Search This Blog

Sunday, 18 September 2022

நபிகளாரின் நகல்கள்

 

நபிகளாரின் நகல்கள்

 

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ


(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்.  உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.     திருக்குர்ஆன்:- 3:31

 

உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் பாசம் என்ற உணர்வை அல்லாஹ் படைத்துள்ளான். மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பாசம், பிரியம் என்ற உணர்வை இறைவன் இறைத்தூதர்கள், நல்லோர்கள் ஆகியோர் மீது செலுத்துவதே வெற்றிக்குரிய வழியாகும்.

 

தலைவரோ, தொண்டரோ, படித்தவரோ, பாமரரோ, படை வீரரோ, தளபதியோ, ஆசிரியரோ, மாணவரோ, செல்வந்தரோ, ஏழையோ, ஆட்சியாளரோ, ஆளப்படுவோரோ, ஞானியோ யாராக இருந்தாலும் அனைவருக்கும் சரியான முறையான வழிநடக்க உதவும் ஓர் அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தான் அமைந்திருக்கிறது.

 

எனவேதான், இறைவனை நேசிப்பவராக இருக்கும் அனைவரும் என்னை பின்பற்றுங்கள் என்று எடுத்துரைக்குமாறு இறைவன் தன் தூதருக்கு அறிவித்திருக்கின்றான்.

 

நிழல்கள்

 

நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவாறே அவர்களும் இறைநம்பிக்கை கொண்டால், நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். திருக்குர்ஆன்:- 2:137

 

அல்லாஹுத்தஆலா, நபித்தோழர்களின் இறைநம்பிக்கையை அங்கீகரித்துள்ளான். அவர்களைப் போல் இறைநம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே நேர்வழி அடைந்தவர்கள் என்று உறுதி செய்கின்றான். நபித்தோழர்களின் இறைநம்பிக்கையை அளவுகோலாகக் கொண்டு மற்றவர்களின் இறைநம்பிக்கைக்கு அங்கீகாரம் தருகின்றான்.

 

இங்கு இறைநம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கைகளை மட்டும் குறிப்பிடாது. அவற்றுடன் வழிபாடுகள், அழகிய செயல்கள் ஆகியவற்றும் அடங்கும். இதன் மூலம் நபித்தோழர்களைப் போல் மார்க்கத்தை புரிந்து செயல்படுத்தியவர்கள் மட்டுமே உண்மையில் நேர்வழி அடைந்தவர்கள் என்று அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

 

தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபித்தோழர்கள் எவ்விதம் பார்த்தார்களோ நேசித்தார்களோ அதைப்போன்று நாமும் வாழ்க்கையில் கடைபிடித்தால் தான் நமது இறைநம்பிக்கையும் பரிபூரணம் அடைந்து வெற்றி பெற முடியும்.

 

ஒவ்வொரு மனிதனும் மற்றொரு மனிதனுக்கு அடிபடிய வேண்டும் என்றால் சற்று தயங்குவான். ஆனால், நமக்கு பிரியமானவர்கள் ஒரு வார்த்தை சொன்னாலோ அல்லது கண்சாடை செய்தாலோ அதை செய்து முடிப்பதில் தன் உயிரையும் பணயம் வைப்பான். இதுபோல் தான் நபித்தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை எப்படி எல்லாம் பார்த்தார்களோ அப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். அவர்களை நிழலாகத் தொடர்ந்தார்கள்.

 

கல்லுக்கு மரியாதையல்ல!

 

ஆபீஸ் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லை முத்தமிட்டு விட்டு, ( إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ‏ ) நான் உன்னை முத்தமிடுகிறேன். நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். நூல்:-  புகாரீ-1597, முஸ்லிம்-2438, திர்மிதீ-788

 

ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல்லை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொட்டு முத்தமிட்டார்கள். அதை பின்பற்றிய இன்று ஹஜ் யாத்ரீகர்களும் அதைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அக்கல்லை முஸ்லிம்கள் வழிபடுகிறார்கள் என எவரும் கருதி விடக்கூடாது. விவரம் தெரியாதவர்கள் அவ்வாறு என்ன கூடும் என்பதாலேயே உமர் (ரலி) அவர்கள் இந்த விளக்கத்தை அறிவித்தார்கள்.

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் குர்பானிக்கான பிராணிகளை (மதீனாவுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள) "குதைத்" எனும் ஊரிலிருந்து விலைக்கு வாங்கி வந்தார்கள். அதனால் அவ்விதமே தாமும் செய்து வந்ததாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்:-  அபூதாவூத், திர்மிதீ-831

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணிகளை அறுத்த அதே இடத்திலேயே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குர்பானி பிராணிகளை அறுத்து வந்தார்கள். நூல்:- புகாரீ-5551

 

ஸைத் பின் அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தன் ஆடையை பொத்தான்களால் பூட்டப்படாத நிலையில் தொழுதிட கண்டேன். நான் அவரிடம் அதற்குரிய காரணம் விளங்கியபோது,  ( رَاَيتُ رسول الله صلى الله عليه وسلم يَفعَلُهُ ) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்நிலையில் (தொழுதிட) கண்டேன் என்று பதிலளித்தார்கள். நூல்:- ஸஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-43

 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் நாங்கள் பயணம் செய்தோம். அவர்கள் ஓர் இடத்தை விரைந்து கடந்தார்கள். இவ்வாறு ஏன் செய்தீர்கள்? என்று வினவப்பட்டது. ( رَاَيتُ رسول الله صلى الله عليه وسلم فَعَلَ هَذَا فَفَعَلتُ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை கண்டேன். அதனால் நானும் செய்தேன் என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், ஸஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-44

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த காரியத்தை எந்த இடத்தில் செய்தார்களோ அதை எந்த காரண காரியத்தையும் ஆராயாமல் அப்படியே பின்பற்றும் எண்ணம் கொண்டவர் தான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள். இவரைப் போன்று தான் பல நபித்தோழர்கள் இருந்தனர்.

 

யூனுஸ் இப்னு மய்ஸரா (ரஹ்) கூறினார்கள். நான் நபித்தோழர் அபூஸயீத் (ரலி) அவர்களுடன் குர்பானி ஆடு வாங்கச் சென்றேன். அப்போது அபூஸயீத் (ரலி) அவர்கள் இலேசாக கறுப்பு நிறம் கலந்த, நடுத்தரமான அளவு கொண்ட ஒரு ஆட்டை சுட்டிக்காட்டி இதை எனக்கு வாங்குங்கள். காரணம், இது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கொடுத்த குர்பானி ஆட்டைப் போன்று உள்ளது என்றார்கள். நூல்:- இப்னுமாஜா

 

ஒருதலை காதல் பெரிதன்று

 

"நீ நேசிப்பது பெரிதன்று. உன்னை பிறர் நேசிப்பது பெரிது" என்று தத்துவ ஞானிகள் கூறுவர். உலக மக்களில் பெரும்பாலோர் இறைவனின் நேசிப்பதாகவும், காதலிப்பதாகவும் கூறுவர். இந்த ஒருதலைக் காதலால் மட்டும் இறைக்காதலை பெற்றிட முடியாது. மாறாக, இறைவன் எவரை நேசிப்பதாக கூறுகிறானோ அவர்கள் மட்டும்தான் இறைக்காதலை பெற்று, வெற்றி அடைய முடியும்.

 

இறைவன் நம்மை நேசித்து, நமது பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில் இறைத்தூதர் அகில உலக தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றித்தான் ஆக வேண்டும்; வேறு வழியில்லை என்பதைத்தான் தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.

 

இதனை நபித்தோழர்கள் முழுமையாக விளங்கிக் கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அனுமதித்தது ஆகிய அனைத்தையும் ஒன்று விடாமல் பின்பற்றினார்கள். அதனால் அந்த நபித்தோழர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக கூறி அவர்களுக்கு புகழ் மாலை சூட்டினான்.

 

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர்.  திருக்குர்ஆன்:- 9:100

 

உணவில் விருப்பு வெறுப்பு

 

அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் உணவு கொண்டு வரப்பட்டால் அதை உண்டு விட்டு அதில் எஞ்சியதை எனக்கு கொடுத்து அனுப்புவார்கள். ஒரு நாள் கொஞ்சமும் உண்ணாமலேயே கொடுத்து அனுப்பினார்கள். ஏனெனில், அதில் வெள்ளை பூண்டு இருந்தது.

 

எனவே இது குறித்து நான், "அது (வெள்ளைப் பூண்டு) தடை செய்யப்பட்டதா?" என்று வினவினேன். அதற்கு நபியவர்கள், ( لاَ وَلَكِنِّي أَكْرَهُهُ مِنْ أَجْلِ رِيحِهِ ) "இல்லை; அதிலிருந்து வரும் வாடையின் காரணமாக அதை நான் உண்ண விரும்பவில்லை" என்று கூறினார்கள். நான், "அவ்வாறாயின் தாங்கள் விரும்பாததை நானும் விரும்ப மாட்டேன்" என்று கூறினேன். நூல்:- முஸ்லிம்-4173

 

வெள்ளைப் பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. வெள்ளை பூண்டு வெப்பமூட்டும் ஒரு பொருள். சளியை போக்க வல்லது. பக்கவாத நோய்க்கு சிறந்த மருந்து. குரல்வலையை தூய்மையாக்கும். இருமல், பல் வலி, நெஞ்சுவலி ஆகியவற்றுக்கு நல்லது. உண்பது தவறாகாது.

 

வெள்ளைப் பூண்டை சாப்பிட்டு அதனால் வரும் வாய்வாடையால் இறை அறிவிப்பு (வஹி) கொண்டு வருவதின் மூலம் அடிக்கடி சந்திக்கும் வானவருக்கு தொந்தரவு ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதை தவிர்த்து வந்தார்கள். வேறு நோக்கமல்ல.

 

அபூ அய்யூப் (ரலி) அவர்களை வானவர்கள் சந்திக்க போவதில்லை. ஆனாலும், மருத்துவ பலன் உள்ள வெள்ளைப் பூண்டை தவிர்த்தற்காக எந்த காரணத்தையும் சொல்லாமல் நபியவர்கள் தவிர்த்துக் கொண்டதால் தானும் தவிர்த்துக் கொண்டதாக கூறியுள்ளார்கள்.

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. தையல்காரர் ஒருவர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். நபியவர்களுடன் நானும் சென்றேன். அப்போது சுரைக்காய் உள்ள குழம்பு ஒன்று கொண்டு வரப்பட்டது.  நபியவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயை துலாவுவதை கண்டேன். அன்றிலிருந்து நானும் சுரக்காயை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நூல்:- புகாரீ-2092, முஸ்லிம்-4147

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வாய் வார்த்தைகளால் மட்டும் புகழ்ந்து கொண்டிருந்தால் போதாது. நபியவர்களின் வழிமுறை நமது வாழ்க்கை முறையாக வேண்டும்.

 

கோதுமை ரொட்டி, பேரிச்சம்பழம், சுரைக்காய், வெள்ளரிக்காய், தேன் போன்ற உணவுப்பொருள்களை உண்ணும்போது இவைகளை எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் சாப்பிட்டுள்ளார்கள். அதனால் நானும் சாப்பிடுகிறேன் என்ற (நிய்யத்) எண்ணத்தோடு சாப்பிட்டால் அதற்கும் ஒரு சுன்னத்தை பின்பற்றிய நற்கூலி வழங்கப்படலாம்.

 

உண்ணும் உணவில் கூட தனக்கு பிடித்தமானது என்ற சுய விருப்பம் இல்லாமல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விருப்பம் தான், தன் விருப்பம் என்று வாழ்ந்த நபித்தோழர்களை புகழாமல் இருக்க முடியவில்லை.

 

வேறு திசையை நோக்கி

 

இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அனஸ் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்து திரும்பியபோது அவர்களை நாங்கள் எதிர்கொண்டோம். "அய்னுத் தம்ர்" எனும் இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் கழுதையின் மீது அமர்ந்தவாறு நஃபில் தொழுவதை நாங்கள் நான் கண்டேன். அவர்களுடைய முகம் கிப்லா அல்லாத திசையை நோக்கி அமர்ந்திருந்தது.

 

நான் அவர்களிடம் கிப்லா அல்லாத வேறு திசையை நோக்கி தொழுதது குறித்து வினவினேன். அதற்கு அவர்கள், ( لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَهُ لَمْ أَفْعَلْهُ ) "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்தில் இவ்வாறு செய்வதை நான் பார்த்திராவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-1100, முஸ்லிம்-1259

 

வாகனத்தில் பயணிக்கும் போது (ஃபர்ளு) கட்டாயத் தொழுகையை வாகனத்தில் தொழக்கூடாது. (நஃபில்) கூடுதல்  தொழுகையாக இருப்பின் வாகனம் எத்திசையில் செல்கிறதோ அத்திசையை செய்ய முன்நோக்கி தொழலாம். ஆகவே, வாகனத்தில் தொழும் போது கிப்லா திசையை முன்னோக்க வேண்டும் என்ற கட்டாயம் நஃபிலுக்கு கிடையாது என்ற சட்டம் இந்த இதுபோன்ற நபிமொழிகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சொல்வதுதான் சட்டம் அதையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்பதை நபித்தோழர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

 

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள். திருக்குர்ஆன்:- 33:21

 

திருத்தும் முறை

 

ஹிலால் பின் யஸாஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் சாலிம் பின் உபைத் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் தும்மிய பின் அவர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அப்போது சாலிம் (ரலி) அவர்கள் அவருக்கு, ( وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ ) "உன் மீதும், உன் தாயின் மீதும் சாந்தி உண்டாகட்டும்" என்று பதிலளித்தார்கள்.

 

மேலும் சாலிம் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை உமக்கு பதிலாக தந்தேன். ஒருமுறை நாங்கள் நபியவர்களுடன் அமர்ந்திருந்தபோது அச்சபையில் ஒருவர் தும்மிய பின் அவர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அதை செவியற்ற நபியவர்கள், ( وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَحْمَدِ اللَّهَ ) "உன் மீதும், உன் தாயின் மீதும் என்று கூறிவிட்டு, உங்களில் ஒருவர் தும்மினால் அவர் 'அல்ஹம்துலில்லாஹ்' என அல்லாஹ்வை புகழட்டும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-5031

 

ஒருவர் அறியாமையினால் ஒன்றை தவறாக சொல்லும்போது அது தவறு என்று உடனே சொல்லிவிடாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த விதத்தில் தவறான ஒன்றை திருத்திக் கொடுத்தார்களோ அதே முறையை பின்பற்றி தவறை சுட்டிக்காட்டி உள்ளார் இந்த நபித்தோழர்.

 

அல்லாஹ்வின் இறுதித் தூதர் அகில உலகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைத்தான் (சுன்னத்) நபிவழி என்று சொல்கிறோம். நேரான வழியில் செல்ல விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் நபிவழியை பின்பற்றுவது கடமையாகும். திருக்குர்ஆனை முழுமையாக அறிந்து கொள்ள நபியவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து இருப்பது அவசியமாகும்.

 

நீங்கள் நேரான வழியை அடைய அவரையே (இறைத்தூதரையே) பின்பற்றுங்கள். திருக்குர்ஆன்:- 7:58

 

யஸீத் பின் அபி உபைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. சல்மா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்கு பக்கத்தில் இருந்த தூண் அருகே தொழுவதை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் நான், "அபூ முஸ்லிம்! தாங்கள் தூணுக்கு அருகே தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேன். (என்ன காரணம் என்று கேட்டேன்?)

 

அதற்கு சலமா (ரலி) அவர்கள், ( فَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا‏ ) "அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இந்த தூணுக்கு அருகே தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் தொழ இந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-502, முஸ்லிம்-881

 

நபித்தோழர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் உறங்கியதும் விழித்ததும் எப்படி? உண்டதும் பருகியதும் எப்படி? முஸாபஹா (கைலாகு) செய்தது எப்படி? சலாம் (முகமன்) கூறியது எப்படி? தொழுகை, நோன்பு போன்ற பிற வணக்கங்களை எவ்வாறு நிறைவேற்றினார்கள்? வீட்டின் நாட்டின் பொறுப்புக்களை எவ்விதம் நிர்வாகித்தார்கள்? என்று திறந்த புத்தகத்தைப் போன்று இருந்த நபியவர்களின் வாழ்க்கை முறையை முழுமையாக கவனித்து வந்தார்கள்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றுவதிலும், கீழ்ப்படுவதிலும் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்த நபித்தோழர்கள் நபியவர்கள் மீது அதிக அன்பு வைத்து, சிறந்த வாழ்க்கையின் நெறிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

 

அங்க அசைவு

 

அபூ உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் சல்மான் (ரலி) அவர்களுடன் ஒரு மரத்தின் கீழ் இருந்தேன். அப்போது அவர்கள் மரத்தின் காய்ந்த கிளை ஒன்றை பிடித்து உலுக்கினார்கள். அதிலிருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்தன. என்னை நோக்கி, "அபூ உஸ்மானே! நான் ஏன் இப்படி செய்தேன் என்று நீர் என்னிடம் கேட்கவில்லையே?" என்றார்கள்.

 

ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று நான் கேட்டதற்கு, அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் மரத்தடியில் நின்று இருந்து கொண்டிருந்தேன். அப்போது நபியவர்கள் இவ்வாறே மரத்தின் காய்ந்த கிளை ஒன்றைப் பிடித்து உலுக்கினார்கள். அதிலிருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்தன. அப்போது, "சல்மானே! நான் ஏன் இப்படி செய்தேன் என்று நீர் கேட்கவில்லையே?" என்றார்கள்.

 

ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று நான் கேட்டதற்கு, "ஒரு முஸ்லிம் நன்றாக அங்கத்தூய்மை செய்து ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் இந்த இலைகள் உதிர்வது போன்று அவருடைய பாவங்கள் உதிர்ந்து விடும்" என்று நபியவர்கள் கூறினார்கள். நூல்:- நசாயீ, முஸ்னது அஹ்மத், தப்ரானீ

 

அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அலீ (ரலி) அவர்கள் சவாரி செய்வதற்காக ஒரு வாகனம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் அவ்வாகனத்தில் ஏறுவதற்காக அதன் வளையத்தில் கால் வைத்ததும் "பிஸ்மில்லாஹ்" என்று கூறினார்கள். பிறகு அந்த வாகனத்தின் முதுகில் அமர்ந்ததும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள். பிறகு திருக்குர்ஆன் (43:13) வசனத்தை ஓதினார்கள்.

 

பிறகு, "அல்லாஹு அக்பர்" என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு ( سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ ) என்று கூறிவிட்டு சிரித்தார்கள். அப்போது அவர்களிடம் ஏன் சிரித்தீர்கள் என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ( رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَلَ كَمَا فَعَلْتُ ) “(வாகனத்தில் ஏறும்போது) இப்போது நான் செய்ததைப் போன்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்துள்ளேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-2602

 

நபித்தோழர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு அங்க அசைவையும் (Body Language) மிகத் துல்லியமாக கவனித்து அதன்படியே செயல்பட்டிருக்கிறார்கள்.

 

ஒரு மனிதனுக்கு மற்றொருவரின் மீது அன்பு ஏற்பட்டு விட்டால் அவருடைய ஒவ்வொரு அசைவும் இவருக்கு இன்பமாகவே இருக்கும். மேலும், தனது அன்பிற்குரியவர் செய்வதை போலவே தானும் செய்ய வேண்டும் என்று மனம் விரும்பும். அன்பின் இன்பத்தை சுவைத்தவர்களே இதன் உண்மையை உணர முடியும்.

 

நபித்தோழர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் சொல் மற்றும் செயலை பிறருக்கு அறிவிக்கும் போதுகூட நபியவர்கள் எதை செய்தார்களோ அதையும் செய்து காட்டி நபியவர்களிடமிருந்து நேரடியாக பார்ப்பவைகளை போன்ற அல்லது கேட்பவைகளைப் போன்ற ஒரு வித உணர்வை ஏற்படுத்துவார்கள்.

 

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்வதே நபியவர்கள் மீது நாம் கொள்ளும் உண்மையான அன்பின் அடையாளமாகும்.

 

எந்த நேசம் நபியவர்களின் வழிமுறைகளைப்படி (சுன்னத்) வாழ கற்பிக்கவில்லையோ அது வெறும் பொய்யும் நயவஞ்சக செயலுமாகும்.

 

எந்த நேசம் நபியவர்களின் வழிமுறையின் அருகில் கூட அழைத்து செல்லவில்லையோ அதை ஏமாற்றுதலும், முகஸ்துதியுமாகும். 

 

எனவே, நாம் வாழ்க்கையில் வெற்றி பெற, நம் வழி நபிவழி என்று சபதமெடுத்து அதற்காக முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு அருள்பாலிப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951  

 

1 comment:

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...