ஊட்டச்சத்துமிக்க பானம்
وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي
بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ
(ஆடு மாடு ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்குப்
படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற
பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்துவதற்கு மிக்க
இன்பகரமானது. திருக்குர்ஆன்:- 16:66
பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தவே ஐ.நா. ஜூன் 1-ஆம் தேதியை உலக பால் தினமாக கடைபிடிக்கிறது.
உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும்கூட. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.
மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில்
உள்ளதால், நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக்
கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ شَيْءٌ يَجْزِي مَكَانَ الطَّعَامِ وَالشَّرَابِ غَيْرُ اللَّبَنِ ) உணவு மற்றும் குடிபானத்தின் இடத்தில் பாலைத் தவிர, (பசியையும் தாகத்தையும் சேர்ந்தாற் போல் போக்க)
போதுமான (உணவுப்)பொருள் வேறு எதுவும் இல்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:-
திர்மிதீ-3367,
இப்னுமாஜா-3313
ஆய்வு ரீதியாக...
பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது பற்றி தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது. பிராணிகளின் இரத்தம் தான் பாலாக உருவாகிறது என்று ஆரம்ப காலத்தில் மக்கள் நம்பினார்கள். சென்ற நூற்றாண்டு வரை இதுதான் மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
சாணத்துக்கும், இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தான் பால் உருவாகிறது என்று இவ்வசனத்தில் (16:66) கூறப்படுகிறது. அதாவது இரத்தம் பாலாக ஆவதில்லை என்று இவ்வசனம் கூறுகிறது.
பாலூட்டிகளுக்கு இரண்டு குடல்கள் உள்ளன. உண்ணும் உணவுகள் அரைக்கப்பட்டு, சிறு குடலில் கூழாக்கப்பட்டு அதில் உள்ள உறிஞ்சுகள் மூலம் பல்வேறு சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடல் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறது.
தேவையான சத்துக்களைப் பிரித்து எடுத்த பின் சக்கையைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. அதில் தான் மலக்குடலும் உள்ளது.
சாணம் என்பது பெருங்குடலில் உள்ள சக்கைகளைக் குறிக்கும். இரத்தத்துக்கும் சாணத்துக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது என்பது சிறுகுடலில் அரைக்கப்பட்ட நிலையில் இருக்கும் உணவுக் கூழைக் குறிக்கும்.
சாணமாக மாறுவதற்கும், இரத்தமாக மாறுவதற்கும் இடையில் உள்ள நிலை என்பது இது தான். இதைத் தான் இவ்வசனம் சொல்கிறது.
இரத்தம் தான் பாலாக ஆகிறது என்றால் பால் என்பது இரத்தத்துக்கு அடுத்த நிலை என்று ஆகிறது. ஆனால் இரத்தமாக ஆவதற்கு முந்திய நிலைதான் பால் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இது பற்றி நவீன விஞ்ஞானிகள் கூறுவது என்ன? இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகின்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக ஆகும். குடலில் உள்ள உறிஞ்சிகள் அதிலிருந்து சத்துக்களை உறிஞ்சுகின்றன.
இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாறுகிறது.
அதாவது சாணத்துக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில்
இருந்துதான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை
"அதன் வயிறுகளில் உள்ள சாணத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை
உங்களுக்குப் புகட்டுகிறோம்' என்று திருக்குர்ஆன்
கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தை
அல்ல என்பதற்கும், இறைவனின் வார்த்தையே
என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது
அண்ணலாரின் தேர்வு
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜெருசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (விண்ணுலகப் பயண) இரவில் அண்ணலாரிடம் இரு கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. ஒன்றில் மதுவும் மற்றொன்றில் பாலும் இருந்தன. அண்ணலார் அவ்விரண்டையும் உற்றுப் பார்த்துவிட்டு, பால் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அப்போது அண்ணலாரிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்,
( اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ لَوْ أَخَذْتَ الْخَمْرَ
غَوَتْ أُمَّتُكَ ) "தங்களுக்கு இயற்கை
வழியைக் காட்டிய இறைவனுக்கே எல்லா புகழும். நீங்கள் மதுக் கிண்ணத்தை எடுத்து இருந்தால்,
உங்கள் சமுதாயம் தறிகெட்டுப்
போயிருக்கும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3394, முஸ்லிம்-4095, திர்மிதீ-5576
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ، فَإِنَّهَا تَرُمُّ مِنْ كُلِّ الشَّجَرِ
) நீங்கள் பசும்பாலைப் பருகுவதைக் கடைபிடித்து வாருங்கள்.
ஏனென்றால், அது எல்லாச் செடிகளையும்
மேய்கிறது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்,
அத்திப்புந் நபவீ இமாம் இப்னு
கய்யிம்
ஹிஜ்ரத் பயணத்தின்போது
அருமை நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும்
ஹிஜ்ரத் பயணத்தின்போது ஸவ்ரு குகையில் தங்கியிருந்த நாட்களில் ஆட்டுப்பால் தான்
அவர்களின் உணவாக இருந்தது.
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் கண்மணி
பெருமானார் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்ற போது,
ஆட்டு இடையன் ஒருவனை நாங்கள்
கடந்து சென்றோம். அப்போது அண்ணலாருக்குத் தாகம் ஏற்பட்டிருந்தது. அப்போது நான் (அந்த
இடையனிடயிருந்த ஆட்டிலிருந்து) சிறிதளவு பால் கறந்து அதை அண்ணலாரிடம் கொண்டு வந்து
கொடுத்தேன். நான் திருப்தியடையும் அளவுக்கு அதை அண்ணலார் அருந்தினார்கள். நூல்:- புகாரீ-2439, முஸ்லிம்-4093
வழிப்போக்கர்களுக்கு இடையர்கள் தங்கள் கால்நடைகளில்
இருந்து பால் கறந்து கொடுப்பது பொதுவாக அன்று நடைமுறையிலிருந்த ஒரு நல்ல பழக்கமாகும்.
அதற்குக் கால்நடைகளின் உரிமையாளர்களும் பொது அனுமதி அளித்திருந்தனர். இந்த அடிப்படையில்
அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த இடையனிடம் பால் கறந்து கேட்டிருக்கலாம். நூல்:- ஃபத்ஹுல்
பாரீ, உம்தத்துல் காரீ
வாய் கொப்பளித்தல்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(ஒருமுறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள்.
அப்போது ( إِنَّ لَهُ دَسَمًا
) "இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது"
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5609
பாலை அதிகமாகப் பருகுவது பற்களுக்கும் ஈறுகளுக்கும்
இடையூறு செய்யும். இதனால் அதனைப் பருகியபின் தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். நூல்:-
திப்புந் நபவீ
ச்சீ... வேண்டாம்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَن لَبَنِ
الْجَلاَّلَةِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள், "உயிரினங்களின் கழிவைத் தின்னும் கால்நடையின் பாலை பருக வேண்டாம்" என்று தடை விதித்தார்கள். நூல்:-
திர்மிதீ-1748
அறுக்க வேண்டாம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம்
(ஸல்) அவர்கள் ஓர் அன்சாரித் தோழர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்கள். அந்தத் தோழர்
(ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அண்ணலார், ( إيَّاكَ،
وَالْحَلُوبَ ) "பால் தரும் ஆட்டை
அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்
4143
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ( نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَبْحِ
ذَوَاتِ الدَّرِّ ) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பால் தரும் (ஆடு மாடு ஒட்டகம்
போன்ற) கால்நடைகளை உணவுக்காக அறுப்பதை தடை செய்தார்கள். நூல்:- இப்னுமாஜா-2197, இப்னு அசாகிர், பைஹகீ, ஹாகிம், முஸ்னது அபீ யஅலா
மறுக்கக்கூடாது
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ( ثَلاَثٌ لاَ تُرَدُّ الْوَسَائِدُ وَالدُّهْنُ وَاللَّبَنُ
) "மூன்று பொருட்கள் (அன்பளிப்பாகத் தரப்பட்டால்) மறுக்கக்கூடாது. தலையணை,
எண்ணெய், பால்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:-
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2711
கனாக் கண்டால்...
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) கோப்பை
ஒன்று என்னிடம் கொண்டு வருவதைப் போன்று கண்டேன். அதில் பால் இருந்தது. நான் அதிலிருந்த
பாலை (தாகம் தணியும் அளவுக்கு) பருகினேன். எந்த அளவுக்கென்றால், (வயிறு நிறைந்து) அது
என் நகக் கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமருக்கு கொடுத்தேன்" என்று கூறினார்கள்.
மக்கள், ( فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ ) "நாயகமே! இதற்குத் தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்" என்று கேட்க, அதற்கு அவர்கள் ( الْعِلْمَ ) "அறிவு"
என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-82, முஸ்லிம்-4762, திர்மிதீ-3610
பாலும் அறிவும் மனிதனுக்குப் பயனளிப்பதில் பங்களிப்பவை
ஆகும். அவை இரண்டுமே மனிதன் சீரடையக் காரணங்களாகும். பால் உடலுக்கு உணவு என்றால், கல்வியறிவு உள்ளத்துக்கு
உணவாகும். நூல்:- அல்மின்ஹாஜ்
கனவில் பால் பருகுவதுபோல் கண்டால் பயனுள்ள கல்வி
கிடைக்கப்பெறுவார் என்று பொருளாகும்.
அழகிய பிரார்த்தனை
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ سَقَاهُ اللَّهُ لَبَنًا فَلْيَقُلِ اللَّهُمَّ بَارِكْ لَنَا
فِيهِ وَزِدْنَا مِنْهُ ) எவருக்கு அல்லாஹ்
பாலைப் பருகக் கொடுத்தானோ அவர், "இறைவா! இதில் எங்களுக்கு அபிவிருத்தி செய்வாயாக! மேலும் இதை எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக!"
என்று கூறட்டும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3367, இப்னுமாஜா-3313
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஒரு முறை கடுமையாக பசியுடன் இருந்த போது, என் நிலை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு கோப்பையில் பால் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அண்ணலார், “திண்ணைவாசிகளை அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். திண்ணைவாசிகள் இஸ்லாத்தின் விருந்தினர் ஆவார். அவர்களுக்கு குடும்பமோ செல்வங்களும் கிடையாது. அண்ணலாரிடம் ஏதேனும் தர்மப் பொருள் வந்தால் அதை இவர்களிடம் அண்ணலார் அனுப்பிவிடுவார்கள்.
இப்போது அண்ணலார் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்கு கவலைதான் ஏற்பட்டது. "(இருப்பதோ சிறிதளவு பால்) திண்ணைவாசிகளுக்கு இந்த பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணைவாசிகள் வந்தால், அண்ணலார் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியாமல் இருக்க இயலாது" என (மனதுக்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளை அழைத்து வந்தேன். அப்போது அண்ணலார், ( يَا أَبَا هِرٍّ خُذْ فَأَعْطِهِمْ ) "அபூஹிர்! இதை எடுத்து
இவர்களுக்கு கொடுங்கள்" என்று கூறினார்கள். நான் அந்த கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்கு
கொடுத்தேன். அவர் தாகம் தணியும்வரை பருகினார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையை
திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும்வரை
பருகிவிட்டு கோப்பையை என்னிடம் தந்தார். இவ்வாறாக (அங்கிருந்த) மக்கள்
அனைவரும் தாகம் தணிந்தனர். பிறகு, அண்ணலார் அந்தக் கோப்பையை வாங்கி தமது கையில் வைத்துக்கொண்டு
என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு என்னை அழைத்து, ( بَقِيتُ أَنَا وَأَنْتَ ) "நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம்
(அப்படித்தானே?)" என்று கேட்டார்கள்.
நான், "நாயகமே! (ஆம்) உண்மை
தான்" என்றேன்.
அண்ணலார், ( اقْعُدْ فَاشْرَبْ ) "உட்கார்ந்து (இதைப்) பருகுங்கள்" என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். "இன்னும் பருகுங்கள்" என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் 'பருகுங்கள்' என என்று சொல்லிக்கொண்டே இருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன். இறுதியில், "அல்லாஹ்வின் மீதாணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை" என்றேன். அண்ணலார் "(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்" என்றார்கள். ஆகவே நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய திருப்பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள். நூல்:- புகாரீ-6452
உணவுபொருட்களில் பால் அருள்வளம் நிறைந்தது. அருள்வளம்
பெற்றவர்கள் கரம் பட்டால் இன்னும் அதில் அருள்வளம் அதிகமாகும்.
பாலையும் மீனையும்
பேரறிஞர் அபூபக்ர் இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள். பாலையும் மீனையும் ஒரே நேரத்தில் உண்ணாதிருத்தலும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கடைபிடித்த உணவு முறையில் ஒன்றுதான். அதேபோல் பாலையும் புளிப்பான உணவுப் பொருளையும்
ஒன்றாகச் சாப்பிடமாட்டார்கள். நூல்:- அத்திப்புந் நபவீ
பருகும் முறை
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சிலவேளை பாலை அப்படியே
பருகியுள்ளார்கள். சிலவேளை அதனுடன் தண்ணீரைக் கலந்து பருகியுள்ளார்கள். வெப்ப மண்டலங்களில்
மதுரமான பாலை மட்டுமோ அதில் தண்ணீரைக் கலந்தோ பருகுவது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதிலும்
உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதிலும் ஈரலின் தாக்கத்தைத் தீர்ப்பதிலும் பெரும்பங்கு
வகிக்கிறது. குறிப்பாகப் பாலுக்காகவே சில கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின்
பாலைப் பருகுவதால் உடலுக்கு மிகுந்த பயன் ஆகும். ஏனென்றால் பாலானது உணவுக்கு உணவாகவும்,
பானத்திற்குப் பானமாகவும்,
மருந்துக்கு மருந்தாகவும்
உள்ளது. நூல்:- அத்திப்பு நபவீ
பாலில் தண்ணீரைக் கலந்து பருகும் பழக்கம் அன்றைய
அரபியரிடம் இருந்து வந்தது. கறக்கும் போது பால் சூடாக இருக்கும்; அத்துடன் அந்நாடு
பெரும்பாலும் வெப்ப பூமியாகும். எனவே, பாலின் சூட்டைத் தணிப்பதற்காக அதில் குளிர்ந்த நீரைக்
கலந்து கொள்வார்கள். இது அருந்துவதற்காகத்தானே தவிர விற்பதற்கன்று; ஏனெனில், விற்கும்போது பாலில்
தண்ணீர் கலப்பது கூடாது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ
பேணுதலுக்கு கிடைத்தப் பரிசு
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை கடந்து சென்றார்கள்.
அப்போது அந்த மனிதர் பாலில் தண்ணீரை கலந்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். இதை
கண்ட அபூஹுரைரா (ரலி) அவர்கள், (
كَيْفَ لَكَ إِذَا قِيلَ لَكَ يَوْمَ الْقِيَامَةِ: خَلِّصِ الْمَاءَ
مِنَ اللَّبَنِ ) "அந்த மனிதரிடம் மறுமைநாளில்
உன்னிடம் பாலில் இருந்து தண்ணீரை பிரித்து எடு! என்று சொல்லப்பட்டால் உன் நிலை என்னவாகும்? (யோசித்து பார்)" என்று எச்சரித்தார்கள்.
ஒருநாள் இரவு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், தனது பணியாள் அஸ்லம் என்பவருடன் மக்களின் நலமறிய
நகர்வலம் சென்றார்கள். நகரத்தின் பல பகுதிகளைச் சுற்றியபின் களைப்படைந்து ஓரிடத்தில்
அமர்ந்தார்கள். அருகிலிருந்த ஒரு வீட்டிலிருந்து உரையாடும் குரல்கள் கேட்டன.
தாய்: மகளே! எழுந்து, பாலில் தண்ணீரைக்
கலந்து வை!
மகள்: தாயே! பாலில் தண்ணீரை கலக்கக்கூடாது என்று
நமது ஜனாதிபதி அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
தாய்: இப்போது ஜனாதிபதி அதை பார்த்துக் கொண்டா இருக்கிறார்? நீ பாலில் தண்ணீரை
கலந்து விடு!
மகள்: இறைவன் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்.
ஜனாதிபதிக்கு கீழ்ப்படிவதாகக் கூறிக்கொண்டு, தனிமையில் அவர்களுக்கு மாறு
செய்யமாட்டேன் என்று உறுதியுடன் கூறினாள்.
இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், காலையில் அதைப் பற்றி விசாரித்தபோது, அவ்வீட்டில் ஒரு விதவைத் தாயும் அவளின் இளம் மகளும் இருப்பதாக தெரியவந்தது. உமர் (ரலி) அவர்கள் தம்முடைய மகனார் ஆசிம் (ரலி) அவர்களுக்கு அந்த இளம்பெண்ணை, முறையாக பெண் பேசி திருமணம் நடத்தி வைத்தார்கள். நூல்:- இப்னு அபீஷைபா
இந்த தம்பதியின் பேரர் தான், நீதி நேர்மைக்கு பெயர்
பெற்ற ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஆவார்கள். அதாவது உமர் (ரலி)
அவர்களின் (மகன் வழி) பேத்தி உம்மு ஆசிம் (ரஹ்) அவர்களுக்கு பிறந்தவர்தான் இந்த உமர்
பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.
பாலில் தண்ணீரை கலந்து விற்பது தடைசெய்யப்பட்டது
என்பதில் மிகவும் பேணுதலாக இருந்த ஓர் சாமானியப் பெண்ணுக்கு நீதி நேர்மைக்கு பெயர்
பெற்ற ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மருமகளாக ஆகும் பெரும் பாக்கியம் கிடைத்தது.
பேரறிஞர் இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள்
இமாம் இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பாலானது வெளித்தோற்றத்தில் ஒரு தனிப்பட்ட பொருளாக தெரிந்தாலும் அடிப்படையில் பால்கட்டி எனும் தீண்மம், நெய் எனும் வழவழப்புத்தன்மை, நீர்மம் ஆகிய மூன்று சாராம்சங்களைக்கொண்ட இயல்பான கலவையாக உள்ளது.
பால் கட்டியானது ஈரத்தன்மையுள்ள குளிர்ச்சியாகும். உடலுக்கு உணவாகவும் உள்ளது. நெய்யானது சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் உள்ளது. ஆரோக்கியமான மனித உடலுக்கு உகந்தது. மிகுந்த பயன்களைக் கொண்டது. அதிலுள்ள நீர்மமானது ஈரத்தன்மையுள்ள சூடு ஆகும். உடலின் இயல்புக்குப் பொதுவானது. உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
பொதுவாக பாலானது நடுநிலை தன்மையை விட மிகுந்த குளிர்ச்சியானதும் ஈரத்தன்மை உடையதும் ஆகும். பாலை பீச்சுகின்றபோது அதன் ஆற்றலானது சூடும் குளிர்ச்சியும் சமமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
பாலைப் பீச்சுகின்றபோது அது மிகவும் தரமானதாக இருக்கும். நேரம் செல்லச் செல்ல அதன் தரம் குறைந்து கொண்டே செல்லும். பாலைப் பீச்சுகின்றபோது மிகக்குறைந்த குளிர்ச்சியுடையதாகவும் ஈரத்தன்மையுடையதாகவும் இருக்கும். புளித்தன்மைக்கு எதிரான தன்மையுடையதாக இருக்கும்.
கன்று ஈன்று நாற்பது நாள்களுக்கு பிறகுள்ள பாலை தேர்வு செய்யப்பட்ட பாலாகும். மிகுந்த வெண்மையாகவும், அதன் வாடை தூய்மையாகவும், இனிய சுவையுடையதாகவும் இருப்பதே தரமான பாலாகும். அத்தகைய பாலில் சாதாரண இனிப்புத்தன்மையும் நடுநிலையான கொழுப்புத்தன்மையும் இருக்கும்.
நல்ல முறையில் மேய்ந்து தண்ணீர் பருகிய ஆரோக்கியமான
இளம் பிராணியிடமிருந்து கறக்கப்பட்ட பால் போற்றத்தக்கது. அத்தகைய பால் நல்ல இரத்தத்தை
உற்பத்தி செய்யும். வரண்டு போன உடலை ஈரத் தன்மையுடையதாக ஆக்கும். நல்ல உணவுச் சத்தாக
மாறும். மனக் குழப்பம், கவலை, சோக நோய்கள் உள்ளிட்டவற்றைப் போக்கும். பாலைத் தேனுடன்
கலந்து பருகினால் உடலின் கெட்ட இயல்புகள் மாறி, உள்புண்களை ஆற்றி, தூய்மையடையச் செய்து விடும். நாட்டுச் சர்க்கரையுடன்
கலந்து பருகினால் உடலின் நிறத்தை முற்றிலும் அழகாக்கும். நூல்:- அத்திப்புந் நபவீ
தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்
மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள
வேண்டும். எலும்புகளின் வலிமைக்கு
கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும்.
பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும். பாலில் உள்ள வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.
தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன்
மூலம், வயிறு நிரம்பி ஆரோக்கியம்
பெறலாம். பாலில் பொட்டாசியம்
உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
பால் குடித்ததும் புத்துணர்வு தரக் கூடியது.
பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர்வாக இருப்பவர்களுக்கும்,
தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும்,
மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும்,
இரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும்
பசும்பால் மா மருந்தாக உள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க
மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
பால் என்பது, ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளின் இரத்தம்
இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. கால்நடைகள் சாப்பிடும் பச்சைத் தாவரங்களின்
உயிர்ச்சத்து, கால்நடைகளின் உடலில்
போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.
பாலின் வகைகளும் அவற்றின் நன்மைகளும்
பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் என சில வகைககள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.
தாய்ப்பால்: ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும்.
பசும்பால்: இதில் வைட்டமின் பி12 உள்ளது. பசும்பாலை இரவில் சாப்பிட்டு வர உடல்சூடு, கண்ணெரிச்சல், பித்த கோளாறுகள் ஆகியவை நீங்கும். தாது பலம் பெற்று ஆண்மை பெருகும். பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், தயிர், மோர் ஆகியவை உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது. எருமைப் பால் அதிகக் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.
ஆட்டுப்பால்: பசும் பாலில் இருப்பதை விட கொழுப்பு, புரதம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அதிகமாக ஆட்டுப் பாலில் உள்ளது. இது நோயாளிகளுக்கு மிக எளிதில் செரிக்கக் கூடியது. காசநோய், வரட்டு இருமல், வயிற்றுக் கடுப்பு, குடல் வாதம், பக்க வாத நோய்களுக்கு ஆட்டுப்பால் நல்ல மருந்து. ஆட்டுப்பால் பசியின்மையை போக்கும். 200 மி.லி ஆட்டுப்பாலில் சுமார் 6 கிராம் உயர்தர புரோட்டீன் உள்ளது.
வெள்ளாட்டுப்பால்: இதில் உள்ள கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கக்
கூடிய தன்மையும் உள்ளது. குடற்புண் உள்ள நோயாளிகளுக்கு வெள்ளாட்டுப்பால் எடுத்துக்
கொள்ளலாம். மேலும் இது இரத்தப் போக்கை தடுக்கும். தாய்ப்பாலை உருவாக்கும்.
ஆட்டுப் பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!
ஒட்டகப்பால்: ஒட்டகம் முள் செடிகளையும், உப்புச்சத்துள்ள தழைகளையும் தீனியாக உட்கொண்டு வைட்டமின் சத்து நிறைந்த பாலை அது தருகிறது.
ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஆலோசகரும்,
இஸ்ரேல் நாட்டு ஒட்டக நிபுணருமான
பேராசிரியர் யாகில் (Revenue Yagil)
கூறுகிறார். மாட்டுப்பால்
ஆட்டுப்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் சி சத்து ஒட்டகத்தின் பாலில் உள்ளது. மேலும்
ஒட்டகப் பாலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் சக்தியும் இயல்பாகவே
அமைந்துள்ளது. எனவே, ஒட்டகப்பாலில் நிறைய
மருத்துவ குணங்கள் உள்ளன.
இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் அரிசி பிரதான உணவு. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.
இதில் பிரதானமானது பசும் பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு அடுத்து குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மை பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது.
பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும். அதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து, சளித் தொந்தரவு வரும். எனவே, அதன்பின் கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது!
காலையில் வெறும் வயிற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக எடுத்த பிறகுதான் டிபன் சாப்பிட வேண்டும். பால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப்பிட்ட பிறகு, உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்.
பாலில் ஹார்லிக்ஸ், போன்விட்டா போன்ற ரெடிமேட் சத்து பவுடர்களைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகமாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டம் தர, இந்தச் சத்துபானங்கள் அவசியம் என பலரும் நினைக்கிறார்கள். இது தவறான எண்ணமே. பாலில் இந்த பவுடர்கள் சேர்த்தபிறகு, அதன் கடினத்தன்மை மேலும் அதிகரிப்பதால் அது செரிமானம் ஆகக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, இந்தப் பானத்தைத் தருவதைத் தவிர்க்க வேண்டும்.
பால் காய்ச்சும் முறை
பாலை நன்கு கொதிக்க வைக்க வேண்டியது மிகவும் அவசியம். பாலை வெறுமனே பொங்கும்வரை கொதிக்க வைத்தால்போதும் என நினைத்து, பொங்கி நுரை கிளம்பி வந்ததுமே அடுப்பில் இருந்து இறக்கிவிடுகிறார்கள். இது தவறு.
அதே சமயம் பாலை எந்நேரமும் அடுப்பிலேயே கொதிக்கவைப்பதும் தவறு. டீக்கடைகளில் எப்போதும் அடுப்புச் சூட்டிலேயே இருக்கும் பால் வயிற்றுக்கு ஏகப்பட்ட உபாதைகளை ஏற்படுத்தும்.
சித்த மருத்துவர் தெ. வேலாயுதம் கூறுகிறார். பசுமாட்டில்
இருந்து அன்றன்றைக்குப் பால் கறந்து விற்பனை செய்யப்படுவதை மட்டுமே வாங்க வேண்டும்.
வாங்கிய உடனேயே பாலைக் காய்ச்ச வேண்டும். அரை லிட்டர் பால் என்றால், ஒன்றரை லிட்டர் அளவுக்குத்
தண்ணீர் விட வேண்டும். மீண்டும் பால் அதன் அளவிற்கே வரும் வரையில் கொதிக்க
வைக்க வேண்டியது மிகவும் அவசியம். காலையில் வாங்கிய பாலை உடனே பயன்படுத்தி விடவேண்டும்.
மீதம் இருக்கும் பாலை மோர், தயிர் என்று மாற்றலாம். காலையில் வாங்கிய பாலை மீண்டும்
மாலையில் பயன்படுத்தக் கூடாது. மாலையில் புதிதாகப் பால் வாங்க வேண்டும்.
குக்கரில் பால் காயக்கூடாது. குக்கர் அழுத்தமானது
பாலில் உள்ள புரோட்டின், கொழுப்பு சத்துகளைச் சிதைத்து விடும். ஒரு பாத்திரத்தில்
ஆவி போக பொங்க வைக்க வேண்டும். இந்த முறைப்படிதான் பாலைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்குத்தான்
பாலை செரிவிக்கக் கூடிய செரிமான நொதிகள் சுரப்பு அதிகளவு இருக்கின்றன. வயது, ஏற, ஏற இந்தச் சுரப்பு
குறைந்து விடும். பெரியவர்கள் பால் குடிப்பது நல்லதல்ல.
மெல்ல கொல்லும் விஷம்
சீமை மாடு என்பதே ஒரு நோய் கூடம். சீமை பசுவின்
பாலும் நாட்டு பசுவின் பாலும் பார்க்க ஒன்று போல இருந்தாலும் இரண்டிலும் பெரும் வித்தியாசங்கள்
உண்டு. பன்றிகளின் மரபணுவை கலந்து சீமை மாடுகள் உருவாக்கப்படுகின்றன.
நம் நாட்டில் சுற்றித் திரிந்த தரமான காளைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக காயடித்து ஆண்மை நீக்கம் செய்யப்படுவதும்; ஊர் முழுவதும் சுற்றித் திரிந்து பசுக்களில் திருட்டுத் தனமாக சினை ஊசி செலுத்தும் செயல்களும் அரங்கேற ஆரம்பித்துள்ளன. இன்றைக்குக் காணுமிடமெல்லாம் கலப்பின மாடுகள் ராஜ்ஜியமாக மாறிப் போனது. இந்தக் கலப்பின மாட்டை உற்பத்திச் செய்வதில் தான் அரசு மிகுந்த கவனமாக இருந்ததே ஒழிய, உள்ளூர் மாட்டினங்களைப் பாதுக்காக்கவில்லை. கலப்பினப் பசுக்களால் பால் வளம் பெருகியது. காளைகள் குறைந்தன. கூடவே பலவிதமான நோய்களும் வரத் துவங்கின.
இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது, மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர். பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், நகரத்தில் இருக்கும் மாடுகள் தற்போது வைக்கோலையும், புல்லையும் மட்டும் சாப்பிடுதில்லை. போஸ்டர்கள், குப்பையில் கிடக்கும் பாலிதீன் கவர்களைத்தான் அதிகமாகச் சாப்பிடுகின்றன. எனவே, அவை ஜீரணமாகாமல் மாட்டின் வயிற்றுக்குள்தான் சிறைபட்டுக் கிடக்கின்றன.
மருத்துவர் காசி பிச்சை கூறுகிறார். சீமை பசுவின் பால் அருந்துவதனால் 15, 16 வயதில் பருவமடைந்த பெண் பிள்ளைகள் தற்போது விவரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்துவிடுகிறனர். சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, ‘சிசேரியன்’முறையில் குழந்தை பிறக்கிறது. தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல், தாய்ப்பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது. இவ்வாறு ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி இருக்கிறது.
பேராசிரியர் பாப் எலியாட் கூறுகிறார். பால் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும்
கால்சியம், புரதச் சத்து,
விட்டமின் ‘ஏ’ வையும் கொடுக்கிறது.
ஆனால் பாலில் இருக்கும் கேசின் (Casein) புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2 (A1 Beta-Casein, A2 Beta-Casein ) என்று இரண்டு வகை இருக்கிறது.
பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில் ( திமில் உள்ள நாட்டு மாடுகளில்)
ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் இன மாடுகளில்
( திமில் அற்றது, ஹெச்.எப்,
ஜெர்சி போன்ற அயல்நாட்டு மாடுகளில்)
ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன.
ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்து, அது குடலில் செறிக்கப்படும்போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல் (ஆடிசம்) போன்ற பல வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும்போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது.
A1 Beta-Casein புரதம்
மிகவும் அபாயகமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்போது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள்.
அதற்கு போடப்படும் ஹார்மோன் ஊசிகள் மற்றும் பால் கரவைக்கு வைக்கப்படும் தீவனங்களில்
கலக்கப்படும் தவறான வஸ்துக்கள் போன்றவற்றால் சீமை மாட்டு பால் அருந்த தகுதியற்றதாகிறது.
சீமை மாட்டு பால் மெல்ல கொல்லும் (Slow Poison) போல்தான். அதன் பாதிப்புக்கள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டுக்கு வந்த புதிதில் குறைவாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டு பசுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் அன்றைய காலகட்டங்களில் தெரியவில்லை. ஆனால் தற்போது சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியாதி பெருக்கம் நன்றாக தெரிய துவங்கியுள்ளது.
சீமை மாடுகளின் பால், சர்க்கரை நோய், இரத்தகொதிப்பு, தைராய்டு பிரச்சினை, ஆட்டிசம் (சதை பிறழ்வு). இது குழந்தைகளின் உடலையும் மூளையையும் ஒரு சேர தாக்கும் கொடூர நோய், ஹார்மோன் சீர்கேடு, பரம்பரை வியாதிகள், மரபணு கோளாறுகள், மாதவிடாய், கர்ப்பப்பை, பால் சுரப்பு கோளாறுகள், மலட்டுத்தனம் போன்ற பாலியல் கோளாறுகள், மந்த புத்தி, குடல்வால், மலச்சிக்கல் என இன்னும் எண்ணற்ற நோய்களுக்கும் காரணியாகும்.
சீமை மாடுகளுக்கு உடலில் வியர்வை சுரப்பி கிடையாது.
அதன் கெட்ட நீர் மற்றும் உப்புக்கள் மூத்திரம் மற்றும் பாலின் வழியாக மட்டுமே வெளியேறியாக
வேண்டும். சீமை மாடுகளினால், அது உண்ணும் முரட்டு
தீனிக்கும்-மாட்டு தீவனத்தில் அதிக பால் கறவைக்கு சேர்க்கபட்டிருக்கும் வஸ்துக்களுக்கும்,
அத்தனை உப்பையும் சிறுநீர்
வழியாக வெளியேற்றிவிட இயலாது.
உடலின் உப்பும், கெட்ட நீர்களும் பாலின் வழியாக வெளியேறும். அதனால் தான் சீமை மாட்டு பால் கொஞ்சம் உப்புச்சுவை கூடுதலாக இருக்கும். நாளடைவில் இந்த தீய உப்பின் தேக்கத்தால் உடலில் இரத்தகொதிப்பு நோய் ஏற்பட்டு விடுகிறது. நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற நாட்டு பசுவுக்கு உடல் எல்லாம் வியர்வை சுரப்பி உண்டு. அதுவுமன்றி அவை குறைந்த அளவே தீவனம் எடுக்கும். அதனால் அதன் பால் எவ்வித தீங்குகளையும் ஏற்படுத்துவதில்லை.
வேதிப்பொருட்கள் கலப்படம்
பால் கலப்படம் என்பதை முதன் முதலில் பாலில் தண்ணீர்
கலப்பதைத்தான் சொல்வார்கள். வணிகத்துக்காகப் பாலில் தண்ணீர் கலக்கின்றனர்.
இப்போது பாலில் யூரியா கலப்பது, காஸ்டிக் சோடா கலப்பது
என்று கலப்படம் செய்கிறார்கள். மிகப்பெரிய அளவில் பாலில் கலப்படம் நடக்கிறது. உச்சநீதிமன்றத்தில்
இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்த போது, ஒட்டு மொத்த இந்தியாவில்
68 சதவிகிதப் பால் கலப்படம் என்று தெரியவந்தது.
கால்நடைகளின் பாலில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும்
போதுமான அளவு புரோட்டின், கொழுப்பு பாக்கெட் பாலில் இருப்பதில்லை. பாக்கெட்
பாலில் செயற்கையாக புரோட்டின், கொழுப்பு சேர்க்கின்றனர். பாலில் அதிகளவு இருக்கும்
சத்துகளைச் செயற்கையாகக் குறைக்கவும் கூடாது. ஆனால், தொழிற்சாலையில் பாலில் அதிகமாக
இருக்கும் சத்துகளைக் குறைக்கின்றனர். பதப்படுத்துகிறோம் என்ற பெயரில் செய்யப்படுபவை
எல்லாமே இயற்கைக்கு விரோதமானதுதான். அப்படிச் செய்வதால் பாலின் இயல்புத் தன்மை குறைந்து
விடும். கேடு விளைவிக்கக் கூடிய நஞ்சாக பால் மாறிவிடும்.
சிலர் பால் தண்ணியாக இருக்கிறது என்று வருத்தப்படுவார்கள். பால் தண்ணீரைப் போல இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனெனில், பாலில் 87 சதவிகிதம் தண்ணீர்தான் இருக்கிறது; 13 சதவிகிதம்தான் இதர வேதிப்பொருட்கள். இதில் நான்கு சதவிகிதம் கொழுப்பு; ஒன்பது சதவிகிதம் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள். இந்த நிலையில் உள்ள பால் தண்ணிப் பாலாகத்தான் காட்சி அளிக்கும். இதுதான் உடலுக்கும் நல்லது. ஒருவேளை பால் கெட்டியாக இருந்தால், ஒன்று அது கொழுப்பு, புரதம் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட பாலாக இருக்க வேண்டும்; அல்லது ஜெலாட்டின், மரவள்ளி கிழங்கு மாவு, ஜவ்வரிசி போன்ற வஸ்துகள் ஏதாவது சேர்க்கப்பட்ட பாலாக இருக்கும்.
முன்பெல்லாம் லேக்டோ மீட்டர் போட்டுப் பாலில் எவ்வளவு தண்ணீர் என்று சோதிப்பார்கள். தண்ணீர்ப்பாலில் யூரியா, ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ் கலந்து சோதித்தால் தண்ணீர் கலந்ததைக் கண்டுபிடிக்க முடியாது. சாதாரணமாக சைக்கிள் – டூவீலரில் கறந்த பால் என்று விற்பவர்கள் மேற்கொள்ளும் கலப்படம் இது.
அமுல், ஆவின் போன்ற நம்பிக்கையான பால் நிறுவனங்கள் கறந்த பாலைக் கொள்முதல் செய்து அது கெட்டுப் போவதற்கு முன்பே கொதிகலனில் காய்ச்சிய உடன் குளிரூட்டிப் பின் நிலைப்படுத்தப்பட்டு (அனுமதிக்கப்பட்ட கலப்படம்) பாக்கெட்டில் நிரப்பி விற்கின்றன. இது “பாஸ்சரைஸ்டு மில்க்” என்று அழைக்கப்படுகிறது. காய்ச்சிக் குளிரூட்டப்பட்ட பால் என்றும் கூறலாம். UHT (Ultra-High-Temperature processing) முறையிலும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்களில் அடைக்கப்படுகின்றது.
சாதாரணமாக இதைத்தான் பெரும்பான்மையான மக்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ராஜா பால், ராணி பால், அந்தப்பால், இந்தப்பால் என்று ஏராளமான பெயர்களில் பால் பாக்கெட்டுகள் பெட்டிக் கடைகளில்கூட விற்பனையாகி வருவதைப் பார்க்கின்றோம். இவையெல்லாம் நிஜமாகவே தரமான பால்தானா?
இதற்கு விடை காணும் முன்பு பதப்படுத்தப்பட்ட இதரப் பால் வகைகளையும் அறிவது நல்லது. இந்த இதர வகைப்பால் பிரிவில் கலப்பட வாய்ப்பு அரிது. கண்டன்ஸ்டு மில்க், பாலைச் சுண்டக்காய்ச்சி 50 சதவிகிதம் ஆவியாகும் முன் சர்க்கரையுடன் ஒரு ஆல்கலிப் பொருள் (புளிப்பும் காரப்பொருளும்) கலக்கப்படும். மேலை நாடுகளில் எவாப்பரேட்டட் மில்க், லாக்டிக் ஆசிட் மில்க், ஸ்கிம்டு லாக்டிக் ஆசிட் மில்க், புரோட்டீன் மில்க் என்றெல்லாம் பலவகை கூடுதல் விலையில் கிட்டும்.
ஆவின், பால் கிட்டத்தட்ட நாலரை சதவிகிதம் கலப்படம். அதாவது 95 சொச்சம் சதவிகிதம் தான் சுத்தம். இத்தனைக்கும் வாங்கும் பாலை, தரம் பிரித்து வாங்குவதாக, ஆவின் நிர்வாகம் மார்தட்டிக் கொள்கிறது. சரி என்னதான் நடக்கிறது. கறந்த பால் ஆவினுக்கு கொண்டு வரப்பட்டு, அதிலிருக்கும் கொழுப்புச் சத்து நீக்கப்படுகிறது. இதற்கு டோனிங் என்று பெயராம். அமுல், ஆவின் போன்ற பெரிய பொதுத்துறை பால் நிறுவனங்களில் பதனப்படுத்தும்போது கொழுப்பின் அளவைக் குறைக்க வெண்ணெய் எடுத்த பாலை மாவாக்கி அந்தப் பால் பவுடர் சேர்த்துத் தரப்படுத்தப்படுவதுண்டு. டோன்ட் மில்க் என்று வழங்கப்படும் அந்த வகைப் பால் அனுமதிக்கப்படுகிறது. அதில் புரதச்சத்து இருக்கும். இது மட்டுமே அனுமதிக்கப்பட்ட கலப்படம்.
இன்னொரு அதிர்ச்சியான உண்மை. சுத்தமான பாலுடன் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பால் பவுடரும் கலக்கப்படுவதுதான். கெட்டித் தன்மைக்கு இன்னொன்றும் செய்கிறார்கள். அதைக் கேட்டாலே மனம் அதிருது! டிடர்ஜண்ட் பவுடர்! பால் ஏன் வெள்ளையாக இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா? சுத்தமான கறந்த பால் வெள்ளையாக இருக்காது.
யூரியா போன்ற ரசாயனம் சேர்த்த பாலை அருந்தினால் வயிற்றுப்போக்கு, இரத்த சோகை ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
யூரியா போன்ற ரசாயனம் சேர்த்த பாலை அருந்தினால் வயிற்றுப்போக்கு, இரத்த சோகை ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. ஆகவே, வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கண்ட கண்ட பாக்கெட் பாலை வாங்க வேண்டாம். பாலில் உள்ள கலப்படத்தை நாமே வீடுகளில் சிறிய சோதனைகள் மூலம் கண்டறியலாம்.
சுருங்கக்கூறின் பால் தயாரிப்பது எப்படி? என்று
‘யூ டியூப்’ பில் போய் தட்டினால் போதும் அது கூறிவிடும். பால் என்பது இயற்கையாக
கிடைப்பதா? அல்லது செயற்கையாக கிடைப்பதா? என்று பாக்கெட் பாலை விரும்புவோர்
யோசிக்க வேண்டுமே!
பசும்பாலை மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பாலுக்கு எதிர்ப்பு சக்தி உண்டு என்றும் கூறப்படுகிறது. சிறார்களுக்கு நல்ல ஊட்ட உணவு. ஆனால் மருந்தே விஷமானால் மனித உடல் படும்பாடு என்ன?
நாம் அனைத்து காரியங்களிலும் குறிப்பாக உணவு பானம் விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட, அல்லாஹுத்தஆலா நல்லருள் புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment