இறைவா! அவர்கள் பொருட்டால்...
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ
இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் செல்வதற்குரிய (வசீலாவை) வழியைத் தேடிக் கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 5:35
மனிதன் இறைவனிடம் உதவி கோரும்போது, தனது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக, ஏதாவது ஒரு நல்ல செயலையோ அல்லது நல்ல மனிதரையோ முன்னிலைப்படுத்தி, "இறைவா! அவர் பொருட்டால் அல்லது செய்யப்பட்ட இந்த நற்காரியத்தின் சங்கையால் எனது கோரிக்கையை நிறைவேற்றித் தருவாயாக" என்று பிரார்த்தனை செய்வதற்கு பெயர் "வசீலா" என்பதாகும்
உதவி செய்பவன் அல்லாஹ் தான் என்றாலும், அவனுடைய உதவியை பெறுவதற்கு நல்ல மனிதர்களை வசீலாவாகக் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவது தவறொன்றுமில்லை.
நாமாக இறைவனிடம் கேட்கும் பிரார்த்தனைகள் நமது பாவங்களால் அது ஏற்கப்படாமல்கூட போகலாம் அல்லவா? நம்மை நாமே புனிதப்படுத்தி கொள்ளக்கூடாது. நாம் அழைத்தவுடன் அல்லாஹ் தாமதமின்றி பதிலளிப்பதற்கு நாம் மகா புனிதர்கள் அல்லர். ஏதோ நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோம் அவ்வளவுதான். நம்மைவிட நல்லவர்களை வசீலாவாக்கி இறைவனிடம் பிரார்த்திக்கும்போது அந்த பிரார்த்தனைக்கு ஒரு பலம் கிடைத்துவிடுகிறது.
நபிமார்கள், நபித்தோழர்கள் போன்ற இறைநெருக்கம் பெற்ற நல்லடியார்கள் மற்றும் மனத்தூய்மையுடன் நாம் செய்த நற்காரியங்களைக் கொண்டு வசீலா தேடலாம்.
இறைவா! இந்த நல்லடியாரின் பொருட்டால் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக! என்று ஒரு மனிதரை வசீலாவாக்கி பிரார்த்திப்பது என்பது "இறைவா! அவர்மீது நீ வைத்துள்ள அன்பின் பொருட்டால் மேலும், உன் அன்பை பெற்றுள்ளவர் என்று நான் வைத்துள்ள நம்பிக்கையின் பொருட்டால்" என்று தான் பொருளாகும்.
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களை வசீலாவாக வைத்து பிரார்த்திக்கப்பட்ட ஏராளமான பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதுவும் நபியவர்கள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்பும், மரணத்திற்குப் பின்பும் வசீலாவாக வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் மறுமை நாளிலும் அவர்கள் வசீலா வைக்கப்படுவார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஆதி மனிதர் கேட்டவை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் குற்றம் செய்தபோது, ( يَا رَبِّ أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ إِلَّا غَفَرْتَ لِي ) "இறைவா! முஹம்மத் (ஸல்) அவர்களது உரிமையை முன்வைத்து உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்" என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்,( يَا آدَمُ كَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا، وَلَمْ أَخْلُقْهُ بَعْدُ؟ ) "ஆதமே! முஹம்மதை எவ்வாறு அறிந்தாய்? நான் அவரை இன்னும் படைக்கவில்லையே?" என்று கேட்டான்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ( يَا رَبِّ لِأَنَّكَ لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ، وَنَفَخْتَ فِيَّ مَنْ رُوحِكَ رَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ عَلَى قَوَائِمِ الْعَرْشِ مَكْتُوبًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ ) "இறைவா! என்னை உன் கையால் படைத்து, என்னில் உமது உயிரிலிருந்து ஊதியபோது, நான் (உயிர்பெற்று) எனது தலையை உயர்த்தினேன். அர்ஷுடைய கால்களில் 'லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்' என எழுதப்பட்டிருப்பதைக் கண்டு நீ உனக்கு நேசமானவரைத்தவிர வேறு யாரையும் உனது பெயருடன் இணைத்துக் கொள்ள மாட்டாய் என்பதை அறிந்து கொண்டேன்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், ( صَدَقْتَ يَا آدَمُ إِنَّهُ لَأَحَبُّ الْخَلْقِ إِلَيَّ، وَإِذْ قَدْ سَأَلْتَنِي بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ، وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُكَ ) "ஆதமே! நீ உண்மையை உரைத்தீர். படைப்புக்களில் அவர் எனக்கு மிகவும் நேசமானவர். அவர்களது உரிமையை முன் வைத்து என்னிடம் கேட்டதால் உன்னை நான் மன்னித்துவிட்டேன். முஹம்மத் இல்லையெனில் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்" என்று கூறினான். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், அல்பிதாயா வந்நிஹாயா, கசாயிசுஸ் நபவிய்யாஹ் இமாம் சுயூத்தி, தலாயிலுன் நுபுவ்வாஹ் இமாம் பைஹகீ, அல்அஸ்வத் இமாம் தப்ரானீ, அல்மவாஹிபுத் துன்யா இமாம் ஸர்கானீ, மஜ்மஉஸ்ஸவாயித்
யூதர்கள் கேட்டவை
அவர்களிடம் உள்ள (தவ்ராத் வேதத்)தை உண்மையாக்கக்கூடிய ஒரு வேதம் (குர்ஆன்) அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது (அதை மறுத்த) அவர்கள், இதற்கு முன்னர் இறைமறுப்பாளர்களுக்கு எதிராக (இதன் மூலமே) வெற்றி கேட்டுக்கொண்டிருந்தனர். அப்படியிருக்க, (ஏற்கனவே) அவர்கள் அறிந்து வைத்திருந்த (உண்மையான)து வந்தபோது அதை மறுத்துவிட்டனர். இத்தகைய இறைமறுப்பாளர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் நிலவும். திருக்குர்ஆன் 2:89
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், ( يَا مَعْشَرَ يَهُودَ اتَّقُوا اللَّهَ وأسْلِمُوا فَقَدْ كُنْتُمْ تَسْتَفْتِحُونَ عَلَيْنا بِمُحَمَّدٍ، ونَحْنُ أهْلُ شِرْكٍ وتُخْبِرُونا بِأنَّهُ مَبْعُوثٌ وتَصِفُونَهُ بِصِفَتِهِ ) “யூதர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் இணைவைப்போராக இருந்தபோது எங்களுக்கு எதிராக முஹம்மது (ஸல்) அவர்களை கொண்டுதானே நீங்கள் உதவி தேடி கொண்டிருந்தீர்கள்! அவர்கள் பிற்காலத்தில் அனுப்பப்படுவார்கள் என்று அறிவித்த நீங்கள், அவர்களின் குணநலன்களை வர்ணித்தீர்கள்" என்று கூறினார்கள். அதற்கு பனூ நளீர் குலத்தாரின் சகோதர் சல்லாம் பின் முஷ்கிம் என்ற யூதர், "உங்களிடம் நாங்கள் கூறிவந்தது இவரைப்பற்றி அல்ல" என்று (பொய்) கூறினார் அப்போதுதான் மேற்காணும் (2:89) திருவசனம் அருளப்பெற்றது. நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்தம், தஃப்சீர் இப்னு கஸீர்
அப்துல்லாஹ்பின் அப்பாஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை கைபரைச் சேர்ந்த யூதர்கள் "ஙத்ஃபான்"
எனும் ஓர் அரபு குலத்தாரிடம் போர் தொடுத்து தோற்றுப்போனார்கள். பின்பும் மீண்டும் அவர்களிடம்
போர்தொடுக்க நினைத்தபோது, ( إِنَّا نَسْأَلُكَ بِحَقِّ
النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي وَعَدْتَنَا أَنْ تُخْرِجَهُ لَنَا فِي آخِرِ الزَّمَانِ
إِلَّا تَنْصُرُنَا عَلَيْهِمْ )
"இறைவா! கடைசி காலத்தில் எங்களுக்காக
நீ அனுப்புவதாக வாக்களித்த (எழுதப்படிக்க தெரியாத) உம்மி நபியின் உரிமையை முன்வைத்து
எங்களுக்கு (இந்தப் போரில்) உதவி செய்ய வேண்டுமாய் உன்னிடம் கேட்கிறோம்" என்று
பிரார்த்தனை செய்துவிட்டு போரை தொடங்கினார்கள். அதனால் அவர்கள் வெற்றியையும் அடைந்தார்கள்.
நூல்:- தஃப்சீர் குர்துபீ அல்பகரா வசனம்-89, தஃப்சீர் ரூஹுல் மஆனி, தஃப்சீர் சம்ஆனி, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
யூதர்கள், இணைவைப்பாளர்களுக்கு எதிராக உதவி தேடும்போதெல்லாம், ( اللَّهُمَّ انْصُرْنا بِنَبِيِّ آخِرِ الزَّمَانِ المَنعُوتِ، فِي التَّوْرَاةِ ) “இறைவா! தவ்ராத் வேதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள, இறுதிகாலத்தில் வர இருக்கின்ற நபியின் பொருட்டால், அவர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக” என்று கூறுவர். நூல்:- தஃப்சீர் பைளாவீ அல்பகரா வசனம்-89, தஃப்சீர் கஷ்ஷாஃப்
அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இம்மண்ணில் பிறப்பதற்கு முன்னரே அவர்களின் பொருட்டால் அன்றைய மக்கள் உதவிகள் தேடியுள்ளனர்.
அண்ணலார் கேட்டவை
அனஸ் (ரலி),
ஜாபிர் (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது.
அலீ (ரலி) அவர்களுடைய தாயார் ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்கள் மரணம் அடைந்தபோது
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் கரங்களாலேயே அவருக்கான மண்ணறையை தோண்டினார்கள்.
நபியவர்கள் கரத்தாலேயே மண்ணை வாரினார்கள்.
குழி நிறைவடைந்தபோது அந்த மண்ணறையில் (கொஞ்ச நேரம்) படுத்துப் புரண்டுவிட்டு அதன் பிறகு, ( اَللهُ الَّذِي يُحيِي وَيُمِيتُ ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، اغفِرْ لِأُمِّي فاطمةَ بنتِ أسدٍ، وَلَقِّنْهَا حُجَّتَهَا، وَوَسِّعْ مُدْخَلَها بِحَقِّ نَبِيِّكَ ، وَالأَنبِيَاءِ الَّذِينَ مِن قَبلي، فإنَّكَ أَرحَمُ الرَّاحِمِينَ ) "மரணமே இல்லாதவனும், மற்ற உயிர்களை மரணிக்கச் செய்பவனும் மற்றும் உயிர்ப்பிப்பவனுமாகிய அல்லாஹ்வே! என் தாய் அசதுடைய மகள் ஃபாத்திமாவை மன்னித்தருள்வாயாக! அவருக்கான ஆதாரமொழிகளை அவருக்கு சொல்லாக்கி கொடுப்பாயாக! அவருடைய மண்ணறையை விசாலமாக்குவாயாக! உன்னுடைய நபி (அதாவது என் பொருட்டால்) மற்றும் எனக்கு முந்தைய நபிமார்கள் பொருட்டால் விசாலமாக்குவாயாக! நீ அருளாளர்களின் பேரருளாளன்" என்று பிரார்த்தனை செய்துவிட்டு பிறகு தொழுகை நடத்தினார்கள். நூல்:- அல்கபீர் இமாம் தப்ரானீ, இப்னு அப்துல் பர்ரு, இப்னு அபீஷைபா, தைலமீ, அபூநயீம்
நபித்தோழர்கள் கேட்டவை
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களை, மழை வேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள்.
(அந்நேரங்களில்) உமர் (ரலி) அவர்கள், ( اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا ) "இறைவா! எங்கள் நபியவர்களின் பொருட்டால் உன்னிடம் நாங்கள் உதவி கோரிவந்தோம். நீயும் (அதை ஏற்று) எங்களுக்கு மழை பொழிந்துவந்தாய். இப்போது எங்கள் நபியின் தந்தையின் சகோதரர் (அப்பாஸ்-ரலி) அவர்களின் பொருட்டால் உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழிவாயாக!" என்று வேண்டுவார்கள். அதன்படி மக்களுக்கு மழை பெய்துவந்தது. நூல்:- புகாரீ-1010
சலீம் பின் ஆமிர்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. முஆவியா (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் திமிஷ்க்கில் ஒருமுறை
கொஞ்சம்கூட மழையின்றி பூமி காய்ந்துபோனது. அப்போது முஆவியா (ரலி) அவர்களும் மக்களும்
மழை வேண்டி பிரார்த்தனை செய்வதற்கு ஊருக்கு வெளியே கிளம்பினர். ஓரிடத்தில் ஒன்றுகூடிய
பின்னர் முஆவியா (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்த பிறகு, “யஸீத்
பின் அஸ்வத் அல்ஜுரஷிய்யி (ரலி) அவர்கள் எங்கே?” என்று கேட்க, மக்கள் அவரை அழைத்து வந்தனர். அவர் துள்ளிக் குதித்தவராக
வந்தார். அவர் முஆவியா (ரலி) அவர்களின் கட்டளையை ஏற்று மிம்பரின் மீதேறி முஆவியா (ரலி)
அவர்களின் காலுக்கு அடுத்த படியில் அமர்ந்தார்.
அப்போது முஆவியா (ரலி) அவர்கள், ( اللَّهُمَّ إِنَّا نَسْتَشْفِعُ إِلَيْكَ الْيَوْمَ بِخَيْرِنَا وَأَفْضَلِنَا. اللَّهُمَّ إِنَّا نَسْتَشْفِعُ إِلَيْكَ بِيَزِيدَ بْنِ الأَسْوَدِ الْجُرَشِيِّ ) "இறைவா! இன்று நாங்கள் உனது சன்னிதானத்தில் எங்களில் மிகச் சிறந்தவராகிய யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களை வசீலாவாக முன்வைக்கிறோம்" என்றவர்கள், ( يَا يَزِيدُ ارْفَعْ يَدَيْكَ إِلَى اللَّهِ ) "யஸீத்! அல்லாஹ்வின் திருமுன் உமது கையை உயர்த்துவீராக!" என்று சொல்ல, அவர் தமது கையை உயர்த்தினார். மக்களும் தங்களின் கைகளை உயர்த்தினர். (அதன் பின் பிரார்த்தனை செய்தனர்) இருந்தாற்போல் மேற்குப் பக்கத்திலிருந்து ஒரு மேகம் கிளம்ப, காற்றும் வீசத் தொடங்கி மழை பெய்யத்துவங்கியது. எதுவரையெனில் மக்கள் தமது வீடுகளுக்கு செல்வதே சிரமமாகி விட்டது. நூல்:- தபகாத் இப்னு சஅத் 7/444, சியரு அஃலாமுந் நுபலாஉ இமாம் தஹபீ 4/137, தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர்
மழைக்காக பிரார்த்திக்கப்பட்ட இக்கூட்டத்தில் நபித்தோழர்களும், தாபிஈன்களும் இருந்தனர். அவர்களில் ஓர் நல்லடியாரை வசீலாவாக்கி பிரார்த்தனை செய்ததை தவறென்று ஒருவர்கூட ஆட்சேபிக்கவில்லை. இதுபோன்று நல்லடியார்களை வசீலாவாக்குவது மார்க்கம் அனுமதித்தே என்பது ஏகோபித்த முடிவாகும்.
நபித்தோழர்கள் காலத்திலேயே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாதோரைக் கொண்டும் மழை வேண்டலின்போது வசீலா தேடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.
அறிஞர்கள் கேட்டவை
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( إنِّي لَأَتَبَرَّكُ بِأَبِي حَنِيفَةَ وَأَجِيءُ إلَى قَبْرِهِ فِي كُلِّ يَوْمٍ يَعْنِي زَائِرًا فَإِذَا عَرَضَتْ لِي حَاجَةٌ صَلَّيْتُ رَكْعَتَيْنِ وَجِئْتُ إلَى قَبْرِهِ وَسَأَلْتُ اللَّهَ تَعَالَى الْحَاجَةَ عِنْدَهُ فَمَا تَبْعُدُ عَنِّي حَتَّى تُقْضَى ) நான் ஒவ்வொரு நாளும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் மண்ணறையை தரிசிக்கச் செல்வேன். எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் அந்த இடத்திலேயே தொழுதுவிட்டு (இமாம் அபூ ஹனீபா - ரஹ் அவர்களை வசீலாவாக வைத்து அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பேன். சிறிது நேரத்திற்குள் எனது தேவை பூர்த்தியாக்கப்படும். அறிவிப்பாளர்:- அலீ பின் மைமூன் (ரஹ்) அவர்கள் நூல்:- தாரிக்கு பக்தாத் இமாம் அபூபக்ர் அல்கத்தீப் 1/122, ஹைராத்துல் ஹிசான் இமாம் இப்னுஹஜர் பக்கம்-69
அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எனது தந்தை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் (தமது ஆசிரியர்) இமாம் ஷாஃபிஈ அவர்களை வசீலாவாக கொண்டு அடிக்கடி பிரார்த்தனை செய்வார்கள். அதைப்பற்றி எனது தந்தையாரிடம் வினவினேன். அதற்கு அவர்கள், ( يَا بُنَيَّ كَانَ الشَّافِعِيُّ كَالشَّمْسِ لِلدُّنْيَا وَكَالْعَافِيَةِ لِلنَّاسِ ) "எனது அன்பு மகனே! "உலகத்திற்கு சூரியன் எவ்வளவு முக்கியமோ அதுபோன்றும், மனிதர்களுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதுபோன்றும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் (நம்முடைய வாழ்க்கைக்கு) மிகவும் அவசியமுடையவராக இருக்கிறார்கள்" என்றார்கள். நூல்:- ஷவாஹிதுல் ஹக் பக்கம்-166
பேரறிஞர் அஷ்ரஃப் அலீ தானவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நல்லோர்களின் பொருட்டால் என்று இறைவனிடம் வசீலா தேடுவது என்பது: யா அல்லாஹ்! இந்த நல்ல மனிதரின் பொருட்டால் எங்களுக்கு அருள் புரிவாயாக! என்று பிரார்த்திப்பது தவறல்ல. ஏனெனில் இதன் விளக்கம் என்னவென்றால், யா அல்லாஹ்! இன்ன நல்லவர் உன்னிடம் அங்கீகாரம் பெற்றவர் என்பது எனது அனுமானம். உன்னிடம் நெருக்கம் பெற்றவர்களை நேசிப்பதால் நீ அருள்புரிவதாக வாக்குறுதி கொடுத்துள்ளாய். நான் இப்போது அந்த அருளை கேட்கிறேன் என வஸீலா தேடுவது தவறல்ல. நல்லோர்களை நேசிப்பதால் அல்லாஹ்வின் அருள் கிடைப்பதாக பல நபிமொழிகள் கூறுகின்றன. நூல்:-அஷ்ரஃபுல் ஜவாப்
செய்த நற்காரியங்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முற்காலத்தில் மூன்று பேர்கள் ஒரு பயணம் மேற்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது மழையின் காரணமாக ஒரு மலைக் குகைக்குள் ஒதுங்கினார். அப்போது குகை வாசலில் ஒரு பெரும் கற்பாறை மலையிலிருந்து உருண்டு வந்து பாதையை அடைத்து விடுகிறது. மழையில் ஒதுங்கிய மூவரும் வெளியில் வருவதற்கு பாறையை அகற்ற முடியாமல் திகைத்துப் போனார்கள். அப்போது அவர்கள், ( إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلاَّ أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ ) “நீங்கள் செய்த நற்செயலைக் கூறி (வசீலாவாக்கி) அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் உங்களை இந்தப் பாறையிலிருந்து காப்பாற்றாது” தமக்குள் கூறிக்கொண்டனர். (பிறகு அவ்வாறே பிரார்த்தனையும் செய்தனர்.)
ஒருவர் தன்னுடைய பெற்றோருக்கு செய்து வந்த உபகாரத்தை முன் வைத்து பிரார்த்தனை செய்தார். உடனே பாறை சற்று விலகியது. ஆனால், அவர்களால் வெளியேற முடியவில்லை. இரண்டாமவர் தன்னுடைய பணியாள் விஷயத்தில் நடந்துகொண்ட உயர்வான செயலை முன்வைத்து பிரார்த்தனை செய்தார். உடனே பாறை சற்று கூடுதலாக விலகியது. ஆனால், அவர்களால் வெளியேற முடியவில்லை. மூன்றாமவர் இறையச்சத்தால் ஒரு பெண்ணிடமிருந்து விலகி நின்ற நல்லொழுக்கத்தை முன்வைத்து பிரார்த்தனை செய்தார். (அப்போது அல்லாஹுத்தஆலா அவர்களுடைய பிரார்த்தனைகளை அங்கீகரித்தான். அவர்களுக்கு சிரமம் தந்த அந்த ) பாறை முழுமையாக விலகியது. அவர்கள் வெளியேறிச் சென்றனர். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2272
தேவைகள் நிறைவேற
உஸ்மான் பின் ஹனீஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுடன் சபையில் அமர்ந்திருந்தபோது ஒருவர் வந்து, "நாயகமே! என்னுடைய கண்பார்வை மங்கிவிட்டதால் ரொம்பவும் சிரமமாக இருக்கிறது" என்று முறையிட்டார். இதைக் கேட்ட நபியவர்கள் பொறுமையை கடைபிடிக்கக்கூடாதா? என்றார்கள். அதற்கு அவர், "எனக்கு உதவுவோர் யாருமில்லை" என்று வருத்தமாகக் கூறினார். அதைக்கேட்ட நபியவர்கள் அவரை நோக்கி, ( ائْتِ الْمِيضَأَةَ فَتَوَضَّأْ ثُمَّ صَلِّ رَكْعَتَيْنِ ثُمَّ قُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيِّ الرَّحْمَةِ، يَا مُحَمَّدُ إِنِّي أَتَوَجَّهُ بِكَ إِلَى رَبِّكَ فَیَجْعَلْ لِّي عَنْ بَصَرِي ) "நீர் உளூச் செய்யும் இடத்திற்குச் சென்று உளூச் செய்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு, 'யா அல்லாஹ்! உன்னிடம் கேட்கிறேன். அருளுடைய நபியான முஹம்மது (ஸல்) அவர்களைக் கொண்டு உன்னிடம் முன்னோக்குகிறேன். முஹம்மதே உங்களைக் கொண்டு உங்கள் இறைவனை நோக்குகிறேன். அவன் என் பார்வையை தெளிவாக்கட்டுமாக!” என்று பிரார்த்தனை செய்வீராக!" என்றார்கள்.
( فَوَاللهِ مَا تَفَرَّقْنَا وَلاَ طَالَ بِنَا الْحَدِيثُ حَتَّى دَخَلَ عَلَيْنَا الرَّجُلُ وَقَدْ أَبْصَرُ كَأَنَّهُ لَمْ يَكُنْ بِهِ ضُرٌّ قَطُّ ) “இறைவன் மீதாணையாக! சொல்லுகிறேன். நாங்கள் அந்த இடத்தை விட்டும் எழுந்திருக்கவும் இல்லை; நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருக்கவும் இல்லை. அந்த நோயாளி மனிதர் அங்கிருந்து சென்று நபியவர்கள் கூறியபடி (பிரார்த்தனை செய்ததின் பலனால்) அவருக்கு கண் நோய் இருந்ததாகவே தெரியாத அளவுக்கு தெளிவடைந்தவராக எங்களிடம் வந்தார். நூல்:- ஹாகிம், தப்ரானீ
இந்த நபிமொழி சில வார்த்தை மாற்றங்களுடன் திர்மிதீ (3492), நஸாயீ, இப்னு மாஜா, இப்னு குஸைமா, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களை வசீலாவாக்கி பிரார்த்தனை செய்வது என்பது அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மட்டுமல்ல. அவர்கள் இறந்த பின்பும்கூட நபித்தோழர்கள் அவர்களை வசீலாவாக்கி பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது தான் வரலாறு.
ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் தன்னுடைய ஒரு தேவைக்காக பலமுறை அணுகினார். ஆனால், ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை கண்டுகொள்ளவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் அம்மனிதர் ஒருநாள் உஸ்மான் பின் ஹனீஃப் (ரலி) அவர்களை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் அன்னாரிடம் ஜனாதிபதி பற்றிய தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதைக்கேட்ட உஸ்மான் பின் ஹனீஃப் (ரலி) அவர்கள் அம்மனிதரிடம் மேற்கூறப்பட்ட நபிமொழியில் உள்ள பிரார்த்தனையை செய்யும்படி ஆலோசனை கூறினார்கள். அவரும் அந்த ஆலோசனையை ஏற்று, தொழுது அந்த பிரார்த்தனையை பிரார்த்தித்துவிட்டு பின்பு ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களை காணச் சென்றார். அப்போது ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களுடைய உதவியாளர் அவரைப் பார்த்தவுடனேயே அவரை அன்புடன் அழைத்து சென்று, ஜனாதிபதி அவர்கள் அருகில் அமர வைத்துவிடுகிறார். ஜனாதிபதி அவர்களும் அவருடைய கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு, அதை உடனே நிறைவேற்றித் தந்ததுடன், “மீண்டும் தங்களுக்கு ஏதேனும் தேவை ஏற்படின் தாராளமாக வந்து கேளுங்கள்” என்று கூறி அனுப்பி வைக்கிறார்கள்.
(ஜனாதிபதி அவர்களின் இந்த அதிரடி மாற்றத்தை கண்ட அம்மனிதர், நண்பர் உஸ்மான் பின் ஹனீஃப் - ரலி அவர்கள் தான் நம்மைப்பற்றி ஜனாதிபதி அவர்களிடம் எடுத்துரைத்திருக்க வேண்டும் என்று கருதியவராக அதை உறுதிப்படுத்தும் விதமாக) உஸ்மான் பின் ஹனீஃப் (ரலி) அவர்களை நேரில் வந்து சந்தித்து, ( جَزَاكَ اللهُ خَيْرًا، مَا كَانَ يَنْظُرُ فِي حَاجَتِي وَلاَ يَلْتَفِتُ إِلَيَّ حَتَّى كَلَّمْتَهُ فِيَّ ) "அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக! நீங்கள் ஜனாதிபதி அவர்களிடம் என் விஷயமாக பேசியதன் பலனால் என் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன" என்று கூறினார்.
இதை கேட்டவுடன் உஸ்மான்
பின் ஹனீஃப் (ரலி) அவர்கள் ( والله
ما كَلّمْتُهُ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைப் பற்றி ஜனாதிபதி
அவர்களிடம் நான் எதுவும் பேசவில்லை.” (மாறாக, நீங்கள் செய்த பிரார்த்தனையே
அதுக்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில்,) நபியவர்கள் காலத்தில் கண்பார்வை இழந்த ஒருவருக்கு நபியவர்கள் இந்த பிரார்த்தனையை
கற்றுத்தர, அதை அவர் ஓதியதின்
மூலம் கண்பார்வை கிடைக்கப்பெற்றார். அபோது நான் அங்கிருந்தேன்” என்று எடுத்துரைத்தார்கள். நூல்:- தப்ரானீ, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, மஜ்மூஉஸ் ஸவாயித்
இறைவனிடம் பிரார்த்திக்கும் வகைகள் பல உண்டு. அதில் ஒன்று தான் நல்லோர்களை வசீலாவாக்கி பிரார்த்திப்பது. இறைவனை அணுகுவதற்கு எத்தனையோ வாசல்கள் உள்ளன. அதில் எதில் வேண்டுமானாலும் நுழைந்து இறைவனை அணுகலாம். ஆனால், நமது குறிக்கோள் அல்லாஹ்வை அணுகுவது தானே தவிர, அணுகும் வாசல்களில் அமர்ந்து கொள்வது அல்ல.
எந்தவொரு முஸ்லிமும் வாசல்களையே குறிக்கோள் என்று நம்பி, அதை மட்டும் அணுகி நின்றுவிடுவானேயானால் அவனுடைய செயல் அப்பட்டமாக இணைவைப்பாகும்.
வசீலா தேடுபவன் தன்னால் வசீலாவாக்கப்பட்ட மனிதர் அல்லது ஒரு நற்செயல் அதற்கே நன்மை செய்யும் சக்தியும் சுயமாக உண்டு என்று நம்பினால், அப்பட்டமாகவே இவன் இறைவனுக்கு இணை கற்பித்தவன் ஆவான்.
காரியங்கள் அனைத்தையும் செயலாற்றும் சுய சக்தியும் பலமும் இறைதூதருக்கோ அல்லது இறைநேசர்களுக்கோ இருக்கிறது என்று வசீலா தேடுபவர்கள் சொல்வதில்லை. அவர்களின் நம்பிக்கையும் அப்படி இருப்பதில்லை. மாறாக, இறைத்தூதர்கள், இறைநேசர்கள் நம்மைவிட இறைநெருக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை வசீலாவாக்கி (முன்னிலைப்படுத்தி) இறைவனிடம் பிரார்த்திக்கும் போது அவன் நமது பிரார்த்தனையை விரைவாக ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தான் வசீலா தேடுபவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் அல்லாமல், வசீலாவாக வைக்கப்பட்டவர்களால் நன்மை ஏற்படும் என்று எவரும் நம்பிக்கைக்கொள்வதில்லை.
பிரார்த்தனையின்போது வசீலா வைத்துத்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பிரார்த்தனையை ஏற்பதற்கு வசீலாவை இறைவன் நிபந்தனையாகவும் ஆக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரும்பினால் வசீலா தேடலாம். விருப்பமில்லாதோர் வசீலா தேடுவோரை குறை கூறாமல் இருக்கவேண்டும். இதுவே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.
முன்சென்ற
இறைத்தூதர்கள் மற்றும் தமது உயிரினும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்
முதல், அவர்கள் வழிவந்த நல்லோர்கள் அனைவரையும், மேலும் மனத்தூய்மையுடன் தாம் செய்த
நற்காரியங்களையும் வசீலாவாக்கி பிரார்த்திக்கும் பழக்கமுள்ள நன்மக்களாய்
அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment