Search This Blog

Tuesday, 13 December 2022

வெட்கம் வேண்டும்

 

வெட்கம் வேண்டும்

 

فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ

 

(ஆதி மனிதர்களான நபி ஆதம்-அலை, ஹவ்வா-அலை ஆகிய) அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவர்களின் மர்ம உறுப்புகள் அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளை(ப் பறித்து) தம்மேல் போர்த்திக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். திருக்குர்ஆன்:- 7:22

 

நற்பண்புகளின் அடித்தளம் வெட்கம் ஆகும். வெட்கம் என்பது மனிதனை இழிவான செயல்களிலிருந்தும், பிறரை சிரமப்படுத்தும் அருவருப்பான காரியங்களிலிருந்து, கடமைகளில் குறைவு செய்வதிலிருந்தும் தடுக்கும் உரிய பண்பாகும்.

 

வெட்கம் மனிதனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் நன்மையே ஏற்படுத்தும். சிலர் பாவத்தை பகிரங்கமாகச் செய்யத் துவங்கும்போது மற்றவர்களும் பாவம் செய்ய துணிச்சல் பெறுகிறார்கள். உலகில் பாவங்கள் மலிந்து விடுகின்றன. அதில்லாமல் பாவம் செய்ய வெட்கப்படுவது பாவங்கள் அம்பலத்திற்கு வருவதைத் தடுக்கிறது. எனவே ஒரு மனிதன் வெட்கப்படுவதன் மூலம் பிறருக்கு நன்மையே செய்கிறான். மற்றவர்களுக்கு பாவம் செய்யும் துணிச்சல் ஏற்படாமல் காக்கிறான்.

 

பிறருக்கு பலனளிக்கும் வகையில் வெட்கப்படுவதும், இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நற்செயலாகும் என இஸ்லாம் இயம்புகிறது.

 

அல்லாஹ்விடம்

 

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ ) நிச்சயமாக அல்லாஹுதஅலா மிக அதிகம் வெட்கமுடையவனாக இருக்கிறான். கேட்காமலேயே அதிகம் தருபவன். மனிதன் அல்லாஹ்விடம் கேட்பதற்கு கையேந்தினால் அந்த கைகளை வெறுமையாகவும், பயனற்றதாகவும் திருப்பி அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான். (ஆகவே நிச்சயம் கொடுத்துவிட வேண்டும் எனத் தீர்மானிக்கிறான்.) அறிவிப்பாளர்:- சல்மான் ஃபார்சீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3556, அபூதாவூத், இப்னுமாஜா

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( اسْتَحْيُوا مِنَ اللَّهِ حَقَّ الْحَيَاءِ ) (மக்களே) அல்லாஹ்விடம் மிகச் சரியான முறையில் வெட்கப்படுங்கள் என்று கூறினார்கள். அப்போது நாங்கள் நாயகமே! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! நாங்கள் அல்லாஹ்விடம் வெட்கப்படுகிறோம் என்று கூறினோம்.

 

அதற்கு அண்ணலார், ( لَيْسَ ذَاكَ وَلَكِنَّ الاِسْتِحْيَاءَ مِنَ اللَّهِ حَقَّ الْحَيَاءِ أَنْ تَحْفَظَ الرَّأْسَ وَمَا وَعَى وَتَحْفَظَ الْبَطْنَ وَمَا حَوَى وَتَتَذَكَّرَ الْمَوْتَ وَالْبِلَى وَمَنْ أَرَادَ الآخِرَةَ تَرَكَ زِينَةَ الدُّنْيَا فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدِ اسْتَحْيَا مِنَ اللَّهِ حَقَّ الْحَيَاءِ ) (அதன் பொருள்) இதுவல்ல. அல்லாஹ்விடம் மிகச் சரியான முறையில் வெட்கப்படுவது என்றால், தலையையும் அதில் உள்ள (கண், காது, வாய் முதலிய)வற்றையும், வயிற்றையும் அதற்காக உள்ள (உணவு, பானம் முதலிய)வற்றையும் (ஆகாத முறையில் உட்கொள்ளாமல்) பாதுகாத்து கொண்டே வருவதாகும். மேலும் மரணத்தையும் அதன்பிறகு உண்டான நிலையையும் நினைவில் வைக்க வேண்டும். மறுமையை விரும்பும் மனிதன் உலக அலங்காரத்தை விட்டுவிடுகிறான். (மறுமைக்கே முதலிடம் தருகிறான்) இவ்வாறு செயல்படுபவன் தான் அல்லாஹ்விடம் மிகச் சரியான முறையில் வெட்கப்படுகிறவனாவான் என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2458

 

ஒரு முஸ்லிம் தன்னை எல்லாம் வல்ல இறைவன் இடைவிடாது கண்காணித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னால் இந்த பாவத்தை நாம் எப்படிச் செய்வது என வெட்கப்படுவதே உண்மையான வெட்கம் ஆகும். இந்த வெட்கம் மனிதனை புனிதனாக்குகிறது. குற்றங்களைத் தடுக்கிறது. இந்த வெட்க உணர்வையே இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான்.

 

மாண்புகள்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரை கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக்கொண்டிருந்தார். "நீ அதிகமாக வெட்கப்படுகிறாய் (இதனால் உனக்கு வர வேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன) வெட்கத்தால் உனக்கு இழப்பு தான்" என்பது போல் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அண்ணலார் ( دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ ) "அவரை விட்டு விடு! வெட்கம் இறைநம்பிக்கையில் ஓரம்சமாகும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6118, அபூதாவூத்-4795

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِكُلِّ دِينٍ خُلُقًا وَخُلُقُ الإِسْلاَمِ الْحَيَاءُ ) "எல்லா மார்க்கங்களுக்கும் ஓர் இயல்பு உண்டு. இஸ்லாமிய இயல்பு வெட்கமாகும்." அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4181, முஅத்தா மாலிக், ஹில்யா இமாம் அபூநயீம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ ) வெட்கம் என்பது இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-9, முஸ்லிம்-35

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَا يَسْتَحْيِ مِنْ النَّاسِ، لَا يَسْتَحْيِ مِنْ اللَّهِ ) பிற மனிதனுக்கு வெட்கப்படாதவன் இறைவனுக்கும் வெட்கப்படமாட்டான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, கன்ஸுல் உம்மால், சில்சிலத்துல் ளஈஃபா-3832

 

வெட்கம் என்பது மதிக்கத்தக்க ஒரு குணம். அது இல்லாமல் போனால் தான் கண்டிக்கத்தக்கது. அது எந்தளவு அதிகமாக இருக்குமோ அந்தளவு அவர் சிறந்த பண்பாளர் என்பதற்குண்டான அடையாளமாகும். வெட்கத்தின் அளவைக்கொண்டே இறைநம்பிக்கையின் அளவை கணித்துவிடலாம்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْحَيَاءُ لاَ يَأْتِي إِلاَّ بِخَيْرٍ ) வெட்கம் நன்மையே தரும். நூல்:- புகாரீ-6117

 

ஒரு மரம் அதன் அடிபாகத்தோடு நின்றால் அது பசுமையான மரமாகாது. ஆனால் பல்வேறு கிளைகள், இலைகளுடன் காட்சிதரும் மரமே பசுமையான மரமாகும். அதுபோல் வெட்கம் என்ற கிளையும் நம்முடைய இறைநம்பிக்கை என்ற மரத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் முழுமையான இறைநம்பிக்கையாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا كَانَ الْحَيَاءُ فِي شَيْءٍ إِلاَّ زَانَهُ، وَلاَ كَانَ الْفُحْشُ فِي شَيْءٍ إِلا شَانَهُ ) எந்த விஷயத்தில் வெட்கம் உள்ளதோ அது அதை அழகுபடுத்தியே தீரும். எந்த விஷயத்தில் மானக்கேடு உள்ளதோ அது அதை அலங்கோலப்படுத்தியே தீரும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1974, இப்னுமாஜா-4185, அல்அதபுல் முப்ரத்-601  

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْحَيَاءُ وَالْإِيمَانُ فِي قَرَنٍ وَاحِدٍ ، فَإِذَا سُلِبَ أَحَدُهُمَا اتَّبَعَهُ الْآخَرُ ) வெட்கமும், இறைநம்பிக்கையும் ஒரே பிணைப்பில் இருக்கிறன. அவற்றில் ஒன்று பறிபோனால் மற்றொன்றும் பறிபோய்விடும். அறிவிப்பாளர்:- அனஸ்  (ரலி) நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ

 

ஒளிக்கும், விளக்குக்கும் ஆழமான பிணைப்பு இருக்கிறது. விளக்கு இல்லாமல் ஒளி மட்டும் இருக்கும் என்பது எந்த நிலையிலும் சாத்தியமில்லை. அதுபோல் வெட்கத்துக்கும், இறைநம்பிக்கைக்கும் இடையிலான ஒரு தொடர்பு உண்டு. வெட்கம் இல்லாதவரிடம் இறைநம்பிக்கையும் இருப்பதில்லை.

 

பிரியாத சில வானவர்கள்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِيَّاكُمْ وَالتَّعَرِّي فَإِنَّ مَعَكُمْ مَنْ لاَ يُفَارِقُكُمْ إِلاَّ عِنْدَ الْغَائِطِ وَحِينَ يُفْضِي الرَّجُلُ إِلَى أَهْلِهِ فَاسْتَحْيُوهُمْ وَأَكْرِمُوهُمْ ) நிர்வாணமாக இருப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒருவர் மல ஜலம் கழிக்கும் போது தவிர மற்ற நேரங்களில் உங்களை விட்டு பிரியாத சில வானவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு வெட்கப்படுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2800

 

முஆவியா பின் ஹயதா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் நாயகமே! எங்கள் மறைவிடத்தை நாங்கள் எப்போது மறைக்க வேண்டும்? எப்போது அதைத் திறக்க எங்களுக்கு அனுமதி உண்டு? என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார் ( احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مِمَّا مَلَكَتْ يَمِينُكَ ) "உம் மனைவி மற்றும் அடிமைப்பெண் தவிர (மற்றெல்லோரின் பார்வையைவிட்டு) உம் மறைவிடத்தை பாதுகாத்துக் கொள்!" என்று பதிலளித்தார்கள்.

 

பிறகு அவர்கள் அண்ணலாரிடம் ஆண்கள் மற்ற ஆண்களுடன் இருந்தால் என்ன (செய்ய வேண்டும்) என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார், ( إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَاهَا أَحَدٌ فَافْعَلْ ) "அதை எவரும் பார்க்காத வகையில் பேணிக்கொண்டால் அதை எவரும் பார்க்க முடியாது" என்று பதிலளித்தார்கள்.

 

மேலும் அவர்கள் அண்ணலாரிடம் ஒருவர் மட்டும் தனியாக இருந்தால் என்ன (செய்ய வேண்டும்)” என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார் ( فَاللَّهُ أَحَقُّ أَنْ يَسْتَحْيِيَ مِنْهُ النَّاسُ )  "மக்களுக்கு நீ வெட்கப்படுவதைவிட நீ வெட்கப்பட அல்லாஹ் மிகவும் தகுதியானவனாவான்" என்று பதிலளித்தார்கள். நூல்:- திர்மிதீ-2794, அபூதாவூத்-4017, இப்னுமாஜா-1920, முஸ்னது அஹ்மத்

 

வெட்க உணர்வு நிரம்பப் பெற்ற ஒரு முஸ்லிம் தனியாக இருக்கின்றபோதுகூட தன் மறைவிடத்தை மறைத்துக் கொள்வான். வேறு எவரும் தன்னுடன் இல்லாவிட்டாலும் அந்த நிலையிலும் வானவர்கள் தம்முடன் இருந்து தம்முடைய செயல்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த நிலையிலும் நாம் சங்கடத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. மேலும் மக்களின் பார்வையைவிட்டும் தன் மறைவிடத்தை கட்டாயம் மறைத்து கொள்ள வேண்டும்.

 

ஓர் ஆணின் மறைவிடம் என்பது தொப்புள் முதல் முழங்கால் வரை ஆகும். ஓர் பெண்ணைப் பொருத்தவரை அவளது முகம் மற்றும் முன் கைகள் தவிர மற்ற உறுப்புகள் அனைத்தையும் மறைக்க வேண்டும். முகத்தைகூட குழப்பம் ஏற்படும் என்றிருப்பின் மறைத்திடல் வேண்டும். மருத்துவ சிகிச்சை, சாட்சியம் பகிர்தல் போன்ற அவசியத் தேவைகளுக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வது தடைவிதிக்கப்பட்டுள்ள (தந்தை, உடன்பிறந்த சகோதரர்கள், தாய்மாமன் போன்ற) தனது மஹ்ரம்கள் முன்னிலையில் பர்தா இன்றி இருப்பதற்கு அனுமதி உண்டு. எனினும் அவர்கள் முன்னால் கூட இடுப்பு, முதுகு, வயிறு போன்ற உறுப்புகள் வெளிக்காட்டக்கூடாது.

 

ஒருவனுக்கு தன் மறைவிடத்தை மருத்துவ ரீதியாக கட்டாயமாகத் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போதும்கூட சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் தன் மறைவிடத்தை பார்க்காத வகையில் பேண வேண்டும்.

 

உடல் அமைப்பு வெளியே தெரியும் வகையில் இறுக்கமான ஆடைகள் அணிவதும், உள்ளாடைகள் வெளியே தெரியும் வகையில் மிக மெல்லிசான ஆடைகள் அணிவதும், பிறர் பார்வைப்படும் விதமாக உள்ளாடைகளை உலர வைப்பதும் வெட்க உணர்வுக்கு எதிரானவையாகும்.

 

கன்னிப்பெண்களைவிடவும்

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி)அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப்பெண்களைவிடவும் அதிக வெட்க சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். அண்ணலார் ஏதேனும் ஒன்றை வெறுத்தால் அந்த வெறுப்பை அவர்களது முகத்திலிருந்தே நாங்கள் அறிந்து விடுவோம். நூல்:- புகாரீ-6102, முஸ்லிம்-4639

 

அப்துல்லாஹ பின் உமர் (ரலி)அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல-ஜலம் கழிப்பதற்காக செல்லும் போது (தம் மறைவிடத்தை யாரும் பார்த்து விடாதபடி) பூமியோடு நெருக்கமாக ஆகும் வரையில் தமது ஆடையை மேலே உயர்த்த மாட்டார்கள். நூல்:- அபூதாவூத்-13, திர்மிதீ-14, தாரமீ-668

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (வெட்ட வெளியில்) மலம் கழிக்க நாடினால் யாரும் பார்க்காத தொலைவு வரை செல்வார்கள். நூல்:-அபூதாவூத்-2

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( لاَ يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلاَ الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلاَ يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلاَ تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ ) ஒருவரின் மறைவிடத்தை மற்றவர் பார்க்க வேண்டாமென்றும், ஒரு ஆடைக்குள் இரு ஆண்களோ அல்லது இரு பெண்களோ சேர்ந்து படுக்க வேண்டாமென்றும், ஒருவர் மற்றவரை நிர்வாணமாக பார்க்க வேண்டாமென்றும் கூறினார்கள்.  அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-565

 

அக்கால அரபியர் மல-ஜலம் கழிக்கும் போது வெட்ட வெளியில் உட்கார்ந்து கொண்டும், ஒருவர் மறைவிடத்தை மற்றவர் பார்த்து கொண்டும் மல-ஜலம் கழிப்பது வழக்கமாக இருந்து வந்தது. தமது மறைவிடத்தை பிறர் பார்க்கின்றார்களே என்று வெட்கப்படமாட்டார்கள்; அதனை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள்.

 

இத்தகைய அநாகரிகமான நடைமுறையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள்  அடியோடு தடைசெய்தார்கள். மல-ஜலம் கழிப்பதற்கு மக்கள் நடமாட்டமில்லாத இடத்தைத் தேர்வு செய்வதே அண்ணலாரின் விருப்பமாகும். வெட்கத்தின் காரணமாக அண்ணலார் ஊருக்கு வெளியே வெகுதூரத்தில் சென்று தான் காலைக்கடனை முடித்துவிட்டு வந்துள்ளார்கள்.

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்பு) இறை ஆலயம் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது  அருமை நாயகம் (ஸல்) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களை சுமந்து எடுத்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்த) அண்ணலாரை நோக்கி "கல் சுமப்பதற்கு (வசதியாக) உனது கீழாடையை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்க! என்று கூறினார். அண்ணலாரும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார்கள்.  அண்ணலாருடைய கண்கள் வானத்தை நோக்கி நிலை குத்தி நின்றன. பிறகு எழுந்து ( إِزَارِي إِزَارِي )  "எனது கீழாடை எனது கீழாடை" என்றார்கள். கீழாடையை (எடுத்து கொடுத்த உடனே அதை) இறுக்கமாகக் கட்டிக்கொண்டார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அண்ணலார் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை.  நூல்:- முஸ்லிம்-567

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபோதே அல்லாஹ் வெட்கத்தின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தியுள்ளான்.

 

நமது குழந்தைகளுக்குக்கூட அவர்களின் மறைவிடத்தை மறைக்கும் அளவுக்குண்டான முழுமையான ஆடைகள் உடுத்தித்தான் அழகு பார்க்க வேண்டுமே தவிர, பேஷன் என்ற பெயரில் சிறு பிள்ளைகள் தானே என்றெண்ணி அரைகுறையான ஆடைகளை உடுத்தி விடுவது தவறேயாகும். நமது குழந்தைகளின் ஆடை விஷயத்தில் நாம் கண்டிப்பாக இருக்கும் போது, அவர்கள் வளரும் போதே வெட்க உணர்வைப் பேணியவர்களாக வளர்ந்து ஆளாவார்கள்.

 

ஆண் குழந்தை இது தனது ஆண்குறி என அறிவதற்கு முன்பே அந்த ஆண் குழந்தைக்கு கத்னா செய்து விடுவதே சிறந்தது என்கிறது மார்க்கம்.

 

தம்பதிகள்

 

ஷைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியான நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவரும் இறைவன் தடுத்த கனியைப் புசித்தபோது அவ்விருவரின் மறைவிடங்கள் வெளிப்பட்டது. அவ்விருவரும் தம்பதி என்பதால் அவர்கள் தங்களுக்குள் எதையும் மறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும் வெட்க உணர்வு அவர்களுக்கு இருந்ததால் மரத்தின் இலைகளை வைத்து மறைக்க முற்பட்டனர் என்கிறது தலைப்பில் காணும் திருவசனம்.

 

ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மர்ம உறுப்பை (அவர்களுடன் வாழ்ந்த சுமார் பத்து வருட காலங்களில்) ஒருபோதும் நான் பார்த்ததே இல்லை. நூல்:- ஷமாயில் திர்மிதீ-356, இப்னுமாஜா

 

ஒருவரின் மறைவிடத்தை மற்றவர் பார்க்கக்கூடாது. ஆனால் தம்பதிக்கிடையே இந்தத் தடை கிடையாது. ஆனாலும் வெட்க உணர்வு மேலோங்கி இருந்த காரணத்தால் இவ்வாறு ஆயிஷா (ரலி) அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

 

உடையவனுக்கு மட்டுமே காட்ட வேண்டிய மேனியழகை ஊருக்கே வெளிச்சம் போட்டுக்காட்டும் ஆடையைத்தான் தற்போது நாகரீகம் என்கின்றனர் இன்றைய சில யுவதிகள். இதனை கண்டிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள இன்றைய பெற்றோரில் அல்லது கணவன்மார்களில் சிலர் கண்டுகொள்வதில்லை.

 

நன்றிக் கெட்டவன்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விண்வெளி எனும் மிஃராஜ் பயணத்தில் அண்ணலாருக்கு அல்லாஹ் ஐம்பது வேளைத் தொழுகையை கடமையாக்கினான்.

 

ஐம்பது வேளைத் தொழுகையை பரிசாகப் பெற்றுக் கொண்ட அண்ணலார் திரும்பியபோது நபி மூசா (அலை) அவர்கள் குறுக்கிட்டு நாயகமே! அல்லாஹ்விடம் சென்று ஐம்பது வேளைத் தொழுகையைக் குறைத்து வாருங்கள்! எனக் கேட்டுக் கொண்டார்கள். இதற்காக அண்ணலார் அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் சென்று வந்ததன் பலனாக அல்லாஹுதஅலா ஐம்பது வேளைகளை ஐந்து ஐந்தாக குறைத்து கடைசி ஐந்தில் சுருக்கினான். இறுதியாக நாயகமே! இதனையும் குறைத்து வாருங்கள்! என மூசா (அலை) கூறினார்கள். உடனே நான், ( إِنِّي أَسْتَحِي مِنْ رَبِّي عَزَّ وَجَلَّ أَنْ أَرْجِعَ إِلَيْهِ ) “இதற்குப் பிறகு மீண்டும் (இந்த ஐந்துவேளை தொழுகையையும் குறைக்குமாறு கேட்பதற்கு) மாண்புமிக்க என் இறைவனிடம் செல்வதற்கு நான் வெட்கப்படுகிறேன்” என்று கூறி, அண்ணலார் மறுத்துவிட்டார்கள். அறிவிப்பாளர்:-  மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-444

 

மனிதன், அல்லாஹ்வினால் தனக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை அனுபவிக்கிறான். பிறகு இந்த பேருபகாரிக்கு நன்றி செலுத்துவதில் எவ்வளவு குறை வைத்திருக்குக்கிறேன் என்று எண்ணுகிறான். இதனால் மனிதனின் உள்ளத்தில் ஒருவித உணர்வு நிலை ஏற்படுகிறது அதன் பெயர் தான் வெட்கம் ஆகும்.

 

இதே உணர்வு நிலை தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் மிஃராஜ் பயணத்தின்போது ஏற்பட்டது. அதாவது அல்லாஹ் தந்துக்கொண்டிருக்கின்ற எண்ணிலடங்கா அருட்கொடைகளை அனுபவித்து கொண்டு அதற்கு நன்றியாக ஐந்து வேளைத் தொழுகைகளைக்கூட நாம் தொழ மாட்டோமா? இதனையும் குறைப்பது முறையில்லையே என்று வெட்கப்பட்டு தான், இதனையும் குறைத்துத் தா! என்று என் இறைவனிடம் விண்ணப்பிப்பதற்கு என் மனம் மறுக்கிறது என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

 

இறைவன் வழங்கிய அருட்கொடைகளை அனுபவித்து கொண்டு ஐந்து வேளை தொழுகைகளைக்கூட அல்லாஹ்வின் திருப்திக்காக தொழவில்லை என்றால் அவனைவிட நன்றிக் கெட்டவனும், வெட்கமில்லாதவனும் வேறு யாருமில்லை.

 

குளிக்கும்போது

 

யஅலா பின் உமையா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் திறந்தவெளியில் கீழாடை எதுவும் இன்றி குளித்துக் கொண்டிருந்த ஒருவரை கண்டார்கள். உடனே, அண்ணலார் பள்ளிவாசலுக்கு வந்து மிம்பரில் ஏறி நின்று அல்லாஹ்வை புகழ்ந்த பின்பு, ( إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ ) ‏ "நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுடையவன். மறைவாக இருக்கக்கூடியவன். அவன் (மனிதர்களின்) வெட்க உணர்வையும், மறைத்துக் கொள்வதையுமே விரும்புகிறான். எனவே, உங்களில் ஒருவர் குளித்தால் அவர் ஏதாவது ஒன்றின் மூலம் (தம்மை) மறைத்து கொள்ளட்டும்." என்று கூறினார்கள். நூல்:-அபூதாவூத்-4012, நசாயீ, முஸ்னது அஹ்மத்

 

மக்கள் நடமாடும் வெட்ட வெளியில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் உடல் தேய்த்து குளிக்கும்போது நமது மறைவிடம் நம்மையும் அறியாமல் பிறர் பார்வைக்கு தெரிந்துவிடக்கூடும். தனி அறையில் குளித்தாலும்கூட நிர்வாணமாக குளிப்பதை தவிர்ப்பதே சிறந்தது.

 

குற்றாலம் போன்ற அருவிகளில் குளிக்கும்போது ஜட்டி போன்ற உள்ளாடைகளை மட்டும் அணிந்து அல்லது குளிக்கும்போது மறைவிடம், உடலின் அமைப்பு வெளியே தெரியும் விதத்தில் மெல்லிய ஆடையோ, மிக இறுக்கமான ஆடையோ அணிவதை தவிர்க்க வேண்டும். சுருங்கக் கூறின் எந்தவித நிலையிலும் நமது மறைவிடம் பிறர் பார்வைக்கு தெரியாதவாறு பேணிக்கொள்ள் வேண்டும்.

 

வெளியே செல்லும்போது

 

கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்கள்.  கூறியதாவது. உம்மு ஹல்லாத் என்ற பெண் (நிகாப் மூலமாக) முகத்தை மறைந்த நிலையில் அறப்போரில் வீரமரணமடைந்த தன் மகனை பற்றி கேட்பதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அப்பெண்ணிடம் ஒரு நபித்தோழர் "நீயோ (நிகாப் மூலமாக) முகத்தை மறைத்த நிலையில் உம் மகனைப் பற்றி கேட்க வந்திருக்கிறாயே" என்று வினவினார். அதற்கு அப்பெண், ( إِنْ أُرْزَإِ ابْنِي فَلَنْ أُرْزَأَ حَيَائِ )  "நான் என் மகனை இழந்தாலும் என் மானத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன்." என்று பதிலளித்தார். நூல்:- அபூதாவூத்-2488

 

ஒரு பெண் தன் மகனை இழந்து சோகம் நிரம்பிய நிலையில் கனத்த இதயத்துடன் இதனைப் பற்றி விசாரிக்க வரும்போதுகூட முகத்தை மறைக்கும் நிகாப் அணிவதை மறக்கவில்லை. அக்காலத்துப் பெண்கள் முகத்தை மூடுவதை வெட்கத்தின் சின்னமாக கருதியிருக்கிறார்கள். இவ்வாறான நிலை தற்காலப் பெண்களிடமும் உருவாக வேண்டும்.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كُنْتُ أَدْخُلُ بَيْتِي الَّذِي دُفِنَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَبِي فَأَضَعُ ثَوْبِي ، وَأَقُولُ إِنَّمَا هُوَ زَوْجِي وَأَبِي ، فَلَمَّا دُفِنَ عُمَرُ مَعَهُمْ فَوَاللَّهِ مَا دَخَلْتُهُ إِلَّا وَأَنَا مَشْدُودَةٌ عَلَيَّ ثِيَابِي ، حَيَاءً مِنْ عُمَرَ )  (எனதருமை கணவர்) அருமை நாயகம் (ஸல்) அவர்களையும், என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களையும் நல்லடக்கம் செய்யப்பட்ட (எனது) வீட்டுக்குள்ளே நான் நுழையும்போது உடலைப் போர்த்திக்கொள்ளும் (ஹிஜாப்) அங்கியில்லாமல் நுழையும் பழக்கமுள்ளவளாக இருந்தேன். அதே இடத்தில் பின்னர் உமர் (ரலி) அவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அவர்களுக்கு வெட்கப்பட்டவளாக நான் புர்கா அணியாமல் அங்கு நுழைந்ததில்லை. நூல்:- முஸ்னது அஹ்மத், மஜ்மஉஸ் ஸவாயித், ஹாகிம், மிஷ்காத் பக்-154

 

நபித்தோழியர்கள் உயிருடன் வாழ்வோர் ஒருபுறமிருக்க, மரணமடைந்து நல்லடக்கம் செய்யப்பட்ட ஆண்களுக்குக்கூட வெட்கப்பட்டு புர்காவை கையாண்டுள்ளார்கள். பெண்கள் தர்கா ஸியாரத்துக்கு சென்றாலும்கூட உடலை முழுமையாக மறைக்கக்கூடிய புர்காவை அணிந்து தான் செல்லவேண்டும்.

 

அல்லாஹ் அழிக்க நாடினால்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ مَا شِئْتَ ) முந்தைய இறைத்தூதர்களின் முதுமொழிகளிலிருந்து மக்களுக்கு கிடைக்கப்பெற்றவற்றில் ஒன்று "உனக்கு வெட்கம் இல்லையெனில் நாடியதைச் செய்து கொள்" என்ற முதுமொழியாகும். நூல்:-புகாரீ-6120, அபூதாவூத்-4797

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெட்கம் பற்றி வலியுறுத்தி போதிப்பது புதிய விஷயமல்ல.  இதற்கு முன் வாழ்ந்த இறைத்தூதர்களும் இதனை போதித்துள்ளார்கள் என்பது விளங்குகிறது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا أَرَادَ أَنْ يُهْلِكَ عَبْدًا نَزَعَ مِنْهُ الْحَيَاءَ فَإِذَا نَزَعَ مِنْهُ الْحَيَاءَ لَمْ تَلْقَهُ إِلاَّ مَقِيتًا مُمَقَّتًا فَإِذَا لَمْ تَلْقَهُ إِلاَّ مَقِيتًا مُمَقَّتًا نُزِعَتْ مِنْهُ الأَمَانَةُ فَإِذَا نُزِعَتْ مِنْهُ الأَمَانَةُ لَمْ تَلْقَهُ إِلاَّ خَائِنًا مُخَوَّنًا فَإِذَا لَمْ تَلْقَهُ إِلاَّ خَائِنًا مُخَوَّنًا نُزِعَتْ مِنْهُ الرَّحْمَةُ فَإِذَا نُزِعَتْ مِنْهُ الرَّحْمَةُ لَمْ تَلْقَهُ إِلاَّ رَجِيمًا مُلَعَّنًا فَإِذَا لَمْ تَلْقَهُ إِلاَّ رَجِيمًا مُلَعَّنًا نُزِعَتْ مِنْهُ رِبْقَةُ الإِسْلاَمِ )

அல்லாஹ் ஒரு மனிதனை அழிக்க நாடினால் அவனிடமிருந்து வெட்க உணர்வை எடுத்துவிடுகிறான். வெட்கத்தை இழந்தவன் வெருக்கத்தக்க செயல்களைச் செய்வான். வெருக்கத்தக்க செயல்களைச் செய்பவனிடம் அமானிதம் பேணும் பண்பு இருக்காது. அமானிதம் பேணும் பண்பு இல்லாதவன் மோசடிச் செய்பவனாகவே இருப்பான். மோசடிச் செய்பவனுக்கு இறைவனின் கருணை கிடைக்காது. இறைவனின் கருணை கிடைக்காதவன் சபிக்கப்பட்டவனாக மாறுவான். இறைவனால் சபிக்கப்பட்டவனின் கழுத்திலிருந்து இஸ்லாமிய வளையம் அகற்றப்பட்டுவிடும்.  அறிவிப்பாளர்:- உமர் (ரலி)அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4054

 

ஒரு மனிதன் வெட்கத்தை விட்டு விட்டால் அவன் சிறிய தவறுகளைச் செய்ய ஆரம்பித்து மிகப்பெரிய தவறுகள் வரை சர்வ சாதாரணமாக செய்யும் நிலைக்குப் போய்விடுவான். எந்த தீமைகளும் அவனுக்கு பெரியதாக தெரிவதில்லை. ஏனெனில் தீமைகளில் இருந்து அவனைத் தடுக்கக்கூடிய உண்மையான வெட்கம் என்ற அரண் அவனிடமிருந்து அகன்று விட்டதால் வந்த வினை. நல்லவற்றை சிந்திக்க வேண்டிய அவனது இதயம் இறந்து விடுகிறது.

 

இன்றைய காலகட்டத்தில் மது, மாது, சூது, மோசடி, திருட்டு, போன்ற தீமைகள் அதிகரித்துக்கொண்டே போவதற்கு வெட்கமின்மையே காரணமாகும்.

 

 நற்செயல்களை நேசிக்கும் பண்பையும், தீமைகளை வெறுத்தொதுக்கும் பண்பையும் வெட்கம் தான் கற்றுத் தருகிறது.

 

பெண்களுக்கு கண்ணியம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைவன் தன்னிடமுள்ள வெட்கம் என்ற குணத்தில் ஒரு துளியை எடுத்து அதை) பத்து பங்காக பிரித்து அதில் ஒன்பதை பெண்களுக்கும், ஒன்றை ஆண்களுக்கும் கொடுத்திருக்கிறான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)அவர்கள் நூல்:- தைலமீ

 

ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்த பிறகு தன்னுடைய வெற்றுடலை ஒரு பெட்டிக்குள் வைத்து திரையிட்டு மூடியவாறே எடுத்து செல்லவேண்டும். இரவிலேயே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று மரண சாசனம் செய்து வைத்திருந்தார்கள்.  நூல்:- உசுதுல் ஙாபா 

 

இன்று நம்முடைய நடைமுறையில் இருக்கின்ற ஜனாசா பெட்டியைப் போன்று அன்று இருந்ததில்லை. அன்றைய காலத்தில் எவரேனும் இறந்து விட்டால் வெறுமனே ஒரு பலகையில் வைத்து தூக்கிச்செல்வார்கள். அந்த வெற்றுடல் மக்கள் பார்வைக்கு தெரியும். அதனால் தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் வெற்றுடல் மீது அந்நியர்கள் பார்வை படாதவாறு வைத்து மூடி மறைத்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் , பகலில் நல்லடக்கம் செயதால் தம் வெற்றுடல் மீது அந்நியர்கள் பார்வைப்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சியே தம்மை இரவில் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று இறுதி சாசனம் செய்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடமிருந்தே ஜனாசா பெட்டி பழக்கம் துவங்கியது.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ نَادَى مُنَادٍ مِنْ وَرَاءِ الْحِجَابِ يَا أَهْلَ الْجَمْعِ غُضُّوا أَبْصَارَكُمْ عَنْ فَاطِمَةَ بِنْتِ مُحَمَّدٍ حَتَّى تَمُرَّ ) மறுமை நாளில் ஒரு அழைப்பாளர் வந்து, ஒன்று கூடியிருப்பவர்களே! ஃபாத்திமா (ரலி) அவர்கள் தற்போது சிராத்தல் முஸ்தகீம் பாலத்தை கடக்க உள்ளார்கள். (அந்நியர்களின் பார்வை தம்மீது படுவதை அவர் விரும்புவதில்லை) அதனால் உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்" என்று கூறுவார்.  அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- கன்ஸுல் உம்மால், ஹாகிம், தப்ரானீ, அல்காமில் இமாம் இப்னு அதிய்யி

 

பிற ஆடவர்களின் கண்களை விட்டும் மறைந்து வாழ்வதே பெண்களுக்கு கண்ணியம் என்றெண்ணி  வாழ்ந்த ஃபாத்திமா (ரலி)அவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் விதமாக இவ்வாறு அழைக்கக்கூடிய ஒரு அழைப்பாளரை நியமித்துள்ளான்.

 

ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்களின் பணிப்பெண் வந்து, "அன்னையே! நான் கஅபாவை தவாஃப் செய்யும்போது இரண்டு மூன்று தடவை அஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டேன்" என்று பெருமையுடன் கூறினார். உடனே, ஆயிஷா (ரலி) அவர்கள், ( لَا آجَرَكِ اللَّهُ ، لَا آجَرَكِ اللَّهُ ، تُدَافِعِينَ الرِّجَالَ أَلَا كَبَّرْتِ وَمَرَرْتِ ) "நீ ஆண்களை இடுத்துக் கொண்டா இவ்வாறு செய்தாய்? அல்லாஹ் உனக்கு நற்கூலி தராமல் போகட்டுமாக! (கூட்ட நெரிசலாக இருந்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை நோக்கி) தக்பீர் மட்டும் சொல்லி அந்த இடத்தை விட்டும் நீ கடந்து போயிருக்க வேண்டாமா?" என்று கூறினார்கள். நூல்:- பைஹகீ

 

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் காலங்களில் ஆண்கள் அனைவரையும் ஒதுங்கச் செய்ததன் பிறகே அங்கு சென்று கஃபாவை (தவாஃப்) வலம் சுற்றுவார்கள். 

 

ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடம் மார்க்கம் பயில வரும் மாணவர்களுக்கு திரைக்கு பின்னாலிருந்தே மார்க்க சட்டத் திட்டங்களை போதித்து வந்தார்கள்.

 

ஒருமுறை சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் "வாருங்கள் கஃபாவின் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள 'ஹஜ்ருல் அஸ்வது' கல்லை முத்தமிட்டு வருவோம்" எனக்கூறி அழைத்தனர். அதற்கு அன்னையவர்கள் ஆண்களின் நெருசலில் முட்டிமோதிக் கொண்டு செல்ல நான் விரும்பவில்லை என்றார்கள்.

 

ஜன நெருசலில் ஒருவர் ஒருவரை முட்டிமோதிக் கொண்டு உடலோடு உடல் உரசிக்கொண்டு செல்வது வெட்கமின்மையே ஆகும். இதனை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

 

வெட்கம் என்பது ஆண்களுக்கு அழகு. பெண்களுக்கு பேரழகு. வெட்கம் போனால் மானம் போய்விடும். இன்று அநாகரிகம் தலைவிரித்தாடுவதற்கும், கேவலமான உறவுகள் ஊக்கம் பெறுவதற்கும் வெட்கமின்மையே காரணமாகும்.

 

பலரும் பார்க்கிறார்களே என்ற கூச்சம் கொஞ்சமும் இல்லாமல் பொது இடங்களிலியே பாலியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை இன்றைய இளைய தலைமுறையினர் பெருமையாகக் கருதுகின்றனர்.

 

அதிலும் இளம் பெண்களிடம் பெண்களுக்கே உரிய கூச்சம் எடுபட்டுப்போய் பல நாட்களாகின்றன. நண்பர்கள் என்ற பெயரில் அந்நிய ஆண்களுடன் ஆடிப்பாடி கூடி கூத்தடிப்பதும், மது அருந்துவதும் தான் புரட்சி பெண்ணுக்கு இலக்கணம் என  அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். இறுதியில் காமுகர்களிடம் கற்பை இழப்பதுக்கூட அவர்களுக்கு புரட்சி தான்.

 

ஆபாசங்கள்

 

(நபிப் பட்டம் கிடைக்கப்பெற்ற ஆரம்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களைக் கண்டு பயந்துப்போய் இருந்தார்கள் ) ஒருநாள் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் நாயகமே! உங்களிடம் (இறைவேதத்தைக்கொண்டு வரக்கூடிய) வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரும்போது என்னிடம் கூறுங்கள் என்றார். அவ்வாறே ஒருநாள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தபோது அண்ணலார் ( يَا خَدِيجَةُ، هَذَا جِبْرِيلُ )  “கதீஜா! இதோ, ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்துவிட்டார்” என்று கூறினார்கள்.

 

அப்போது அன்னையார் அண்ணலாரை தம் வலது தொடையில் அமரச் சொன்னார்கள். அன்னையார் ( هَلْ تَرَاهُ )  “இப்போது நீங்கள் அவரை பார்க்கமுடிகிறதா?” என்று வினவ, அண்ணலார் ஆம்! என்று பதிலளித்தார்கள். மீண்டும் அன்னையார் அண்ணலாரை தம் இடது தொடையில் அமரச் சொன்னார்கள். இப்போது நீங்கள் அவரை பார்க்கமுடிகிறதா?” என்று அன்னையார் வினவ, அண்ணலார் ஆம்! என்று பதிலளித்தார்கள். பிறகு அன்னையார் தம் முகத்திரையையும், நெஞ்சு ஆடையையும் (மாராப்பையும்) விலக்கிவிட்டு இப்போது ஜிப்ரீல் (அலை) இருக்கின்றாரா? என்று வினவ, அண்ணலார் 'இல்லை' என்று பதிலளித்தார்கள்.

 

அன்னையார், ( وَاللَّهِ إِنّهُ لَمَلْكٌ وَمَا هُوَ بِشَيْطَانٍ )  “அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக இவர் வானவர்தான். இவர் ஷைத்தானாக இருக்கமுடியாது” ஏனென்றால் வானவர்கள் பெண்கள் அலங்கோலமாக இருப்பதை காண வெட்கப்பட்டு அவ்விடத்தை விட்டு சென்றுவிடுவார்கள். ஷைத்தான் தான் பெண்கள் அலங்கோலமாக இருப்பதை காண விரும்புவான் என்று கூறினார். நூல்:- உஸுதுல் ஙாபா, சியரு அஃலாமுந் நுபலா, மஜ்மஉஸ் ஸவாயித்

 

இன்று வெட்க உணர்வு குறைந்து போய் ஆபாசங்கள் அதிமானதற்கு  டி.வி., கணினி, கைப்பேசி, ஆகியவற்றுக்கும் பெரும் பங்குண்டு.

 

சினிமா படங்கள் டி.வி.யில் வரும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இவை அனைத்தும் கதையைவிட சதைக்கு முக்கயத்துவம் தருபவையாக இருக்கிறது.

 

சோப், பிளேடு, ஷேவிங் க்ரீம், சின்னச்சின்ன பொருட்களின் விளம்பரங்களில்கூட பெண்களை பாலியல் பண்டமாக பாவித்து அவர்களை அருவருக்கத்தக்க அறை நிர்வாணக் கோலமாகவே அடிக்கடி காட்டப்படுகிறது.

 

டி.வி. யின் பாதிப்புகள் சிறுவ சிறுமிகளிடம் வீட்டை விட்டு ஓடிப்போகும் மனநிலை சமீப காலமாக பெருகி வருகிறது. வண்ணத்திரை, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் பெரும்பாலும் பண்பாட்டு சிதைவையும், மரியாதை குலைவையும், பாலியல் ஒழுக்க மீறல் பரவலையுமே மையமாகக் கொண்டுள்ளன.

 

இணைய தளங்களில் உள்ள அருவருப்பான ஆபாசக் காட்சிகளை கணினி, கைப்பேசிகள் மூலமாக பார்ப்பதும் அதை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் சாதாரணமாகி வருகிறது.

 

பெற்றோர், சகோதர சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் சரிதமாக சேர்ந்து சினிமா மற்றும் டி.வி. வரும் பிற நிகழ்ச்சிகளை பார்க்கும்போது அதில் ஏதேனும் ஆபாசக் காட்சிகள் வந்து விட்டால் ஆரம்பத்தில் அது சற்று அருவருப்பாக நமக்கு தோன்றும். வெட்க உணர்வால் நம்மையும் அறியாமல் அப்போது நமது உடல் நெளியும். ஆனால் அதுவே தொடர்நிலையாக ஆகுமானால் அந்த அருவருப்பான காட்சிகளைப் பார்த்து பார்த்து பழகிப்போய் அந்த அருவருப்பான காட்சிகளை ரசிக்கும்படியாக மனநிலை மாறிவிடும். ஆரம்பித்தில் தவறாக தெரிந்தது இப்போது தெரியவில்லையெனில் நம்மிடமுள்ள வெட்க உணர்வு மங்கிக்கொண்டே வருகிறது என்று விளங்க வேண்டும்.

 

சினிமாவிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும் அரைகுறை ஆடைகளுடன் வலம் வரும் நடிகைகளை ரசிப்பதும் கண்டு களிப்பதும், அத்தகைய காட்சிகளை மனைவி-மக்களுடன் சகிதமாக சேர்ந்து கண்டுகளிப்பதும் வெட்கமின்மையின் வெளிப்பாடு தானே! யோசிக்க வேண்டாமா?

 

நமது குடும்பத்தினர் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்ற ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதற்கு நாமே அனுமதிப்பது மாபெரும் பாவச்செயலாகும்.

 

மக்கள் தன்னை எப்படி பார்த்துவிடக்கூடாது என்று எண்ணுவோமோ, அதை தனிமையிலும் தவிர்த்துக் கொள்வதுதான் வெட்கம் ஆகும்.

 

கல்வி கற்கும்போது

 

அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்பட மாட்டான். திருக்குர்ஆன்:-33:53

 

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நாயகமே! சத்தியத்தை சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா? என்று வினவினார். அதற்கு அண்ணலார், ( نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ ) "ஆம்! அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமை தான்)"என்று பதிலளித்தார்கள்.  நூல்:-புகாரீ-6121

 

ஆயிஷா (ரலி) அவர்கள் அஸ்மா பின்த் ஷகல் (ரலி) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் மாதவிடாயிலிருந்து (நீங்கிக் கொள்ள) தாம் எவ்வாறு குளிக்க வேண்டும் என்று வினவினார். அண்ணலார் "அப்பெண்ணுக்கு குளிக்கும் முறையை விளக்கினார்கள். பிறகு கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால் தூய்மைப்படுத்திக் கொள்!" என்று கூறினார்கள்.

 

அதற்கு அப்பெண் அதை வைத்து நான் எப்படி தூய்மைப்படுத்த வேண்டும்? என்று (மீண்டும்) வினவினார். அண்ணலார், ( سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِينَ بِهَا )  (வெட்கப்பட்டவாறு சுப்ஹானல்லாஹ்) அல்லாஹ் தூய்மையானவன் அதனால் தூய்மைப்படுத்திக் கொள்! என்று (மீண்டும்) கூறினார்கள். உடனே நான் "இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள்!" என்று பிறர் காதில் விழாதவாறு இதை இரகசியமாக கூறினேன்.

 

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( النِّسَاءُ نِسَاءُ الأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ ) பெண்களிலேயே மிகச்சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்கு தடையாக இருந்ததில்லை. நூல்:- முஸ்லிம்-552

 

"வெட்கப்பட்டவன் கல்வி கற்கமாட்டான்" என்று எச்சரிக்கிறது ஒரு நபிமொழி.

 

மாதவிடாய், பிள்ளைப்பேறு தீட்டு போன்ற பெண்களின் அந்தரங்க சட்டங்கள் அதிகமானவற்றை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூலமாக ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த சமுதாயத்திற்கு போதித்துள்ளார்கள். அன்னையவர்கள் அன்று அதில் வெட்கப்பட்டு போதிக்காமல் விட்டிருந்தால் இன்று நம் நிலை என்னவாகும்? குறிப்பாக அந்தரங்க விஷயங்களில் உள்ள மார்க்கச் சட்டங்களை கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் வெட்கப்படக்கூடாது.

 

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( لاَ يَتَعَلَّمُ الْعِلْمَ مُسْتَحْيٍ وَلاَ مُسْتَكْبِرٌ ) (ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கு) வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது எனக் கருதி) அகந்தை கொள்பவரும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக்கொள்ள மாட்டர். நூல்:- புகாரீ- 130

 

நம்மில் பலருக்கு திருக்குர்ஆன் ஓத தெரிவதில்லை. இத்தகையவர்களிடம் நீங்கள் திருக்குர்ஆன் ஓதிக் கற்றுக்கொள்ள வேண்டியது தானே என்று வினவினால், "இந்த வயசுல போயி குர்ஆனை கத்துத்தாங்கன்னு யார்ட்டயாவது சொல்ல வெட்காமாயிருக்கு" என்பார்கள் ஆனால் இந்த வயசிலும் கணினி, கைப்பேகி போன்ற உலக விஷயங்களை கற்றுக் கொள்ள வெட்கப்பட மாட்டார்கள்.

 

தயக்கமின்றி

 

ஒருமுறை மாபெரும் அறிஞரான இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் 48 கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றில் 32 கேள்விகளுக்கு எனக்கு தெரியாது என்று பதில் கூறினார்கள். மற்றொரு முறை 40 கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் 5 கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கூறினார்கள். நூல்:- அஸ்ஸுஹ்து இமாம் அஹ்மது பின் ஹன்பல்  

 

நம்மிடம் ஏதேனும் ஒன்றை பற்றி வினவப்பட்டால் நமக்கு தெரிந்தால் அதை பற்றி விவரிக்கலாம். தெரியவில்லை என்றால் எனக்கு அதைப்பற்றிய ஞானம் இல்லை. விரும்பினால் பிறரிடம் கேட்டு சொல்கிறேன் என்று உடனடியாக தயக்கமின்றி சொல்லிவிட வேண்டும். இதில் வெட்கப்படக் கூடாது. தெரியாததை தெரிந்தது என்று பொய் சொல்லி, குருட்டுத்தனமாக ஏதேனும் ஒன்றை பதிலாக சொல்லி சொதப்பக்கூடாது. இதனால் சில நேரங்களில் சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.

 

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அல்லது அதைவிட அற்பமானதையோ உதாரணமாகக் கூறுவதற்கு வெட்கப்பட மாட்டான். திருக்குர்ஆன்:- 2:26

 

சொல்லப்படும் கருத்துக்களைத் தெளிவுப்படுத்துவதற்காக திருக்குர்ஆனில் பல இடங்களில் சிலந்தி, , கொசு, போன்றவை உதாரணங்களாக தரப்பட்டுள்ளன. அவற்றை சுட்டிக்காட்டி இறைமறுப்பாளர்கள் "இத்தகைய அற்ப பூச்சிகளை உதாரணங்களாக தரப்பட்டுள்ளனவே! இது எப்படி இறைவனின் வாக்காக இருக்க முடியும்? என்று ஆட்சேபித்தனர். அவர்களுக்கு பதிலாகவே மேற்காணும் திருவசனம் அருளப்பட்டது.

 

உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் அல்லாஹ் வெட்கப்படுவதே இல்லை. இதேபோல் முஸ்லிம்கள் உண்மை எது, பொய் எது என்று நிரூபிப்பதில் வெட்கப்படவே கூடாது. இதில் எதிர்படும் எதிர்விளைவுகளைக் கண்டு அஞ்சவும் கூடாது.

 

இஸ்லாமிய முறைப்படி வாழவோ, தன்னை ஒரு இஸ்லாமியன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவோ, தொப்பி அணியவோ, சுன்னதான முறைப்படி தாடி வைக்கவோ, உடலை முழுமையாக மூடும்படியான புர்கா அணியவோ வெட்கப்படக்கூடாது.

 

எதிரிகளை கண்டு அஞ்சுவது வெட்கமல்ல. அது கோழைத்தனம். பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிவில்லாமல் பின் வாங்குவது வெட்கமல்ல. அது பேடித்தனம். உரக்கப்பேசவேண்டிய இடத்தில் பேசாமல், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படாமல், கண்டிக்க வேண்டிய சமயத்தில் கண்டிக்காமல் இருப்பதெல்லாம் வெட்கமல்ல. இவையெல்லாம் ஏமாளித்தனம்.

 

வெட்கத்தை முறையாகப் பேணி வாழும் நற்பண்பாளர்களாக அல்லாஹுதஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!                                                                                                                                                                                                               

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை,  சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...