புனித நகரம்
وَمَاۤ اٰتٰكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ
நம்முடைய தூதர் உங்களுக்கு கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக் கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 59:7
புனிதமிகு மதீனா இது மேற்கு சவூதி அரேபியா நாட்டில், புனிதமிகு மக்காவுக்கு வடக்கே உள்ள நகரமாகும். வாழத் தெரியாத மனித சமுதாயத்திற்கு வாழக் கற்றுக் கொடுத்த, நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புலம்பெயர்ந்து வந்த நகரம் இதுதான். இங்கு தான் அண்ணலார் இறந்து (கி.பி. 632) நல்லடக்கமும் செய்யப்பட்டுள்ளார்கள். அண்ணலார் கட்டிய மஸ்ஜிதுந் நபவி எனும் புனிதப் பள்ளிவாசல் மதீனாவில் தான் உள்ளது.
மதீனாவின் பழைய பெயர் "யஸ்ரிப்" என்பதாகும்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இங்கு வந்து குடியேறிய பின்னர் நபியின் நகரம் எனும் பொருளில்
"மதீனத்துந் நபி" என்று அழைக்கப்பட்டு
பின்னர் மக்களால் சுருக்கமாக "மதீனா" என்று அழைக்கப்படுகிறது.
பன்மடங்கு நன்மைகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِي هَذَا وَمَسْجِدِ
الْحَرَامِ وَمَسْجِدِ الأَقْصَى )
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசல், (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்சா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (அதிக நன்மைகளை எதிர்பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1189, முஸ்லிம்-2698
( صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ
الْمَسْجِدَ الْحَرَامَ )
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2692, நசாயீ-684
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த ஒரு மனிதர் என்னுடைய பள்ளிவாசலில் (மஸ்ஜிதுந் நபவியில்) ஒரு வேளை தொழுகைக்கூட தவறாமல் தொடர்ந்து 40 வேளை தொழுகைகளை (பேணுதலுடன்) தொழுவாரோ அவருக்கு நரக வேதனையை விட்டு விடுதலை பெற்றவர் என்று எழுதப்படுவதுடன் அவர் (நிஃபாக் எனும்) நயவஞ்சகத் தன்மையை விட்டும் நீங்கியவராகி விடுவார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்
சொர்க்கப் பூஞ்சோலை
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ
)
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பருக்கும்) இடைப்பட்ட பகுதியானது சொர்க்கத்துப் பூஞ்சோலையாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1195, முஸ்லிம்-2687, திர்மிதீ -3840
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வீடு என்பது இப்பொழுது அண்ணலார் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் தான். எனவே அண்ணலாரின் மண்ணறைக்கும், சொற்பொழிவு மேடைக்கும் இடையில் “ரவ்ளத்துல் ஜன்னா” எனும் சிறிதளவு இடம் இருக்கிறது. ஒருவர் அந்த இடத்தில் நின்று இறைவனை வழிபட்டால் சொர்க்கம் செல்லலாம். நூல்:- அல்மின்ஹாஜ்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சிலாகித்து கூறிய அந்த “ரவ்ளத்துல் ஜன்னா” எனும் இடத்தில் முடிந்தளவு தொழுதுவிட்டு இறைவா! இதனை “சொர்க்கப் பூஞ்சோலை” என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நீ என்னை உனது மிகப்பெரும் கிருபையால் இந்த புனிதமிகு ரவ்ளாவில் நுழைய வைத்துள்ளாய்! யாரையாவது நீ சொர்க்கத்தில் நுழைய வைத்தால் அவரை மறுபடியும் வெளியேற்ற மாட்டேன் என்று நீ வாக்களித்துள்ளாய்! எனவே மறுமையில் சொர்க்கத்தைவிட்டும் என்னை விலக்கி விடாதே!" என்று அங்கே பிரார்த்திக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள்.
சிறந்த இருப்பிடம்
மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) மதீனாவில் மக்களுக்கு பஞ்சமும், கஷ்டமும் ஏற்பட்டது. அப்போது நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று "நான் குழந்தைகள் அதிகம் உடையவன் எங்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நான் என் குடும்பத்தாருடன் (மதீனாவை விட்டு) ஏதேனும் ஒரு செழிப்பான ஊருக்கு இடம் பெயர விரும்புகிறேன்" என்று கூறினேன்.
அதற்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ( لاَ تَفْعَلِ الْزَمِ الْمَدِينَةَ ) "அவ்வாறு செய்யாதே! மதீனாவையே (உமது இருப்பிடமாக) வைத்துக்கொள்!”
ஏனெனில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்,
( اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ فَجَعَلَهَا حَرَمًا وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ حَرَامًا مَا بَيْنَ مَأْزِمَيْهَا أَنْ لاَ يُهَرَاقَ فِيهَا دَمٌ وَلاَ يُحْمَلَ فِيهَا سِلاَحٌ لِقِتَالٍ وَلاَ يُخْبَطَ فِيهَا شَجَرَةٌ إِلاَّ لِعَلْفٍ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مُدِّنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مُدِّنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا اللَّهُمَّ اجْعَلْ مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْنِ )
“இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவை புனித நகரமாக ஆக்கினார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை புனிதமாக ஆக்கினேன். மதீனாவுக்குள் இரத்தம் சிந்தப்படக்கூடாது. அங்கு போருக்காக ஆயுதம் ஏந்தப்படக்கூடாது. அங்கு தீனிக்காகத் தவிர எந்த தாவரமும் வெட்டப்படக்கூடாது. இறைவா! எங்கள் நகரில் எங்களுக்கு அருள்வளம் புரிவாயாக! இறைவா! எங்கள் (பெரிய அளவிலான) "சாஉ"விலும், (சிறிய அளவிலான) "முத்"துவிலும் அருள்வளம் புரிவாயாக! இறைவா! இப்போதுள்ள வளத்துடன் இரு(மடங்கு) வளத்தை ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-2662
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்,
( اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَىْ مَا بِمَكَّةَ مِنَ
الْبَرَكَةِ )
“இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய வளத்தைப் போன்று இரு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1885, முஸ்லிம்-2653
மதீனா நகரில் அருள்வளம் புரிவாயாக! என்பதன் கருத்து. மதீனாவில் பெருவாரியான மக்கள் வாழட்டும்! அவர்கள் மீது அல்லாஹ் அருள்வளம் புரியட்டும் என்பதாகும். "சாஉ, முத்" என்பது அன்றைய மக்கள் தானியங்கள் அளப்பதற்கு பயன்படுத்திய பாத்திரமாகும்.
இந்த அளவைப் பாத்திரத்திங்களில் அருள்வளம் புரிவாயாக! என்பதன் கருத்து ஒரு சாஉ, அல்லது ஒரு முத் உடைய தானியம் சாதாரணமாக எத்தனை பேருக்கு அல்லது எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்குமோ, அதைவிட அதிகம் பேருக்கு அல்லது அதிக நாட்களுக்கு போதுமானதாக இருக்கட்டும் என்பதாகும்.
சுருங்கக்கூறின், மக்கள் மதீனா நகரில் அதிகமான உற்பத்தியைப் பெற்று மக்கள் வளமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பது தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆசை. அதுவே அவர்களின் பிரார்த்தனையாகவும் இருந்தது.
உமர் (ரலி) அவர்கள் ( اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صلى الله عليه وسلم ) "இறைவா! உன் பாதையில் வீர மரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்குவாயாக! எனது மரணத்தை உன் தூதருடைய (மதீனாவில்) ஊரில் ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்திப்பார்கள். நூல்:- புகாரீ-1890
பிரதிபலன்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்
( لاَ يَصْبِرُ أَحَدٌ عَلَى لأْوَائِهَا فَيَمُوتَ إِلاَّ كُنْتُ لَهُ شَفِيعًا
أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ إِذَا كَانَ مُسْلِمًا )
"மதீனாவின் இடர்பாடுகளை சகித்துக் கொண்டு (அங்கேயே வாழ்ந்து) இறந்து போகும் மனிதருக்கு மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவராக அல்லது சான்றுரைப்பவராக இருப்பேன் அவர் முஸ்லிமாக இருந்தால்!" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2664, திர்மிதீ-3849
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن ماتَ في أحَدِ الحَرَمَيْنِ بُعِثَ مِنَ الآمِنِينَ يَوْمَ القِيامَةِ ) யார் இரண்டு ஹரம்களில் (மக்கா, மதீனா) ஒன்றில் மரணிக்கிறாரோ அவர் மறுமைநாளில் அச்சம் தீர்ந்த நிம்மதியாளராக எழுப்பப்படுவார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தாரகுத்னீ-2726, பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு- 400
எவர் மதீனாவில் ஏற்படும் துன்ப துயரங்களை சகித்துக் கொண்டு பொறுமையுடன் அங்கு வாழ்ந்து மறைந்தால் மறுமைநாளில் அவரது குற்றங்குறைகளை மன்னிக்கும்படி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடுவார்கள் என்பது கருத்து.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவே தவிர மற்ற எதற்காகவும் மதீனாவை விட்டு எங்கும் போனதில்லை. ஆட்சியாளர்கள் எவ்வளவு ஆசை வார்த்தை காட்டி, இஸ்லாமிய ஆட்சியின் தலைநகராக இருந்த பக்தாத் நகரத்துக்கு அழைத்தும்கூட இமாமவர்கள் மதீனாவை விட்டும் வெளியேற முடியாது என்று கூறி விட்டார்கள். காரணம் மதீனாவில் மரணிக்க வேண்டும் என்பதே அவர்களது ஆசை. மதீனாவை விட்டு வெளியேறும் போது தனக்கு மரணம் வந்துவிடலாம் என்று அஞ்சினார்கள். அவ்வாறே இமாமவர்கள் மதீனாவிலேயே மரணமடைந்து ஜன்னத்துல் பக்கீ எனும் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
கொல்லனின் உலையைப் போன்றது
ஒரு கிராமவாசி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாமை ஏற்பதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். (பின்னர்) அந்த கிராமவாசிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. (இஸ்லாமை ஏற்றுக்கொண்டதால் தான் தனக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்றெண்ணி) ஆகவே அவர் அண்ணலாரிடம் வந்து "இஸ்லாமை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்" என்று கூறினார். அண்ணலார் (அதை ஏற்க) மறுத்து விட்டார்கள்.
பின்னர் மீண்டும் வந்து இது போன்றே மூன்று முறை கூறினார். அண்ணலாரும் அதை மறுத்தே வந்தார்கள். பிறகு அந்த கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது அண்ணலார், ( إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خَبَثَهَا وَيَنْصَعُ طَيِّبُهَا ) "மதீனா (கொல்லனின்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்று திகழ்வார்கள்." என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1883, முஸ்லிம்-2676, திர்மிதீ-3845
கரைந்து போவார்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلاَئِكَةٌ لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ وَلاَ الدَّجَّالُ ) மதீனாவின் நுழைவாயில்களில் வானவர்கள் இருப்பார்கள். மதீனாவுக்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும், தஜ்ஜாலும் நுழைய முடியாது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1880, முஸ்லிம்-2672
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( لَيْسَ مِنْ بَلَدٍ إِلاَّ سَيَطَؤُهُ الدَّجَّالُ، إِلاَّ مَكَّةَ وَالْمَدِينَةَ،
لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ إِلاَّ عَلَيْهِ الْمَلاَئِكَةُ صَافِّينَ، يَحْرُسُونَهَا،
ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلاَثَ رَجَفَاتٍ، فَيُخْرِجُ اللَّهُ كُلَّ
كَافِرٍ وَمُنَافِقٍ )
மக்காவையும், மதீனாவையும் தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது. மதீனாவின் அனைத்து நுழைவாயில்களிலும் வானவர்கள் அணிவகுத்து நின்று அதைக் காவல் புரிந்து கொண்டு நிற்பார்கள். பின்னர் மதீனா தனது குடிமக்களுடன் மூன்று முறை குலுங்கும். அப்போது அதிலுள்ள இறைமறுப்பாளனையும், நயவஞ்சகனையும் அல்லாஹ் வெளியேற்றி விடுவான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1881
தஜ்ஜால் எனப்படும் மகா பொய்யன் உலக அழிவுக்கு முன் தோன்றுவான். இவனுக்கு "அல்மசீஹுத் தஜ்ஜால்" (Anti christ) எனும் பெயரும் உண்டு. இவனால் உலக மக்கள் அனைவரும் பெரும் சோதனைக்கு ஆளாவார்கள். ஆனால் மக்கா, மதீனாவில் வசிப்பவர்கள் இவனால் எந்தவித சோதனையுமின்றி நிம்மதியாக வாழ்வார்கள் என்பதே நபிமொழியின் கருத்து.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( مَنْ أَرَادَ أَهْلَ هَذِهِ الْبَلْدَةِ بِسُوءٍ - يَعْنِي الْمَدِينَةَ - أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ ) மதீனாவாசிகளுக்கு கேடு நினைப்பவனை நீரில் உப்பு கரைவதுப் போன்று அல்லாஹ் கரைந்துபோகச் செய்து விடுவான். அறிவிப்பாளர்:- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2681
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவன் மதீனாவாசிகளைப் பயமுறுத்துவானோ அவன் நிச்சயமாக என்னைப் பயமுறுத்திவிட்டான். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், மஜ்மஉஸ் ஸவாயித்
சந்திக்க செல்பவர்கள்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( مَن زَارَنِي بَعدَ مَوتِي فَكَأنَّمَا زَارَنِي فِي حَيَاتِي ) யார் எனது மரணத்திற்கு பிறகு என்னை எனது மண்ணறையில் (ஸியாரத்) வந்து சந்திக்கிறாரோ, அவர் என்னை எனது ஜீவிய காலத்திலேயே சந்தித்தவர் போன்றவராவார். அறிவிப்பாளர்:- ஹாதிப் (ரலி) அவர்கள் நூல்:- தாரகுத்னீ-2726, தப்ரானீ, பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-399
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( مَن زَارَ قَبرِي، وَجَبَتْ لَهُ شَفَاعَتِي ) "எவர் என்னை எனது மண்ணறையில் (ஸியாரத்) வந்து சந்திக்கிறாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை கட்டாயமாகிவிட்டது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தாரகுத்னீ-2727, பஸ்ஸார்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( مَن زَارَنِي مُحتَسِبًا إلَى المَدِينَةِ كَانَ فِي جِوَارِي يَومَ القِيَامَةِ ) யார் நன்மையை ஆதரவு வைத்தவராக மதீனாவில் என்னை எனது மண்ணறையில் (ஸியாரத்) வந்து சந்திக்கிறாரோ அவர் மறுமை நாளில் என் அருகில் இருப்பார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு- 400
மதீனா மாநகரத்தில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்திக்க ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ 4000 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தி ஒன்று கூறுகிறது. இந்த உலகில் ஒருவரை சந்தித்து சலாம் மட்டுமே கூறி விடைபெற இத்தனை ஆயிரம் பேர் கூடுகின்ற ஒரே இடம் உலகில் வேறு ஏதேனும் உண்டா?
உலகின் மற்ற நகரங்களை விடவும் மதீனா நகரம் சிறந்த நகரமாக திகழ்வதற்கு முக்கிய காரணம், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பத்து ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் மதீனாவுக்கு (நாடு துறந்து) வந்தபோது, மதீனாவில் பெரு நோய் ஏற்பட்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களும், பிலால் (ரலி) அவர்களும் நோய்வாய்ப்பட்டனர். தம் தோழர்கள் நோய்வாய்ப்படுவதை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கண்டபோது ( اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَمَا حَبَّبْتَ مَكَّةَ أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا ) "இறைவா! நீ மக்காவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கியதைப் போன்று அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும் இந்நகரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- முஸ்லிம்-2667
முதன்முறையாக மதீனா நகருக்குள் நுழைபவருக்கு அதன் சீதோஷ்ண நிலை ஒத்துக்கொள்ளாது. காய்ச்சல், உதடுகள் மற்றும் குதிங்கால்கள் வெடித்து போகுதல், ஆகிய சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படுவது இயல்பு. அன்றிலிருந்து இன்றுவரை இந்நிலை தொடர்கிறது.
மதீனாவில் தங்கியிருக்கும் போது தனக்கு ஏற்படும் இதுபோன்ற சிறுசிறு உடல் உபாதைகளை எண்ணி மதீனாவை வெறுத்து விடக்கூடாது. அதனை விட்டும் வெளியேறுவதில் தீவிரம் காட்டவும் கூடாது. மாறாக நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட சிறுசிறு உடல் உபாதைகள் தானே நமக்கும் ஏற்பட்டுள்ளது என்றெண்ணி மனதை சமாதானப்படுத்திக்கொண்டு மக்காவைப் போன்றே மதீனாவையும் நேசிக்கவும், அங்கு தங்கி பல நல்லறங்கள் செய்யவும் முயற்சிக்க வேண்டும்.
மதீனாவில் ஏற்படும் சில சிரமங்களால் அதனை வெறுத்த நிலையில் வேறொரு ஊருக்கு குடியேறுவது இறைநம்பிக்கையில் அக்கறை கொண்டவருக்கு அழகல்ல. மேலும் அதில் ஏற்படும் சிரமங்களை சகித்து கொண்டு வாழ்பவரே சிறந்த இறைநம்பிக்கையாளர் ஆவார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( الْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ لاَ يَدَعُهَا أَحَدٌ
رَغْبَةً عَنْهَا إِلاَّ أَبْدَلَ اللَّهُ فِيهَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ )
மக்கள் அறிந்து கொள்பவர்களாயிருந்தால் மதீனாவே அவர்களுக்கு சிறந்ததாகும். எவரும் அதை வெறுத்து அதைவிட்டுச் சென்றால் அவரைவிடச் சிறந்தவரை அதில் அல்லாஹ் குடியமர்த்தாமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2646
எல்லைப் பகுதி
சுலைமான் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மதீனாவின் புனித எல்லைக்குள் வேட்டையாடிக் கொண்டிருந்த அடிமையொருவரை பிடித்து அவரது மேலாடையைக் கழற்றிக் கொண்டார்கள். பின்னர் அவரது உரிமையாளர் வந்து கேட்டபோது ( مَنْ وَجَدَ أَحَدًا يَصِيدُ فِيهِ فَلْيَسْلُبْهُ ثِيَابَهُ ) "மதீனாவின் புனித எல்லைக்குள் வேட்டையாடுபவனை எவரும் பிடித்தால் அவனது மேலாடையைக் கழற்றிக் கொள்ளட்டும்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அண்ணலார் எனக்கு அளித்த இந்த பரிசை நான் உங்களிடம் திருப்பி தர முடியாது. வேண்டுமானால் அதன் கிரயத்தைக் கொடுத்து விடுகிறேன்" என்றார்கள். நூல்:- அபூதாவூத்-2037
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( وَجَعَلَ اثْنَىْ عَشَرَ مِيلاً حَوْلَ الْمَدِينَةِ حِمًى ) மதீனாவைச் சுற்றி 12 மைல் தொலைதூரத்தைப் பாதுகாக்கப்பட்ட (புனித) எல்லையாக அறிவித்தார்கள். நூல்:- முஸ்லிம்-2659
மக்காவைப் போன்றே மதீனாவும் புனித பூமி என்ற சிறப்பு தகுதியை சட்ட ரீதியாக பெற்றுள்ளது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( آخِرُ قَرْيَةٍ مِنْ قُرَى الإِسْلاَمِ خَرَابًا الْمَدِينَةُ ) (உலக அழிவின் போது அழிக்கப்படும்) இஸ்லாமிய நகரங்களில் கடைசியாக அழிவுக்குள்ளாகும் நகரம் மதீனா ஆகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3854, இப்னுஹிப்பான்
மதீனா நகருக்குரிய கண்ணியம், மரியாதை என்பதெல்லாம் அருமை நாயகம் (ஸல்) அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. எனவே நாமும் மதீனா நகருக்குரிய கண்ணியத்தை பேணுவதின் மூலம் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் அன்பை பெறலாம்.
மதீனா நகரம் சென்று கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களை சந்தித்து சலாம் சொல்லி, அந்த புனிதமிகு மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் மனத்தூய்மையுடன் எண்ணிலடங்கா வழிபாடுகள் செய்யும் பாக்கியத்தை அல்லாஹுதஆலா நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை, செல்- 9840535951
No comments:
Post a Comment