இதயங்கள் வசப்படும்
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ
(நபியே!) நீங்கள்
நல்லுபதேசம் செய்யுங்கள். நிச்சயமாக நல்லுபதேசம் இறைநம்பிக்கையாளர்களுக்கு பயனளிக்கும்.
திருக்குர்ஆன்:- 51:55
நாவன்மை இறைவன் மனிதனுக்கு
வழங்கியுள்ள மிகப்பெரிய அருட்கொடையாகும். அது அருட்கொடை மட்டுமல்ல; அது உள்ளங்களை வசீகரிக்கும் சிறந்த ஆயுதமாகும்.
துப்பாக்கிகளால், பீரங்கிகளால் சாதிக்க முடியாததை ஒரு அறிவுப்பூர்வமான
உணர்ச்சியுடன் கூடிய உரையினால் சாதிக்க முடியும் என்பதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள்
உள்ளன. தான் பெற்றிருந்த நாவன்மையை வைத்து மக்களைக் கவர்ந்து அவர்களைக் கட்டிவைத்து
உலகை ஆட்சி செய்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு.
நாவன்மையை நல்லதற்குப்
பயன்படுத்தும்போது மிகுந்த பயனைத்தரும். தீமைக்குப் பயன்படுத்தும்போது அவை போன்ற மோசமான சொல்லம்பு வேறு
கிடையாது.
இமாம் அபூ உஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். யார் தமது சொல்லிலும் செயலிலும் சுன்னத்தை நடைமுறைப்படுத்துகிறாரோ அவர் நாவிலிருந்து ஞானமொழிகள் வெளிப்படும். மாறாக, தன்னுடைய மனவிருப்பத்திற்கேற்ப செயல்படுபவாரேயானால் அவருடைய நாவிலிருந்து 'பித்அத்'தின் (அடிப்படையற்ற நூதன) சொற்கள் தான் வெளிப்படும். நூல்:- அல்மஃபாஹீம் யஜிபு அன் துஸஹ்ஹிஹ
அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. இரண்டு மனிதர்கள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து
வந்து உரையாற்றினார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள்
வியந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( إِنَّ مِنَ الْبَيَانِ لَسِحْرًا ) "நிச்சயமாக சில சொற்பொழிவுக்கு
வசீகரிக்கும் தன்மை உண்டு" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5767, அபூதாவூத்-4354, முஸ்னது அஹ்மத்-2298
இந்த நபிமொழியில்
"வசீகரம்" என்பதைக் குறிக்க "சிஹ்ர்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
இதற்கு "சூனியம்" என்ற பொருளும் உண்டு. சூனியக்காரன் தன் செயல்களால் அடுத்தவரின்
கவனத்தைத் திசை திருப்பிவிடுவதுபோல், சிறந்த பேச்சாளரும்
தம் நாவன்மையால் கேட்போரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிடுவார்.
ஹிஜ்ரீ 9 ஆம் ஆண்டு பனூ தமீம் குழுவினர் மதீனா வந்தனர்.
மதீனாவுக்குக் கிழக்கே தங்கியிருந்தனர். அருமை நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தபோது அவர்களில் இருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டனர். அதுவும் அடுக்குமொழியில்; எதுகை மோனையில். வாய்ச் சண்டையில் இறுதியாக அவர்களில்
ஒருவர் இப்படிச் சொன்னார்:
இவர் மனமெல்லாமல்
அழுக்கு! பணமெல்லாம் புதிதாக வந்த செருக்கு! இவர் ஒரு முட்டாள் தகப்பன்! உறவைக் கெடுப்பவன்.
நான் முன்னர் சொன்னதும் உண்மை; பின்னர் சொன்னதும்
பொய்யன்று. "இவர்களின் சொற்போரைக் கேட்டுக்கொண்டிருந்தபோது தான் நபியவர்கள், "சில உரைகளில் வசீகரம் உண்டு" என்றார்கள். நூல்:-
துஹ்ஃபத்துல் அஹ்வதீ
இமாம் தஹபீ (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். இமாம் முஹம்மது பின் மைமூன் (ரஹ்) அவர்களுக்கு 'ஸுக்கரீ- இனிப்பானவர்' என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டது. "அவர் இனிப்பு வியாபாரியல்ல; இனிமையாகப் பேசுவதால் அப்பெயர் சூட்டப்பட்டது.
மார்க்கத்தில் தக்கவைத்தனர்
நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த அந்த தருணத்தில் நபித்தோழர்கள் பலரும் செய்வதறியாது பேரதிர்ச்சியில் காணப்பட்டார்கள். திகைத்துப் போனார்கள். சிலர் இனி இஸ்லாமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டனர். வேறு சிலர் வெளிப்படையாகவே இஸ்லாமிய மார்க்கத்தைவிட்டு வெளியேறிச் சென்றனர். அவர்களின் பழைய தெய்வங்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். இப்படியே விட்டால் இந்த மக்களை காப்பாற்ற முடியாது. இந்த இக்கட்டான நேரத்தில் மக்களை இஸ்லாமிய மார்க்கத்தில் தக்கவைக்க வேண்டும்.
அதற்காக மதீனாவில் (மக்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி) அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளத்தை தொடும் விதமாக ( أَمَّا بَعْدُ، فَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ مُحَمَّدًا صلى الله عليه وسلم فَإِنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم قَدْ مَاتَ، وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَىٌّ لاَ يَمُوتُ، قَالَ اللَّهُ تَعَالَى ) "இறைவாழ்த்துக்குப்பின் உங்களில் யார் இதுவரை முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் (இப்போது) இறந்துவிட்டார்கள். (மாறாக) யார் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்.” என்று கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.
மேலும் உயர்ந்தோன்
அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மத் (ஓர் இறைத்)தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும்
(இறைத்)தூதர்கள் பலர் வாழ்ந்து சென்றுவிட்டார்கள்; அவர் இறந்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் உங்கள் காலடி சுவடுகளின் வழியே (புறங்காட்டி
பழைய பாதைக்குத்) திரும்பி விடுவீர்களா? அப்படி யாரேனும் கால்
சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவாரானால், அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிவிரைவில் நற்கூலியை
வழங்குவான்" (3:144) என்று இவ்வாறு அழகான முறையில் உரை நிகழ்த்தினார்கள். (புகாரீ-1242)
மக்கா மாநகர மக்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி, சொற்பொழிவு மேடையில் ஏறி நின்று, மக்காவில் தடுமாற்றத்தில் இருந்த மக்கள் உள்ளங்களைத் தொடும் விதமாக சுஹைல் பின் ஆமிர் (ரலி) அவர்கள், "குறைஷிகளை! நீங்கள் முதல் முஸ்லிம்களாகவும் மதம் மாறக்கூடியோர்களுள் முதன்மையானோராகவும் ஆக வேண்டாம்" அதாவது அல்லாஹ்வின் தூதரை ஏற்றுக்கொண்டு முதல் கட்டத்திலேயே முஸ்லிம்களாக மாறினீர்கள். இதுவரை முஸ்லிம்கள் யாரும் மதம் மாறவில்லை. எனவே, மதம் மாறுவதைத் தொடங்கி வைப்பதில் முதன்மையானோராக ஆகிவிடாதீர்கள். அப்படிச் செய்தால் பின்வருவோரின் பாவமும் உங்களையேச் சாரும். அதுமட்டுமல்ல, இந்த மார்க்கம் இத்துடன் ஓய்ந்துவிடாது. சூரியனும் சந்திரனும் போகுமிடமெல்லாம் இம்மார்க்கம் போகும்” என்று இவ்வாறு அழகான முறையில் சொற்பொழிவாற்றினார்.
இந்த அழகிய சொற்பொழிவைக் கேட்ட அம்மக்கள், மனம் மாறினர். மக்கா, மதீனா மாநகர மக்களின் மனங்களை சுஹைல் பின் அம்ர் (ரலி), அபூபக்ர் (ரலி) ஆகிய இருவரின் சொற்பொழிவுகள் மனங்களை மாற்றிப்போட்டது. அவர்கள் அனைவரையும் இஸ்லாத்தில் இருக்குமாறு நிலைபடுத்தியது.
அண்ணல் நபி (ஸல்)
அவர்களின் இறப்புக்கு பின்னர் இஸ்லாம் நிலைபெற இந்த இரண்டு சொற்பொழிவுகளும் காரணமாக
அமைந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மனதிற்கு இதமாக
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு "ஹவாஸின்"
குலத்தாரின் செல்வத்தை (போரின்றி வெற்றிப் பரிசாக) அளித்தபோது, நபியவர்கள் (புதிதாக
இஸ்லாத்தை தழுவிய) சில குறைஷியருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். அப்போது
அன்சாரிகளில் (இளைஞர்கள்) சிலர் "நபியவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான)
குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்)
இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை
விட்டுவிடுகின்றார்களே!" என்று (கவலையுடன்) கூறினர்.
அவர்களின் இந்தப்
பேச்சு நபியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி நபியவர்கள் அன்சாரிகளுக்கு ஆள்
அனுப்பி அவர்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்கள் ஒன்று கூடியதும் அவர்களிடம்
நபியவர்கள் வந்து, ( مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ ) "உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?) என்று கேட்டார்கள்.
அதன் பிறகு நபியவர்கள், ( فَإِنِّي
أُعْطِي رِجَالاً حَدِيثِي عَهْدٍ بِكُفْرٍ أَتَأَلَّفُهُمْ أَفَلاَ تَرْضَوْنَ أَنْ
يَذْهَبَ النَّاسُ بِالأَمْوَالِ وَتَرْجِعُونَ إِلَى رِحَالِكُمْ بِرَسُولِ اللَّهِ
فَوَاللَّهِ لَمَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمَّا يَنْقَلِبُونَ بِهِ ) "இறைமறுப்பை விட்டு
இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் மூலமாக
இஸ்லாத்தில் அசையாத நம்பிக்கையையும் ஒட்டுறவையும் ஏற்படுத்தி) அவர்களது உள்ளங்களுடன்
நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலகச் செல்வங்களை எடுத்துக்கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு
இறைத்தூதரை கொண்டு செல்வதை விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள்
பெற்றுத் திரும்பும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்.
( لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَ الأَنْصَارُ شِعْبًا لَسَلَكْتُ
شِعْبَ الأَنْصَارِ ) மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு
கணவாயில் நடந்து சென்றால் நான் அன்சாரிகளின் கணவாயிலேயே செல்வேன். ( الأَنْصَارُ شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ وَلَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ
امْرَأً مِنَ الأَنْصَارِ ) அன்சாரி(களாகிய நீங்)கள் மேனியுடன் ஒட்டிய உள்ளாடைகள்
போன்றவர்கள். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள். ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது)
மட்டும் நடந்திராவிட்டால், நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன்"
என்று (அவர்களுக்கு எதார்த்த நிலையை புரியவைக்கும் விதமாகவும், ஆறுதலளிக்கும் விதமாகவும்)
உரையாற்றினார்கள். நூல்:- முஸ்லிம்-1910, 1911,
1917
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களின் இந்த உரை செவியுற்ற நபித்தோழர்களில் பலரும் பரவமடைந்து, ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
நற்பண்புகளை
விவரித்தல்
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபோது ஹவாஸின் குலத்தாரின் குடியிருப்புகளுக்கு அருகே
வளர்ந்து வந்தார்கள். எனவே, பிற்காலத்தில் அவர்கள் இறைத்தூதரானபோது, அக்குலத்தார் இஸ்லாமிய
மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதைப் பெரிதும் விரும்பினார்கள். ஆனால், அவர்களோ படையைத் திரட்டிக்கொண்டு
தமக்கெதிராகப் போரிடத் தயாராகிவிட்டனர் என்ற செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது. ஆகவே, நபியவர்கள் அக்குலத்தாரோடு
போரிட்டார்கள். அல்லாஹ் நபியவர்களுக்கு வெற்றியையும், போர் செல்வங்களையும்
கொடுத்தான்.
நபியவர்கள் ஹவாஸின்
குலப் பெண்களையும், சிறுவர்களையும் கைதியாக பிடித்து "ஜிஇர்ரனா"
எனும் இடத்தில் தனிமையில் வைத்திருந்தார்கள். ஆகவே, நபியவர்களிடம் கைதியாக பிடிக்கப்பட்டுள்ள
பெண்களையும் சிறுவர்களையும் விடுவிப்பதற்காக அவர்களில் சொல்நயமிக்க மிக திறமையாகப்
பேசக்கூடிய "ஸுஹைர் பின் ஸுரத்" என்பவரை தேர்ந்தெடுத்து பேச அனுப்பிவைத்தனர்.
அவர் நபியவர்களிடம்
வந்து, ( يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مَا فِي الْحَظَائِرِ مِنِ السَّبَايَا خَالَاتُكَ
وَعَمَّاتُكَ وَحَوَاضِنُكَ اللَّاتِي كُنَّ يَكْفُلْنَكَ، وَلَوْ أَنَّا مَلَحْنَا
لِابْنِ أَبِي شَمِرٍ أَوِ النُّعْمَانِ بْنِ الْمُنْذِرِ، ثُمَّ أَصَابَنَا مِنْهُمَا
مِثْلُ الَّذِي أَصَابَنَا مِنْكَ، رَجَوْنَا عَائِدَتَهُمَا وَعَطْفَهُمَا، وَأَنْتَ
يَا رَسُولَ اللَّهِ خَيْرُ الْمَكْفُولِينَ ) "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் படையினரால் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள அனைவரும் உண்மையில்
(உங்களுடைய உறவினர்களே. அவர்களுள் உங்களின்) தாய்வழி, தந்தைவழி அத்தைகளும்
உள்ளனர். நீங்கள் சிறுவராக இருந்தபோது உங்களைத் தம் கைகளில் சுமந்து வளர்த்த வளர்ப்புத்தாய்களும்
உள்ளனர். அதுபோலவே, எங்கள் குலப்பெண்கள் ஹாரிஸ் பின் அபூஷிமர், நுஅமான் பின் முந்திர்
ஆகிய இரண்டு அரசர்களையும் வளர்த்துள்ளனர். நீங்கள் எங்கள்மீது படையெடுத்து வந்துள்ளதைப்போல்
அவர்கள் எங்கள்மீது படையெடுத்து வந்து,
நாங்கள் அவர்களிடம்
"எங்கள்மீது இரக்கம் காட்டுங்கள்" என்று கோரிக்கை வைத்திருந்தால், அவர்கள் தம் கடமையை
உணர்ந்து, எங்கள் கோரிக்கையை உடனடியாக ஏற்றிருப்பார்கள். அதே
நேரத்தில் அவர்களோ உங்களைப் போன்று இளகிய உள்ளம் கொண்டவர்கள் அல்லர். ஆனால், நீங்களோ இளகிய உள்ளம்
கொண்டவர். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஒரு தடவை உணர்த்தினாலே
உங்கள் கடமை குறித்து எளிதில் புரிந்து கொள்பவர்" என்று கூறிவிட்டு சில கவிதைகளைப்
பாடினார். அதன்பிறகு நபியவர்கள் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள். நூல்:-
அல்பிதாயா வந்நிஹாயா, இஸ்தம்திஃ பிஹயாதிக்க பக்கம்-284
அம்மனிதர் தம் கோரிக்கையை
முன்வைப்பதற்கு முன்பு எவ்வாறு தம் முதற்கட்ட பேச்சை தொடங்கினார் என்பதை சிந்தித்துப்
பார்க்க வேண்டும். ஹவாஸின் பனூ சஅத் குலத்தாரின் குடியிருப்புக்களிடையே நபியவர்கள்
தம் சிறுபிராயத்தில் வளர்ந்த விதத்தை அவர்களுக்கு நினைவூட்டினார்.
பின்னர் அவர்களுடைய
பெருந்தன்மையை, எந்த அரசரின் உள்ளத்திலாவது பெருந்தன்மை இருக்குமென்றால், தங்களின் உள்ளத்திலும்
நிச்சயமாகப் பெருந்தன்மை இருக்கவே செய்யும் எனும் வார்த்தையால் குறிப்பிட்டார். நபியவர்கள்
யதார்த்தமாகவே எல்லாம் மக்கள்மீதும் அன்பு கொண்டவர்கள். ஆக, சரியான இடத்தில் மிகச்
சரியான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியுள்ளார். அதுவே, அவரது வெற்றிக்கு
காரணமாக அமைந்தது.
மனித உள்ளங்களில்
உட்புகுந்து வாட்கள் செய்யாததை வார்த்தைகள் செய்யும்.
அழ வைத்தது
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. (ஒரு நாள்) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள்.
(தொழுகை முடிந்து) சலாம் கொடுத்த பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீதேறி உலக முடிவுநாள் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
அந்த நாளில் பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் அதைப்பற்றி விவரித்தார். அப்போது
(அதுகேட்ட) மக்களின் அழுகை அதிகமாயிற்று. நூல்:- புகாரீ-7294
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் நஜாஷீ மன்னரின் நாட்டுக்கு (அபிசீனியவிற்குப்) புலம்பெயர்ந்து செல்லுமாறு ஆணையிட்டார்கள். அங்கு சென்று நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். இதையறிந்த மக்கா இணைவைப்பாளர்கள் மதிநுட்பம் நிறைந்த இருவரை அனுப்பி முஸ்லிம்களை அழைத்து வருவதற்கு அனுப்பி வைத்தனர். அந்த இரு இணைவைப்பாளர்கள் மன்னரிடம் வந்து, “எங்களைச் சேர்ந்த சிலர் உங்கள் நாட்டில் தஞ்சமடைத்துள்ளனர். அவர்கள் தவறானவர்கள். அவர்களை எங்களுடன் அனுப்பிவைய்யுங்கள்” என்று கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் மன்னர் எங்களை வர சென்று அதுபற்றி விசாரித்தார். முஸ்லிம்களில் பேச்சாளராக இருந்த ஜஅஃபர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்.
நஜாஷீ மன்னர் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் உங்கள் சமூக மக்களின் மார்க்கத்தை விட்டு விலகி, யூத மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் சேராமல் நீங்கள் இருந்து வரும் இந்த மார்க்கம் யாது?" என்று கேட்டார்.
அதற்கு ஜஅஃபர் (ரலி) அவர்கள், ( أَيُّهَا الْمَلِكُ، كُنَّا قَوْمًا عَلَى الشِّرْكِ، نَعْبُدُ الْأَوْثَانَ، وَنَأْكُلُ الْمَيْتَةَ، وَنُسِيءُ الْجِوَارَ، وَنَسْتَحِلُّ الْمَحَارِمَ بَعْضُنَا مِنْ بَعْضٍ، فِي سَفْكِ الدِّمَاءِ وَغَيْرِهَا، لَا نُحِلُّ شَيْئًا وَلَا نُحَرِّمُهُ ) "மன்னரே! நாங்கள் சிலைகளை வழிபட்டும், செத்ததை உட்கொண்டும், அண்டை வீட்டாருக்கு மோசம் செய்தும், தடைசெய்யப்பட்டவற்றை ஆகுமானதாகக் கருதியும் வந்த இணைவைப்பு சமூகத்தினராக இருந்தோம். எங்களில் சிலர் சிலருக்கு கொலை உள்ளிட்ட (தீய) காரியங்கள் பல புரிந்து வந்தோம். எதையும் கூடுமென்றோ கூடாதென்றோ பார்க்க மாட்டோம் (அனைத்தையும் செய்தோம்).
( فَبَعَثَ اللَّهُ إِلَيْنَا نَبِيًّا مِنْ أَنْفُسِنَا، نَعْرِفُ وَفَاءَهُ
وَصِدْقَهُ وَأَمَانَتَهُ، فَدَعَانَا إِلَى أَنْ نَعْبُدَ اللَّهَ وَحْدَهُ لَا شَرِيكَ
لَهُ، وَنَصِلَ الْأَرْحَامَ، وَنَحْمِيَ الْجِوَارَ، وَنُصَلِّيَ لِلَّهِ عَزَّ وَجَلَّ،
وَنَصُومَ لَهُ، وَلَا نَعْبُدَ غَيْرَهُ ) இந்நிலையில் அல்லாஹ் எங்களிலிருந்தே
எங்களுக்கு ஒரு இறைத்தூதரை அனுப்பினான். அவரின் அவரின் வாக்குறுதிகள் அவரின் உண்மை
(நிலை) மற்றும் அவரின் அடக்க பொருட்கள் ஒப்படைக்கும் தன்மை ஆகியவற்றை நாங்கள் அறிவோம்.
அவர் எங்களை அல்லாஹ் ஒருவனை மட்டுமே வழிபட வேண்டும்; அவனுக்கு இணை கிடையாது; உறவினர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும்; அண்டைவீட்டாரின் உரிமையை பாதுகாக்க வேண்டும்;
மாண்பும் வல்லமையும் கொண்ட
அல்லாஹ்விற்காக தொழ வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும்.
அவனைத் தவிர வேறு யாரையும் வழிபடக்கூடாது என்பதை நோக்கி அழைக்கிறார்" என்று கூறினார். இந்த பேச்சு நஜாஷீயை கவர்ந்து விட்டது.
மேலும் நஜாஷி மன்னர்,
ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் (
مَا يَقُولُ صَاحِبُكُمْ فِي ابْنِ مَرْيَمَ؟
) "மரியமின் புதல்வர் குறித்து உங்கள் தோழர் (முஹம்மத்) என்ன கூறுகிறார்"
என்று வினவினார். அதற்கு ( يَقُولُ فِيهِ قَوْلَ
اللَّهِ ; هُوَ رُوحُ اللَّهِ وَكَلِمَتُهُ، أَخْرَجَهُ مِنَ الْعَذْرَاءِ الْبَتُولِ،
الَّتِي لَمْ يَقْرَبْهَا بَشَرٌ، وَلَمْ يَفْرِضْهَا وَلَدٌ ) “அவர்கள், அவர் குறித்து அல்லாஹ்வுடைய
கூற்றையே கூறுகிறார். (அதாவது) அவர் அல்லாஹ்விடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர் ஆவார்.
எந்த மனிதனும் நெருங்காத (முன்பு) எந்தக் குழந்தையும் உருவாகாத அல்லாஹ்விற்காகத் துறவு
நிலை மேற்கொண்ட கன்னிப் பெண்ணான மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகுக எனும்) ஒரு வார்த்தையால்
உருவானவர் ஆவார்" என்று கூறினார்.
(இதை செவியுற்ற) நஜாஷீ மன்னர், எங்கள் கொள்கையும் அதுவே ஆகும் என்று கூறிவிட்டு, (எங்களை நோக்கி) ( مَرْحَبًا بِكُمْ وَبِمَنْ جِئْتُمْ مِنْ عِنْدِهِ، فَأَنَا أَشْهَدُ أَنَّهُ رَسُولُ اللَّهِ، وَأَنَّهُ الَّذِي بَشَّرَ بِهِ عِيسَى، وَلَوْلَا مَا أَنَا فِيهِ مِنَ الْمُلْكِ لَأَتَيْتُهُ حَتَّى أُقَبِّلَ نَعْلَيْهِ، امْكُثُوا فِي أَرْضِي مَا شِئْتُمْ ) “உங்களுக்கு உங்களை அனுப்பி வைத்தோருக்கும் நல்வரவு உண்டாகுக! அவர் அல்லாஹ்வின் தூதர் என்றும், அவர் ஈசா (அலை) அவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்டவர் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன். நான் இங்கு ஆட்சியாளனாக இல்லையெனில் நான் அவரிடம் வந்து அவரது காலணிகளை முத்தமிட்டிருப்பேன்” என்றார்.
மேலும், (ஜஅஃபர் - ரலி அவர்களிடம்) ( هَلْ مَعَكَ شَيْءٌ مِمَّا جَاءَ بِهِ؟ ) "அவர் கொண்டு வந்தது
ஏதும் (வேத வசனம்) உன்னிடம் உள்ளதா? என்று கேட்டார். அதற்கு ஜஅஃபர் (ரலி) அவர்கள் "ஆம்; (என்னிடம் உள்ளது) என்று கூறி, காஃப், ஹா, யா, ஐன், ஸாத் எனத் தொடங்கும் (19 ஆவது) அத்தியாயத்தின்
ஆரம்ப வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! நஜாஷீ மன்னர்
தாடி நனையும் அளவுக்கு அழுதார். அவரின் தலைமை வேதஞானிகள் தமது ஏடுகள் நனையும் அளவு
அழுதனர். அதன் பிறகு மன்னர் நஜாஷீ, (முஸ்லிம்களே!) ( امْكُثُوا فِي أَرْضِي مَا
شِئْتُمْ
) "நீங்கள் என் நாட்டில் நீங்கள் விரும்பிய இடங்களில் தங்கிக்கொள்ளுங்கள்"
என்று கூறினார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
ஒரு பேச்சாளர்
ஒன்றைப்பற்றி மிகவும் உருக்கமாகவும் நெகிழவைக்கும் தன்மையுடனும் பேசும்போது, அதை
கேட்போர் கண்ணீர் வடித்துவிடுவார்கள். ஆம்! ஒரு திறமையான பேச்சாளரின் பேச்சு, கல்மனம்
கொண்டவர்களையும் கரைய வைத்துவிடும்.
அன்சாரிகளின் பேச்சாளர்
ஒருமுறை பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். பின்னர் அவர்கள் ஒரு பேச்சாளர் எழுந்து நின்று அவர்களின் குலப்பெருமையைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.
எனவே, நபியவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களை எழுந்து தம் சார்பாக அவருக்குப் பதிலளித்துப் பேசுமாறு கட்டளையிட்டார்கள். நபியவர்களின் அவைப் பேச்சாளராகத் திகழ்ந்த ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் உடனே எழுந்து நின்று, இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றியும், இறைத்தூதரின் வருகையைப் பற்றியும், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதால் கிடைத்த நிம்மதியான வாழ்க்கையை பற்றியும் அரபு மொழியின் உயரிய இலக்கிய நயத்தோடு எடுத்துரைத்தார். அவர் பேசி முடித்ததும் நபியவர்களும் நபித்தோழர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.
நபியவர்கள், ஒரு தலைசிறந்த பேச்சாளராக அவரை மக்கள் முன் அடையாளப்படுத்தினார்கள்.
ஸாபித் பின் கைஸ்
(ரலி) அவர்களை "கதீபுல் அன்ஸார்" அன்சாரிகளின் பேச்சாளர் என்றும்,
"கதீபு இஸ்லாம்" இஸ்லாமிய பேச்சாளர் என்றும், "கதீபுந் நபி" நபியவர்களின் பேச்சாளர் என்றும்
வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
வாளால்
வெட்டுவதைப் போன்று
அபூழப்யா (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. ஒரு மனிதர் எழுந்து நின்று நீண்டதோர் உரையாற்றினார். அப்போது (அங்கிருந்த)
அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள்,
"இவர் தம்முடைய உரையில் நடுத்தரத்தை
கையாண்டிருந்தால் அது அவருக்கு நன்மையாக அமைந்திருக்கும். ஏனென்றால், 'சுருக்கமாக, செறிவான கருத்துக்களைப் பேசவே எனக்கு தெரியும்.
அல்லது எனக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ஏனெனில் போதுமான அளவு சுருக்கமாக, செறிவான கருத்துக்களைப் பேசுவதே சிறந்ததாகும்' என்று அருமை நாயகம்
(ஸல்) அவர்கள் அறிவுரை கூற நான் செவியுற்றுள்ளேன்" என்று கூறினார்கள். நூல்:-
அபூதாவூத்-4355
ஒரு பேச்சாளர் நீண்ட
நெடுநேரம் சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு, "எனது பேச்சில் எந்தப்
பகுதியை உங்கள் உள்ளத்தைக் கவர்ந்தது" என்று கேட்டபோது, "நீங்கள் நிறைவு செய்யும்போது, இத்துடன் எனது சொற்பொழிவை முடித்துக்கொள்கிறேன் என்று சொன்னபோது, நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" என்று மக்கள் பதிலளித்தார்களாம்.
ஒரு பொதுக்கூட்டத்தில்
பேச்சாளர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்தில் ஒருவன் திடீரென கூரான வாளை
வைத்துக்கொண்டு யாரையோ வெட்டுவதற்கு அங்கும் இங்குமாக தேடிக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த
பேச்சாளர் அதிர்ந்து பயத்தோடு நடுங்கிக் கொண்டிருக்கும்போது, வாளை வைத்துக்கொண்டிருப்பவன்
அந்த பேச்சாளரிடம், "நீர் பேசிக்கொண்டிருக்கலாம். உம்மை ஒன்றும்
செய்யபோவதில்லை. உம்மை இங்கு பேச்சாளராக அழைத்து வந்தவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்"
என்றான்.
திருக்குர்ஆனை அழகிய
குரலில் ஓத கேட்டால் மிகவும் இனிமையாக இருக்கும். அதில் நேரம் போவதே தெரியாது. ஆனாலும், பிறருக்கு தொழ வைக்கும்போது
திருக்குர்ஆனை நீண்ட நேரம் ஓதி மக்களுக்கு சடைவு ஏற்படுமாறு தொழ வைக்கக்கூடாது. இதுவே, மார்க்கத் தீர்ப்பாகும்.
தொழுகையிலேயே மக்களுக்கு
சோர்வை ஏற்படுத்தக்கூடாதெனில், தமது சொற்பொழிவில்
சோர்வை ஏற்படுத்துவது முறையாகுமா? என்பதை பேச்சாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சொல் அலங்காரம்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மாடு தனது நாக்கை அசைத்து அசைத்து அசை போடுவதைப் போல் (வலிந்து) சொல் அலங்காரத்துடன் நாவைச் சுழற்றிப் பெரும்பேச்சு பேசும் மனிதன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அறிவிப்பாளர்:- இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4362
பேணுதலின்றி மனம்
போன போக்கில் அளவுக்கதிகமாக மிகைப்படுத்தி பேசுதல், அடுக்குமொழியென சொல் அலங்காரத்தில் மட்டும் கவனம்
செலுத்துதல் ஆகியவை இறைவன் விரும்பாத செயலாகும் என்று இந்நபிமொழி கண்டனம் தெரிவிக்கிறது.
சொட்டு மருந்து போடப்படும்
ஒரு கூட்டத்தில் ஒருவர் பேசுகிறார்: உனக்கு வந்த போலியோ, அது இன்னும் உன்னவிட்டு போலியோ,
ஒருவேளை சொட்டு மருந்து உன்
தொண்டைக்குள்ள போலியோ, அப்படி போன மருந்து
ஒருவேளை போலியோ.
(புரிந்தோர்
புன்னகைக்கிறார்கள்.)
சொற்பொழிவு நிகழ்த்தும்போது
சொற்களை அழகுபடுத்தவதற்காக, கேட்போருக்கு புரியாதவாறு
எதுகை முனையில் பேசுவது, அடுக்குமொழியில் பேசுவது. போதிய பலன் தராது.
நமது பேச்சில் பிறரை
வசீகரிக்கும் தன்மை இருக்கவேண்டுமெனில், அதற்கு நமது பேச்சு இரத்தினச்
சுருக்கமாக இருக்கவேண்டும். அதாவது, பேச்சு குறைவாகவும்
கருத்துக்கள் ஆழமாகவும் இருக்கவேண்டும். எந்த விஷயமும் இல்லாமல் வளவளவென்ற நீண்ட பேச்சு,
கேட்போருக்கு வெறுப்பையும், சடைவையும் ஏற்படுத்தும். இரண்டு விஷயத்தைச் சொல்வதாக
இருந்தாலும், அது நறுக்கென்று சுருக்கமாக இருக்கவேண்டும்.
இப்படிப்பட்ட பேச்சாளர்களுக்குத்
தான் மக்களுக்கு மத்தியில் வரவேற்பும் பாராட்டும் இருக்கும். “இந்த பேச்சாளர் எப்போது
வருவார்; பேசுவார்” என்று மக்கள்
அவரின் வருகை மற்றும் பேச்சை எதிர்பார்த்தவாறு இருப்பார்கள்.
ஒரு பேச்சாளர் மேடையில்,
"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்" பேசினார். மறுநாள் ஒருவர் அவரிடம்
வந்து, "சார் நீங்கள் சொன்னபடியே
நடந்துவிட்டது. சந்தோஷம் சார். அதாவது உங்கள் பேச்சை கேட்டுவிட்டு வீட்டுக்கு போய்
வாய்விட்டு சிரித்தேன். என் மனைவி என்னைவிட்டு போய்விட்டாள்" என்று சந்தோஷமாகக்
கூறினார்.
ஒரு பேச்சாளரின்
பேச்சை கேட்போர் தவறாகப் புரிந்துக்கொண்டால், அதற்கு பேச்சாளர் பொறுப்பாக
முடியாது.
இறைவனால்
வழங்கப்பட்ட வரம்
வெள்ளிக்கிழமை தோறும்
பள்ளிவாசல்களில் நடைபெறும் ஜும்ஆ தொழுகையில் இருந்து பிரிக்க முடியாத அம்சம் (குத்பா
எனும்) சொற்பொழிவு. எனவே, பள்ளிவாசல் இமாம்களுக்கு வழங்கப்பட்டுள்ள “ஜும்ஆ சொற்பொழிவு”
என்பது இறைவனால் வழங்கப்பட்ட வரம்.
உலகில் ஆயிரம் ஊடகங்கள்
இருந்தபோதிலும் ஜும்ஆ மேடைகளைப் போன்ற ஓர் ஊடகம் இருக்கவே முடியாது. ஜும்ஆ சொற்பொழிவு
கேட்க வருவோர், இறைவழிபாடு என்ற உணர்வோடும், சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடும், வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாது மௌனித்து அமர்ந்திருப்பதும்
வேறெந்த சொற்பொழிவுகளிலும் காண முடியாத ஒரு சிறப்பம்சங்களாகும். இவை அனைத்துக்கும்
மேலாக மனித வாழ்வில் பிரதிபலிப்பை உண்டாக்கும் சக்தி ஜும்ஆ சொற்பொழிவுகளுக்கு இருக்கின்றன.
இந்த சிறப்பு வேறு எந்த ஊடகத்திற்கும் இல்லை.
உலகில் வாழும் ஒவ்வொரு
முஸ்லிமும் செல்வந்தர், ஏழை, படித்தவர், பாமரர், முதலாளி, தொழிலாளி, வாலிபர், வயோதிகர் என்ற எந்த வித்தியாசமுமின்றி சமூகத்தின்
அனைத்து தரப்பினர்களும் ஒரே நேரத்தில் செவிமடுகின்றனர். நகரத்தில், கிராமத்தில் என எங்கு வாழ்பவராக இருந்தபோதிலும்
ஒரு வருடத்தில் சுமார் 52 ஜும்ஆ சொற்பொழிவுகளுக்குத் தொடராக தவறாது முக்கியத்துவம்
கொடுத்து செவிமடுகின்றனர்.
ஒவ்வொரு ஜும்ஆ சொற்பொழிவுகளிலும்
குறைந்த பட்சம் 100-150 பேர் ஒன்று கூடுகிறார்கள். ஒரு ஜும்ஆ சொற்பொழிவுக்கு குறைந்தது
30 நிமிடங்கள் என்றால், 100 பேர்களின் 50 மணி நேரங்களும்
அங்கே செலவளிக்கப்படுகின்றன. இந்த 50 மணி நேரங்கள் பயனுள்ளதாக அமையவேண்டும். இதை நினைவில்
வைத்து, சொற்பொழிவாளர் ஓர் குறிப்பிட்ட விஷயத்தை மட்டும்
தமது சொற்பொழிவில் எடுத்து விளக்கப்படுத்தினால் மக்கள் நன்கு உள்வாங்கிக்கொள்வார்கள். பள்ளிவாசலில் இருந்து திரும்பிச் செல்லும்போது இன்று இது தான் சொற்பொழிவில்
சொல்லப்பட்டது என்ற பதிவுடன் தெளிவாகப் பயன்பட்டவர்களாகச் செல்வார்கள். அவ்வாறின்றி, முழு நேரத்தையும் பயன்படுத்தி அடிப்படையற்றவைகளையும், ஆதாரமற்றவைகளையும் கதை அளப்பது அறவே கூடாது.
குழுமியிருப்போரின்
தரம், பின்னணி போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு சொற்பொழிவு
நிகழ்த்த வேண்டும். புரிந்துக்கொள்ள, கிரகிக்க கஷ்டமானவற்றை
முடியாதவற்றை எடுத்தாள்வது வீண்வேலையாக அமைவதுடன், கேட்போரைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.
சொற்பொழிவாளர், தான் முன்வைக்கின்ற செய்திகளை
பகுப்பாய்வு செய்து ஆதாரப்பூர்வமானதை ஆணித்தரமாக முன்வைக்கவேண்டும். கருத்து வேறுபாடுகளை
பொதுமக்கள் முன் கொட்டிவிடாமல், கூடுமான அளவு பொதுவான
விஷயங்களை எடுத்தாள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஜும்ஆ சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவர்களின் விழிகள் சிவந்துவிடும்; அவர்களின் சப்தம் உயர்ந்துவிடும்; அவர்களின் சினம் கடுமையாகும். ஒரு படையைப்பற்றி
எச்சரிக்கை செய்பவர் போல் அவர்கள் காட்சி தருவார்கள் என்று நபித்தோழர்கள் வர்ணிக்கிறார்கள்.
ஜும்ஆ சொற்பொழிவு
நிகழ்த்துபவரின் பணி மகத்தானது; பொறுப்பு வாய்ந்தது; பளுவானது. சொற்பொழிவு நிகழ்த்தும் இடத்தில் நின்று
கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தும்போது அவரின் தோற்றம், முகபாவம், குரல் அனைத்துமே கேட்போரின் உள்ளங்களில் ஒருவித
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஜும்ஆ சொற்பொழிவு
நிகழ்த்துபவர் தமது ஆடைகளை அழகாக்கி, நறுமணம் பூசி அழகிய தோற்றத்துடனும், காலத்துக்குத் தேவையான தலைப்புக்களைத் தேர்வுசெய்து, அழகிய முறையில் நிகழ்த்தும்போது
அந்த ஜும்ஆ சொற்பொழிவுகளால் பல மாற்றங்கள் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
இமாம் முன்திரீ (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். சிலரின் சொற்பொழிவுகள் மனித உள்ளங்களை கவர்ந்திழுக்கும் வகையில்
அபாரமாக அமைந்திருக்கும். இவ்வகை சொற்பொழிவு உண்மையின் பக்கம் ஈர்த்தால் புகழுக்குரியது.
பொய்மையின் பக்கம் ஈர்த்தால் பழிப்பிற்குரியது.
எனவே, நாம் நாவன்மையை வளர்த்துக்கொண்டு, அதை நற்காரியங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment