Search This Blog

Saturday, 18 December 2021

நேசமுள்ளவர்கள்

 

நேசமுள்ளவர்கள்

 

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

 

நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு (எதிர்காலம் பற்றிய) எந்த அச்சமும் இராது. (கடந்த காலம் குறித்து) அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 10:62

 

அல்லாஹ்வை நன்கறிந்து அவனுக்கு எப்போதும் அடி பணிந்து நடந்து, அவனுடைய அன்புக்காகவே வணக்க வழிபாடுகள் புரிந்து வருபவரே அல்லாஹ்வின் நேசர் (வலியுல்லாஹ்) எனப்படுவார். நல்லொழுக்கத்துடனும், கடமையான வணக்க வழிபாடுகளையும் முறையாக நிறைவேற்றி, கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளிலும் கவனம் செலுத்தி வந்தால் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவராகலாம்.

 

இறைவனின் நினைவு வரும்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَوْلِيَاءُ اللَّهِ؟ ) "நாயகமே! இறைநேசர்கள் யார்?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( الَّذِينَ إِذَا رءُوا ذُكر اللَّهُ ) "அவர்களைப் பார்க்கும்போது இறைவனின் நினைவு வரும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அல்பஸ்ஸார், தஃப்சீர் இப்னு கஸீர்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خِيَارُ عِبَادِ اللّٰهِ اَلَّذِينَ اِذَا رُءُو ذُكِرَ اللّٰهُ ) யாரை கண்டால் அல்லாஹ்வின் சிந்தனை உண்டாகுமோ அத்தகையோர் தான் அல்லாஹ்வின் சிறந்த அடியார்கள் ஆவார்கள். அறிவிப்பாளர்:- அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹமத், மிஷ்காத் பக்கம்-415

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (خِیَارُکُم مَنْ ذَكَّرَكُم بِاللَّه رُؤْيَتُهُ، وَزَادَ فِي عِلْمِكُمْ مَنْطِقُهُ، وَرَغَّبَكُمْ فِي الْآخِرَةِ عَمَلُهُ ) “யாரைப் பார்த்தால் உங்களுக்கு இறைவனின் நினைவு ஏற்படுகிறதோ அவரே உங்களில் சிறந்தவர் ஆவார். அவரது பேச்சால் உங்களுக்கு (பயனுள்ள) கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அவரது செயல்களைப் பார்த்தால் உங்களுக்கு மறுமையில் பயன்தரும் நற்செயல்களில் ஈடுபட ஆசை பிறக்கும். நூல்:- கன்ஸுல் உம்மால், ஜாமிஉஸ் ஸஙீர்

 

பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தமது திருக்குர்ஆன் விரிவுரையில் கூறுகிறார்கள். ( فَكُلُّ مَنْ كَانَ تَقِيًّا كَانَ لِلَّهِ وَلِيًّا ) அல்லாஹ்வை அஞ்சி வாழும் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் நேசர் ஆவர்.

 

பயமறியேன்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான். ( مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَإِنْ سَأَلَنِي لأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لأُعِيذَنَّهُ ) எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். என்னிடம் கேட்டால், நான் நிச்சயம் தருவேன் என்னிடம் அவர் பாதுகாப்புக் கோரினால், நிச்சயம் நான் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6502

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَقُلِ الحَقَّ وَلَو عَلَى نَفسِكَ ) உனக்கு பாதகமாக இருந்தாலும் உண்மையையே சொல்! அறிவிப்பாளர்:- உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் நூல்:- அத்தர்ஙீப் வத்தர்ஹீப்

 

இறைநேசர் ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களின் வீட்டுக்குள் ஒருவர் அபயம் தேடி ஓடி வந்தார். ஹஜ்ஜாஜ் பின் யூசுபின் காவலர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அம்மனிதர் அன்னாரின் இல்லத்தில் நுழைந்து மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டார். காவலர்கள் அன்னாரைப் பார்த்து இங்கு இன்னார் வந்தாரே! அவர் எங்கே? என்று கேட்டனர். அன்னார், "உள்ளே தான் நுழைந்தார். தேடிப்பாருங்கள்" என்று கூறினார்கள்.

 

காவலர்கள் உள்ளே சென்று தேடியும் அவர் அகப்படவில்லை. வெளியே வந்த காவலர்கள், "பெரியவரே! தாங்கள் பெரும் வணக்கசாலியாக இருக்கிறீர்கள். இப்படி பொய் சொல்லலாமா?" என்று கேட்டனர். அன்னார், "நான் சொல்வது உண்மையே! உங்களுடைய கண்களுக்கு தெரியாவிட்டால் நான் என்ன செய்வது?" என்று கூறினார்கள். மீண்டும் காவலர்கள் உள்ளே நுழைந்து தேடியும் காணவில்லை. இவர் பைத்தியக்காரர் போலும் என நினைத்து வெளியேறிவிட்டனர்.

 

சற்று நேரம் கழித்து அபயம் தேடி வந்த அம்மனிதர் வெளியே வந்தார். "ஹபீபே! அடைக்கலம் நாடி வந்தவரை காட்டிக் கொடுக்கலாமா?" என்று கடிந்துகொண்டார். அன்னார், நான் தங்களை காட்டிக்கொடுக்கவில்லை. உண்மையை சொன்னேன். உண்மையைச் சொன்னதால் நீங்கள் பாதுகாக்கப்பட்டீர்கள். பொய்யுரைத்திருந்தால் உங்களையும் என்னையும் காவலர்கள் கைதிகளாக்கி, நாம் சிறைப்படுத்தப்பட்டிருப்போம்" என்று கூறினார்கள்.

 

அம்மனிதர், "நீ சொல்வது உண்மையே! நான் நுழைந்த பிறகு, நீர் ஏதோ வாய் முணுமுணுத்துக் கொண்டே இருந்தீரே! அது என்ன? என்று கேட்டார். அன்னார், "தாங்கள் நுழைந்தவுடன் ஆயத்துல் குர்சீ இருமுறையும், இக்லாஸ் அத்தியாயம் மூன்று முறையும், ஆமனர் ரசூல் 10 முறையும் ஓதி இறைவனிடம் முறையிட்டேன்" என்று கூறினார்கள்.

 

இவ்வார்த்தையைக் கேட்ட அம்மனிதர் கண்ணீர் வடித்து, "ஹபீபே! உம்முடைய பிரார்த்தனையால் அல்லாஹ் என்னை காத்தருள் புரிந்தான். காவலர்கள் என்னை தேடியபோது ஏழுமுறை அவர்களின் கரங்கள் என் மீது பட்டது. எனினும், என்னை அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்களுக்கும் எனக்கும் மத்தியில் அல்லாஹ் திரையிட்டு விட்டான்" என்று கூறி, ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களை வாழ்த்தினார்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ مِنْ أَعْظَمِ الْجِهَادِ كَلِمَةَ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ ) அநியாயக்கார ஆட்சியாளரிடம் நியாயத்தை எடுத்துரைப்பது, மாபெரும் அறப்போரில் அடங்கும்.  அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத், திர்மிதீ-2100, இப்னுமாஜா

 

பேரறிஞர் இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருந்தபோது மினாவில் கல்லெறியும் இடத்தில் மன்னர் மஹ்தீ அங்கு வந்திருந்தார். அவர் கல்லெறிவதற்கு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக காவலர்கள் ஹாஜிகளை தடியால் அடித்து துரத்தி கூட்டத்தை ஓரங்கட்டினார்கள். மக்கள் அவ்வாறு ஒதுக்கித் தள்ளப்பட்ட பின் மன்னர் மஹ்தீ கல்லெறிந்து தம் கடமையை முடித்தார்.

 

அப்போது அவரின் அருகே சென்று அம்மாமேதை மன்னரே! நீர் இவ்வாறு செய்திருப்பது எந்த வகையில் நியாயம்? அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்திற்கு வந்த போது எவரும் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தவில்லை. மக்களை ஒதுக்கித் தள்ளவுமில்லை. ஆனால் நீரோ மக்களை முன்னாலும் பின்னாலும் வலப்புறமும் இடப்புறமும் தள்ளிவிட்டு விரட்டியடிப்பதைக் காணுகிறேன். இது சரிதானா? என்று ஆவேசமாக முழங்கினார்கள்.

 

மன்னர், அசாத்திய துணிச்சலுடன் ஆணித்தரமாக முழக்கமிடும் இந்த பெரியவர் யார்? என்று வினவ, இவர்தான் "மாமேதை சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள்" என்று சொல்லப்பட்டது. உடனே மன்னர் அன்னாரை நோக்கி! இப்போது என்னிடம் இவ்வாறு கூறும் நீர் என் தந்தை மன்னர் மன்சூரிடம் இதை சொல்வதற்கு துணிவு பெறுவீரா? என்று கேட்டார். அப்போது சற்றும் சுணங்காமல் உன் தந்தைக்கு ஏற்பட்ட கதியை நீ அறிந்திருப்பீராயின் இவ்வாறு கூறுவதற்கு உமது நாவு எழுந்திருக்காது. உமது நிலையே வேறு விதமாக அல்லவா அமைந்திருக்கும்?" என்று மாமேதை கூறியதும், மன்னர் மேற்கொண்டு ஏதும் பேசுவதற்கு சக்தி இல்லாமல் மௌனமாகிப் போனார்.

 

வாளேந்தி எதிரியுடன் போரிடும்போது ஒன்று வெற்றி அல்லது தோல்வி, மரணம் அல்லது மகிழ்ச்சி. ஆனால்,  சர்வாதிகாரியான ஆட்சியாளர்களை எதிர்த்து நியாயத்தைப் பேசினாலோ எழுதினாலோ கிடைப்பது என்னவோ சாவு மட்டும்தான். எனவே, தப்பிக்க முடியாது என்று தெரிந்தே அநியாயக்காரனிடம் நியாயத்தைச் சொல்லத் துணிவு வேண்டும். அதுதான் பெரிய தியாகமாகும். அத்துடன் நியாயத்திற்கு ஒருகால் அந்தச் சர்வாதிகாரி இணைங்கிவிட்டால் அவன் மட்டுமல்ல; அவன் நாடே திருந்தவும் சீரடையும் வாய்ப்பு ஏற்படும். போர்க்களத்தில் எதிரிகளை மட்டுமே வீழ்த்த முடியும். இங்கு அப்படியல்ல. எனவே, சர்வாதிகாரியிடம் சத்தியத்தை உரக்கச் சொல்வதே உண்மையான அறப்போராகும்.

 

துயரப்படுவதில்லை

 

ஒருமுறை கௌசுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துகாதிர் ஸைலானீ (ரஹ்) அவர்கள் தம் வீட்டில் இருக்கும்போது ஒருவர் வந்து அன்னாரின் வியாபாரக் கப்பல் புயலில் சிக்கிக் கொண்டதாகக் கூறினார். அது கேட்ட அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள். அடுத்த நாள் மற்றொருவர் வந்து "புயலில் சிக்கிய தங்களின் கப்பல் தப்பித்துக் கொண்டது" என்று கூறினார். அது கேட்டும் அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள்.

 

இவ்விரு நிகழ்ச்சிகளையும் கண்டு, பெரிதும் வியப்புற்ற ஒருவர் கௌசுல் அஃலம் அவர்களிடம் "தங்களின் கப்பல் புயலில் தப்பிய செய்தி அறிந்து அல்ஹம்துலில்லாஹ் என்று தாங்கள் கூறியதைப் புரிந்து கொண்டேன். ஆனால் நேற்று ஒருவர் வந்து தங்களின் கப்பல் புயலில் சிக்கிக்கொண்டன என்று கூறிய பொழுதும் தாங்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறியது தான் எனக்கு புரியவில்லை!" என்று வினவினார்.


அதற்கு அன்னார், "கப்பலை இழந்ததற்காகவோ, அவற்றை மீளப் பெற்றதற்காகவோ நான் இறைவனைப் புகழவில்லை. இழப்பு செய்தி அறிந்து என் மனம் சிறிதும் கவலைப்படாமல் இறைவன் நாட்டத்தை இனிமையுடன் ஏற்றுக் கொண்டது கண்டு இறைவனைப் புகழ்ந்தேன். இரு எதிர் மாறான நிலைகளிலும் இறைவனின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் மனநிலையை எனக்குத் தந்த இறைவனை நான் என்றென்றும் புகழ்ந்து கொண்டிருப்பேன்" என்று அவர்கள் கூறினார்கள்.

 

பயம் - கவலை

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், "இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட காலம் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

 

அப்போது அண்ணலார், "(ஏற்கனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளுக்காகவும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரங்களுக்காகவும் நீ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறாய். அல்லாஹ் அவற்றில் எதையும் அதற்குரிய நேரத்திற்கு முன்பே கொண்டு வரமாட்டான்; அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தவும் மாட்டான். ( وَلَوْ سَأَلْتِ اللَّهَ أَنْ يُعَافِيَكِ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ لَكَانَ خَيْرًا لَكِ ) அல்லாஹ்விடம் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் காக்கும்படி நீ வேண்டியிருந்தால் உனக்கு நன்றாயிருந்திருக்கும்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-5177

 

ஆமிர் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் பூமியில் இருந்து ஒரு துரும்பை எடுத்து வைத்துக்கொண்டு, ( يَا لَيتَنِي كُنتُ هٰذِهِ التِّبنَةَ لَيتَنِي اَخلُق ) "கைசேதமே நான் இந்த துரும்பாக இருந்திருக்கக் கூடாதா? நான் படைக்கப்படாமல் இருந்திருக்கக்கூடாதா? (மறுமைநாளில் என் நிலை என்னவாகும்) என்று எண்ணி புலம்பி கொண்டிருப்பார்கள். நூல்:- இப்னு அசாகீர், அபீநயீம், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-140

 

ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களை காண  வந்த ஒருவர், அன்னாரை நோக்கி! அல்லாஹ் உங்களுக்கு ஆயுளை அதிகப்படுத்துவானாக! என்று பிரார்த்தித்தார். இதைக்கேட்ட அன்னார், சகோதரரே! எனக்காக நீங்கள் கேட்கின்ற இந்த கோரிக்கை ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. (மனித ஆயுள் என்பது தலைவிதியின் படி ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது.) எனவே, நீங்கள் எனது இறுதி முடிவு நல்லபடியாக அமைய பிரார்த்தியுங்கள். இதுவே பொருத்தமான பிரார்த்தனையாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

 

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் தனது இறுதிநேரத்தில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்கள். "ஏன் அழுகிறீர்கள்? உங்களின் பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லாஹ்வின் மன்னிப்பு அதைவிட பெரியதல்லவா?" என்று அருகிலிருந்தோர் ஆறுதல் சொன்னபோது, அன்னார், "என் பாவங்கள் மலையளவு இருந்தாலும் நான் இறைநம்பிக்கையோடு மரணிப்பது உறுதியாக இருந்தால் எதற்கும் நான் கவலைப்பட மாட்டேன்" என்று கூறினார்கள்.

 

உண்மையான இறைநேசர்கள் நிகழ்ந்து முடிந்தவற்றை எண்ணி, கவலைப்படவும் மாட்டார்கள்; எதிர்காலத்தில் நிகழயிருப்பவற்றை எண்ணி, பயப்படவும் மாட்டார்கள். காரணம், அல்லாஹ் நாடாமல், அவனை மீறி எதுவும் நிகழப்போவதில்லை என்பதில் ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள்.

 

ஆனால், அவர்கள் தமது இறுதிநிலையை எண்ணி, அச்சம்கொள்வார்கள். காரணம், சிலர் நபித்தோழர்களாக சில காலம் வாழ்ந்து, பிறகு இறைமறுப்பாளர்களாக மாண்டுள்ளார்கள். வாழும் காலத்தில் இறைநேசர்களைப் போன்று வாழ்ந்த சிலர், தமது இறுதிநேரத்தில் இறைநம்பிக்கையை இழந்துள்ளார்கள். குர்ஆன் கூறும் பல்ஙாம் பின் பாகூரா என்ற மனிதரைப்போன்று.

 

ஆகவே, அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் இறைநேசர்களின் பண்புகளுடன் வாழச்செய்து, நமது இறுதிநேரத்தில் இறைநம்பிக்கையோடு இறக்கச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...