Search This Blog

Sunday, 21 November 2021

காலம் கெட்டுப்போச்சு!

 

காலம் கெட்டுப்போச்சு! 


اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ


மறுமைநாள் நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்துவிட்டது. திருக்குர்ஆன்  54:1


புது வருடம் பிறந்துள்ளது. சென்ற வருடங்களைவிட இந்த வருடம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று நம்மில் பலரும் எண்ணுகிறோம்.


காலங்கள் செல்லச்செல்ல நல்லொழுக்க மாண்புகள் குறைந்துகொண்டே வருவதுடன்தீய பழக்கங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவனைவிட அவன் பரவாயில்லை என்று ஆட்சியாளர்கள் முதல் அக்கம்பக்கத்தினர் வரை எண்ணத்தோன்றுகிறது. “பெரும்பாலும் கடந்த காலங்களைவிட வருங்காலங்கள் மோசமாகத்தான் இருக்கும்” என்கிறது இஸ்லாம்.


நாம் இங்கே காலங்கள் என்று குறிப்பிடுவது நாள்கள் மாதங்களை அல்ல. மனிதர்களைத்தான் என்பது கவனிக்கத்தக்கது.


முந்தைய தலைமுறையினர்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ) 

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6429, முஸ்லிம்-4958, திர்மிதீ-2147


இந்த நபிமொழியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தாரில் மிகவும் சிறந்த தலைமுறையினர் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள். அதாவது, நபித்தோழர்கள் ஆவர். அதற்கு அடுத்து சிறந்த தலைமுறையினர் "தாபிஉன்கள்" எனப்படும் முஸ்லிம்கள் ஆவர். அடுத்து சிறந்த தலைமுறையினர் "தபஉத்தாபிஉன்கள்" எனப்படும் முஸ்லிம்கள் ஆவர். நபித்தோழர்களின் (முதல் தலைமுறையினர்) காலம் ஹிஜ்ரி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. தாபிஉன்களின் (இரண்டாம் தலைமுறையினர்) காலம் சுமார் ஹிஜ்ரி 180 வரையிலும் இருந்தது. தபஉத்தாபிஉன்களின் (மூன்றாம் தலைமுறையினர்) காலம் சுமார் ஹிஜ்ரி 220 வரையிலும் இருந்தது. இந்த காலகட்டங்களில் வாழ்ந்தோர் பெரும்பாலும் சிறந்தவர்களாக விளங்கினர். இதற்குப் பிறகுதான் இஸ்லாத்தில் குழப்பங்களும் இடைச்செருகல்களும் ஏற்பட்டன. இன்றுவரையில் இந்நிலை நீடிக்கிறது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ


இப்னுகஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.  ( وَلَا شَكَّ أَنَّ أَوَّلَ كُلِّ أُمَّةٍ خَيْرٌ مِنْ آخِرِهَا ) 

ஒவ்வொரு சமுதாயத்தின் தொடக்க கால மக்கள் அதன் இறுதிக்கால மக்களைக் காட்டிலும் சிறந்தவர்களே என்பதில் ஐயம் எதுவும் இல்லை. நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர் அல்வாகிஆ வசனம்-14


உள்ளத்தில் மாற்றம்


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. 

( لَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي دَخَلَ فِيهِ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الْمَدِينَةَ أَضَاءَ مِنْهَا كُلُّ شَىْءٍ فَلَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي مَاتَ فِيهِ أَظْلَمَ مِنْهَا كُلُّ شَىْءٍ ‏.‏ وَمَا نَفَضْنَا عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ الأَيْدِيَ حَتَّى أَنْكَرْنَا قُلُوبَنَا )  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் நுழைந்த நாளில் அங்கிருந்த அனைத்து பொருள்களும் ஒளிர்ந்தன. அண்ணலார் இறந்த நாளில் அங்கிருந்த அனைத்து பொருள்களும் இருண்டன. அண்ணலாரை அடக்கம் செய்து எங்கள் கைகளை நாங்கள் உதறியிருக்கமாட்டோம். அதற்குள் எங்கள் உள்ளங்கள் மாற்றங்களை உணர்ந்தன. நூல்:- இப்னுமாஜா-1621, முஸ்னது அஹ்மத், தாரமீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த சமயத்தில் இருந்த தெளிவும் நேசமும் அண்ணலாரை நல்லடக்கம் செய்யும் நேரத்தில் இருக்கவில்லை. முன்பிருந்த இறைநம்பிக்கை அண்ணலாரின் மரணத்திற்குப்பின் நபித்தோழர்களை விட்டும் நீங்கிவிட்டது என்பது இதன் பொருளன்று. நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ


உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது. 

( كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم  وَإِنَّمَا وَجْهُنَا وَاحِدٌ فَلَمَّا قُبِضَ نَظَرْنَا هَكَذَا وَهَكَذَا ‏

நாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது எங்கள் முகங்கள் ஒன்றாகவே (ஒரே நோக்கத்திலேயே) இருந்தன. அண்ணலார் இறந்தபோது (எங்கள் நோக்கம் இலக்கும் மாறி) நாங்கள் இவ்வாறு இவ்வாறு (உலகத்தையும் மறுமையையும்) பார்க்கத் தொடங்கினோம். நூல்:- இப்னுமாஜா-1623


இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரி 210-279, கி.பி.825-892) தமது 22 ஆம் வயதில் ஆணழகனாக திகழ்ந்தார்கள். அவர்களை மணமுடித்துக் கொள்ள 200 பெண்கள் போட்டியிட்டனர். இளமையில் மிகுந்த அழகாக இருப்பார்கள். அதிலும் அழகு நிறைந்த ஒரு பெண் இமாம் அவர்களை திருமணம் செய்தே ஆக வேண்டும் என முடிவு செய்து, இமாம் அவர்களிடம் சந்தேகம் கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டு தவறு செய்ய அழைத்தாள். இமாம் அவர்கள், "பெண்ணே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள். இறைவனின் நாட்டம் எதுவோ அது நடக்கும்" என்று அல்லாஹ்வை நினைவுப்படுத்தினார்கள். உடனே அப்பெண் விலகிச் சென்றாள்.

 

பிறகு காலங்கள் கடந்து இமாமவர்கள் தமது ஐம்பதாம் வயதில் ஒருநாள் தொழுதுகொண்டிருக்கும்போது, "அன்றொரு நாள் நாம் ஒரு தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தவற விட்டுவிட்டோமே" என அவர்களின் (நப்ஸ்) மனம் கூறுகிறது. இமாமவர்கள் தம் மனம் இவ்வாறு அசிங்கமாக எண்ணுகிறதே என்று கவலைப்பட்டு அன்றிரவு உறங்கினார்கள்.

 

அந்த உறக்கத்தில் கனவு ஏற்பட்டது. அந்த கனவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை கண்டார்கள். இமாமவர்கள் கனவில் அண்ணலாரிடம், "நாயகமே! அதிக சக்தியும், குறைந்த ஞானமும், குறைந்த இறையச்சமும் இருந்த அன்று நான் அந்த தவறிலிருந்து முழுமையாக விலகிநின்றேன். ஆனால், இன்று சக்தி குறைந்தும், ஞானமும் இறையச்சமும் அதிகரித்தும்கூட இப்படியொரு தவறான எண்ணம் ஏற்பட்டுவிட்டதே ஏன்?" என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார், “என் தோழரே! உங்கள் இளமை பருவம், என் காலத்திற்கு நெருக்கமாக இருந்தது. ஆனால் உங்கள் முதுமை பருவம், என் காலத்தை விட்டும் கொஞ்சம் தூரமாகிவிட்டது. இதுதான் காரணம்" கூறினார்கள். நூல்:- ஹில்யத்துல் அவ்லியா


காலங்கள் செல்லச் செல்ல மோசமாகிக்கொண்டே தான் செல்லும் என்பதையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்.


தொழுகையின் நிலை


அன்னை உம்மு சல்மா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا قَامَ الْمُصَلِّي يُصَلِّي لَمْ يَعْدُ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ قَدَمَيْهِ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَكَانَ النَّاسُ إِذَا قَامَ أَحَدُهُمْ يُصَلِّي لَمْ يَعْدُ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ جَبِينِهِ فَتُوُفِّيَ أَبُو بَكْرٍ وَكَانَ عُمَرُ فَكَانَ النَّاسُ إِذَا قَامَ أَحَدُهُمْ يُصَلِّي لَمْ يَعْدُ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ الْقِبْلَةِ وَكَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَكَانَتِ الْفِتْنَةُ فَتَلَفَّتَ النَّاسُ يَمِينًا وَشِمَالاً ) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்களுள் ஒருவர் தொழ நின்றால் அவருடைய பார்வை அவருடைய பாதங்களைத் தாண்டாது. அண்ணலார் இறந்தபின், மக்களுள் ஒருவர் தொழ நின்றால் அவருடைய பார்வை அவர் நெற்றி வைக்கும் இடத்தை விட்டும் தாண்டாது.


பின்னர் (ஜனாதிபதி) அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்து, உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது மக்களுள் ஒருவர் தொழ நின்றால் அவருடைய பார்வை அவர் (தொழும் திசையான) கிப்லாவைத் தாண்டாது. (அதன் பின்) உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்தபோது குழப்பம் தோன்றியது. மக்கள் வலப்பக்கம் இடப்பக்கம் திரும்பி பார்க்கத் தொடங்கினர். நூல்:- இப்னுமாஜா-1624


ஆட்சியாளர்


ஸுபைர் பின் அதீ (ரஹ்)  அவர்கள் கூறியதாவது. நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ( اِصْبِرُوا، فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ ) "நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும்வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்" என்று கூறிவிட்டு, "இதை நான் உங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்து செவியுற்றுள்ளேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-7068, திர்மிதீ-2132


அதாவது காலம் போகப் போக, நாள்கள் செல்லச் செல்ல நன்மைகள் அருகி, தீமைகள் பெருகிவிடும். ஆகவே, நாம் வாழும் காலம் அடுத்து வரும் காலத்தைவிட எவ்வளவோ மேல் என எண்ணிச் சோதனைகளைப் பொறுத்துக்கொண்டு சாதனைகள் படைக்க வேண்டும்; துவண்டு விடலாகாது என்பது தான் இந்த நபிமொழியின் கருத்தாகும்.


உலகளாவிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் விசயத்தில் முன் சென்றவர்களே பரவாயில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.


பாவச் செயல்கள்


அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். 

( إِنَّكُمْ لَتَعْمَلُونَ أَعْمَالاً هِيَ أَدَقُّ فِي أَعْيُنِكُمْ مِنَ الشَّعَرِ، إِنْ كُنَّا نَعُدُّهَا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمُوبِقَاتِ‏

நீங்கள் சில (பாவச்) செயல்களை புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக எளிதாக தோன்றுகின்றன. ஆனால், அவற்றை நாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரழிவை ஏற்படுத்துபவை என்றே கருதினோம். நூல்:- புகாரீ-6492


மார்க்க அறிஞர் இமாம் ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் தன் கடைசி நாட்களில் தன் தோழர்களைப் பார்த்து, "நாங்கள் வாழ்ந்த காலம் தீய எண்ணம் கொள்வதைக்கூட தடுக்கப்பட்டவையாக (ஹராமாக) நினைத்த காலம். ஆனால், நீங்கள் வாழும் காலமோ, தீய எண்ணம் கொள்வதையே வாழ்க்கையாக்கிக் கொண்ட காலம்" என்றார்கள்.


சென்ற காலத்தில் பீடி, சிக்ரெட் புகைப்பதையே மிக பெரிய கெட்டப்பழக்கமாகக் கருதினர். அதையும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒழிந்து மறைந்து புகைத்தனர். ஆனால், இன்று மது அருந்துவதையே கெட்டப்பழக்கமாகவோ பாவச்செயலாகவோ எண்ணுவதில்லை. பெரும்பாலான நிகழ்ச்சிகளில் மது பரிமாற்றம் சாதாரணமாகிவிட்டது. மதுப்பழக்கம் இல்லாதவர்கள் பத்தாம் பசலித்தனமானவர்கள் என்று தான் எண்ணப்படுகிறது. மதுவை பட்டவர்த்தனமாக அருந்துவது நாகரீகமாகி வருகிறது. மது அருந்துவதெல்லாம் குற்றமா? என்று ஆச்சரியமாக எண்ணுகிறார்கள்.


இதேபோன்று தான் விபச்சாரத்தின் நிலைப்பாடு. கள்ள உறவு, வப்பாட்டி இவை பாவம் என்ற எண்ணங்கள் கடந்து, கேர்ள் ஃபிரண்ட், (பெண் தோழி) ஃபிசிக்ஸ் ஹெல்ப், (உடலால் உதவுதல்) லிவிங் டு கெதர் (திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்ந்து பழகி, பிறகு பிடித்திருந்தால் மணமுடித்துக்கொள்வது) என்பதெல்லாம் இன்று நாகரீகமாகி வருகிறது.


ஒரு பெண், குழந்தை பெற்றுக்கொள்ள, கணவன் தேவையில்லை. பாய் ஃபிரண்ட் (ஆண் தோழன்) இருந்தால் போதும் என்றாகிவருகிறது.


நவநாகரீக மங்கைகள்


அம்ரா பின்த் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஆயிஷா (ரலி) அவர்கள், ( لَوْ أَدْرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ‏

"பெண்கள் (இன்று) உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்ற)வற்றை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிருந்தால் பனூ இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதைப் போன்று இந்தப் பெண்களையும் (பள்ளிவாசலுக்கு வரக்கூடாது எனத்) தடுத்திருப்பார்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-869


உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் பெண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதை ஆரம்பத்தில் அனுமதித்தாலும் பிறகு அதை தடை செய்து, பெண்கள் வீட்டினுள் தொழுவதே சிறந்தது என்று நபிவழியை வலியுறுத்தினார்கள். இதை அன்றிருந்த நபித்தோழர்கள் எவரும் ஆட்சேபிக்கவில்லை. நூல்:- உம்தத்துல்காரீ-3/228


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நபித்தோழர்கள் வாழ்ந்த அந்த சிறந்த சமுதாயத்தின் காலத்திலேயே, பெண்கள் பள்ளிக்கு தொழ வருவதில் உள்ள பிரச்சினைகளை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள். இன்றைய நவீன குழப்ப உலகின் நிலையை நாம் சொல்ல வேண்டியதில்லை.


சென்ற காலத்தில் பெண்கள் எண்ணெய் தேய்த்து தலைமுடி வாரினாலே போதுமானது என்றிருந்தார்கள். ஆனால் இன்று பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ள "பியூட்டி பார்லர்" (அழகு நிலையம்) செல்கிறார்கள். தலைமுடிகளை வெட்டிக்கொள்ளவும், நகங்கள் களைந்து கொள்ளவும், வெட்கக்கேடு சிலர் மர்ம உறுப்பு முடிகளையும் மற்றும் அக்குள் முடிகளையும் நீக்கிக்கொள்ளவும் அங்கு செல்கிறார்கள்.


முகம் பளபளப்பாக இருக்க, சில நூறுகளை செலவு செய்து "ஃபேசியல்" செய்து கொள்கிறார்கள். முகம் வெண்மையாகத் தெரிய, எண்ணிலடங்கா க்ரீம்களை தேய்த்துக்கொள்கிறார்கள். 


இன்றைய சில பெண்கள் சாப்பிடாமல்கூட இருந்துவிடுவார்கள். அவர்களால் அழகுபடுத்திக்கொள்ளாமல் இருக்கவே முடியாது. சிலரிடம் சாப்பாட்டுக்கே வழியில்லாவிட்டாலும்கூட அழகு சாதன பொருள்களுக்கு குறைவு இருக்காது.


பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொண்டு சுற்றுவதால் தான் வன்புணர்ச்சி போன்ற பாலியல் குற்றங்கள் பெருகிறது.


காசு பணம்


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( لَقَدْ أَتَى عَلَيْنَا زَمَانٌ، وَمَا أَحَدٌ أَحَقُّ بِدِينَارِهِ وَدِرْهَمِهِ مِنْ أَخِيهِ الْمُسْلِمِ، ثُمَّ الْآنَ الدِّينَارُ وَالدِّرْهَمُ أَحَبُّ إِلَى أَحَدِنَا مِنْ أَخِيهِ الْمُسْلِمِ ) ஒரு காலம் இருந்தது. அப்போது தங்கக்காசு வெள்ளிக்காசுகளை காட்டிலும் ஒரு முஸ்லிம் சகோதரரை நாங்கள் பெரிதாக மதித்தோம். ஆனால், இன்றைக்கு முஸ்லிம் சகோதரனைவிட தங்கக்காசுகளும் வெள்ளிக்காசுகளும் மிகப் பிரியமானவையாக உள்ளன. நூல்:- தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித், அல்அதபுல் முஃப்ரத்-111


ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 

( وَلَقَدْ أَتَى عَلَىَّ زَمَانٌ وَمَا أُبَالِي أَيَّكُمْ بَايَعْتُ لَئِنْ كَانَ مُسْلِمًا رَدَّهُ الإِسْلاَمُ، وَإِنْ كَانَ نَصْرَانِيًّا رَدَّهُ عَلَىَّ سَاعِيهِ، فَأَمَّا الْيَوْمَ فَمَا كُنْتُ أُبَايِعُ إِلاَّ فُلاَنًا وَفُلاَنًا )

எனக்கு ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்துவதில்லை. (ஏனெனில்) அவர் முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடும்.


அவர் யூதராகவோ கிறித்தவராகவோ இருந்தால் அவருக்கான அதிகாரி (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் உங்களில் இன்னார் இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டிருக்கிறேன். நூல்:- புகாரீ-6497, திர்மிதீ-2105


குறை சொல்வது


ஸாபித் பின் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நாங்கள் அனஸ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அவருடன் அவர்களுடைய மகள் ஒருவரும் இருந்தார். அப்போது அனஸ் (ரலி) அவர்கள், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கூறியபடி ஒரு பெண் வந்து, நாயகமே! (என்னை மணந்து கொள்ள) என் விஷயத்தில் தங்களுக்கு நாட்டம் உண்டா? எனக் கேட்டார்" என்று கூறினார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்களின் மகளார், "என்ன வெட்கம் கெட்டத்தனம்!" என்று (வியந்து) சொன்னார். அனஸ் (ரலி) அவர்கள்,  ( هِيَ خَيْرٌ مِنْكِ رَغِبَتْ فِي النَّبِيِّ صلى الله عليه وسلم فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا ) "அந்தப் பெண்மணி உன்னைவிடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்து கொள்ள) ஆசைப்பட்டார். ஆகவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5120, நஸாயீ-3197, இப்னுமாஜா-1991 முஸ்னத் அஹமத்


காலம் சென்றவர்களை குறை சொல்வதால் மட்டும் நாம் சிறந்தவர்களாக ஆகிவிடமுடியாது. அதற்காக காலம் சென்றவர்கள் அனைவரும் உத்தமர்கள் என்று சொல்லவில்லை. அவர்களின் குறைகளைவிட நமது குறைகள் பெரியதாக இருக்கிறதே என்று தான் சொல்லுகிறோம்.


சல்லடை ஊசியைப் பார்த்து, “உன் தலையில் ஒரு ஓட்டை உள்ளது” என்று குறை சொன்னதாம். தன் உடம்பு முழுவதும் இருக்கும் ஓட்டைகளை மறந்துவிட்டதாம். இது கிராமத்து சொல்வழக்கு. 


புண்ணியவான் போயிட்டான் 


ஒரு ஓடக்காரன் இருந்தான். ஆற்றைக் கடக்க கொள்ளைப் பணம் வசூலிப்பான். மக்கள் எல்லோரும் திட்டுவார்கள். அதையெல்லாம் அவன் கண்டுகொள்ள மாட்டான். மக்களும் வேறு வழியின்றி அவன் கேட்கிற பணத்தைக் கொடுத்து ஆற்றைக் கடந்து செல்வார்கள்.


“இவனுக்கு நற்கதியே கிடைக்காது” என்று மக்கள் தூற்றினார்கள். அவனுக்கு அந்திமக் காலம் வந்தது. இறக்கும் தருவாயில் தன் மகனை அழைத்தான்.


மகனே, நான் உயிரோடு இருக்கும்போது செய்த செயல்களுக்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன். மக்களில் எவரும் என்னை நல்லவிதமாகச் சொல்லியதே இல்லை. ஏச்சும் பேச்சும்தான் கேட்டிருக்கிறேன். இறந்த பின்னராவது மக்கள் என்னை நல்ல விதமாகப் பேசும்படி செய்" என்று கூறி உயிர்விட்டான்.


மகனும் யோசித்தான். தந்தை பார்த்த தொழிலையே அவனும் செய்து கொண்டு, ஆனால் தந்தையைவிட இரண்டு மடங்கு பணம் வசூலித்தான். இப்பொழுது மக்கள் "இவனுக்கு இவன் தந்தை எவ்வளவோ மேல். பாவம் புண்ணியவான் அதுக்குள்ள போய்ச் சேர்ந்துட்டான்" என்று சொன்னார்கள்.


நிகழ் காலத்தவர்களைவிட, கடந்த காலத்தவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்பது தான் உண்மை.


இஸ்லாத்தின் நிலை


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( بَدَأَ الإِسْلاَمُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ

இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையே தான் தோன்றியது; அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச் செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான (இஸ்லாத்தை முறையாக பின்பற்றும்) மக்களுக்கு சோபனம் உண்டாகட்டும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-232 திர்மிதீ-2550, இப்னுமாஜா3987, முஸ்னத் அஹமத், தப்ரானீ


காளீ இயாள் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இஸ்லாம் மதீனாவில் சிறிதாகத் தோன்றி, உலகின் எல்லாப் பாகங்களிலும் பரவி விரிந்தது. ஆனால் அது மீண்டும் சுருங்கி குறைந்த எண்ணிக்கை கொண்ட குழுக்களுடன் ஆரம்பநிலை போலவே மதீனாவை வந்தடையும்.


உலகில் முஸ்லிம்கள் பல கோடி பேர் இருந்தாலும் மார்க்கப்பற்றுள்ளவர் குறைந்துகொண்டே வருகின்றனர். இதனால் இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாமியர் மீது ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளனர். இஸ்லாத்தின் வீரியமான வட்டம் சுருங்கிக்கொண்டே வருகிறது. இறுதியில் அது மக்கா, மதீனாவில் வந்து முடிவடையும்.


மறுமை நாள்


மனிதர்களை (நாம்) கேள்வி கணக்கு(க் கேட்கும் நாள்) நெருங்கிக் கொண்டே வருகின்றது. எனினும், அவர்களோ கவனமற்ற நிலையில் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திருக்குர்ஆன்:- 21:1


சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ هَكَذَا )  "நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறி, தம் இரு விரல்களையும் (சுட்டு விரல் நடுவிரல் இரண்டையும்) நீட்டியவாறு சைகை செய்தார்கள். நூல்:- புகாரீ-6503, திர்மிதீ-2140 முஸ்னது அஹ்மத்


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்நிகழ்வுதான் மறுமைநாள் நெருங்கிவிட்டதற்கான ஓர் அடையாளமாக  சுட்டிக்காட்டி, இவ்வுலகம் ஓய்ந்துவிட்டதாகவும், இறுதிநிலையை எட்டி விட்டதாகவும் அல்லாஹுத்தஆலா தலைப்பில் காணும் வசனத்தில் மூலம் தெரிவிக்கின்றான்.


காலங்கள் மோசமாகும்போதுதான் உலகம் அழிக்கப்படும். நம்மிடம் உள்ள ஒரு பொருள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாகிவிட்டால், நாம் அது பயனற்றது என்றெண்ணி அதை தூக்கி வீசிவிடுகிறோம். அல்லது அதை அழித்துவிடுகிறோம். இந்த உலகத்தைப் படைத்த ஏக இறைவன் அல்லாஹுத்தஆலாவும் இதைத்தான் கடைப்பிடிக்கிறான். நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாதபோது, நாம் அழிக்கப்படுவது நியாயம் தானே!


நிகழ் காலத்தின் சீர்கேடுகளைப்பற்றி சொல்லிமாளாது எனில், வருங்கால சீர்கேடுகள் எவ்வாறு இருக்கும் என்று எண்ணும் போதே ஒருவித கலக்கம் தொற்றிக்கொள்கிறது.


சுருங்கக்கூறின், உலகம் சீர்கேடுகளில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதன் தேய்மானம் துவங்கியுள்ளது. எனவே, காலத்தின் கோலத்தில் நாம் சிக்கிவிடாமல், இறைநெருக்கத்திற்குரிய நற்காரியங்கள் புரிந்து, இறையன்பைப் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

6 comments:

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...