ஸம்ஸம் அகிலம் வியக்கும் அதிசயம்
ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
யார் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ, நிச்சயமாக அது அவருடைய உள்ளங்களில் உருவாகும் இறையச்ச(த்தின் அடையாள)ம் ஆகும். திருக்குர்ஆன்:- 22:32
உலகத்தில் பிரமிக்க வைக்கும் அதிசயங்கள் பல உள்ளன. ஆனால், இந்த அதிசயங்கள் கால ஓட்டத்தில் மங்கக்கூடும். காரணம், இவை மனிதனால் உருவாக்கப்பட்டவை.
மக்கா நகரில் உள்ள
புனித கஅபாவில் இருந்து கிழக்கே 21 மீட்டர் (66 அடி) தொலைவில், மகாமே இப்ராஹீமிற்குப் பின்புறத்தில் “ஸம்ஸம்” என்ற அதிசய கிணறு
ஒன்று உள்ளது. அது, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அது உருவான காலத்தில் இருந்து
இன்று வரை அதன் பிரமிப்பு கொஞ்சமும் குறையாமல் நின்று நிலைத்துள்ளது. உலகம் அழியும்
வரை அது நிலையானது. காரணம், அது இறைவன் உண்டாக்கியது.
காலத்தால் அழியாதது. மங்காதது.
அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர். அகலம் 6 அடி. தண்ணீர் அளவு சுமார் 4 மீட்டர். அது உருவான காலத்திலிருந்து ஓயாது வற்றாத நீரை வழங்கிக் கொண்டிருப்பது தான் விந்தையாகும். எங்கு தோண்டினாலும் தண்ணீர் வராத பாலைவனத்தில் லட்சக்கணக்கான ஹஜ், உம்ரா பயணிகளுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இக்கிணறு தண்ணீர் தந்து கொண்டிருப்பது இறைவனின் அற்புதம் என்றால் மிகையன்று.
அந்தக் கிணறு அமைந்துள்ள
அந்த இடத்தை வட்ட வடிவ அமைப்பிலான மார்பிள் கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. இன்னும்
கஅபாவை வலம் (தவாஃப்) வரக் கூடியவர்களுக்கு இடையூறின்றி, தரை மட்டத்திலிருந்து 1.56 மீட்டர் கீழே அமைக்கப்பட்டுள்ளது.
மாசுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று நாயகர்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது இளைய மனைவி ஹாஜர் (அலை) அவர்களையும் அருமை புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் இறையாணைப்படி அப்போது வனாந்தரமாக இருந்த மக்காவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.
மனைவிக்கும் குழந்தைக்கும்
அவர் கொடுத்து விட்டு சென்ற உணவும் தண்ணீரும் தீர்ந்து போனபின், தண்ணீரைத் தேடி ஹாஜர் (அலை) அவர்கள் அலைந்தார்கள்.
இறுதியில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி ஓரிடத்தில் தமது குதிங்காலால் பள்ளம்
விழும்படி அழுத்தினார்கள். அதிலிருந்து தூய தண்ணீர் பீறிட்டு வந்தது.
ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம்போல் (கையில்) அமைக்கலானார்கள். அதைத் தம் கையால் இப்படி (ஓடிவிடாதே! நில்" என்று சைகை செய்து) சொன்னார்கள். (அதை அணைபோட்டு, பள்ளம் தோண்டி தண்ணீரைச் சேமித்து) அந்தத் தண்ணீரை அள்ளித் தமது தண்ணீர்பையில் ஊற்றலானார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது. (அதுதான் இன்றைய ஸம்ஸம் கிணறு ஆகும்.)
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் அல்லாஹ், ( يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ
لَوْ تَرَكَتْ زَمْزَمَ لَكَانَتْ زَمْزَمُ عَيْنًا مَعِينًا ) “இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்கு கருணை புரிவானாக! ஸம்ஸம் தண்ணீரை அவர் அப்படியே
விட்டுவிட்டிருந்தால் ஸம்ஸம் தண்ணீர் பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்"
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3364, முஸ்னது அஹ்மத், ஃபத்ஹுல்பாரீ
பிற்காலத்தில் மக்காவின் ஜுர்ஹும் கோத்திரத்தைச் சார்ந்த அம்ரு பின் ஹர்ஸ் என்பவர் மக்காவின் தலைவராக இருந்தபோது, அடையாளம் தெரியாத அளவு ஸம்ஸம் கிணற்றை முற்றிலுமாக மூடிவிட்டார். பிறகு எவ்வாறு மீண்டும் ஸம்ஸம் கிணறு உலகிற்கு தெரியவந்தது?
அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் கனவு கண்டார். அந்த கனவில் வந்தவர் "தூய்மையானவர்களின் (அதாவது, நபி இஸ்மாயீல் - அலை மற்றும் அவரின் சந்ததிகளின்) நீரூற்றை தோண்டுவீராக!" எனச் சொல்லி மறைந்து விட்டார்.
அப்துல் முத்தலிப் இரண்டாம் நாள் கண்ட அக்கனவில் வந்தவர் "நல்லடியார்களின் நீரூற்றை தோண்டுவீராக!" எனச் சொல்லி மறைந்து விட்டார்.
அப்துல் முத்தலிப் மூன்றாம் நாள் கண்ட வந்தவர் "இறைவனை நம்பிய நல்லடியார்களின் மறைந்த புதையலை தோண்டுவீராக!" என்று சொல்லி மறைந்து விட்டார். நான்காம் நாள் கனவில் "ஜம்ஜம் நீரூற்றை தோண்டுவீராக!" எனச் சொல்லி மறைந்து விட்டார்.
அப்துல் முத்தலிப், காலையில் எழுந்ததும் குறைஷிகளையும் மற்ற குலத்தார்களையும் அழைத்து, "நான் இப்படி கனவு கண்டேன்" என்றார். மக்கள் "ஸம்ஸம் நீரூற்று எந்த இடத்தில் இருக்கிறது?" என்று கேட்டனர். அப்துல் முத்தலிப் "தெரியாது" என்றார்.
மக்கள், "இந்தக் கனவு அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தால் அந்நீரூற்று எந்த இடத்தில் இருக்கிறது என்பதற்கான தகவலும் கனவிலேயே கிடைக்கும். அவ்வாறில்லாமல் இக்கனவு ஷைத்தானிடமிருந்து ஊசலாட்டமாக வந்திருந்தால் அதை லட்சியம் செய்ய வேண்டாம்; விட்டுவிடுங்கள்" என்று கூறினர்.
அப்துல் முத்தலிப் கண்ட ஐந்தாம் நாள் கனவில் "ஸம்ஸம் நீரூற்றை தோண்டுவீராக!" என்று சொன்னதும், அப்துல் முத்தலிப், "அது எவ்விடத்தில் இருக்கிறது?" என்று கேட்டார். கனவில் தோன்றியவர், "அவ்விடத்தில் எறும்புப்புற்று இருக்கும். சாணமும் இரத்தமும் அங்கே கிடக்கும். கால்களும் அலகும் செந்நிறமாகவும் வயிற்றின் அடிப்பகுதி வெண்மையாகவும் உடலின் மற்ற பகுதிகளெல்லாம் கருமை நிறத்திலும் இருக்கக்கூடிய ஒரு காகம் அவ்விடத்தில் இறரை தின்றுகொண்டிருக்கும்" என்று பதிலளித்தார்.
அப்துல் முத்தலிப் காலை எழுந்ததும் கனவில் மேற்கூறப்பட்ட இடத்தை அறிந்து அவ்விடத்தை தோண்டுவதற்கு குரைஷிகளை அழைத்தார். அதற்கு அவர்கள், "இவர் ஏதோ உளறுகிறார் என்று எண்ணியவாறு அவர்கள் வர மறுத்துவிட்டனர்.
அப்துல் முத்தலிப் அப்போது தமக்கிருந்த ஒரே ஒரு மகன் ஹாரிஸ் என்பவரை மட்டும் அழைத்துக் கொண்டு மண்வெட்டி, கடப்பாறையோடு கிளம்பி போய் அந்த இடத்தைத் தோண்டினார். அப்போது அதிலிருந்து தங்கத்தாலான இரண்டு வாள்கள் இன்னும் தளவாட சாமான்கள் எல்லாம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருந்தபோது நீரூற்றும் பொங்கிக் கொண்டு வந்தது. நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபோது அக்கிணறு தூர்வாரப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَيرُ مَاءٍ عَلَى وَجْهِ الأَرضِ مَاءُ زَمْزَمَ ) பூமிக்கு மேல் இருக்கும் தண்ணீரில் சிறந்தது (ZAM ZAM WATER) ஸம்ஸம் தண்ணீராகும். நூல்:- தப்ரானீ, இப்னு ஹிப்பான், அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, இப்னு அதீ, அல்பானீ-1420, அஹ்பாரு மக்கா இமாம் ஃபாக்கிஹீ
புனிதமானது
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَمْسٌ مِنَ العِبادَةِ؛ النَّظَرُ إلى المُصْحَفِ، والنَّظَرُ إلى الكَعْبَةِ، والنَّظَرُ إلى الوالِدَيْنِ، والنَّظَرُ في زَمْزَمَ، وهي تَحُطُّ الخَطايا، والنَّظَرُ في وجْهِ العالِمِ ) ஐந்து (பார்வைகள்) இறைவழிபாடாகும். அவை: 1. குர்ஆனைப் பார்ப்பது, 2. கஅபாவைப் பார்ப்பது, 3. பெற்றோரை (கருணையுடன்) பார்ப்பது, ஸம்ஸம் தண்ணீரைப் பார்ப்பது, ஆகியவற்றால் அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். (இறையச்சம் மிகுந்த) அறிஞரின் முகத்தைப் பார்ப்பதும் இறைவழிபாடாகும். நூல்:- தாரகுத்னீ, அஹ்பாரு மக்கா இமாம் ஃபாக்கிஹீ, ளஈஃபுல் ஜாமிஉ-2854
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أنَّ
النَّبِيَّ صلي الله عليه وسلم : كانَ إذا أرادَ أنْ يُتْحِفَ الرَّجُلَ بِتُحْفَةٍ
سَقاهُ مِن ماءِ زَمْزَمَ ) அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
யாருக்காவது தலைசிறந்த அன்பளிப்பை கொடுத்து அவரை மகிழ்ச்சியூட்ட விரும்பினால், அவருக்கு ஸம்ஸம் தண்ணீரை பருகக் கொடுப்பார்கள். நூல்:- அபூநயீம், தஃப்சீர் துர்ருல்மன்ஸூர்,
அத்தவ்பா வசனம்-19, ஃ பைளுள் கதீர்
அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( وخَيْرُ بِئْرٍ في النّاسِ بِئْرُ زَمْزَمَ، وشَرُّ بِئْرٍ في النّاسِ بِئْرُ بَرَهُوتُ، وإلَيْها تَجْتَمِعُ أرْواحُ الكُفّارِ ) மக்களிடையே சிறந்த கிணறு ஸம்ஸம் கிணறு. மக்களிடையே மிக மோசமான கிணறு பர்ஹுத் கிணறு. அது, இறைமறுப்பாளர்களின் ஆன்மாக்கள் கூடும் இடம். நூல்:- தஃப்சீர் துர்ருல்மன்ஸூர், அத்தவ்பா வசனம்-19
முஆவியா (ரலி) அவர்கள் தவாஃப் செய்து முடித்துவிட்டு இரண்டு ரக்அத் தொழுத பிறகு ஸஃபா குன்றுக்கு செல்லும் முன் ஸம்ஸம் கிணற்றருகே வந்து ஒருவரிடம் ( يا غُلامُ، انْزِعْ لِي مِنها دَلْوًا ) “பணியாளரே! தனக்காக அதிலிருந்து ஒரு வாளி தண்ணீரை இறைத்துத் தருவீராக! என்று கேட்டார்கள். அவர் இறைத்து கொடுத்ததும் அந்நீரைக் குடித்துவிட்டு அதில் எஞ்சியதை (அதன் பரக்கத்தை நாடி) தன் தலையிலும் முகத்திலும் தெளித்துக் கொண்டார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அத்தவ்பா வசனம்-19, அக்பாரு மக்கா இமாம் ஃபாக்கிஹீ
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( صَلُّوا في مُصَلّى الأخْيارِ، واشْرَبُوا مِن شَرابِ الأبْرارِ ) "சிறந்தவர்கள் தொழும் இடத்தில் நீங்கள் தொழுங்கள். மேலும் நல்லோர்கள் பருகும் பானத்தை (விரும்பிப்) பருகுங்கள்" என்று கூறினார்கள். அப்போது ( ما مُصَلّى الأخْيارِ؟ ) “சிறந்தவர்கள் தொழும் இடம் என்றால் எது?” வினவப்பட்டது. அதற்கு அன்னார், ( تَحْتَ المِيزابِ ) "(மீஸாப் எனும்) கஅபாவின் மழைநீர் வடிகால் குழாய்க்கு கீழ் பகுதி” என்று கூறினார்கள். மேலும், ( وما شَرابُ الأبْرارِ؟ ) "நல்லோர்கள் பருகும் பானம் என்றால் எது?" வினவப்பட்டது. அதற்கு அன்னார், ( ماءُ زَمْزَمَ ) "ஸம்ஸம் தண்ணீர்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல்மன்ஸூர், அத்தவ்பா வசனம்-19
பேரறிஞர் ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் மக்காவாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருப்பதாவது. மக்காவில் 15 இடங்களில் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதில் ஒரு இடம் ஸம்ஸம் கிணறுக்கு
அருகில். நூல்:- ஹிஸ்னுல் ஹஸீன்
வளம் மிக்கது
அபூதர் அல்கிஃபாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க மக்கா சென்றேன். என்னைப் பார்த்த நபியவர்கள், ( مَتّى كَنْتَ هَهُنا؟ ) "எத்தனை நாட்களாக இங்கிருக்கிறீர்? என்று வினவ, "முப்பது நாட்களாக" என்றேன். நபியவர்கள், ( فَمَن كَانَ يُطْعِمُكَ؟ ) "(இத்தனை நாட்களாக) உனக்கு உணவளித்தது யார்?" என்று வினவினார்கள்.
அதற்கு நான், ( مَا كَانَ لِي طَعَامٌ إِلاَّ مَاءُ زَمْزَمَ . فَسَمِنْتُ حَتَّى تَكَسَّرَتْ عُكَنُ بَطْنِي وَمَا أَجِدُ عَلَى كَبِدِي سُخْفَةَ جُوعٍ ) " ஸம்ஸம் தண்ணீரைத் தவிர வேறெந்த உணவும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் என் வயிற்றின் மடிப்புகள் அகலும் அளவுக்கு நான் பருமன் ஆகிவிட்டேன். என் ஈரலில் பசிக் கொடுமை தெரியவில்லை" என்று சொன்னேன். அப்போது நபியவர்கள், ( إنَّهَا مُبَارَكَةٌ، إنَّهَا طَعَامُ طُعْمٍ ) "அது (ஸம்ஸம்) வளமிக்கதாகும். அது (ஒரு வகையில்) வயிற்றை நிரப்பும் உணவாகும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4878
இமாம் இப்னு கைய்யிம்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் நாற்பது நாள்கள் ஸம்ஸம் தண்ணீர் மட்டும் தான் பருகி
வந்தேன். (எதுவும் சாப்பிடவில்லை. ஆனாலும்,) பசியெடுக்கவே இல்லை. நூல்:- ஸாதுல் மஆத்
இமாம் இப்னு கைய்யிம்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அரை மாதம் அல்லது அதைவிட அதிக நாள்கள் ஸம்ஸம் தண்ணீரை
மட்டுமே பருகிக் கொண்டு உணவின்றி இருந்த ஒருவரை நான் கண்டுள்ளேன். அவர், பசியை உணர மாட்டார். மக்களோடு மக்களாக இறையாலயத்தை
(தவாஃப்) வலம் வருவார். சில சமயம் அவர் நாற்பது நாள்கள் வரை உணவின்றி இந்த ஸம்ஸம் தண்ணீரை
மட்டுமே பருகி வந்ததாக என்னிடம் தெரிவித்தார். அவர் தம் மனைவியோடு தாம்பத்திய உறவு
கொள்கின்ற அளவிற்கு ஆற்றல் இருந்தது. நோன்பு நோற்பார். பல்வேறு தடவைகள் இறையாலயத்தை
வளம் வருவார். நூல்:- அத்திப்புந் நபவீ
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( إِنَّهَا مُبَارَكَةٌ؛ إِنَّهَا طَعَامُ طُعْمٍ وَشِفَاءُ سُقْمِ
) அது (ஸம்ஸம் தண்ணீர்) வளமிக்கதாகும். அது (ஒரு வகையில்)
வயிற்றை நிரப்பும் உணவாகவும், நோய் நிவாரணியாகவும் இருக்கிறது. அறிவிப்பாளர்:- அபூதர்
(ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, தப்ரானீ
சிறந்த மருந்து
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ماءُ زَمْزَمَ شِفاءٌ مِن كُلِّ داءٍ ) ஸம்ஸம் தண்ணீர் ஒவ்வொரு
நோய்க்கும் மருந்தாகும். நூல்:- முஸ்னது அல்ஃபிர்தௌஸ் இமாம் தைலமீ, தஃப்சீர் துர்ருல்மன்ஸூர்,
அத்தவ்பா வசனம்-19
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ماءُ زَمزَمَ لِما شُرِبَ له ، إنْ شَرِبْتَهُ تَستشْفِي شَفاكَ اللهُ ، وإنْ شَرِبتَهُ لِشَبَعِكَ أشْبَعَكَ اللهُ ، وإنْ شَرِبتَهُ لِقَطْعِ ظَمَئِكَ قطَعَهُ اللهُ ) ஸம்ஸம் தண்ணீரை எந்த நோக்கத்திற்காக அருந்தப்படுகின்றதோ அந்த நோக்கம் நிறைவேறும். நீ நோய் குணமடைய வேண்டும் என அருந்தினால் அல்லாஹ் நோயை குணமாக்குவான். பசி தீர வேண்டுமென அருந்தினால் அல்லாஹ் உனது பசியை தீர்த்துவைப்பான். தாகம் தீர வேண்டுமென அருந்தினால் அல்லாஹ் உனது தாகத்தை தீர்த்துவைப்பான். நூல்:- பைஹகீ, தாரகுத்னீ, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, ஜாமிஉஸ் ஸஙீர்-7741, ஜாமிஉஸ் ஸஹீஹ்-2435,
உர்வா பின்
ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
( عَنْ عائِشَةَ، أنَّها كانَتْ تَحْمِلُ ماءَ زَمْزَمَ في القَوارِيرِ،
وتَذْكُرُ أنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَ ذَلِكَ، وكانَ يَصُبُّ عَلى
المَرْضى ويَسْقِيهِمْ )
கண்ணாடி குடுவைகளில்
ஸம்ஸம் தண்ணீரை நிரப்பிச் செல்வது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வழக்கமாகும். மேலும்
மருந்துக்காகவும், நன்மையை நாடியும் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்து
வந்ததாகவும், நோயாளிகள் மீது அதைத்
தெளிப்பதுடன் அதை அருந்தக் கொடுப்பதும் நபியவர்களின் வழக்கமாக இருந்து வந்தது. நூல்:-
திர்மிதீ-886, பைஹகீ, ஹாகீம்
அபூஜம்ரா அள்ளுபயீ
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒருமுறை) என்னைக் காய்ச்சல் பீடித்தது.
அப்போது, அன்னார் கூறினார்கள்.
( أَبْرِدْهَا عَنْكَ بِمَاءِ زَمْزَمَ ) “ஸம்ஸம் தண்ணீரைப் பயன்படுத்தி
உன் காய்ச்சலைத் தணித்துக்கொள்” ஏனெனில், அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( هِيَ
الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِمَاءِ زَمْزَمَ ) “இந்தக் காய்ச்சல்
நரகத்தின் பெருமூச்சினால் தான் உண்டாகிறது. எனவே, அதை ஸம்ஸம் தண்ணீரைக் கொண்டு தணித்துக் கொள்ளுங்கள்''
என்று கூறினார்கள். நூல்:-
புகாரீ-3261
இமாம் இப்னு கைய்யிம்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நானும் மற்றவர்களும் ஸம்ஸம் தண்ணீரை பருகியதால் ஆச்சரியமான
பல்வேறு விஷயங்களை அனுபவரீதியாக உணர்ந்துள்ளோம். இதை பருகிவிட்டுப் பல்வேறு நோய்களிலிருந்து
நிவாரணம் கேட்டு, அல்லாஹ்வின் அனுமதியால் நான்
நிவாரணம் பெற்றுள்ளேன். நூல்:- அத்திப்புந்
நபவீ
ஸம்ஸம் தண்ணீரை நோயாளிமீது தெளிக்க வேண்டும், அல்லது அவரது ஆடையில்
தெளித்துச் சிகிச்சை செய்ய வேண்டும்.
கொண்டுசெல்லலாம்
மக்கா வெற்றிக்கு முன் புனித மக்காவில் இருந்த நபித்தோழர் சுஹைல் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில், ( إنْ جاءَكَ كِتابِي لَيْلًا فَلا تُصْبِحَنَّ، وإنْ جاءَكَ نَهارًا فَلا تُمْسِيَنَّ حَتّى تَبْعَثَ إلَيَّ بِماءٍ مِن ماءِ زَمْزَمَ. فَمَلَأ لَهُ مَزادَتَيْنِ، وبَعَثَ بِهِما عَلى بَعِيرٍ ) "எனது கடிதம் இரவில் உம்மை வந்தடைந்தால் விடிவதற்குள் அல்லது பகலில் உம்மை வந்தடைந்தால் மாலை மறைவதற்குள் ஸம்ஸம் தண்ணீரை என்னிடம் அனுப்பி விடவும்" என்று குறிப்பிட்டிருந்தார்கள். கடிதம் கண்டதும் இரண்டு பெரிய தோல் பைகளில் நபியவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அத்தவ்பா வசனம்-19, மகாஸிதுல் ஹசானா
ஹஜ், உம்ரா செய்பவர்கள், குறிப்பிட்ட அளவு ஸம்ஸம் தண்ணீரை எடுத்துச்செல்ல, சவூதி அரசு அனுமதி வழங்கி,
ஜித்தா மற்றும் மதீனா நகரின் விமான நிலையங்களில் அதற்குரிய ஏற்பாடு செய்துள்ளது. ஹஜ்,
உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள்
ஊருக்கு எடுத்துச்சென்று, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதனைப் பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைகின்றார்கள்.
ஹஜ், உம்ராவை நிறைவேற்றிவிட்டு
வந்தவர், ஸம்ஸம் தண்ணீரை எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பதற்காக, அதில் மற்ற தண்ணீரை கலப்படம் செய்து வழங்குவது முறையல்ல.
இதில் கலப்படம் செய்து யாரையும் ஏமாற்ற வேண்டாம்.
நமது பகுதியில் ஒரு லிட்டர் ஸம்ஸம் தண்ணீர் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை
செய்யப்படுகிறது.
பருகும் முறை
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீரை கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு பருகினார்கள். நூல்:- புகாரீ-1637, முஸ்லிம்-4120
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் வாளியில் ஸம்ஸம்
தண்ணீரை இறைக்கும்படி உத்தரவிட்டார்கள். வாளி இறைக்கப்பட்டு கிணற்றின் கைப்பிடி சுவற்றின்
மீது வைக்கப்பட்டது. நபியவர்கள் அந்த வாளியை கையால் பிடித்து "பிஸ்மில்லாஹ்"
என்று கூறி வெகுநேரம் வரை பருகினார்கள். பிறகு "அல்ஹம்துலில்லாஹ்" என்று
கூறினார்கள். மறுபடியும் (இரண்டாம் முறை) "பிஸ்மில்லாஹ்" என்று கூறி முன்பைவிட
வெகுநேரம் பருகினார்கள். பிறகு "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள். மறுபடியும் (மூன்றாம் முறை) "பிஸ்மில்லாஹ்"
என்று கூறி முன்பைவிட வெகுநேரம் பருகினார்கள். பிறகு "அல்ஹம்துலில்லாஹ்"
என்று கூறினார்கள்.
அதற்குப் பிறகு (
عَلامَةُ ما بَيْنَنا وبَيْنَ المُنافِقِينَ، لَمْ يَشْرَبُوا مِنها قَطُّ
حَتّى يَتَضَلَّعُوا ) "நமக்கும் நயவஞ்சகர்களுக்கும்
இடையே உள்ள (வேறுபடுத்தும்) அடையாளம், (என்னவென்றால்) அவர்கள் ஸம்ஸம் தண்ணீரை வயிறு நிரம்ப பருக மாட்டார்கள்
என்பதுதான்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அத்தவ்பா வசனம்-19
முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. "அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு ஒருவர் வந்தார். அன்னார், "நீர் எங்கிருந்து வருகிறீர்?" என்று வினவினர்கள். அவர், "ஸம்ஸம் கிணற்றில் இருந்து" என்று கூறினார். அன்னார், "அந்தப் புனித நீரை எவ்வாறு பருக வேண்டும் என்று உமக்குத் தெரியுமா?" என்று வினவ, அதற்கு அவர், "எவ்வாறு (பருக வேண்டும்)?" என்று வினவினார்.
அன்னார், (
إِذَا شَرِبْتَ مِنْهَا فَاسْتَقْبِلِ الْكَعْبَةَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ
وَتَنَفَّسْ ثَلاَثًا وَتَضَلَّعْ مِنْهَا فَإِذَا فَرَغْتَ فَاحْمَدِ اللَّهَ عَزَّ
وَجَلَّ ) "நீர் அதிலிருந்து பருகும்போது, கிப்லாவை முன்னோக்கி, அல்லாஹ்வின் பெயரைக் கூறியவாறு, மூன்றுமுறை மூச்சு விட்டு மூச்சு விட்டு சிறிது
பருகிவிட்டு, பிறகு அதை வயிறு நிரம்பப்
பருகு! நீர் பருகி முடித்ததும், கீர்த்திமிக்க அல்லாஹ்வைப் புகழ்வீராக!" என்று
கூறிவிட்டு பின்வரும் நபிமொழியை எடுத்துரைத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( آيَةُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونُ
مِنْ مَاءِ زَمْزَمَ ) "நமக்கும் நயவஞ்சகர்களுக்கும் இடையே உள்ள
(வேறுபடுத்தும்) அடையாளம், (என்னவென்றால்) அவர்கள் ஸம்ஸம் தண்ணீரை
வயிறு நிரம்ப பருக மாட்டார்கள் என்பதுதான்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-3061, தாரகுத்னீ, அல்ஐனீ, உம்தத்துல் காரீ
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸம்ஸம் தண்ணீரை அருந்தும் போது ( اَللَّهُمَّ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا وَاسِعًا، وَشِفَاءً
مِنْ كُلِّ دَاءٍ ) “இறைவா! பலனளிக்கும் கல்வியையும், தாராளமான இரண பாக்கியத்தையும், சகல விதமான நோய்களிலிருந்து நிவாரணத்தையும் தருவாயாக!”
என்று பிரார்த்தித்துள்ளார்கள். நூல்:-
தாரகுத்னீ, ஹாகிம், தஃப்சீர் குர்துபீ
இப்ராஹீம் வசனம்-37
பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் ளஹ்ஹாக் பின் முஸாஹிம் (ரஹ்) அவர்கள்,
( أنَّ التَّضَلُّعَ مِن ماءِ
زَمْزَمَ بَراءَةٌ مِنِ النِّفاقِ
) "ஸம்ஸம் தண்ணீரை வயிறு நிரம்ப பருகுவதன் மூலம் நயவஞ்சகத்திலிருந்து
விடுதலை பெறலாம்" என்ற செய்தி தமக்கு கிடைத்ததாகக் கூறுகிறார்கள். நூல்:- தஃப்சீர்
துர்ருல்மன்ஸூர், அத்தவ்பா வசனம்-19
ஸம்ஸம் தண்ணீரை
நின்றுகொண்டு பருகலாம் என்பது அனுமதியே தவிர,
அவசியமல்ல. வயிறு நிரம்பப் பருகும் வாய்ப்புக் கிடைத்தால்
பருகிவிடவேண்டும்.
நோக்கம் நிறைவேறும்
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَاءُ
زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ ) ஸம்ஸம் தண்ணீரை எந்த நோக்கத்திற்காக
அருந்தப்படுகின்றதோ அந்த நோக்கம் நிறைவேறும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3062, முஸ்னது அஹ்மத், அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, ஸாதுல்
மஆத்
நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن
شَرِبَهُ لِمَرَضٍ شَفاهُ اللَّهُ، أوْ لِجُوعٍ أشْبَعَهُ اللَّهُ، أوْ لِحاجَةٍ قَضاها
اللَّهُ ) யார் ஸம்ஸம் தண்ணீரை
நோய் நிவாரணம் பெற பருகினால், அல்லாஹ் அவருக்கு நோய் நிவாரணத்தை வழங்குவான். பசியின்
காரணமாக பருகினால், அல்லாஹ் அவருக்கு பசியை போக்குவான். தமத தேவை ஒன்று
நிறைவேறவேண்டும் என்பதற்காக பருகினால், அல்லாஹ் அவரின் தேவையை
நிறைவேற்றித் தருவான். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:-
தஃப்சீர் துர்ருல்மன்ஸூர், அத்தவ்பா வசனம்-19
உமர் (ரலி) அவர்கள்
ஸம்ஸம் தண்ணீர் பருகும் போது, ( أشْرَبُ
هَذا لِعَطَشِ يَوْمِ القِيامَةِ
) "(இறைவா!) மறுமைநாளில் தாகம்
தணியவேண்டும் (அதாவது, தாகமே ஏற்படாமல் இருக்கவேண்டும்) என்பதற்காக நான் இதைப் பருகுகிறேன்"
என்று கூறுவார்கள். இதைப் போன்றே அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களும் பிரார்த்திப்பார்கள்.
நூல்:- கன்ஸுல் உம்மால், தஃப்சீர் துர்ருல்
மன்ஸூர் அத்தவ்பா வசனம்-19
இமாம் புகாரீயின்
ஆசிரியரான ஹுமைதிய்யீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் (புகழ்பெற்ற நபிமொழித்துறை
நிபுணரான) சுஃப்யான் பின் உயைய்னா (ரஹ்) அவர்கள் சபையில் அமர்ந்திருந்தோம். அப்போது
அன்னார் எங்களுக்கு “ஸம்ஸம் தண்ணீரை எந்த நோக்கத்திற்காக அருந்தப்படுகின்றதோ அந்த நோக்கம்
நிறைவேறும்” என்ற நபிமொழியை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சபையில் இருந்த ஒருவர்
எழுந்து சென்று விட்டு மீண்டும் வந்து, ( يا
أبا مُحَمَّدٍ، ألَيْسَ الحَدِيثُ الَّذِي قَدْ حَدَّثْتَنا في زَمْزَمَ صَحِيحًا؟
) “அபூமுஹம்மது அவர்களே! இப்போது நீங்கள் ஸம்ஸம்
தண்ணீர் குறித்து கூறிய நபிமொழி சரியானதுதானா?” என்று வினவினார்.
அதற்கு அன்னார், "ஆம்" என்றார்கள். அம்மனிதர், ( فَإنِّي شَرِبْتُ الآنَ دَلْوًا مِن زَمْزَمَ عَلى أنْ تُحَدِّثَنِي بِمِائَةِ
حَدِيثٍ
) “அப்படியென்றால் தாங்கள் எனக்கு நூறு நபிமொழிகளை கற்றுத் தர வேண்டும் என்று (நிய்யத்
வைத்து) எண்ணியவாறு இப்போது நான் ஒரு வாளி நிறைய ஸம்ஸம் தண்ணீர் பருகிவிட்டு வந்துள்ளேன்”
என்றார். அதற்கு அன்னார், அமருங்கள் என்று கூற, அவர் அமர்ந்தார். பிறகு அன்னார் அவருக்கு நூறு நபிமொழிகளை அறிவித்தார்கள். நூல்:-
கன்ஸுல் உம்மால், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அத்தவ்பா வசனம்-19
அபூஅப்துல்லாஹ் பின்
அலீ அத்திர்மிதீ (ரஹ்) அவர்கள் தனது
தந்தையின் அனுபவத்தை எடுத்துரைக்கிறார்கள்.
( دَخَلْتُ الطَّوَافَ فِي لَيْلَةٍ ظَلْمَاءَ فَأَخَذَنِي مِنَ الْبَوْلِ
مَا شَغَلَنِي، فَجَعَلْتُ أَعْتَصِرُ حَتَّى آذَانِي، وَخِفْتُ إِنْ خَرَجْتُ مِنَ
الْمَسْجِدِ أَنْ أَطَأَ بَعْضَ تِلْكَ الْأَقْدَامِ، وَذَلِكَ أَيَّامُ الْحَجِّ،
فَذَكَرْتُ هَذَا الْحَدِيثَ، فَدَخَلْتُ زَمْزَمَ فَتَضَلَّعْتُ مِنْهُ فَذَهَبَ عَنِّي
اِلَي الصَّبَاحِ )
ஹஜ்ஜுடைய காலத்தில் ஒருநாள் இருளான இரவில் நான் கஅபாவை தவாஃப் செய்ய (வலம் வர) சென்றேன். அந்த நேரத்தில் எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நானோ சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கி கொண்டிருந்தேன். வெளியில் சென்றால் மக்களின் பாதங்களை மிதித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமே எண்ணிக்கொண்டிருந்தபோது, (ஸம்ஸம் தண்ணீர் பருகும்போது நினைத்த காரியம் நடக்கும் என்ற) இந்த நபிமொழி நினைவுக்கு வந்தது. உடனே ஸம்ஸம் கிணற்றுக்குச் சென்று அதன் தண்ணீரை வயிறு நிரம்பப் பருகினேன். அதன் (பரக்கத் எனும்) அருள்வளத்தால் அடுத்த நாள் காலை வரை சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை" என்றார்கள். நூல்:- தஃப்சீர் குர்துபீ இப்ராஹீம் வசனம்-37, தஃப்சீர் துர்ருல்மன்ஸூர், அத்தவ்பா வசனம்-19
கல்வித் தேட்டம்
இமாம் அபூஹனீஃபா
(ரஹ்) அவர்கள் தாம் இஸ்லாமிய சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றவராக திகழ வேண்டும் என்று
எண்ணம் கொண்டவராக ஸம்ஸம் தண்ணீரை பருகினார்கள். அவ்வாறே அல்லாஹ் அவர்களை திகழச்செய்தான்.
இமாம் இப்னு ஹஜர்
அல்அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் நபிமொழிகளை படிக்கும் மாணவப் பருவத்தில் இருந்தபோது, நான் இமாம் அத்தஹபீ (ரஹ்) அவர்களைப் போல் நபிமொழிகளை
மனனம் செய்ய வேண்டும் என்று எண்ணியவாறு ஸம்ஸம் தண்ணீரை பருகினேன். இருபது ஆண்டுகளுக்குப்
பிறகு நான் ஹஜ் செய்தபோது நான் நினைத்ததை விட அதிகமான அந்தஸ்துக்களை அடைந்திருந்தேன்.
மேலும், தாம் மேதை சிராஜுத்தீன் புல்கீனி அவர்களைப் போல்
எந்த ஒரு மார்க்கத் தீர்ப்பை எழுதும்போதும் ஆதாரம் தேடாமல், நூல்களை புரட்டாமல் எழுதுவதுப் போல் எழுத எண்ணினேன்.
அல்லாஹ் எனக்கு அதனை மிக இலகுவாக்கித் தந்தான்.
காழி அபூபக்ர் இப்னுல் அரபி மாலிக்கி (ரஹ்) கூறினார்கள்: "ஹிஜ்ரீ 489- ம் ஆண்டு நான் மக்காவில் இருந்தேன். ஸம்ஸம் தண்ணீரை அதிகளவில் அப்போது பருகினேன். பருகும்போதெல்லாம், இறைநம்பிக்கையும், கல்வியும் அதிகரிக்க வேண்டுமென எண்ணம் கொண்டேன். அதன் பயனாக, அல்லாஹு தஆலா கல்வியை எனக்கு இலகுவாக்கி தன் (பரக்கத் எனும்) அருள்வளத்தை திறந்து விட்டான்.
பேரறிஞர் இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்களுக்கு இரண்டு இலட்சம் நபிமொழிகள் அதன் அறிவிப்பாளர்கள் உட்பட மனப்பாடமாக இருந்தன. அன்னார், "நான் மனனமிடுவதற்கு எனக்கு கிடைத்த நபிமொழிகள் அவ்வளவுதான். இன்னும் அதிகமாக கிடைத்திருந்தால் அவற்றையும் மனனமிட்டிருப்பேன்" என்று கூறினார்கள்.
ஒருமுறை இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் ஸம்ஸம் தண்ணீரை அருந்தும் போது தனக்கு பேரறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் நினைவாற்றல் கிடைக்க வேண்டுமென எண்ணியவாறு அதை பருகினார்கள். அதன் காரணமாகவே அவர்களுக்கு அபாரமான நினைவாற்றல் ஏற்பட்டது என்கிறது அவர்களின் வரலாறு.
14 ஆண்டுகளாக கெடவில்லை
உலகில் இயற்கையான தண்ணீர் வகைகளில் மிகவும் சுத்தமானது ஸம்ஸம் தண்ணீர் மட்டும் என்பதை நீண்ட ஆராய்ச்சிக்கு பின்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள "பில்டல்பியா" ஆராய்ச்சி கூடத்தில் ஸம்ஸம் தண்ணீரை எடுத்து வைத்துக்கொண்டு 14 ஆண்டுகளில் தொடர்ந்து ஆராய்ந்த பின்பு கீழ்காணும் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஊசி (இன்ஜஷக்ன்) குத்த பயன்படுத்தப்படும் நீராவி தண்ணீரை விடவும் அது மிகவும் சுத்தமானது. 14 ஆண்டுகள் அந்த தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மீது மூடி போட்ட, மூடி போடாத பல்வேறு நிலைகளில் வைக்கப்பட்டு இருந்தும் அதன் அசல் தன்மையில் எந்த ஒரு மாறுதலும் காணப்படவில்லை.
ஒரு தடவை மருத்துவர்கள்
சுகாதாரத்திற்காக இக்கிணறை சுத்தப்படுத்த ஆலோசனை கூறியபோது, அதை ஏற்று சவூதி அரசு எட்டு பம்பு செட்டுகளை பயன்படுத்தி
15 நாட்கள் இரவு பகலாக இதன் தண்ணீரை முழுமையாக இறைக்க
முயன்றும் முடியவில்லை. தண்ணீர் குறைவதற்குப் பதிலாக ஒரு அங்குலம் உயர்ந்திருந்தது.
அந்த கிணற்றிலிருந்து
சக்திவாய்ந்த மோட்டார்கள் மூலம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 660 லிட்டர், ஒரு மணி
நேரத்திற்கு சுமார் 39,600 லிட்டர், ஒரு நாளைக்கு
சுமார் 9,50,400
லிட்டர், ஒரு மாதத்திற்கு சுமார் 2,85,12,000 லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
அணைந்த விளக்குகள்
உலகமே சேர்ந்து ஒருசேரப் பருகினாலும் கொஞ்சம் கூட குறையவில்லையே என்று நம்மிடம் சந்தேகம் வரலாம். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா நகரின் மேயராக இருந்த அப்துல் காதர் கோசிக் அவர்களுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டது. சிலரை ஸம்ஸம் கிணற்றுக்குள் இறக்கி ஆராய்ச்சி நடத்தினார். சில ஆராய்ச்சியாளர்கள் பிரகாசமான விளக்குகளுடன் இறைவனின் பெயரை கூறியவாறு கிணற்றுக்குள் இறங்கினர். கீழே செல்லச் செல்ல அகலம் குறைந்து கொண்டே வந்தது. பல தன்மைகள் கொண்ட மண் கிடந்தன. அடியில் பல தன்மைகள் கொண்ட பாறைகளும் கிடந்தன. குறிப்பிட்ட தூரத்தை தாண்டியவுடன் விளக்குகள் அணைந்துவிட்டன.
(இறைவனின் வெளிச்சத்துக்கு முன் மற்ற வெளிச்சங்கள் தோற்றுவிடும் என்பது உண்மைதானே!) ஆராய்ச்சியாளர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. கிணற்றின் இறுதியில் (பி இத்னிலலாஹ்) "அல்லாஹ்வின் உத்தரவினால்" என்ற வாசகத்துடன் முடிந்தது. ஆராய்ச்சியாளர்கள் எதையும் உறுதியாக கூற முடியவில்லை. நவீன விஞ்ஞானிகளையே மிகவும் பிரமிக்க வைத்தது.
சிந்தித்துணரும் மக்களுக்கு இறைவனின் ஆற்றலை நிரூபணம் செய்யும் அத்தாட்சிகளான வானம், பூமி, கடல், காற்று போன்றவை உலகில் பல இருந்தாலும் அதில் ஒன்றான ஸம்ஸம் நீரூற்று என்ற அத்தாட்சியே போதுமானதாகும்.
மருத்துவப் பயன்கள்
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆராய்ச்சியாளர் மருத்துவ முறையில் ஸம்ஸம் தண்ணீரை ஆராய்ச்சி செய்து, இதில் மக்னீஷியம், சல்பேட், சோடியம் சல்பேட், பொட்டாசியம், நைட்ரேட், ஹைட்ரஜன், கந்தகம் போன்ற உலோகங்கள் இருப்பதாக கண்டறிந்து, இவற்றில் என்னென்ன குணங்கள் இருக்கின்றன என்பதையும் விளக்கியுள்ளார்.
உடல் வலி, கை கால் வலி நீங்கும். உஷ்ணம் குறையும். வயிற்று மந்தத்தைப் போக்கும். நல்ல பசி எடுக்கும். குமட்டல், மலச்சிக்கல் நீங்கும். இன்னும் இது போன்ற பல நோய்களை நீக்கும் ஆற்றல் உண்டு.
ஸம்ஸம் தண்ணீர் ருசியில்
சிறிது இளைப்பாக இருக்கிறது. இதில் பொன், வெள்ளி முதலிய பல்வேறு உலோகச் சத்துக்கள் உள்ளன மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஹஜ், உம்ரா செய்ய செல்பவர்கள் அங்கு சென்ற பிறகு ஸம்ஸம்
தண்ணீரை மட்டும் பருகி வந்தால் அவர்களுக்கு சளி, இருமல் போன்ற உடல்
உபாதைகள் ஏற்படாது என்று அனுபவசாலிகள் கூறுகிறார்கள்.
கால்ஷியம் மற்றும்
மெக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஸம்ஸம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த
உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக்கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத்
தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. ஸம்ஸம் தண்ணீரை எத்தனை வருடம் பிடித்து வைத்தாலும் கெடுவதில்லை. ஆனால், மற்ற தண்ணீரை அவ்வாறு பிடித்துவைத்தால்
கொஞ்ச நாள்களுக்குள் பச்சையாக பாசி மற்றும் புழுக்கள் உருவாகிவிடும்.
ஒரு லிட்டர் ஸம்ஸம் தண்ணீரில் அடங்கியுள்ள மூலகூறுகள்.
சோடியம் – 133.00ml
கல்சியம் – 096.00ml
மக்னீசியம் – 038.80ml
புளோரைட்டு -000-77ml
பொட்டாசியம் – 043.03ml
நைத்திரேற்று – 124.08ml
டைகார்ப்நெட் – 124.00ml
சல்ஃபேட் – 124.00ml
குறைந்த ஆழம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ளது. இக்கிணற்றுக்குருகில் ஏரி, கண்மாய், குளம் குட்டை எந்த நீர்நிலையும் இல்லை. இருந்தாலும், இந்த சின்னக் கிணற்றுத் தண்ணீர் தான் பல லட்சம் யாத்திரிகர்களுக்கு தாகம் தணிக்கிறது என்பது பேரதியமாகும்.
இறைவனின் அத்தாட்சிகளுக்கு
மதிப்பளித்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment