Search This Blog

Monday, 12 September 2022

தேவையற்ற கொண்டாட்டங்கள்

 

தேவையற்ற கொண்டாட்டங்கள்

 

وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً

 

(இறைநம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பாளர்களாகிவிட்டபடியே நீங்களும் நிராகரிப்பவராகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். திருக்குர்ஆன்:- 4:89

 

உலகிலுள்ள அனைத்து இனத்தவர்களிடமும் நல்லொழுக்க மாண்புகள், பண்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தங்களது அடையாளங்களை இழந்து மாற்றார் கலாச்சாரங்களைப் பின்பற்றி வருவது அதிகமாகிவிட்டது. புத்தாண்டு, பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் போன்றவை இன்று முஸ்லிம்களிடம் பெருமளவு காணப்படுகிறது.

 

வருடப்பிறப்பு என்றாலே வீண் விரயம் மற்றும் தீய செயல்கள் மட்டுமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி இரவு 12 மணிக்கு மேல் இடியோசை போன்ற வெடியோசையுடன் துவங்கும் புத்தாண்டு பல வீண் விரயங்களுக்கு வழிவகுக்கிறது. மது பார்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 அன்றிரவு நடைபெறும் மது விற்பனை கடந்த வருடங்களின் டிசம்பர் 31 அன்றிரவு நடைபெற்ற மது விற்பனையைவிட அதிகமாகவே நடைபெறுகிறது. அன்றைய ஒரு இரவில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது.

 

ஸ்டார் ஹோட்டல்களில் இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம் காம களியாட்டம், வீதி வீதியாக மோட்டார் வாகனங்களில் "Happy New year" என்று பெரும் கூச்சலிட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் பறக்கும் இளைஞர்களால் விபத்துகளும், உயிர்பலிகளும் அதிகம் ஏற்படுகின்றன.

 

எது திருநாள்?

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்த புதிதில் நபித்தோழர்கள் (குறிப்பிட்ட) இரண்டு நாள்களை (பண்டிகை போல்) கொண்டாடி மகிழ்ந்தார்கள். நபியவர்கள், ( مَا هَذَانِ الْيَوْمَانِ ) "இந்த இரு நாள்கள் என்ன?" என்று வினவியபோது, "அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரு நாள்களை கொண்டாடி மகிழ்ந்தவர்களாக இருந்தோம்" என நபித்தோழர்கள் பதிலளித்தனர். நபியவர்கள், ( إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ ) “இவ்விரு நாளுகளுக்குப் பகரமாக இவற்றைவிட சிறந்த ஈதுல்அள்ஹா (தியாகத் திருநாள்) ஈதுல் ஃபித்ர் (ஈகை திருநாள்) என்ற இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்” (ஆகையால், அறியமைக்காலத்தில் கொண்டாடிய அவ்விரு நாள்களையும் விட்டு விடுங்கள்) என்று கூறினார்கள்.   அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-959

 

இஸ்லாம் வகுத்துத் தந்த திருநாள்கள் என்பது வருடத்தை இரண்டாகும். ஒன்று ஈதுல் ஃபித்ர் (ஈகை திருநாள்) மற்றொன்று ஈதுல் அல்ஹா (தியாகத் திருநாள்).

 

நம் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இஸ்லாமிய மூத்த குடிமக்களாகிய நபித்தோழர்களும் வருடத்தில் இந்த இரண்டு நாள்களைத் தவிர வேறு எந்த நாள்களையும் பெரும் விமர்சையாகவோ, புத்தாண்டாகவோ கொண்டாடியதில்லை. ஜனவரி முதல் தேதி (ஆங்கில வருட பிறப்பு) தை முதல் தேதி (தமிழ் வருடப்பிறப்பு) ஆகிய எந்த நாள்களையும் வருடப் பிறப்பாக கொண்டாட மார்க்கம் அனுமதிக்கவில்லை. முஹர்ரம் மாதம் முதல் நாளைகூட புத்தாண்டாக கொண்டாடுவது சரியல்ல.

 

கூத்து, கும்மாளம், மது, மாது, வான வேடிக்கை, வீண்விரயம் போன்ற தீய காரியங்கள் நிறைந்திருப்பது தான் திருநாள் பண்டிகை என்று மனிதர்களில் பெரும்பாலோர் எண்ணுகிறார்கள் பண்டிகை என்றால் நற்காரியங்கள் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். மேலும், இறைவன் தேர்ந்தெடுத்து தரும் நாள்கள் மட்டுமே பண்டிகையை நாள்களாகும். மனிதர்கள் அவர்களாக தன்னை இஷ்டத்திற்கு பண்டிகை நாள்களை தேர்ந்தெடுத்துக் கொண்டதால் தான் அந்த நாள்களில் பாவக்காரியங்கள் நிறைந்திருக்கிறது.

 

முஸ்லிம்களின் பண்டிகைகளில் இரண்டு நற்செயல்கள் நிறைந்திருக்கும் ஒன்று தானும் உண்டு, உடுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி அடைவது. மேலும், பிறருக்கும் உண்ண, உடுத்த கொடுத்து அதன் மூலம் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்வது. (ஈகைத் திருநாள் ஃபித்ரா பொருள், தியாகத் திருநாள் குர்பானி இறைச்சியை பிறருக்கு வழங்குதல்)

 

மற்றொன்று பெருநாள் தொழுகை எனும் இறைக் கட்டளையை நிறைவேற்றி நம்மை படைத்த இறைவனை மகிழ்ச்சியடைய செய்வது. முஸ்லிம்களின் பண்டிகளில் பாவ செயல்களையும், வீண் விரயங்களையும் பார்க்கவே முடியாது. பாவச் செயல்களும் வீண் விரையமும் நிகழ்ந்து விட்டால் அது உண்மையான பண்டிகை அல்ல என்கிறது இஸ்லாம்.

 

இஸ்லாமிய வருடப்பிறப்பு

 

தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு அதன் மாதங்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருக்கும் முஸ்லிம்களில் பலருக்கு, இஸ்லாமிய வருடப் பிறப்பு ஏற்பட்டதற்கான காரண வரலாறு என்ன? இஸ்லாமிய வருடப் பிறப்பு எப்போது? அதன் மாதங்களின் பெயர்கள் என்ன? என்று தெரியாது. இது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.

 

ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒருவர் தனக்கு இந்த மனிதர் வாங்கிய கடனை ஷஅபான் மாதத்திற்குள் திருப்பித் தருவதாக கூறியிருந்தார். இன்னும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.

 

அதுவரை அரபியர்களின் வழக்கத்தில் இருந்து வந்த மாதம் தான் கணக்கிடப்பட்டு வந்தது. இஸ்லாமிய ஆண்டு உருவாக்கப்படவில்லை.

 

எனவே, இந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் ஷஅபான் மாதம் எந்த வருடத்தின் ஷஅபான் மாதம்? கடந்த வருடமா? நிகழும் வருடமா? என்ற வினா எழுந்தது. முடிவில் இஸ்லாமிய ஆண்டை அடையாளப்படுத்துவதின் அவசியம் உணரப்பட்டது. பிறகு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களிடம் ஆலோசித்தார்கள்.

 

அப்போது சிலர் பாரசீகர்கள் ஆண்டையும் வேறு சிலர் ரோமானியர்கள் ஆண்டையும் கணக்கிடலாம் என்று கூறியபோது, இது மாற்றார்களின் அடையாளங்கள் என்று கூறி, மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் சிலர், அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த வருடத்தில் இருந்து கணக்கிடலாம். ஏனெனில், அன்று பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன என்று கூறினர். பிறப்பை அடையாளமாக வைத்து கணக்கிடுவது கிறிஸ்தவர்களின் பழக்கம் என்பதால் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

 

மேலும் சிலர், நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடத்தை கணக்கிடலாம். ஏனென்றால், அன்றிலிருந்து தான் அகிலத்தின் வழிகாட்டி திருக்குர்ஆன் இறங்கியது என்றனர். ஆனால், அன்றைய தினத்தில் நாமெல்லாம் வழிகேட்டில் இருந்தோம் என்று கூறி, அதுவும் நிராகரிக்கப்பட்டது.

 

மேலும் சிலர், நபியவர்கள் மரணித்த வருடத்திலிருந்து கணக்கிடலாம். "அர்ரஃபீகுல் அஃலா" எனும் உன்னத நேசனான அல்லாஹ்விடம் நபியவர்கள் சேர்ந்த தினமாகும் என்றனர். ஆனால், அன்றைய தினத்தைவிட நமக்கு மிக துக்கமான தினம் வேறு எதுவாக இருக்க முடியும்? என்று கூறி, அந்தக் கருத்தும் நிராகரிக்கப்பட்டது.

 

அலீ (ரலி) அவர்கள் உட்பட வேறு சிலர் நபியவர்களின் மக்காவிலிருந்து மதீனாவுக்கு (மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற) இடம் பெயர்ந்த (ஹிஜ்ரத்) வருடத்தில் இருந்து இஸ்லாமிய ஆண்டை கணக்கிடலாம் என்று கூறியபோது, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஆமோதித்தார்கள்‌ நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த ஆண்டு இஸ்லாமிய முதல் ஆண்டாக கணக்கிடப்பட்டது.

 

அறியாமைக்கால மக்களிடம் மாதங்கள் எண்ணிக்கை 12 ஆகவும், முஹர்ரம் மாதம் தான் வருடத்தின் முதல் மாதமாகவும் இருந்து வந்துள்ளது.

 

இஸ்லாமிய ஆண்டை எந்த மாதத்தில் இருந்து துவங்குவது என்பதிலும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. சிலர் முதல் மாதமாக ரமளானை தேர்வு செய்யலாம். ஏனெனில், அது திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்றும், சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபிஉல் அவ்வல் மாதத்தை முதல் மாதமாக தேர்வு செய்யலாம் என்றும், இன்னும் சிலர் இப்போது வழமையில் இருப்பதைப் போன்று முஹர்ரம் மாதத்தையே முதல் மாதமாக வைத்துக் கொள்வோம். ஏனெனில், அதிலே தான் மக்கள் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றி வீடு திரும்புகிறார்கள் என்பது போன்ற கருத்துக்கள் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் முன்னிலையில் வைக்கப்பட்டது. உமர் (ரலி) அவர்கள் அன்றைய நடைமுறையில் இருந்த முஹர்ரம் மாதத்தையே வருடத்தின் முதல் மாதமாக தேர்வு செய்தார்கள். ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டபோது, ஹிஜ்ரி 17 ஆக இருந்தது.

 

(அருமை நாயகம் - ஸல் அவர்கள் ஸஃபர் மாதத்தின் கடைசியில் மக்காவில் இருந்து ஹிஜ்ரத்தை துவங்கி, ரபீஉல் அவ்வல் மாதத்தின் ஆரம்பத்தில் மதீனா நகரம் வந்தடைந்தார்கள்)

 

எனவே, இஸ்லாமிய வளர்ச்சியின் வித்தாக அமைந்த ஹிஜ்ரத்தை மறுமைநாள் வரையிலும் ஒவ்வொரு முஸ்லிமும் நினைவு கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆண்டின் துவக்கத்தை ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து ஏற்படுத்தினார்கள்.

 

மேலும், ஒவ்வொரு ஹிஜ்ரி புது வருடம் துவங்கும் போதும் முஸ்லிம்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இஸ்லாமிய முறைப்படி வாழ்வதற்கு ஹிஜ்ரத் செய்ததால் அடைந்த துன்ப துயரங்களை நினைவுகூர்ந்து,  இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றி வாழ வேண்டும் என்ற உணர்வை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

 

ஹிஜ்ரி ஆண்டு தற்போது 1444 ஆகும். அதன் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும். அவை: முஹர்ரம், ஸஃபர், ரபிஉல் அவ்வல், ரபிஉல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஅபான், ரமளான், ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்.

 

பேசாத மொழி செத்துப்போகும் என்பது போல், ஹிஜ்ரி ஆண்டை நம்முடைய மொழி வழக்கில் சரிவர பயன்படுத்தாவிடில் விரைவிலேயே அது வழக்கொழிந்து போய்விடும். நம் பாரம்பரிய பெருமையை நாம் தான் நிலைநாட்ட வேண்டும்.

 

மதம் உள்ளே புகுந்தது

 

பழங்கால கணக்கீட்டில் கி.மு. கி.பி. என்று எதுவும் இல்லை. கி.பி. 525 ல் தான் "டயோசியஸ் எக்ஸிகுஸ்" (கி.பி. 470 - 544) என்பவர் முதன் முதலாக கிறிஸ்தவ மதத்தை உள்ளே புகுத்தி, கிறிஸ்துவுக்கு முன் பின் என பிரிவினை உண்டாக்கினார்.

 

ஆங்கில வருடத்தின் மாதங்களும் கிழமைகளும் ரோமானியர்களின் ஆட்சியாளர்கள் மற்றும் கடவுள்களாக கருதப்படுபவர்களின் பெயர்களைக் கொண்டே சூட்டப்பட்டுள்ளது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி இவை ஒவ்வொன்றும் கடவுள்களின் பெயர்கள்.

 

ஜனவரி என்பது ரோமானியர்களின் வானங்களைப் பாதுகாக்கும் கடவுளாக கருதப்படுபவரின் பெயர். பிப்ரவரி என்றால் அவர்கள் மொழியில் சுத்தம் என்று பொருள். அந்த மாதத்தில் ரோமானியர்கள் வீட்டையும் சாமான்களையும் சுத்தப்படுத்தி, சுத்தத் திருநாளாக கொண்டாடுவார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் கடவுளாக கருதப்படுபவரின் பெயர் மார்ச் ஆகும். குளிர்காலத்தில் இருட்டுக்குப்பின் சூரிய வெளிச்சத்திற்காக வானத்தைத் திறக்கும் கடவுளாக கருதப்படுபவரின் பெயர் ஏப்ரல் ஆகும். பூமியை சுமக்கும் கடவுளாக கருதப்படுபவரின் பெயர் மே ஆகும். மனைவியின் பெயர் ஜூன் ஆகும்.

 

ஜூலியஸ் சீசர் தான் மாதங்களின், நாள்களின் எண்ணிக்கை நிர்ணயித்தார். அதனால் தான் ரோமானியர்கள் அவர் நினைவாக ஏழாவது மாதத்திற்கு ஜூலியஸ் என்று பெயரிட்டனர் இதை நாம் இப்போது ஜூலை என்று அழைக்கிறோம். ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் நினைவாக எட்டாவது மாதத்தில் அகஸ்டஸ் தற்போது ஆகஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்ற மாதங்களின் பெயர்கள் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளன.

 

தவறான பழக்கங்கள்

 

காலண்டர்கள் விலை கொடுத்து வாங்கும் காலம் போய் இப்போதெல்லாம் இலவசமாகவே கிடைக்கின்றது. வியாபாரிகள் தங்களது தொழில் ஸ்தாபனங்களை காலண்டர்கள் மூலம் விளம்பரப்படுத்துகிறார்கள். இணைவைப்பதிலும், பாவக் காரியத்திலும் விழுந்துவிடாமல் முழுகவனத்தோடு இருக்கவேண்டிய இஸ்லாமிய வியாபாரிகள் அனைத்து சமயத்தவர்களையும் கவர வேண்டும் என்பதற்காக காலண்டர்கள் மூலம் இணைவைத்தல் மற்றும் பாவக்காரியத்தை சர்வ சாதாரணமாக செய்து வருகிறார்கள்.

 

தங்கள் கடைகளுக்கு வரும் முஸ்லிம் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் மக்கா, மதீனா, பைத்துல் முகத்தஸ், பிரபலமான தர்காக்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட காலண்டர்களை வழங்குவார்கள். மார்க்க ஞானம் இல்லாத சிலர் அதை வாங்கிச் சென்று வீட்டில் மாட்டி வைத்து, அதன் அருகில் ஊதுபத்தி சாம்பிராணி புகை காட்டி, பூ மாலைகள் போடுவதன் மூலம் வீட்டில் இறையருள் இறங்கும் என்று நம்புகிறார்கள்.

 

இந்து மற்றும் கிறிஸ்தவ சமயத்தவர்களை கவர்வதற்காக அவர்களின் திருத்தலங்களை, கோவில்களை அவர்கள்  வணங்கி வரும் தெய்வங்களை வண்ண வண்ண நிறங்களில் அச்சிட்டு கொடுப்பதன் மூலம் இணைவைப்பதை ஊக்குவிக்கிறார்கள்.

 

மேலும் இஸ்லாமிய வியாபாரிகளில் சிலர், ஆர்வக்கோளாறால் தங்களது காலண்டர்களில் திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள், இறைவனின் திருநாமங்களையும் அச்சிட்டு கொடுக்கிறார்கள். இதை வாங்கிச் செல்லும் பலர் அந்த நாள் அந்த வருடம் முடிந்ததும், அந்த காலண்டர்களை குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடைகளிலும் கால்களில் மிதிபடும் அளவுக்கு தெருக்களிலும் வீசிவிடுகின்றனர். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை கண்ணியப்படுத்த வேண்டியவர்களே அதை இழிவுபடுத்தியவர்களாக ஆகிவிடுகின்றனர்.

 

மூடநம்பிக்கைகளின் ஆரம்ப வழிகாட்டியே வாஸ்து, ராசிபலன், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல் தான். இவைகள் அச்சிடப்பட்ட காலண்டர்களை பிறருக்கு வழங்குல், ஒரு இறைநம்பிக்கையாளருக்கு அழகல்ல. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அன்பளிப்பாக கொடுப்பது எவ்வகையில் நியாயமாகும்?  நமது கடை மற்றும் அலுவலகம் சார்பில் கொடுக்கும் காலண்டரில் இவற்றை தவிர்க்க வேண்டும். இந்த மூடநம்பிக்கைகள் அடங்கிய காலண்டர்கள் பல பள்ளிவாசல்களிலேயே தொங்குகிறது. இதை பள்ளிவாசல் நிர்வாகம் கவனிக்கவேண்டும்.


புத்தாண்டு வந்து விட்டால் நாள்காட்டி என்னும் காலண்டர் தான் நினைவுக்கு வருகிறது. காலண்டர் என்ற பெயரில் வீட்டின் பரக்கத்துக்களை வெளியில் விரட்டிக் கொண்டிருக்கிறோம். ( لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ ) "உருவப் படங்கள் உள்ள இல்லங்களுக்குள் வானவர்கள் நுழைவதில்லை" என்கிறது ஒரு நபிமொழி. (நூல்:- அபூதாவூத்-196, நசாயீ-261) 


வானவர்கள் வருகையின்றி நம் வீடுகளுக்கு வெளிச்சங்கள் நிச்சயம் வரப்போவதில்லை.

 

நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், குழந்தைகள் ஆகியோரின் உருவம் மற்றும் வனவிலங்குகளில் உருவம் பொறித்த காலண்டர்கள் என பட்டியல் நீட்டிக் கொண்டே போகலாம். உருவங்கள் பொறித்த காலண்டர்களை தவிர்த்து மரம், செடி, கொடி போன்ற இயற்கைக் காட்சிகள் பொறித்த காலண்டர்களை பயன்படுத்தலாம்.

 

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று எண்ணுவதும், புத்தாண்டு, பிறந்தநாள் போன்ற நாள்களில் ஏதாவது துன்பம் நிகழ்ந்துவிட்டால் அந்த வருடம் முழுவதும் துன்பம் நிகழும் என்று எண்ணுவதும் நம்முடைய இறைநம்பிக்கையை ஆட்டம் காண வைத்துவிடும்.

 

புத்தாண்டின் ஆரம்ப தினத்தில் நன்மை நிகழ்ந்தால் அந்த வருடம் முழுவதும் நன்மை நிகழும்; துன்பம் நிகழ்ந்தால் அந்த வருடம் முழுவதும் துன்பம் நிகழும் என்று எண்ணும் முட்டாள்கள், புத்தாண்டின் ஆரம்ப தினத்தில் மதுவிலும் மங்கையிலும் தள்ளாடித் திரிந்தால் அந்த வருடம் முழுவதும் இவ்வாறு தள்ளாடித் தெரிய வேண்டுமே என்றெண்ணி, அன்றைய தினத்தில் மது, மங்கையை தவிப்பார்களா?


நம் நேசத்திற்குரிய ஒருவர் இறந்துவிட்டால் ஆண்டுதோறும் அவருடைய இறந்த தினத்தன்று துக்கம் அனுஷ்டிப்பதும், அன்றைய தினம் கருப்பு நிற ஆடையை அணிந்து கொள்வதும், அவரின் உருவப் படத்தை மக்களின் பார்வைக்காக பொது இடங்களில் ஒட்டி வைப்பதும், செய்தித்தாள்கள் மூலம் அதனை விளம்பரப்படுத்துவதும், இன்ன பிற காரியங்களில் ஈடுபடும் பாவச் செயலாகும்.

 

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற பெரிய மனிதராக இருந்தாலும் அவருக்காக துக்கம் அனுஷ்டிப்பது மூன்று நாள்களுக்கு மட்டுமே ஆகும். ஆனால், கணவன் இறந்துவிட்டால் மனைவி மட்டும் நான்கு மாதம் பத்து நாள்கள் மட்டும் துக்கம் அனுஷ்டிப்பாள் என்கிறது இஸ்லாம்.

 

சுருங்கக் கூறின், இறந்தநாள் என்று ஆண்டுதோறும் துக்க அனுஷ்டிப்பதோ புத்தாண்டு, பிறந்த நாள், திருமண நாள் என்று ஆண்டுதோறும் கொண்டாடுவதோ இஸ்லாமியப் பார்வையில் தவறாகும்.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ ‏ ) வேதக்காரர்கள் (பிற சமயத்தவர்கள்) உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் "வ அலைக்கும்"  (உங்களுக்கும் அதுவே ஆகட்டும்) என்று பதில் கூறுங்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6258, முஸ்லிம்-4369

 

பிற சமயத்தவர்கள் கூறும் வாழ்த்துச் சொற்களை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் விரும்புவதில்லை ஆகையால் அவர்கள் நமக்கு "good morning, good evening, good night" என்று கூறினாலும் அல்லது சலாம் கூறினாலும் அல்லது "Happy New year" என்று கூறினாலும் அவர்களுக்கு (வ அலைக்கும்) "உங்களுக்கும் அதுவே ஆகட்டும்" என்ற பொருள் தரக்கூடிய "same to you" என்ற சொற்றொடரை மறுமொழியாக நாம் கூறலாம்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ) ‏ ) பிற சமுதாயத்திற்கு ஒப்பான செயலை மேற்கொள்பவர் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவராகவே கணிக்கப்படுவார். அறிவிப்பாளர்:- இப்னு உமர் (ரலி) அவர்கள் அபூதாவூத்-3512

 

அறியாமைக் கால செயலையும், பிற சமயத்தவர்களின் வழிமுறையும் விட்டொழித்து விட்டு நபிவழியே என் வழி என்ற நீ வாழ்வாரோ அவரே சிறந்த முஸ்லிம் ஆவார். நாம் சிறந்த முஸ்லிமாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...