Search This Blog

Wednesday, 15 December 2021

நகைச்சு வைப்போம்!

 

நகைச்சு வைப்போம்!

 

وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى

 

நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கின்றான்; அழவும் வைக்கின்றான். திருக்குர்ஆன்:- 53:43

 

உலக சிரிப்பு நாள் (World Laughter Day) மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

 

இத்தினம் முதன்முதலாக 1988 ஜனவரி 10  ஆம் நாளில் கொண்டாடப்பட்டது. இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Movement) தொடங்கியவர்.

 

மதன் கட்டாரியா இந்த நாளை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாக  அறிமுகப்படுத்தினார். இன்று 65 நாடுகளில் 6 ஆயிரம் சிரிப்பு கிளப் நடந்து வருகிறது. ஏன் இந்த சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் உடம்புக்கும் மனசுக்கும் சிரிப்பு நல்லது. இதை வலியுறுத்தி தான் இந்த தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

 

தலைவர்களும், அறிவுஜீவிகளும், ஆன்மீகவாதிகளும் எப்போதும் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் சாதாரண மக்களோடு கலந்து உறவாடினால் அவர்களுக்குரிய மரியாதை கிட்டாது என்ற ஒரு கருத்து உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோ இதற்கு மாறாக இருந்தது. புன்னகையை பூத்த முகத்தோடு வாழ்ந்ததோடு நகைச்சுவை உணர்வும் ததும்பப் பெற்றவராக இருந்துள்ளார்கள்.


சிரிப்பு மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் அற்புதமான உணர்வு. சிரிக்கும் போது நமது முகம் மட்டுமல்ல நமது உடம்பே அழகாகும். டென்சனை குறைக்க அவ்வப்போது சிரிக்க வேண்டும். நாம் அவ்வாறு சிரிக்கும்போது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். வெள்ளை அணுக்கள் உடம்பில் உற்பத்தியாகும். நோய்களோடு எதிர்த்து போராடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

 

நகைச்சுவை என்பதை குறிக்க அரபியில் ( مِزَاحِ ) "மிஸாஹ்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. "சிரிப்பு ஏற்படுத்தும் முறையில் பேசுவது" என்று பொருள்.

 

அளவுக்கதிகமாக சிரிக்க வைப்பதும், அதையே எப்போதும் செய்வதும் தடை செய்யப்பட்டவையாகும். அளவுகடந்த நகைச்சுவையானது பெரும்பாலும் அடுத்தவர் மனதைக் காயப்படுத்தவும் செய்யலாம். அதையடுத்து குரோதம் பிறக்கும்; ஒருவரைப் பற்றிய கம்பீரமான பார்வையை அது அழித்துவிடும். இந்த தீங்கு ஏற்படாத வகையில் அளவோடு நகைச்சுவையாக பேசுவது தவறாகாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடுத்தவர் மனதை தேற்றுவதற்காக அவ்வாறு எப்போதாவது நகைச்சுவையுடன் பேசியுள்ளார்கள்.

 

சிரிப்பு மூன்று வகையாகும்.                                                      

1)  சப்தமின்றி சற்று வாய் திறந்து புன்னகைத்தல்.                                               

2)  கடவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிறிது சப்தத்துடன் சிரித்தல்.                                      

3)  முழு வாயையும் திறந்து பலத்த சத்தத்துடன் வெடிச்சிரிப்பு சிரித்தல்.

 

முதல் இரண்டு வகை சிரிப்பு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாயிலாக நிரூபணமாகியுள்ளது. மூன்றாவது வகையான வெடிச்சிரிப்புக்கு நபிமொழிகளில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புன்னகை செய்!

உன் கவலையால்

உலகம் மாறிவிடப் போவதில்லை.    கலீல் ஜிப்ரான்

 

புன்னகை

 

அவர்கள் எறும்புகளின் ஓடைக்கருகே வந்தபோது ஓர் எறும்பு, "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து விடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் தங்களுக்கே தெரியாமல் உங்களை மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது. அது கூறியதைக் கேட்டு சுலைமான் (அலை) அவர்கள் புன்னகை பூத்தார்கள். திருக்குர்ஆன்:- 27:18, 19

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அண்ணல் நபி (ஸல்)  அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிப்பவர்களாக கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள். நூல்:- புகாரீ-4828

 

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (நான் கண்மணி பெருமானார் - ஸல் அவர்களை சந்திக்க அனுமதி கேட்ட எந்த சமயத்திலும்) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. நூல்:- புகாரீ-6089, முஸ்லிம்-4881, இப்னுமாஜா-159, முஸ்னது அஹமத்

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ (எனும் இறைச் செய்தி) வந்தால் அல்லது உபதேசம் செய்தால் வேதனை இறங்கப் போகும் ஒரு கூட்டத்தாரை எச்சரிக்கை செய்பவர் போன்று இருப்பார்கள். ஆனால் அந்நிலை நீங்கிவிட்டால் மக்கள் அனைவரைவிடவும் நபியவர்கள் தான் மலர்ந்த முகத்துடனும் அதிகம் (புன் சிரிப்பு) சிரிப்பவர்களாகவும் அழகிய பண்புள்ளவர்களாகவும் இருப்பதை நீ காண்பாய். நூல்:- அல்பஸ்ஸார், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-852

 

உள்ளத்தில் கவலைகள் பல இருந்தாலும் அன்பையும் பாசத்தையும் நாடி வருவோரிடம் முகமலர்ச்சி காட்டி புன்னகையை வெளிப்படுத்துவதே சிறந்த பண்பாடாகும். கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களைப் பொறுத்தமட்டில் சமூக நலன், மார்க்கம், மறுமை குறித்து உள்ளக் கவலையுடன் இருந்தாலும் அதிகமதிகம் புன்னகையுடன் காட்சி தந்து குணத்தின் குன்றாகத் திகழ்ந்தார்கள்.

 

சில நபிமொழிகளில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சில சமயங்களில் சிரித்தார்கள் என வந்துள்ளது. கடவாய் பற்கள் தெரிவதால் உள்நாக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. எனவே, நபிமொழிகளுக்கிடையே முரண்பாடு கிடையாது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ

 

ஆக, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் புன்னகை செய்பவர்களாகவும், சில சமயங்களில் பல் வெளியே தெரியும் அளவுக்கு சிரிப்பவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், ஒருபோதும் உள்நாக்குத் தெரியும் அளவுக்கு விகாரமாக அவர்கள் சிரித்ததில்லை.

 

அறிஞர் அஹ்மது ஈஸா மாஅஸராவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் நேசிப்பவரைக் கண்டால்  புன்னகை  புரியுங்கள்; அது உங்களின் அன்பை அவருக்கு உணரவைக்கும்

 

உங்களின் எதிரியைக் கண்டால் புன்னகை புரியுங்கள்; அது உங்களின் மன தைரியத்தை அவருக்கு வெளிப்படுத்தும் .

 

உங்களிடமிருந்து விலகியவரைக் கண்டால் புன்னகை புரியுங்கள்; அது  உங்களிடமிருந்து விலகியதை எண்ணி அவரை வேதனைப்பட வைக்கும்.

 

அறிமுகமில்லாதவர்களைக் கண்டாலும் புன்னகை புரியுங்கள்; அது உங்களுக்கு நன்மையைப் பெற்றுத்தரும்.

 

இந்த ரகசியத்தை மிகவும் குறைவான மக்களே புரிந்திருக்கிறார்கள்.

 

அண்ணலாரின் கடிஜோக்குகள்

 

ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. மூதாட்டி ஒருவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! அல்லாஹ் எனக்கு சொர்க்கம் புகும் பாக்கியம் கிடைப்பதற்கு பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டாள். அப்போது அண்ணலார், ( يَا أُمَّ فُلانٍ، إِنَّ الْجَنَّةَ لا تَدْخُلُهَا عَجُوزٌ ) "இன்னவரின் தாயே! மூதாட்டிகள் யாரும் சொர்க்கம் புக மாட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே அவள் அழுது கொண்டு திரும்பிச் சென்றாள்.

 

அப்போது நபியவர்கள், ( أَخْبِرُوهَا أَنَّهَا لا تَدْخُلُهَا وَهِيَ عَجُوزٌ إِنَّ اللَّهَ تَعَالَى، يَقُولُ‏:‏ إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً، فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا، عُرُبًا أَتْرَابًا‏ ) "அப்பெண்மணி கிழவியாக இருக்கும் நிலையில் சொர்க்கம் செல்ல மாட்டாள் என்ற செய்தியை அவரிடம் தெரிவித்து விடுங்கள்" என்றார்கள். ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக நாம் அப்பெண்களை புதிய படைப்பாகப் படைப்போம். மேலும் அவர்களைக் கன்னியர்களாகவும், (தமது கணவர்களிடம்) பேரன்பு கொண்டவர்களாகவும், சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம். (திருக்குர்ஆன்:-56:35-37) என்றும் கூறினார்கள். நூல்:- ஷமாயில் திர்மிதீ-240

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதனை நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும் உண்மை நிகழ்வையே எடுத்துரைத்துள்ளார்கள்.

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து “நாயகமே! எனக்கு (பயணம் செய்வதற்குரிய ஓர்) ஒட்டகமொன்றைத் தாருங்கள்” என்று கேட்டார். அப்போது அண்ணலார், ( إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ ) "உமக்கு நான் ஓர் ஒட்டகக் குட்டியைத்தான் தருவேன்" என்றார்கள்.

 

அவர், "நாயகமே! ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்?" என்று கேட்டார். அதற்கு அண்ணலார், ( وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَّ النُّوقُ ) "எல்லா ஒட்டகங்களும் தன் தாய்க்குக் குட்டிகள்தான்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4346, திர்மிதீ-1914, அல்அதபுல் முஃப்ரத்-268, அபூயஅலா

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஒரு பெண்மணி (உம்மு அய்மன்-ரலி) "நாயகமே! என் கணவர் உங்களை அழைத்து வரச் சொன்னார்" என்று கூறினாள். அப்போது நபியவர்கள் அப்பெண்ணிடம், ( أَهُوَ الَّذِي بِعَينِهِ بَيَاض ) கண்ணில் வெள்ளை நிறம் இருக்குமே அவரா (உன் கணவர்)? என்று கேட்டார்கள் அதற்கு அந்தப் பெண், "நாயகமே! என் கணவருக்குக் கண்ணில் வெள்ளை நிறம் கிடையாது" என்று கூறினாள்.

 

நபியவர்கள், “உறுதியாக உன் கணவரின் கண்ணில் வெள்ளை நிறம் இருக்கும்” என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண்ணும், "உறுதியாக என் கணவரின் கண்ணில் அப்படி எதுவும் இல்லை" என்று கூறினாள். அப்போது நபியவர்கள் சிரித்துவிட்டு, குழம்பிப் போயிருந்த அந்த பெண்ணிடம், ( مَا مِن أَحَدٍ إِلَّا بِعَينِهِ بَيَاض )  "எந்த மனிதனுக்கும் கண்ணின் கருமணியைச் சுற்றி வெள்ளை நிறம் இருக்கத்தானே செய்யும். அதைத்தான் சொன்னேன்" என்று நகைச்சுவையாக கூறினார்கள். அப்போது அந்தப் பெண் வெட்கம் கொண்டவளாக சிரித்தாள். அறிவிப்பாளர்:- ஸைத் பின் அஸ்லம் (ரலி) அவர்கள்  நூல்:- இப்னு அபீதுன்யா, இஹ்யா

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. மக்களில் (கிர்பாக் எனும் இயற்பெயருடைய) ஒருவர் இருந்தார். அவரை அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( ذَا الْيَدَيْنِ ) "இருக் கைகாரர்" என்று அழைப்பது வழக்கம். நூல்:- புகாரீ-6051

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. மக்கள், (அண்ணல் நபி - ஸல் அவர்களிடம்) "நாயகமே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாகப் பேசுகிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார், ( إِنِّي لاَ أَقُولُ إِلاَّ حَقًّا )  "(அப்போதும்) நான் உண்மையைத் தவிர வேறெதுவும் சொல்ல மாட்டேன்" என்றார்கள். நூல்:- திர்மிதீ-1913

 

பிறர் மனதை நோகடிக்காமல் மகிழ்ச்சியுடனும் நகைச்சுவை உணர்வுடனும் பேசுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பண்பாக இருந்தது. நபியவர்கள் குறித்த மதிப்பு பல அச்சம் மக்கள் மனங்களில் பதிந்திருந்தது. அந்நிலையில் மக்களை மகிழ்விக்கவும் பயத்தை அகற்றவும் அவ்வப்போது நபியவர்கள் நகைச்சுவையாகப் பேசி மனங்களை ஈர்ப்பார்கள். அந்த நகைச்சுவைப் பேச்சிலும் உண்மைத்தன்மை இருக்கும். பொய் கலந்திருக்காது.

 

இந்த நபிமொழிகள் தம்மை முன்னோக்குபவரை சந்தோசப்படுத்துவதற்காகவே இந்நகைச்சுவை பேச்சுக்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பேசினார்கள் என்பதை அறிவிக்கின்றன. நபியவர்களின் இவ்வழகிய நடைமுறையை பின்பற்றி நபித்தோழர்கள் தங்களுக்கு இடையே நகைச்சுவையை கடைபிடித்துள்ளார்கள்.

 

தம்பதிகளுக்கிடையில்  

 

ஒரு நாள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கடுமையான தலைவலியால் பீடிக்கப்பட்டிருந்ததால் வலி தாங்காமல் முனகிக் கொண்டிருந்தார்கள். அதைக்கண்ட நபியவர்கள், ( مَا ضَرَّكِ لَوْ مِتِّ قَبْلِي فَقُمْتُ عَلَيْكِ فَغَسَّلْتُكِ وَكَفَّنْتُكِ وَصَلَّيْتُ عَلَيْكِ وَدَفَنْتُكِ )  " நீ எனக்கு முன்பாக இறந்தால் உமக்கு ஒன்றும் சிரமமில்லை; ஏனென்றால், நான் உன்னை கவனித்துக்கொள்வேன். (அதாவது) உன்னை நானே குளிப்பாட்டுவேன்; நானே சவக்கோடி அணிவிப்பேன்; (கஃபனிடுவேன்)  உனக்காக நானே ஜனாஸா தொழுகை நடத்தி, அடக்கமும் செய்வேன்" என்று கேலியாகக் கூறினார்கள்.

 

அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் சற்றும் தயங்காமல் உடனடியாக, ( وَاللَّهِ لَكَأَنِّي بِكَ لَوْ قَدْ فَعَلْتَ ذَلِكَ لَقَدْ رَجَعْتَ إِلَى بَيْتِي فَأَعْرَسْتَ فِيهِ بِبَعْضِ نِسَائِكَ )  "அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் இவ்வாறெல்லாம் செய்து முடித்த பிறகு, எனது இல்லம் சென்று நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்) என்று எண்ணுகிறேன் (அப்படித்தானே)?" என்று கூறினார். அதைக்கேட்டு நபியவர்கள் சிரித்தார்கள். நூல்:- புகாரீ-5666, இப்னு ஹிப்பான், அல்பிதாயா வந்நிஹாயா

 

நுஃமான் பின் பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அபூபக்ர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (வீட்டிற்குள் வர) அனுமதி கோரினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்ததை செவியுற்றார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்ததும், ஆயிஷா (ரலி) அவர்களின் கன்னத்தில் அறைவதற்காக அவரைப் பிடித்தார்கள். மேலும் நபியவர்களைவிட உன் குரல் ஓங்கி ஒலிக்கக் காண்கின்றேனே (உனக்கு என்னவாயிற்று?)  என்று கடிந்து கூறினார்கள்.

 

அப்போது நபியவர்கள் அவரை (அடிக்க விடாமல்) தடுத்து நிறுத்தினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் வெளியேறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியே சென்றபோது, நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ( كَيْفَ رَأَيْتِنِي أَنْقَذْتُكِ مِنَ الرَّجُلِ )  "இந்த மனிதரிடமிருந்து உன்னை எவ்வாறு காப்பாற்றினேன் பார்த்தாயா?" என்று (நகைச்சுவையாக) கேட்டார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் சில நாள்கள் (நபியவர்களிடம் வராமல்) தங்கி விட்டார்கள். பிறகு (வந்து) நபியவர்களிடம் (வீட்டிற்குள் வர) அனுமதி கோரினார்கள். (அனுமதிப்பெற்று உள்ளே சென்றபோது) அவ்விருவரும் இணக்கமாக இருக்கக் கண்டார்கள். அப்போது அவ்விருவரிடமும், ( أَدْخِلاَنِي فِي سِلْمِكُمَا كَمَا أَدْخَلْتُمَانِي فِي حَرْبِكُمَا ) "உங்களின் சண்டையில் நீங்கள் இருவரும் என்னை சேர்த்து கொண்டதுபோல், உங்களின் சமாதானத்திலும் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், ( قَدْ فَعَلْنَا قَدْ فَعَلْنَا ) "சேர்த்துக் கொள்கிறோம்; சேர்த்துக் கொள்கிறோம்" என கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4347, முஸ்னது அஹ்மத்-17,668

 

இப்னு அபீமுலைகா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை கிண்டல் செய்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார், "நாயகமே! இந்தத் தெருவின் சில கிண்டல் பழக்கங்கள் கினானா கிளையினருக்குரியதாகும்" என்று கூறினார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-267

 

சிறுவர்களிடம்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது கண்மணி பெருமானார் ஸல் அவர்கள் என்னை, (சில நேரங்களில்) ( يَا ذَا الأُذُنَيْنِ ) "இரட்டை காதுக்காரா" என்று (நகைச்சுவையாக) அழைத்தார்கள். நூல்:- அபூதாவூத்-4349, திர்மிதீ-1915, முஸ்னது அஹ்மத்-11720, தப்ரானீ

 

கூர்ந்து கவனித்துச் செய்திகளை உள்வாங்கிக் கொள்ளும் சிறுவராக இருந்த அனஸ் (ரலி) அவர்களின் புத்திக் கூர்மையையும் அறிவாற்றலையும் பாராட்டும் விதமாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்விதம் அழைத்தார்கள். நபியவர்களின் மென்மையான நகைச்சுவை உணர்வுகளை இது பிரதிபலிக்கிறது. நூல்:- அல்மவாஹிப்

 

குறும்பு செய்தபோது

 

கவ்வாத் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் நான் "ளஹ்ரான்" என்ற இடத்திற்குச் சென்றேன். பின்னர் எனது தங்குமிடத்தைவிட்டு வெளியே வந்தபோது சில பெண்கள் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன். உடனே நான் உள்ளே சென்று எனது விலை உயர்ந்த ஆடையை அணிந்து கொண்டு அப்பெண்களுக்கு அருகே சென்று அவர்களுடன் பேச்சு கொடுத்தேன்.

 

அந்நேரம் நபியவர்கள் தமது இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தபோது என்னைக் கண்டார்கள். அப்போது நபியவர்கள், "அப்துல்லாஹ்வின் தந்தையே! பெண்களுடன் ஏன் அமர்ந்து இருக்கின்றீர்?" என்று கேட்டார்கள். அண்ணலாரைக் கண்டதும் எனக்கு பயம் வந்துவிட்டது. எவ்வாறு உண்மையைச் சொல்வது என்று அஞ்சினேன். எனவே நான், "நாயகமே! எனது ஒட்டகம் எங்கேயோ ஓடிவிட்டது. அதைக் கட்டுவதற்கான கயிறு ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கின்றேன். இப்பெண்களிடம் கயிறு இருக்குமா? என்று பார்க்கின்றேன்" என்று (ஏதோ) கூறி சமாளித்தேன்.

 

வெட்கத்தால் அண்ணலாரிடம் நான் பொய் சொன்னேன். நான் கூறிய பதிலை கேட்ட பின்னர் எதுவும் சொல்லாமல், அந்த பெண்களிடம் கூட இதைப்பற்றி விசாரிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார்கள். நானும் அண்ணலாருக்கு பின்னாலேயே செல்லத்துவங்கினேன்.

 

பின்னர் தொழுகைக்கான நேரம் வந்தது. அண்ணலார் உளூச் செய்தார்கள். நானும் உளூச் செய்தேன். அப்போது அண்ணலார் என்னிடம், "அப்துல்லாஹ்வின் தந்தையே! ஓடிப்போன அந்த ஒட்டகம் கிடைத்ததா..." என்று கேட்டார்கள். நான் ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

 

வந்த வேலை முடிந்த பின்னர் அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம். சற்று நேரத்திற்குப் பின் திரும்பிச் செல்லும் பாதையில் மீண்டும் அண்ணலார் என்னிடம், "அப்துல்லாஹ்வின் தந்தையே! ஓடிப்போன அந்த ஒட்டகம் கிடைத்ததா?" என்று கேட்டார்கள். அப்போதும் நான் ஒன்றும் கூறவில்லை.

 

வேகமாக மதீனாவுக்குத் திரும்பினேன். அங்கு சென்றுபின் பள்ளிவாசலுக்கும் செல்லவில்லை; அண்ணலாருக்கு அருகிலும் செல்லவில்லை. நீண்ட நேரத்திற்குப்பின் பள்ளிவாசலுக்கு சென்று தனிமையில் தொழ தொடங்கினேன். அப்போது அண்ணலார் பள்ளிவாசலுக்கு வந்து இரண்டு ரக்அத் தொழுதபின் அங்கேயே உட்கார்ந்து விட்டார்கள். அண்ணலார் வெளியே செல்லட்டும் என்று நீண்ட நேரம் நானும் அங்கேயே உட்கார்ந்து விட்டேன்.

 

பின்னர் அங்கிருந்தவாறே அண்ணலார் என்னிடம், "அப்துல்லாஹ்வின் தந்தையே! எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் தொழுங்கள். நீங்கள் தொழுது முடிக்கும் வரை நான் இங்கேயே இருப்பேன்; வெளியேற மாட்டேன்" என்று கூறினார்கள்.

 

நான், இனிமேல் தப்பிக்க இயலாது. அண்ணலாரிடம் உண்மையைச் சொல்லி விட வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் அண்ணலாருக்கு அருகே சென்றேன். உடனே அண்ணலார் என்னைப் பார்த்து, "அப்துல்லாஹ்வின் தந்தையே! அஸ்ஸலாமு அலைக்கும். ஓடிப் போன அந்த ஒட்டகம் கிடைத்ததா?" என்று கேட்டார்கள். அப்போது நான், "நாயகமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இஸ்லாத்தை ஏற்றபின் எந்த ஒட்டகமும் என்னை விட்டு ஓடவில்லை" என்று கூறினேன். பிறகு அண்ணலார், "இறைவன் உங்கள் மீது கருணை புரிவானாக!" என்று இரண்டு முறை என்னிடம் கூறிவிட்டு, எனது கையைப் பிடித்தவாறு எழுந்தார்கள். அதன்பின் அது குறித்து என்னிடம் விசாரிக்கவே இல்லை. நூல்:- மஜ்மஉஸ் ஸவாயித்

 

எடுத்த எடுப்பிலேயே, "நீ பொய் சொல்லுகிறாய்" என்று கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? உண்மை வெளிவந்திருக்காது. ஆனால், இங்கே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நயமாக நடந்துள்ளதை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. இந்நிகழ்வு ஒரு நகைச்சுவையைப் போன்று இருந்தாலும், தவறை அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைக்கும் அண்ணலாரின் பண்பு நாம் பெறவேண்டிய பெரும்பாடம்.

 

நபித்தோழர்கள்

 

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஸுப்ஹு தொழுகைக்கு பிறகு நபித்தோழர்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக்கேட்டு) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். நூல்:- முஸ்லிம்-4641

 

பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபித்தோழர்கள் தர்பூசணி பழத்தை எறிந்து விளையாடுபவர்களாக இருந்தார்கள். உண்மையில் அவர்களும் மனிதர்கள் தானே! நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-266

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "நபித்தோழர்கள் சிரிப்பவர்களாக இருந்தனரா?" எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், "ஆம்! (எனினும்) அவர்களின் உள்ளத்தில் இறைநம்பிக்கை மலைகளைப் போன்று இருந்தது" என்று கூறினார்கள். நூல்:- சைய்யிதுனா முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

 

கண்ணில் நோய்

 

சுஹைப் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அங்கு சென்றேன். அண்ணலார் என்னையும் சாப்பிடுமாறுக் கூறினார்கள். ஆனால் அப்போது எனக்கு கண்வலி இருந்தது. அண்ணலார் சாப்பிடச் சொல்லிவிட்டார்களே என்றெண்ணி, நானும் பழங்களைச் சாப்பிட துவங்கினேன்.

 

அப்போது என்னை கவனித்த அண்ணலார், "சுஹைபே! உமது கண்ணில் நோய் உள்ளது. ஆனால் பேரிச்சம்பழம் சாப்பிடுகிறீரே! என்று கேட்டார்கள். (கண்நோயின்போது பேரிச்சம் பழம் உண்ணலாகாது) இதைக் கேட்ட நான் கொஞ்சமும் பதட்டமில்லாமல், "நாயகமே! நோயில்லாத கண்ணின் பக்கமாகவே நான் சாப்பிடுகிறேன் என்று நகைச்சுவையாக" பதிலளித்தேன். இந்த பதிலைக் கேட்ட அண்ணலார் சிரித்து விட்டார்கள். நூல்:- இப்னுமாஜா-3434, முஸ்னது அஹ்மத்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "சுஹைபே! உமது கண்ணில் நோய் உள்ளது. பேரிச்சம்பழம் கண் நோயை அதிகரிக்கச் செய்யுமல்லவா? என்ற கரிசணத்தோடு தான் கேட்டார்கள். அண்ணலாரின் இந்த நோய் விசாரிப்பைக்கூட பொருட்படுத்தாமல் அந்த விஷயத்தையே நகைச்சுவையாக கூறிய சுஹைப் (ரலி) அவர்கள், "நான் வாயில் தானே சாப்பிடுகிறேன் கண்ணில் அல்லவே! என்று கூறி, அண்ணலாரையே சிரிக்க வைத்து விட்டார்கள்.

 

நான் முழுவதுமாக...  

 

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜயீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் தபூக் யுத்தத்தின்போது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அண்ணலார் தோலினால் போடப்பட்ட ஓர் கூடாரத்தில் இருந்தார்கள். நான் சலாம் கூறி உள்ளே செல்ல அனுமதி கேட்டேன். அண்ணலார் பதில் சலாம் கூறி, “உள்ளே வாருங்கள்” என்றார்கள்.

 

(கூடாரம் மிகச் சிறியதாக இருந்ததால்,)  ( أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ ) "நாயகமே! நான் முழுவதுமாக உள்ளே நுழைந்துவிடவா? (அதாவது தலையை மட்டும் கூடாரத்தில் நுழைய வைக்கட்டுமா? அல்லது என் உடல் முழுவதுமாக நான் உள்ளே வரட்டுமா?)" என்று (நகைச்சுவையாக) கேட்டேன். அண்ணலார், ( كُلُّكَ ) "முழுவதுமாகவே உள்ளே வாருங்கள்" என்று (நகைச்சுவையாகவே)  பதிலளித்தார்கள். பின்னர் நான் கூடாரத்தில் நுழைந்தேன். நூல்:- அபூதாவூத்-4348

 

கிரயத்தை இவருக்கு கொடுத்துவிடுங்கள்

 

ஒருமுறை நுஅய்மான் (ரலி) அவர்கள் மதீனாவில் நுழைந்த ஒரு வியாபாரக் கூட்டத்தாரிடம் ஒரு பொருளை வாங்கி, கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் அப்பொருளை விற்றவர் அவரிடம் பணம் கேட்டபோது, அவரை அண்ணலாரிடம் அழைத்து வந்து, "நாயகமே! இதன் கிரயத்தை இவருக்கு கொடுத்துவிடுங்கள்" என்றார். அதற்கு அண்ணலார், "இதனை நீர் எமக்கு அன்பளிப்பாக வழங்கவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என்னிடம் இதன் கிரயம் இல்லை. எனினும், தாங்கள் அப்பொருளை சாப்பிட ஆசைப்பட்டேன்" என்று பதிலளித்தார். அண்ணலார் சிரித்தவாறே அதன் கிரயத்தை கொடுக்குமாறு தம் தோழர்களிடம் கூறினார்கள். நூல்:- அல்இஸாபா, சைய்யிதுனா முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

 

ஒரு கிராமவாசியின் அலறல்

 

ரபீஆ பின் உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு கிராமவாசி அண்ணல் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். அவர் தமது ஒட்டகத்தை வெளியே நிறுத்திவிட்டு பள்ளிவாசலுக்குள் சென்றார். சில நபித்தோழர்கள் நுஅய்மான் பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம், ( لَو نَحَرتَهَا فَاَکَلنَاهَا فَاِنَّا قَد قَرِمنَا اِلَی اللَّحمِ وَیَرغَمُ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَنَهَا )  "நம் அனைவருக்கும் இறைச்சி சாப்பிட மிகவும் ஆவலாக இருக்கிறது. நீ இதை அறுத்தால் நாம் சாப்பிடலாம். இறுதியில் அண்ணலார் அதற்கான விலையை பொறுப்பேற்றுக் கொள்வார்கள்" என்று கூறினார்கள். எனவே, நுஅய்மான் (ரலி) அவர்கள் அதை அறுத்து விட்டார்.

 

பின்பு சற்று நேரம் கழித்து வெளியே வந்த அந்தக் கிராமவாசி தனது ஒட்டகத்தை பார்த்துவிட்டு, "முஹம்மதே! எனது ஒட்டகத்தை அறுத்து விட்டார்களே!" என்று கூச்சலிட்டார். அண்ணலார் வெளியே வந்து, ( مَن فَعَلَ هَذَا ) இதைச் செய்தது யார்?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் "நுஅய்மான்" என்று கூறினார்கள். அவர் எங்கே இருக்கிறார் என அண்ணலார் தேடிச் சென்றபோது, அவர் ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு குழிக்குள் மறைந்து கொண்டு அவர் பேரீச்ச மட்டைகளாலும் கீற்றுக்களாலும் தன்மீது போட்டு மறைத்துக் கொண்டிருந்தார்.

 

ஒரு மனிதர் அண்ணலாரிடம் சப்தமாக, "நாயகமே! நான் நுஅய்மானைப் பார்க்கவே இல்லை" என்று கூறிக்கொண்டே அவர் அங்கு ஒளிந்துள்ளார் என்று சாடை செய்து காட்டிவிட்டார். அண்ணலார் அவரை வெளியேறி இழுத்தார்கள். அவர் மீது கிடந்த கட்டைகள் முகத்தில் அழுத்தியதால் அவரது முகம் நிறம்மாறி இருந்தது. அண்ணலார் அவரிடம், ( مَا حَمَلَكَ عَلَی مَا صَنَعتَ )  "உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியவர் யார்? என்று கேட்டார்கள். நுஅய்மான் (ரலி) அவர்கள் அண்ணலாரிடம், ( اَلَّذِینَ دَلُّوكَ عَلَيَّ یَارَسُولَ اللّٰهِ هُمُ الَّذِینَ أَمَرُونِي ) "நாயகமே! என்னைப் பற்றி உங்களிடம் கூறினார்களே அவர்கள்தான் இவ்வாறு செய்யுமாறு என்னை ஏவினார்கள்" என்று கூறினார். அண்ணலாருக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக்கொண்டே அவரது முகத்தைத் துடைத்துவிட்டார்கள். பின்பு அந்த ஒட்டகத்திற்குரிய விலையை அந்தக் கிராமவாசியிடம் கொடுத்து அனுப்பினார்கள். நூல்:- அல்இஸ்தீஆப், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-766

 

சுறுசுறுப்பான அரபு அடிமை

 

உம்மு சல்மா (ரலி) அவர்கள் கூறியதாவது. அபூபக்ர் (ரலி) அவர்கள் புஸ்ரா நகரத்திற்கு வியாபாரத்திற்காக சென்றார்கள். பத்ருப் போரில் பங்கேற்ற நுஅய்மான் (ரலி) மற்றும் சுவைபித் பின் ஹர்மலா (ரலி) ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்றார்கள். அதில் சுவைபித் (ரலி) அவர்கள் பயண உணவுக்கு பொறுப்பாளராக இருந்தார். அவரிடம் நுஅய்மான் (ரலி) அவர்கள், "உணவு கொடுங்கள்" என்றார். அவர், "அபூபக்ர் (ரலி) அவர்கள் வரட்டும்" என்று கூறி (உணவு தர) மறுத்துவிட்டார்.

 

நுஅய்மான் (ரலி) அவர்கள் அதிகம் சிரிப்புக் காட்டுபவராகவும், அதிகம் கேலி கிண்டல் செய்பவராகவும் இருந்தார். அவர், ஒட்டகங்களை இழுத்து வந்து கொண்டிருந்த சில மனிதர்களிடம் சென்று, ( تَشْتَرُونَ مِنِّي عَبْدًا لِي )  "என்னிடம் (சுறுசுறுப்பான) அரபு அடிமை ஒருவர் இருக்கிறார். அவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டார். அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

 

நுஅய்மான் (ரலி) அவர்கள், ( إِنَّهُ عَبْدٌ لَهُ كَلاَمٌ وَهُوَ قَائِلٌ لَكُمْ إِنِّي حُرٌّ. فَإِنْ كُنْتُمْ إِذَا قَالَ لَكُمْ هَذِهِ الْمَقَالَةَ تَرَكْتُمُوهُ فَلاَ تُفْسِدُوا عَلَيَّ عَبْدِي )  "அந்த அடிமை நாவன்மை உடையவர். அவர் தன்னை சுதந்திரமானவன் எனக் கூறலாம். நீங்கள் அதை நம்பி அவரை வாங்க மறுப்பதாக இருந்தால் இப்போதே என்னை விட்டு விடுங்கள். அவர் விஷயத்தில் எனக்கு இடையூறு செய்யாதீர்கள்" என்று கூறினார்.

 

அம்மனிதர்கள், "சரி அவரை வாங்கிக் கொள்கிறோம்" என்று கூறி, பத்து பெண் ஒட்டகங்களைக் கொடுத்துவிட்டு அவரை வாங்கிக் கொண்டார்கள்.

 

நுஅய்மான் (ரலி) அவர்கள் அந்த பத்து ஒட்டகங்களையும் இழுத்துக்கொண்டு அவர்களுடன் தமது இருப்பிடம் வந்து, "இதோ இவர்தான் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றார். சுவைபித் (ரலி) அவர்கள், ( إِنَّ هَذَا يَسْتَهْزِئُ بِكُمْ وَإِنِّي حُرٌّ لَسْتُ بِعَبْدٍ )  "இவர் உங்களிடம் சும்மா கேலி செய்திருக்கிறார். நான் சுதந்திரமான மனிதன். அடிமையில்லை" என்றார். வந்தவர்கள், உம்மைப் பற்றிய எல்லா விஷயத்தையும் இவர் (நுஅய்மான்) கூறிவிட்டார்" என்று கூறி, அவரது கழுத்தில் கயிற்றைப் பிணைத்து அழைத்துச் சென்றனர்.

 

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறப்பட்டது. அவர்கள் தமது தோழருடன் சென்று அம்மனிதர்களின் ஒட்டகங்களைக் கொடுத்துவிட்டு சுவைபித் (ரலி) அவர்களை மீட்டு வந்தார்கள். பிறகு இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அண்ணலாரும் நபித்தோழர்களும் இந்த நிகழ்ச்சியை, நினைவுபடுத்தி நினைவுபடுத்தி ஒரு வருடம் வரை பேசி சிரித்துக் கொண்டார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா-3719

 

இப்னுமாஜா நூலில் இந்த நிகழ்ச்சியில் கேலி செய்தவர் சுவைபித் (ரலி) அவர்கள் என்றும், விற்கப்பட்டவர் நுஅய்மான் (ரலி) அவர்கள் என்றும் மாற்றி கூறப்பட்டுள்ளது.

 

நகைச்சுவைப் பேச்சு தன் குடும்பத்தாருக்கும், உறவினருக்கும், நண்பர்களுக்கும் மத்தியில் அன்பையும் பாசத்தையும் நெருக்கத்தையும் அதிகப்படுத்தும். எனினும், அதில் பிறரை நோவினை படுத்துவதோ, குத்திப்பேசுவதோ,  இடையூறு அளிப்பதோ, பொய்யோ, இட்டுக்கட்டுவதோ, புறம் பேசுவதோ, பிறரை கேவலப்படுத்துவதோ இருத்தல் கூடாது.

 

நபித்தோழர்கள் இவ்வாறு கேலி செய்வதை தவறாகக் கருதவில்லை. ஏனெனில் அவர்களது வழிகாட்டியான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் கேலி செய்திருக்கிறார்கள். இது முந்திய இஸ்லாமிய சமூகத்தின் உயர்ந்த பண்பையும், சிறந்த நகைச்சுவை உணர்வையும் எடுத்துக்காட்டுகிறது. இன்னும் அவர்களிடத்தில் கடுகடுத்த, இறுக்கமான தன்மை காணப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

 

ஆனால், நகைச்சுவையையே நேரப் போக்காக எடுத்துக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டிருப்பது மனத்தை இறுக்கிவிடும். இறைநினைவுகளை உள்ளத்திலிருந்து அகற்றிவிடும். இத்தகைய முறையில் சிரிப்பு காட்டுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

 

தமாஷாக

 

ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் ஒருவன், "நான் இறைத்தூதர்" என்று கூறிக்கொண்டு திரிந்தான். அவனைப் பிடித்து சிறையில் அடைக்கப்பட்டது. பிறகு ஜனாதிபதி அவர்கள், அவன் இருக்கும் இடத்திற்குச் சென்று, "ஏம்பா இறைத்தூதரே! உமக்கு இங்கு இறைச்செய்தி ஏதும் வருகிறதா? என்று தமாஷாக கேட்டார்கள். அதற்கு அவன், உங்களுக்கு இதுகூட தெரியாதா? சிறைச்சாலையில் எப்படி இறைச்செய்தி கொண்டு வரும் வானவர் வருவார்? அப்படி இருக்க, இங்கு எப்படி இறைச்செய்தி வரும்? என்று வேடிக்கையாகச் சொன்னான். இதைக்கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் சிரித்து விட்டார்கள்.

 

மற்றொரு முறை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் ஒருவன், "நான் தான் இறைவன் இந்த அண்ட கோளங்கள் அனைத்தையும் நானே படைத்து பரிபாலித்து வருகிறேன்" என்று கூறிக் கொண்டு திரிந்தான். அவனை பிடித்து வந்து ஜனாதிபதி அவர்கள் முன் நிறுத்தப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் தங்களின் சிரிப்பை அடக்கிக்கொண்டு, "ஏற்கனவே, ஒருவன் இறைத்தூதர் என்றும், எனக்கு இறைச்செய்தி வருகிறது என்றும் கூறிக்கொண்டு இங்கு வந்தான். இப்போது நீ இறைவன் என்று கூறிக்கொண்டு வந்துள்ளாயே" என்று நகைச்சுவையாக வினவினார்கள். இதைக்கேட்ட போலி இறைவன், "அப்படியா? அவன் பொய்யன். உங்களிடம் பொய் சொல்லியுள்ளான். நான் அவனை ஒருபோதும் இறைத்தூதராக அனுப்பி வைக்கவில்லையே" என்று மிகவும் தமாஷாக கூறினான். இதைக்கேட்டு அங்கிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

 

சன்மார்க்க சண்டமாருதம்  

 

அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த, நாடறிந்த நாவலர் பேரறிஞர் A.M.முஹம்மது ஷப்பீர் அலீ பாக்கவி (ரஹ்) அவர்களிடம் வந்தவாசியைச் சேர்ந்த அன்னாரின் மாணவர் ஹசன் பஸ்ரி பாக்கவி ஆலிம் அவர்கள் வந்து, "ஹள்ரத் என் தம்பிக்கும் தங்கைக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்துள்ளோம். கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும்" என்று அழைப்புக் கொடுத்தவுடன், ஹள்ரத் அவர்கள் "அது ஹராமாக்கப்பட்ருச்சே! நபி ஆதம் (அலை) அவர்கள் காலத்திலேயே உடன்பிறப்புகளிலேயே கல்யாணம் செய்வது ஹராமாக்கப்பட்ருச்சே" என்று கூறினார்கள். உடனே அவர், "ஹள்ரத், நான் அப்படி சொல்லவில்லை. என் தம்பிக்கு வேற பொண்ணு என் தங்கைக்கு வேற மாப்பிள்ளை இரண்டு பேருக்கும் ஒரே இடத்தில் கல்யாணம்  நடக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்று சொன்னேன்" என்றார்.

 

அதற்கு ஹள்ரத் அவர்கள், "அப்படி விளக்கமாக சொல்லு. நீ பாட்டுக்கு பொத்தாம் பொதுவா சொன்னா (அருகில் இருக்கும்) புது மாணவர்கள் 'இது என்ன கேடுகெட்ட கல்யாணமாயிருக்கு,  இவரு வேற அதுக்கு சிறப்பு அழைப்பாளரா போறாரு' அப்படினு நெனைச்சுக்குவாங்கல்ல" என்று (காமெடியாகக் கூறி) திருத்தினார்கள்.

 

ஹள்ரத் அவர்கள் வெளியூர் பயணத்தில் இருக்கும்போது, ஹோட்டலில் மதிய உணவு பார்சல் வாங்கி உண்ணும் நேரங்களில், சால்னா கவரின் நூலைக் கழற்ற சொல்வதற்கு, "எப்பா அந்த தலப்பாவை கழட்டுப்பா. தேவையான அளவு ஊத்திட்டு திரும்ப தலப்பாவை கட்டிடு. சும்மா வச்சா அது ருக்கூவுக்கு போயிடும். (அதாவது குனிந்து விடும்)" என தனக்கே உரித்தான நகைச்சுவை மொழியில் பேசி சபையை கலகலப்பாக்குவார்கள்.

 

சில நேரங்களில் ஹள்ரத் அவர்கள், சால்னாவில் தண்ணீர் அதிகமாகி உள்ளது என்பதை "இதில இருக்குற தண்ணீல உளூச் செய்துக்கலாம்" என நகைச்சுவையாக கூறுவார்கள். நூல்:- சன்மார்க்க சண்டமாருதம் A.M.முஹம்மது ஷப்பீர் அலி பாக்கவி ஹள்ரத்

 

ஓர் மார்க்க அறிஞர், "சொர்க்கத்தில் மது, மாது போன்ற அது இது என எல்லா இன்பத்தையும் அனுபவிக்கலாம்" என்று சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது ஒருவர், "ஹள்ரத்! சொர்க்கத்தில் பீடி சிக்ரெட்டும் கிடைக்குமா?" என்று குறும்பாகக் கேள்வி கேட்டார். அதற்கு ஹள்ரத் அவர்கள், "ஆம்! கிடைக்கும். ஆனால், அதை பற்ற வைக்கும் நெருப்பைப் பெற, நரகம் தான் போகவேண்டும் பரவாயில்லையா? என்று கேலியாகக் கூறினார்.

 

அதிகம் ஆபத்தாகும்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تُكْثِرُوا الضَّحِكَ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ‏ )  அதிகமாகச் சிரிக்காதீர்கள். ஏனெனில், அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-,அல்அதபுல் முஃப்ரத்-253

 

சிமாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "தாங்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் அமர்ந்ததுண்டா? என்று வினவினேன். அதற்கு அன்னார், "ஆம்! அமர்ந்துள்ளேன். அண்ணலார் அதிக நேரம் மௌனமாகவும் மிக குறைவாகவே சிரிப்பவர்களாகவும் இருந்தார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-851

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَسْتُ مِنْ دَدٍ وَلاَ الدَّدُ مِنِّي بِشَيْءٍ)  நான் வீண்விளையாட்டுக்கள் நிகழ்த்துபவரும் அல்லர். என்னிலிருந்து வீணானவை எதுவும் வெளிப்படாது. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-785, பைஹகீ

 

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். யாரின் சிரிப்பு அதிகமாகிவிடுகிறதோ அவரைப் பற்றிய அந்தஸ்து குறைந்துவிடும். யார் அதிகமாக கேலி செய்கிறாரோ அவரைப் பற்றி இலேசாகக் கருதப்படும். நூல்:- சைய்யிதுனா முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

 

இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அதிகமான சிரிப்பும், உலகைப் பற்றிய அதிகமான சந்தோஷமும் நரம்புகளில் பரவிக் கொல்லும் விஷத்தைப் போன்றதாகும். இதனால் உள்ளத்தை விட்டும் அல்லாஹ்வின் அச்சமும், மறுமை பற்றிய கவலையும் நீங்கிவிடும். நூல்:- சைய்யிதுனா முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

 

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் கூறிய அருமையான கவிதை: உழைத்துக் களைத்துப்போன மனதுக்கு ஓய்வு கொடு. சிறிது நகைச்சுவை பகிர்ந்து மன மகிழ்வை ஏற்படுத்து. எனினும் அந்த நகைச்சுவை உணவில் உப்பு சேர்ப்பது போன்ற அளவுக்கே இருக்கட்டும்.

 

மக்களை கேலிசெய்து சிரிப்பது, அவர்களை குறை கூறி சிரிப்பது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் கண்ணியத்தை குலைத்து சிரிப்பது ஆகிய சிரிப்புக்கள் மார்க்கத்தில் விலக்கப்பட்டவையாகும்.

 

நிச்சயமாக அதிக சிரிப்பு இறைநம்பிக்கையுடைய ஆன்மீக உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும். உள்ளத்தில் பொடுபோக்கை ஏற்படுத்தும் அதன் காரணமாக உள்ளம் கடினமாகிவிடும். அவையே உள்ளத்தின் மரணத்திற்கு காரணமாகிவிடும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரம்புக்கு மீறிய நகைச்சுவையை  தடுத்துள்ளார்கள். காரணம் என்னவெனில் அளவுக்கதிகமான சிரிப்பதும் சிரிக்க வைப்பதும் அதையே எப்போதும் செய்வதும் தடை செய்யப்பட்டவை ஆகும். சிரித்து சிரித்து உள்ளம் செத்துப்போகும் அளவை எட்டும்போது, இறை நினைவிலிருந்தும் மார்க்கத்தின் முக்கியக் கடமைகளைச் சிந்திப்பதிலிருந்தும் கவனம் திசை மாறிவிட வாய்ப்பு உண்டு.

 

மேலும், அளவு கடந்த நகைச்சுவையானது பெரும்பாலும் அடுத்தவர்கள் மனதைக் காயப்படுத்தவும் செய்யலாம். மக்களுக்கு மத்தியில் விரோதத்தையும், வேதனையையும், கெட்ட எண்ணங்களையும், பெரியோரின் மரியாதையில் குறைவையும் ஏற்படுத்தி விடும். ஒருவரைப் பற்றிய கம்பீரமான பார்வையை அது அழித்துவிடும்.

 

நோய் எதிர்ப்பு சக்தி

 

மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும், இன்றைய இயந்திர உலகில் சிரிப்புதான் தேவை. ஏனென்றால் அது சிறந்த மருந்து என்கிறார்கள். சிரிக்கும்போது, முழு உடலுக்கும் அது நன்மை தருகிறது. அதன் மூலம் உள்ளுறுப்புகளை வலிமையாக்க முடியும் என ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

 

தினமும் அரை மணி நேரம் சிரித்தால் இதயம் அற்புதமாக இயங்கும். இரத்தக்கொதிப்பு வராது. மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும், அவற்றின் மூலக் கூறுகளின் எண்ணிக்கையும் குறைவதாகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு தான்.

 

சிரிக்கும்போது நுரையீரலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். அல்சரை வருவதை தடுக்கும் என்சைம்களை சுரக்கச் செய்கிறது. நம்முடைய உமிழ் நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகமாகும். உடல் வலிகளை போக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்யும்.

 

நல்லா வாய்விட்டு சிரிக்கும் மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான். அந்த மனிதனிடம் இருக்கின்ற நெகட்டிவ் எனர்ஜி எல்லாம் பறந்து போய்விடும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும். வாய்விட்டு மட்டுமல்லாமல் நல்லா மனசு விட்டும் சிரிக்கும்போது, உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பு கரைகிறது.

 

ஒரு நல்ல சிரிப்பு ஒரு சிகிச்சை போன்றது. சிரிப்பு நம்மை உயிர்ப்பிக்கிறது, குணப்படுத்துகிறது, அமைதிப்படுத்துகிறது. அது விலைமதிப்பற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

 

பிறந்த குழந்தை பசிக்காக அழுதாலும், நிறைய சிரித்துக்கொண்டே இருக்கும். குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக 300 முதல் 400 முறைகள் சாதாரணமாக சிரிப்பதாகவும், அதில் 150 தடவை கலகலப்பாக சத்தம் போட்டு சிரிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், வயது கூடக் கூட இந்த எண்ணிக்கை குறைவதாகவும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, காலப்போக்கில் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், வயதான பின்னர் வேலை, திருமணம் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் சிரிப்பதையே மறக்கடிக்கச் செய்து விடுகிறது.

 

பணம் சம்பாதிக்கும் நோக்கில், அவசரம் அவரசம் என சிரிப்பை மறந்து, சீறி பாய்கிறோம். சிரிப்பதற்கு நேரமில்லாமல் பறப்பதால் நோய்கள் நம்மைத் தேடி வருகின்றன. மன அழுத்தம் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. எங்கும் டென்ஷன். 


அலுவலக டென்ஷனை வீட்டிலும், வீட்டின் டென்ஷனை அலுவலகத்திலும் காண்பிக்கத் தொடங்குகிறோம். அந்த டென்ஷனை குறைக்கும் சூப்பர் டானிக், சிரிப்பு மட்டுமே! எனவே, அளவோடு சிரிப்போம். மற்றவர்களையும் சிரிக்க வைப்போம். அதன்மூலம் உடல் ஆரோக்கியம் பேணி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...