காலம் காட்டிகள்
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ
وَالْحَجِّ
(நபியே! மாதந்தோறும் பிறந்து வளர்ந்து தேயும்) பிறைகளைப்
பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். "அவை மக்க(ளின் பணிக)ளுக்கும் ஹஜ்ஜுக்கும்
காலம் காட்டிகள்" என்று கூறுவீராக. திருக்குர்ஆன்:- 2:189
இஸ்லாமிய மாதங்கள்
சந்திரனை, அதாவது பிறையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
ரமளானுடைய ஆரம்பம், நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், மற்றும்
ஜகாத், இத்தா போன்ற காலம் தொடர்பான அனைத்து மார்க்கச் சட்டங்களுக்கும் (பிறை பார்த்து)
சந்திர மாதத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. அரஃபாவில் தங்குவது
கல்லெறிதல், தவாஃப், ஸயீ போன்ற ஹஜ்ஜின் கிரியைகளைச் சரியாக நிறைவேற்றுவதற்கும் பிறை பார்த்து
மாத ஆரம்பத்தை துல்லியமாக முடிவு செய்வது கட்டாயமாக இருக்கிறது. பிறை தோன்றுவதை வைத்தே மாதத்தின் ஆரம்பமும் முடிவும்
கணக்கிடப்படுகிறது. தலைப்பிறை தான் சந்திர மாதத்தின் துவக்கமாகும்.
ரபீஉ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. மக்கள் (அண்ணல் நபி-ஸல் அவர்களிடம்), "நாயகமே! பிறைகள் எதற்காக
படைக்கப்பட்டன? என்று வினவினர். அப்போதுதான் (மேற்காணும்) இந்தத்
திருவசனத்தை அல்லாஹ் அருளினான். அதாவது, முஸ்லிம்கள் நோன்பு
நோற்பதற்கும், நோன்பு திறப்பதற்கும் முஸ்லிம் பெண்களின் (காத்திருப்பு
காலம் எனும்) இத்தாவுக்கும், கடன் தவணைக்கும் காலம் காட்டும் கருவிகளாக அவற்றை
அல்லாஹ் ஆக்கினான். நூல்:- தப்சீர் இப்னு கஸீர்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( أَحْصُوا هِلاَلَ شَعْبَانَ لِرَمَضَانَ ) ரமளான் மாதத்தி(ன் பிறையை அறிவத)ற்காக ஷஅபான் மாதத்தின்
பிறையை (அதன் நாள்களை) எண்ணிக் கணக்கிட்டு வாருங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி)
அவர்கள் நூல்:- திர்மிதீ-623
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
( لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ،
فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ ) நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் (நோன்பு) பற்றிக் குறிப்பிடுகையில், "ரமளான் பிறையை நீங்கள் காணாத வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாத வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக)
அதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-1906, முஸ்லிம்-1958
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( جَعَلَ اللَّهُ الْأَهِلَّةَ مَوَاقِيتَ لِلنَّاسِ فَصُومُوا لِرُؤْيَتِهِ
وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنَّ غُمَّ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ يَوْمًا ) பிறைகளை
மக்களுக்குக் காலம் காட்டிகளாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். எனவே, பிறையைப் பார்த்து நோன்பு நோறுங்கள். பிறையைப் பார்த்து
நோன்பைத் துறங்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் அந்த மாதத்தை முப்பது (நாட்கள்)
ஆகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
நூல்:- ஹாக்கிம், தஃப்சீர்
இப்னு கஸீர்
மாதத்தின் தொடக்கத்தில்
பிறையைப் பார்த்தே நோன்பை ஆரம்பிக்க வேண்டும் மாதத்தின் இறுதியில் பிறையை பார்த்தே
நோன்பை நிறுத்தவேண்டும். பிறை தோன்றுவதை வைத்தே மாதத்தின் ஆரம்பமும் முடிவும் கணக்கிடப்படுவது
இதற்குக் காரணம். பிறை தென்படாமல் மேகம் சூழ்ந்திருந்தாலோ வேறு காரணத்தால் பிறை தென்படாமல்
போனாலோ அந்த (ஷஅபான்) மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டு, அடுத்த நாள் நோன்பை ஆரம்பிக்க வேண்டும்; அல்லது அந்த (ரமளான்) மாதத்தை முப்பது நாள்களாகக்
கணக்கிட்டு அடுத்த நாள் நோன்பை நிறுத்திப் பெருநாள் கொண்டாட வேண்டும்.
பிறைப் பிறந்துவிட்டதா?
இல்லையா? என்பதை அறிய பிறையைக் கண்ணால் பார்ப்பது ஒன்றே வழியாகும். பிறை காணப்பட்டால்
அதன்படி முடிவு செய்வதும், மேகமூட்டம் உள்ளபோது முப்பது நாட்களாக கணக்கிட்டு முடிவு
செய்வதும் தான் எல்லோருக்கும் வசதியான தீர்வாக இருக்கும்; கருத்து வேறுபாடும் சச்சரவும் நீங்குவதற்கு ஏற்ற
தீர்வாக இருக்கும்.
அந்தந்தப் பகுதியில்
பிறை பார்க்கவேண்டும்
(அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
ரலி அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீ முஸ்லீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) ஷாம் (சிரியா)
நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை
நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.
பிறகு அந்த (ரமளான்)
மாதத்தின் இறுதியில் நாள் மதீனா வந்து சேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
(ரலி) அவர்கள் பயணம் குறித்து என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள்.
அப்போது, (
مَتَى رَأَيْتُمُ الْهِلاَلَ ) "நீங்கள் (ஷாமில்)
எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள்.
நான், ( رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ ) "நாங்கள் வெள்ளியன்று
பிறை கண்டோம் என்று பதிலளித்தேன். அவர்கள், ( أَنْتَ رَأَيْتَهُ ) "நீயே அதைக் கண்டாயா?" என்று கேட்டார்கள். நான், ( نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ ) "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள்.
மக்களும் நோன்பு நோற்றார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று
கூறினேன்.
அதற்கு அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( لَكِنَّا رَأَيْنَاهُ
لَيْلَةَ السَّبْتِ فَلاَ نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلاَثِينَ أَوْ نَرَاهُ ) "ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை
கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்)
எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும்வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின்
முதல்) பிறையை பார்க்கும் வரை நோன்பு நோற்று கொண்டேயிருப்போம்" என்று கூறினார்கள்.
அதற்கு நான், ( أَوَلاَ تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ ) "முஆவியா (ரலி) அவர்கள் (முதல் பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்கு போதாதா?" என்று கேட்டேன். அதற்கு அன்னார், ( لاَ هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
) "இல்லை. இப்படித்தான் அருமை நாயகம் (ஸல்) அவர்கள்
எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-1983, அபூதாவூத்-1985, திர்மிதீ-629, நசாயீ-2084
மதீனாவில் இருந்த
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வடக்கே சுமார் 1500 கி.மீ தொலைவில்
இருந்த அன்றைய ஷாம் நாட்டில் (இன்றைய சிரியா) பார்த்த பிறையை ஏற்று மதீனாவில் செயல்படுத்த
மறுத்துவிட்டார்கள். ஷாமில் வெள்ளிக்கிழமை ரமளானின் முதல் பிறை பார்த்துள்ளார்கள்.
மதீனாவில் மறுநாள் சனிக்கிழமை தான் பிறை தெரிந்திருக்கிறது. ஷாம் வாசிகள் பார்த்த பிறையை
ஏற்று, ஒருநாள் முன்பாக மதீனாவில் நோன்பை முடித்துக் கொள்ள
நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுத்ததுடன், தமது கருத்து அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அமைந்ததாகும் என்றும்
காட்டியுள்ளார்கள். இதிலிருந்து அந்தந்தப் பகுதியில் பிறை பார்த்தே நோன்பு நோற்க வேண்டும்; அந்தந்த பகுதியில் பிறை பார்த்தே நோன்பை விட வேண்டும். ஒரு பகுதியில் பிறை தெரிவது, தொலைவில் உள்ள பகுதியினரைக் கட்டுப்படுத்தாது என்று அறியமுடிகிறது. நூல்:-
அல்மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ
தலைப்பில் காணும் வசனத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள்.
1. (நபியே! தேய்ந்து, வளரும்) الْاَهِلَّةِ பிறைகள்.
2. அவை மக்களுக்குக் (கால) مَوَاقِيْتُ நேரங்களை காட்டுபவையாகவும்.
முழு உலகத்துக்கும்
ஒரே பிறை என்று வாதிடுபவர்கள், தலைப்பில் காணும் இந்த வசனத்தில் அல்லாஹ், (தேய்ந்து, வளரும் அதாவது, தலை) பிறைகள் என்று பன்மையாக சொல்லி
இருப்பதற்கு, காரணம் என்ன என்பதை,
விளங்கிக்கொள்வார்களா?
பெரும்பான்மை மக்களின்
முடிவு
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَفِطْرُكُمْ
يَوْمَ تُفْطِرُونَ وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ ) நீங்கள் (எல்லோரும் ஒன்றிணைந்து) நோன்பை விடுகின்ற
நாளே ஃபித்ர் உடைய (நோன்புப் பெரு) நாளாகும்; நீங்கள் அறுத்துப்
பலியிடுகின்ற நாளே உள்ஹிய்யா (ஹஜ்ஜுப் பெரு)நாளாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி)
அவர்கள் நூல்:- அபூதாவூத்-1979, திர்மிதீ-633, இப்னுமாஜா-1650, தாரகுத்னீ, பைஹகீ
இமாம் திர்மிதீ (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். நோன்பு நோற்கும் விஷயத்திலும் நோன்புப் பெருநாள் கொண்டாடும்
விஷயத்திலும் சமுதாய கூட்டமைப்புடனும் பெரும்பான்மை மக்களுடனும் இணைந்து செயல்பட வேண்டும்
என்பதே இந்த நபிமொழியின் பொருளாகும்.
ஓர் ஊரில் வசிக்கும்
மக்கள் நோன்பு 29 நாள்கள் முடிந்த பின் பிறை பார்க்க முயன்றனர். பிறை தென்படாததால்
30 நாள்களாக நிறைவு செய்தனர். அதன் பின் பெருநாள் கொண்டாடினர். பின்னர் அந்த மாதம்
29 நாள்கள் தான் என்று தெரிய வந்தால், அதனால் எந்த குழப்பமோ குற்றமோ இல்லை. நீங்கள்
நோன்பு நோற்ற நாள், நோன்பு நாள்தான். நோன்பு முடித்து
பெருநாள் கொண்டாடிய நாள் பெருநாள்தான் என்று கருத வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
மேலும், அதுபோன்றே ஹஜ்ஜு, அரஃபா போன்ற நாள்கள் மாறிப் போய்விட்டன என்று பின்னர்
தெரிய வந்தாலும், மக்களில் அதிகமானோர் முடிவு
செய்ததே முடிவான தீர்ப்பாகும். அதைத் திரும்பச் செய்ய வேண்டியதில்லை நூல்:- துஹ்ஃபத்துல்
அஹ்வதீ
அபுல் பக்தரீ சயீத்
பின் ஃபைரூஸ் ( ரஹ்) அவர்கள் கூறியதாவது. நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச்
சென்றோம். வழியில் நாங்கள் 'பத்னு நக்லா' எனும் இடத்தில் தங்கியிருந்த போது பிறை பார்க்க
ஒன்று கூடினோம். அப்போது மக்களில் சிலர், "அது மூன்றாவது பிறை" என்று கூறினர். வேறுசிலர், "(அல்ல) அது இரண்டாவது பிறை" என்று கூறினர்.
பின்னர் நாங்கள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை சந்தித்தபோது, "நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் அது மூன்றாவது
பிறை என்றனர். வேறு சிலர் அதை இரண்டாவது பிறை என்று கூறினர்" என்று சொன்னோம்.
அதற்கு அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( أَىَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ ) "எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, 'இந்த (மாதத்தின்) இந்த இரவில்' என்று பதிலளித்தோம். அப்போது, ( إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةِ رَأَيْتُمُوهُ ) "பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச்
செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே
ஆகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். நூல்:- முஸ்லிம்-1984,
முஸ்னது அஹமத்-2865
மாதத்தின் முதல் பிறை
சிறியதாகவோ சற்றுப் பெரியதாகவோ தெரிவதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அவ்வாறே, விரைவில் மறைந்துவிடுவதற்கோ சிறிது நேரம் நீடிப்பதற்கோகூட எந்த முக்கியத்துவமும்
இல்லை. பிறை தெரிந்தால், அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். மேக மூட்டத்தின்
காரணத்தால் பிறை தென்படாதபோது, அந்த மாதத்தின் நாள்களை முப்பதாகக் கணக்கிட்டுக்
கொண்டு, அடுத்த நாளை முதல் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்களிடம்
ஒருவர் அரஃபா நாளில் வந்தார். அவர் அரஃபா நோன்பு வைக்கவில்லை. இன்று ஹஜ்ஜுப் பெருநாளாக
இருக்குமோ என்ற சந்தேகத்தினால் தான் அரஃபா நோன்பு வைக்கவில்லை, என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் மக்கள்
பிறை கண்டு நோன்பு வைக்கும் நாள் தான் நோன்பு நாள். மக்கள் பெருநாள் கொண்டாடும் நாள்
தான் பெருநாள். (நாமாக ஒரு நாளை சந்தேகப்பட்டு நோன்பு நோற்காமல் இருக்க வேண்டிய அவசியமில்லை.)
என்று கூறினார்கள். நூல்:- பைஹகீ
சாட்சியம்
வேண்டும்
நபித்தோழர் ஒருவர்
கூறியதாவது. ரமளானின் கடைசி நாளில் (இது ரமளானின் முப்பதாவது நாளா? அல்லது ஷவ்வால் முதல் நாளா? என்று) மக்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அப்போது
அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் கிராமவாசிகள் இருவர் வந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! நேற்று மாலை நாங்கள் பிறையைப்
பார்த்தோம்" என்று கூறினார்கள். உடனே அண்ணலார், மக்களிடம் ( أَنْ يُفْطِرُوا ) நோன்பை விடுமாறு கட்டளையிட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில், அண்ணலார், ( وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلاَّهُمْ ) மறுநாள் காலையில் தொழும்
இடத்திற்குச் செல்லுமாறும் கட்டளையிட்டார்கள் என்றும் வந்துள்ளது. அறிவிப்பாளர்:- ரிப்யு
பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1992, முஸ்னது அஹ்மத்-18070, தாரகுத்னீ
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கிராமவாசி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்
வந்து நான் பிறையைப் பார்த்தேன் என்றார். (அவரிடம்) அண்ணலார், ( أَتَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا
رَسُولُ اللَّهِ ) “அல்லாஹ்வைத்தவிர
வேறு இறைவன் இல்லை என்று நீர் உறுதிமொழிகிறீரா? முஹம்மத் (ஆகிய நான்)
அல்லாஹ்வின் தூதர் என்று நீர் உறுதிமொழிகிறீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'ஆம்' என்றார். அண்ணலார் (பிலால் - ரலி அவர்களிடம்), ( يَا بِلاَلُ أَذِّنْ فِي النَّاسِ فَلْيَصُومُوا غَدًا ) "பிலாலே! நாளை நோன்பு நோற்குமாறு மக்களுக்கு அறிவிப்புச்
செய்யுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த நபிமொழியின்
அடிப்படையில் நோன்பு நோற்கும் விஷயத்தில் ஓர் ஆண் (மட்டும் பிறை பார்த்ததாகக்) கூறும்
சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹம்பல்
(ரஹ்) மற்றும் கூஃபா நகரத்தின் சில அறிஞர்கள் ஆகியோர் கூறுகின்றனர்.
இஸ்ஹாக் பின் ராஹவைஹி
(ரஹ்) அவர்கள் இரு ஆண்களின் சாட்சியமின்றி நோன்பு நோற்கப்படாது என்று கூறியுள்ளார்கள்.
(ஷவ்வால் பிறை கண்டு)
நோன்பை விடும் விஷயத்தில் இரு ஆண்களின் சாட்சியமே ஏற்றுக்கொள்ளப்படும் (ஓர் ஆணின் சாட்சியம்
போதாது) என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. நூல்:- அபூதாவூத்-1993, திர்மிதீ-627
பிறைப் பார்த்ததாக
கூறுபவர் முஸ்லிமாக இருக்கவேண்டும். மேலும் பிறையைப் பார்த்தவர் முஸ்லிம்களின் தலைமையிடம்
தான் தகவல் தெரிவிக்கவேண்டும். தானாக மக்களிடம் போய் தெரிவிப்பது சரியல்ல. தலைமைதான்,
நோன்பு நோற்க வேண்டுமா? அல்லது பெருநாள் கொண்டாட வேண்டுமா? என்று அறிவிக்கவேண்டும். எதுவாக இருந்தாலும் தலைமை
மட்டும் அறிவித்தால் குழப்பம் ஏற்படாது. பிறை விஷயத்தில் அவரவர் அறிவித்தால் குழப்பம்
மட்டும் தான் ஏற்படும்.
காஜியின் தீர்மானம்
அறிஞர் மஹ்மூத் அஹ்மத்
ஙளன்ஃபர் (ரஹ்) அவர்கள் தமது வரலாற்று நூல் ஒன்றில் பின்வருமாறு ஒரு நிகழ்வை
பதிவு செய்துள்ளார்கள்.
உத்பா பின் ஃபர்கது (ரலி) அவர்கள் ஆஸர்பைஜான் தேசத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். அது ரமளான் மாதம் ஆகும். 29 நோன்புகள் முடிவுற்ற பின் முஸ்லிம்கள் பிறையை பார்க்க ஒன்று கூடினர். ஆனால் எந்தப் பிறையும் தென்படவில்லை. எனவே, ரமளானுடைய முப்பதாம் நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று உத்பா (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அடுத்த நாள் உத்பா (ரலி) அவர்கள் நோன்பு நோற்றுவிட்டு பகல் வேளையில் லுஹர் தொழுது விட்டு சற்று நேரம் ஓய்வு எடுத்தார்கள். ஓய்விலிருந்து எழுந்தபோது "புதிய பிறை வானத்தில் தென்படுகிறது" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. எனவே உத்பா (ரலி) அவர்கள் வெளியே சென்று பார்த்தார்கள். சூரியன் மறைய சிறிது நேரமே இருந்தாலும் புதிய பிறை வானத்தில் தென்படுவதைக் கண்டார்கள்.
பிறையைக் கண்டவுடன் உத்பா (ரலி) அவர்கள் மார்க்க அறிஞர்களை அழைத்து பெருநாளுடைய நாளில் நோன்பு மேற்கொள்வது பற்றி அவர்களின் கருத்தை கேட்டபோது, பிறையைப் பார்த்து விட்ட பின் நோன்பை தொடர்வது சட்டத்திற்கு எதிரானது" என்று கூறப்பட்டது. எனவே, உத்பா (ரலி) அவர்கள் சூரியன் மறைவதற்கு முன்பே நோன்புத் துறந்துவிட்டார்கள். அதுபோல் மற்ற முஸ்லிம்களும் செய்தனர்.
இருப்பினும் பெருநாள் கொண்டாடுவது பற்றி ஒரு பிரச்சனை எழுந்தது. அந்நாளில் பெருநாள் கொண்டாட முடியாத அளவுக்கு தாமதமாகிவிட்டது. இதுபற்றி மார்க்க அறிஞரிடம் ஆலோசனை செய்த பிறகு, இன்று நோன்பை துறந்துவிட்டாலும் நாளைதான் பெருநாள் கொண்டாடப்படும் என்று உத்பா (ரலி) அவர்கள் தீர்மானித்து விட்டார்கள்.
இப்பிரச்சனை சட்ட ரீதியில் அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பதால் இதன் இறுதித் தீர்ப்பை அறிவதற்காக ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு "பகல்வேளையில் பிறை பார்த்தால் பெருநாள் எப்போது கொண்டாடுவது?" என்று விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்கள்.
இக்கடிதம் கண்ட ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு தீர்ப்பளித்தார்கள்.
ஒருநாளின் முற்பகுதியில் நீங்கள் பிறையைக் கண்டால் நீங்கள் நோன்பை துறந்துவிட்டு அன்றே பெருநாள் கொண்டாடலாம். ஒருநாளின் முற்பகுதியில் தோன்றுகின்ற பிறை உண்மையிலேயே தோன்றியதற்கான அறிகுறியாகும். ஆனால், சில காரணங்களால் அது தென்படவில்லை. அதே நேரத்தில் ஒருநாளின் பிற்பகுதியில் நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பைத் தொடருங்கள். அடுத்தநாள் பெருநாள் கொண்டாடுங்கள். சில நேரங்களில் பிறை பெரிதாக இருப்பதால் அது மாலை நேரத்திற்கு முன்பே காணப்படலாம். இருந்தாலும், அது முந்தைய நாளின் பிறை இல்லை. நிச்சயமாக அது அடுத்த நாளுக்குரிய பிறைதான்.
ஒரு நாளின் முற்பகுதியில்
காணப்படுகின்ற பிறை முந்தைய நாளுக்குரிய பிறையாகும். ஒரு நாளின் பிற்பகுதியில் காணப்படுகின்ற
பிறை அடுத்த நாளுக்குரிய பிறையாகும்.
மாமேதை இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களிடம், "ஒரு ஊரில் துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை சிலர் பார்த்தனர். ஆனால், நகர்ப்புறத்தில் உள்ள (இஸ்லாமிய அரசின்) பொறுப்பாளர் இதை உறுதியாக தகவலாக ஏற்கவில்லை. மறுநாள் தான் மாதம் துவங்குவதாக அவர் அறிவிக்கிறார். இப்போது இவ்வூர் மக்கள் அரஃபா எனும் ஒன்பதாவது தின நோன்பை என்றைக்கு நோற்பது தங்கள் (பிறைப் பார்த்த) கணக்குப்படியா? அரசு அதிகாரியின் அழைப்பை ஏற்று எல்லோரும் நோற்கும் தினத்திலா?" என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு இப்னு தைமிய்யா
(ரஹ்) அவர்கள், "பொதுமக்கள் அனைவரும்
நோன்பு நோற்கும் ஒன்பதாவது நாளில் தான், இந்த ஊர் மக்களும் நோன்பு நோற்க வேண்டும்.
இவர்கள் கணக்குப்படி இது பத்தாவது நாளாக இருந்தாலும் சரியே!" என்று பதிலளித்தார்கள்.
நூல்:- ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத்
பிறை கண்ணுக்கு தெரியுதோ / இல்லையோ, சிலருக்கு தலைமை காஜியை குறை சொல்வது கடமையாகிவிடுகிறது. அப்போதுதான் அவர்களுக்கு பெருநாள் கொண்டாடிய திருப்தியே இருக்கும். இது வருடா வருடம் Facebook ல் பார்ப்பது தான். இது புதிதொன்றுமில்லை.
பிறை பார்ப்பதில்
நான்கு வகையினர்
1. பிறை பார்க்காமலே, கணினியில் அமாவாசை நேரம் முடிந்த அடுத்த நாள் பெருநாள் கொண்டாடும் வகையினர். இந்தியாவுக்கு இன்றுதான் அமாவாசை. அமெரிக்காவுக்கு நாளைக்கு அமாவாசை. மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கணினி வகையினர் என்பதாகத் தகவல்.
2. நாளை கண்களுக்கு தெரியக்கூடிய பிறையை இன்றே டெலஸ்கோப்பில் பார்த்துவிட்டு அதனோடு மொபைல் கேமராவை ஒட்டி போட்டோ எடுத்து எல்லாருக்கும் காட்டிவிட்டு, நாளை பெருநாள் கொண்டாடும் வகையினர். சவூதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் இந்த வகையினர் என்பதாகத் தகவல். (இதில் ஓமான் சேரவே சேராது)
3. ஹிஜ்ரா காலண்டர் வகையினர் உண்டு. மேலே உள்ள 2 & 4 வது வகையினர் மாதிரி இல்லாமல், கிழக்கில் பிறை பார்ப்பார்கள். கடைசி தேய்பிறையை தேடுவார்கள். அதிகாலை நேரத்தில் தேடுவார்கள். அதை வைத்து காலண்டர் போடுவார்கள் என்பதாகத் தகவல். அந்த காலண்டர் கூட தவறுதான்
4. நபிவழிப்படி 'வெறும் கண்களுக்கு தெரியக்கூடிய அளவுக்கு பிறை வளரட்டும்' என்று பொறுமையோடு இருந்து, நாளைய பிறையை டெலஸ்கோப் பயன்படுத்தி இன்றே காணாமல், நேரடியாக கண்களால் பிறை கண்டு நோன்பு வைத்து, நேரடியாக கண்களால் பிறை கண்டு நோன்பு விடும் நபிவழிப்படி வாழும் வகையினர். பெரும்பான்மை உலக முஸ்லிம்கள் இந்த வகையினர். ஓமான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகள் உட்பட.
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஒருவர் அப்படித்தான் தனக்கு பிறை தென்படுவதாகச் சொன்னார். கூடி நின்றவர்கள் எல்லோரும் திரும்பத் திரும்ப பார்த்தார்கள். யாருடைய பார்வைக்கும் பிறை தென்படவில்லை. செய்தி உமர் (ரலி) அவர்களுக்கு சென்றது.
உமர் (ரலி)
அவர்கள் வந்து, பிறை பார்த்ததாக சொன்னவரிடம், “எங்கே பிறை தெரிகிறது?” என்று கேட்டுவிட்டு,
அவர், விரல் நீட்டிய திசையில் தன் கூரிய பார்வையை செலுத்தினார்கள். ஆனால், அவர்களின்
பார்வைக்கும் தென்படவில்லை.
உடனே ஒரு முடிவு செய்தார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் செய்தார்கள். அதை அவரிடம் கொடுத்து முகத்தை கழுவுமாறு கூறினார்கள். கழுவிய பின் அவரிடம், “இப்போது அந்த பிறை எங்கே தெரிகிறது?” என்று கேட்டார்கள். அவர், பார்த்தபோது அவருக்கும் பிறை தென்படவில்லை. “இப்போது தானே பார்த்தேன். பிறை தென்படவில்லையே” என்று அவரும் சொன்னார்.
உமர் (ரலி)
அவர்கள், “வேறொன்றும் இல்லை உன் கண்ணின் புருவ முடி இலேசாக வளைந்து உன் கண் முன்னாலே
தெரிந்தது அதைத் தான் நீ பிறை என்று பிழையாகக் கண்டிருக்கிறாய்’ என்று கூறி, அவருக்கு
தெளிவுப்படுத்தினார்கள்.
ஒருமுறை மக்கள் அனைவரும்
ஒரு உயரமான இடத்திற்கு சென்று ரமளான் மாதப் பிறை தென்படுகிறதா? என்று பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கே நூறு வயது
நிரம்பிய புருவம் தொங்கிய நிலையில் அனஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அங்கிருந்தவர்களில்
யார் கண்களுக்கும் பிறை தென்படவில்லை. அப்போது அனஸ் (ரலி) அவர்கள் இதோ பிறை தெரிகிறது.
நான் பார்த்துவிட்டேன் என்று கூறினார்கள்.
அருகில் இருந்த பேரறிஞர் இயாஸ் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் நன்கு கூர்ந்து கவனித்தார். அவர் கண்களுக்கும் பிறை தென்படவில்லை. வயதான காரணத்தால் அனஸ் (ரலி) அவர்களுக்கு புருவம் தொங்கிவிட்டது. தொங்கிவிட்ட புருவத்தில் இருந்த ஒரு முடி கண்ணில் தொங்கிக்கொண்டிருக்கிறது. பார்வையில் அந்த முடி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
அனஸ் (ரலி) அவர்களின் இந்த நிலையை கவனித்த இயாஸ் (ரஹ்) அவர்கள் மிகுந்த பணிவுடன் அனஸ் (ரலி) அவர்களிடம் அனுமதி பெற்று அன்னாரின் கண்ணில் தொங்கிக்கொண்டிருந்த புருவமுடியை சீராக்கினார்.
அதன்பிறகு இயாஸ் (ரஹ்) அவர்கள், "நபியவர்களின் தோழரே! இப்போது பிறை தெரிகிறதா? என்று பார்த்துச் சொல்லுங்கள்" என்றார். அப்போது அனஸ் (ரலி) அவர்கள், "என் கண்ணில் பிறை ஏதும் தென்படவில்லை" என்று மூன்று முறை கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் (ஹஜ்ஜத்துல் விதா) இறுதி ஹஜ் செய்த (ஹிஜ்ரி 10 ஆம்) ஆண்டுகூட ஹஜ்ஜுப் பெருநாளில்
மக்காவுக்கும் மதீனாவுக்கும் மத்தியில் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததாக கூறப்படுகிறது.
நூல்:- சந்த் மகாதீப்
சுருங்கக்கூறின்,
எப்போதும் ஒரே நாளில் நோன்பு ஆரம்பித்து பெருநாள் கொண்டாடவில்லை என்பது, நபிமொழிகளின்
மூலம் தெளிவாகத் தெரிய முடியும். மதீனாவுக்கும் சிரியாவுக்கும் ரமளானில் ஒருநாள் வித்தியாசம்
இருந்ததை முஸ்லிம் நூலில் உள்ள நபிமொழியின் மூலம் விளங்க முடிகிறது.
எனவே, பிறை
விஷயத்தில் இயக்கவாதிகளின் சொல்லைக் கேட்டு, நம்மை நாமே குழப்பிக்கொள்ள வேண்டாம்.
இது விஷயத்தில் தலைமைக் காஜியின் சொல்லுக்குக் கட்டுப்படுவதே சிறந்தது.
அல்லாஹுத்தாஆலா நம்மை நல்ல தலைமைக்குக் கட்டுப்பட்டு வாழும் நற்பண்பாளர்களாக வாழச்
செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
https://youtu.be/ew1zn1Lc7UM
ReplyDelete