Search This Blog

Wednesday, 14 December 2022

உணவில் கவனம்

 

உணவில் கவனம்

 

كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ

 

நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான உண்பொருட்களை உண்ணுங்கள். திருக்குர்ஆன்:- 20:81

 

நாம், இந்த ரமளான் மாதத்தின் 29 நோன்புகள் அதற்கு அடுத்து ஆறு நோன்புகள் என மொத்தம் 35 நோன்புகளை தொடராக நோற்றுள்ளோம். ஒரு மாத காலம் பகல் நேரத்தில் எதையும் உட்கொள்ளாமல் வயிற்றைக் காலியாக போட்டிருந்தோம். அதனால், நமது உடலில் சில மாற்றங்கள் உருவாகி இருக்கும். எனவே, செரிப்பதற்கு வெகுநேரம் ஆகக்கூடிய கனமான உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


ஷவ்வால் மாதம் நிறைய திருமணங்கள் இன்ன பிற வைபோகங்கள் நடைபெறும். அதில் கனமான உணவுகளை பரிமாறப்படும். ஒரு மாதம் பகல் பொழுதில் காலியாக கிடந்த வயிற்றில் உடனடியாக அவற்றை எல்லாம் அள்ளிப்போட்டுவிட்டு, அதன் பிறகு உடல் உபாதையால் அவஸ்தை பெறக்கூடாது. எனவே, உணவு குறித்து கவனம் தேவை. 


உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளும் உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலும் உணவில் இருந்தே கிடைக்கின்றன. பொதுவாக உயிரினங்களின் வாழ்க்கையில், குறிப்பாக மனிதனின் வாழ்க்கையில் உணவின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

 

உணவு இரண்டு வகையான மூலங்களிலிருந்து பெறப்படுகிறது. 1.விலங்கு மூலம் 2.தாவர மூலம். மரம், செடி, கொடி உள்ளிட்ட தாவர வகைகளில் இருந்து பெறப்படுகின்ற தானியங்கள், பயிறுகள், எண்ணெய், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் ஆகியவை தாவர உணவுகளாகும். இது மரக்கறி உணவு (Vegetarian) எனப்படும். உயிரினங்களின் இறைச்சி, முட்டை, பால் உள்ளிட்டவை விலங்கிலிருந்து கிடைக்கும் உணவுகளாகும். இது புலால் உணவு (Non Vegetarian) எனப்படுகிறது. மனிதனின் செரிமான உறுப்பு இவ்விரு வகை உணவுகளையும் செரிப்பதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இவ்விரு வகை உணவுகளையும் மனிதர்கள் உட்கொள்வது இயற்கையே என்பதை இது காட்டுகிறது.

 

புலால் உணவை, நீர் சார்ந்தது நிலம் சார்ந்தது, என இருவகையாகப் பிரிக்கலாம். மரக்கறி உணவிலும் புலால் உணவிலும் உண்ண அனுமதிக்கப்பட்டவையும் உள்ளன; உண்ண அனுமதிக்கப்படாதவையும் உள்ளன. அவற்றில் உண்ண அனுமதிக்கப்பட்டவை உடலுக்கும் அறிவுக்கும் ஊறு விளைவிக்காத, ஆரோக்கியமான உணவு வகைகள் ஆகும்.

 

அவ்வாறே, உணவு உட்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்க வழக்கங்களும் உள்ளன. அவற்றைக் கடைபிடிப்பது உடல்நலம் காப்பதற்கு அவசியமாகிறது. அந்த வகையில் ஆரோக்கியம் நல்கும் உணவு வகைகளை உட்கொள்ளும்போது அதற்கு முன்னும் பின்னும் கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்க வழக்கங்களையும் இஸ்லாம் எடுத்துரைக்கிறது.

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள். நூல்:- புகாரீ-5409

 

மனதிற்கு ஒப்பவில்லை

 

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது. (அன்னை) மைமூனா (ரலி) அவர்கள் நஜ்திலிருந்து கொண்டு வரப்பட்ட உடும்பு இறைச்சியை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் முன் (சாப்பிட) வைத்தார்கள். நபியவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்கு கூறப்பட்டு அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தமது கையை நீட்டுவது அரிதாகும்.

 

இந்நிலையில் நபியவர்கள் தமது கையை அந்த உடம்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர், "நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று நபியவர்களுக்குத் தெரிவியுங்கள். நாயகமே அது உடும்பு" என்று கூறினார். உடனே நபியவர்கள் அந்த உடும்பு இறைச்சியை விட்டு தமது கையை எடுத்துக் கொண்டார்கள். அப்போது நான், "நாயகமே! உடும்பு தடை செய்யப்பட்டதா? என்று வினவினேன். நபியவர்கள், ( لاَ وَلَكِنْ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ ) "இல்லை; ஆயினும் அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆகவே, என் மனம் அதை விரும்பவில்லை" என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்து சாப்பிட்டேன். அப்போது நபியவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-5391, முஸ்லிம்-3941

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் பழக்கத்தையும் ஆசையையும் பேணிக் கொண்டார்கள். தம் நிலத்தில் இல்லாததைச் சாப்பிட்டுப் பழகாதபோது அதையும் மனமும் விரும்பாதபோது அதைச் சாப்பிடாமல் தவிர்த்து கொண்டார்கள். அதே நேரத்தில் யார் அதை விரும்பி உண்கின்றாரோ, அதை உண்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளாரோ அவரைத் தடுக்கவில்லை.

 

நபியவர்கள் உணவுப் பொருளை மனம் விரும்பவில்லையென்றால் அதை சாப்பிடமாட்டார்கள். விரும்பாமல் அதை இரைப்பைக்குள் திணிக்க மாட்டார்கள். இதுவே உடலின் ஆரோக்கியத்தைப் பேண மிக முக்கியமான அடிப்படையாகும். ஒரு மனிதன் தனக்கு விருப்பமில்லாத உணவை உண்டால் அதனால் ஏற்படும் பயனைவிடத் தீங்குதான் மிகுதியாக இருக்கும்.

 

பகிர்ந்துகொள்!

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். (நூல்:- முஸ்லிம்-4182) இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நூல்:- புகாரீ-5392

 

அதாவது ஒருவர் சாப்பிடும் உணவை இருவர் பகிர்ந்து கொள்ளலாம். இருவர் வயிறு நிரம்ப சாப்பிடும் உணவை பகிர்ந்தால் அது மூவருக்கு போதுமானதாகிவிடும்.

 

வயிறு முட்ட

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் இறைமறுப்பாளர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு நபியவர்கள் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே பால் கற(ந்து அவரிடம் கொடு)க்கப்பட்டது. அவர் (அந்தப் பாலைப்) பருகினார்.

 

பிறகு மற்றொரு ஆட்டில் பால் கறக்கப்பட்டது. அதையும் அவர் பருகினார். மீண்டும் ஓர் ஆட்டில் பால் கறக்கப்பட்டது அதையும் பருகினார். இவ்வாறாக ஏழு ஆடுகளிலிருந்து கறக்கப்பட்ட பாலை அவர் பருகினார்.

 

பின்னர் மறுநாள் காலையில் அவர் இஸ்லாத்தை தழுவினார். அப்போது ஓர் ஆட்டில் பால் கறந்து அவருக்கு வழங்கும்படி நபியவர்கள் உத்தரவிட, அவ்வாறே பால் கறந்து கொடுக்கப்பட்டது. அவர் அந்தப் பாலை பருகினார். பிறகு அவருக்கு மற்றொரு ஆட்டில் பால் கறந்து கொடுக்கும்படி நபியவர்கள் உத்தரவிட்டார்கள். அப்போது அவரால் அதை முழுவதுமாகப் பருக முடியவில்லை அப்போது நபியவர்கள், ( إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالْكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ ) "இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் பருகுவார். இறைமறுப்பாளரோ ஏழு குடல்களில் பருகுவார்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5397, முஸ்லிம்-4189, திர்மிதீ-1741

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்துவரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். ஆகவே, (ஒருநாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய சாப்பிட்டார்.

 

இப்னு உமர் (ரலி) அவர்கள், ( يَا نَافِعُ لاَ تُدْخِلْ هَذَا عَلَىَّ ) "நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ ) 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளரோ ஏழு குடல்களில் சாப்பிடுவார்' என்று கூறுவதை நாம் கேட்டிருக்கிறேன்" என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-5393

 

ஓர் இறைநம்பிக்கையாளர் இறைக்கட்டளையை மதித்து ஹலால் - ஹராமைப் பேணி, அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை மட்டுமே உண்பார். மாறாக, இறைமறுப்பாளர் மனம் விரும்பும் எதையும் விதிவிலக்கே இல்லாமல் உண்பார் என்பது ஒரு விளக்கம்.

 

அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளையே ஆயினும் ஓர் இறைநம்பிக்கையாளர் அளவோடு உண்பார். அப்போதுதான் வணக்க வழிபாடுகளில் ஈடுபடவும், அதிகமாக உண்பதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் அவருக்கு வசதியாக இருக்கும்; இறைமறுப்பாளர் நிலை அவ்வாறன்று. அவன் வரைமுறையின்றி வயிறு புடைக்க உண்பான் என்பது மற்றொரு விளக்கம்.

 

சுருங்கக்கூறின், உணவு மட்டுமின்றி வாழ்க்கை வசதிகள் அனைத்திலும் கிடைத்ததைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வதும், ஆடம்பரங்களை தவிர்ப்பதும் நல்ல இறைநம்பிக்கையாளரின் பண்பாகும். இவ்வுலக வாழ்க்கை இன்பங்களை எந்த வழியிலும் அனுபவித்தாக வேண்டும் என விரும்புவது மறுமையை நம்பாதவனின் செயலாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مَلأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلاَتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لاَ مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ ) மனிதன் நிரப்புகின்றன பைகளில் வயிற்றைவிடத் தீங்கானது ஒன்றுமில்லை. மனிதனுக்கு அவனது முதுகெலும்பை நிமிர்த்துகின்ற சில கவளங்கள் உணவே போதும்‌. அவனையும் மீறி அவன் மனம் ஆசைப்பட்டால் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும், இன்னொரு பகுதி பானத்துக்காகவும், மற்றொரு பகுதி மூச்சு விடுவதற்காகவும் ஒதுங்கிக் கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- மிக்தாம் பின் மஅதிகரீப் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ, நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்

 

வயிறு நிரம்ப உணவு உண்ணலாமா? என்றால், உண்ணலாம் என்பதே விடையாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித்தோழர்கள் சில சமயம் வயிறு நிரம்பச் சாப்பிட்டுள்ளார்கள் என்பதற்கும், அதை நபியவர்கள் தடுக்கவில்லை என்பதற்கும் பல நபிமொழிகள் சான்றாக உள்ளது. இருப்பினும், கடமையான பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுகின்ற அளவுக்கு வயிறு புடைக்கச் சாப்பிடுவது விரும்பத்தக்கதன்று. உணவின் அளவு எவ்வளவு இருப்பது நலம் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகிறது.

 

மரக்கறி

 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்து வந்தோம். எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் தண்டுக்கீரையின் தண்டுகளை எடுத்து தனது பாத்திரமொன்றில் அவற்றையிட்டு அதில் தொலி நீக்கப்படாத கோதுமை தானியங்கள் சிறிதைப் போட்டு(க் கடைந்து) வைப்பார். நாங்கள் (வெள்ளிக்கிழமை தொழுகை) தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியடைந்து வந்தோம். நூல்:- புகாரீ-5403

 

வெள்ளிக்கிழமை என்றாலே நமக்கு இறைச்சி, மீன், முட்டை இப்படி ஏதேனும் அசைவ உணவு இருக்கவேண்டும். அசைவ உணவு இல்லாத ஜும்ஆ தினம், ஜும்ஆ தினமா? என்று சலிப்பாக நாம் எண்ணுகிறோம்.

 

பருப்புன்னா வெறுப்பு, ரசம்ன்னா விஷம், கறின்னா சரி என்ற நிலைப்பாட்டில் நம்மில் பலர் உண்டு.

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. தையற்காரர் ஒருவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களைத் தாம் தயாரித்திருந்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நானும் நபியவர்களுடன் சென்றேன். அவர் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியையும், சுரைக்காயும், உப்புக்கண்டம் இருந்த குழம்பையும் நபியவர்களின் முன்னால் வைத்தார். நபியவர்கள் உணவு தட்டின் நாலாபக்கங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை நான் பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நூல்:- புகாரீ- 5436

 

மற்றொரு அறிவிப்பில், "நான், நபியவர்கள் உணவில் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தவுடன் சுரைக்காயை நபியவர்களுக்கு முன்னால் ஒன்று சேர்த்து வைக்கலானேன்" என்று வருகிறது.

 

ஜாபிர் பின் தாரிக் ரலி அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் (இல்லம்) சென்றேன். அவர்களுக்கு முன்னிலையில் சுரைக்காய் பல துண்டுகளாகப்படுவதைக் கண்டேன். என்ன இது, (எதற்காக) என்றேன். அதற்கு நபியவர்கள், ( نُكَثِّرُ بِهِ طَعَامَنَا‏ ) "இதன் மூலம் எங்களது உணவை, (சால்னாவை) அதிகப்படுத்திக்கொள்வோம்" என்று கூறினார்கள். நூல்:-  இப்னுமாஜா-3304, ஷமாயில் திர்மிதீ-161

 

அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் ரலி அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரிச்சச் செங்காய்களை உண்பதைக் கண்டேன். நூல்:- புகாரீ-5447

 

ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது

 

பேரறிஞர் இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் பாலையும் மீனையும், பாலையும் முட்டையையும், பாலையும் இறைச்சியையும், பாலையும் புளிப்பான உணவுப் பொருள்களையும் ஒரே நேரத்தில் சாப்பிட மாட்டார்கள்.

 

மேலும், முதல் நாள் உணவை மறுநாள் சூடேற்றப்பட்ட வழங்கப்படுகின்ற உணவையும் உண்ணமாட்டார்கள் அதுபோலவே கெட்டுப்போன புளித்துப்போன உணவுகளையும் உண்ண மாட்டார்கள் ஊறுகாய்கள், உப்புத்தடவி வைக்கப்பட்ட (கருவாடு போன்ற) உணவுப் பொருள்கள் முதலானவற்றை உண்ணமாட்டார்கள்.

 

மேலும், வெப்பத் தன்மை கொண்ட இரண்டு பொருள்களையோ, குளிர்ச்சித் தன்மை கொண்ட இரண்டு பொருள்களையோ, பிசுபிசுப்பு தன்மை கொண்ட இரண்டு பொருள்களையோ, பிடிப்புத் தன்மை கொண்ட இரண்டு பொருள்களையோ, இளகிய தன்மை கொண்ட இரண்டு பொருள்களையோ, கடினத்தன்மை கொண்ட இரண்டு பொருள்களையோ, மென்மைத் தன்மை கொண்ட இரண்டு பொருள்களையோ ஒன்றாக ஒரே நேரத்தில் சாப்பிட மாட்டார்கள். இவை அனைத்தும் உடலின் ஆரோக்கியத்திற்கும் நடுநிலைத் தன்மைக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடியவை ஆகும். நூல்:- அத்திப்பு நபவி

 

பிரியாணி போன்ற உணவுகள் சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்பட 90 சதவீதம் வாய்ப்பு உண்டு என்கிறது மருத்துவ உலகம்.

 

எப்போது நெய், கலந்த உணவுடன் குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டால், அது உடனடியாக கெட்ட கொழுப்பாக மாறிவிடும். அது இரத்தத்தில் கலந்து திடப்பொருளாக மாறும். திடமான இரத்தம் இதயத்தின் வழியாக செல்லும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

 

ஆகவே பிரியாணி போன்ற எண்ணெய் உணவுகள் உண்ட பிறகு வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பதே ஆரோக்கியமானது.

 

ஸஹ்தம் பின் முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது கோழி இறைச்சி(யுடன் கூடிய உணவு) கொண்டு வரப்பட்டது. அங்கிருந்த மக்களில் ஒருவர் (அதனை உண்ணாமல்) விலகி இருந்தார். அப்போது அபூ மூசா (ரலி) அவர்கள், ( مَا لَكَ‏؟ ) "உனக்கு என்ன நிகழ்ந்தது? (சாப்பிடாமல் தனித்து இருக்கிறாயே) என்று வினவினார்கள்.

 

அதற்கவர், "கோழி அசுத்த பொருள் சாப்பிடுவதை நான் பார்த்தேன். எனவே கோழிக்கறி சாப்பிட மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன்" என்று பதிலளித்தார். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், ( ادْنُ فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ مِنْهُ‏ ) "அருகில் வாருங்கள். (வந்து சாப்பிடுங்கள்.) ஏனெனில், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதை (கோழி இறைச்சி) உண்பதை நான் பார்த்துள்ளேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5518, ஷமாயில் திர்மிதீ-154

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கோழி இறைச்சியை சாப்பிட்டிருப்பதால் நீரும் சாப்பிடலாம்; சத்தியப் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்ற நோக்கில் அபூமூசா (ரலி) அவர்கள் அவரை உண்பதற்கு அழைத்து விருந்தோம்பினார்கள். மேலும், மார்க்க அறிஞர்களில் சிலர் பேணுதல் அடிப்படையில் அசுத்தம் தின்னும் கோழி அல்லது விலங்கை உண்ண விரும்பினால்  அதனை சில நாள்கள் கட்டிப்போட்டு பின்னர் அதை அறுத்து அதன் இறைச்சியை உண்ணலாம் என்கிறார்கள். அசுத்தம் தின்னும் விலங்கின விஷயத்தில் மட்டுமே இத்தகைய நடைமுறை. அப்பெயர் நீக்கிவிட்டால் தடையேதும் இல்லை.

 

பத்தியம் பேணு!

 

உம்முல் முன்திர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுடன் என் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது எங்களிடம் வீட்டில் பேரிச்சச் செங்காய் குலையொன்று தொங்கவிடப்பட்டிருந்தது. நபியவர்கள் (அதிலிருந்து பறித்து) உண்ணலானார்கள். அலீ (ரலி) அவர்களும் உண்ணலானார்கள்.

 

அப்போது நபியவர்கள், ( مَهْ مَهْ يَا عَلِيُّ فَإِنَّكَ نَاقِهٌ ) “அலீயே! (போதும்) நிறுத்துவீராக! (போதும்) நிறுத்துவீராக! ஏனெனில், (உடல்நலிவுற்றிருந்த) நீர் இப்போதுதான் உடல் நலம் தேறியுள்ளீர்" என்றார்கள். எனவே அலீ (ரலி) அவர்கள் உண்ணாமல் அமர்ந்துகொள்ள, நபியவர்கள் (மட்டும் அதை) உண்ணலானார்கள்.

 

பிறகு அவர்களுக்காக நான் தண்டுக்கீரையும் கோதுமையும் கலந்து தயாரித்த உணவை வைத்தேன். அப்போது நபியவர்கள், ( يَا عَلِيُّ مِنْ هَذَا فَأَصِبْ فَإِنَّهُ أَوْفَقُ لَكَ ‏ ) "அலீயே! இதை நீர் உண்ணலாம்! ஏனெனில், இது உம(து உடல்நலத்து)க்கு மிகவும் ஏற்றதாகும்" என்றார்கள். நூல்:- அபூதாவூத்-3856, திர்மிதீ-1959, இப்னுமாஜா-3442, முஸ்னது அஹ்மத், ஹாகிம்

 

நோய்வாய்ப்பட்டிருந்த அலீ (ரலி) அவர்கள் அப்போதுதான் உடல்நலம் தேறியிருந்தார்கள். எனவே அந்நிலையில் உணவு பத்தியத்தைக் கடைபிடிக்க அறிவுறுத்தினார்கள்.

 

நோயிலிருந்து அப்போதுதான் உடல் நலம் தேறி வந்தவருக்கு கோதுமைக் கஞ்சி மிகவும் பயனுள்ள உணவாகும். குறிப்பாக அத்துடன் தண்டுக்கீரை சேர்த்து சமைத்து உண்பது பொருத்தமாக இருக்கும். இத்தகையோருக்கு பேரித்தம், திராட்சைப் பழங்கள் இடையூறு அளிக்கக்கூடும்.

 

"பத்தியமே தலைசிறந்த மருந்து," "இரைப்பை நோய்க்கான வீடு" ஆகியன அரபுப் பழமொழிகள் ஆகும்.

 

பத்தியம் என்பது உடல் நிலையைப் பொறுத்து அல்லது மருந்து உட்கொள்வதைப் பொருத்து எதை விலக்கவேண்டும்; எதைச் சேர்க்கவேண்டும் என்ற உணவு கட்டுப்பாட்டை அதாவது பத்தியத்தைப் பற்றி நோயாளி அறிந்து கொள்ளவேண்டும். நபியவர்கள் இத்தகைய உணவுக் கட்டுப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்கள்.

 

பழங்கள்

 

அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஈரப்பதமான பேரித்தம் பழத்துடன் வெள்ளரிக்காயை சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். (புகாரீ-5440, முஸ்லிம்-4150, அபூதாவூத்-3835, திர்மிதீ-1767, இப்னுமாஜா-3325) மேலும், ஈரப்பதமான பேரீத்தம் பழத்துடன் தர்பூசணி பழத்தைச் சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். (அபூதாவூத்-3836, திர்மிதீ-1766, பைஹகீ)  மேலும் ஈரப்பதமான பேரித்தம் பழத்துடன் முலாம் பழத்தையும் சேர்த்து சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். (முஸ்னது அஹ்மத், இப்னுஹிப்பான்-1356, ஷமாயில் திர்மிதீ-199)

 

பேரீத்தம்பழம் புரதச் சத்துக்கள், நார்ச் சத்துக்கள் மற்றும் பல சத்துக்கள் நிறைந்தது. பல்வேறு நோய்களை குணப்படுத்த வல்ல ஊட்ட உணவு. வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. நாவறட்சியை விரட்டும், பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும், சூட்டைத் தணிக்கும், சிறுநீர்க் கோளாறைச் சரி செய்யும். இரண்டிலும் ஏராளமான மருத்துவ பலன்கள் உள்ளன. மருத்துவரீதியாக இரண்டையும் சேர்த்துச் சாப்பிடுவது நேர்த்தியானதாகும். அதனால் தீய விளைவுகள் ஏற்படுவதில்லை. இவ்விரண்டில் ஒன்றினால் ஏற்படும் இடையூறை மற்றது நிவர்த்தி செய்யும். மொத்தத்தில் இரண்டும் உடல்நலம் காக்கும் அருமருந்தாகும்.

 

தர்பூசணி குளிர்ச்சியானது. பேரித்தம் பழம் உடலை சூடேற்றும். இரண்டையும் சேர்த்து உண்பது உடல் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க உதவும். இவ்விரண்டையும் சாப்பிட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதன் சூட்டை இதன் குளிர்ச்சியின் மூலமாக இதன் குளிர்ச்சியை இதன் சூட்டின் மூலமாகவும் முறியடிப்போம் என்று கூறிய செய்தி அபூதாவூத் (3836) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இரவு உணவு

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

لاَ تَدَعُوا الْعَشَاءَ وَلَوْ بِكَفٍّ مِنْ تَمْرٍ فَإِنَّ تَرْكَهُ يُهْرِمُ ) ‏இரவு உணவை(ச் சாப்பிடாமல்) கைவிட்டு விடாதீர்கள். ஒரு கைப்பிடியளவு பேரிச்சம்பழமாயினும் (சாப்பிடுங்கள்). ஏனென்றால், அதைக் கைவிடுவது முதுமையை (அதாவது பலவீனத்தை) ஏற்படுத்தும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் நூல்:- திர்மிதீ, இப்னுமாஜா-3346

 

அபூநயீம் (ரஹ்) அவர்கள்  கூறியதாவது. சாப்பிட்ட உடனேயே தூங்குவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஏனென்றால், அவ்வாறு செய்வது உள்ளத்தைக் கல்லாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் தான் ஆரோக்கியத்தை பேணிக்கொள்வோருக்கு மருத்துவர்களின் அறிவுரைகள்: உண்டவுடன் நூறடிகளாவது நடக்க வேண்டும். அல்லது தொழ வேண்டும் அதனால் உணவானது இரைப்பையின் அடியில் சென்று தங்கி செரிமானத்தை எளிதாக்குவதோடு நல்ல முறையில் செரிமானம் ஆவதற்கு உதவியாகவும் அமையும். சாப்பிட்ட உடனே உறங்குவது கூடாது. அவ்வாறு செய்வது மிகப் பெரிய தொல்லையை ஏற்படுத்தும். நூல்:- அத்திப்புந் நபவி இமாம் இப்னு கைய்யிம்

 

நாம் உணவில் கவனம் செலுத்தி, உடல் ஆரோக்கியம் பெற அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...