வசந்த மாளிகை
وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ بُيُوْتِكُمْ سَكَنًا
உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான். திருக்குர்ஆன்:- 16:80
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வீடு அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்கள், ஆபத்துகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பதை விரும்பக்கூடியவனாக இருக்கிறான்.
ஒரு முஸ்லிம் தனது வீட்டில் ரஹ்மத் எனும் இறையருள், பரக்கத் எனும் அருள்வளம் பொழியப்பட வேண்டும் என்று விரும்பினால் வீட்டில் சில நற்செயல்களை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகிறது.
கூடுதல் தொழுகை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلاَةَ فِي مَسْجِدِهِ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا مِنْ صَلاَتِهِ فَإِنَّ اللَّهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلاَتِهِ خَيْرًا ) உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (ஃபர்ளு) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (கூடுதல் தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை உருவாக்குவான். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1428
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( فَإِنَّ أَفْضَلَ صَلاَةِ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلاَّ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ ) ஒருவர் கடமையான (ஃபர்ளு) தொழுகைகளைத் தவிர மற்ற (கூடுதலான) தொழுகைகளை தம் வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். அறிவிப்பாளர்:- ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-1581, இப்னுகுஸைமா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صَلُّوا فِي بُيُوتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا ) உங்களுடைய வீடுகளிலும் (கூடுதலான தொழுகைகளை) தொழுங்கள். வீடுகளை சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-432, முஸ்லிம்-1427, அபூதாவூத்-3841, நசாயீ-1580
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஃபில் எனும்) கூடுதலான தொழுகையைவிட, (ஃபர்ளு எனும்) கட்டாய தொழுகையானது மிகச்சிறந்ததாக இருப்பதைப் போன்று, உங்களில் ஒருவர் மக்கள் பார்க்கும் விதமாக (கூடுதலான தொழுகையை) பள்ளிவாசலில் தொழுகையைவிட, வீட்டில் தொழுவது சிறந்ததாகும். நூல்:- அத்தர்ஙீபு வத்தர்ஹீபு
அப்துல்லாஹ் பின் வகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் கூடுதலான (ஃநபில்) தொழுகைகளைப் பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணலார் எனது வீட்டில் லுஹருடைய ஃபர்ளு (கட்டாயத்) தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்துகளும், ஃபர்ளுக்கு பின் இரண்டு ரக்அத்துகளும், மங்ரிப் உடைய ஃபர்ளுக்கு பின் இரண்டு ரக்அத்துகளும், இஷா உடைய ஃபர்ளுக்கு பின் இரண்டு ரக்அத்துகளும், ஃபஜ்ரு உடைய ஃபர்ளுக்கு முன் இரண்டு ரக்அத்துகளும் தொழுவார்கள். (அதாவது ஃபர்ளு தொழுகைகளை மட்டும் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு மற்ற கூடுதலான தொழுகைகளை வீட்டில் தொழுவது அண்ணலாரின் வழக்கம் என்பதே ஆயிஷா - ரலி அவர்கள் கூறிய நபிமொழியின் கருத்தாகும்.)
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை என்னுடைய சின்னம்மா அன்னை மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கினேன். அந்த இரவில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இரவு தொழுகைக்காக எழுந்து (உளூ) அங்கத்தூய்மை செய்து விட்டு தொழுகைக்கு தயாரானார்கள். நானும் அண்ணலாரைப் போன்று அங்கத்தூய்மை செய்து விட்டு அண்ணலாரின் இடது புறத்தில் நின்றேன். அப்போது அண்ணலார் என்னை பிடித்து இழுத்து வலது புறத்தில் நிற்க வைத்தார்கள். பிறகு நான் அண்ணலாருடன் தொழுகையை நிறைவேற்றினேன். நூல்:- அபூதாவூத்-610
வீடும் அதன் சுற்றுப்புறமும் பிள்ளைகளின் சீர்திருத்தத்தின் முதல் தளமாகும். வீட்டின் சுற்றுச்சூழல் எவ்வளவு சீர்திருத்தமாக உள்ளதோ அவ்வாறே பிள்ளைகளின் சீர்திருத்தமும் சிறந்ததாக ஆகிவிடும்.
"தாய் சட்டியில் சோறு ஆக்கினால், பிள்ளை சுட்டியில் சோறு ஆக்கும்" என்பது கிராமத்து சொல்வழக்கு.
ஆம்! பிள்ளைகளின் அறிவு, சிந்தனை அது தம் வீட்டு பெரியவர்களின் ஒவ்வொரு நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்களை பின்பற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
எனவே நாம் வீட்டில் இறைவழிபாடுகள் புரிகின்ற போது, நம் வீட்டு பிள்ளைகளிடமும் அது பிரதிபலிக்கின்ற வாய்ப்பிருக்கிறது. மேலும் அதன்மூலம் நம் வீட்டில் இறையருளும், மன அமைதியும் கிடைக்கப் பெறலாம்.
திருக்குர்ஆன் ஓதுதல்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த
வீட்டில் திருக்குர்ஆன் ஓதப்படுகிறதோ, அந்த வீட்டில் நலவுகள் அதிகமாகும். எந்த வீட்டில் திருக்குர்ஆன் ஓதப்படவில்லையோ,
அந்த வீட்டில் நலவுகள் குறைந்துவிடும்.
நூல்:- துர்ருல் மன்ஸூர்
உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஓர் இரவில் பேரிச்சங் கனிகளை உலர வைக்கும் களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். அப்போது எனது குதிரை கடுமையாக மிரண்டது. நான் தொடர்ந்து ஓத ஓத அதுவும் கடுமையாக மிரண்டு கொண்டே இருந்தது. (அங்கு படுத்திருந்த என் மகன்) யஹ்யாவை அந்த குதிரை மிதித்து விடுமோ என்று நான் அஞ்சிய போது அதை நோக்கி எழுந்து சென்றேன். அங்கு மேகம் போன்றதொரு பொருள் என் தலைக்கு மேல் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருட்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்களை விட்டும் மறைந்து) விட்டது. பிறகு அதை நான் காண முடியவில்லை.
இதைப்பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அண்ணலார்( تِلْكَ الْمَلاَئِكَةُ كَانَتْ تَسْتَمِعُ لَكَ وَلَوْ قَرَأْتَ لأَصْبَحَتْ يَرَاهَا النَّاسُ مَا تَسْتَتِرُ مِنْهُمْ ) "உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்தது வானவர்கள் தாம் அவர்கள். நீர் (பயப்படாமல்) தொடர்ந்து ஓதியிருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களை விட்டும் அது மறைந்திருக்காது" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-1460
அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து நாயகமே! அல்லாஹ்விடம் பயன் தரக்கூடிய ஒன்றை எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கோரினர். அப்போது அண்ணலார், ( اقْرَأْ آيَةَ الكُرْسِيِّ؛ فَإنَّهُ يَحْفَظُكَ وذُرِّيَّتَكَ، ويَحْفَظُ دارَكَ ) "நீர் ஆயத்துல் குர்சீ"யை வழமையாக ஓதி வாரும்! அதுவே உன்னையும், உனது பிள்ளைகளையும், உனது வீட்டையும் பாதுகாக்க போதுமானதாகும்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلاَ يُقْرَآنِ فِي دَارٍ ثَلاَثَ لَيَالٍ فَيَقْرَبُهَا شَيْطَانٌ ) "எந்த வீட்டில் பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை மூன்று இரவுகள் தொடர்ந்து ஓதப்படுமோ, அந்த வீட்டை ஷைத்தான் நெருங்க மாட்டான்". அறிவிப்பாளர்:- நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2800
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( لَا تُقرَأُ فِي بَيتٍ وَفِيهِ شَيطَانٌ إِلَّا خَرَجَ مِنهُ آيةُ الكُرسيِّ ) "எந்த வீட்டில் ஆயத்துல் குர்சீ ஓதப்படுமோ அங்கு ஷைத்தான் இருந்தால் உடனே வெளியேறி விடுவான்". அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், அப்துர் ரஸ்ஸாக், அல்காமிலு ஃபில் ளுஅஃபா இமாம் இப்னு அத்திய்யி
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِنِّي لأَعْرِفُ أَصْوَاتَ رُفْقَةِ الأَشْعَرِيِّينَ بِالْقُرْآنِ حِينَ يَدْخُلُونَ بِاللَّيْلِ وَأَعْرِفُ مَنَازِلَهُمْ مِنْ أَصْوَاتِهِمْ بِالْقُرْآنِ بِاللَّيْلِ وَإِنْ كُنْتُ لَمْ أَرَ مَنَازِلَهُمْ حِينَ نَزَلُوا بِالنَّهَارِ ) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த என் தோழர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பகலில் பார்த்திருக்காவிட்டாலும், (தம் பணிகளை முடித்துக்கொண்டு) இரவில் (இருப்பிடங்களில்) நுழையும்போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். அதன்மூலம் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். அறிவிப்பாளர்:- அபூமூசா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4912
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சில ஊர்களின் தெருக்களில் நடந்து செல்லும்போது ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு சூரா யாசீன் ஓதும் ஓசையும், மங்ரிப் தொழுகைக்கு பிறகு சூரா வாக்கிஆ ஓதும் ஓசையும், இஷா தொழுகைக்கு பிறகு சூரா முல்கு ஓதும் ஓசையும் மிக இனிமையாக கேட்கும். ஆனால் அதே ஊர்களின் வீடுகளில் தற்போது டிவி யின் சப்தம் தான் எல்லா நேரங்களிலும் அதிகமாக கேட்கிறது என்று சில மூத்த மார்க்க அறிஞர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.
சில முஸ்லிம்கள் தன் வீட்டை பலாய் முசிபத்துகள், கெட்ட ஜின் ஷைத்தான்கள் நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அல்லது இது போன்றவைகள் தனது வீட்டில் இருக்கிறது என்று சந்தேகம் வந்தால் அதை வீட்டை விட்டு விரட்டுவதற்காகவும் ஓதிப் பார்ப்பவர் என்ற பெயரில் மார்க்கத்தின் அடிப்படை அறிவுகூட இல்லாத சிலரிடமும், சாமியார்களிடமும் அணுகுகிறார்கள்.
இந்த போன்ற போலியான மாந்திரீகர்கள் தரும் தேங்காய், எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், கலர் கலரான கயிறுகள், தகடு தாயத்துகள் இது போன்றவைகளை வாங்கி வந்து வீட்டின் கதவுகளிலும், கட்டில்களிலும் கட்டிவிடுவது அல்லது சுவர்கள் மீது தொங்கவிடுவது மூலம் நல்லது நடக்கும், பாதுகாப்பு, மன நிம்மதி ஆகியவை கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் இணைவைப்பு எனும் பெரும்பாவம் என்பதை அவர்கள் உணருவதில்லை.
ஒரு முஸ்லிம் தன்னுடைய வீட்டுக்கு கெட்டவைகளை விட்டும் பாதுகாப்பும், மன நிம்மதியும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய வழிமுறைப்படி திருக்குர்ஆன் ஓதுதல், திக்ரு எனும் இறை தியானங்கள் செய்தல், அண்ணலார் மீது சலவாத்துக்கள் ஓதுதல் இது போன்ற இன்னபிற இறைவழிபாடுகள் செய்தாலேயே போதுமானது என்று விளங்க வேண்டும்.
சலாம் சொல்தல்
நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்கு கற்பிக்கப்பட்ட மிக பாக்கிமுள்ள பரிசுத்தமான (அஸ்ஸலாமு அலைக்கும் என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொள்ளவும். திருக்குர்ஆன்:- 24:61
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னிடம் அருமை
நாயகம் (ஸல்) அவர்கள் ( يَا بُنَىَّ إِذَا
دَخَلْتَ عَلَى أَهْلِكَ فَسَلِّمْ يَكُونُ بَرَكَةً عَلَيْكَ وَعَلَى أَهْلِ بَيْتِكَ
) “என் அருமை மகனே! நீர் உமது வீட்டில் நுழையும்போது
வீட்டாருக்கு சலாம் சொல்லிப்பழகு! இது உமக்கும், உமது வீட்டாருக்கும்
அருள்வளம் (பரக்கத்) உண்டாகக் காரணமாக இருக்கும்” என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2619
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்
ஒருவர் வந்து தனது குடும்பத்திலுள்ள ஏழ்மை நிலையை முறையிட்டு அது நீங்குவதற்கு
பிரார்த்திக்கும்படி கோரினார்.
அதற்கு அண்ணலார் அவரிடம் ( إذا دَخَلْتَ الْبَيْتَ فَسَلِّمْ إِنْ كَانَ فِيهِ أَحَدٌ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ أَحَدٌ فَسَلِّمْ عَلَيَّ، وَاقْرَأْ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ مَرَّةً وَاحِدَةً ) "நீங்கள் வீட்டுக்குள் நுழையும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு" என்று மொழிந்தவராகவும், வீட்டில் யாரும் இல்லாவிட்டால் என்னை மனதில் நினைத்து "அஸ்ஸலாமு அலைக்கும் அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு" என்று மொழிந்தவராகவும் மேலும் (112 வது) அத்தியாயம் இக்லாஸ் ஒருமுறை ஓதியவராகவும் நுழையுங்கள்" என்று கூறினார்கள். அவரும் அவ்வாறே கடைபிடித்து வந்தார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் ஏழ்மையை நீக்கி வளத்தை கொடுத்தான். அவர் தனக்கு கிடைக்கப்பெற்ற வளத்திலிருந்து பக்கத்து வீட்டாருக்கும் வாரி வழங்கினார். நூல்:- தஃப்சீர் குர்துபி, தஃப்சீர் கபீர்
பிறர் வீட்டுக்குள் நுழையும் முன் அவ்வீட்டாருக்கு சலாம் சொல்லி நுழையும் பழக்கமுடைய பலர், தம் வீட்டுக்குள் நுழையும் முன் சலாம் சொல்வதற்கு வெட்கப்படுகிறார்கள். அது வெட்கப்பட்டு தவிர்க்கப்பட வேண்டிய செயலல்ல. ஆம்! நம் வீட்டுக்குள் நுழையும்போது சலாம் கூறினால் அந்த சலாம் நம் வீட்டுக்குத் தேவையான அருள்வளத்தைக் கொண்டு வந்து விடும் என்பதே நபிமொழியின் கருத்து.
அஸ்ஸலாமு அலைக்கும் என்பது அது ஒரு மிகப்பெரிய பிரார்த்தனை என்று விளங்க வேண்டும். நமது வீட்டினருக்குத்தானே நாம் முதலில் பிரார்த்திக்க வேண்டும். மேலும் சலாம் என்பது அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் உள்ள ஒன்றாக இருப்பதால் அதை நாம் வீட்டுக்குள் அடிக்கடி உச்சரிக்கும்போது ஷைத்தானின் தீங்குகளிலிருந்து நமது வீடு பாதுகாக்கப்படுகிறது.
சுத்தம் பேணுதல்
தூய்மையாக இருப்பவர்களை அல்லாஹ் விரும்புகிறான். திருக்குர்ஆன்:- 2:222
( الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ ) "சுத்தம் இறைநம்பிக்கையில் பாதி ஆகும்" என்கிறது ஒரு நபிமொழி. (முஸ்லிம்-381)
ஒரு முஸ்லிம் தமது உடல், உடை, உறைவிடம் ஆகிய அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்பதில் கவனமாக இருக்கின்றார் எனில் அவருக்கு பாதி இறைநம்பிக்கை கிடைத்து விட்டது என்று பொருளாகும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِنَّ اللَّهَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ نَظِّفُوا أَفْنِيَتَكُمْ وَلاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ ) நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையை அவன் விரும்புகிறான். எனவே உங்களுடைய வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். யூதர்களுக்கு ஒப்பாகி விடாதீர்கள். (அவர்கள் தான் குப்பைகளை வீடுகளில் சேர்த்து வைப்பார்கள்.) நூல்:- திர்மிதீ-2720, முஸ்னது அஹ்மது, அபீ யஃலா
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَإِنَّ المَلَائِكَةَ لَا تَدخُلُ بَيتًا فِيهِ بَولٌ مُنتَقَعٌ ) "நிச்சயமாக சிறுநீர் தேக்கி வைக்கப்படும் வீடுகளில் (இறையருள் சுமந்து வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். நூல்:- தப்ரானீ, ஹாகிம், சஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-148
வீட்டிலுள்ள குழந்தைகள் மலம் ஜலம் கழித்துவிட்டால் அதை உடனுக்குடன் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பெரும் நோயால் வீட்டில் படுத்தப் படுக்கையாக இருக்கும் நோயாளிகள் விஷயத்தில் சுத்தம் முழுமையாக பேணப்பட வேண்டும். அதில் பொடுப்போக்காக இருந்தால் அதன்மூலம் உருவாகும் நோய்க்கிருமிகள், தொற்று நோயை உண்டாக்கும் அபாயம் உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் அது வெகுவாக தாக்கிவிடும்.
இஸ்லாமிய சட்ட நூல்களில் முதல் பாடமே சுத்தம் பற்றித்தான். தொழுகைக்கு சுத்தம் அவசியம் என்பதால் முஸ்லிம் தன் உடல், உடை, உறைவிடம் விஷயத்தில் சுத்தத்தைப் பற்றி அதிக விழிப்புடன் இருக்க கடமைப்பட்டிருக்கிறான்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ جُنُبٌ ) எந்த வீட்டில் குளிப்பு கடமையானவர் (குளிக்காமல்) இருக்கின்றாரோ அங்கே (இறையருள் சுமந்து வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3622, நசாயீ-261
ஒருவன் தம்மீது கடமையாகிவிட்ட குளிப்புக் கடமையை நீக்கிக்கொள்வதற்காக விரைந்து குளிக்க வேண்டும். நீண்ட நேரம் குளிப்புக் கடமையான நிலையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவன் நீண்ட நேரம் குளிப்புக் கடமையான நிலையிலேயே இருக்கின்றபோது வானவர்களின் வருகையையும், பாதுகாப்பையும் அவன் தனக்குத்தானே தடுத்துக்கொள்கிறான்.
குளிப்புக் கடமையான நிலையில் ஃபர்ளு எனும் கட்டாயத் தொழுகை பாதிக்கும் அளவுக்கு குளிப்பதை தாமதப்படுத்துவது பாவச் செயலாகும். கட்டாயக் குளிப்பில் கவனமில்லாமல் நீண்ட நேரம் அதை தாமதப்படுத்துவதை வழமையாக்கிக் கொள்கின்றவனையே இந்த நபிமொழி கண்டிக்கிறது.
இசைக்கருவிகள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இசைக்கருவிகள் ஷைத்தானின் அழைப்பாளன் நூல்:- இஹ்யா
இன்றைய பல இஸ்லாமிய குடும்பங்கள் தொலைக்காட்சிப் புதைகுழியில் சிக்கி இறை சிந்தனைகள் சிதைந்து வருகிறது. பெரியவர், சிறியவர் என வேறுபாடின்றி அனைவரும் அதன் முன்னால் தமது பொன்னான நேரங்களை வீணடித்து வருகின்றனர். நிகழ்ச்சியின் நடுவே யார் வந்தாலும் அவர்களைத் தொந்தரவாகவே பார்க்கின்ற மனோபாவம் அதிகரித்து வருகிறது. முக்கியமான நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கும்போது உறவினர்களோ, நண்பர்களோ வந்து விட்டால் அவர்கள் வேண்டா விருந்தாளியாகவே வரவேற்கப்படுகிறார்கள்.
இஸ்லாம் தடுத்த ஆபாசங்கள் நிறைந்த சினிமாக்களாலும், கொச்சையான வார்த்தைகள் கொண்ட பாடல்களுடன் அருவெறுப்பான நடன நாட்டியங்களாலும் வீடே அதிரும் அளவுக்கு இசை தாளங்களால் அரங்கங்களாக ஆகிவிட்டன.
இதனால் நமது வீட்டில் தினமும் நடைபெற வேண்டிய தொழுகைகள், திருக்குர்ஆன் ஓதுதல், காலை மாலை நேர திக்ரு எனும் இறைதியானங்கள் ஆகியவை தேய்பிறை ஆகிவிட்டது. தினமும் காலை மாலை நேரங்களில் இறையருள் சுமந்து வரும் வானவர்கள் எப்படி நமது வீட்டுக்குள் வருவார்கள் என்று சற்று யோசித்தோமா?
நமது வீட்டுக்குள் வானவர்கள் வருகையின்றி மன நிம்மதியும் நல்லுறக்கமும் கிடைக்கப்போவதில்லை. நமது பொருளாதாரத்திலும் வளம் காணப்போவதில்லை. சுருங்கக்கூறின் தொலைக்காட்சிக்காக ஒதுக்கும் நேரத்தைவிட கொஞ்சம் கூடுதலான நேரம் இறைவழிபாட்டுக்காக ஒதுக்க வேண்டும்.
நிழற்படங்கள்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ ) நிழற்படம் உள்ள வீட்டில் (இறையருள் சுமந்து வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள். அறிவிப்பாளர்:- அபூதல்ஹா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5181, முஸ்லிம்-4277
வீடுகளில் அலங்காரத்திற்காக உருவச்சிலைகள் வைப்பதும், நிழற்படங்களைச் சுவர்களில் தொங்கவிடுவதும் பெரும் பாவச்செயலாகும்.
சில வீடுகளில் இறந்துவிட்ட பெற்றோர், மற்றும் முன்னோர்களின் நிழற்படங்கள், தனது சிறு வயதின் நிழற்படங்கள், தனது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள், தனது செல்ல குழந்தைகளின் நிழற்படங்கள், அரசியல் தலைவர்களின் நிழற்படங்கள், விளையாட்டு வீரர்களின் நிழற்படங்கள், அழகிய வன விலங்குகள் மற்றும் பறவைகளின் நிழற்படங்கள் ஆகியவைகளை பெருமைக்காகவும், அழகுக்காகவும், வரவேற்பறையின் சுவர்களில் மாட்டிவைக்கிறார்கள். சில வீடுகளில் நுழைந்ததும் ஏதோ நிழற்படக் கண்காட்சிக்கு சென்றதுப் போன்ற எண்ணம் உருவாகி விடுகிறது.
சிலர், நினைவுக்காக நிழற்படங்களை வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். உண்மையில் உறவினர்களையும், நண்பர்களையும் இதயத்தில் நினைவு கூர்ந்து அவர்களுக்காக அல்லாஹ்வின் அருளையும், மன்னிப்பையும் வேண்டி பிரார்த்தனை செய்வது தான் அன்பின் வெளிபாடாகும்.
கால் மிதியடிகள், தலையணைகள், முதுகணைகள் போன்றவற்றில் நிழற்படங்கள் இருந்தால் பரவாயில்லை. காரணம் அவைகளுக்கு நாம் கண்ணியம் கொடுக்கப்போவதில்லை. மதிப்பில்லாத விதத்தில் பயன்படுத்தும் பொருட்களில் உருவப்படங்கள் நம்முடைய வீடுகளில் இருந்தால் அது குற்றமில்லை.
நிழற்படங்கள் உள்ள வீடுகளில் வானவர்கள் வர மாட்டார்கள் எனும்போது இறையருள் கிடைக்காமல் போய் வாழ்க்கையில் வளம் குன்றிப்போகும் அபாயம் உண்டு என்பதை உணர வேண்டும்.
செல்லப் பிராணி எது?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் அந்த நேரம் வந்ததும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரவில்லை. “அல்லாஹ்வும், அவனது தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள்” என்று அண்ணலார் கூறிவிட்டு பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்கு கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.
உடனே ( يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَا هُنَا ) “ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?” என்று கேட்டுவிட்டு, உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.
அண்ணலார், ( وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ ) "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள் உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?" என்று வினவினார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் ( مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ ) "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள் நாயும், உருவப்படமும் உள்ள வீட்டுக்குள் நுழையமாட்டோம்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4272
வீடுகளில் பகட்டுக்காக நாய் வளர்ப்பது இப்பொழுது ஃபேஷனாகி வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் நாயும் ஒன்றாகிவிட்ட கலிகாலமிது.
அமெரிக்காவில் நாயைக் கவனித்து பார்த்துக்கொள்ள மனிதர்களை அமர்த்திக் கொள்கிறார்கள். சில நாள் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்ற சந்தர்ப்பங்களில் இப்படி நடக்கும். Bay Sitting போல் Dog Sitting
அங்கே குழந்தைகளின் பால் பவுடர் வகைகளைவிட நாய்க்கான உணவு வகைகள் ஏராளம். கடைகளில் அதை அடுக்கி வைத்து நல்ல இலாபம் பார்க்கிறார்கள். நம்ம ஊரில் இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குவதற்குண்டான செலவு அளவுக்கு, அங்கே ஒரு நாயை பராமரிக்க செலவு செய்கிறார்கள். அங்கு சிலர் தனது சொத்தை செல்லப்பிராணிகளுக்கு உயில் எழுதி வைக்கிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ اقْتَنَى كَلْبًا لَيْسَ بِكَلْبِ مَاشِيَةٍ أَوْ ضَارِيَةٍ، نَقَصَ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطَانِ ) கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய நற்செயலின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் அளவுக்கு குறைந்து விடும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5480, முஸ்லிம்-3203, திர்மிதீ-1407
நாய் வைரஸ் கிருமியை சுமந்து திரியும் பிராணியாகும். அதன் எச்சிலில் "ரேத்தே" என்ற வைரஸ் கிருமி உள்ளது. அது மனித உடலுக்குள் ஊடுருவும் தன்மை கொண்டது. ஒருவரை அது கடித்தால் அவருக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டாக வேண்டும். இல்லையெனில் அவரின் உயிருக்கே அது ஆபத்தாகிவிடும். இதனால் தான் "நாயின் எச்சில் பட்ட பாத்திரத்தை மண் போட்டு தேய்த்து ஒருமுறை கழுவ வேண்டும் என்கிறது ஒரு நபிமொழி.
நாயின் முடியில் கூட 'ஆஸ்துமா'வை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நாய்களால் சுகாதாரக் கேடு ஏற்படுவது தெரிந்ததே! எனவே தான் நாயை வேண்டாம் என்று ஒதுக்குகிறது இஸ்லாம்.
தோட்டங்களை மற்றும் கால்நடைகளை பாதுகாக்கவும், வேட்டையாடவும் நாய் வளர்ப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. வெறுமனே வீடுகளில் செல்லப்பிராணி என வளர்க்கக்கூடாது என்று தான் இஸ்லாம் இயம்புகிறது.
நமது நற்செயல்களால் இறை வசந்தத்தை சுமந்து வரும்
வானவர்கள் வந்து போகும் தளமாக நமது வீடுகள் அமைந்துவிட்டால் குடிசையாக இருந்தாலும்
அது வசந்த மாளிகை தான் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே நமது வீடுகளை இஸ்லாமிய முறைப்படி
அமைத்துக் கொள்வோமாக! அதன்மூலம் இறையருள் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்-9840535951
No comments:
Post a Comment