Search This Blog

Monday, 3 January 2022

அருள்வளம் பொழிவாய் ரஹ்மானே!

 

அருள்வளம் பொழிவாய் ரஹ்மானே!


وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ

 

பரக்கத் எனும் அருள்வளம்அல்லாஹ்வின் மறைமுகமான படைகளில் ஒன்று. அது பொருட்செல்வத்தில் இறங்கினால் பெருகச் செய்யும். பிள்ளைச் செல்வத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும். உடலில் வலிமை உண்டாக்கும். நேரத்தை நீடிக்கச் செய்யும். மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும்.

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ، قَالَ: اللهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்துவிட்டால், "இறைவா! ரஜப் மற்றும் ஷஅபான் மாதங்களில் எங்களுக்கு அருள்வளம் பொழிவாயாக! மேலும்எங்களுக்கு ரமளான் கிடைக்கப் பெற அருள்புரிவாயாக" என்று பிரார்த்திப்பார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, அல்ஹில்யா இமாம் அபூநயீம், முஸ்னது பஸ்ஸார்

 

ஒரு முஸ்லிம் தமது வாழ்நாளின் அனைத்து அம்சத்திலும் அல்லாஹ்விடம் அருள் வளத்தைக் கோர வேண்டும். குறிப்பாக, ரஜப் மாத துவக்கத்தில் இருந்தே அல்லாஹ்விடம் அருள்வளத்தை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு பிரார்த்திக்கும் மனிதருக்கு அல்லாஹ் ரமளான் மாதத்தை அடைந்து அதில் நற்காரியங்கள் செய்யும் பெரும் பாக்கியம் வழங்கக்கூடும்.


முஸ்லிம்களாக பிறந்த அனைவரும் தன்னுடைய வாழ்க்கையின் அனைத்து கட்டத்திலும் (பரக்கத் எனும்) அருள்வளத்தை விரும்புகின்றனர். இஸ்லாமிய பார்வையில் “அருள்வளம்” என்பது, குறைவாக இருந்தாலும் அதன்மூலம் நம்முடைய தேவைகள் நிறைவேறுவதாகும்.

 

மனிதா! இறைவனிடம் அதிகத்தை கேட்காதே! அருள்வளத்தை கேள்! என்கிறது இஸ்லாம்.

 

அருள்வளத்தின் திறவுகோல் இறையச்சமும், பேணுதலான வாழ்க்கையும் தான் என்பதை தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது. எனவேஅருள்வளத்தை விரும்புவோர் இவ்விரண்டும் நம்மிடம் உள்ளதாஎன்று சுயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். إِذَا كَانَت فِي البَيتِ خِيَانَةٌ ذَهَبَت مِنهُ البَرَكَةُ ) ஏதேனும் ஒரு இல்லத்தில் நம்பிக்கைத் துரோகம் குடியிருந்தால்அங்கிருந்து (பரக்கத் எனும்) அருள்வளம் சென்றுவிடும். நூல்:-  முன்தக்கா அல்கராயதீ

 

நம்முடைய சில செயல்பாடுகள்அருள்வளத்தை அழைத்துவரும். சில செயல்பாடுகள்இருக்கும் அருள்வளத்தை அழித்துவிடும் என்பதில் கவனம் தேவை.


وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ

 

அவ்வூர்களில் இருந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சத்துடன் வாழ்ந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். திருக்குர்ஆன்:- 7:96

 

எண்ணிக்கை முக்கியமல்ல

 

இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்களுக்கு பதினோறு சகோதரர்கள். ஆனாலும், அவருக்கு எதிராக அணி திரண்டனர்.

 

ஆனால், இறைத்தூதர் மூசா (அலை) அவர்களுக்கு ஹாரூன் (அலை) அவர்கள் ஒரே சகோதரர். தன் சகோதரருக்கு மந்திரியாக நின்றவர். உறுதுணை புரிந்தவர். கஷ்டத்தில் கூடவே இருந்தவர்.

 

அருள்வளமே கவனத்திற்குரியது; எண்ணிக்கை அல்ல!

 

இறைவழிபாடு

 

மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். ஐவேளை தொழுகையை பேணுதலாக நிறைவேற்றினால், கல்வியில் அருள்வளம் உண்டாகும். திருக்குர்ஆனோடு அதிக தொடர்புடைவர்கள் நினைவாற்றலில் அருள்வளம் பெறுவார்கள்.

 

கல்வியில் மட்டுமல்ல. வியாபாரத்தில், பொதுப்பணிகளில், குடும்பத்தில் அருள்வளம் பெறவேண்டுமானால், நாம் திருக்குர்ஆன் ஓதுவதிலும், ஐவேளைத் தொழுகையை மிகவும் பேணுதலாக நிறைவேற்றுவதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

 

சலாம் சொல்!

 

நீங்கள் இல்லங்களில் நுழையும் போது உங்கள்மீதே (அதாவது ஒருவருக்கு மற்றொருவர்) முகமன் (சலாம்) சொல்லிக் கொள்ளுங்கள். (அது) அல்லாஹ்விடமிருந்து வந்த அருள்வளம் மிக்க தூய்மையான காணிக்கையாகும்.     திருக்குர்ஆன்:- 24:61

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ( يَا أَنَسُ إِذَا دَخَلْتَ بَيْتَكَ فَسَلِّمْ عَلَى أَهْلِ بَيْتِكَ، يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ )  "அனஸே! (உமது இல்லத்திற்குள்) நீர் சென்றால் உம்முடைய குடும்பத்தாருக்கு ஸலாம் உரைப்பீராக;  அதனால் உமது இல்லத்தின் வளம் பெருகும். நூல்:-  தப்ரானீ, முஸ்னது அல்பஸ்ஸார், முஸ்னது அபீயஅலா, தஃப்சீர் இப்னு கஸீர் அந்நூர் வசனம்-61

 

பெரியவர்களிடம்

 

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை எங்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் மற்றும் சில தோழர்களும் இருந்தனர். அப்போது ஒரு கோப்பையில் பானம் கொண்டு வரப்பட்டது. அண்ணலார் அதை அபூஉபைதா (ரலி) அவர்களுக்கு பருகக் கொடுத்தார்கள். உடனே அபூஉபைதா (ரலி) அவர்கள், "நாயகமே! முதலில் பருக தாங்களே தகுதியானவர்கள்" என்று கூறினார்.

 

அதற்கு அண்ணலார், "நீர் வாங்கிக் கொள்வீராக" என்று கூறினார்கள். உடனே அபூஉபைதா (ரலி) அவர்களும் அந்தக் கோப்பையை வாங்கிக் கொண்டார். ஆனால் அதை பருகுவதற்கு முன்னர் "நாயகமே! தாங்களே பருகுங்கள்" என்று மீண்டும் கூறினார். அண்ணலார் ( اِشرَب فَاِنَّ البَرَكَةَ مَعَ اَكَابِرِنَا فَمَن لَم يَرحَم صَغِيرَنَا وَيُجِلَّ كَبِيرَنَا فَلَيسَ مِنَّا ) "நீரே பருகுவீராக! நிச்சயமாக (பரக்கத் எனும்) அருள்வளம் நம்மில் பெரியவர்களுடன் இருக்கிறது. எவர் நம்மில் சிறியவர் மீது இரக்கம் காட்டவில்லையோ, நம்மில் பெரியவர்களைக் கண்ணியப்படுத்தவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். நூல்:- தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-597

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلْبَرَكَةُ مَعَ اَكَابِرِكُمْ

உங்களுடைய பெரியவர்களிடம் (பரக்கத் எனும்) அருள்வளம்  உள்ளது.      அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம்

 

எவருடைய வயது அதிகமாக இருந்து, அதன் காரணமாக நன்மைகளும் அதிகமாக இருக்குமோ அதில் நலவும் அருள்வளமும் இருக்கிறது என்பது நபிமொழியின் கருத்து.

 

"அம்மிக்கு குழவி முக்கியம். வீட்டுக்கு கிழவி முக்கியம்" என்பது கிராமத்து சொல் வழக்கு.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَإِنَّمَا تُرْزَقُونَ وَتُنْصَرُونَ بِضُعَفَائِكُمْ

உங்களிலுள்ள பலவீனர்கள் (சாமானிய மக்களின்) பரக்கத்தால் தான் உங்களுடைய தேவைகள் நிறைவேற்றபடுகின்றன. உங்களுக்கு உதவி செய்யப்படுகிறது. நூல்:-  புகாரீ-2896, அபூதாவூத்-2594

 

நம்முடைய வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களுடன் சேர்ந்து நாம் ஒரே வீட்டில் வாழ்வதின் மூலம் பாதுகாப்பும், அருள்வளமும் கிடைக்கப் பெறலாம்.

 

அவர்கள் மூலம் நாம் பிள்ளைகளை வளர்த்துக்கொள்ளலாம். பாட்டி வைத்தியம், சமையல் போன்றவற்றை கற்றுக்கொள்ளலாம். அவ்வப்போது தம்பதியருக்கு மத்தியில் எழும் பிணக்குகளை சரிசெய்து கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களின்போது, அதற்குரிய நல்ல பல யோசனைகள் பெற்று, அழகிய தீர்வுகள் காணலாம். மனக்காயங்களுக்கு ஆறுதல் பெறலாம்.  சுருங்கக்கூறின் அவர்கள் தான் நாம் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத்தருபவர்கள்.

 

காலைபொழுது

 

சக்ர் பின் வதாஆ அல்ஃகாமிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( اَللّٰهُمَّ بَارِك لِأُمَّتِي فِي بُكُورِهَا ) இறைவா என் சமுதாயத்தார் அவர்களின் முற்பகல் நேர(வணிக)த்தில் நீ அருள்வளம் வழங்குவாயாக என்று பிரார்த்தித்தார்கள். அண்ணலார் (எதிரிகளை நோக்கி) ஒரு படைப்பிரிவையோ படையையோ அனுப்பினால் முற்பகலிலேயே அனுப்புவார்கள்.

 

இதன் அறிவிப்பாளர் உமாரா பின் ஹதீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார். சக்ர் (ரலி) அவர்கள் ஒரு வணிகராக இருந்தார்கள். அவர்கள் (ஊழியர்களை வணிகத்திற்காக) முற்பகல் நேரத்திலேயே அனுப்புவார்கள். இதனால் அவர்கள் ஒரு செல்வந்தராக ஆனார்கள். அவர்களின் செல்வமும் பெருகிற்று. நூல்:-  அபூதாவூத்-2239, திர்மிதீ-1133, இப்னுமாஜா-2227,  முஸ்னது அஹ்மத்-14891

 

இரவில் உறங்கி விழித்து, களைப்பெல்லாம் களைந்த பிறகு உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் பணியாற்றவும் தொழில் செய்யவும் ஏற்ற நேரம் காலை நேரம்தான். அந்நேரத்தில் சோர்வின்றி விழிப்புணர்வோடு ஒருவர் செயல்பட்டால் அவருக்கு வெற்றி கிடைக்கத்தானே செய்யும்! வளம் வந்து சேரத்தானே செய்யும்!

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் மகன் அதிகாலையில் தூங்குவதைக் கண்டு, ( قُمْ، أَتَنَامُ فِي السَّاعَةِ الَّتِي تقسم فِيهَا الأَرزَاق ) "எழு, வாழ்வாதாரங்கள் பங்கிடப்படுகின்ற நேரத்தில் நீ தூங்குகின்றாயா?" என்று கேட்டார்கள். நூல்:- அத்திப்புந் நபவீ

 

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

( وَنَوْمُ الصُّبْحَةِ يَمْنَعُ الرِّزْقَ، لِأَنَّ ذَلِكَ وَقْتٌ تَطْلُبُ فِيهِ الْخَلِيقَةُ أَرْزَاقَهَا، وَهُوَ وَقْتُ قِسْمَةِ الْأَرْزَاقِ، فَنَوْمُهُ حِرْمَانٌ ) காலைத் தூக்கம் வாழ்வாதாரத்தைத் தடுக்கிறது. ஏனென்றால், அது படைப்பினம் தன் வாழ்வாதாரத்தைத் தேடும் நேரம் ஆகும். அது வாழ்வாதாரம் பிரிக்கப்படும் நேரம் ஆகும். எனவே அந்த நேரத்தில் தூங்குவது கூடாது. நூல்:- அத்திப்புந் நபவி

 

அதிகாலை எழுவதால் ஏற்படும் பலன்கள்: மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

 

மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன? அவற்றில் எதனை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.                                                


அதிகாலை எழுவதால், காலை வேளையில் பசி எடுக்கும். காலையில் சாப்பிடுவதால், உடல் பருமன், சர்க்கரை நோய் வருவது குறையும். மேலும், இரவு 9-10 மணிக்குள் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.                                                               


காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனைச் சுவாசித்தால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னைகள் வராது.


அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம், சிறுநீர் கழிந்து, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். உடல் நலனுக்கு மட்டுமல்ல. மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.

 

 ஆடு வளர்ப்பில்

 

உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً ) "ஆடு வளர்ப்பாயாக! அதில் அருள்வளம் உள்ளது" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-2295 முஸ்னது அஹ்மத்-26113, கதீப் 4/11

 

அலீ (ரலி) அவர்களிடம் ஒருவர், நாய் ஒரே நேரத்தில் 6, 7 குட்டிகளை ஈன்றெடுக்கின்றது. ஆனால் ஆடுகளோ ஒரு நேரத்தில் 2 அல்லது 3 குட்டிகளை ஈன்றெடுக்கின்றது. ஆயினும் எல்லா இடங்களிலும் ஆடுகளின் எண்ணிக்கை நாய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறதே? என்று கேட்டார். ஆனால் நாம் ஆடுகளை நாள்தோறும் பலியிடுகிறோம்; அறுக்கின்றோம். அப்படி இருந்தும் அவை எப்போதும் நாய்களை விட அதிகமாகவே இருக்கின்றன. ஏன்? எனக் கேட்டார்.

 

அலீ (ரலி) அவர்கள், “ஆடுகள் இரவின் முற்பகுதியிலேயே தூங்கி விடுகின்றன. மேலும் அருளுக்குரிய  அதிகாலை (ஃபஜ்ர்) நேரத்தில் விழித்தெழுகின்றன. எனவே அருளைப் பெற்றுக் கொள்கின்றன. ஆனால் நாய்கள் இரவு முழுக்க குலைத்து விட்டு அதிகாலை (ஃபஜ்ர்) நேரம் நெருங்கும்போது தூங்குகின்றன. எனவே அவற்றின் வாழ்வாதாரத்தில் (ரிஸ்கில்) அருள்வளம் இருப்பதில்லை” பதிலளித்தார்கள்

 

எனவே, நான் உமக்கு அறிவுரை கூறுகிறேன். நீர் இரவில் சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் எழுவீராக. இதுவே வாழ்வாதாரத்திலும் சந்ததிகளிலும் அருள்வளம் பெறுவதுக்குரிய வழிமுறையாகும் என்றார்கள்.

 

பழமைகளின் அருமை

 

பழைய பொருட்களில் பரக்கத் உண்டு என்கிறனர் அறிஞர்கள்.

 

பழைய வீடு, வாகனம், பயன்பாட்டுக்குரிய பொருட்கள், ஆடைகள் என இது போன்ற பழமைகளின் அருமை அறிந்தவர்கள் அதை அவ்வளவு சீக்கிரமாக மாற்றிவிடமாட்டார்கள். அதன் அருமை அறியாதவர்களே அதை தூக்கி எறிந்து விடுவார்கள்.

 

புதியது வந்தவுடன் பழையதை குப்பையில் தூக்கி எறிவது சிறந்ததல்ல. புதியது வந்தபிறகு அதை நாம் பயன்படுத்தி கொண்டு, பழையதை பிறர் பயன்பாட்டுக்கு கொடுத்து விடுவது நன்மையான காரியம்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மற்றும் உமர் (ரலி) அவர்கள் உட்பட பல நபித்தோழர்கள் கிழிந்த ஆடைகளையும் காலணிகளையும் தைத்து பயன்படுத்தியுள்ளார்கள்.

 

ஆடை, காலணி மற்றும் குடை போன்றவற்றை தைத்து பயன்படுத்தும் நல்ல பழக்கம் முன்பு இருந்தது. ஆனால் இப்போது அந்த பழக்கம் காணாமல்போய்விட்டது. கிழிந்துவிட்டால் தூக்கி வீசிவிட்டு புதிதாக வாங்கிக்கொள்! என்ற மோசமான பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறோம்.

 

புதியது வந்தவுடன் பழையதை தூக்கி எறியும் பழக்கம் நம்மிடம் வந்து விட்டால், வீண்விரயம் செய்யும் கெட்டப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம் என்று பொருளாகும். வீண்விரயம் அருள்வளத்தை அழித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

 

சுத்தம் பேணுதல்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ ) தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அறிவிப்பாளர்:- அபூ மாலிக் அல் அஷ்அரி (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-381, திர்மிதீ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  “வீட்டையும், பண்டபாத்திரங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வதால் அருள்வளம் உண்டாகும்.   நூல்:- கதீப்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். வீடு அழுக்காக இருப்பதையும் வீட்டுப்பொருட்கள் பரப்பிக் கிடப்பதையும் கண்டு இறைவன் கோபிக்கிறான்.    நூல்:- பைஹகீ   

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  படுக்கையிலிருந்து எழுந்தவுடன் படுக்கை மற்றும் ஆடைகளை மடித்து வையுங்கள். மடிக்கப்பட்ட ஆடைகளை ஷைத்தான் அணிவதில்லை.      நூல்:- தப்ரானீ    

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அழுக்கு துணிகளை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள்! (அல்லது மறைத்து வையுங்கள்). அவை இருக்கும் இடத்தில் ஜின்கள் ஷைத்தான்கள் தங்குகின்றன  நூல்:- தைலமீ

 

மனிதனுடைய குணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிலவற்றை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையுடன் இணைத்து சொல்லி இருகின்றார்கள். அப்படிப்பட்ட குணங்களை நமது வாழ்க்கையில் நாம் கொண்டு வருவது நமது இறைநம்பிக்கையை பலப்படுத்தக் கூடியதாகவும் அந்த குணங்களை இழப்பது இறைநம்பிக்கையை பலகீனப்படுத்தக் கூடியதாகவும் அமையும். எனவே அப்படிப்பட்ட தன்மைகளை பெறுவதிலும், வளர்ப்பதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் கவனம் செலுத்துவது கடமையாகும். இந்த வகையில் அமைந்த ஒன்று தான் மனிதன் பேணவேண்டிய சுத்தம் சுகாதாரமாகும்.

 

உண்ணும் முறை 

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ ) உங்கள் உணவுப் பொருட்களை அளந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அருள்வளம் வழங்கப்படும். அறிவிப்பாளர்:- மிக்தாம் பின் மஅதீகரிப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2128, இப்னுமாஜா-2223, முஸ்னது அஹ்மது, இப்னு ஹிப்பான், தப்ரானீ

 

ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பார்கள். பொதுவாக உணவு பொருட்களை பயன்படுத்தும்போது அதை அளந்து கொள்வது நல்லது. அவ்வாறு அளந்து பயன்படுத்தும்போதுதான் கணக்கு தெரியும்; திட்டமிட்ட நாட்கள்வரை இருப்பு இருக்கும். அத்துடன் அளந்துபோடும் போது அல்லாஹ்வின் பெயர் கூறுவோம். அளக்காமல் போட்டால் தேவைக்கு அதிகமாகப் போய், பின்னால் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அல்லது விரயமாகக்கூடும். அதுவும் அவலத்திற்கு காரணமாகும்.                            

வஹ்ஷீ பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர்களில் சிலர் (அண்ணல் நபி - ஸல் அவர்களிடம் வந்து) "நாயகமே! நாங்கள் சாப்பிடுகிறோம் ஆனால் வயிறு நிரம்புவதில்லை" எனக் கூறினர். அண்ணலார்( فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ ) "நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகிறீர்களா?" என்று வினவினார்கள். அவர்கள், "ஆம்" என்றனர். அண்ணலார்( فَاجْتَمِعُوا عَلَي طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ )  "நீங்கள் ஒன்றுகூடி உண்ணுங்கள். அவ்வாறு உண்ணும்போது 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி சாப்பிடுங்கள். (நீங்கள் அவ்வாறு உண்டால்) அந்த உணவில் உங்களுக்கு அருள்வளம் செய்யப்படும்" என்று (தீர்வு) கூறினார்கள்.  நூல்:- அபூதாவூத்-4023

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُوا مِنْ حَوَالَيْهَا، وَدَعُوا ذِرْوَتَهَا يُبَارَكْ فيها ) உணவுத் தட்டின் ஓரப் பகுதியிலிருந்து சாப்பிடுங்கள். 'அருள்வளம்' நடுவில் இறக்கப்படுவதால் நடுப் பகுதியை விட்டு விடுங்கள். அதைக் கடைசியாக சாப்பிடுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3280, திர்மிதீ-1727, இப்னு மாஜா, ரியாளுஸ்ஸாலிஹீன்-745

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. 

( أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِلَعْقِ الأَصَابِعِ وَالصَّحْفَةِ وَقَالَ ‏ "‏ إِنَّكُمْ لاَ تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ ) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை உறிஞ்சுமாறும், தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், உணவின் எந்தப் பகுதியில் 'அருள்வளம்' உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4136, திர்மிதீ-1723, 1725, இப்னு மாஜா -3261

 

மனிதன் உட்கொள்ளும் உணவில் இறைவன் பரக்கத் எனும் வளம் வைத்துள்ளான். அந்த வளம், அவன் சாப்பிட்டு முடித்த உணவில் உள்ளதா? அல்லது அவன் விரலில் ஒட்டிக் கொண்டுள்ள, அல்லது பாத்திரத்திற்குள் எஞ்சியுள்ள, அல்லது கீழே விழுந்துவிட்ட பருக்கையில் உள்ளதா என்பதை அவன் அறிய மாட்டான். எனவே, அருள்வளம் வேண்டுமென்றால் இவை அனைத்தையும் பெற வேண்டும்.

 

அதாவது பாத்திரத்தை நன்கு வழித்து, இரு விரல்களை உறிஞ்சி, கீழே விழுந்த பருக்கையை எடுத்து உண்ண வேண்டும். இவற்றில் எதில் அருள்வளம் இருந்தாலும் உண்பவருக்கு அது பயனளிக்கலாம். அருள்வளம் என்றாலே கூடுதல், நலன் கிடைத்தல், ஊட்டம், நோய் நொடியில் இருந்து பாதுகாப்புப் பெறல் ஆகியவைதான்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த சாப்பாட்டு ஒழுக்கங்களை, இறைநம்பிக்கையோடு முறையாக  கடைபிடித்தால் நமது உணவில் அருள்வளம் காணலாம்.

 

நேர்மையான வியாபாரம்

 

நபித்தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களிடம் நீங்கள் எப்படி செல்வந்தராக ஆனீர் ? என்று ஒருவர் கேட்டபோது, அதற்கவர்கள் "நான் எப்போதும் பொருளுக்கு குறைந்த இலாபத்தையே வைப்பேன். மக்களுக்கு தேவையான பொருளை பதுக்கி வைக்கமாட்டேன். நல்ல தரமான பொருளையே விற்பனை செய்வேன். அதனால் அல்லாஹ் என்னுடைய தொழிலில் அருள்வளம் செய்தான். அதனால் நான் செல்வந்தராக ஆனேன்" என்று பதிலளித்தார்கள். நூல்: ஹயாதுஸ் ஸஹாபா

 

அல்லாமா இப்னுகஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

( مَنْ بَاعَ وَاشْتَرَى فِي يَوْمِ الْجُمُعَةِ بَعْدَ الصَّلَاةِ، بَارَكَ اللَّهُ لَهُ سَبْعِينَ مَرَّةً ) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு யார் வியாபாரத்தில் ஈடுபட்டாரோ (அவர் இறைக்கட்டளைப்படி செயல்பட்டதற்குக் கைம்மாறாக) அவருக்கு எழுபது தடவை அல்லாஹ் அருள்வளம் புரிகிறான். நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர் அல்ஜும்ஆ வசனம்-10

 

ஹலாலான வருவாய்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ مَنْ أَصَابَهُ بِحَقِّهِ بُورِكَ لَهُ فِيهِ இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் அதை உரிய முறையில் அடைந்து கொள்கிறாரோ, அவருக்கு அதில் அருள்வளம் வழங்கப்படும். அறிவிப்பாளர்:- கவ்லா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2296

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் தந்தை பெரும் செல்வந்தரான இஸ்மாயீல் (ரஹ்) அவர்கள் தனது மரண நேரத்தில் தனது மனைவி மக்களை அழைத்து "நான் சம்பாதித்துச் சேர்த்து வைத்துவிட்டு செல்லும் இந்த சொத்தில் ஒரு திர்ஹம் துட்டுக்கூட ஹராம் கலந்ததில்லை. ( وَلَا دِرْهَمً فِیْهِ شُبْهَةً مِّنَ الْحَرَامِ ) “இதிலுள்ள ஒரு வெள்ளிக்காசில்கூட ஹராமின் சந்தேகம் இல்லை”. எனவே, இவற்றை நீங்கள்  ஹலாலான காரியங்களுக்கு  மட்டுமே செலவழிக்க வேண்டும். அதிலிருந்து ஒரு துட்டுக்கூட ஹராமான காரியங்களுக்கு செலவழித்துவிடக்கூடாது" என்று (வசிய்யத் எனும்) இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். இதன் பரக்கத்தால் இந்த சமுதாயத்திற்கு இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் கிடைக்கப் பெற்றார்கள். இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தம் தந்தை விட்டு சென்ற சொத்தைக்கொண்டே தமது வாழ்நாள் தேவையை நிறைவேற்றிக்கொண்டார்கள்.

 

பிறரின் பிரார்த்தனை

 

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விருந்து கொடுத்தார்கள். விருந்து முடிந்த பிறகு என் தந்தை அண்ணலாரிடம், "எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அண்ணலார், ( اَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ ) "இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- முஸ்லிம்-4149, திர்மிதீ-3490

 

ஷபீப் பின் ஙர்க்கதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உர்வா பின் அபில் ஜஅத் அல்பாரிக்கீ (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை வாங்குவதற்காக ஒரு பொற்காசு கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு பொற்காசுக்கு விற்றுவிட்டு ஒரு பொற்காசையும் ஒரு ஆட்டையும் கொண்டு வந்தார்.

 

(அதைக்கண்ட) நபியவர்கள் அவர் வியாபாரத்தில் அவருக்கு அருள்வளம் ஏற்பட பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார் என்ற நிலையில் இருந்தார். நூல்:- புகாரீ-3642, அபூதாவூத்-2937, திர்மிதீ-1179, இப்னுமாஜா-2393, முஸ்னது அஹ்மத்-18549

 

நமக்கு உபகாரம் செய்வோருக்கு நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு பிரதி உபகாரமும் செய்ய வேண்டும். அவர்களின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கவும் வேண்டும். நாம் பிறருக்கு பிரார்த்திக்கும்போது, அவர்களுடைய காரியங்களில் அருள்வளம் கிடைக்கப்பெற பிரார்த்திக்க வேண்டும்.

 

இறைநேசர்கள், பெற்றோர்கள், வயது மூத்த நல்லோர்கள், மார்க்க அறிஞர்கள் ஆகியோரின் பிரார்த்தனையில் அருள்வளம் உண்டு.

 

ஒற்றுமை

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( كُلُوا جَمِيعًا وَلَا تَفَرّقُوا؛ فَإِنَّ الْبَرَكَةَ مَعَ الْجَمَاعَةِநீங்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள்; பிரிந்துவிடாதீர்கள். சேர்ந்திருப்பதில் தான் அருள்வளம் உள்ளது. அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா, தஃப்சீர் இப்னுகஸீர் அந்நூர் வசனம்-61

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَدُ اللَّهِ مَعَ الْجَمَاعَةِ

அல்லாஹ்வின் (உதவிக்) கரம், சமுதாயக் கூட்டமைப்புடன்தான் உள்ளது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2092

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَرَادَ بُحْبُوحَةَ الْجَنَّةِ فَلْيَلْزَمِ الْجَمَاعَةَ

யார் சொர்க்கத்தில் மிகச் சிறந்ததை (வசிப்பிடமாகப் பெற) விரும்புகிறாரோ அவர் சமுதாயக் கூட்டமைப்போடு சேர்ந்திருக்கட்டும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2091

 

முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஐக்கியமாகச் செயல்படும் போது, இறைவனின் அருள்வளமும் பாதுகாப்பும் அரவணைப்பும் அவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். பிரிந்து போனால் அருள்வளத்தையும் பாதுகாப்பையும் அமைதியையும்  இறைவன் அகற்றிவிடுவான்; அவர்களின் நிலை சீர்குலைந்துவிடும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( صَلاَةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلاَةِ أَحَدِكُمْ وَحْدَهُ بِخَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا ) கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1147

 

ஒன்றுபட்டு கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகைக்குதான் மதிப்பு அதிகம். ஒன்றுபட்டு வாழும் எந்த ஒரு சமுதாயமும் எந்த விஷயத்திலும் பின்னடைவதில்லை. பிணைப்புக்கள் ஒருபக்கம் உருவாகிறபோது, பிளவுகள் மறுபக்கம் அகற்றப்படுகிறது. எந்தவொரு காரயத்திலும் ஒற்றுமையோடு செயல்படும்போது அருள்வளத்தை நிறைவாகக் காணலாம்.

 

இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் உலகளாவிய பல்வேறு வீழ்ச்சிகளுக்கும் சீரழிவுகளுக்கும் தலையாய காரணம் "ஒற்றுமையின்மை" தான்.

 

அனைத்து விஷயங்களிலும் முஸ்லிம்கள் தங்களின் ஐக்கியத்தை தவற விட்டதால் பல்வேறு சீரழிவுகளை உலக அரங்கில் இஸ்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

 

பெண் குழந்தை

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إنَّ مِن بَرَكَةِ المَرْأةِ تَبْكِيرَها بِالإناثِ

அருள்வளம் மிக்க மனைவியின் பண்புகளில் ஒன்று, அவளுக்கு முதலில் பெண் குழந்தை பிறப்பதாகும்.  அறிவிப்பாளர்:- வாஸிலா பின் அஸ்கஉ (ரஹ்) அவர்கள் நூல்:- இப்னு மர்தவைஹி, இப்னு அசாகிர், தஃப்சீர் பஹ்ருல் முஹீத், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அஷ்ஷூரா வசனம்-49

 

இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களின் மகனார் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எப்போதெல்லாம் எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கிறதோ அப்போதெல்லாம் எனது தந்தையார், "இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஏனெனில், அதிகமான இறைத்தூதர்கள் பெண் குழந்தைகளின் தந்தையர்களாக இருந்துள்ளனர். நமது பிரியத்துக்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர்" என்று கூறுவார்கள். நூல்:- கைஃப நஸ்தக் பிலுல் மவ்லூத்

 

கரு உண்டான உடனே ஆண் குழந்தைக்காக மட்டுமே ஆசை கொள்வதும், அதற்காக இறைவனை பிரார்த்திப்பதும், பெண் குழந்தை பிறந்து விட்டால் அதைத் தீங்காக கருதுவதும், முகம் தொங்கிப் போவதும், மனம் கவலையால் நிறைந்து விடுவதும் ஆக, இது போன்ற பண்பு முஸ்லிம்களுக்குரியதல்ல.

 

பெண் குழந்தைகள் பெற்றொருக்கு இம்மையிலும் மறுமையிலும் கண்களின் குளிர்ச்சிக்கு காரணங்களாக அமைகின்றனர் என்று இஸ்லாம் இயம்புகிறது.

 

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பெண் குழந்தைகளை வழங்குகிறான். மேலும் தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்குகிறான். திருக்குர்ஆன்:- 42:49

 

இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா பெண்குழந்தைகளை முதலில் கூறிவிட்டு, பிறகு தான் ஆண் குழந்தைகளை கூறியுள்ளான். எனவே, பெண் குழந்தைகள் அருள்வளம் மிக்கவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

சிக்கனம் தேவை

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً ) 

செலவீனங்கள் குறைந்த திருமணமே, (பரக்கத் எனும்) அருள்வளம் நிறைந்த சிறந்த திருமணம் ஆகும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது, பைஹகீ,  மிஷ்காத் பக்கம்-268

 

திருமணச் சிரமங்கள், பெண் பார்ப்பதிலிருந்து ஆரம்பமாகிவிடுகிறது. பெண் பார்ப்பதற்கு என்று மாப்பிள்ளை வீட்டார் பெரும் படையுடன் பெண் வீட்டுக்குச் செல்வதும், மாப்பிள்ளை வீட்டார் மனதில் தமது குடும்பத்தைப் பற்றி உயர்ந்த எண்ணம் வருவதற்காக பெண் வீட்டார் தேவையில்லாத சிரமத்தையும் தகுதிக்கு மீறிய செலவையும் உண்டாக்கிக் கொள்வதும் இன்றைய வழமையாகிவிட்டது.

 

பெண் பார்த்தல் மற்றும் திருமணம் முடித்தல் என்பதை இஸ்லாம் எளிமைப்படுத்தியிருக்கிறது. ஆனால் தற்போது இன்றைய முஸ்லிம் சமுதாயம் அதை மிகுந்த சிரமத்திற்கு உரியதாக ஆக்கியிருக்கிறது. தேவையற்ற செலவுகளை ஒரு கடமை போல் செய்யப்படுகின்றன. சில இலட்சங்களாவது இருந்தால்தான் ஒரு திருமணத்தை நடத்த முடியும் என்ற அவல நிலை பரவலாக்கப்பட்டு விட்டது.

 

இக்காலத்தில் திருமண அழைப்பிற்காக "அழைப்பிதழ்கள்" உபயோகிக்கப்படுகிறது. அதில் தடை இல்லை. எனினும் அந்த அழைப்பிதழ்கள் பற்பல வண்ணங்களில் கண்ணைக் கவரும் விதமாக ஆடம்பரமாகவும், அதிக விலை உள்ளதாகவும் இருப்பதுதான் கண்டிக்கத்தக்கது. திருமணத்திற்கு பிறகு பயனற்றுப்போகும் அழைப்பிதழ்களுக்கு பல்லாயிரம் ரூபாய் செலவு செய்வது வீண் விரயமேயாகும்.

 

பிரமாண்டமான மண்டபங்கள் பிடிப்பது, வாழை மரங்கள் பந்தக்கால் நடுவது, பெரிய அளவில் பேனர்களும் போஸ்டர்களும் ஒட்டுவது, மணமேடை மற்றும் மணமக்களை அலங்கரிப்பது, உணவுக்காக சில இலட்சங்களை செலவழிப்பது, வீடியோ போட்டோக்கள் மற்றும் ஆராத்தி எடுப்பது என ஒவ்வொன்றிலும் தேவைக்கு மீறி செலவு செய்வது ஆடம்பரம் என்றும் இவைகளில் சில பாவக்காரியங்கள் என்றும் விளங்க வேண்டும். ஆடம்பரம் அருள்வளத்தை அண்டவிடுவதில்லை.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

( مِن بَرَکَةِ المَرأَةِ سُرعَةُ تَزوِیجِهَا وَسُرعَةُ رَحِیمِهَا ஓர் பெண்ணில் உள்ள (பரக்கத் எனும்) அருள் வளம் என்பது அவளுக்கு விரைவாக திருமணம் செய்து வைப்பதும், மேலும் அவள் விரைவாக கருத்தரிப்பதுமாகும்.   நூல்:-முஸ்னது அஹ்மது

 

தாய்ப்பால்

 

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ لَبَنٍ رُضِعَ بِهِ الصَّبِىُّ أَعْظَمَ بَرَكَةٍ عَلَيْهِ مِنْ لَبَنِ أُمّـِهِ ) 

குழந்தை அருந்தும் பால்களில் தாய்ப்பாலை விட அருள்வளம் மிக்கது எதுவுமில்லை. நூல்:- அல்வசாஇல்-15/175

 

ஒரு குழந்தையின் உள, உடல் வளர்ச்சியில் தாய்ப்பாலின் பங்களிப்பு அளப்பரியதாகவும், அருந்தொண்டாற்றக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றது.

 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பிரசவத்திற்கு பிறகு அவர்களின் உடல் எடை அதிகரிக்கும்.

 

பரக்கத்திற்குரியவர்கள் யார்?

 

நம்மில் யார் பரக்கத்திற்குரியவர்கள் என்று அறிய, மார்க்க அறிஞர்கள் ஒரு விளக்கத்தை கூறுகிறார்கள். அதாவது, எந்த மனிதனுடைய வாழ்நாளில் நற்காரியங்கள் அதிகம் இருக்குமோ அவன் ஆயுளில் அருள்வளம் வழங்கப்பெற்றவன் ஆவான். எந்த மனிதனுடைய வாழ்நாளில் பாவக்காரியங்கள் அதிகம் இருக்குமோ அவன் ஆயுளில் அருள்வளம் வழங்கப்பெறாதவன் ஆவான்.

 

நம்முடைய செல்வத்தின் மூலம் மனத்தூய்மையுடன் அதிமான நற்காரியங்கள் செய்யப்பட்டிருந்தால், நம்முடைய செல்வத்தில் அருள்வளம் வழங்கப்பட்டுள்ளது என்று பொருளாகும்.

 

அல்லாஹுத்தஆலா நம்முடைய உலக வாழ்க்கையிலும், மறுமை வாழ்க்கையிலும் (பரக்கத் எனும்) அருள்வளம் பொழிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...