பாலியல் சீண்டல்
قال الله : قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا
فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
قال رسول الله صلي الله عليه وسلم :
أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ بِالدِّمَاءِ
தற்போபோது நம் நாட்டில் படிக்கச் செல்லும் பெண் பிள்ளைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்குவதும், தற்கொலை செய்ய தூண்டுவதும், அல்லது கொலை செய்துவிட்டு தற்கொலை என்று மாற்றி விடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
எனவே, பெற்றோர்கள் படிக்கச் சென்ற தமது பெண்பிள்ளைகள் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்ற பதப்பதைப்போடு தான் இருக்கின்றனர்.
கல்விக்கூடங்களின் தாளாளர்களுக்கு கல்வியைக் கற்றுக் கொடுத்தல் என்பது சேவை என்ற சிந்தனை மறந்து கல்லா கட்டுவதே பிரதானமாக ஆகிவிட்டது. எனவே, இன்றைய கல்விக்கூடங்கள் தனது பெயரை காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பு காட்டுகிறதே தவிர, அங்கே நடைபெறுகின்ற குற்றங்களை களைய முன் வருவதில்லை.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றச் சம்பவங்கள் சமூக பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடப்பதில்லை. பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நம் நாட்டில் மட்டுமல்ல பல வளர்ந்த நாடுகளிலும் இருக்கக்கூடிய பெரும் பிரச்னை. ஆனால், நம் நாட்டில் சற்று கூடுதலாகவே இருக்கிறது.
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ
ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
(நபியே) இறைநம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கிய வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கூறுகிறான். திருக்குர்ஆன்:- 24:30
வந்தது விசாகா குழு
இந்தியாவில் 1997 வரை பொதுவெளிகளில் செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள்/கொடுமைகள் இவற்றைத் தடுப்பதற்கே சட்டங்கள் இல்லை என்பதுதான் உண்மை. உடல்ரீதியான தாக்குதல்களைத் தண்டிப்பதற்குக் குற்றவியல் சட்டங்கள் வழிவகுத்தன. அதற்கு அப்பாற்பட்டு பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களைத் தடுப்பதைப் பற்றி நம்முடைய நீதித் துறை போதுமான கவனம் செலுத்தியிருக்கவில்லை.
குறிப்பாக, வேலைக்குச் செல்லுமிடத்தில் பெண்கள் மீது ஏதேனும் கிரிமினல் குற்றங்கள் இழைக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் காவல்துறை உதவியை நாட முடியும். ஒருவேளை மேலதிகாரிகளோ, சக ஊழியா்களோ பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் அன்று இடமில்லை. மேலும், பாலியல் சீண்டல் அல்லது தொந்தரவு என்றால் என்ன என்பதற்குச் சரியான வியாக்கியானமும் இல்லாமலிருந்தது.
ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் சமூக சேவகா் ஒருவா் கும்பல் ஒன்றால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அப்போது பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அன்றைய தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வா்மா விசாரித்தார். விசாகா ராஜஸ்தான் அரசு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் இந்த விவகாரத்தில் திருப்புமுனையை உண்டாக்கியது.
பாலியல் சீண்டல் என்றால் என்ன என்று முதலில் உச்ச நீதிமன்றம் வரையறுத்தது. முறையற்ற பாலியல் அணுகுமுறை, பெண்களை தொட்டுப் பேசுவது, பாலியல் இச்சையைப் பூர்த்திசெய்யும்படி மறைமுகமாகவோ, நேரடியாகவோ வேண்டுகோள் விடுப்பது, பாலியல் சார்ந்த குறிப்புகளை வெளிப்படுத்துவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, பாலின அடிப்படையில் உடல், மொழி, செய்கைகளால் வரவேற்க முடியாத செயல்களில் ஈடுபடுவது என்று சீண்டல்கள் குறித்த மிக விரிவான விளக்கத்தை அது கொடுத்தது.
மேலும், “பணியிடத்தில் ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகப் புகார் கூறினால், அதை விசாரிக்க ஒரு விசாரணை அமைப்பை ஒவ்வொரு நிர்வாகமும் உருவாக்க வேண்டும். அந்த விசாரணைக் குழுவில் பெரும்பான்மையாகப் பெண்கள் இருக்க வேண்டும். தவிர, அரசு சாரா பெண்கள் அமைப்பிலிருந்து ஒரு பிரதிநிதியும் அக்குழுவில் இடம் பெற வேண்டும்” என்றும் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட ஆண் ஊழியா்கள்/அதிகாரிகள் மீது நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்முடைய சட்டங்களின் போதாமையை உணர்ந்திருந்த உச்ச நீதிமன்றம், “பெண்கள் பணியாற்றும் இடத்தில் பாலியல் சீண்டல்களைத் தவிர்க்கும் விதத்தில் முறையான சட்டமியற்றும் வரை இத்தீர்ப்பே சட்டமாக செயல்படும்; அரசு நிறுவனங்களுக்கு மட்டும் இன்றி தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்” என்றும் கூறியது.
இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு. ஏனென்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களுக்கு மட்டுமே உரியன என்றிருப்பினும், நீதிமன்றமே சட்டமியற்றும் செயலில் ஈடுபட்டது இதுவே முதல் முறை. ஆனால், நீதிபதிகள் தங்களுடைய வரையறையை உணர்ந்திருந்ததால், நாடாளுமன்றம் இது குறித்து சிறப்புச் சட்டம் இயற்றும் வரை மட்டுமே தங்களது தீர்ப்பு சட்டமாகச் செயல்படும் என்று அறிவித்தனர். ஆனால், நாடாளுமன்றம் அப்படி ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு 16 ஆண்டுகள் கடந்தன.
விசாகா தீர்ப்பிற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாகப் பல வழிகாட்டுதல் உத்தரவுகளையும் பிறப்பித்தது. ஆனாலும், விசாகா தீர்ப்பின்படி பணியாற்றுமிடங்களில் நடக்கக்கூடிய பாலியல் சீண்டல்கள் பெரிய அளவில் குறையவில்லை என்பதைத்தான் நாம் இன்று பார்க்கிறோம்.
இன்றைக்குள்ள சட்டப்படி, பணியிடத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஒரு ஆணை அதிகபட்சம் வேலையை விட்டு அனுப்ப முடியுமேயொழிய அவருக்கு வேறு எந்தத் தண்டனையும் அளிக்க முடியாது; மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு இழப்பீடுகளுக்கும் சட்டம் வழிவகுக்கவில்லை. அதேபோல, பணியிடங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவெளிகளில் பெண்கள் மீது நடத்தப்படும் சீண்டல்களைத் தடுக்கவும் சட்டத்தில் வழியில்லை.
போக்சோ சட்டம்
சிறு பிள்ளைகள் பாலியல் குறித்து முழுமையாக அறியப்படாதவர்களாக கருதப்படுகின்றனர். மேலும் அவர்களிடம் இந்தச் செயலுக்குரிய உடல் வளர்ச்சி இருக்காது. எனவே அதைப்பற்றி அறியாத, அதற்குரிய உடல் வளர்ச்சி இல்லாத சிறு பிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும்போது அந்த நிகழ்வு குறித்த தாக்கம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பாதிக்கிறது. வன்கொடுமை சம்பவங்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு வழிவகுக்கிறது. குழந்தையின் உடல்நலம் மற்றும் அவர்களது நல்வாழ்வில் இது நீண்டகால உடல் மற்றும் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களால் அந்த தாக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மிகவும் சிரமப்படுவார்கள்.
சிறு பிள்ளைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் காமுகர்கள் இதைப்பற்றி சிந்திப்பதில்லை.
சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் (POCSO - The Protection of Children from Sexual Offence) நடைமுறைக்கு வந்தது. போக்சோ சட்டத்தில் 9 பகுதிகள் மற்றும் 46 சட்டப்பிரிவுகள் உள்ளன. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்குரிய தண்டனைகள் குறித்து சார் நீதிபதி தமிழ்ச்செல்வி விவரிகிறார்:
குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் நோக்கத்துடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு நீதிமன்றம் குறைந்தபட்சம் மூன்று வருட தண்டை அல்லது அதிகபட்சம் 5 வருடம் வரை தண்டை கொடுக்கும். மேலும், அபராதமும் விதிக்கப்படலாம்.
பிரிவு 3 ன் படி, சிறார்களை வன்கொடுமை செய்தாலோ, வேரோரு நபரை வைத்து செய்ய தூண்டினாலோ, குழந்தையின் உடலின் எந்தப் பகுதியிலும் ஊடுருவலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டாலோ அது பாலியல் வன்கொடுமை என்று கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்காக ஒருவருக்கு குறைந்தபட்சம் 7 வருட சிறை தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரையிலும் நீதிமன்றம் கொடுக்கும்.
ஒரு குழந்தைக்கு கார்டியனாக இருப்பவர் அல்லது குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்களே அக்குழந்தையை வன்கொடுமை செய்தால் பிரிவு 5 ன் படி நீதிமன்றம் தண்டனை கொடுக்கும். உதாரணமாக, குழந்தைகள் காப்பகத்தில் நடக்கும் வன்கொடுமை, காவல் நிலையத்தில் சிறார்களுக்கு நடக்கும் வன்கொடுமை, ராணுவத்தினரால் சிறார்களுக்கு ஏற்படும் வன்கொடுமை, கோரமான முறையில் நடக்கும் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துவது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் வன்கொடுமை செய்வது போன்ற குற்றங்கள் இந்த பிரிவில் அடங்குகிறது. இதனால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 வருடம், அதிகபட்சம் ஆயுள்தண்டனை வரையிலும் கொடுக்கலாம்.
குழந்தைகள்மீது நாளுக்கு நாள் பாலியல் வன்முறை நிகழ்வது அதிகரித்து வந்த நிலையில் போக்சோ (2012) சட்டத்தில் திருத்தங்கள் செய்து ஜூலை 18, 2019-இல் போக்சோ திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாகவும், 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாகவும், 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை நீட்டித்து திருத்தம் செய்யப்பட்டது. மேலும் தேவைப்பட்டால் மரண தண்டனை வரை வழங்கவும் வழி செய்கிறது இத்திருத்தச் சட்டம்.
தண்டனை
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண் ஒருவள் தொழுவதற்காக புறப்பட்டுச் சென்றாள். அப்போது ஒருவர், (வழியில்) அவளைச் சந்தித்து தன் போர்வையால் அவளை மூடிக்கொண்டு வன்புணர்வு செய்தார். அப்போது அவள் கூச்சலிட்டாள்.
பிறகு நபியவர்களிடம் இதுபற்றிய வழக்கு வந்தது. அப்போது நபியவர்கள், அப்பெண்ணிடம் ( اذْهَبِي فَقَدْ غَفَرَ اللَّهُ لَكِ ) "நீ (இங்கிருந்து) சென்று விடு, அல்லாஹ் உன்னை மன்னித்துவிட்டான். (ஏனெனில் உனது விருப்பமின்றியே இச்செயல் நிகழ்ந்துள்ளது)" என்று கூறிவிட்டு வன்புணர்வு செய்த மனிதரை நோக்கி, ( ارْجُمُوهُ ) "இவரைக் கல்லெறிந்து கொல்லுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார்கள். நூல்:- திர்மிதீ-1373, இப்னுமாஜா-2588
ஸயீத் பின் ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. எங்கள் பகுதியில் ஊனமுற்ற பலவீனமான ஒருவர் இருந்தார். அவர் வீட்டிலுள்ள அடிமைப் பெண்களுள் ஒருத்தியைப் பாலியல் சீண்டல் செய்து கொண்டிருந்ததை மக்கள் பார்த்துவிட்டனர். இவ்வழக்கை சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். அண்ணலார், ( اجْلِدُوهُ ضَرْبَ مِائَةِ سَوْطٍ ) "அவருக்கு நூறு சாட்டையடி கொடுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு மக்கள், "நாயகமே! அவர் மிகவும் பலவீனமானவர். நாங்கள் நூறு சாட்டையடி கொடுத்தால் அவர் இறந்துவிடுவார்" என்று கூறினர். அதற்கு அண்ணலார், ( فَخُذُوا لَهُ عِثْكَالاً فِيهِ مِائَةُ شِمْرَاخٍ فَاضْرِبُوهُ ضَرْبَةً وَاحِدَةً ) "பேரீச்ச மட்டையொன்றை எடுத்து அதை நூறு கீற்றுக்களாகப் பிரித்து அதைக் கொண்டு அவரை ஓர் அடி அடியுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3878, இப்னுமாஜா-2564, முஸ்னது அஹமத்- 20925
பொறுக்கிகள்
மக்கா வெற்றியின்போது இக்ரிமாவின் மனைவியான உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், "நாயகமே! நீங்கள் என் கணவர் இக்ரிமாவுக்கு எங்கு பார்த்தாலும் கொல்லும்படியான மரண தண்டனையை விதித்திருக்கிறீர்கள். அவர் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு யமன் தேசம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். முஸ்லிமாகிவிட்ட நானோ அவரோடு சேர்ந்து வாழ நினைக்கிறேன். நீங்கள் அவருக்கு மன்னிப்பு வழங்கினால், நான் சென்று அவரை அழைத்து வருகிறேன்" என்று கூறி, தனது கணவருக்காக மடிப்பிச்சை கேட்பதுபோல் கோரிக்கை வைத்தார். நபியவர்கள், "உன் கணவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மனதோடு வந்தால் நான் அவரை ஏற்றுக்கொண்டு மன்னிக்கிறேன்" என்று கூறினார்கள்.
அதைக் கேட்ட உம்மு ஹக்கீம் (ரலி) அவர்கள் மகிழ்ச்சியோடு தன் கணவரை அழைத்து வரப் புறப்பட்டார். அவர் தம்மோடு பயணத் துணைக்கு தம்முடைய ரோமானிய அடிமையை அழைத்துச்சென்றார். பாலைவனத்தில் நீண்ட தூரப்பயணம். ஆள் அரவமற்ற பாலைவனப் பகுதியில் இவர்கள் இருவர் மட்டுமே சென்று கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த ரோமானிய அடிமைக்கு ஒரு அசிங்கமான எண்ணம் தோன்றியது. உம்மு ஹக்கீம் (ரலி) அவர்களை நோக்கி, "நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும்" என்று கூறினார். அதைக் கேட்ட உம்மு ஹக்கீம் (ரலி) அவர்கள் அதிர்ச்சியானார். இவனா இப்படி? ரோமானிய நாட்டிலிருந்து அகதியாய் வந்த இந்த அடிமை, நீண்ட காலமாக என்னிடமும் என் கணவரிடமும் அடிமை விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய மனதில் இப்படி ஒரு அசிங்கமாக எண்ணமா? இப்போது நான் மறுத்தால் தனி ஆளாக இருக்கின்ற என்னை எது வேண்டுமானாலும் செய்வான். எனவே, இந்த விஷயத்தை தள்ளிப் போடலாம் என்று எண்ணியவாறு "சற்று பொறு" என்று மட்டும் கூறினார். அந்த அடிமை, சரி சற்று நேரம் கழித்து இவள் தனக்கு இணங்குவாள் என்றெண்ணிக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டான்.
பயணித்துக்கொண்டே இருந்தபோது சற்று தூரத்தில் ஒரு கிராமம் தென்பட்டது. உம்மு ஹக்கீம் (ரலி) அவர்களுக்கு உயிர் வந்தது போன்றிருந்தது. தண்ணீர் பருகுவதற்காக இறங்குவதைப் போன்று இறங்கி, அந்தக் கிராம மக்களிடம் சென்று விஷயத்தை சொல்லி விட்டார். அவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவனைக் கட்டி வைத்து வெளுத்து வாங்கி விட்டனர்.
பிறகு தம் கணவரைக் கண்டுபிடித்துப் பேசி, நபியவர்கள் கூறியதை எடுத்துரைத்து, தமது கணவரை முஸ்லிமாவதற்கு அழைத்து வந்து கொண்டிருக்கையில் தமது அடிமை குறித்து நடந்தவற்றை எடுத்துரைத்தார்.
இதைக்கேட்டு சினமுற்ற இக்ரிமா, அந்த கிராமம் வழியாகவே நாம் செல்லலாம் என்று கூறினார். அந்தக் கிராமத்தைக் கடந்து சென்றபோது அங்கு சென்று அந்த ரோமானிய அடிமையை ஒரே வெட்டாக வெட்டித் தலையைத் துண்டித்துவிட்டார். இஸ்லாத்தில் இணையபோகும் முன் கடைசியாக அவர் செய்த கொலை இதுவாகும். பின்னர் அவ்விருவரும் மக்காவை நோக்கிச் சென்றனர்.
பெண் பிள்ளைகளை சீரழிக்கும் காமுகர்கள் பெற்றோருக்கு பயந்து, தங்களுக்கு எது நடந்தாலும் அந்த உண்மையை தங்கள் வீட்டில் சொல்ல பயப்படும் பெண்களை / பெண் குழந்தைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்பாவிடமும் அம்மாவிடமும் 'பயம்' இருக்கும் வரை பொறுக்கிகள் துணிச்சலாக வலம் வருவார்கள்.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை! இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து கொண்டே வருவதால், அமெரிக்க பெண் சுற்றுலா பயணிகள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். “இதைத்தான் அமெரிக்கக்காரன் நம்மள பாத்து பயப்படுறான்னு பெருமையா சொன்னியா?”
சேட்டைகள் செய்பவர்கள்
அபூ அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் முகத்திரை அணிந்த ஒரு முஸ்லிம் பெண் தனக்குரிய வணிக பொருள்களுடன் வெளியூரிலிருந்து வந்து, பனூகைனுகா சந்தையில் விற்பனை செய்தாள். அப்பெண் அங்குள்ள பொற்கொல்லன் ஒருவன் அருகில் அமர்ந்தாள். அங்குள்ள யூதர்கள் (அப்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து) அவளது முகத்திரையைத் திறப்பதற்கு முனைந்தனர். ஆனால், அவள் மறுத்துவிட்டாள்.
அப்போது அந்த பொற்கொல்லன், அவள் பார்க்காத சமயத்தில் அவளின் ஆடையின் கீழ்ப்பகுதியை அவளின் முகத்திரையின் கீழ்ப்பகுதியுடன் இணைத்துக் கட்டிவிட்டான். அவள் நின்றபோது அவளின் ஆடை மேலே தூக்கி அவளின் உடல் பகுதிகள் வெளியே தெரிந்தன. உடனே யூதர்கள் அவளைக் கண்டு சிரித்தனர். அப்பெண் உரக்கக் கத்தினாள். யூதர்களின் இந்த செயலைப் பார்த்த ஒரு முஸ்லிம் மனிதர், உடனே தன்னுடைய வாளை உருவி அந்த பொற்கொல்லனைத் தாக்கி கொலை செய்து விட்டார்.
அப்பொற்கொல்லன் யூதனாக இருந்தான். எனவே, யூதர்கள் அந்த முஸ்லிமின்மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு அவரைக் கொன்று விட்டனர். பிறகு அந்த முஸ்லிம் குடும்பத்தினர், யூதர்களுக்கு எதிராக பிற முஸ்லிம்களிடம் பாதுகாப்புக் கோரினர். இதனை பிற முஸ்லிம்கள் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தனர்.
இதைப்போன்று (யூதர்களில் ஒரு பிரிவினரான) பனூ கைனுகா கூட்டத்தினரின் விஷமச் செயல்கள் அதிகரித்தபோது, அவர்களுடன் போரிடுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள். அதன்படி போருக்கு முஸ்லிம்கள் கிளம்பியதை கண்ட அக்கூட்டத்தினர் தங்களுக்குரிய கோட்டையில் தஞ்சம் புகுந்தனர். அப்போது நபியவர்கள், தமது கட்டளைக்கிணங்கி அவர்கள் இறங்கும்வரை அவர்களை முற்றுகையிட்டார்கள்.
அந்நேரம் நயவஞ்சகன் அப்துல்லாஹ் பின் உபை என்பவன், "முஹம்மதே! என் நண்பர்களிடம் நன்முறையில் நடந்து கொள்வீராக! மேலும் நீங்கள் அவர்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்து விடுவீர்களோ என்று நான் அஞ்சுகிறேன்" என்றான். அதற்கு நபியவர்கள், ( هُمْ لَكَ ) "அவர்கள் உன்னைச் சேர்ந்தவர்களே (நயவஞ்சகர்கள்) என்று கூறினார்கள். பிறகு அந்த யூதர்களை மதீனாவிலிருந்து நாடு கடத்தினார்கள். அல்பிதாயா வந்நிஹாயா, சீரத் இப்னு ஹிஷாம், சீரத் இப்னு இஸ்ஹாக்
கற்பழிக்கும் முயற்சி
ஹுதைல் குலத்தாரிடம் ஒரு மனிதன் விருந்தாளியாக வந்து தங்கினான். அவர்களும் அவனுக்கு விருந்து உபசாரம் செய்தனர். ஆனால், அவன் நன்றி கெட்டத்தனமாக அக்குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்தான். எனவே, அப்பெண் தன்னை தற்காத்துக்கொள்ள, அவன்மீது ஒரு பெரும் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துவிட்டாள்.
இந்த வழக்கு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் வந்தது. அப்போது உமர் (ரலி) அவர்கள், "கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு கொடுக்கத் தேவையில்லை. காரணம், ஒரு பெண் தன் கற்பைப் பாதுகாத்துக் கொள்ள கொலை செய்தாலும் தவறில்லை" என்று தீர்ப்பளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்
கொல்லப்படவேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ بِالدِّمَاءِ ) மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன்முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்து தான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6533, முஸ்லிம்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு சிறுமி இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்ட நிலையில் கிடந்தாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். நபியவர்கள் அவளிடம், "உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்ன மனிதனா? இன்ன மனிதனா? என்று கேட்டுக்கொண்டே வந்தார்கள். பிறகு, யூதன் ஒருவனின் பெயரை அவர்கள் கூறியதும், அச்சிறுமி ('ஆம்! அவன் தான்' என்று) தலையால் சைகை செய்தாள். அந்த யூதன் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதில் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( فَقَتَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ حَجَرَيْنِ ) அவனது தலையில் கல்லைப் போட்டு நசுக்கி கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். நூல்:- முஸ்லிம்-3453
காஷ்மீரில் இந்திய ராணுவத்தால், 7 முதல் 77 வயதுள்ள பத்தாயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஐ.நா. சபை மனித உரிமை கமிஷன் அதிகாரி தாக்கல் செய்தபோது தன்னையறியாமல் உடைந்து, அழுதக் காட்சி இணையத்தில் பரவியது.
செய்தியை சொல்பவருக்கே இவ்வளவு வலி என்றால், அந்த சித்திரவதையை அனுபவித்த அந்தப் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மனதாலும் உடலாலும் எவ்வளவு வலித்திருக்கும்?
இஸ்லாமியக் குற்றவியல்
சட்டம்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( خُذُوا عَنِّي قَدْ جَعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلاً الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ وَنَفْىُ سَنَةٍ وَالثَّيِّبُ بِالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ وَالرَّجْمُ )
(விபச்சாரச் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வீர்களாக! அல்லாஹ் (வாக்களித்திருப்பதைப் போன்று), பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்து விட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தப்படவேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும். அறிவிப்பாளர்:- உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3489, அபூதாவூத்-4415
சஃபிய்யா பின்த் அபீ உபைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) ஆட்சி காலத்தில் ஒருவன் ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டான். ஆகவே ஜனாதிபதி அவர்கள் அவனுக்கு சாட்டையடி கொடுத்து அவனை நாடு கடத்தவும் செய்தார்கள். ஆனால் பலவந்தப்படுத்தி கற்பழிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. நூல்:-புகாரீ-6949
பாலியல் சீண்டலில் மட்டும் ஈடுபட்ட ஒருவனுக்கு நூறு சாட்டையடி வழங்க வேண்டும். திருமணமாகாதவன் வன்புணர்வு செய்துவிட்டால் நூறு சாட்டையடி கொடுத்து, அவனை ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்த வேண்டும். திருமணமானவன் வன்புணர்வு செய்துவிட்டால் அவனுக்கு நூறு சாட்டையடிகள் வழங்கி, (சிறு கற்களால் எறிந்து கொல்லப்படுதல் எனும்) கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும். அவன் வன்புணர்வு செய்துமுடித்துவிட்டு, பிறகு அந்தப் பெண்ணை கொலையும் செய்துவிட்டால், அவளை எப்படி கொலை செய்தானோ அதேபோன்று அவன் கொலை செய்யப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவள் தன்னை தற்காத்துக் கொள்ள, அவனின் உடல் உறுப்புகளை சிதைத்துவிட்டாலோ அல்லது அவனைக் கொலை செய்துவிட்டாலோ அவள், எந்த நஷ்டஈடும் கொடுக்கத் தேவையில்லை. இதுவே,
இஸ்லாமிய குற்றவியல் சட்டமாகும்.
அல்லாஹுத்தஆலா, நமது பெண்மக்களையும், குழந்தைகளையும் கொடியோர்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment