Search This Blog

Wednesday, 1 December 2021

கழிப்பதில் கவனம்

கழிப்பதில் கவனம்

 

 فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ

 

அங்குள்ள (குபா நகரத்திலுள்ள) மனிதர்கள் தூய்மையாக இருக்கவே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) தூய்மையானவர்களையே நேசிக்கின்றான்.                                திருக்குர்ஆன்:- 9:108

 

நவம்பர்-19 உலக கழிப்பறை தினமாக (World Toilet Day) அனுசரிக்கப்படுகிறது.

 

அனைத்துக் காரியங்களுக்கும் சில ஒழுக்கமுறைகளைக் கற்றுத் தருகின்ற இஸ்லாம், மனிதனின் அன்றாடத் தேவையான மலம் ஜலம் கழிப்பதிலும் சில அழகிய ஒழுக்கமுறைகளைக் கற்றுத்தருகிறது. 

 

அடிப்படை வசதி எனும் கழிப்பறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். சுகாதார சீர்கேடுகளால் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் வரை மரணமடைகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.  

 

திறந்த வெளியில் பயன்படுத்தும் கழிப்பறைமூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. யுனிசெப் சர்வேயின்படி இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்தியதற்கு போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன.

 

தனிமையில்

 

முஙீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் (மக்களின் பார்வைபடாத அளவுக்கு) மிகத் தொலைவாகச் செல்வார்கள். நூல்:- அபூதாவூத்-1, இப்னுமாஜா-326

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் பயணித்துள்ளோம். எனவே, நபியவர்கள் பயணத்தில் (யாருக்கும்) தென்படாத அளவுக்கு மறைவான இடத்துக்குச் செல்லும்வரை மலம் கழிக்கமாட்டார்கள்.  நூல்:- அபூதாவூத்-2, இப்னுமாஜா-330

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிக்க நாடினால் (தம் மர்ம உறுப்புகளை யாரும் பார்த்து விடாதபடி) பூமிக்கு மிக நெருக்கமான பின்னர் தனது ஆடையை உயர்த்துவார்கள். நூல்:- அபூதாவூத்-13, திர்மிதீ-14, தாரிமீ-668

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 وَمَنْ أَتَى الْغَائِطَ فَلْيَسْتَتِرْ فَإِنْ لَمْ يَجِدْ إِلاَّ أَنْ يَجْمَعَ كَثِيبًا مِنْ رَمْلٍ فَلْيَسْتَدْبِرْهُ فَإِنَّ الشَّيْطَانَ يَلْعَبُ بِمَقَاعِدِ بَنِي آدَمَ مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَஒருவர் மலம் கழிக்கச் சென்றால், தன்னை மறைத்துக் கொள்ளட்டும். மறைப்பதற்கு ஏதும் கிடைக்கவில்லையென்றால் மணலைக் குவித்து அதற்குப் பின்னால் அமர்ந்து கொள்ளட்டும். ஷைத்தான் மனிதனின் பிறப்புறுப்பைக் கொண்டு விளையாடுகிறான். இவ்வாறு மறைத்துக் கொள்வது மிக நல்லது. இவ்வாறு செய்யவில்லையாயின் (காடுகள் போன்ற பகுதியில் இருக்கும்போது) குற்றமில்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-32

 

மலம் சிறுநீர் கழிப்பதற்கு, மக்கள் நடமாட்டமில்லாத இடத்தைத் தேர்வு செய்யும் போதுதான் நிம்மதியாக மலம் சிறுநீர் கழிக்கமுடியும்; சப்தத்துடன் காற்று பிரியும்போது வெட்கப்பட வேண்டிய நிலை வராது. மேலும் துர்வாடையால் மக்கள் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்படும்.

 

நாம் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் துளிகள் நமது உடல் மீதும், ஆடை மீதும் தெறிக்காமல் இருக்குமாறு கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

பொருத்தமான இடம்

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (வெட்ட வெளியில்) மலம் கழிக்க நாடினால், யாரும் பார்க்காத தொலைவு வரை செல்வார்கள். நூல்:- அபூதாவூத்-2

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَبُولَ فَلْيَرْتَدْ لِبَوْلِهِ مَوْضِعًا )  நீங்கள் சிறுநீர் கழிக்க நாடினால் சிறுநீர் கழிக்க(ப் பொருத்தமான இடத்தைத்) தேடிக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அபுத் தய்யாஹ் (ரஹ்) அவர்கள்  நூல்:-  அபூதாவூத்-3

 

ஓத வேண்டியவை

 

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْخَلاَءَ فَلْيَقُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ ) இந்தக் கழிப்பறைகளில் ஷைத்தான்கள் வருவார்கள். ஆகவே, உங்களில் எவர் கழிப்பறைக்குச் சென்றாலும் (அவூதுபில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி) (அருவருக்கத்தக்க செயல்கள், "இழிவான எண்ணங்கள் ஆகியவற்றை தூண்டும்) ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்" என்று சொல்லட்டும். அறிவிப்பாளர்:- ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-5, திர்மிதீ-5, நசாயீ-19, இப்னுமாஜா-292, முஸ்னது அஹ்மத்-18483

 

கழிப்பறை ஷைத்தானின் இருப்பிடமாக இருப்பதால் தான், அங்கு பலவற்றையும் சிந்தித்துக்கொண்டு நீண்ட நேரம் இருக்கக்கூடாது. தேவைகளை முடித்துவிட்டு விரைவாக வெளியேறிவிட வேண்டும். அங்கு உட்கார்ந்து தினசரிகள் வாசித்தவாறு புகைத்து கொண்டு நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும், பல்வேறு விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதும்  சரியல்ல.

 

ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறியதை செவியுற்றேன். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியேறும்போது, ( غُفْرَانَكَ ) “குஃப்ரானக" “இறைவா! உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன்" என்று கூறுவார்கள். நூல்:-  அபூதாவூத்-28, திர்மிதீ-7, இப்னுமாஜா-296, முஸ்னது அஹ்மத்-24063, தாரிமீ-677,  அல்அதபுல் முஃப்ரத்-693

 

இறைவனை எப்போதும் நினைவு கூற வேண்டும். ஆனால் கழிப்பறை அதற்கு ஏற்ற இடமன்று. எனவே, அங்கு இறைவனை நினைவு கூறாமல் இருந்ததற்காக இறைவனிடம் மன்னிப்பு கோரும் வகையில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தித்திருக்கலாம்.

 

அல்லது உணவும் தண்ணீரும் கொடுத்து அவை செரிமானமாகி, வேண்டிய சத்துக்களை உடல் எடுத்துக்கொண்டு கழிவை வெளியேற்றுவது தான் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஒரு பேரியக்கமாகும். இதற்கு முறையாக இறைவனுக்கு நன்றி செலுத்த மனிதனால் இயலாது. எனவே, அதற்காக இறைவனிடம் மன்னிப்புக்கோர இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனைச் செய்திருக்கலாம். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

கிப்லாவை முன்னோக்க வேண்டாம்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلاَ يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا ) உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்க வேண்டாம்; (அதன் திசையில்) தமது முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூ அய்யூப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-144, திர்மிதீ-8, நசாயீ-21

 

அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மலம் சிறுநீர் கழிக்க நீங்கள் கழிவறைக்குச் சென்றால் கிப்லாவை முன்னோக்க வேண்டாம்.

 

நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்கு வந்தபோது அங்கு கழிவறைகள் கிப்லா திசையில் இருப்பதை கண்டோம். (அதனால் மலம் கழிக்கும்போது) கிப்லா திசையிலிருந்து (முடிந்த அளவு) திரும்பிக்கொள்வோம்; (அதற்காக) இறைவனிடத்தில் பாவமன்னிப்பு தேடிக்கொள்வோம். நூல்:- அபூதாவூத்-8, திர்மிதீ-8, இப்னுமாஜா-315

 

பிறர் வீட்டுக்கோ அல்லது பொது இடங்களுக்கோ செல்லும்போது அங்கு கிப்லா திசையில் கழிப்பறைகள் இருந்து, நமக்கு தேவை ஏற்பட்டால், அதை பயன்படுத்தலாம். ஆனால், மேற்காணும் நபிமொழியில் கண்டவாறு செயல்பட வேண்டும்.

 

வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பதில் இஸ்லாம் உடன்படுவதில்லை. ஆனால், வீடு கட்டும்போது கிப்லா திசை நோக்கி கழிப்பறை அமைந்துவிடாதவாறு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறது இஸ்லாம்.

 

வலக்கையால்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِذَا أَتَى الْخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِஒருவர் கழிப்பறைக்கு சென்றால், பிறப்புறுப்பை வலக்கையால் தொட வேண்டாம்; வலக்கையால் தூய்மை செய்யவும் வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூகத்தாதா (ரலி) அவர்கள் நூல் புகாரீ-153, முஸ்லிம்-443, அபூதாவூத்-29, திர்மிதீ-15, நஸாயீ-25, இப்னுமாஜா-306, முஸ்னது அஹ்மத்-21484

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மலம் சிறுநீர் கழித்தபின் தூய்மை செய்வதற்கும் மற்ற அசுத்தங்களை நீக்குவதற்கும் இடக்கையை பயன்படுத்துவார்கள். நூல்:- அபூதாவூத்-31

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا بَالَ أَحَدُكُمْ فَلْيَنْتُرْ ذَكَرَهُ ثَلاَثَ مَرَّاتٍ ) ஒருவர் சிறுநீர் கழித்த பின் அவர் ஆணுறுப்பை மூன்று முறை அழுத்தி (எஞ்சியுள்ள சிறுநீர்த் துளிகளை வெளியேற்றி) விடட்டும். அறிவிப்பாளர்:- யஸ்தாத் அல்யமானீ (ரஹ்) அவர்கள் நூல்:-  இப்னுமாஜா-321, முஸ்னது அஹ்மத்-18274

 

உஸ்மான் பின் அப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( مَا تَغَنَّيْتُ وَلاَ تَمَنَّيْتُ وَلاَ مَسِسْتُ ذَكَرِي بِيَمِينِي مُنْذُ بَايَعْتُ بِهَا رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ) நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி பிரமாணம் (பைஅத்) அளித்ததிலிருந்து நான் பாட்டு பாடியதில்லை; பொய் சொன்னதில்லை; என் பிறப்புறுப்பை வலக்கையால் தொட்டதில்லை. நூல்:- இப்னுமாஜா-307

 

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் இஸ்லாத்தில் இணைந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வலக்கையின் மீது என்னுடைய வலக்கையை வைத்து (பைஅத் எனும்) உறுதிப் பிரமாணம் ஏற்றேன். அன்றிலிருந்து இன்றுவரை என் பிறப்புறுப்பை  வலக்கையால் தொட்டதில்லை.

 

இயற்கையாகவே மனிதனின் வலக்கையில் ஆரோக்கியமளிக்கும் திரவமும், இடக்கையில் நோயின் திரவமும் உள்ளுக்குள் ஊறிக் கொண்டிருக்கும். வலக்கையைக் கொண்டு அசுத்தத்தை நீக்கினால் திரவ அமைப்பு மாறி, அதன் தாக்கம் மூளையிலும் நரம்பு திசுக்களால் உருவாக்கப்பட்ட தண்டுவடத்திலும் ஏற்படுகிறது. எனவே, வலக்கையால் துப்புரவு செய்வது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. 

 

டேலா எனப்படும் மண்கட்டிகள்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூஜாவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அண்ணலாருக்குப் பின்னால் நின்று கொண்டார்கள். அப்போது அண்ணலார், ( مَا هَذَا يَا عُمَرُ ) "உமரே என்ன (விஷயம்)?" என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "தாங்கள் (சிறுநீர் கழித்தபின்) துப்புரவு செய்துகொள்வதற்காக தண்ணீர் கொண்டு வந்துள்ளேன்" என்று கூறினார்கள்.

 

அதற்கு அண்ணலார், ( مَا أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً ) "சிறுநீர் கழிக்கும்போதெல்லாம் தண்ணீரால் துப்புரவு செய்ய வேண்டும் என்று நான் கட்டளையிடப்படவில்லை. (மண்கட்டி மூலம் தூய்மை செய்து கொள்ள அனுமதி உள்ளது), ஒவ்வொரு முறையும் தண்ணீர் மூலம் நான் துப்புரவு  செய்தால் (என் சமுதாயத்தினருக்கு) அது கட்டாயமாகி விடும். (மண்கட்டி மூலம் துப்புரவு செய்ய அனுமதி உள்ளது என்பது தெரியாமல் போய்விடும்)" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூது-38, இப்னுமாஜா-322

 

சிறுநீர் கழித்த பின் அவசியம் துப்புரவு செய்ய வேண்டும். அதற்காக  தண்ணீரைக் கொண்டுதான் துப்புரவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல. தண்ணீரால் துப்புரவு செய்வது நல்லது. இருந்தாலும், சுத்தமான மண் கட்டிகளைக் கொண்டும் துப்புரவு செய்யலாம் என்பதையே இந்த நபிமொழி விவரிக்கிறது.

 

தமிழ்நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்களின் கழிப்பறை ஓரங்களில் "டேலா" எனப்படும் மண்கட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. கழிப்பறை செல்வோர் அவற்றில் மூன்று அல்லது ஐந்து கட்டிகளைக் கொண்டு செல்வதும், அவற்றால் துப்பரவு செய்த பின் தண்ணீராலும் துப்புரவு செய்வதும் நடைமுறையில் இருக்கிறது.

 

(டேலா எனும்) மண்கட்டியை உபயோகிப்பதால் நன்றாக துப்புரவு ஏற்படுவது மட்டுமின்றி, அதில் இருக்கும் (Ammonium Chloride) “அமோனியம் குளோரைடு” எனும் நவச்சாரம் சிறுநீர்ப்பை தொற்று நோய்களில் சிறுநீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

 

டாக்டர் ஹலூக் என்பவர் கூறுகிறார்: பொதுவாக மண்ணிற்கு கிருமிகளை அடியோடு அழித்திடும் தன்மை உள்ளதால் அதன் மூலம் துப்புரவு செய்வதின் மூலம் (Cancer of Penis) ஆணுறுப்புப் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. மட்டுமின்றி உறுப்புகளில் கிருமிகளின் காரணமாக காயாமல் இருக்கும் காயங்கள் உள்ள ஒருவருக்கு தொடர்ந்து மண்கட்டியை உபயோகப்படுத்த அறிவுறுத்தி பின்பு அதனால் அவருக்கு நிவாரணமும் ஏற்பட்டது.

 

கற்களாலும், தண்ணீராலும்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிப்பதற்காக வெளியே சென்றபோது, அவர்களைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள் அருகில் நான் சென்ற போது, ( ابْغِنِي أَحْجَارًا أَسْتَنْفِضْ بِهَا وَلاَ تَأْتِنِي بِعَظْمٍ وَلاَ رَوْثٍ ) "நான் (மலம் கழித்து முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்கு சில கற்களைத் தேடி எடுத்துவாரீர். எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்துவிடாதீர்" என்று கூறினார்கள்.

 

நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனது ஆடையின் ஓரத்தில் போட்டுக் கொண்டு வந்து நபியவர்கள் பக்கத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்து திரும்பி விட்டேன். நபியவர்கள் (மலம் கழித்து முடித்துவிட்டு) அக்கற்களால் துப்புரவு செய்து கொண்டார்கள். நூல்:-  புகாரீ-155

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ فَلْيَذْهَبْ مَعَهُ بِثَلاَثَةِ أَحْجَارٍ يَسْتَطِيبُ بِهِنَّ فَإِنَّهَا تُجْزِئُ عَنْهُ ‏) உங்களில் ஒருவர் மலம் ஜலம் கழிக்கச் சென்றால் அவர் தன்னுடன் கற்களை எடுத்துச் செல்லட்டும். அவற்றைக் கொண்டு துப்புரவு செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அந்த (மூன்று) கற்கள் அதற்கு போதுமானதாகும்.   அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-36

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மலம் கழித்துவிட்டு (கழிப்பறையிலிருந்து) வெளியேறினால் (துப்புரவு செய்வதற்காக) தண்ணீரை தொடாமல் இருந்ததை ஒருபோதும் நான் கண்டதில்லை. நூல்:- இப்னுமாஜா 348, இப்னு ஹிப்பான்-1441

 

இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் மக்கள் தண்ணீர் மிகவும் பற்றாக்குறையாக இருந்த சமயத்தில் கல், மண்கட்டி போன்ற பொருள்களால் துப்புரவு செய்து வந்தனர். பின்னர் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியதும் தண்ணீரைப் பயன்படுத்தினர். அவ்வபோது  கற்களையும், தண்ணீரையும் இரண்டையும் பயன்படுத்தி வந்தனர்.

 

மதீனாவுக்கு அருகில் உள்ள குபாவாசிகளைப் பற்றியே தலைப்பில் காணும் திருவசனம் (9:108) அருளப்பட்டது. இவ்வசனம் அருளப்பட்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குபாவாசிகளை சந்தித்து ( إِنَّ اللَّهَ تَعَالَى قَدْ أَحْسَنَ عَلَيْكُمُ الثَّنَاءَ فِي الطَّهُوْرِ فِي قِصَّةِ مَسْجِدِكُمْ، فَمَا هَذَا الطَّهُورُ الَّذِي تَطَهَّرُونَ بِهِ؟ "அல்லாஹ் உங்களது (குபா) பள்ளிவாசல் தொடர்பாக குறிப்பிடுகையில், துப்புரவு விஷயத்தில் உங்களைப் பாராட்டியுள்ளான். அப்படி நீங்கள் கடைபிடிக்கின்ற அந்தத் தூய்மை என்ன?" என்று வினவினார்கள்.

 

அதற்கு குபாவாசிகள், “நாயகமே! அல்லாஹ் மீது ஆணையாக எங்களுக்கு எதுவும் தெரியாது. இருப்பினும் நாங்கள் மலம் கழித்த பின்னர் ஆசனவாயை கல்லால் துப்புரவு செய்த பிறகு தண்ணீராலும் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்கிறோம்” என்று பதிலளித்தனர்.

 

அப்போது அண்ணலார்  ( هُوَ ذَاكَ فَعَلَيْكُمُوهُ"இது தான் சரியானது. இதை நீங்கள் தொடர்ந்து கடைபிடியுங்கள்" என்று கூறினார்கள்.  நூல்:- அல்பஸ்ஸார், முஸ்னது அஹ்மத், தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் இப்னு கசீர் அத்தவ்பா வசனம்- 108

 

மலம் கழித்த பின்னர் துப்புரவு செய்வதற்கு குறைந்தபட்சம் மூன்று கற்கள் போதுமானது. மூன்று கற்களைக் கொண்டும் சுத்தமாகாவிட்டால், சுத்தமாகும் வரை கற்களை ஒற்றைப்படையாக அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

 

மலம் கழித்த பின்னர் கற்களால் மட்டும் துப்புரவு செய்யலாம். அல்லது தண்ணீரால் மட்டும் துப்புரவு செய்யலாம். அல்லது கற்களால் முதலில் துப்புரவு செய்துவிட்டுப் பிறகு தண்ணீரால் கழுவியும் துப்புரவு செய்யலாம். இந்த மூன்றாம் முறையே சிறந்தது ஆகும். (இதையே அல்லாஹ்வும் விரும்புவதாக மேற்காணும் 9:108 வசனம்  கூறுகிறது.)

 

ஏனெனில், முதலில் கற்களால் துப்பரவு செய்து விட்டு, பிறகு தண்ணீரால் கழுவும்போது அசுத்தம் கையில் படுவதற்கு வாய்ப்பில்லை. அத்துடன் அசுத்தம் முழுமையாக அகற்றப்பட்டுவிடும். கல் அல்லது தண்ணீர் ஆகிய இரண்டில் ஒன்றால் மட்டும் துப்புரவு செய்வதாக இருந்தால், தண்ணீரால் மட்டும் துப்புரவு செய்வதே சிறந்ததாகும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ, அல்மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

மலம் கழித்த பிறகு கற்களாலும் பிறகு தண்ணீராலும் துப்புரவு செய்யும் நடைமுறை இன்றளவும் சில பகுதியில் வாழும் முஸ்லிம்களிடம் இருந்து வருகிறது.

 

நாம் பள்ளிவாசல் மற்றும் பொதுஇடங்களில் உள்ள கழிப்பறையை பயன்படுத்திய பிறகு, அந்த மலம் ஜலம் நிற்காதவாறு தண்ணீரை கொஞ்சம் தாராளமாக ஊற்றவேண்டும். அவ்வாறு செய்யவில்லையாயின், நமக்கு பிறகு அதை பயன்படுத்த எண்ணுவோர் அதில் தேங்கி நிற்கும் அசுத்தத்தைப் பார்த்து விட்டு முகம் சுளிக்கலாம். அல்லது அவர் நம்மைச் சபிக்கக்கூடும் என்பதில் கவனம் தேவை.

 

மண்ணால்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குச் சென்றால் நான் (சில நேரங்களில்) செம்பு பாத்திரத்திலும் (சில நேரங்களில்) தோல் பாத்திரத்திலும் தண்ணீர் கொண்டு வருவேன். நபியவர்கள் அதன்மூலம் துப்புரவு செய்து கொள்வார்கள். பின்பு மண் தரையின் மீது தன் கையை தேய்த்து துப்புரவு செய்து கொள்வார்கள். அதன் பின் வேறு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வருவேன். நபியவர்கள் அதில் (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்வார்கள். நூல்:- அபூதாவூத்-46, நஸாயீ-50, இப்னுமாஜா-352, முஸ்னது அஹ்மத்-7757, இப்னுஹிப்பான்-1405, தாரிமீ-676

 

மலம் கழித்துவிட்டு, தண்ணீரைக் கொண்டு துப்புரவு செய்த பிறகு, கையை மண் அல்லது சோப்பு போன்ற நறுமணப் பொருள்களால் கழுவி அசுத்தமும் நாற்றமும் நீங்கும் அளவுக்குப் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என மார்க்கத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மண்ணில் உயர் தரமான (Anti Septic) ஆண்டி செப்டிக் உள்ளது. நாயின் எச்சிலில் இருக்கக்கூடிய விஷத்தன்மை கொண்ட கடுமையான கிருமிகளையும் முழுமையாக அழித்துவிடுகிறது. எனவே முடிந்தளவு மண்ணைக் கொண்டு தேய்த்துக் கழுக வேண்டும்.

 

துப்புரவுக்கு பயன்படுத்தலாகாது

 

சல்மான் அல்பார்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது. இணைவைப்பாளர்களுள் ஒருவன் என்னிடம், உங்களுடைய தோழர், (அதாவது அண்ணல் நபி - ஸல் அவர்கள்) மலம் ஜலம் கழிப்பது உள்ளிட்ட அனைத்தையுமே உங்களுக்குக் கற்றுத் தருவதை நான் காண்கிறேன்" என்று (நபியவர்களைக் கேலி செய்யும் விதமாகக்) கூறினான். இது தொடர்பாக, இணைவைப்பாளர்கள் நபியவர்களை கேலி செய்து கொண்டிருந்தனர்.

 

அதற்கு நான், "ஆம்! (உண்மைதான்) நாங்கள் (மலம் ஜலம் கழிக்கும்போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாது என்றும், (மலம் ஜலம் கழித்துவிட்டு) வலக்கையால் துப்புரவு செய்ய கூடாது என்றும், (மலம் ஜலம் கழித்துவிட்டு துப்பரவு செய்யும்போது) நாங்கள் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்பரவு செய்யவேண்டாம் என்றும், (மூன்றைப் பயன்படுத்தும்போது) அவற்றில் விட்டையோ எலும்போ இடம்பெறக் கூடாது என்றும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-437, அபூதாவூத்-6, திர்மிதீ-16, நஸாயீ-41, இப்னுமாஜா-312, முஸ்னது அஹ்மத்-22590

 

தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகளைப் போல் மலம் ஜலம் கழிப்பதையும் நபியவர்கள் கற்றுத்தந்ததைப் போல் முறையாகச் செய்தால் அதுவும் நன்மைக்குரிய செயலாக ஆகிவிடும். எனவே, இது கேலிக்குரியதல்ல. நன்மைக்குரியது என்பதைத்தான் சல்மான் அல்பார்சீ (ரலி) அவர்கள் உணர்த்தினார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَسْتَنْجُوا بِالرَّوْثِ وَلاَ بِالْعِظَامِ فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ )  (மலம் ஜலம் கழித்த பின்) கெட்டிச் சாணம், எலும்பு ஆகியவற்றால் துப்புரவு செய்யாதீர்கள். ஏனெனில், அவை உங்கள் சகோதர (இனத்தா)ரான ஜின்னுகளின் உணவாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-767, திர்மிதீ-18

 

எலும்பு 'ஜின்னு' இனத்தாரின் உணவாகும். அவர்களின் இத்தகைய உணவுப் பொருட்களால் துப்புரவு செய்வது முறையாகாது. தவிரவும், எலும்பால் துப்புரவு செய்தால் முழுமையான தூய்மை ஏற்படாது. சில வேளைகளில் எலும்பு அந்த இடத்தைக் குத்திக் காயப்படுத்திவிடக்கூடும். கெட்டிச் சாணமே ஓர அசுத்தம். அசுத்தம் மற்றொரு அசுத்தத்தை அகற்ற முடியாது. ஆகவே, கெட்டிச் சாணம் மட்டுமின்றி, அசுத்தமான எந்தப் பொருளாலும் துப்பரவு செய்தல் கூடாது.

 

எலும்புகள், கெட்டிச் சாணங்களில் டெட்டனஸ் (Tetanus), மற்றும் டைபி என்னும் நோயணுக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே அதன் மூலம் துப்பரவு செய்தால் கிருமிகள் உடலில் ஊடுருவி குடற்காய்ச்சல் (Typhoid) வாய் திறக்க முடியாமல் பூட்டிக் கொள்ளுதல், தசைகள் விறைத்தல், விட்டுவிட்டு வலிப்பு, மூச்சுவாதம் போன்ற கடும் நோய்கள் மனிதனை தாக்குகின்றன. அது மட்டுமின்றி கிழே கிடக்கும் எலும்புகளில் விஷத்தன்மையுள்ள கிருமிகள் நிறைந்த எச்சில் கொண்ட விலங்குகள், உயிரினங்கள் வாய் வைத்திருந்தால் மேலும் பல நோய்கள் உண்டாகும் என்கிறது ஓர் ஆய்வு.

 

காகிதங்கள் (Toilet Paper)

 

டாக்டர் விக்டர் என்பவர் ஹம்பர்ஜ் நகரில் ஓர் அறிக்கை வெளியிட்டார். இவ்வறிக்கை ரேடியன்ஸ்  ஆங்கில நாளிதழில் வெளிவந்திருந்தது. மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களைக் காய்கறி கடைகளிலும், தானியக் கிடங்குகளிலும் வேலைக்கு அமர்த்த வேண்டாம். குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவுவதற்கு இந்த முஸ்லிம்களே காரணம். அவர்கள் எப்போதும் மலம் கழித்த பிறகு கையால் மலத்தை துப்புரவு செய்கிறார்கள். இதனால் குடலைத் தாக்கும் வைரஸ்கள் உண்டாகின்றன. கழிப்பிடங்களில் அவர்கள் காகிதங்களை பயன்படுத்துவதில்லை. அவர்களது மதமும் குர்ஆனும் அவ்வாறு அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளது" என்பதே அந்த அறிக்கை.

 

மஞ்சள் காமாலை நோய் குறித்து ஜெர்மனியரை எச்சரிக்கும் அறிக்கை என்ற பெயரில் இது வெளிவந்தது.

 

உண்மையில் மேலைநாட்டினர் பழக்கத்தில்தான் சுகாதாரக்கேடு நேர்கிறது. ஆம்! அவர்கள் காகிதத்தால் துப்புரவு செய்துவிட்டு அத்தோடு போய்விடுகின்றனர். இதனால் முழு சுத்தம் ஏற்படுமா என்பது ஒருபுறமிருக்க, கழிப்பிடங்களில் பயன்படுத்தப்படும் இத்தகைய காகிதங்களால் நோய்க் கிருமிகள் பரவி நோய்கள் அதிகமாகின்றன என்பதுதான் உண்மை.

 

ஹெரன் ஆண்ட்சன் எனும் ஜெர்மன் பத்திரிகை 1971 மார்ச் 2-ஆம் தேதி தனது இதழில் ஓர் ஆய்வை வெளியிட்டிருந்தது:

 

"உணவு விடுதிகளிலும், கழிப்பிடங்களிலும் பயன்படுத்தப்படும் உறிஞ்சும் காகிதங்களால் வைரஸ் கிருமிகள் அதிகம் பரவுகின்றன. இத்தகைய காகிதங்களை வைத்து நடத்தப்பட்ட சுகாதார ஆய்விலிருந்து 16 ஆயிரம் வகையான கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை குடல் தொடர்பான பாக்டீரியாக்கள் ஆகும். இவற்றால் குடல் அலர்ஜி, ஜலதோஷம், டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு" என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

 

டாக்டர் முஹம்மது தாரீக் மஹ்மூத் அவர்கள் கூறுகிறார்கள்: கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதம் (Toilet Paper) தயாரிக்கும் தொழிற்சாலையின் ஒரு அதிகாரியை சந்தித்தபோது அவர், பலவகையான வேதிப்பொருட்கள் (Chemical) சேர்ப்பதின் முலமே இது போன்ற காகிதங்களை உருவாக்க முடியும். இதனால் தோல் நோய்கள் (Eczema) படை, அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை நோய்கள், கொப்புளங்கள் உண்டாக அதிகப்படியான வாய்ப்புண்டு. எனவே, மண்கட்டியே சிறந்ததுஎன்று என்னிடம் இரகசியமாக கூறினார்.

 

லண்டனிலுள்ள டாக்டர் கெனன் டேவஸ் என்பவர் ஐரோப்பிய மக்களிடம் நீங்கள் கலர் கலரான டாய்லெட் பேப்பர்களை மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டிருப்பதை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில் வெகு சீக்கிரமே மர்மஸ்தான கேன்ஸர், தோல் அலர்ஜி, (Skin Infection) வைரஸ் எனும் நுண்ணுயிரிகளினால் ஏற்படும் நோய்கள் (viral Diseases)உங்களை தாக்குவதை எதிர்பாருங்கள்என்று எழுத்து மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

பேசக்கூடாது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَخْرُجُ الرَّجُلاَنِ يَضْرِبَانِ الْغَائِطَ كَاشِفَيْنِ عَنْ عَوْرَتِهِمَا يَتَحَدَّثَانِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَمْقُتُ عَلَى ذَلِكَ ) இரண்டு மனிதர்கள் மலம் கழிக்க (ஒன்றாகச்) சென்று, ஒருவர் மற்றவருக்கு முன் மர்ம உறுப்புகளைத் திறந்தும், பேசிக் கொண்டும் மலம் கழிக்க வேண்டாம். இதனால் அல்லாஹ் கோபப்படுகிறான். அறிவிப்பாளர்:- அபூசயீது (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-14, இப்னுமாஜா-336, முஸ்னது அஹ்மது

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் நபியவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டுக் கடந்து சென்றார். (அப்போது அவருக்கு) நபியவர்கள் பதில் ஸலாம் கூறவில்லை. நபியவர்கள் தயம்மும் செய்த பின்னர் அத்தோழரின் சலாமுக்குப் பதில் சலாம் கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-606, அபூதாவூத்-15, திர்மிதீ-83, நஸாயீ-37, இப்னுமாஜா-345

 

மனிதன் மலம் ஜலம் கழிக்க நாடும்போது தனிமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அறியாமைக் காலத்தில் மக்கள் ஒருவர் மற்றவருக்கு அருகில் அல்லது எதிரெதிரே உட்கார்ந்து பேசிக்கொண்டே மலம் ஜலம் கழிப்பார்கள். தமது பிறப்புறுப்பைப் பிறர் பார்ப்பார்களே என்று வெட்கப்பட மாட்டார்கள். அதை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள்.

 

இத்தகைய அநாகரிகமான நடைமுறையால் இறைவனின் கோபத்திற்கு காரணமாகி விடும். கழிப்பறைக்குள் இருந்து கொண்டு கைப்பேசியில் பேசக்கூடாது. அப்போது நேரடியாக யாராவது நம்மிடம் பேசினால்கூட அதற்கு நாம் பதிலளிக்காமல் உள்ளுக்குள் இருந்துகொண்டே ஓரிரு முறை கனைக்கலாம்.

 

பாங்கு சப்தத்தைக் கேட்டாலோ, பிறர் சலாம் கூறினாலோ பதில் சொல்லக்கூடாது. வெளியே வந்த பிறகு தான் பதில் சொல்ல வேண்டும். மேலும் அங்கிருக்கும் போது தும்மினாலோ, கொட்டாவி ஏற்பட்டாலோ அல்ஹம்துலில்லாஹ், அஊதுபில்லாஹ்.... என்று நாவினால் சொல்லக்கூடாது. மனதிற்குள் சொல்லிக் கொள்ளலாம். ஏனெனில் அது அல்லாஹ்வை துதிப்பதற்குரிய இடமில்லை. அதனால் தான் தேவையை முடித்துவிட்டு அதிலிருந்து விரைவாக வெளியேற முயற்சிக்க வேண்டும்.

 

இடைமறிக்கலாகாது

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு கிராமவாசி பள்ளிவாசலனுள் சிறுநீர் கழித்தார். உடனே நபித்தோழர்கள், (அவரை நோக்கி) நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அப்போது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், ( لاَ تُزْرِمُوهُ دَعُوهُ ) "அவர் சிறுநீர் கழிப்பதை இடைமறிக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்ததும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதை சிறுநீர் மீது ஊற்றினார்கள். நூல்:- புகாரீ-219, முஸ்லிம்-480, திர்மிதீ-137, நசாயீ-53, இப்னுமாஜா-521

 

பள்ளிவாசலினுள் வந்து சிறுநீர் கழித்த கிராமவாசிக்கு பள்ளிவாசலின் புனிதம் தெரிந்திருக்கவில்லை. அவ்வாறு அவர்கள் தடுத்திருந்தால் சிறுநீர் இடையே தடைப்பட்டு கிராமவாசிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிடலாம். அல்லது சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர் தமது உடலிலும் உடையிலும் சிறுநீர் கழித்திருப்பார் என்றெண்ணியே  நபியவர்கள், "அவரை இடைமறிக்காதீர்கள்" என்று கூறினார்கள்.

 

மலம் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும்போது திடீரென இடைமறித்தால் உடல்நலம் கெட்டுப்போகும் என்கிறது இன்றைய மருத்துவ உலகம்.

 

சில இடங்களில்

 

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( اتَّقُوا الْمَلاَعِنَ الثَّلاَثَ الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَقَارِعَةِ الطَّرِيقِ وَالظِّلِّ ) “சாபத்திற்குரிய மூன்று செயல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். (அவை:) நீர் நிலைகள், மக்கள் நடமாடுகின்ற பாதைகள், (ஓய்விடங்களான) நிழல் தரும் இடங்கள் ஆகியவற்றில் மலம் சிறுநீர் கழிப்பது" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-448, அபூதாவூத்-24, இப்னுமாஜா-323, முஸ்னது அஹ்மத்-8498, அல்முஅஜமுல் கபீர்-474

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ ‏) ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் யாரும் சிறுநீர் கழிக்க வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-239, அபூதாவூத்-64, நசாயீ-35, இப்னுமாஜா-338

 

அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பொந்துகளில் சிறுநீர் கழிப்பதை தடுத்தார்கள். இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள கத்தாதா (ரஹ்) அவர்களிடம், "பொந்துக்குள் சிறுநீர் கழிப்பது ஏன் வெறுக்கத்தக்கது?" என்று (நண்பர்கள்) கேட்டனர். அதற்கு  கத்தாதா (ரஹ்) அவர்கள், ( إِنَّهَا مَسَاكِنُ الْجِنِّ ) "பொந்துகளில் ஜின்னுகளின் வசிப்பிடங்கள் என்று கூறப்படுகிறது" என விளக்கமளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-27, நஸாயீ-34, முஸ்னது அஹ்மத்-19847

 

தாபிஈன்களில் ஒருவரான இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் உபாதா (ரலி) அவர்களின் முதுமைப் பருவத்தில் உடல்நிலை சீராக இல்லாதபோது, அவர்கள் ஒரு தடவை நின்றவாறு ஒரு மரத்தின் பொந்தில் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் வந்தவுடன், "எனக்கு உடம்பு சரியில்லை. என்னவோ மாதிரியாக இருக்கிறது" என்று கூறினார்கள். அதன்பிறகு சற்று நேரத்திற்குள் அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். அவர்கள் மரணித்த அந்நேரத்தில், "நாங்கள் தான் சஅது பின் உபாதாவின் மீது இரண்டு அம்புகள் எய்து கொன்று விட்டோம்" என்று ஒரு சப்தம் மட்டும் அருகிலிருந்த எல்லோருக்கும் கேட்டது. 


அதற்கு பேரறிஞர் இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் "ஜின்னுகள் தான் அவரைக் கொன்றுவிட்டனர்" என்று விளக்கமளித்தார்கள். நூல்:- தபகாத் இப்னு சஅத்


ஓடாமல் தேங்கி நிற்கும் சிறிதளவு தண்ணீரில் சிறுநீர் கழிப்பதால் நீர் அசுத்தமாகிவிடும். அது தெரியாமல், அதை யாரும் பயன்படுத்திவிட வாய்ப்பு உண்டு. ஆகவே, இது கூடாது. சிறுநீருக்கே இந்த நிலை என்றால் மலம் கழிப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. ஓடும் தண்ணீராக இருப்பின், அதில் சிறுநீர் கழிப்பதால் நீர் அசுத்தமாகி விடாது. இருப்பினும் அதையும் தவிர்ப்பதே நல்லது. இவ்வாறு குளம் குட்டைகளின் கரைகளில் அமர்ந்து மலம், சிறுநீர் கழிப்பதும் வெறுக்கப்பட்ட செயலாகும். மக்கள் நடக்கும் பாதை என்ற முறையில் இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

 

பொந்துகளில் ஜின்னுகள் மற்றும் பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. எனவே, அவற்றினுள் நாம்  சிறுநீர் கழிக்கும்போது நம்மால் அவற்றுக்கும், அவற்றால் நமக்கும் தீங்கு ஏற்படலாம். அதனால் தான் பொந்துகளில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

 

மண்ணறையில் வேதனை

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் புதிதாக அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், ( يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ ‏"‏، ثُمَّ قَالَ ‏"‏ بَلَى، كَانَ أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ ‏) "(இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப்படுகின்றனர். ஆனால், ஒரு பெரிய (பாவச்)செயலுக்காக  இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களுள் ஒருவரோ, சிறுநீர் கழித்தபின் தூய்மை செய்யாதவராக இருந்தார். மற்றொருவரோ கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார்" என்று கூறினார்கள். நூல்:-  புகாரீ-216, முஸ்லிம்-491,  அபூதாவூத்-19, திர்மதீ-65 நசாயீ-31, இப்னுமாஜா-341, முஸ்னது அஹ்மத்-1877

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ ) மண்ணறை வேதனை பெரும்பாலும் சிறுநீர் (கழித்துவிட்டு தூய்மை செய்யாததன்) காரணமாகவே ஏற்படுகிறது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா 342 முஸ்னது அஹ்மத்-7981, ஹாக்கிம் 653, தாரகுத்னீ-9

 

இந்த நபிமொழியில் மண்ணறை வேதனை என்பதன் பொருள் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்படும் மண்ணறை வேதனை ஆகும். சிறுநீரைத் துப்புரவு செய்யும் விஷயத்தில் பேணுதலுடன் நடந்து கொள்ளாததன் விளைவாகவே அவர்கள் பெரும்பாலும் மண்ணறை வேதனைக்கு ஆளாகின்றனர்.

 

எனவே, நாம் மலம் ஜலம் கழிக்கும் விஷயத்தில் சுத்தம் பேணி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

1 comment:

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...