சொர்க்கத்துச் சுந்தரிகள்
وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ
நாம் அவர்களுக்கு
("ஹூருன் ஈன்" என்னும்) கண்ணழகிகளாகிய கன்னிப் பெண்களை திருமணம் செய்து வைப்போம். திருக்குர்ஆன்:- 52:20
சொர்க்கத்தின் வாழ்க்கை மிகவும் சுகமானது. அங்கேயும், பெண்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை சுவைப்பதில்லை.
ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்தில் எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்தாலும்கூட ஒருவகையான சோக நிலையில்தான் இருந்தார்கள். அவருக்கென்று ஒரு பெண் அதாவது, ஒரு துணைவி கிடைத்த பிறகு தான் அவரின் சொர்க்க வாழ்க்கையே சுகமானது. இது மனித இயல்பு.
ஆம்! மனிதன் எங்கு
இருந்தாலும் அவனுக்கு துணை தேவைப்படுகிறது. அதனால்தான் அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு சொர்க்கத்தில்
கிடைக்க இருக்கும் ("ஹூருன் ஈன்" எனும்) துணைகளைப் பற்றி திருக்குர்ஆனில்
பல இடங்களில் விவரிக்கிறான்.
இரு வகையினர்
சொர்க்க மங்கையர்
இரு வகைப்படுவர்:
1) “ஹூருன் ஈன்” எனும் கண்ணழகுக் கன்னியர். அகண்ட விழிகொண்ட அழகு
நங்கையர். யாருடைய கையும்படாமல் சொர்க்கவாசிகளுக்காகக் காத்திருக்கும் அவர்கள் தூய்மைக்குப்
பெயர் போனவர்கள். இவர்களுக்கு எச்சில், சளி, மாதவிடாய் போன்ற எதுவும் ஏற்படாது.
இவர்களுக்கு முன்னர்
அவர்களை யாதொரு மனிதனும், ஜின்னும் தீண்டி
இருக்கமாட்டார்கள். திருக்குர்ஆன்:- 55:56
2) உலக அழகியர். அவர்களின் கால்
எலும்பின் மஜ்ஜைகூட வெளியே தெரியும் அளவிற்கு வெண்மையாகவும் பளபளப்பாகவும் காட்சியளிப்பார்கள்.
சொர்க்கவாசிகளில் கீழ்ப் படித்தரத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் இரு உலக அழகியரும், எழுபது ஹூருன் ஈன் கன்னியருமாக 72 பேர் இருப்பார்கள். நூல்:- துஹ்ஃபதுல் அஹ்வதீ
அருமை நாயகம் ஸல்
அவர்கள் கூறினார்கள். (அவர்களின் இணைகளான) அவர்களின்
மனைவியரை நிச்சயமாக புது அமைப்பில் நாம் உருவாக்கியிருப்போம். (திருக்குர்ஆன்:- 56:35) எனும் வசனத்தின் கருத்து என்னவெனில், உலகத்தில் பார்வை மங்கியவர்களாகவும் கண்கள் குழிவிழுந்தவர்களாகவும் இருந்த வயது
முதிர்ந்த பெண்களைப் புதிய அமைப்பில் உருவாக்கியிருப்போம் என்பதாகும். அறிவிப்பாளர்:-
அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3208, தஃப்சீர் இப்னு கஸீர்
நபியவர்களின்
விளக்கங்கள்
உம்மு ஸலமா (ரலி)
அவர்கள் கூறியதாவது. நான் (அருமை நாயகம்-ஸல் அவர்களிடம்), "நாயகமே! ஹூருன் ஈனுன் எனும் (56:22ஆவது) வசனத்தைப் பற்றி எனக்கு அறிவித்துத் தாருங்கள்"
என்று வினவினேன். நபியவர்கள் கூறினார்கள்: "ஹூர்" என்றால் அதிக வெண்மையான
பெண்கள் என்று பொருள். "ஈன்" என்றால் அகன்ற கண்களுடையவர்கள் என்று பொருள்.
பிறகு நான், "மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் (அவர்கள்
அழகாக) இருப்பார்கள் எனும் (56:23ஆவது) வசனத்தைப் பற்றி
எனக்கு அறிவித்துத் தாருங்கள்" என்று வினவினேன். அதற்கு நபியவர்கள், "அவர்களின் பளபளப்பு சிப்பிகளினுள் உள்ள (மனிதர்களின்
கைகள் தொட்டிருக்காத) முத்தின் பளபளப்பைப்போல் இருக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு நான், "அந்த சொர்க்கங்களில் நற்பண்பும் கட்டழகு மிக்க பெண்கள்
இருப்பார்கள் எனும் (55:70ஆவது) வசனத்தைப் பற்றி
எனக்கு அறிவித்துத் தாருங்கள்" என்று வினவினேன். நபியவர்கள், "நற்பண்பு மிக்க, முக அழகான பெண்கள்"
என்றார்கள்.
பிறகு நான், "நிறத்தில் அப்பெண்கள் (இறகுகளால்) மூடப்பட்ட முட்டைகளைப்போல்
இருப்பார்கள் எனும் (37:49ஆவது) வசனத்தை பற்றி
எனக்கு அறிவித்துத் தாருங்கள்" என்று வினவினேன். அதற்கு நபியவர்கள், "அந்தப் பெண்களின் மேனியின் மென்மை என்பது, முட்டையின் உட்பகுதியில் தோடை அடுத்துள்ள மெல்லிய
ஜவ்வை நீ பார்க்கிறாயே அந்த மென்மையைப் போல் இருக்கும். அதுதான் முட்டையின் வெள்ளைக்
கருவை ஒட்டிக்கொண்டு இருக்கும் மெல்லிய ஜவ்வு" என்று கூறினார்கள். நூல்:- தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்வாகிஆ வசனம்-35
தூய்மையானவர்கள்
பரிசுத்தமான மனைவிகளும்
அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். மேலும், அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். திருக்குர்ஆன்:-
2:25
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், "தூய்மையான துணைவியர்" எனும் (2:25ஆவது) வசனத்திற்கு
( مِنَ الْحَيْضِ وَالْغَائِطِ وَالنُّخَاعَةِ وَالْبُزَاقِ
) “மாதவிலக்கு, மலம், சளி, எச்சில் ஆகிய அசுத்தங்களிலிருந்து தூய்மையானவர்கள்” என்று
விளக்கமளித்ததார்கள் அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் இப்னு மர்தவைஹீ, ஹாகிம், தஃப்சீர் இப்னு கஸீர்
மூலப்பொருள்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். சொர்க்க மங்கைகளின் முழு உடலும் மிகவும் பெறுமதி வாய்ந்த நான்கு
வாசனை திரவியங்கள் கொண்டு அல்லாஹ் படைத்துள்ளான். அவர்களுடைய பாதங்களில் இருந்து முட்டுக்கால்கள்
வரை சஃப்ரான் எனப்படும் குங்குமம் மூலமாகவும், முட்டுகால்களில் இருந்து
மார்பகங்கள் வரை "அம்பர்" எனப்படும் ஒரு வாசனை திரவியம் மூலமாகவும், மார்பகங்களில் இருந்து கழுத்து வரைக்கும் கஸ்தூரி
மூலமாகவும், கழுத்தில் இருந்து தலை வரைக்கும்
கற்பூரம் கொண்டும் அல்லாஹ் அவர்களை வடிவமைத்துள்ளான்.
நறுமணம் கமழும், ஒளி சிந்தும்
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( وَلَوْ أَنَّ امْرَأَةً
مِنْ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى الأَرْضِ، لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا،
وَلَمَلأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا، وَلَنَصِيفُهَا ـ يَعْنِي الْخِمَارَ ـ خَيْرٌ
مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ) சொர்க்கத்து மங்கையரில் (ஹூருன் ஈன்) ஒருவள் பூமியில்
தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும்
இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும்
நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும்விட
மேலானதாகும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6568, முஸ்னத் அஹ்மத்
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( لَوْ أَنَّ حَوْرَاءَ
بَزَقَت فِي بَحْرٍ لُجِّي، لعَذُبَ ذَلِكَ الْمَاءُ لِعُذُوبَةِ رِيقِهَا ) (ஹூருன் ஈன் எனும்) சொர்க்கத்து மங்கையரில் ஒருவள்
ஆழமான கடலில் சிறிது உமிழ்நீர் துப்பினாள் எனில், அவளது உமிழ்நீர் இனிமையினால்
அந்தக் கடல் நீர் (முழுவதும்) இனிமையாகி விடும்.
அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்தம், தஃப்சீர் இப்னு கஸீர் அத்துகான் வசனம்-54
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். சொர்க்க மங்கைகளின் தலைமுடிகள் பட்டை போன்று மிருதுவாக இருக்கும்.
அவர்களில் ஒரே ஒரு பெண் இந்த உலகத்திற்கு வந்து தன்னுடைய முகத்தை காட்டிவிட்டாள் என்றால்
சூரியனுடைய ஒளிகூட மங்கிப்போய்விடும். அந்த அளவிற்கு பிரகாசம் கொண்டதாக இருக்கும்.
அவள் தன் தலையின் நடுவில் கோடெடுத்து முடியை வாரியிருப்பாள். எந்த அளவுக்குப் பிரகாசம்
என்றால் அவளுடைய தலையின் நடுவில் சூரியன் உதிப்பதைப் போன்று அவளுடைய முடி இலங்கிக்
கொண்டிருக்கும். மேலும், அவளுடைய நெஞ்சில்
அதாவது மார்பகத்திற்கு மேலால் அவளுடைய கணவர் பெயர் அல்லாஹ் பதித்து இருப்பான்.
கட்டழகு மேனி
حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ
கூடாரங்களி(ன் வடிவிலுள்ள
மாளிகைகளி)ல் தங்க வைக்கப்பட்ட 'ஹூர்' எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள். திருக்குர்ஆன்:-
55:72
முஜாஹித் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள். (இந்த வசனத்தில் உள்ள) 'மக்ஸூராத்' எனும் சொல்லுக்கு 'தடுத்து வைக்கப்பட்டவர்கள்' என்று பொருள். அதாவது, அந்தப் பெண்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்களுடைய கணவன்மார்கள் அல்லாத மற்றவர்களைவிட்டு
தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் தங்கள் கணவன்மார்கள்
அல்லாத வேறு எவரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள். நூல்:- புகாரீ, பாடம்-தஃப்சீர் அர்ரஹ்மான்
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ
அந்த சொர்க்கங்களில்
நற்குணமும் கட்டழகும் மிக்க பெண்கள் இருப்பார்கள். திருக்குர்ஆன்:- 55:70
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمَرْأَةَ مِنْ
نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ لَيُرَى بَيَاضُ سَاقِهَا مِنْ وَرَاءِ سَبْعِينَ حُلَّةً
حَتَّى يُرَى مُخُّهَا ) சொர்க்கவாசிகளின்
மங்கையரில் (ஹூருன் ஈன்களில்) ஒருவரின் கணுக்கால் பகுதியின் வெண்மை அவள் உடுத்தியிருக்கும்
எழுபது வகை ஆடைகளுக்குமேல் காணப்படும். எந்த அளவுக்கென்றால், அவளது காலில் எலும்பு மஜ்ஜைகூட வெளியே தெரியும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல்:-
திர்மிதீ-2456,
முஸ்னது அஹ்மத், இப்னு ஹிப்பான்-2632
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( لِلرَّجُلِ
مِنْ أَهْلِ الْجَنَّةِ زَوْجَتَانِ مِنَ الْحُورِ الْعِينِ، عَلَى كُلِّ وَاحِدَةٍ
سَبْعُونَ حُلَّةً، يُرى مُخُّ سَاقِهَا مِنْ وَرَاءِ الثِّيَابِ
) சொர்க்கவாசிகளில் ஒரு ஆணுக்கு சொர்க்க மங்கைகள்
(ஹூருன் ஈன்களில்) இருவர் மனைவியராக இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 70 வகை ஆடைகளை அணிந்து இருப்பார்கள். அந்த ஆடைகளுக்கு
அப்பால் இருந்து பார்த்தால் அந்தப் பெண்களின் கணுக்கால் மஜ்ஜை தெரியும். அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா ரலி அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்
அர்ரஹ்மான் வசனம்-56
இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) மக்கள், சொர்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள்
ஆண்களா? பெண்கள? என்று வழக்காடிக்
கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் அதைப் பற்றி கேட்டனர்.
உடனே அவர்கள், "அபுல்காசிம் (ஸல்)
அவர்கள்,
( لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ زَوْجَتَانِ اثْنَتَانِ يُرَى مُخُّ سُوقِهِمَا
مِنْ وَرَاءِ اللَّحْمِ وَمَا فِي الْجَنَّةِ أَعْزَبُ ) 'சொர்க்கத்தில் ஒவ்வொருவருக்கும்
இரு துணைவியர் இருப்பார்கள். அப்பெண்களின் காலின் எலும்பு மஜ்ஜை அவர்களது (கால்) தசைக்கு
அப்பாலிருந்து (அவர்களது பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். சொர்க்கத்தில் மனைவி
இல்லாத எவரும் இருக்க மாட்டார்கள்' என்று கூறவில்லையா?" என்று கேட்டார்கள். நூல்:- புகாரீ-3245, முஸ்லிம்-5449
சொர்க்கத்தில் பெண்களே
அதிகம் இருப்பார்கள் என்று இந்த நபிமொழி தெரிவிக்கின்றது. அந்த சொர்க்க மங்கைகள் பளபளப்பான
எழில் கொஞ்சும் உடலமைப்பைக் கொண்டவர்களாக இருப்பார்கள். நூல்:- தக்மிலா
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ
நிச்சயமாக அந்தப்
பெண்கள் சிகப்பு மாணிக்கத்தையும் பவளத்தையும் போல் (அழகுமிக்கவர்களாய்) இருப்பார்கள்.
திருக்குர்ஆன்:- 55:58
நிச்சயமாக அந்தப்
பெண்கள் மாணிக்கத்தையும், பவளத்தையும் போன்று
(மிக அழகாக) இருப்பார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அர்ரஹ்மான் வசனம்-74
ஹூருன் ஈன்கள் ரத்தினம்
மாதிரி பளபளப்பாக இருப்பதால், அவர்களின் உடலிலுள்ள
கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே
தெரியும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக ஒரு மனிதன் சொர்க்கத்தில் 70 ஆண்டு நிம்மதியாக உட்கார்ந்து இருப்பான். அங்கிருந்து மாறமாட்டான். பிறகு ஒரு சொர்க்கமங்கை அவனிடம் வருவாள். அவனுடைய இரு தோள்களின் மீது தட்டிக்கொடுப்பாள். (அப்போது அவன் திரும்பி பார்ப்பான்.) அவன் கண்ணாடியை விடவும் தெளிவாக தமது முகத்தை அவளது கண்ணத்தில் பார்ப்பான்.
அவள் அணிந்திருக்கும் சாதாரணமான ஒரு முத்து, கிழக்கு-மேற்கிற்கு இடைப்பட்ட பகுதி முழுவதையும் பிரகாசிக்கச் செய்யும். அவள் அவனுக்கு சலாம் சொல்லுவாள். அவன் அவளுக்கு பதில் சலாம் சொல்லுவான். பிறகு அவன், "நீ யார்? என்று அவளிடம் கேட்பான். அதற்கு அவள், "நான் தான் அதிகப்படியான அருள்" (அதாவது "அல்லாஹ்வைப் பயந்து நடக்கக் கூடியவர்களுக்கு நாம் மேல் மிச்சமானதை வைத்துள்ளோம்" என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளானே அந்த மேல்மிச்சமானது என்பது நான்தான்) என்று கூறுவாள்.
70
வகையான ஆடைகள் அவளுடைய (சொர்க்க மங்கையின்) மேனியில் இருக்கும். அவற்றுள் மிகவும் தாழ்ந்த
ஆடை சொர்க்கத்தின் மரமான 'தூபா'வின் மணம் கமழும் செந்நிற மலர் போன்றிருக்கும்.
அந்த ஆடைகள் முழுவதையும் அவனுடைய பார்வை ஊடுருவிச் சென்று அவற்றுக்கு அப்பால் அவளின்
கெண்டைக் காலின் எலும்பு மஜ்ஜையை அவன் பார்ப்பான். மேலும், அவளுடைய தலையில் பல மகுடங்கள் சூட்டப்படும். அவற்றிலுள்ள
முத்துக்களில் மிகவும் தாழ்ந்தது கிழக்கு-மேற்கிற்கு இடைப்பட்ட பகுதி முழுவதையும் ஒளிரச்
செய்யும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்,
இப்னு ஹிப்பான், அத்தர்ஙீபு வத்தர்ஹுபு, தஃப்சீர் இப்னு கஸீர் காஃப் வசனம்-35, மிஷ்காத்
பாபு ஸிஃபத்துல் ஜன்னாஹ்
وَكَوَاعِبَ أَتْرَابًا
(மனைவிகளாக) சமவயதுடைய
(கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும் (அவர்களுக்குக் கிடைக்கும்). திருக்குர்ஆன்:-
78:33
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) முஜாஹித் (ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள். "கவாஇப்" என்றால் பெரிய
மார்புகள் உடைய அழகான பெண்கள் என்று பொருள். அவ்விருவரின் கருத்து இதுதான்: அந்தப்
பெண்களின் இரண்டு மார்புகளும் எடுப்பாகப் பெரிதாக இருக்கும். தளர்ந்து தொங்குவதில்லை.
ஏனெனில், அவர்கள் கன்னிப் பெண்களாக இருப்பார்கள். நூல்:-
தஃப்சீர் இப்னு கஸீர் அந்நபவு வசனம்-33
எண்ணிக்கை
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فِي
الْجَنَّةِ خَيْمَةٌ مِنْ لُؤْلُؤَةٍ مُجَوَّفَةٍ عَرْضُهَا سِتُّونَ مِيلاً فِي كُلِّ
زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ مَا يَرَوْنَ الآخَرِينَ يَطُوفُ عَلَيْهِمُ الْمُؤْمِنُ ) நடுவில் துளையுள்ள
முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன்
ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாளருக்கு துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள
துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர் அவர்களைச் சுற்றி
வருவார். அறிவிப்பாளர்:- அபூ மூஸா அல் அஷ்அரீ
(ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-4879, முஸ்லிம்-5459
அதாவது சொர்க்கத்தில்
உள்ள கூடாரம் என்பது, நடுவில் துளையுள்ள விசாலமான
60 முத்துக்களால் தயாரிக்கப்பட்ட ஒரு சதுர வடிவிலான
மாளிகையாகும். அதன் நீளம் 60 மைல்கள்; அகலம் 60 மைல்கள். சொர்க்கவாசியான
இறைநம்பிக்கையாளர் அந்த மாளிகையின் எந்த மூலைக்குச் சென்றாலும் அவரை உபசரிக்க அங்கே
துணைவியர் இருப்பர். நூல்:- ஃபத்ஹுல்பாரீ, அல்மின்ஹாஜ்
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( أَدْنَى أَهْلِ الْجَنَّةِ
الَّذِي لَهُ ثَمَانُونَ أَلْفَ خَادِمٍ وَاثْنَتَانِ وَسَبْعُونَ زَوْجَةً ) சொர்க்கவாசிகளில்
மிகக் குறைந்த தகுதியில் உள்ள ஒருவருக்கு எண்பதாயிரம் ஊழியர்களும், எழுபத்து இரண்டு மனைவியரும் இருப்பார்கள். அறிவிப்பாளர்:-
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2485
ஸாபித் அல்பன்னானீ
(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். சொர்க்கத்தில் ஒரு மனிதன் 70 ஆண்டுகள் மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருப்பான்.
அவனிடம் அவனுடைய மனைவியரும் பணியாளர்களும் இருப்பார்கள். மேலும், அல்லாஹ் வழங்கியிருக்கும் கண்ணியமும் அருட்பேறுகளும்
அனைத்தும் அவனுக்கு வழங்கப்படும். அவற்றை ஒருமுறை பார்த்து முடித்ததும் வேறு துணைவியர்
அவனுக்குக் கிடைக்கும். அதற்கு முன்பு அவர்களை அவன் பார்த்திருக்க மாட்டான். அவர்கள்
அவனிடம்,
"உன்னிடம் இருந்து எங்களுக்கு
(ஓர் இன்பப்) பங்களிப்பை நீ அமைத்துத் தரும் நேரம் நெருங்கிவிட்டது" என்று கூறுவார்கள்.
நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்தம், தஃப்சீர் இப்னு கஸீர்
அத்தூர் வசனம்-20
பாட்டிசைத்தால்
உண்டு
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( أَنَّ الْحُورَ الْعِينَ
يُغَنِّينَ: نَحْنُ الْخَيْرَاتُ الْحِسَانُ، خُلِقْنَا لِأَزْوَاجٍ كِرَامٍ ) வெண்மையும் கண்ணழகும் உடைய சொர்க்கத்து பெண்கள், "நாங்கள் அழகு சுந்தரியான பெண்கள். கண்ணியமிக்க கணவர்களுக்காக
நாங்கள் படைக்கப்பட்டுள்ளோம்" என்று பாட்டுப் பாடுவார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு
கஸீர் அர்ரஹ்மான் வசனம்-70
அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள், "யார் இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தனரோ அவர்கள் (சொர்க்கப்) பூங்காவில்
மகிழ்விக்கப்படுவார்கள்" எனும் (30:15 ஆவது) வசனத்திற்கு
விளக்கமளிக்கையில், செவிக்கு இன்பம் அளிக்கப்(பட்டு
மகிழ்விக்கப்)படுவார்கள்" என்று கூறினார்கள். செவிக்கு இன்பம் அளிக்கப்படுவர்
என்பதன் பொருள், ஹூருன் ஈன் மங்கையர் குரலை
உயர்த்தி (இனிமையாகப்) பாடுவதாகும். நூல்:- திர்மிதீ-2488
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( إِنَّ فِي الْجَنَّةِ
لَمُجْتَمَعًا لِلْحُورِ الْعِينِ يُرَفِّعْنَ بِأَصْوَاتٍ لَمْ يَسْمَعِ الْخَلاَئِقُ
مِثْلَهَا ) சொர்க்கத்தில் ஹூருன்
ஈன் (கண்ணழகு) மங்கையர் கூடுகின்ற அவை ஒன்று உண்டு. அங்கு அவர்கள் (ஒன்றுகூடி) உரத்த
குரலில் (இனிமையாகப்) பாடுவார்கள். அதைப் போன்ற குரலை படைப்பினங்களில் யாரும் கேட்டிருக்க
மாட்டார்கள். (அவர்களின் பாடல் வருமாறு:) ( نَحْنُ
الْخَالِدَاتُ فَلاَ نَبِيدُ وَنَحْنُ النَّاعِمَاتُ فَلاَ نَبْأَسُ وَنَحْنُ الرَّاضِيَاتُ
فَلاَ نَسْخَطُ طُوبَى لِمَنْ كَانَ لَنَا وَكُنَّا لَهُ ) நாங்கள் நிரந்தரமாக தங்கி
இருக்கக்கூடியவர்கள் / நாங்கள் அழிந்து போக
மாட்டோம் / நாங்கள் இன்ப வாழ்க்கை வாழக்கூடியவர்கள் / நாங்கள் வறுமைக்கு ஆளாக மாட்டோம்
/ நாங்கள் மனத்திருப்தியுடன் இருப்பவர்கள் / நாங்கள் கோபம் கொள்ள மாட்டோம் / நாங்கள்
எந்த ஆண்களுக்குரியவர்களோ எந்த ஆண்கள் எங்களுக்குரியவர்களோ அவர்களுக்கு நற்செய்தி உண்டாகுக!
அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2487, தப்ரானீ
காதல்கொள்வார்கள்
إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
عُرُبًا أَتْرَابًا
(அவர்களின் இணைகளான) அவர்களின்
மனைவியரை நிச்சயமாக புது அமைப்பில் நாம் உருவாக்கியிருப்போம். நாம் அந்தப் பெண்களை
கன்னிகளாக அமைத்திருப்போம். கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயது உடையவர்களாகவும்
(ஆக்கியிருப்போம்). திருக்குர்ஆன்:- 56:35, 36, 37
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَنَّ
الْوَاحِدَةَ مِنْهُنَّ تَقُولُ لِبَعْلِهَا: وَاللَّهِ مَا أَرَى فِي الْجَنَّةِ شَيْئًا
أَحْسَنَ منك، ولا في الجنة شيئ أَحَبَّ إِلَيَّ مِنْكَ، فَالْحَمْدُ لِلَّهِ الَّذِي
جَعَلَكَ لِي وَجَعَلَنِي لَكَ ) அந்தப் பெண்களில் ஒரு பெண் தன்னுடைய கணவரிடம்
கூறுவாள்: அல்லாஹ்வின் மீதாணையாக! சொர்க்கத்தில் உன்னை விடவும் அழகாக வேறு எந்த ஒன்றையும்
நான் காணவில்லை. இந்தச் சொர்க்கத்தில் உன்னை விட வேறு எதுவும் எனக்கு பிரியமானதாக இல்லை.
உன்னை எனக்காகவும் என்னை உனக்காகவும் ஆக்கியிருக்கிறானே அத்தகைய அல்லாஹ்வுக்கே எல்லாப்
புகழும். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அர்ரஹ்மான் வசனம்-56
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். "உர்பன்" (காதல் கொண்டவர்களாக) எனும்
சொல்லின் பொருள் "தன் கணவரிடம் குழைந்து பேசக்கூடியவள்" என்பதாகும்.
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். சமவயது உடையவர்கள் என்றால் "33 வயது நிரம்பிய பெண்கள்" என்று பொருள்.
இஸ்மாயில் சுத்தீ
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். "அத்ராப்" என்றால் தங்களுக்கிடையில் அன்பாகப்
பழகக்கூடிய பெண்கள். அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கோபமோ பொறாமையோ இல்லாத பெண்கள்
என்று பொருள். அதாவது, ஒருவருக்கொருவர் பகைமை கொண்ட
சக்காளத்திகளைப் போல் அவர்கள் இருக்க மாட்டார்கள்.
ஹசன் அல்பஸ்ரி (ரஹ்), முஹம்மத் ஷைபானி (ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள்.
"உர்பன் அத்ராபன்" என்றால் (சமவயது உடையவர்கள்) அனைவரும் ஒருவருக்கொருவர்
பிரியமானவர்கள். அனைவரும் (தத்தம் கணவன்மார்களுடன்) விளையாடக் கூடியவர்கள்.
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில்
முப்பத்து மூன்று வயதினராக இருப்பார்கள். ஆதம் (அலை) அவர்களின் உடலமைப்பில் அறுபது
முழம் உயரமும் ஏழு முழம் அகலமும் உடையவர்களாகவும் இருப்பார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ, தப்ரானீ தஃப்சீர் இப்னு கஸீர் அல்வாகிஆ வசனம்-37
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ
مَاتَ مِنْ أَهْلِ الْجَنَّةِ مِنْ صَغِيرٍ أَوْ كَبِيرٍ يُرَدُّونَ بَنِي ثَلاَثِينَ
فِي الْجَنَّةِ لاَ يَزِيدُونَ عَلَيْهَا أَبَدًا ) சொர்க்கத்திற்குரியோரில் ஒருவர் சிறுவராகவோ முதியவராகவோ
இறந்திருந்தாலும் அவர் சொர்க்கத்தில் முப்பது வயது இளைஞராகவே இருப்பார் அதைவிட ஒருபோதும்
அவருக்கு வயது அதிகரிக்காது அறிவிப்பாளர் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:-
திர்மிதி 2485
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ
الْجَنَّةَ جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ أَبْنَاءَ ثَلاَثِينَ أَوْ ثَلاَثٍ وَثَلاَثِينَ
سَنَةً ) சொர்க்கவாசிகள்
உடலில் ரோமங்களற்ற, கண்களில் (சுர்மா எனும்) அஞ்சனம்
தீட்டப்பட்ட, முப்பது அல்லது முப்பத்து
மூன்று வயதுடைய இளவல்களாக சொர்க்கத்தில் நுழைவார்கள். அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல்
(ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2468, முஸ்னது அஹ்மத்
கற்புக்கரசிகள்
فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ
وَلَا جَانٌّ
அவற்றில் கீழ்நோக்கிய
(நாணும்) விழிகளுடைய பெண்கள் (அவர்களின் இணைகளாய்) இருப்பார்கள். அவர்களுக்கு முன்னர்
எந்த மனிதனும் ஜின்னும் அந்தப் பெண்களைத் தொட்டுக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். திருக்குர்ஆன்:-
55:56
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِيْنٌ
அவர்களிடத்தில் கீழ்
நோக்கிய, அடக்கமான பார்வையையுடைய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும்
இருப்பார்கள். திருக்குர்ஆன்:- 37:48
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) முஜாஹித் (ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள். கீழ்நோக்கிய அடக்கமான பார்வையையுடைய
பெண்கள் என்றால், கற்பொழுக்கமுள்ள பெண்களைக்
குறிக்கும். அவர்கள் தம் கணவன்மார்களைத் தவிர்த்து மற்றவர்களை ஏறெடுத்தும் பார்க்க
மாட்டார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அஸ்ஸாஃப்பாத் வசனம்-48
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கத்தில் ஹூருன் ஈன் எனும் வெண்மையும் கண்ணழகும் மிக்க
மங்கையர் கூறுவர். ( نَحْنُ خَيِّرات حِسان، خُبِّئنا
لأزواج كرام ) நாங்கள் குண அழகும் உடலழகும் மிக்க மங்கையர்.
கண்ணியமிக்க கணவர்மார்களுக்காக நாங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறோம். அறிவிப்பாளர்:-
அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூயஅலா, தஃப்சீர் இப்னு கஸீர்
அல்வாகிஆ வசனம்-37
மேலும், சிலர்
"ஈன்" என்பதற்கு கயல்விழியாள். அதாவது, அகன்ற விழியுடையவள்
என்று பொருள் கூறுகின்றனர். ஆக, அப்பெண்களின் விழிகளில்
அழகும் கூச்சமும் கலந்து இருக்கும் என இங்கு இறைவன் வர்ணிக்கிறான். நூல்:- தஃப்சீர்
இப்னு கஸீர் அஸ்ஸாஃப்பாத் வசனம்-48
உறவுகொள்தல்
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ
أَهْلَ الْجَنَّةِ إِذَا جَامَعُوا نِسَاءَهُمْ عُدن أَبْكَارًا ) சொர்க்கவாசிகள் தங்களின் மனைவியருடன் உடலுறவு
கொண்டார்கள் எனில், அவர்கள் கன்னிகளாகத் திரும்பிவிடுவர்.
அறிவிப்பாளர்:- அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்வாகிஆ வசனம்-36
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், ( هَلْ
نَصِلُ إِلَى نِسَائِنَا فِي الْجَنَّةِ؟ ) "நாயகமே! நாங்கள் சொர்க்கத்தில்
எங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ள முடியுமா? என்று வினவினர். அதற்கு
நபியவர்கள், ( إِنَّ الرَّجُلَ لَيَصِلُ فِي الْيَوْمِ
إِلَى مِائَةِ عَذْرَاءَ ) "ஒரு மனிதர் ஒரே நாளில்
நூறு கன்னியர்களுடன் உடலுறவு கொள்வார்" என்று பதிலளித்தார்கள். நூல்:- தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்வாகிஆ வசனம்-36
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( يُعْطَى الْمُؤْمِنُ فِي الْجَنَّةِ
قُوَّةَ كَذَا وَكَذَا فِي النِّسَاءِ ) "சொர்க்கத்தில் இறைநம்பிக்கையாளர்
இன்னின்ன அளவுக்கு உடலுறவு மீது ஆற்றல் வழங்கப்படுவார்"
என்று கூறினார்கள். அப்போது,
"நாயகமே! இந்த அளவில் அவருக்கு
ஆற்றல் இருக்குமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், ( يُعْطَى
قُوَّةَ مِائَةٍ ) "அவருக்கு நூறு ஆடவர்களின் சக்தி வழங்கப்படும்" என்று கூறினார்கள். நூல்:-
திர்மிதீ-2459, முஸ்னது அஹ்மத், இப்னு ஹிப்பான்
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَا
مِنْهُنَّ وَاحِدَةٌ إِلاَّ وَلَهَا قُبُلٌ شَهِيٌّ وَلَهُ ذَكَرٌ لاَ يَنْثَنِي ) (சொர்க்கத்தில் உள்ள) அம்மங்கையரில் ஒவ்வொருத்திக்கும்
வசீகரமான முன்பகுதியும் (பெண்ணுறுப்பும்) ஒவ்வொரு ஆண்மகனுக்கும் சோர்ந்துபோகாத ஆணுறுப்பும்
இருக்கும். அறிவிப்பாளர்:- அபூஉமாமா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4328, இப்னு அதீ 3/884
மார்க்க அறிஞர்கள்
கூறுகிறார்கள். சொர்க்க மங்கைகளை உடலுறவு கொள்ளும்போது அவர்களின் கணவன்மார்களுக்கு
இந்திரியம் வெளிப்படாது. மாறாக, இந்திரியத்திற்கு
பதிலாக ஒருவித நறுமணமுள்ள காற்று வெளிப்படும். மேலும், விரும்பியவாறு அவர்களோடு உறவு கொள்ளலாம்.
ஒருவர் ஒரே நேரத்தில்
பல பெண்களுடன் உறவு கொள்ளும் அளவிற்கு உடல்
வலிமை பெற்றிருப்பார். அப்பெண்களும் எத்தனை முறை உறவு கொள்ளப்பட்டாலும் கன்னித் தன்மையோடு
தான் இருப்பார்கள்.
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். சொர்க்கத்தில் நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்கள் இருப்பார்கள். நீங்கள்
உலகத்தில் அடையும் இன்பத்தைப் போன்றே அப்பெண்களிடமிருந்து நீங்களும் உங்களிடமிருந்து
அவர்களும் அனுபவிப்பார்கள். எனினும், குழந்தைப் பிறக்காது.
அறிவிப்பாளர்:- அபூரஸீன் லக்கீத் பின் ஆமிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்
இந்த நபிமொழிக்கு
இமாம் இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள், "அதாவது, குழந்தை வேண்டுமென சொர்க்கவாசிகள்
ஆசைப்பட்டால் நொடியில் குழந்தை பிறந்துவிடும். ஆயினும், அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, சொர்க்கத்தில் குழந்தை பிறக்காது" என்று விளக்கமளித்துள்ளார்கள்.
இவ்வாறான சொர்க்கத்துச்
சுகங்களை அனுபவிக்கும் பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்குவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment