Search This Blog

Thursday, 25 November 2021

இறைநேசர்களை அடையாளம் காணுவோம்!

 

இறைநேசர்களை அடையாளம் காணுவோம்!

 

الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ

 

அவர்கள் (அதாவது இறைநேசர்கள் இறைவனை) உண்மையாகவே இறைநம்பிக்கைகொண்டு (அவனுக்குப்) பயந்து நடந்துகொள்கின்றனர். திருக்குர்ஆன்:- 10:63

 

ஏக இறைவன் அல்லாஹுத்தஆலா இறைத்தூதர்களின் வாசலை அடைத்துவிட்டான். இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பிறகு இனிமேல் எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. ஆனால், அல்லாஹ் இறைநேசர்களின் வாசலை அடைக்கவில்லை. மறுமைநாள் வரை அது திறந்தே இருக்கும். யார் வேண்டுமானாலும் இறைநேசரின் படித்தரத்தைப் பெற முயற்சிக்கலாம். எனவே, அவர்களுக்குரிய அடையாளங்கள் சிலவற்றை, இறைவனும், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அறிஞர் பெருமக்களும் எடுத்துரைக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம் வாருங்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்:  ( ثَلَاثٌ مَنْ حَفِظَهُنَّ فَهُوَ وَلِيٌّ حَقًّا ، وَمَنْ ضَيَّعَهُنَّ فَهُوَ عَدُوٌّ حَقًّا : الصَّلَاةُ ، وَالصِّيَامُ ، وَالْجَنَابَةُ ) தொழுகை, நோன்பு, கடமையான குளிப்பு ஆகிய மூன்று விஷயத்தை யார் பேணி பாதுகாத்துக்கொண்டாரோ அவர், என்னுடைய நேசர் ஆவார். யார் அதை வீணாக்கிவிட்டாரோ அவர், என்னுடைய விரோதி ஆவார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்-1616

 

தவறாத தொழுகை


இறைநேசர்களை அடையாளம் காணுவதற்கு அறிஞர் அபுல் அப்பாஸில் முரஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (کُن طَالِبَ الاِستِقَامَةِ لَا طَالَبَ الكَرَامَة ) "(இறைநேசர்களிடம் இஸ்திகாமத் எனும்) செம்மைத்தேடு! (கராமத் எனும்) அற்புதங்களைத் தேடாதே!

 

ஸுனைதுல் பக்தாதீ (ரஹ்) அவர்கள் நடத்தி வந்த தவச்சாலையில் மாணவராக ஒருவர் வந்து சேர்ந்தார். சுமார் பத்து வருடங்களுக்கு மேல் இருந்த அவர் திடீரென ஒரு நாள் நான் போகிறேன் என்று கூறியபோது ஏன் போகிறீர்கள் என அன்னார் கேட்க, இத்தனை வருடங்களில் உங்களிடம் ஒரு அற்புதத்தைக் கூட நான் பார்க்கவில்லை. என்று அவர் தயங்கியவாறு கூறினார். அப்போது அன்னார், “என்னோடு தங்கியிருந்த இத்தனை வருடங்களில் ஏதாவது ஒரு நாளில் நான் இமாம், ஜமாஅத் தொழுகையை விட்டதாக, அல்லது தக்பீர் தஹ்ரீமா எனக்கு தவறியதாக நீர் பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டார்கள், அவர் இல்லைஎன்று பதில் கூறினார். அப்போது அன்னார், “இதை விட பெரிய அற்புதம் என்ன வேண்டும்என்றார்கள்.

 

இறைநேசர்கள் தொழுகை விசயத்தில் மிகுந்த கவனத்தோடு இருப்பார்கள். அதிலும், பொன்னும், பொருளையும்விட ஜமாஅத் தொழுகையை  விடாது தொழுவதையே மிகவும் விரும்புவார்கள்.

 

நோன்பின் மாண்பு 


அண்ணல் நபி (ஸல்) அவர்கள்( أَلاَ أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ الصَّوْمُ جُنَّةٌ"நன்மைகளின் வாசலைப் பற்றி உனக்கு அறிவிக்கட்டுமா?" என்று கூறி விட்டு, "நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்" என்றார்கள். அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2538

 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் அரஃபா நோன்பு வைத்திருந்தார்கள். அது கடுமையான வெயில் காலம் புழுக்கம் தாங்கமுடியவில்லை. எனவே தலையின்மீது தண்ணீரைத் தெளித்து கொண்டார்கள். மிகவும் சிரமமாக இருந்ததால் நோன்பை விட்டுவிடுங்கள் என்று ஒருவர் ஆலோசனை கூறினார். அன்னையவர்கள், “அரஃபா தினத்தில் நோன்பு நோற்றால் ஆண்டு முழுக்க செய்த சிறு பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் அப்படியிருக்கும்போது எப்படி நோன்பை முறிக்க முடியும்? என்று கூறி அன்னையவர்கள் மறுத்துவிட்டார்கள். நூல்:- முஸ்னது அஹ்மது  

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), இமாம் அபூ இஸ்ஹாக் (ரஹ்), இமாம் சுஹ்ரீ (ரஹ்) போன்ற நமது முன்னோர்கள் பயணத்திலும் ஆஷுரா நோன்பை (விடாமல்) நோற்றுள்ளார்கள்.

 

அபூஜபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுடன் பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களிடம், ( تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فِي السَّفَرِ وَأَنْتَ تُفْطِرُ فِي رَمَضَانَ؟ ) “நீங்கள் பயணத்தில் ரமளான் நோன்பை விட்டுவிடுகிறீர்கள். ஆனால், ஆஷூரா நோன்பை நோற்றுவிடுகிறீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ( إِنَّ رَمَضَانَ لَهُ عِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ، وَإِنَّ عَاشُورَاءَ تَفُوتُ ) “ரமளான் நோன்பை விட்டால் அதை வேறுநாட்களில் நோற்றுக்கொள்ளலாம். ஆனால், (ஆஷுரா நோன்பை தவறவிட்டுவிட்டால், அதை வேறு நாட்களில் நோற்கமுடியாதே!) ஆஷூரா நோன்பு தவறிவிடுமே!என்று கூறினார்கள். நூல்:- ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ, ஸியரு அஃலாமின் நுபலா


இறைநேசர்கள் கட்டாயக் கடமையான ரமளான் மாத நோன்புகள் மட்டுமின்றி, அரஃபா நோன்பு, ஆஷூரா நோன்பு போன்ற உபரியான நோன்புகள் நோற்பதிலும் கவனம் செலுத்துவார்கள்.

 

கடமையான குளிப்பு                                   


ஒருமுறை இறைநேசர் இஸ்ஸுத்தீன் அப்துஸ் ஸலாம் (ரஹ்) அவர்கள் இரவில் கம்பளிப் போர்வையால் தம்மை போர்த்திக் கொண்டு படுத்துறங்கினார்கள். உறக்கத்தில் அன்னாருக்கு குளிப்பு கடமையாகிவிட்டது. திடுக்கிட்டு விழித்தெழுந்த அன்னார், குளித்து தூய்மை பெறுவதற்காக அங்குமிங்கும் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகளே கிடக்கின்றன. என்ன செய்வதென்று யோசித்த அன்னார் ஒரு பனிக்கட்டியை எடுத்து உடைத்து நீருண்டாக்கிக் குளித்தார்கள். குளித்துவிட்டு மீண்டும் அன்னார் கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்தார்கள். படுத்தவர்கள் விரைவில் உறங்கி விட்டார்கள். மீண்டும் அன்னாருக்கு உறக்கத்தில் அதே நிலை ஏற்பட்டது. மீண்டும் எழுந்து பனிக்கட்டியை உடைத்து நீருண்டாக்கி குளித்தார்கள். அதன் காரணமாக அன்னாரின் உடல் பெரிதும் நலிவுற்றது.

 

இறைநேசர்கள் எல்ல நேரங்களிலும் உளூவுடனும் (திக்ர், தஸ்பீஹ் எனும்) இறைதியானத்துடனும் இருப்பதையே விரும்புவார்கள். எனவே, அவர்கள் குளிப்புக்கடமையுடன் சுத்தமின்றி (ஜுனுபாளியாக) சில நிமிடங்கள்கூட இருப்பதை விரும்பமாட்டார்கள். 

 

ஒருவருக்கு இரவில் குளிப்பது கடமையாகிவிட்டால் அவர் சூரிய உதயத்திற்கு முன்பே குளித்துவிட்டு ஃபஜ்ர் தொழுதுவிட வேண்டும். பகலில் குளிப்பது கடமையாகிவிட்டால், தொழுகை நேரம் கடந்து போவதற்கு முன்பே குளித்துவிட வேண்டும். சுருங்கக்கூறின், தொழுகை தவறக்கூடாது. சூரிய உதயத்திற்கு முன்பே அவர் குளிக்காமல் இருந்தால், அவர் குளிக்கும்வரை வானவர்கள் அவரை சபித்துக்கொண்டேயிருப்பார்கள் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.


உலகப் பற்றின்மை


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا حَمَاهُ الدُّنْيَا كَمَا يَظَلُّ أَحَدُكُمْ يَحْمِي سَقِيمَهُ الْمَاءَ ‏ ஓர் அடியார்மீது அல்லாஹ் அன்பு கொண்டுவிட்டால், இவ்வுலக (மோக)த்திலிருந்து அவரைப் பத்தியமாக நடக்கச்செய்வான்; உங்களில் ஒருவர் தம்மிடம் உள்ள நோயாளியைத் தண்ணீர் அருந்துவதிலிருந்து பத்தியம் காக்கச் செய்வதைப் போன்று. அறிவிப்பாளர்:- கத்தாதா பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1960

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِذَا رَأَیتُمُ العَبدَ یُعطٰی زُهدًا فِی الدُّنیَا وَقِلَّةَ مَنطِقٍ فَاقتَرِبُو مِنهُ فَاِنَّهُ یُلَقَّی الحِکمَةَ ) உலக மோகம் இல்லாதவராகவும், அதிகம் பேசாதவராகவும் இருக்கின்ற அடியார் எவரையாவது பார்த்தீர்களேயானால், அவருடன் நெருக்கமான தொடர்பை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவரிடம் ஞானம் உதிக்கும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- தலாயிலுந் நுபுவ்வா லில் பைஹகீ

 

ஹிக்மத் என்பது அது ஒரு அருள்வளம் நிறைந்த பேரொளி. இறையருளால் மனதில் உதிக்கின்ற பார்வைத் தெளிவு. கடின உடலுழைப்பின் மூலமாகவோ, மண்டையைக் கசக்கி ஆழ்ந்து சிந்திப்பதன் மூலமாகவோ ஹிக்மத்தைச் சம்பாதித்துக் கொள்ள முடியாது. உலகம் மோகம் இல்லாதவராகவும், அதிகம் பேசாதவராகவும் இருக்கின்ற அடியாருக்கு அது இறைவனிடமிருந்து அருளப்பட்ட ஒரு ஞானம். இதன்மூலம் அடியான் தன்னை எந்த நிலைக்கு உயர்த்திகொள்கின்றான் எனில், அவனுக்கு மறைவானவனிடமிருந்து உதிப்புக்கள் தோன்றுகின்றன.

 

இறைவன் அவன் பக்கம் தன்னுடைய கவனத்தைத் திருப்புகின்றான். இத்தகைய மனிதர்களுடன் பழகுவதன் மூலம் நாம் நம்முடைய செயல்பாடுகளை செம்மைப் படுத்திக்கொள்ள முடியும். நம்முடைய வாழ்வையும் அழகுபடுத்திக்கொள்ள முடியும். நாமும் சிந்தனைத்திறன் மிக்கவர்களாக ஆகமுடியும். இதனால்தான் எவருக்கு ஹிக்மத் வழங்கப்பட்டிருக்கிறதோ அவருடன் நெருங்கிப் பழகி தோழமையை வளர்த்துக் கொள்வதும் அவருடன் நெருக்கமான உறவை மேற்கொள்வதும் அனைத்து நோய்களையும் தீர்க்க வல்ல சர்வரோக நிவாரணி நல்லறமாகும்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ( يَا رَسُولَ اَللَّهِ! دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ أَحَبَّنِيَ اللَّهُ, وَأَحَبَّنِيَ النَّاسُ ) "நாயகமே! நான் ஒரு நற்செயலைச் செய்து அதன்மூலம் இறைவனும், பிற மக்களும் என்னை நேசிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நற்செயலை எனக்கு சொல்லித் தாருங்கள்" என்று கேட்டார்.

 

அண்ணலார், ( اِزْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّكَ اَللَّهُ, وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبُّكَ النَّاسُ ) "உலகின் மீது பற்றற்று இருப்பீராக. உன்னை இறைவனை நேசிக்க தொடங்கிவிடுவான். மக்களிடம் இருக்கின்ற செல்வச் செழிப்பின்மீதும் பற்றற்று இருப்பீராக. (அவற்றிலிருந்து உன்னுடைய முகத்தை திருப்பிக் கொள்வீராக.) உன்னை மக்கள் நேசிக்க தொடங்கி விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- சஹ்ல்  பின் ரலி சஅத் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா, புலூகுல் மராம்-1502, பைஹகீ, தைலமீ

 

சிரியா நாட்டின் "ஹிம்ஸ்" பகுதியிலிருந்து ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களை சந்திக்க ஒரு குழுவினர் வந்தனர். உமர் (ரலி) அவர்கள் வந்தவர்களிடம், "உங்கள் கவர்னர் எவ்வாறு ஆட்சி செய்கிறார்? என்றெல்லாம் விசாரித்துவிட்டு, ( اكْتُبُوْا لِى أَسْمَاءَ فُقَرَائِكُمْ حَتَّى أَسُدَّ حَاجَتَهُمْ ) உங்களிலுள்ள ஏழைகளின் பெயர்களை எனக்கு எழுதித் தாருங்கள். அவர்களுக்குரிய உதவிகளைச் செய்ய வேண்டும்" என்று கேட்டார்கள்.

 

அவ்வாறே அந்த குழுவினர் ஒரு பெயர் பட்டியலைத் தயார் செய்து கொடுக்க, அதை பார்வையிட்டுக் கொண்டே வந்த உமர் (ரலி) அவர்கள் அந்தப் பட்டியலின் வரிசையில்  "சயீத் பின் ஆமிர்" என்ற பெயர் வருவதை பார்த்துவிட்டு, ( وَمَن سَعيدُ بنُ عامر ) "யார் இந்த சயீத் பின் ஆமிர்" என்று கேட்டார்கள். அவர்கள், "அது எங்களுடைய கவர்னர் (சயீத் - ரலி அவர்கள்) தான்" என்றனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உமர் (ரலி) அவர்கள், ( أَمِيرُكُمْ فَقِيْرُ ) “உங்கள் கவர்னர் ஏழையா? என்று கேட்க, அவர்கள், "ஆம்! அவர் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! பல நாட்கள் அவர் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்பது எங்களுக்கு தெரியும்.  நீங்கள் முதலில் அவருக்கு உதவவேண்டும்." என்றனர்.

 

இதைக்கேட்ட உமர் (ரலி) அவர்கள் தமது தாடி நனையும் அளவுக்கு வெகுநேரம் அழுதார்கள். பிறகு அந்த குழுவினரிடம், ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, ( اِقْرَؤُوا عَلَيْهِ السَّلَامَ مِنِّى وَقُوْلُوْا لَهُ : بَعَثَ إِلَيكَ أميرُ المؤمنين بِهٰذَا الْمَالِ لِتَسْتَعِيْنَ بِهِ عَلَى قَضَاءِ حَاجَاتِكَ ) "அவருக்கு என் ஸலாமை சொல்லிவிடுங்கள். பிறகு அவரிடம் இதை ஜனாதிபதி ஆகிய நான் அவருக்குக் கொடுத்தேன் என்றும், இந்த காசுகள் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என்று கூறி கொடுங்கள்" என்றார்கள்.

 

அவ்வாறே ஊருக்கு திரும்பிய அந்த குழுவினர் கவர்னர் சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்களின் குடிசையினுள் நுழைந்து அந்த ஆயிரம் பொற்காசுகளை ஒப்படைத்தனர்.

 

அப்போது சயீத் (ரலி) அவர்கள், "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்று சப்தமிட்டவராக அலறினார்கள். வீட்டின் உட்பகுதியில் இருந்த அவர்களின் மனைவியார் இவர்களது திடீர் சத்தத்தை கேட்டு, ( مَا شَأْنُكَ يا سعيد ؟ أَمَاتَ أمير المؤمنين ) "சயீத் அவர்களே! என்னவாயிற்று? ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்களா? என்று வினவினார். அதற்கவர்கள், ( بَل أَعْظَمُ مِن ذَلِكَ ) "(இல்லை) அதைவிடவும்  பெரிய விஷயம் வந்திருக்கிறது" என்றார்கள். (இன்னும் விஷயத்தைப் புரிந்து கொள்ளாத அந்த) அம்மையார், ( أَأُصِيبَ الْمُسْلِمُون فِى وَقْعَةٍ ؟ ) “யாராவது பெரும் படையுடன் முஸ்லிம்களை தாக்க வருகை தந்து விட்டார்களா?” என்று திரும்பவும் வினவினார். அதற்கவர்கள், ( بَل أَعْظَمُ مِن ذَلِكَ ) "(இல்லை) அதைவிடவும் பெரிய விஷயம் வந்திருக்கிறது" என்றார்கள். அந்த அம்மையார், ( وَمَا أَعْظَمُ مِنْ ذٰلِكَ ) “அதைவிட அப்படி என்ன பெரிய விஷயம் வந்திருக்கிறது?" என்று வினவினார். சயீத் (ரலி) அவர்கள், ( دَخَلَتْ عَلَىَّ الدنْيَا لِتُفْسِدَ آخرتى وَحَلَّت الفِتْنَةُ فِى بَيتِى ) "(அதாவது) என் மறுமை வாழ்வைக் கெடுப்பதற்காகவே இந்த உலகம் என்னிடம் வந்துள்ளது. என் வீட்டினுள் சோதனை நுழைந்து விட்டது" என்று கூறினார்கள்.


உடனே அந்த அம்மையார், ( تَخَلَّصْ مِنْهَا ) "உடனடியாக அந்த சோதனையிலிருந்து முதலில் வெளியே வாருங்கள்" என்றார். சயீத் (ரலி) அவர்கள், ( أَوَتُعِينِينَنِي عَلَى ذٰلِكَ ) "அதற்கு நீ எனக்கு உதவியாக இருப்பாயா?" என்று கேட்டார்கள். அந்த அம்மையார், "ஆம்! (உதவியாக இருப்பேன்)" என்றார். அதன் பிறகு சயீத் (ரலி) அவர்கள் தனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுத்துவிடப்பட்ட செய்தியைச் சொன்னார்கள். பிறகு மனைவியின் சம்மதத்தோடு அந்த பொற்காசுகளை ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். நூல்:- சுவரும் மின் ஹயாத்திஸ் ஸஹாபா


உலகின்மீது பற்று வைக்காமல் அதிலிருந்து முகத்தை திருப்பிக்கொள்கின்றவர் இறைவனிடம் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொள்கின்றார். இறைவனுக்காகத் தம்முடைய நேரம், ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணிக்க தொடங்கி விடுகின்றார். அவருடைய ஆர்வங்கள், ஈடுபாடுகள், ஏக்கங்கள் அனைத்தும் இறைவனைச் சார்ந்தே அமைந்துவிடுகின்றது. இறைவனை மையமாகக் கொண்டே அவருடைய வாழ்க்கை நகர்கின்றது. இவ்வாறாக ஒருவர் இறைவனுக்குரியவராய் ஆகிவிடும்போது, இறைவனும் அவருக்குரியவனாய் ஆகிவிடுகிறான் என்பது உறுதி.

 

இதே போன்று ஒருவர் பிற மக்களின் செல்வச் செழிப்பு ஆகியவற்றிலிருந்து தம்முடைய முகத்தை திருப்பிக் கொண்டு அவற்றின் மீது இம்மிளவுகூட ஆர்வமோ ஆசையோ கொள்ளாமல், அவற்றைவிட்டும் தேவையற்றவராகவும்,  மக்களிடம் எந்தவித உதவி ஒத்தாசையையும் எதிர்பார்க்காதவராகவும் பக்குவத்துடன் நடந்து கொள்கின்றபோது,  மக்கள் மத்தியில் அவருடைய மதிப்பு கூடிவிடுகின்றது. அத்தகைய பண்பட்ட மனிதருக்குத் தங்களுடைய இதயங்களில் இடம் கொடுத்தே ஆகவேண்டியக் கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பண்பட்ட மனிதர் மக்களை தன் பக்கம் சுண்டி இழுத்துவிடுகின்றார்.

 

நற்குணம் பேணுதல்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا جُبِلَ وَلِيٌّ لِلّٰهِ عَزَّ وَجَلَّ اِلَّا عَلَي السَّخَاءِ وَحُسنُ الخُلُقِ ) எந்த இறைநேசரானாலும் அவரிடம் கொடைத்தன்மையும், நற்குணமும் இயற்கை பண்புகளாக இருக்கும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- அத்தர்ஙீப் வத்தர்ஹீப்

 

பிஷ்ருல் ஙாஃபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஓர் நாள் நான் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பார்த்தேன். அப்போது நபியவர்கள், "பிஷ்ரே! நீர் மகான் என்ற இந்த உயர் அந்தஸ்தை எதன் பொருட்டால் அடைந்தீர் என்பது உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், "நாயகமே! நான் அறியேன்" என்று கூறினேன். நபியவர்கள், "நீர் என்னுடைய வழிமுறையை (சுன்னத்தை முறையாக) பின்பற்றியது; நல்லவர்களுக்கு பணிவிடை செய்தது; சக மனிதர்களிடம் நற்குணம் பேணியது; மற்றும் என்னுடைய குடும்பத்தினரை நீ விரும்பியது. இவை தான் மற்றவர்களைவிட உமது அந்தஸ்து உயர காரணமாகும்" என்று விவரித்தார்கள். நூல்:- அல்மஃபாஹீம் யஜிபு அன் துஸஹ்ஹிஹ

 

தடுத்ததை தவிர்ந்து கொள்பவர்

 

அவர்களோ பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள்; ஏதோ (தவறாக ஏற்பட்டுவிடும்) ஒரு சில பிழைகளைத் தவிர! சந்தேகமின்றி உம் இறைவனின் மன்னிப்பு மிகவும் விசாலமானதாகும். திருக்குர்ஆன்:- 53:32

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اتَّقِ الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ ) (இறைவனால்) தடை செய்யப்பட்டவற்றைத் தவிர்த்துவிடு! மக்களிலேயே நீ (இறைவனுக்கு) மிகவும் அடிபணிந்தவனாக இருப்பாய். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2227, முஸ்னத் அல்பஸ்ஸார், பைஹகீ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللَّهَ خُذُوا مَا حَلَّ وَدَعُوا مَا حَرُمَ ) மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அனுமதிக்கப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள்; தடுக்கப்பட்டதை விட்டு விடுங்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2135

 

இமாம் அபூ யஸீத் அல்பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( لَوْ رَأَيْتُمْ الرَّجُلَ يَطِيرُ فِي الْهَوَاءِ أَوْ يَمْشِي عَلَى الْمَاءِ فَلَا تَغْتَرُّوا بِهِ حَتَّى تَنْظُرُوا وُقُوفَهُ عِنْدَ الْأَمْرِ وَالنَّهْيِ  )  காற்றில் பறக்கும் ஒரு மனிதனை பார்த்து அல்லது தண்ணீரில் நடக்கும் ஒரு மனிதனை பார்த்து அவர் இறைநேசர் என்று ஏமாந்து விட வேண்டாம். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுபவராகவும், அல்லாஹ் தடுத்ததை தவிர்ந்து கொள்பவராகவும் இருக்கவேண்டும். நூல்:- மஜ்மஉ ஃபதாவா ஷைகுல் இஸ்லாம் 1/83

 

சஹ்ல் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) கூறுகிறார்கள். ( لَيْسَ کُلُّ مَنْ عَمِلَ بِطَاعَةِ اللَّهِ صَارَ حَبِيبَ اللَّهِ، وَلَكِنْ مَنِ اجْتَنَبَ مَا نَهَى عَنْهُ اللَّهُ صَارَ حَبِيبَ اللَّهِ، وَلا يَجْتَنِبُ الآثَامَ إِلاّ صِدِّيقٌ مُقَرَّبٌ، وَأَمَّا أَعْمَالُ الْبِرِّ فيَعْمَلُهَا الْبَرُّ وَالْفَاجِرُ ) அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நற்காரியங்கள் செய்பவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு நேசமானவர்கள் அல்லர். இறைவன் தடுத்த,  விலக்கிய விஷயங்களை விட்டும் யார் தவிர்த்து வாழ்வாரோ அவர் தான் இறைநேசர் ஆவார், பெரும் பாவங்களை வாய்மையானவர்கள் இறை நெருக்கத்தை பெற்றவர்கள் மட்டும் தான் தவிர்த்திருக்க முடியும். நற்காரியங்களை நல்லவர்களும், பாவிகளும் (எந்த வேறுபாடுமின்றி) அனைவரும் செய்ய முடியும். நூல்:- ஹில்யா இமாம் அபீநுயைம், ஸப்ஃவது அஸ்ஸப்ஃவா இப்னு அல்ஜவ்ஸி 2/272

 

இமாம் ஜஅஃபர் சாதிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைவன் தடை செய்திருக்கின்ற காரியங்களை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் இறைநேசராகி விடுவீர்கள். தப்பான செயல்களில் ஈடுபடுகின்றவர்களால் இறைவணக்கத்தில் இனிமை காண இயலாது. எனவே, அவர்களால் முறைப்படி இறைவனை வணங்க முடியாது.

 

கூடுதலான வழிபாடுகள்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: ( وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطُشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا ) என் அடியான் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது, அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6502

 

ஒருவர் கடமையான வழிபாடுகளை நிறைவேற்றுவதில் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளையும் செய்து வந்தால் அல்லாஹ்வின் நேசத்திற்கு இலக்காவார். அல்லாஹ்வின் நேசம் கிடைத்துவிட்டால், அவரது கண், காது, கை, கால் ஆகியவற்றுக்கு அல்லாஹ் நிறைவான ஆற்றலை வழங்குவான். அல்லது இந்த உறுப்புகளைப் பாவங்கள் புரிவதிலிருந்து விலக்கி, அல்லாஹ்வுக்குத் திருப்தியான வழிகளில் மட்டுமே பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அவருக்கு வழங்குவான். இப்படி இதற்கு ஏதேனும் ஓர் உருவகப் பொருள் அளிப்பதே சரியாகும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ

 

மாமேதை இப்னு ஹஜர்  அல்அஸ்கலானி   (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( الولي: اَلعَالِمُ بِاللّٰهِ وَالمَوَظِبُ عَلَي طَاعَتِهِ اَلمُخلِصُ فِي عِبَادَتِهِ ) இறைவனை (முறையாக) அறிந்து, (உள்ளும் புறமும் சுத்தமானவராக வாழ்ந்து) அவனுக்குத் தூய முறையில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவரே இறைநேசர் ஆவார். நூல்:- ஃபத்ஹுல் பாரீ

 

மாமேதை சுயூத்தீ (ரஹ்) அவர்கள், “ஐந்து குணங்கள் உடையவர்கள் இறைநேசர்களாக ஆகிவிடுவார்கள்எனக் கூறுகிறார்கள்.

 

1)  ( لَا يَهْتَمُّونَ بِالرِّزْقِவாழ்வாதாரம் தொடர்பாக கவலை கொள்ளமாட்டார்கள்.                                                                                                                      

2) ( ولا يشكون من خالقهم إذا مرضوا ) நோயுற்றால் படைத்தவனிடம் (இப்படி ஆகிவிட்டதே என்று) முறையிட்டு கொண்டிருக்கமாட்டார்கள்.                                                                     

3) ( وَلَا يَشْكُونَ مِنْ خَالِقِهِمْ إِذَا مَرِضُوا ) ஒன்று சேர்ந்து உணவருந்துவார்கள்.                                                                                                                                                                              

4)  ( وَإِذَا خَافُوا جَرَتْ عُيُونُهُمْ بِالدُّمُوعِஅச்சம் ஏற்பட்டவுடன் அழுதுவிடுவார்கள்.                                                                                                                                                                 

5) ( وَإِذَا تَخَاصَمُوا تَسَارَعُوا إِلَى الصُّلْحِசண்டையிட்டுக் கொண்டாலும் விரைந்து இணக்கமாகி விடுவார்கள்.

 

லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள், ( إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَمْشِي عَلَى الْمَاءِ وَيَطِيرُ فِي الْهَوَاءِ فَلَا تَغْتَرُّوا بِهِ حَتَّى تَعْرِضُوا أَمْرَهُ عَلَى الْكِتَابِ وَالسُّنَّةِ ) "ஒரு மனிதர் நீரில் நடப்பதையோ, விண்ணில் பறப்பதையோ நீங்கள் பார்த்தால் அவரது நடத்தையைக் குர்ஆன் மற்றும் நபிவழியோடு ஒத்துப் பார்க்காமல் அவர் குறித்து நீங்கள் ஏமாற்றம் அடைந்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-34

 

அபூயஸீத் அல்பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ஒருமுறை தங்கள் மாணவர்களை நோக்கி, "இந்த இடத்தில் ஒரு இறைநேசர் இருக்கின்றார் என்று கூறப்படுகிறது. எனவே, வாருங்கள் அவரை போய் பார்த்து வரலாம்" என்று கூறினார்கள். இதைப்பற்றி ஒரு மாணவர் கூறுகிறார். நாங்கள் அவ்வாறு அந்த இறைநேசரைப் பார்ப்பதற்கு எங்கள் ஆசானுடன் போய்க்கொண்டிருந்த அந்நேரத்தில், ஒரு மனிதர் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவருக்கு காரல் எச்சில் வரவே, சட்டென்று காரி கிப்லா திசையை நோக்கி துப்பிக் கொண்டே சென்றார்.

 

இதைப்பார்த்த எங்கள் ஆசான், "நாம் திரும்பிச் சென்று விடலாம் வாருங்கள். நாம் பார்க்க வந்தவர் அதோ கிப்லா திசையை நோக்கி எச்சிலைத் துப்பிக் கொண்டே சொல்லுகிறாரே அவர்தான். அருமை நாயகம் (ஸல்) அவர்களுடைய (சுன்னத்) ஒழுக்க நெறிகளைப் பேணாத இவரிடம் என்ன இறைநேசத்தின் (விலாயத்தின்) தன்மையை நாம் பார்க்க முடியும்?" என்று கூறி திரும்பிவிட்டார்கள். அவருக்கு எங்கள் ஆசான் சலாம்கூட சொல்லவில்லை. நூல்:- அல்மஃபாஹீம் யஜிபு அன் துஸஹ்ஹிஹ

 

குர்ஆன் மற்றும் நபிவழிக்கு முரணான அற்புதங்கள் இறைநேசருக்கானது அல்ல. வெறுமனே அற்புதங்களே இறைநேசருக்கான அளவுகோல் என்று எண்ணலாகாது. நற்குணங்களும், இறைவணக்கத்தின் மீதுள்ள ஆசையும் ஆர்வமுமே இறைநேசருக்கான சான்றாகும்.

 

இறைநேசர்களின் அடையாளங்களில் சிலவற்றை படித்தோம். எனவே, இறைநேசர்களின் நற்குணங்களையும், வணக்க வழிபாட்டையும் நாமும் கடைப்பிடித்து வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்! 

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

1 comment:

  1. மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் 👌
    வாழ்த்துக்கள் 💐 ஹஜ்ரத்...

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...