இலாபக் கணக்கு
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ
بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ
ஒருவர் ஒரு நற்காரியம் செய்தால் அதுபோன்ற பத்து (நற்காரியங்களுக்கான கூலி) அவருக்கு
உண்டு. (ஆனால்,) யார் ஒரு தீமை செய்கிறாரோ அவருக்கு அது போன்ற (ஒரு
மடங்கு) தண்டனையே வழங்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். திருக்குர்ஆன்:-6:160
இறைவன் படைத்த படைப்புகள் பல்லாயிரம் இருந்தாலும், அதில் மனிதன் மட்டும் விஷேச படைப்பாகும். இறைவன், பிற உயிரினங்களுக்கு வழங்காத நன்மை தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலை மனிதனுக்கு மட்டுமே
வழங்கினான். அந்தப் பகுத்தறிவை பயன்படுத்தும் மனிதன் சிறியதோ, பெரியதோ எதை செய்தாலும் அதில் இலாபத்தை எதிர்பார்ப்பான். இதுதான் மனித இயல்பு.
இதை உணர்ந்திருக்கின்ற அல்லாஹுத்தஆலா மனிதன் செய்யும் ஒவ்வொன்றுக்கும் அதற்குரியப்
பகரத்தை வழங்காமல், எதையும் இலவசமாக பெற்றுக்கொள்வதில்லை. இதுதான் இறைவனின்
இயல்பு. எனவே, தமது அடியார்களின் நன்மை தீமைகளுக்கேற்றபடி கூலியையும்
நிர்ணயித்துள்ளான்.
அன்பும் அருளும் நிறைந்த வள்ளல் குணம்
கொண்ட அல்லாஹுத்தஆலா நன்மைக்கு பல மடங்கு நன்மைகளையும், தீமைக்கு ஒரு தீமையை மட்டும் பதிவு செய்கின்றான்
என்று திருக்குர்ஆனின் மூலம் வாக்குறுதி வழங்குகின்றான். வாக்குறுதி மாறாத வசனங்களின் மூலம் நாம் வாழ்க்கையை எவ்வளவு வசந்தமாக்குகின்றான்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (நன்மை,
தீமைகளை பதிவு செய்யும் வானவர்களிடம்)
கூறினான்.
( إِذَا هَمَّ عَبْدِي بِحَسَنَةٍ فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا
فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا وَإِذَا هَمَّ بِسَيِّئَةٍ فَلاَ تَكْتُبُوهَا
فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا ) “என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய நாடிவிட்டாலே அதை
அவனுக்கு ஒரு நன்மையாகப் எழுதி விடுங்கள். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால்
அது போன்று பத்து நன்மைகளாக எழுதிவிடுங்கள். (என் அடியான்) ஒரு தீமையைச் செய்ய எண்ணி
விட்டாலே அதை நீங்கள் பதிவு செய்து விடாதீர்கள். தான் எண்ணியபடி அவன் அந்த தீமையைச்
செய்து விட்டால் அதை (ஒரேயொரு) குற்றமாகவே பதிவு செய்யுங்கள்.”
பிறகு, "எவர் ஒரு நன்மையைச்
செய்கிறாரோ அவருக்கு அதைப் போன்று பத்து நன்மைகள் உண்டு" (6:160) என்ற திருவசனத்தை
ஓதிக் காட்டினார்கள். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள், நூல் புகாரீ-7501, முஸ்லிம்-203, திர்மிதீ-2989 முஸ்னது அஹ்மது
ஆறு வெள்ளிக்காசுகள்
உபைதுல்லாஹ் பின் முஹம்மது (ரலி) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) அவர்களிடம் ஒருவர்
வந்து யாசகம் கேட்டார். அப்போது அலீ (ரலி)அவர்கள் தனது மகனார் ஹசன் அல்லது ஹுசைன்
(ரலி) அவர்களை நோக்கி! உன் தாயாரிடம் சென்று நான் கொடுத்த ஆறு வெள்ளிக் காசுகளில் ஒரு
வெள்ளிக் காசை வாங்கி வா! என்று கூறினார்கள்.
அவர் சென்று திரும்பி வந்து, தாங்கள் அந்த ஆறு வெள்ளிக்காசுகளை மாவு வாங்க கொடுத்திருப்பதாகக் கூறினார்கள் என்றதும் அலீ (ரலி)அவர்கள், ( لَا يَصدُقُ اِيمَانُ عَبدٍ حَتَّي يَكُونَ بِمَا فِي يَدِاللّٰهِ اَوثَقَ مِنهُ بِمَا فِي يَدِهِ ) "எவர் தன் கையில் உள்ள பொருட்களைவிட அல்லாஹ்விடமுள்ள பொருட்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளமாட்டாரோ அதுவரை அவருடைய இறை நம்பிக்கை உண்மையானதாக ஆகாது" என்று கூறி அந்த ஆறு வெள்ளிக் காசுகளையும் வாங்கி வர சொன்னார்கள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அந்த ஆறு வெள்ளி காசுகளையும் கொடுத்து அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள், வெள்ளிக் காசுகளை அந்த யாசகரிடம் கொடுத்துவிட்டார்கள்.
பின்பு அலீ (ரலி) அவர்கள் அதே நிலையில் அங்கு உட்கார்ந்திருந்தபோது, ஒரு மனிதர் விற்பதற்காக தன்னுடன் ஒரு ஒட்டகத்தை
அழைத்து வந்தார். அலீ (ரலி) அவர்கள் இந்த ஒட்டகத்தின் விலை என்ன என்று விசாரித்தபோது,
அந்த மனிதர் 140 வெள்ளிக்
காசுகள் என்றார். அலீ (ரலி) அவர்கள், அந்த மனிதர் கூறிய விலையை பிறகு கொடுப்பதாக வாக்களித்து விட்டு அந்த ஒட்டகத்தை
அங்கு கட்டி வைக்குமாறு கூறினார்கள். அந்த மனிதரும் அதற்கு சம்மதித்து ஒட்டகத்தை கட்டி
வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
பின்பு ஒரு மனிதர் வந்து கட்டியிருந்த ஒட்டகத்தைக் காண்பித்து இந்த ஒட்டகம் யாருக்குரியது?
அதன் விலை என்ன? விசாரித்தார். அலீ
(ரலி) அவர்கள், "அது எனக்கு உரியது
தான். அதன் விலை 200 வெள்ளிக் காசுகளாகும்"என்று கூறினார்கள். உடனே அவர்,
"நான் அதை வாங்கி கொள்கிறேன்
என்று கூறி, 200 வெள்ளிக் காசுகளைக்
கொடுத்து ஒட்டகத்தை பிடித்து சென்றார். பின்பு அலீ (ரலி) அவர்கள் தான், ஒட்டகம் கடனாக வாங்கிய மனிதருக்கு கொடுக்க வேண்டிய
140 வெள்ளிக் காசுகளைக் கொடுத்து விட்டு மீதமுள்ள 60 வெள்ளிக் காசுகளை தனது மனைவி பாத்திமா
(ரலி) அவர்களிடம் கொடுத்த போது, இது எவ்வாறு கிடைத்தது?
என்று அவர் வினவினார். அலீ
(ரலி) அவர்கள், (தலைப்பில் காணும்)
திருவசனத்தை நினைவு கூர்ந்து (هَذَا
مَا وَعَدَنَا اللّٰهُ عَلَي لِسَانِ نَبِيِّهِ صلعم ) "இந்த வெள்ளிக்காசுகள் தன் நபியின் மூலம் அல்லாஹ்
நமக்கு வாக்களித்ததாகும்" என்று கூறினார்கள். நூல்:- கன்ஸுல் உம்மால்,
ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2,
பக்கம்-191
சுருக்குப் பையில் இருந்தவை
மக்கீ பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (ஒரு நாள்) நாங்கள் இப்னு ஜுரைஜ்
அல்மக்கீ (ரஹ்) அவர்களிடம் இருந்தோம். அப்போது (வறியவர்) ஒருவர் வந்து அவர்களிடம்
(உதவி) கேட்டார். அப்போது இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் தம் காசாளரிடம், "அவருக்கு ஒரு பொற்காசு (தீனார்) கொடுங்கள்' என்றார்கள். காசாளர்
"என்னிடம் ஒரு பொற்காசு மட்டுமே உள்ளது. அதை நான் கொடுத்து விட்டால் நீங்களும்
உங்களுடைய குடும்பத்தாரும் பசியோடு இருக்க நேரிடும்" என்றார். இதைக் கேட்ட ஜுரைஜ்
(ரஹ்) அவர்கள் கோபப்பட்டார்கள். "அதைக் கொடு!" என்றார்கள்.
பின்னர் நாங்கள் ஜுரைஜ் (ரஹ்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் ஒரு கடிதத்தையும்
ஒரு சுருக்குப் பையும் கொண்டு வந்தார். அதை ஜுரைஜ் (ரஹ்) அவர்களின் சகோதரர்களில் ஒருவர் கொடுத்து அனுப்பியிருந்தார்.
அக்கடிதத்தில் "நான் ஐம்பது பொற்காசுகள் கொடுத்துள்ளேன் (பெற்றுக் கொள்க)"
என்று எழுத பெற்றிருந்தது. ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அந்தப் பையை அவிழ்த்து எண்ணிப்பார்க்க, அதில் ஐம்பத்தொரு
பொற்காசுகள் இருந்தன.
அப்போது ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் தம் காசாளரிடம், (قَد اَعطَيتَ وَاحِدًا فَرَدهُ اللهُ عَلَيكَ وَزَادَكَ خَمسِينَ دِينَارًا) "நீ அந்த (வறியவருக்கு) ஒரேயொரு பொற்காசு தான்
கொடுத்தாய். அதை உனக்கு அல்லாஹ் திருப்பிக் கொடுத்ததோடு ஐம்பது பொற்காசுகளைக் கூடுதலாகவும்
உனக்கு வழங்கி விட்டான் என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ - 1958
மாவு என்ன ஆனது?
எவரேனும் நற்காரியம் ஒன்றை செய்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு. திருக்குர்ஆன்:- 28:84
இறைநேசர் ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களின் மனைவி ஒரு முறை மாவு பிசைந்து வைத்து விட்டு
பக்கத்து வீட்டில் இருந்து நெருப்பு வாங்கி வரச் சென்றார். சென்ற பின்னர் ஒரு யாசகர்
வந்தார். அன்னார் அந்த மாவை யாசகருக்கு கொடுத்துவிட்டார்கள்.
அன்னாரின் மனைவி நெருப்பு வாங்கிவிட்டு வந்து பார்த்தால் மாவு காணவில்லை. கணவரிடம்
மாவு என்ன ஆனது? என்று வினவ; அவர்கள் "அது ரொட்டி
சுடப் போயிருக்கிறது!" என்றார்கள்.
அன்னாரின் மனைவி நம்பாது வற்புறுத்தி கேட்க, அன்னார் "அதை நான் தர்மம்
செய்து விட்டேன்" என்றார்கள். உடனே மனைவி; சுப்ஹானல்லாஹ்! வீட்டில் இவ்வளவு
மாவுதான் இருந்தது என்பதையும் தாங்கள் யோசிக்கவில்லையே! இப்பொழுது எல்லோரும் எதைச்
சாப்பிடுவது? நமக்காக ஏதேனும் வேண்டுமல்லவா? என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒருவர் பெரிய
பாத்திரமொன்றில் வறுத்த இறைச்சியுடன் ரொட்டிகள் கொண்டுவந்து கொடுத்தார். அதைக் கண்ட
அன்னாரின் மனைவி "இவ்வளவு சீக்கிரம் சமைத்துக் கொண்டு வந்து விட்டீரே! கூடுதலாக
குர்மா ஆணம் வேறு கொண்டு வந்துள்ளீர்! என்று (மகிழ்ச்சியுடன்) கூறினார். நூல்:- ரவ்ஜ்
அதிகமாக இலாபம்
நன்மை புரிந்தோருக்கு (அதன்) நற்கூலியும் (அதைவிடக்) கூடுதல் நன்மையும் கிடைக்கும்.
திருக்குர்ஆன்:- 10:26
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில்
ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஷாம்
தேசத்திற்கு சென்றிருந்த உஸ்மான் (ரலி) அவர்களின்
வியாபாரக் கூட்டம் பெருமளவு உணவுப் பொருட்களுடன் ஆயிரம் ஒட்டகைகளில் உஸ்மான் (ரலி)
அவர்களின் வீட்டு வாசலில் வந்திறங்கியது.
இதனைப் பற்றி கேள்விப்பட்ட மதீனா மற்றும் அதன் சுற்றுப்பகுதி வியாபாரிகள் அனைவரும்
உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக கூடிவிட்டனர்.
மக்களின் தேவைகளை நீங்கள் நன்கறிவீர்கள் எனவே இந்த மொத்த சரக்கையும் எங்களிடமே
விலைக்கு விற்று விடுங்கள் வேறு யாருக்கும் விற்று விடாதீர்கள் என்று உஸ்மான் (ரலி)
அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் எனது இந்த சரக்குக்கு எவ்வளவு இலாபம் தருவீர்கள்
என்று அந்த வியாபாரிகளிடம் வினவினார்கள் அந்த வியாபாரிகளில் ஒருவர் மூன்றில் ஒரு பாகம்
இலாபம் தருவதாக கூறினார் மற்றவர் அரை பாகம் இலாபம் தருவதாக கூறினார். இன்னுமொருவர்
முக்கால் பாகம் இலாபம் தருவதாக கூறினார் அதைவிட அதிகமாக இலாபம் தருபவர் உங்களில் எவரேனும்
இருக்கிறாரா? என்று அவர்கள் கேட்டார்கள். இந்த மதீனாவில் அதற்கு
மேல் இலாபம் தர எவரும் தயாரில்லை என்று ஒட்டுமொத்தமாக வியாபாரிகள் கூறிவிட்டனர்.
இல்லை! ஒருவன் எனக்கு பத்துமடங்கு லாபம் தருவதாகக் கூறுகிறான். எனவே அவனிடம் இதை
விற்று விட்டேன் என்று கூறி அனைத்தையும் தர்மம் செய்து விட்டார்கள். இறுதியில் எதுவும்
மிஞ்சவில்லை. நூல்:- ஃபிக்ஹுத் தாஜிருல் முஸ்லிம்
ஒரே ஒரு ரொட்டித்துண்டு
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமுறை ஆயிஷா (ரலி) அவர்களிடம்
ஒரு ஏழை வந்து யாசகம் கேட்டார். அப்போது அன்னையவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். மேலும்
அன்னையின் வீட்டில் ஒரே ஒரு ரொட்டித் துண்டு தான் இருந்தது. அன்னையவர்கள் தன் பணிப்பெண்ணை
அழைத்து, ( أَعْطِيهِ إِيَّاهُ ) "அதை அவருக்கு கொடுத்து
விடு!" என்று கூறினார்கள். அப்போது அந்தப்
பணிப்பெண், “நீங்கள் நோன்பு திறப்பதற்கு அந்த ரொட்டியை தவிர வேறெதுவுமில்லை” என்று
கூறினாள். மீண்டும் அன்னையவர்கள், "அதை அவருக்கு கொடுத்து விடு" என்று கூறினார்கள். பணிப்பெண், அந்த யாசகம் கேட்ட மனிதருக்கு தங்களிடம் இருந்த ஒரே ஒரு ரொட்டித் துண்டை கொடுத்துவிட்டாள்.
பணிப்பெண் கூறுகிறாள். மாலையானதும் எங்களுக்கு அன்பளிப்பு வழங்கும் ஒருவர் ஆட்டிறைச்சியும்
அதனுடன் ரொட்டிகளையும் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது அன்னையவர்கள் என்னை அழைத்து, ( كُلِي مِنْ هَذَا هَذَا خَيْرٌ مِنْ قُرْصِكِ ) "இதிலிருந்து சாப்பிடுவாயாக! இது உன் ரொட்டியைவிட
(அதாவது நீ தர்மம் செய்வதற்கு யோசித்த அந்த ரொட்டியைவிட) சிறந்தது" என்று கூறினார்கள்.
நூல்:- முவத்தா மாலிக் பாபு தர்ஙீபி ஃபிஸ்ஸதகா-1848
திருடனின் கணக்கு
நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களிடமிருந்து தான் ஏற்றுக் கொள்வான். திருக்குர்ஆன்
5:27
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَا يَكسِبُ عَبدٌ مَالَ حَرَامٍ فَيَتَصَدَّقُ مِنهُ فَيُقبَلُ مِنهُ
) ஒரு மனிதன் விலக்கப்பட்ட (ஹராமான) வழிகளில் செல்வத்தை
சம்பாதித்து, அதிலிருந்து தர்மம் செய்கிறான் என்றால், அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், மிஷ்காத் பக்கம்-242
ஒருவன் கடைத்தெருவில் பழமொன்றை திருடினான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஏழை அவனிடம் யாசகம் கேட்க, தான் திருடிய பழத்தை அவன் தர்மமாக கொடுத்தான். அதை இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் பார்த்தார்கள். இமாமவர்கள் அவன் அருகே சென்று, “(தம்பி! நீ என்னப்பா! திருடவும் செய்கிறாய்! தர்மமும் கொடுக்கிறாய்!) ஏன் இவ்வாறு செய்கிறாய்?” எனக்கேட்டார்கள்.
தன்னிடம் கேள்வி கேட்பவர் யார் என்பதை அறியாத அவன், “பெரியவரே! நான் ஒரு கணக்காக தான் செய்கிறேன். அல்லாஹ்
ஒரு பழத்தைத் தர்மம் கொடுத்தால் பத்து பழங்கள் தர்மம் கொடுத்த நன்மைகள் வழங்குவான்.
ஆனால், ஒரு பழத்தைத் திருடியதற்கு ஒரு பழம் திருடிய பாவம் தான் எழுதுவான். எனவே கிடைத்த
நன்மைகளில் திருடியதற்கான ஒரு பாவம் போக மீதம் ஒன்பது நன்மைகள் எனக்கு கிடைக்குமல்லவா? இது நிகர இலாபம் தானே” என்றான்.
அவனது அறியாமையைக் கண்டு புன்னகை புரிந்த இமாமவர்கள், “தம்பி! அல்லாஹ் தூய்மையானவன்.
தூய்மையானவற்றையே ஏற்றுக்கொள்வான். நீ செய்த தர்மம் ஏற்றுக்கொள்ளப்படாது. நீ திருடியதற்கான
பாவம் மட்டுமே உனக்கு மிஞ்சும்” என்றார்கள்.
இறைவனுக்காக செலவு செய்ய பணக்காரனாக இருக்கவேண்டும் என்பதல்ல. இருப்பதில் கொஞ்சம்
கிள்ளிக்கொடுத்தால் போதும். அள்ளிக்கொடுக்கத்தான் வேண்டுமென்ற அவசியமில்லை.
கிள்ளிக்கொடுப்பவை அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) முறையில் சம்பாதித்தாக இருந்தால் போதும்.
மாறாக, அள்ளி அள்ளிக்கொடுப்பவை அனுமதிக்கப்படாத (ஹராமான)
முறையில் சம்பாதித்தாக இருந்தால் அது வீணாணவையே!
இறைவனுக்காக அர்பணிக்கப்படும் அனைத்திலும் அதிகப்படியான இலாபம் கிடைக்கப்பெறும்
என்பதில் சந்தேகமில்லை. எனவே, நாம் அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) முறைகளில்
சம்பாதித்து அதனை இறைவழியில் அர்பணித்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment