர், சிலர் கற்பை இழக்கின்றனர், சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர், சிலர் மனித நேயத்தை
இழக்கின்றனர், சிலர் வாலிபத்தை இழக்கின்றனர், சிலர் வாழ்க்கையையே
இழக்கின்றனர், சிலர் தமது புனிதமிகு
மார்க்கத்தையே இழக்கின்றனர். வேதனையோ வேதனை.
இறைநினைவை விட்டும், இறைவழிபாட்டை விட்டும் தூரமாகாத
செல்வந்தர்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment