தொடரும்...
قال الله تعالي : فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا
قال رسول الله صلي الله عليه وسلم : لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ
يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ
நமது எண்ணமே முன்னேற்றத்தின் ஆணிவேர். எண்ணம் காந்த சக்தி கொண்டது. வசீகரத் தன்மை கொண்டது. ஆகவே நமது எண்ணங்கள் அதன் விளைவுகளைப் புற சூழ்நிலையில் உருவாக்கும். அது நமது வாழ்க்கையையும் நமது சந்ததியின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து விடும். இதற்காகத்தான் இஸ்லாம் சிறுவயது முதல் குழந்தைகளுக்கு இறைசிந்தனையை போதிக்கும் கல்வியை கட்டாயப் பாடமாக்கியிருக்கிறது. நல்லெண்ணம் இளமைப் பருவத்திலேயே தோன்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
எண்ணத்தில் தீயவைகள் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீய எண்ணம் இரத்தத்தை மாசுபடுத்தி உடலை மட்டுமின்றி நமது வாழ்க்கையையும், நமது சந்ததியினரின் வாழ்க்கையையும் மாசுபடுத்தி விடும். வாழ்க்கையின் வெற்றிக்கும், நிம்மதிக்கும் நல்லெண்ணங்கள் தான் சிறந்த வழி.
فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ
جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ
هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا
பின்னர் (மர்யம் -அலை) அவர் தம் குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் மர்யமே! நீ விநோதமான காரியத்தைச் செய்து விட்டாய் என்று கூறினார்கள். ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராக இருந்ததில்லை. உன் தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை. (என்றும் கூறினார்கள்.) திருக்குர்ஆன்:- 19:27,28
திருக்குர்ஆன் ஆமோதிக்கிறது
அன்னை மர்யம் (அலை) அவர்கள் குழந்தை ஈசா (அலை) அவர்களைப் பெற்றெடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் வந்த போது கணவர் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்தது குறித்துக் கேள்விக்குமேல் கேள்வி எழுப்பினர். மேலும் மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.
உனது பெற்றோர் நடத்தைக் கெட்டவர்களாக இல்லையே! ஆனால் நீ மட்டும் நடத்தைக் கெட்டவளாக ஆகிவிட்டாயே! இந்த இழிகுணம் உன் பெற்றோரிடம் இல்லாத போது உன்னிடம் மட்டும் எப்படி வந்தது? என்று கடுமையாக விமர்சித்தனர். அந்த மக்கள் திட்டித்தீர்த்த வார்த்தைகளில் பெற்றோரிடம் உள்ள குணம் தான் பிள்ளைகளிடம் வரும் என்ற கருத்தில் உள்ள வாசகத்தை மட்டும் தலைப்பில் உள்ள திருவசனம் பேசுகிறது.
காரணம் பெற்றோரிடம் உள்ள குணம் பிள்ளைகளிடம் பிரதிப்பலிக்க வாய்ப்புண்டு என்பதை திருக்குர்ஆன் ஆமோதிகிறது.
அம்மக்கள் அன்னை மர்யம் (அலை) அவர்கள் மீது வீண்பழி சுமத்தினர். ஆனால் அதற்காக அவர்கள் பயன்படுத்தி வார்த்தை நடைமுறையில் உள்ள யதார்த்தமான வார்த்தையே ஆகும்.
நம்முடைய உடல் அமைப்பு, பழக்க வழக்கம், குணம், நோய் இவைகள் நம்முடைய பிள்ளைகளிடம் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதே அறிவியலின் முடிவு.
நூலைப்போல சேலை தாயைப்போல பிள்ளை என்றும், அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்றும் கிராமத்தில் சொல் வழக்கு உண்டு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெற்றோரின் வார்ப்புத்தான் பிள்ளை. நூல்:- தைலமீ
மரபணு இனக்கீற்று அமிலம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (கிராமவாசியான) ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! (வெள்ளை நிறமுடைய) எனக்கு கறுப்பு நிறத்தில் மகன் பிறந்துள்ளான். (அவன் எப்படி எனக்கு பிறந்தவனாக இருக்க முடியும்?)" என்று (சாடையாகக்) கேட்டார். அதற்கு அண்ணலார், ( هَلْ لَكَ مِنْ إِبِلٍ ) "உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?" என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம் என்றார்.
அண்ணலார், ( مَا أَلْوَانُهَا ) "அதன் நிறம் என்ன?" என்று வினவினார்கள். அவர் "சிவப்பு" என்று பதிலளித்தார். அண்ணலார், ( هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ ) "உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?" என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அண்ணலார், ( فَأَنَّى ذَلِكَ ) “(தனது தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?” என்று வினவினார்கள். அதற்கு அவர் ( لَعَلَّهُ نَزَعَهُ عِرْقٌ ) "அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்" என்று கூறினார். அண்ணலார், ( فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ ) "உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தை கொண்டிருக்கக்கூடும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ- 5305, நசாயீ-3510, அபூதாவூத்
கணவன் மனைவி மீது சந்தேகம் கொள்வதற்கு பல காரணங்கள் அமைந்தாலும் குழந்தை பிறப்பும் ஒரு பெரும் காரணமாக அமைந்து விடுகிறது. கணவனும் மனைவியும் சிவப்பு நிறத்தில் இருப்பார்கள். குழந்தையோ நேர்மாறாக கறுப்பு நிறத்தில் பிறந்திருக்கும். அதனால் கணவன் மனைவியை சந்தேகம் கொள்வது முறையல்ல. காரணம் இவர்களின் மூதாதையர்களில் யாரேனும் ஒருவரின் நிறம் இந்த குழந்தைக்கு வந்திருக்கலாம். மனிதனின் உடல் அமைப்பு மற்றும் நிறம் பரம்பரை வழியாக தொடரக் கூடியது தான் அதில் சந்தேகமில்லை.
குழந்தை பிறப்பின் மூலம் மனைவியின் மீது சந்தேகத்தில் இருந்த ஒரு நபித்தோழர் அறிவுஜீவியான அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேள்வி கேட்கிறார். அவர் நிறைய ஒட்டகங்கள் வைத்துள்ள ஓரளவு வசதியானவர். அவருக்கு புரியும் வகையில் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு அறிவுபூர்வமான ஒரு வாதத்தை முன் வைத்து அவரின் சந்தேக மனநிலையை அண்ணலார் நீக்கி வைத்தார்கள்.
அருமை நாயகம் (ஸல்) அவர்களும் ஜாபிர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களும் ஏறக்குறைய ஒரே சாயலில் இருப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தந்தையும் ஜாபிர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் தந்தையும் உடன் பிறந்தவர்கள்.
ஒரு தலைமுறை மாறியும் "சாயல்" ஒத்துள்ளதை அறிய முடிகிறது. பெற்றோரின் இரத்தம் மற்றும் உயிரணுக்களைக் கொண்டு பரிசோதித்தின் மூலம் ஒரு மனிதனின் மரபு வழி, நோய், குணம், உடற்கூறு ஆகியவைகளை கண்டறிய முடியும் என்பது அறிவியல் செய்தி.
உயிரினங்கள் தங்களின் உருவம், குணம் முதலியவற்றை மரபணுக்களின் மூலம் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் சந்ததியினருக்கு எவ்வாறு வழங்குகின்றன என்பதை ஆராயும் அறிவியல் துறைதான் "மரபியல்" எனப்படும் "DNA" பரிசோதனை ஆகும்.
1822இல் பிறந்த மெண்டல் கிரிகோன் ஜோஹன் என்ற அறிவியலாளரின் பரிசோதனைகளிலிருந்தே நவீன மரபியல் தொடங்கியது.
உயிரணுவில் உள்ள "DNA" என்பது "டிஆக்சி ரைபோ நியூக்ளிக் ஆசிட்" (Dexy Ribo Nucleic Acid) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது தமிழில் "மரபணு இனக்கீற்று அமிலம்" என்று கூறப்படுகிறது.
ஒரு உயிரினத்தின் பாரம்பரிய பண்புகள் இந்த DNA வில் பதிவாகி இருக்கும். இதை அடிப்படையாக வைத்து அந்த உயிரினத்தின் குண நலன்கள் உட்பட பல்வேறு உடற்கூறு தகவல்களை அறிய முடியும்.
ஆணின் விந்திலும், பெண்ணின் கருமுட்டையிலும் இருக்கின்ற உயிரணுவில் உள்ள DNA என்ற நாடாவில் மனிதனின் அமைப்புகள் செய்தி வடிவத்தில் நிறம், உயரம், உடல் உறுப்புகளின் அளவு- வடிவம், முடியின் தன்மை போன்ற டிசைன் ரீதியான தகவல்கள் முழுவதும் பத்திரமாகச் சேமிக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கைமாறிக் கொண்டு வருகிறது.
DNA ல் இருக்கும் எக்கச்சக்கமான தகவல்களை கணினியில் கொடுத்து அலசிப் பார்த்தால் நம்முடைய நீளமான மூக்கு, சின்ன காது, அகன்ற மார்பு போன்ற அத்தனை உருவ அமைப்புகளும், நம்பர் நம்பராக தெரிய வரும். அதாவது புகைப்படம் எடுத்ததுப் போல். நமது அடையாளம் முழுவதும் DNA வில் பதிவு செய்யப்பட்டு தொடர்கிறது.
அளவுக்கு அதிகமாக உண்ணுவது நமக்கு மட்டும் கெடுதி அல்ல. நமது சந்ததியினருக்கே அது கேடு விளைவிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஒருவர் அளவுக்கு அதிகமாக உண்ணும்போது அவரது உடலில் உள்ள ஜீன் மற்றும் D.N.A அமைப்புகளும் மாறுபடுகின்றன. இந்த மாற்றம் சம்பந்தப்பட்டவர்களின் சந்ததியினரான மகன், மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுவீடன் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக 1890 முதல் 1920 ஆம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் மருத்துவ குறிப்பு பட்டியலை தயார் செய்தனர். இந்த பட்டியலை ஆய்வு செய்ததில் யார் அளவுக்கு அதிகமாக உண்டு தவறான உணவு பழக்க வழக்கங்களுடன் இருந்தார்களோ அவர்களது பேரப்பிள்ளைகளுக்கு நீரழிவு மற்றும் இதயநோய் ஆபத்து அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. தகவல்:- தினத்தந்தி 30.11.2002
நீரழிவு நோய், புற்றுநோய், இதயநோய், மூலநோய் போன்ற சில நோய்களும் அந்த மரபணு வழியாக சந்ததியினரிடம் தொடரும்.
உடலிலுள்ள செல்களில் "ஸ்டெம் செல்" என்பது ஒரு வகை செல் ஆகும். உடலில் செல் எங்கு இருக்கிறதோ அந்த உறுப்பை மட்டும் வளர்க்கும். ஸ்டெம் செல் எந்த உறுப்பாகவும் வளரும் தன்மை கொண்டது.
இந்த ஸ்டெம் செல் ஒரு உறுப்பின் உள்ளே செலுத்தப்படும் போது அந்த உறுப்பின் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி அந்த உறுப்பின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. எனவே கெட்டுப்போன உறுப்புகளை மட்டும் திடமான உறுப்புகளாக மாற்ற அவ்விடத்தில் செயற்கையான ஸ்டெம் செல்களை அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கும் முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் கருப்பை, பித்தப்பை இவைகளை அறுவை சிகிச்சை செய்து நீக்குவதற்கு பகரமாக அவற்றின் கெட்டுப்போன பகுதிகளை ஸ்டெம் செல்களை நுழைத்து தகுதியாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். இதனால் பிற்காலத்தில் பரம்பரை நோய்களான நீரழிவு நோய், புற்றுநோய்களைக்கூட ஸ்டெம் செல்லை அதிகமாக உற்பத்தி செய்து குணப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
முன்னோர்களின் செயல்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ ) பனூ இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்- அலை அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்த பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி)அவர்கள் நூல்:- புகாரீ-3399, முஸ்லிம்-2917
நபி மூசா (அலை) அவர்கள் காலத்தில் பனூ இஸ்ரவேலர்கள் "தீஹ்" எனும் பாலைவனப் பகுதியில் தங்கியிருக்க நேரிட்டபோது அவர்களின் உணவுக்காக அல்லாஹ் "மன்னு-சல்வா" எனும் உயர் ரக இறைச்சி உணவை வழங்கினான். அன்றைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் இந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த நாளைக்கு எடுத்து வைக்கக் கூடாது என்பது இறைக்கட்டளை.
ஆனால் அதை மீறி அந்த இறைச்சியை அவர்கள் சேமித்து வைத்தனர். அவ்வாறு சேமித்து வைத்த இறைச்சி கெட்டு துர்நாற்றமடிக்கும் நிலை அன்றிலிருந்து தான் ஆரம்பமானது. இதையே இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டி "அவர்கள் மட்டும் அவ்வாறு செய்யாமல் இருந்திருப்பின் இறைச்சி இன்றளவும் துர்நாற்றமடிக்காது" என்று குறிப்பிட்டார்கள்.
இதேபோல் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களும் சொர்க்கத்தில் இருந்தபோது இறைக்கட்டளைக்கு மாறாக குறிப்பிட்ட கனியை புசித்தார்கள். அந்த மரக்கனியை புசிக்குமாறு ஷைத்தான் அவர்களை தூண்டிவிட ஹவ்வாவும் ஆதமுக்கு ஊக்கமளித்தார். முதல் பெண்ணை தொடர்ந்து மற்ற பெண்களும் அவ்வாறே தம் கணவர்களுக்கு பேராசை ஊட்டி வருகின்றனர் என இதையே இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நூல்:- உம்தத்துல் காரீ, இர்ஷாதுஸ் ஸாரீ
அந்த நாட்களில்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ ) "இது (மாதவிடாய்) ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் எழுதி விட்ட விதியாகும். நூல்:- புகாரீ-294
மாதவிடாய் முதல் பெண் ஹவ்வா (அலை) அவர்கள் தொடங்கி அனைத்து பெண்களுக்கும் முதலில் எந்தவித உடல் வலி வேதனையுமின்றி அருளாகத் தான் இருந்தது. பிறகு பனூ இஸ்ரவேலப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பள்ளிவாசலுக்கு வந்த போது எப்போதும் போல் ஆண்களை தங்களின் பக்கம் ஈர்ப்பதற்குண்டான அனைத்து செயல்களையும் செய்தனர். அந்நேரத்திலும் அப்பெண்கள் பள்ளிவாசலின் கண்ணியத்தையும் பேணவில்லை.
அதன் பிறகு தான் அல்லாஹுதஆலா அப்பெண்களிலிருந்து தொடங்கி அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் என்பது வலி வேதனை தரும் ஒன்றாக மாற்றி அமைத்தான். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்தான் என்ற செய்தியை சில திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.
மாதவிடாயை விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்தால் பெண் கருவுறாத போது கருப்பையில் நிகழும் மாற்றங்களால் கருப்பையின் உட்படலம் சிதைந்து அதன் சளிப்படலம் (உறைய இயலாத இரத்தம்) சுமார் 50-200 மி.லி கருவணு இவைகள் வெளிப்படுகின்றன. இதைத்தான் மாதவிடாய் என்கிறார்கள்.
ஒரு சிறுமி மாதவிடாய் வந்த பின்னர் தான் குமரி பெண்ணாக பரிணமிக்கிறாள். மாதவிடாய் வந்தால் தான் அவளுக்கு பிள்ளைப்பேறு கிட்டும். பெண்களுக்கு மாதவிடாய் வரும் காலங்களில் மாரடைப்பு வருவது மிகக் குறைவு.
சராசரியாக பெண்களுக்கு 45 வயது முதல் 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நின்று போவது நடக்கிறது. மாதவிடாய் நின்ற பின்னர் சில பெண்களுக்கு மன உளைச்சல், நரம்புத் தளர்ச்சி, படபடப்பு, அதிக கோபம், கவலை, மயக்கம், உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகுதல், மன குழப்பம் போன்றவை உண்டாகலாம். என்கிறது மருத்துவ உலகம்.
ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் என்பது வலி வேதனை இல்லாத சாதாரண நிகழ்வாகத் தான் இருந்தது. பின்னர் யூதப் பெண்களின் சேட்டை அதிகமாகவே அன்று முதல் பெண்களுக்கு மாதவிடாய் வரும் போது உடலில் வலியும் வேதனையும் ஏற்படும் என்ற நிலை தொடர்கிறது.
சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் தலைவலி, எரிச்சல், கவனக்குறைவு, அடிமுதுகு வலி,பசியின்மை, தூக்கக் குறைபாடு போன்றவை உண்டாகின்றன. மாதவிடாய் நாட்களில் தலைவலி, மன தளர்ச்சி, கவனக்குறைவு, அடிமுதுகிலும் கீழ் வயிற்றிலும் வலி போன்றவை உண்டாகின்றன. சுருங்கக்கூறின் மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஓர் அருட்கொடையாக இருந்தாலும் அந்நாட்கள் பெண்களுக்கு சிரமத்திற்குரிய நாட்களே ஆகும்.
மறதியாளர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதம் (அலை) அவர்கள் தனது சந்ததியினர் அணுவாக இருந்தபோது அதிலுள்ள ஒரு அணு அவரை வெகுவாக கவர்ந்தது. அப்போது ஆதம் (அலை) அவர்கள், ( يَا رَبِّ مَنْ هَذَا ) “யா அல்லாஹ்! இந்த அணு யார்?” என்று வினவிய போது, ( هَذَا ابْنُكَ دَاوُدُ قَدْ كَتَبْتُ لَهُ عُمْرَ أَرْبَعِينَ سَنَةً ) “இவரின் பெயர் தாவூத் (அலை). இவரின் வயது நாற்பது ஆகும்” என பதிலளிக்கப்பட்டது. அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ( أَىْ رَبِّ فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً ) "அப்படியா? சரி, இறைவா! நிச்சயமாக நான் என் வயதிலிருந்து இவருக்கு அறுபது வயதை (அன்பளிப்பாக) கொடுத்து விடுகிறேன்" என்று வாக்களித்தார்.
பிறகு ஆதம் (அலை) அவர்களின் ஆயுள் முடியும் தருணத்தில் அவர் உயிரை கைப்பற்ற வானவர் வந்த போது ( قَدْ عَجِلْتَ قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ ) "(தவணை முன்பாகவே) சீக்கிரம் வந்துவிட்டீரே; எனது வாழ்நாள் ஆயிரம் ஆண்டுகள் என எழுதப்பட்டிருந்ததே” என்று ஆதம் (அலை) அவர்கள் கூறினார். அந்த அறுபது ஆண்டுகளைத் தாம் நீங்கள் உங்களின் சந்ததியினரில் உள்ள தாவூத் (அலை) அவர்களுக்கு (அன்பளிப்பு) அளித்து விட்டீர்களே! என்று அந்த வானவர் கூறினார். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ( فَجَحَدَ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ ) (அப்படியொன்றும் நான் கொடுக்கவில்லை என்று தான் கூறியதை) மறுத்தார். அவரது சந்ததியினரும் (கொடுத்த வாக்கை இல்லையென்று) மறுக்கின்றனர். மறந்தார். அவரது சந்ததியினரும் (கொடுத்த வாக்கை) மறந்து விடுகிறார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3280, முஸ்னது அஹ்மத்
மனிதரில் முந்தியவர் மறதியிலும் முந்தியவர் என்பது அரேபிய பழமொழி.
அருட்சலுகை
முதல் பெண் ஹவ்வா (அலை) அவர்களுக்கு முதன்முதலில் மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது இந்நிலையில் தொழலாமா? கூடாதா? என்ற ஐயமும் ஏற்பட்டது. இது பற்றி அவர் தம் கணவர் ஆதம் (அலை) அவர்களிடம் வினவினார். உடனே ஆதம் (அலை) அவர்கள் இதுபற்றி அல்லாஹ்விடம் வினவினார்கள். அப்போது அல்லாஹ் அந்நாட்களில் தொழ வேண்டாம்! என்று அருட்சலுகை அளித்தான்.
மீண்டும் நோன்பு காலத்தில் ஹவ்வா (அலை) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது முன்னர் அல்லாஹ் தொழுகை பற்றி அளித்த அருட்சலுகையை மனதில் கொண்டு அந்நாட்களில் நோன்பை நோற்க வேண்டாம் என ஆதம் (அலை) அவர்கள் தம் மனைவியிடம் சுயமாக சட்டம் சொல்லி விட்டார்கள். ஹவ்வா (அலை) அவர்களும் அவ்விதமே செய்தார். உடனே அல்லாஹ்விடமிருந்து ஹவ்வா (அலை) அவர்கள் விட்ட நோன்பை களா (மீட்டுதல்) செய்ய வேண்டும் என்று கண்டிப்பான கட்டளை வந்தது.
அது கேட்டு அதிர்ந்து போன ஆதம் (அலை) அவர்கள் இறைவா! தொழுகையும், நோன்பும் வணக்கத்தின் வகைகள் தானே! அவ்விதமிருக்க தொழுகையை களா செய்ய வேண்டாம் என்று கூறிய நீயே நோன்பை மட்டும் களா செய்யுமாறு ஏன் கூறுகிறாய்? என்று வினவினார்கள்.
அல்லாஹுதஆலா “ஆதமே! நீர் தொழுகையைப் பற்றி தாழ்மையுடன் என்னிடம் விளக்கம் கேட்டீர். எனவே நான் சலுகை அளித்தேன். ஆனால் நோன்பைப் பற்றி நீரே உம் விருப்பப்படி தீர்ப்பு வழங்கினீர். எனவே தான் இவ்வாறு நான் தீர்ப்பு வழங்கிறேன். நீர் உம் மனைவியிடம் மாதவிடாய் நின்றதும் மீண்டும் விட்ட நோன்பை களா செய்யுமாறு கூறும்!” என்று என்றான்.
முஆதலா பின்த் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து "பெண்களாகிய நாங்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையானதற்கு பின்னுள்ள தொழுகைகளைத் தொழுதால் போதுமா? (அல்லது மாதவிடாய் காலத்தில் விடுபட்ட தொழுகையையும் தொழ வேண்டுமா?)" என்று வினவினாள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ( كُنَّا نَحِيضُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلاَ يَأْمُرُنَا بِهِ. أَوْ قَالَتْ فَلاَ نَفْعَلُهُ ) “நாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது விடுபட்ட தொழுகைகளை தொழுமாறு எங்களை அண்ணலார் பணிக்க மாட்டார்கள். அல்லது அத்தொழுகைகளை நாங்கள் தொழமாட்டோம்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-321
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் வாழும் காலத்தில்) எனக்கு ரமளான் மாதத்தில் சில நோன்புகள் (மாதவிடாய் காரணமாக) விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் களாவாக நிறைவேற்றுவேன். நூல்:- புகாரீ-1950
அபூஸ்ஸினாத் அப்துல்லாஹ் பின் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மாதவிடாய் ஏற்பட்டவள் விடுபட்ட தொழுகையை பின்னர் நிறைவேற்ற வேண்டியதில்லை. ஆனால் விடுபட்ட நோன்பை பின்னர் நிறைவேற்ற வேண்டும். நூல்:- புகாரீ-பாபுல் ஹைலி தத்ருக்கு சௌவ்ம் வஸ்ஸலாத்
அல்லாஹ் மாதவிடாய் ஏற்பட்டவளுக்கு தொழுகையில் அருட்சலுகை தந்தான். ஆனால் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் செயலால் அல்லாஹ் நோன்பில் அருட்சலுகை தரவில்லை. இந்த சட்டம் இறுதி நாள் வரை தொடரும்.
ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் மாதவிடாய் பெண் தொழலாமா? என்று வினவியது போல், மாதவிடாய் பெண் நோன்பு நோற்க வேண்டுமா? என்று வினவியிருந்தால் அல்லாஹுதஆலா நோன்பிலும் அருட்சலுகை அளித்திருப்பானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சந்ததியினர் அனுபவிக்க நேரிடும்
முசய்யிப் பின் ஹஸ்ன் அவர்கள் கூறினார்கள். என் தந்தையின் பெயர் ஹஸ்ன் (முரடு) என்பதாக இருந்ததால் அப்பெயரை மாற்றி சஹ்ல் (மென்மை) என்று சூட்டிக்கொள்ளுமாறு அருமை நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தபோது என் தந்தை அப்பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் விளைவு எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குண நலன்களில்) முரட்டுத் தன்மை தொடர்ந்தது. அறிவிப்பாளர்:- சயீத் பின் முசய்யிப் (ரலி) அவர்கள். நூல்:- புகாரீ-6190, அபூதாவூத்-4956
பெற்றோரின் நற்செயல்களின் பலனை பிற்காலத்தில் அவர்களது சந்ததியினரும் அனுபவிக்க நேரிடலாம். பெற்றோரின் தீய செயல்களினால் உண்டான பாவச்சுமைகளை மறுமையில் அவர்களது சந்ததியினர் சுமக்க மாட்டார்கள். என்பது திருக்குர்ஆனின் (39:7) கூற்று. ஆனால் பெற்றோரின் பாவச் செயல்களால் அவர்களது சந்ததியினர் உலகில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம்.
நமது பிள்ளைகள் நல்லொழுக்கமுள்ளவர்களாக திகழ வேண்டும் என நாம் விரும்பினால், முதலில் நாம் நல்லொழுக்கமுள்ளவர்களாக மாற வேண்டும்.
மாறாக நாம் பாவச் சாக்கடையில் புரளுவேன் ஆனால் நமது பிள்ளைகள் மட்டும் பரிசுத்தமானவர்களாக திகழ வேண்டும் என்று எண்ணுவது அறிவுடமை ஆகாது. புகை, போதை, மது, மாது, சூது இது போன்ற பாவச் செயலில் ஈடுபடுவோர் அதில் ரசித்து ருசித்து ஈடுபடலாம். ஆனால் அதே பாவத்தை தனது பிள்ளைகள் செய்யும் போது பெற்றோர்களாய் இருந்து அதை பார்த்து ரசிக்க முடிவதில்லை. மாறாக அவர்களது மனம் அதை சகித்துக் கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறது. அப்பாவங்களை விட்டும் தனது பிள்ளைகளை தடுக்கவும் முயற்சிக்கிறார்கள்.
நாம் இறைக்கட்டளைகளை முறையாக நிறைவேற்றுபவர்களாகவும், நற்செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களாகவும் இருந்தால் நமது பிள்ளைகளிடம் அந்த நற்குணம் தொடரலாம்.
நாம் வாழ்நாளில் செய்து விட்ட பாவங்களை எண்ணி அதற்கு முறையாக பாவமன்னிப்பு கோரிவிட்டால் மேலும் நம்மிடமுள்ள தீய குணங்களை விரைவில் மாற்றி அமைத்து கொண்டால் அந்த தீய குணங்கள், செயல்பாடுகளை விட்டும் நம்முடைய பிள்ளைகள் காப்பாற்ற படலாம். அல்லாஹுதஆலா நம்மையும் நமது சந்ததியினரையும் நற்செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களாகவும், தீயவைகளை விட்டும் வெரண்டோடுபவர்களாகவும் ஆக்கி அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு. முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, நீலாங்கரை, சென்னை. செல்-
9840535951
No comments:
Post a Comment