Search This Blog

Saturday, 16 July 2022

ஷ்ஷ் பேசாதே!...

 

ஷ்ஷ் பேசாதே!...

 

وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَه وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ 

 

குர்ஆன் ஓதப்ப்பட்டால் (அதை செவிதாழ்த்தி)க் கேளுங்கள். (வாய்மூடி) மௌனமாக இருங்கள். (இதனால்) உங்களுக்கு அருள் செய்யப்படலாம்.                                                                                                                 திருக்குர்ஆன்:- 7:204

 

பேச்சுக்கலை மனிதனுக்கு மிக அவசியமான ஒன்றாகும். மனிதன் மதிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் பேச்சின் மூலமாகத் தான். மேலும் இந்த உலகத்தில் நாம் பேசும் சில பேச்சுக்கள் நாளை மறுமைநாளில் நம்மை சொர்க்கம் அல்லது நரகம் அழைத்து சென்று விடும். மேலும் நம்முடைய சில பேச்சுக்கள் நமது நற்கூலியை அழித்து விடும். எனவேதான் நமக்கு பேச்சுக்கள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.

 

"பல்லாக்கு ஏறுவதும் நாவாலே! பல் உடைபடுவதும் நாவாலே!" என்பது கிராமத்து சொல்வழக்கு.

 

எனவே இஸ்லாம் சில இடங்களில், நேரங்களில் உலக பேச்சுக்கள் பேசுவதை அருவருப்பாகக் கருதுகிறது. காரணம் அங்கேயெல்லாம் மறுமையின் சிந்தனை மட்டுமே மேலோங்கி இருக்க வேண்டும்.

 

மலம் ஜலம் கழிக்கும்போது

 

முஙீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் (மக்களின் பார்வைபடாத அளவுக்கு) மிகத் தொலைவாகச் செல்வார்கள். நூல்:- அபூதாவூத்-1

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( لاَ يَخْرُجُ الرَّجُلاَنِ يَضْرِبَانِ الْغَائِطَ كَاشِفَيْنِ عَنْ عَوْرَتِهِمَا يَتَحَدَّثَانِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَمْقُتُ عَلَى ذَلِكَ ) இரண்டு மனிதர்கள் மலம் கழிக்க (ஒன்றாகச்) சென்று, ஒருவர் மற்றவருக்கு முன் மர்ம உறுப்புகளைத் திறந்தும், பேசிக் கொண்டும் மலம் கழிக்க வேண்டாம். இதனால் அல்லாஹ் கோபப்படுகிறான்.                 அறிவிப்பாளர்:- அபூசயீது (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-14, முஸ்னது அஹ்மது

 

மனிதன் மலம் ஜலம் கழிக்க நாடும்போது தனிமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அறியாமைக் காலத்தில் மக்கள் ஒருவர் மற்றவருக்கு அருகில் அல்லது எதிரெதிரே உட்கார்ந்து பேசிக்கொண்டே மலம் ஜலம் கழிப்பார்கள். தமது மர்ம உறுப்பைப் பிறர் பார்ப்பார்களே என்று வெட்கப்பட மாட்டார்கள். அதை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள்.

 

இத்தகைய அநாகரிகமான நடைமுறை இறைவனின் கோபத்திற்கு காரணமாகி விடும். கழிப்பறைக்குள் இருந்து கொண்டு பேசக்கூடாது. அப்போது பாங்கு சப்தத்தைக் கேட்டாலோ, பிறர் சலாம் கூறினாலோ பதில் சொல்லக்கூடாது. வெளியே வந்த பிறகு தான் பதில் சொல்ல வேண்டும். மேலும் அங்கிருக்கும் போது தும்மினாலோ, கொட்டாவி ஏற்பட்டாலோ அல்ஹம்துலில்லாஹ், அஊதுபில்லாஹ்.... என்று நாவினால் சொல்லக்கூடாது. மனதிற்குள் சொல்லிக் கொள்ளலாம். ஏனெனில் அது அல்லாஹ்வை துதிப்பதற்குரிய இடமில்லை. அதனால் தான் தேவையை முடித்துவிட்டு அதிலிருந்து விரைவாக வெளியேற முயற்சிக்க வேண்டும்.

 

அங்கத்தூய்மை செய்யும் போது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமான அடியார் உளூ எனும் அங்கத்தூய்மை செய்யும் போது தமது முகத்தைக் கழுவினால் கண்களால் நிகழ்ந்த (சிறு) பாவங்கள், அவர் கைகளை கழுவும்போது கைகள் செய்த (சிறு) பாவங்கள், அவர் கால்களை கழுவும்போது கால்கள் செய்த (சிறு) பாவங்கள் அனைத்தும் அவர் கழுவிய தண்ணீர் துளியுடன் வெளியேறி விடுகின்றன.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்        நூல்:- முஸ்லிம்-412, திர்மிதீ-2

 

உளூவின் மூலம் சிறு பாவங்கள் நீங்கிவிடுகிறது என்பதால் உளூ ஓர் இறைவணக்கமாகி விடுகிறது. இறைவணக்கத்தில் ஈடுபடும்போது  பேச்சுக்களை தவிர்ந்து கொள்வதே பேணுதலாகும்.

 

மாறாக எதையாவது பேசிக்கொண்டே உளூ செய்யும் போது உறுப்புகளை வரிசைப்படி கழுவுவது தவறி விடலாம். அல்லது ஏதே ஒரு உறுப்பை கழுவுவது தவறி விடலாம். அல்லது உறுப்புகளை அரைகுறையாக கழுவி விடலாம். அல்லது உறுப்புகளை மூன்று முறையைவிட அதிகமாக கழுவி தண்ணீரை விரயம் செய்து விடலாம். அல்லது உளூவை சரியாக செய்தோமா? என்ற சந்தேகம் உண்டாகி விடலாம். உளூவின்போது ஓதப்பட வேண்டிய துஆக்கள் தவறி விடலாம். உளூவின்போது உள்ளச்சத்தை மேற்கொண்டால் அது தொழுகையிலும் தொடரும். எனவே உளூ செய்யும் போது பேசாதிருப்பதே சாலச்சிறந்தது.

 

பாங்கு சொல்லும்போது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ )  (பாங்கு எனும்) தொழுகை அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.                              அறிவிப்பாளர்:- அபூசயீது அல்குத்ரீ (ரலி) அவர்கள்     நூல்:- முஸ்லிம்-627

 

பாங்கு சொல்லும் போது பேசிக் கொண்டிருப்போருக்கு மரண நேரத்தில் திருக்கலிமா கூற நாக்கு தடுமாறும் என்றும், அவர்களின் இறுதி நேரத்தில் ஈமான் எனும் இறைநம்பிக்கை பறிக்கப்படும் ஆபத்துண்டு என்றும் மார்க்க அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.

 

எனவே பாங்கு சப்தத்தை செவியுறும்போது மௌனமாக இருந்து அதன் வார்த்தைகளை செவியுற்று அதே வார்த்தைகளை மெதுவாக திருப்பிக் கூற வேண்டும் என்பது அருமை நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு கட்டளையாகும். இவ்வாறு இருக்க அதை அலட்சியப்படுத்திவிட்டு அப்போது உலகப் பேச்சுக்களை பேசிக் கொண்டிருப்பவர் அண்ணலாரின் அமுதமொழியை அவமதித்தவராக கருதப்படுகின்றார். நபிமொழியை அவமதித்தவரின் இறுதி முடிவு நன்றாக இருக்காது என்பதே யதார்த்தமாகும்.

 

எனவே தான் முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள், மாநாடுகள், உரையாடல்கள் நடுவே பாங்கு வந்து குறுக்கிடும் போது நிகழ்வுகளை அப்படி அப்படியே நிறுத்தி விடுகின்றனர். கப்சிப் என்று அங்கே அமைதி காக்கப்படுகிறது.

 

திருக்குர்ஆன் ஓதப்படும்போது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَنِ اسْتَمَعَ إِلَى آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ، كُتِبَتْ لَهُ حَسَنَةٌ مُضَاعَفَةٌ، وَمَنْ تَلَاهَا كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ ) அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை யார் செவியுறுகிறாரோ, அவருக்கு பன்மடங்கு நன்மைகள் எழுதப்படும். யார் அதை ஓதுகிறாரோ, அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாக விளங்கும்.         அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது, தஃப்சீர் இப்னுகசீர் அல்அஃராப் -204

 

ஹசன் அல்பசரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( إِذَا جَلَسْتَ إِلَى الْقُرْآنِ، فَأَنْصِتْ لَهُ ) குர்ஆன் ஓதக் கேட்பதற்காக நீர் அமர்ந்து விட்டால் மௌனமாக இருக்க வேண்டும். (தொழுகையிலோ அல்லது தொழுகைக்கு வெளியிலோ எப்படியிருந்தாலும் சரி)        நூல்:- தஃப்சீர் இப்னுகசீர் அல்அஃராப் -204

 

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. குர்ஆன் ஓதுபவர் தன் இறைவனுடன் உரையாடுகிறார் என்பதால், ஓதும்போது இடையில் அவசியமின்றி பிறரிடம் பேசக்கூடாது. மிக அவசியமானால் பேசிவிட்டு மறுபடியும் அஊதுபில்லாஹ்...சொல்லி ஆரம்ப வேண்டும். மனிதர்களின் பேச்சு குறுக்கிடாத இடத்திலிருந்து ஓதுவதே பேணுதலாகும்.

 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( لَا بَأْسَ إِذَا قَرَأَ الرَّجُل فِي غَيرِ الصَّلَاةِ أَن يَّتَكَلَّم )  தொழுகைக்கு வெளியே ஒருவர் குர்ஆன் ஓதினால், அருகில் உள்ளவர் பேசுவது தவறில்லை. (ஆனால் இவரின் பேச்சு குர்ஆன் ஓதுபவருக்கு இடையூறாக அமைந்துவிடக்கூடாது.)    நூல்:- தஃப்சீர் இப்னுகசீர் அல்அஃராப் -204

 

திருக்குர்ஆன் ஓதப்படும்போது அதை கண்ணியப்படுத்தும் விதமாக மௌனமாக இருக்குமாறும், செவிதாழ்த்தி கேட்டுமாறும் தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

பள்ளிவாசலுக்குள்

 

நிச்சயமாக பள்ளிவாசல் அனைத்தும் அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன.       திருக்குர்ஆன்:- 72:18

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் உலகியல் பேச்சுக்களை எப்போதும், எதற்காகவும் பேசியதில்லை. உலகியல் சம்பந்தமான பேச்சுக்களுக்கோ அல்லது காரியங்களுக்கோ அவசியம் ஏற்பட்டால் அவர்கள் நெருப்பை மிதித்து விட்ட உணர்வுடன் உடனடியாக பள்ளிவாசலை விட்டு வெளியே வந்து தங்களது தேவைகளை முழுவதுமாக பேசி முடித்துவிட்ட பிறகே பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள். நூல்:- தன்பீஹுல் ஙாஃபிளீன்

 

ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் அமர்ந்து இருவர் சப்தமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவ்விருவரையும் தன்னருகே அழைத்து வந்து நீங்கள் யார்? உங்களுக்கு எந்த ஊர்? என்று வினவினார்கள்.

 

அதற்கு அவ்விருவரும் "நாங்கள் தாயிஃப் நகரைச் சேர்ந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அப்போது ஜனாதிபதி அவர்கள் ( لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا، تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ )  “(நல்ல வேளை! நீங்கள் வெளியூர்க்காரர்களாய்ப் போய்விட்டீர்கள்) நீங்கள் இந்த (மதீனா) நகரைச் சேந்தவர்களாக இருந்திருந்தால் உங்களை (சாட்டையால்) அடித்திருப்பேன். ஏனெனில் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீங்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்று கூறி கண்டித்தார்கள்.       அறிவிப்பாளர்:- சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-470,

 

"பள்ளியினுள் உலகப் பேச்சுக்கள் பேசும்போது, அது நாம் சேகரித்து வைத்தள்ள நன்மைகளை அழித்து விடும்" என்கிறது ஒரு நபிமொழி.

 

எனவே, பள்ளியினுள் உலகப் பேச்சுக்கள் மட்டுமல்ல, மார்க்கத்தைப் பற்றிய பேச்சாக இருந்தாலும் அதனுள் இறைவணக்கம் புரிபவர்களுக்கு அது இடையூறாக ஆகிவிடக்கூடாது. அதிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் துயில் கொள்ளும் மஸ்ஜிதுந் நபவீயினுள் சப்தத்தை உயர்த்தி பேசும்போது அது அண்ணலாருக்கு இடையூறாக ஆகிவிடுமல்லவா? அதனால் தான் அவ்விருவரையும் ஜனாதிபதி அவர்கள் உடனே கண்டித்தார்கள்.

 

அவர்கள் மதீனாவாசிகளாக இருந்திருப்பின் மஸ்ஜிதுந் நபவீயின் கண்ணியம் தெரிந்திருக்கக்கூடும். அவ்விருவரும் வெளியூர் வாசிகளாக இருந்ததால் அதன் கண்ணியத்தை அறியவில்லை. அதனால் தான் அவர்கள் தண்டிக்கப்படாமல், கண்டிக்கப்பட்டனர். 


அதாவது ஒரு சட்டம் அறிந்த பிறகும் தவறு செய்தால் அவர் கண்டிக்கப்பட வேண்டியவர் அல்லர். தண்டிக்கப்பட வேண்டியவராவார். என்ற கருத்தும் தெளிவாகிறது.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَكُونُ حَدِيثُهُمْ فِي مَسَاجِدِهِمْ فِي أَمْرِ دُنْيَاهُمْ، فَلَا تُجَالِسُوهُمْ ; فَلَيْسَ لِلَّهِ فِيهِمْ حَاجَةٌ ) மக்களிடம் இப்படி ஒரு காலம் வரும். அப்போது அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்து அவர்களின் உலகக் காரியங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீங்கள் அமர்ந்து விட வேண்டாம். ஏனெனில் அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வருவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை.          நூல்:- பைஹகீ, மிஷ்காத் பக்கம்-71  

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாராவது பள்ளிவாசலுக்குள் உலகப் பேச்சுக்களை பேசத் தொடங்கினால் அல்லாஹ்வுடைய அடியானே! பேசாமல் இரு! என்று வானவர்கள் கூறுகின்றனர். அவன் மேலும் பேச்சை தொடர்ந்தால் அல்லாஹ்வுடன் சண்டையிடுபவனே! பேசாமல் இரு! என்று கடுமையாக எச்சரிக்கிறார்கள். அவன் மேலும் பேச்சை தொடர்ந்தால் அல்லாஹ்வின் சாபம் உன் மீது உண்டாகட்டும்! என்று சபிக்கின்றார்கள். நூல்:- இஆனா

 

பள்ளிவாசலுடைய புனிதத்தன்மைகளில் மிக முக்கியமானது, சப்தமின்றி அமைதியாக பள்ளிவாசலை வைத்திருப்பதாகும். தொழுகை நேரங்களில் மட்டுமல்ல. மற்ற எல்லா நேரங்களிலும் சப்தமிடுதல் தவறாகும்.

 

பள்ளிவாசலில் யாராவது சப்தமிட்டால் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க படும் அளவுக்கு அவர் பெரும் குற்றவாளி என்கின்றார்கள் மார்க்க அறிஞர்கள்.

 

தொழுகைக்கு இடையூறு ஏற்படுமென்றால் பள்ளிவாசலுக்குள் சப்தமிட்டு குர்ஆன் ஓதுவதும், திக்ரு செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது.                நூல்:- ஃபத்ஹுல் முஈன் பக்கம்-62,117

 

சில ஊர்களில்  மற்றவர்கள் தொழுகின்றார்களே என்றுகூட கவனிக்காமல் தினந்தோறும் சப்தமாக மங்ரிப் தொழுகைக்கு பிறகு சூரத்துல் வாகிஆ ஓதுவதையும், ஜும்ஆ நாளில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு சூரத்துல் கஅஃப்  அல்லது சூரத்துல் யாசின் ஓதுவதையும் வழமையாக்கி உள்ளனர். இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை என்பது மார்க்கச் சட்டம். சப்தமின்றி ஓதலாம் தவறில்லை.

 

சட்ட மேதை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (உள்) பள்ளிவாசலுக்குள் சப்தம் உண்டாக்கும் விதமாக மதரசா நடத்துவதும், (ஜும்ஆ உரையை தவிர) மார்க்க சொற்பொழிவுகள் நடத்துவதும் மக்ரூஹ் எனும் வெறுக்கத்தக்க செயலாகும்.

 

சொற்பொழிவின்போது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ. وَالإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ ) "வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் (பேசிக்கொண்டு) இருப்பவரிடம் "நீ மௌனமாக இரு" என்று கூறினாலும் நீ வீண் பேச்சு பேசியவனாவாய்.                    அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-934, முஸ்லிம்-1541,   திர்மிதீ-470

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் ஜும்ஆத் தொழுகைக்குச் சென்று (கூடுதலான அளவு) தொழுதார். பிறகு இமாம் தனது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும் வரை செவிதாழ்த்தி மௌனமாக கேட்டு விட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜும்ஆவிலிருந்து அடுத்த ஜும்ஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள் வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகிறன.           அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1556

 

வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா (பேருரை), இரு பெருநாள் குத்பா, திருமண குத்பா ஆகிய குத்பாக்களின் போது மௌனமாக இருந்து அதை செவிதாழ்த்தி கேட்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.

 

ஜும்ஆ சொற்பொழிவு மற்றும் பிற நிகழ்ச்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் மார்க்க சொற்பொழிவுகளை மௌனமாக இருந்து செவிதாழ்த்திக் கேட்டு அதன் மூலம் மார்க்க அறிவை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சொற்பொழிவின்போது நாம் நொச் நொச்சென்று பேசிக்கொண்டிருந்தால் அது பிறருக்கு தொந்தரவாகவும் அமையக்கூடும். அந்த சபையின் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மையும் கிடைக்காமல் போய்விடும்.

 

மண்ணறைக்குச் சென்றால்

 

பின்னர் (அல்லாஹ்) மனிதனை மரணிக்க செய்கிறான். பின்னர் அவனை மண்ணறையில் ஆக்குகிறான். திருக்குர்ஆன்:- 80:21

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( فَمَنْ أَرَادَ أَنْ يَزُورَ فَلْيَزُرْ وَلاَ تَقُولُوا هُجْرًا ) யார் மண்ணறைகளுக்கு சென்று தரிசனம் (ஸியாரத்) செய்து வருவதை விரும்புகிறாரோ அவர் செய்து வரட்டும். ஆனால் (அங்கு) தேவையற்ற பேச்சைப் பேச வேண்டாம். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் புரைதா (ரலி)  அவர்கள் நூல்:- நசாயீ-2006

 

உஸ்மான் (ரலி) அவர்களின் பணியாளர் ஹானிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்குச் சென்று விட்டால் தங்களது தாடி நனையும் அளவுக்கு தேம்பித் தேம்பி அழுவார்கள். அப்போது அவர்களிடம் “சொர்க்கம் நரகம் பற்றி உங்களிடம் கூறுகின்றபோது கூட இவ்வாறு அழுததில்லையே! ஆனால் மண்ணறைக்கு வந்து விட்டால் இவ்வாறு தேம்பித் தேம்பி அழுகிறீர்களே ஏன்?" என்று வினவப்படும்.

 

அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் ( إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ )  "மண்ணறை என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடமாகும். இதி(ல் தரப்படும் வேதனையி)லிருந்து ஒருவர் தப்பிவிட்டால், அதற்கு பின்னுள்ளவை அவருக்கு மிகவும் எளிதானதாகவே அமையும். இதிலிருந்து ஒருவர் தப்பாவிட்டால் அதற்கு பின்னுள்ளவை அவருக்கு இதைவிட கடுமையானதாகவே இருக்கும்” என்று கூறினார்கள். மேலும் ( مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ ) “நான் மண்ணறையைவிட பயங்கரம் நிறைந்த ஓர் இடத்தை ஒருபோதும் கண்டதில்லை” என்று    அருமை நாயகம் (ஸல்) கூறினார்கள். (அதனால்தான்   மண்ணறையை காணும்போது நான் அழுகிறேன்) என்று விடையளித்தார்கள்.   நூல்:- திர்மிதீ-2230, இப்னுமாஜா

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَرَّ عَلَى الْمَقَابِرِ وَقَرَأَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) إِحْدَى عَشْرَةَ مَرَّةً، ثُمَّ وَهْبَ أَجْرَهُ لِلْأَمْوَاتِ ، أُعْطِيَ مِنَ الْأَجْرِ بِعَدَدِ الْأَمْوَاتِ ) மண்ணறைகளை கடந்து செல்பவர் அங்கு பதினோரு தடவை குல்ஹுவல்லாஹு அஹத் (112வது) அத்தியாயத்தை ஓதி, அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்காக அதன் நன்மையை (ஈசால் ஸவாப் எனும்) அன்பளிப்புச் செய்வாரானால், (அன்பளிப்பு செய்த) அவருக்கு அந்த மண்ணறையில் அடக்கம்  செய்யப்பட்டிருபவர்களின் எண்ணிக்கை அளவு நன்மைகள் வழங்கப்படும். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- கன்ஸுல் உம்மால் 15/655

 

நாம் மண்ணறை பக்கம் ஸியாரத்திற்காகவோ அல்லது ஜனாஸா அடக்கம் செய்வதற்காகவோ செல்லும் போது நாமும் இது போன்று ஒருநாள் இறந்து போவோம். நமக்கும் இவ்வாறு தான் கஃபன் ஆடை போர்த்தி, தொழ வைத்து மண்ணறைக்குள் வைத்துவிடுவார்கள் என்ற மரண சிந்தனை மட்டுமே மேலோங்கி இருக்க வேண்டும்.

 

தேவையற்ற உலகப் பேச்சுக்களை அங்கே முற்றிலுமாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மண்ணறை என்பது நமது உலகப் பயணம் துண்டிக்கப்பட்டு மறுமை பயணத்தைத் துவக்கும் இடமாகும். விவரமறியாத சிறுவ சிறுமியர்கள், பைத்தியக்காரன் அல்லது உலக மோகம் உள்ளவனைத் தவிர மற்றவர்கள் மண்ணறைக்கு அருகில் உலகப் பேச்சுக்களை பேச மாட்டார்கள்.

 

மண்ணறைக்கு சென்றால் அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் பயன்பெறும் விதமாக மேற்கண்ட நபிமொழியின்படி ஏதேனும் சில அத்தியாயங்கள், ஸலவாத்துக்கள், திக்ரு தஸ்பீஹ்கள் ஓதி அதன் நன்மைகளை அந்த மண்ணறைவாசிகளுக்கு அன்பளிப்பு (ஈசால் ஸவாப்) செய்ய வேண்டும்.

 

மண்ணறைவாசிகள் சுயமாக சின்னஞ்சிறிய நற்காரியத்தைக்கூட செய்ய முடியாதவர்களாகவும், பிறர் ஏதேனும் நற்காரியங்கள் செய்து அதன் நன்மைகளை நமக்கு அன்பளிப்பு செய்ய மாட்டார்களா? என்று எதிர்பார்த்துக் கொண்டும் இருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்யும் போது அதன் மூலம் நமக்கும் நன்மைகள் கிடைக்கும்.

 

பேசக்கூடாத இடங்கள், நேரங்கள் என்று மார்க்கம் வரையறுத்து தந்துள்ளவைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். எனவே நாம் இஸ்லாம் கற்றுத்தந்த ஒழுக்கங்களை பேணி வாழ்வதற்கு அல்லாஹ்  அருள்பாலிப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...