Search This Blog

Sunday, 2 January 2022

மாற்றலாமே!

 

 மாற்றலாமே!


وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا

 

தாவூதையும் சுலைமானையும் (நபியாக அனுப்பி வைத்தோம்.) ஒரு சமூகத்தாரின் ஆடுகள் (மற்றொரு சமூகத்தாரின்) பயிரை மேய்ந்துவிட்டது பற்றி (தாவூது சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்பளித்தனர். நாம் அவர்களின் தீர்ப்பைக் கவனித்துக் கொண்டிருந்தோம். தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே நாம் அதிகாரத்தையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும்சுலைமானுக்கு நியாயத்தை விளக்கி காண்பித்தோம். திருக்குர்ஆன்:- 21: 78,79

 

வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. நாள்கள் நம்முடைய பாடசாலை. பிற மக்களின் அனுபவங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். தனித்திறமை வாய்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் குறையொன்றுமில்லை. நம்மை நாமே மேதைகளாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அறியாமையால் நமக்கு நாமே தீங்கிழைத்து விடவும் கூடாது.

 

உலகிலேயே மிகப்பெரிய அறிஞன் நான் தான் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது. நம்முடைய துறையில் நாம் அனுபவம் மிக்கவர்கள் தான். ஆனால்தத்தமது துறைகளில் மற்றவர்களுக்கு இருக்கும் அனுபவங்களை மதிப்பதும் நம்மீது கடமையாகும்.

 

சிந்தித்து ஒரு திட்டத்தில் இறங்குகிற போது சில சமயங்களில் நாம் சிந்தித்ததற்கு மாற்றமாக காரியங்கள் நடக்கலாம். அல்லது நாம் சிந்தித்ததை விட நல்ல திட்டங்கள் தோன்றலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் மறு யோசனை என்பது ஏற்கப்பட வேண்டியது ஒரு இயல்பாகும்.

 

முன் யோசனையின்றி செய்து விட்ட ஒரு காரியத்தால் ஏற்படும் தீமைகளில் இருந்து விலகிக் கொள்வதற்காக மறு யோசனைக்கு செல்வது மானுடக் கடமையாகும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ يَمِينَكَ، وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ

நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களது சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)திற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள். அறிவிப்பாளர்:- அப்துர்ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-7146, முஸ்லிம்-3386

 

நன்மையின் பாதையில் இரண்டாவது யோசனைக்கான பாதையை திறந்துவிடும் அற்புதமான நபிமொழி இது.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு நெருக்கடியில் தேன் சாப்பிட மாட்டேன் என சத்தியம் செய்தபோது, அல்லாஹ் அதை மாற்றிக் கொள்ளுமாறு கூறினான். உடனே நபியவர்கள் மாற்றிக்கொண்டார்கள்.

 

சாதகம் பாதகமின்றி

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு திராட்சைத் தோட்டத்தினுள் ஆடுகள் புகுந்து அங்கு முளைத்திருந்த திராட்சைக்கொலைகளை நாசப்படுத்தி விட்டது. அது தொடர்பாக தொடர்பான வழக்கு நபி தாவூத் (அலை) அவர்களிடம் வந்தபோது அன்னார் அந்த ஆடுகள் பாதிக்கப்பட்ட தோட்ட உரிமையாளருக்குரியவை என்று தீர்ப்பளித்தார்கள்.

 

அப்போது (அன்னாரின் மகனார்) சுலைமான் (அலை) அவர்கள் ( غَيرُ هَذَا يَا نَبِيَّ اللَّهِ ) "அல்லாஹ்வின் தூதரே! இந்த வழக்கில் வேறு விதமாக தீர்ப்பளிக்கலாம்" என்றார். ( وَمَا ذَاكَ؟ ) அது என்ன?” என்று தாவூத் (அலை) அவர்கள் கேட்க, சுலைமான் (அலை) அவர்கள், ( تَدْفَعُ الْكَرْمَ إِلَى صَاحِبِ الْغَنَمِ، فَيَقُومُ عَلَيْهِ حَتَّى يَعُودَ كَمَا كَانَ ) "திராட்சைத் தோட்டத்தை ஆடுகளின் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அத்தோட்டம் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அதை (முறையாக செப்பனிட்டு) அவர் பராமரிப்பார்.

 

( وَتَدْفَعُ الْغَنَمَ إِلَى صَاحِبِ الْكَرْمِ فيُصيب مِنْهَا حَتَّى إِذَا كَانَ الْكَرْمُ كَمَا كَانَ ) அவ்வாறே ஆடுகளை தோட்ட உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தோட்டம் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அந்த ஆடுகளிலிருந்து அவர் பயனடைந்து கொள்ளலாம்" என்று கூறினார்.

 

(அவ்வாறே தீர்ப்பளிக்கப்பட்டது. தோட்டமும் பழைய நிலையை அடைந்தது. பின்னர்) தோட்டம் அதன் உரிமையாளரிடமும் ஆடுகள் அதன் உரிமையாளரிடமும் அளிக்கப்பட்டன.  நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்

 

இத்தீர்ப்பின் மூலம் தோட்டக்காரரின் இழப்புக்கு ஈடு  கிடைத்துவிடும். தோட்டமும் பழைய நிலையிலேயே அவரது கைக்கு வந்துவிடும். ஆடுகளின் உரிமையாளர் ஆடுகள் ஏற்படுத்திய சேதத்தைச் சீர்படுத்தி, சேதத்திற்கான இழப்பீட்டையும் வழங்கிவிடுகிறார். அத்துடன் ஆடுகளும் அவரது கைக்குத் திரும்பி வந்துவிடும்.

 

இந்நிகழ்ச்சியைப் பற்றியே தலைப்பில் காணும் திருவசனங்கள் (21:78,79) விவரிக்கிறது.

 

நம்முடைய காரியங்களில் மாற்று அபிப்பிராயம் மகன் சொன்னாலென்ன! மற்றவர்கள் சொன்னாலென்ன! சொல்லப்பட்டது சரியாக இருந்தால் அதை எடுத்து செயல்படுத்துவதுதானே புத்திசாலித்தனமாகும்.

 

நற்செயல் புரியட்டும்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் நாங்கள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடுநேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் நபியவர்களைத் தேடிக்கொண்டே சென்றேன். இறுதியில் பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு அன்சாரித்தோழரின் தோட்டத்தில் நபியவர்கள் இருப்பதைக் கண்டு, அங்கு சென்றேன்.

 

அப்போது நபியவர்கள், "அபூஹுரைராவா?" என்று கேட்டார்கள். நான், "ஆம், நாயகமே!" என்றேன். "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். "நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடுநேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நாங்கள் பீதியுற்றோம். நான்தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவேதான் உங்களைத் தேடி இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னேன்.

 

அப்போது நபியவர்கள், "அபூஹுரைரா!" (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, ( اذْهَبْ بِنَعْلَىَّ هَاتَيْنِ فَمَنْ لَقِيتَ مِنْ وَرَاءِ هَذَا الْحَائِطِ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ فَبَشِّرْهُ بِالْجَنَّةِ ) "இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!" என்று கூறினார்கள்.

 

நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அபூஹுரைரா, இவை என்ன காலணிகள்?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "இவை நபியவர்களுடைய காலணிகள் என்று கூறிவிட்டு, மேலும் நபியவர்கள் கூறிய நற்செய்தியை எடுத்துரைத்தேன்.

 

உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். "அபூஹுரைரா! திரும்பிச் செல்லுங்கள்" என்று சொன்னார்கள். உடனே நான் நபியவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் நபியவர்கள், ( مَا لَكَ يَا أَبَا هُرَيْرَةَ ) "அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.

 

நான், நடந்ததை விவரித்தேன். அப்போது நபியவர்கள், ( يَا عُمَرُ مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ ) "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "நாயகமே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இவ்வாறெல்லாம் கூறி நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "ஆம்" என்றார்கள்.

 

உமர் (ரலி) அவர்கள், ( فَلاَ تَفْعَلْ فَإِنِّي أَخْشَى أَنْ يَتَّكِلَ النَّاسُ عَلَيْهَا فَخَلِّهِمْ يَعْمَلُونَ ) "அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், ( فَخَلِّهِمْ ) “(ஆம்! நீங்கள் சொல்வதும் சரிதான்) அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)" என்று சொன்னார்கள்.   நூல்:- முஸ்லிம்-52

 

நம்முடைய சில வார்த்தைகளை பிறர் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும் எனும்போது அவ்வார்த்தைகளை தவிர்த்துக்கொள்வதும், அல்லது அவ்வார்த்தைகளை மாற்றிக்கொள்வதும் தவறல்ல

 

ஓர் புதிய சட்டமியற்றிய பிறகு அதிலுள்ள பாதகங்கள், தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனே அதை ஒப்புக்கொண்டு மாற்றிக்கொள்ளும் பக்குவம் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும்.

 

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, ( مَا يَصْنَعُ هَؤُلاَءِ ) "இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்" என்று கூறினர். அப்போது நபியவர்கள், ( مَا أَظُنُّ يُغْنِي ذَلِكَ شَيْئًا ) "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை" என்று சொன்னார்கள்.

 

நபியவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)

 

இது குறித்து நபியவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபியவர்கள், ( إِنْ كَانَ يَنْفَعُهُمْ ذَلِكَ فَلْيَصْنَعُوهُ فَإِنِّي إِنَّمَا ظَنَنْتُ ظَنًّا فَلاَ تُؤَاخِذُونِي بِالظَّنِّ وَلَكِنْ إِذَا حَدَّثْتُكُمْ عَنِ اللَّهِ شَيْئًا فَخُذُوا بِهِ فَإِنِّي لَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ ) "அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்து கொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில்,  நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்" என்று சொன்னார்கள். நூல்:- முஸ்லிம்-4711

 

அப்துல்லாஹ் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. யூதர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றீர்கள். "நீங்கள், மாஷா அல்லாஹ் ஷிஃத்த (அல்லாஹ் நாடியதும் நீ நாடியதும்) என்று சொல்கின்றீர்கள். 'வல்கஅபத்தி' (கஅபாவின் மீது சத்தியமாக) என்று கூறுகின்றீர்கள். எனச் சொன்னார். (ஆகவே அவர் இவ்வாறு சொல்லிவிட்டதால்) அண்ணலார், ( إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا ‏ وَرَبِّ الْكَعْبَةِ ‏‏ ‏.‏ وَيَقُولُونَ ‏"‏ مَا شَاءَ اللَّهُ ثُمَّ شِئْتَ )  (இனி என் தோழர்களாகிய) அவர்கள் சத்தியம் செய்தால், 'வ ரப்பில் கஅபத்தி' (கஅபாவின் இறைவன் மீது சத்தியமாக) என்றும் 'மாஷா அல்லாஹ் ஸும்மா ஷிஃத்த' (அல்லாஹ் நாடியதும் பின்னர் நீ நாடியதும்) என்றும் சொல்லுமாறு உத்தரவிட்டார்கள். நூல்:- நஸாயீ-3713

 

அல்லாஹ் நாடியது நீ நாடியதும் என்று ஒரு மனிதரை பார்த்து சொன்னால் அவர் அல்லாஹ்வுடன் அம்மனிதரை கூட்டாக்கி விடுகிறார்; அதனால் அல்லாஹ்வுடன் இணை கற்பித்து விடுகிறார்;  படைப்பினங்களுடன் படைத்தவனை சமமாக ஆகிவிடுகிறார். இது இறைவன் மன்னிக்காத பெரும் பாவம் ஆகும். சொற்களால் கூட இறைவனுக்கு இணை கற்பிக்கக்கூடாது. இணைவைத்தலின் தீமை குறித்து யூத, கிறிஸ்தவர்களும் அறிந்திருந்தனர். எனினும் அவர்கள் அதை செய்து கொண்டிருந்தனர்.

 

அவ்வாறு நேர்வழி எங்கிருந்து கிடைத்தாலும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த நபிமொழி உணர்த்துகிறது. யூதர் ஒருவர் தனது தோழர்களின் வார்த்தையில் உள்ள தவறை கூறியவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். அதனை திருத்திக் கொள்ளுமாறும் உத்தரவிட்டார்கள்.

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறி யதாவது. (அகழ் போர் சமயம் மதீனா மக்கள் கடுமையான சோதனைக்குள்ளானபோது) கத்ஃபான் குடும்பத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே! மதீனாவின் பேரீச்சம் பழங்களில் பாதியை எங்களுக்கு தந்து விடுங்கள்" என்று கேட்டார்.

 

அதற்கு அண்ணலார், சற்று பொறுங்கள் என்று கூறிவிட்டு சஅது பின் முஆது (ரலி), சஅது பின் உபாதா (ரலி), சஅது பின் ரபீஃ (ரலி), சஅது பின் கைஸமா (ரலி), சஅது பின் மஸ்ஊது  (ரலி) ஆகியோரை அழைத்து, ( اِنِّي قَد عَلِمتُ اَنَّ العَرَبَ قَد رَمَتكُم عَن قَوسٍ وَاحِدَة وَاِنَّ الحَارِثَ سَاَلَكُم تُشَاطِرُوهُ تَمَرَالمَدِينَةِ ) “அரபியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களைத் தாக்க உள்ளார்கள் என்பதை நிச்சயம் நான் அறிவேன். ஹாரிஸ் (மற்றவருடன் சேர்ந்து உங்களை தாக்காமல் இருக்க) மதீனாவின் பேரீச்சம் பழங்களில் பாதியை உங்களிடம் கேட்கிறார்.  

 

( فَاِن اَرَدتُم اَن تَدفَعُوهُ عَامَكُم هَاذَا فِي اَمرِكُم بَعدُ ) “நீங்கள் கொடுத்தால் அவர் தன் கூட்டத்துடன் ஒதுங்கிக் கொள்வார். நீங்கள் விரும்பினால் இந்த ஆண்டே அதை கொடுத்துவிடுங்கள். இதற்குப் பின் உள்ள ஆண்டுகளில் உங்கள் நிலையை கவனித்து நடந்து கொள்ளலாம்" என்று கூறினார்கள். உடனே அவர்கள், நாயகமே! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துள்ள (வஹீ எனும்) இறைச்செய்தி என்றால் நாங்கள் அதற்கு வழிபடுகிறோம். அல்லது இது உங்களின் கருத்து என்றால் அதையும் நாங்கள்  பின்பற்ற தயாராக உள்ளோம். எனினும் எங்கள் (நலனின்) மீது அக்கறை கொண்டு நீங்கள் அவ்வாறு சொல்கிறீர்களா? என்று வினவினர்.

 

(நம்முடன் அல்லாஹ் இருக்கிறான். பயப்படத்தேவையில்லை என்றே எண்ணுகிறோம். ஆகவே,) நம்மை அவர்கள் (இவ்வாறெல்லாம்) நிர்பந்தித்து ஒரு பழம் கூட பெற்றுக்கொள்ள முடியாது. வியாபாரத்தின் மூலமோ விருந்தினரானாலோ தவிர என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

 

உடனே அண்ணலார், "அந்த இதுதான் உங்கள் விருப்பம் என்றால் பரவாயில்லை. நான் உங்கள் (நலனின்) மீது அக்கறை கொண்டு (எதிரிகளின் படை பலத்தை கலைத்திட நாடி) தான் இவ்வாறு சொன்னேன். என்று கூறிய பிறகு,  ( هُوَ ذَا تَسْمَعُوْنَ مَا يَقُوْلُوْنَ ) “(ஹாரிஸே!) இவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டீரா?"  என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் முஹம்மதே! எங்களுக்கு மோசடி செய்துவிட்டீர் என்று கூறினார். நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்- 54

 

சில நேரங்களில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய கருத்தைவிட தன் தோழர்களின் கருத்து சரியானதாகப் பெற்றுக் கொண்டபோது உடனடியாக அதனை செயல்படுத்தினார்கள். தன்னுடைய தோழர்கள் கூறிய யோசனைகளைப் புறக்கணிக்கும் விதமாக குற்றம் குறை எதையும் அதில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காணவில்லை.

 

மாற்றப்படாது

 

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனைவிட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். திருக்குர்ஆன்:- 33:36

 

பெருமானாரின் தீர்ப்பை ஏற்க மறுத்த முஸ்லிமுக்கு உமர் (ரலி) மரண தண்டனை கொடுத்தார்கள்.  ஒரு முஸ்லிமை உமர் எப்படி கொல்லலாம் என அவருடைய குடும்பத்தவர்கள் சர்ச்சை செய்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் விசயத்தில் உமர் (ரலி) அவர்களை நிரபராதியாக்கும் வகையில் அல்லாஹ் மேற்காணும் திருவசனத்தை அருளினான்.

 

ஆயிஷா ரலி) அவர்கள் கூறியதாவது. (மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருடிவிட்டாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'நபியவர்களின் செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா-ரலி அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) நபியவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள்.

 

அதற்கு நபியவர்கள், ( إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَايْمُ اللَّهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ ابْنَةَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا ) “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்' என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமானவன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3475 முஸ்லிம்-3485

 

அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் வழங்கிய தீர்ப்புகளில் திருத்தம் அல்லது மாற்று ஆலோசனை தேவைப்படும் அளவுக்கு அது பலகீனமானது அல்ல. அந்தத் தீர்ப்புகள் திருத்தப்படாத அளவுக்கு மிகவும் பலமானது. 

 

பயன்படாத நிலம்

 

ஆபிதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஜனாதிபதி அபூபக்ர்-ரலி அவர்கள் காலத்தில் உமர்-ரலி அவர்கள் ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராக இருந்தார்கள்.)

 

உயைனா பின் ஹிஸ்ன் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) ஆகிய இருவரும் ஒரு நிலத்தைத் தங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டு ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களை சந்திக்க வந்தனர். வந்தவர்கள், "ஜனாதிபதி அவர்களே! எங்களது இருப்பிடத்திற்கு அருகில் பாறைகள் நிறைந்த எதற்கும் பயன்படாத நிலம் ஒன்று இருக்கிறது. அந்த நிலத்தை பண்படுத்தி, எங்களின் தேவைக்கு நாங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றுச் செல்வதற்காக உங்களிடம் வந்திருக்கிறோம்" என்றனர்.

 

அப்போது ஜனாதிபதி அவர்கள் தம்மைச் சுற்றி இருந்தவர்களிடம் கலந்தாலோசனை செய்தனர். (அப்போது அவர்கள்,  "எதற்கும் பயன்படாத நிலத்தை பண்படுத்தி பயன்படுத்திக்கொள்வது நல்லது தானே" என்று அங்கிருந்தவர்கள் ஆலோசனை கூறினர்.) எனவே, ஜனாதிபதி அவர்கள் அந்த ஆலோசனையை ஏற்று, அவர்கள் கேட்டுக் கொண்டபடி அந்த நிலத்தைத் தருவதாகவும் வாக்குறுதி அளித்து அதற்கான பத்திரம் ஒன்று எழுதுமாறும்,  அப்போது உமர் (ரலி) அவர்கள் அங்கு இல்லாததால் அவர் வந்ததும் அவரிடமும் சாட்சி கையெழுத்து வாங்கிக் கொள்ளுமாறும்  கூறிவிட்டார்கள்.

 

வந்தவர்கள் உமர் (ரலி) அவர்களை சந்தித்து நடந்தவற்றை எடுத்துரைத்து, மேற்படி நிலத்தை எங்களுக்கு தருவதாக ஜனாதிபதி அவர்கள் ஒப்புதல் அளித்து விட்டார்கள். உங்களிடமும் கையெழுத்து பெற்றுக்கொள்ளும்படி ஜனாதிபதி அவர்கள் கூறியதால் நீங்களும் இதில் ஒரு சாட்சிக் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

 

அந்த பத்திரத்தைப் படித்துப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், "இந்த பத்திரத்தில் என்னால் கையெழுத்து போட முடியாது" என்று கூறி அதனை திருப்பி அனுப்பி விட்டார்கள்.

 

பிறகு உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் வந்து, "ஜனாதிபதி அவர்களே! ( اَرضٌ هِيَ لَكَ خَاصَّةٌ اَم هِيَ بَينَ المُسلِمِينَ عَامَّةٌ؟ ) இந்த நிலம் உங்களுடைய சொத்தா?  அல்லது முஸ்லிம் சமுதாயத்தின் சொத்தா? என்று கேட்டார்கள். ஜனாதிபதி அவர்கள், ( بَل هِيَ بَينَ المُسلِمِينَ عَامَّةٌ )  "இது என்னுடையதல்ல. இது முஸ்லிம் சமுதாயத்தின் சொத்து" என்றார்கள்.

 

பின்னர் உமர் (ரலி) அவர்கள், "இது முஸ்லிம் சமுதாயத்தின் சொத்தாக இருக்க, நீங்கள் விரும்பியவாறு எப்படி தானமாகக் கொடுக்கலாம்? வந்தவர்கள் அதனைக் குத்தகைக்கு வேண்டுமானால் எடுத்துக் கொண்டு போகட்டும். ஆனால் அது என்றைக்கும் அரசின் பொதுச் சொத்தாக இருக்கட்டும்" என்றார்கள்.

 

ஜனாதிபதி அவர்கள் வந்தவர்களை நோக்கி, "உமர் (ரலி) அவர்கள் உண்மையை சொன்னார். நான் சட்டத்தை மீற முடியாது" என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள். நூல்:- கன்ஸுல் உம்மால்

 

நாம் ஒன்றை முடிவு செய்துவிட்ட பிறகு, நம்மீது அக்கறையுள்ள ஒருவர் அதை செய்ய வேண்டாமென்று தடுத்தால் உடனடியாக நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிடிவாதத்தைவிட அதிகமாக மக்களை அழிவில் தள்ளியது வோறொன்றுமில்லை.                                                 

 

மணக்கொடை விஷயத்தில்

 

மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் ஏறி (பின்வருமாறு) உரை நிகழ்த்தினார்கள். ( أَيُّهَا النَّاسُ، مَا إِكْثَارُكُمْ فِي صُدُق النِّسَاءِ وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ وأصحابه وإنماالصدقات فِيمَا بَيْنَهُمْ أَرْبَعُمِائَةِ دِرْهَمٍ فَمَا دُونَ ذَلِكَ. وَلَوْ كَانَ الْإِكْثَارُ فِي ذَلِكَ تَقْوًى عِنْدَ اللَّهِ أَوْ كَرَامَةً لَمْ تَسْبِقُوهُمْ إِلَيْهَا. فَلا أعرفَنَّ مَا زَادَ رَجُلٌ فِي صَدَاقِ امْرَأَةٍ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ ) மக்களே! பெண்களுக்கு வழங்கப்படும் மணக்கொடையை ஏன் உயர்த்துகிறார்கள்? அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் நானூறு வெள்ளிக்காசுகள் அல்லது அதை விடக் குறைவான வெள்ளிக் காசுகளை மணக்கொடையாக அளித்து வந்தார்கள். இதைவிடவும் மணக்கொடையை உயர்த்துவது அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரிய செயலாகவோ (உலகின்) கண்ணியமான நடைமுறையாகவோ இருந்திருந்தால் இந்த விஷயத்தில் அவர்களை நீங்கள் முந்தியிருக்க முடியாது. நானூறு வெள்ளிக்காசுகளைவிட அதிகமாக எவரும் எந்தப் பெண்ணுக்கும் மணக்கொடை வழங்கவில்லை என்பதை நான் உறுதியாக அறிவேன்.

 

உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு சொற்பொழிவு மேடையிலிருந்து கீழே இறங்கியபோது குரைஷிப் பெண் ஒருவர் அவர்களை இடைமறித்து, ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، نَهَيْتَ النَّاسَ أَنْ يَزِيدُوا النِّسَاءَ صَدَاقَهُمْ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ؟ ) "இறைநம்பிக்கையாளரகளின் தலைவரே! நானூறு வெள்ளிக்காசுகளைவிட அதிகமாக பெண்களுக்கு மணக்கொடை அளிக்கக்கூடாது என்று மக்களுக்கு நீங்கள் உத்தரவிட்டுள்ளீர்கள் அல்லவா?" என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "ஆம்" என்றார்கள்.

 

உடனே அந்தப் பெண், أَمَا سَمِعْتَ اللَّهَ يَقُولُ: ﴿وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا ) "அவளுக்கு நீங்கள் ஒரு பொருள் குவியலையே (மஹராகக்) கொடுத்திருந்தாலும் (4:20) என்று அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?" என வினவினார்.

 

அப்போது உமர் (ரலி) அவர்கள், ( اللَّهُمَّ غَفْرًا، كُلُّ النَّاسِ أَفْقَهُ مِنْ عُمَرَ ) "இறைவா! மன்னித்துவிடு! உமரைவிட மக்கள் அனைவருமே மார்க்கத்தை நன்றாக புரிந்துள்ளார்கள்" என்று கூறிவிட்டு, மீண்டும் சொற்பொழிவு மேடையில் ஏறி, ( إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ أَنْ تَزِيدُوا النِّسَاءَ فِي صَدَاقِهِنَّ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ، فَمَنْ شَاءَ أَنْ يُعْطِيَ مِنْ مَالِهِ مَا أَحَبَّ ) "மக்களே! பெண்களின் மணக்கொடையை நானூறு வெள்ளிக்காசுகளைவிட உயர்த்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். ஆனால், நாடியவர் தமது விருப்பப்படி தமது பொருளில் இருந்து (எவ்வளவு வேண்டுமானாலும்) கொடுக்கட்டும்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம்-20, முஸ்னது அபீயஅலா, பைஹகீ, கன்ஸுல் உம்மால்

 

திருமணத்தின்போது பெண்ணுக்கு கொடுக்கப்படும் (மஹர் எனும்) மணக்கொடை தொகையில் உச்ச வரம்பு விதித்து சட்டம் இயற்றிய உமர் (ரலி) அவர்கள்,  ஒரு பெண்ணின் சுட்டிக்காட்டலுக்கு இசைந்து தன் அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்கள் என்கிறது இஸ்லாமிய வரலாறு.

 

பெண்களுக்குண்டான (மஹர் எனும்) மணக்கொடையை இஸ்லாம் சரியான முறையில் கொடுக்கச் சொல்கிறது. அதனை ஒரு ஜனாதிபதி நினைத்தாலும் கூட மாற்றி அமைக்கின்ற உரிமையோ, சக்தியோ கிடையாது என்று இச்சம்பவத்தின் மூலம் உணருகின்ற அதே வேளையில் ஒரு ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகவும் தன் கருத்தை பதிவு செய்கின்ற உரிமையை ஒரு சாதாரண பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்குகிறது என்பதே ஆகும்.

 

அரசு உதவித்தொகை

 

ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அழைத்துகொண்டு இரவு நேரங்களில் நகர்வலம் சென்றிருந்தபோது ஒரு குழந்தை இடைவிடாது அழும் சப்தம் கேட்டது.  உமர் (ரலி) அவர்கள் அந்தக் இருட்டில் அழுதுகொண்டிருந்த குழந்தையின் அருகில் சென்று அதன் தாயிடம், “அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள். குழந்தை இப்படிக் கதறி அழுகிறதே. சரியாகக் கவனித்துக் கொள்ளுங்கள்என்று அறிவுறுத்திவிட்டு வந்தார்கள்.

 

சிறிது நேரம் கழித்து மீண்டும் குழந்தை அழும் சப்தம் கேட்டது. தாய் சமாதானப்படுத்தவில்லையோ, குழந்தை கேட்கவில்லையோ தெரியாது, ஆனால் கடுமையான அழுகை சப்தம். வேகமாய்க் கிளம்பி குழந்தையின் அருகில் சென்ற உமர் (ரலி) அவர்கள் அதன் தாயிடம், “என்ன அம்மா உன் குழந்தை இரவு முழுக்க அழுது கொண்டிருக்கிறது ஏன்? நீ அதைச் சமாதானப்படுத்தாமல் இருக்கிறாயே. என்ன ஆனது உனக்கு?” என்று கோபத்துடன் கேட்டார்கள்.

 

கேட்பவர் ஜனாதிபதி என்று அறிந்திராத அந்தப் பெண், “ஓ அல்லாஹ்வின் அடிமையே! குழந்தை தாய்ப்பால் கேட்கிறது. நான் கொடுக்காமல் அவன் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறேன். அதை ஏற்காமல் அழுது கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லைஎன்றாள்.

 

உமர் (ரலி) அவர்கள், “பசிக்கும் குழந்தைக்கு தாய்ப் பாலூட்ட மறுக்கிறாயே! ஏன்?” என்ன அநியாயம்?” என்று வினவினார்கள். அந்தப் பெண், “பால்குடி மறக்காத குழந்தைகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுவதில்லையென ஜனாதிபதி சட்டமியற்றியுள்ளார். அதனால்தான் நான் அவனுக்குப் பால்குடி மறக்கப் பழக்கப்படுத்துகிறேன்என்றாள்.

 

அப்பொழுதெல்லாம் (பைத்துல்மால் எனும்) அரசின் கருவூத்திலிருந்து மக்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. உதவித்தொகை பெறத் தகுதியுள்ள குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அது வழங்கப்பட்டது. ஆனால் கைக்குழந்தைகள் இருப்பின் அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் மறக்கச் செய்யப்படும் வரை தனி நபராகக் கணக்கிடக் கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் சட்டமியற்றி இருந்தார்கள். அதனால் ஏழு பேர் உள்ள குடும்பத்தில் பால்குடி வயதிலுள்ள குழந்தை ஒன்று இருந்தால் அதற்கு உதவித் தொகையில் பங்கு கிடையாது.

 

அது தானே சட்டம்? இருக்கட்டும் விரைவில் என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மறக்கச் செய்கிறேன். அதன் பிறகு அவனுக்கும் ஒரு பங்கு கிடைக்கும்என்பது அந்தத் தாயின் திட்டம்.

 

அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டுத் திகைத்துப்போன உமர் (ரலி) அவர்கள், “உன் குழந்தைக்கு என்ன வயதாகிறது?” என்றார்கள்.  சில மாதங்கள் ஆகியிருந்தனஎன்றாள். உமர் (ரலி) அவர்கள் அந்தப் பெண்ணிடம், “என்ன கேடு உனக்கு? ஏன் இப்படி பால் நிறுத்த அவசரப்படுகிறாய்? அப்படிச் செய்யாதேஎன்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

 

உமர் (ரலி) அவர்கள் அன்றைய ஃபஜ்ரு தொழுகையை முடித்தபிறகு, “உமருக்கு வந்த கேடே! இப்படி எத்தனை முஸ்லிம் குழந்தைகளை அவர் கொன்றிருக்கிறாரோ தெரியவில்லையே?” என்று அங்கலாய்த்தவர்களாக தனது பணியாள் ஒருவரை அழைத்து, நீர் மக்களுக்கு, “இனிமேல் குழந்தைகளுக்குப் பால்குடி மறக்கச் செய்வதில் யாரும் அவசரப்படக்கூடாது. குடும்பங்களில் பிறந்துள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இனி அரசின் உதவித்தொகை வழங்கப்படும்.என்று அறிவிப்பீராக! என்றார்கள். அவ்வாறே அறிவிக்கப்பட்டது.

 

உத்தரவு எழுத்தில் வடிக்கப்பெற்று அனைத்துப் பகுதி நிர்வாகிகளுக்கும் ஆளுநர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு குழந்தையைப் பற்றிய தகவலும் அரசாங்கப் பதிவுகளில் குறித்துக் கொள்ளப்பட்டு, அனைவருக்கும் (பைத்துல்மால் எனும்) அரசு கருவூலத்திலிருந்து நிதி உதவி அளிக்க ஏற்பாடானது.

 

அவையெல்லாம் தேர்தல் வாக்குறுதித் திட்டங்களல்ல. இறை பயத்தில், இறை உவப்பிற்காக மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டவை. எனவே அன்று நீதி தழைத்தது. மக்கள் செழித்தனர்!

 

மணவிலக்கு நிகழாது

 

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் பாடச்சாலை மிகவும் மரியாதையானதாகவும், பல வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிலும் இடமாகவும்,  ஒவ்வொரு நாட்டுக்காரருக்கும் தனித்தனியே பாடங்கள் நடைபெறும் இடமாகவும் இருந்தது. இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் சிறுவயது காரணமாக அவர்களுக்கு அங்கு போதிய அந்தஸ்து கிடைக்கவில்லை.

 

அச்சமயத்தில் ஒருவர் மாலிக் (ரஹ்) அவர்களிடம் வந்து, “நான் என் மனைவியோடு பேசிக் கொண்டிருந்தேன். அவள் தன்னுடைய அழகை பெருமையடித்து நான் நிலவை விட அழகானவள் என்று சொன்னாள்.  எனக்கு கோபம் வந்து, அப்படி இல்லையெனில் நீ தலாக் (மணவிலக்கு) ஆகிவிடுவாய் என்று சொல்லி விட்டேன். என்ன செய்வது?” என்று கேட்டார்.

 

மாலிக் (ரஹ்) அவர்கள், “தலாக் நிகழ்ந்து வி்ட்டது  என்றார்கள். அப்போது அங்கிருந்த ஷாபிஈ (ரஹ்) அவர்கள், “இதற்கு நான் வேறு தீர்வை கூற முடியும் என்று கூறிவிட்டு, அல்லாஹ்தஆலா மனித வர்க்கத்தைத்தான்  அழகிய படைப்பாக படைத்துள்ளேன்’ (95:4) என்று கூறுகின்றான். எனவே தலாக் நிகழாதுஎன்றார்கள். இந்தத் தீர்ப்பை மாலிக் (ரஹ்) அவர்கள் ஏற்றுக்கொண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள். 


இந்நிகழ்வுக்குப்பின் இமாம் மாலிக் ( ரஹ்) அவர்களின் பாடச்சாலையில் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டார்கள்.

 

நமது செயல்பாட்டின் தவறைச் சுட்டிக்காட்டப்படும்போது, அல்லது  பிரச்சனைகளுக்கு மாற்று வழியில் தீர்வு இருப்பதைச் சுட்டிக்காட்டப்படும்போது, குறைகள் விமர்சிக்கப்படும்போது, அது உண்மைதானா என்பதை பொறுப்பிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் பரிசீலிக்க வேண்டும்; உண்மை என்றால், மனப்பூர்வமாக அதை ஏற்று தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்; குற்றம் சொல்வோரிடம் பகைமை பாராட்டக் கூடாது.

 

பிறரின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய நற்பண்புள்ளவர்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...